நகரப் படலம் - 136

bookmark

யானைகள் செய்த குழிகளைச் சுண்ணம் தூர்க்கின்றது எனல்

136.

கண்ணிடைக் கனல் சொரி களிறு, கால் கொடு
மண்ணிடை வெட்டுவ; வேட்கை மைந்தர்தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன;
சுண்ணம்அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன.
 
கண்ணிடைக்     கனல் சொரி களிறு- (கோபத்தால்) கண்களிலே
நெருப்பைச்  சொரியும்  ஆண்யானைகள்; கால்  கொடு  மண்ணிடை
வெட்டுவ-    கால்களால்    நிலத்தை   வெட்டுவனவாம்;  வேட்கை
மைந்தர்தம்-   பார்ப்பவர்   விரும்பும்    அழகிய   இளைஞர்களின்;
பண்ணைகள்  பயில்  இடம்- விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள்;
குழி படைப்பன- குழிகளை உடையனவாம்; அக்குழிகளைச் சுண்ணம்
தொடர்ந்து  தூர்பன-  அந்தக்  குழிகளை  அவ்விளைஞர்  அணிந்த
வாசனைப் பொடிகள் தூர்ப்பனவாகும்.

இளங்     குமரர்கள்   யானைகளை    உடன்  கொண்டு  சென்று
விளையாடுவர்.  அந்த  யானைகள்  நிலத்தைக்   காலால் வெட்டி குழி
செய்கின்றன.     அக்     குழிகள்     வாசனைப்       பொடிகளால்
தூர்க்கப்படுகின்றனவாம்.