தைலம் ஆட்டு படலம் - 2003
2003.
வந்த முனிவன், ‘வரம் கொடுத்து
மகனை நீத்த வன்கண்மை
எந்தை தீர்ந்தான்’ என உள்ளத்து
எண்ணி எண்ணி இரங்குவான்,
உந்து கடலில் பெருங் கலம் ஒன்று
உடைய நிற்கத் தனி நாய்கன்
நைந்து நீங்கச் செயல் ஓரா
மீகாமனைப்போல், நலிவுற்றான்.
வந்த முனிவன் - அங்கே வந்த வசிட்டன்; வரம் கொடுத்து
மகனை நீத்தவன்கண்மை - வரத்தைக் கொடுத்து மகனைப் பிரிந்த
கொடுமையை; எந்தை -தயரதன்; தீர்ந்தான் - நீங்கினான்; என -
என்று; உள்ளத்து -மனத்தில்; எண்ணி எண்ணி இரங்குவான் -
நினைத்து நினைத்து மனம்தளர்பவனாய்; உந்து கடலில் - அலை
மோதும் கடலில்; பெருங்கலம் ஒன்று உடையாநிற்க - பெரிய கப்பல்
ஒன்று உடைந்துவிட; தனி நாய்கன் - தனிப்பட்ட கப்பல்தலைவன்
இறந்துபட; செயல் ஓரா மீகாமனைப் போல் - தான் செய்வது இன்னது
எனத்தெரியாமல் திகைத்துத் தடுமாறுகின்ற மாலுமியைப்போல;
நைவுற்றான் - வருந்தினான்.
மன்னவன் உடல் மரக்கலம் - மன்னவன் மரக்கலத் தலைவன் -
வசிட்டன் மாலுமி என உவமைகொள்க. 74
