திரு அவதாரப் படலம் - 301

bookmark

சத்துருக்கன் எனப் பெயரிடுதல்

301.

‘முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்
எத் திருக்கும் கெடும்’ என்பதை எண்ணா.
‘சத்துருக்கன்’ எனச் சாற்றினன் நாமம்.
 
முத்து   உருக்கொண்டு  -  முத்துக்கள்  சேர்ந்து குழந்தை வடிவு
கொண்டு;  செம்முளரி  அலர்ந்தால்-  செந்தாமரை தன்னிடம் மலரப்
பெற்றால்;  ஒத்திருக்கும்  எழில்  உடை -  (அதனை)  ஒத்திருக்கும்
அழகுடைய;  இவ்வொளியால்  எத்திருக்கும் எண்ணா -  என்பதை
எண்ணி;  சத்துருக்கன்  என நாமம் சாற்றினன்- சத்துருக்கன் எனப்
பெயர் சூட்டினான்.

முளரி:  தாமரை. எழில்: அழகு. திருக்கு: மாறுபாடு (குற்றம்) நாமம்:
பெயர்.   சத்துருக்களை  அழிப்பவன்  என்பது   பொருள்.   முதலடி:
இல்பொருள் உவமை. அகப்பகை - புறப்பகைகளை  ஒழிக்க  வல்லவன்
என்பதும்  ஒரு  பொருள்.  சத்துருக்கன்  வெண்மை   நிறமுடையவன்
என்பதால்‘’ முத்து உருக்கொண்டு’’ என்றார். கை. கால்.  முகம் மலர்ந்த
தாமரை ஒத்திருந்தது என்பதால்

‘’முளரி     அலர்ந்தால்  ஒத்து’’  என்கிறார்.  என்னா:  செய்யாவகை
என்னும்  வாய்பாட்டு  வினையெச்சம்.  இவனுக்கு  எதிராக  எழுபவை
வேறு  இன்மையின்  இப்பெயர்  அடக்கரு வலத்தவாகிய   புலன்களை
வென்றவன்   என்றும்  கொள்ளலாம்.  ஏனெனில்   பொறி  புலன்கள்
அடங்கற்கரியன.                                          120