நகரப் படலம் - 148

bookmark

மாலை கலவைச்சாந்து இவற்றின் மிகுதி

148.

ஆடு வார் புரவியின் குரத்தை ஆர்ப்பன,
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
ஓடுவார் இழுக்குவது, ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன உலை கொழித்த சாந்தமே.
 
சூடுவார்   இகழ்ந்த  அத்    தொங்கல்   மாலைகள்-  மாலை
சூடிய மகளிர்    (வாடிவிட்டன   என்று)    இகழ்ந்து    எறிந்துவிட்ட
மாலைகள்; ஆடுவார் புரவியின்   குரத்தை  ஆர்ப்பன-  ஆடுகின்ற
நெடிய  குதிரைகளின் குளம்புகளைப்  பிணிப்பனவாகும்;  ஊடல்  ஊடு
உறக் கூடுவார் - புலவி இடையிலே  நிகழ, பின்   ஆடவருடன்  கூடி
மகிழும்  மகளிர்;  வனமுலை    கொழித்த   சாந்தம்  -   அழகிய
தனங்களிலிருந்து வழித்து வீதியில் எறிந்த  சந்தனத் தேய்வை; ஓடுவார்
இழுக்குவது   -  அத்தெருவில்   ஓடுபவர்களை    வழுக்கி   விழச்
செய்வனவாம்.

மகளிர் தாம் அணிந்த மாலைகள்  வாடினவென  வீசியெறிய  அவை
குதிரைகளின்  கால்களைப்  பிணிக்கும்.   அம்மகளிர்  வழித்து  எறிந்த
சந்தனக்  குழம்பு  வீதியில்  ஓடுபவர்களை   வழுக்கி  விழச்  செய்யும்.
குரம்:  குளம்பு ஆர்த்தல்: பிணித்தல் (கட்டுதல்).  “கோதை  மடவார்தம்
கொங்கை  மிசை  திமிர்ந்த   சீதக் களபச்  செழுஞ் சேற்றால் வீதிவாய்
மானக்கரி வழுக்கும்” என்ற நளவெண்பா ஒப்பு நோக்கத்தக்கது (1: 13)
                                                         56