திரு அவதாரப் படலம் - 293
நகரமாந்தர் மகிழ்தல் (293-297)
293.
என்புழி. வள்ளுவர். யானை மீமிசை
நன்பறை அறைந்தனர்; நகர மாந்தரும்.
மின் பிறழ் நுசுப்பினார்தாமும். விம்மலால்.
இன்பம் என்ற அளக்க அரும் அளக்கர் எய்தினார்.
என்புழி வள்ளுவர் யானை மீமிசை நன்பறை அறைந்தனர் -
என்று. மன்னர் பிரான் கட்டளையிட்டபோது வள்ளுவர் யானை
மேலிருந்து அரசன் கூறியபடி பறை நன்கு சாற்றினர்; நகர மாந்தரும்
- (இதனைக் கேட்டு) நகர மக்களும்; மின்பிறழ் நுசுப்பினர் தாமும்-
மின்னலைப் போன்ற இடையை உடைய பெண்களும்; விம்மலால்
இன்பம் என்று அளக்க அரும் அளக்கர் எய்தினார் -
பெருங்களிப்பால் இன்பம் என்று சொல்லப்பபடும் அளக்க முடியாத
கடலை அடைந்தனர்.
என்புழி: என்றபோது. ‘உழி’ ஏழனுருபு காலம் உணர்த்திற்று.
வள்ளுவர்: தோற்கருவி கொண்டு பறை சாற்றுபவர். அரசனது உள்படு
கருமத் தலைவர் இவரென்பர். யானை மேல் அமர்ந்து பறை முழக்கிச்
செய்தியை அறிவிக்கும் உரிமை உடையவர்கள். மீமிசை: அடுக்கி
வந்த ஏழனுருபு மிக மேலே என்பதைக் குறிக்கும். நன்பறை:
நல்லபறை. எதுகை நோக்கி’ல்’ என்பது ‘ன்’ ஆகத் திரிந்தது. பிறழ்:
உவம உருபு. நுசுப்பு: இடை விம்மல்: களித்தல் அளக்கர்: கடல்.
மன்னன் கூறிய செய்தியை மக்களுக்கு. வள்ளுவர் யானைமேல்
அமர்ந்து பறையறிந்து தெரிவித்தனர். அது கேட்டு நகரத்து மக்களும்
பெண்களும் பெரு மகிழ்ச்சியால் அளப்பதற்கு அரிய இன்பக் கடலை
அடைந்தனர் என்க. 113
