திரு அவதாரப் படலம் - 267

bookmark

கலைக்கோட்டு முனி பிண்டத்தை
மனைவியர்க்குப் பகிரச்சொல்லுதல்

267.

வைத்தது தரைமிசை. மறித்தும் அவ் வழி
தைத்தது பூதம். அத் தவனும். வேந்தனை.
‘உய்த்த நல் அமிர்தினை; உரிய மாதர்கட்கு.
அத் தகு மரபினால். அளித்தியால்’ என்றான்.
 
பூதம்    தரை மிசை வைத்தது - (அவ்வாறு தோன்றிய) அந்தப்
பூதம்  அப்பொன்  தட்டத்தைத்  தரையின் மேல் வைத்தது; மறித்தும்
அவ்வழி  தைத்தது  -  திரும்பவும்   வந்த விதமே அந்த வேள்வித்
தீயினுள் சென்று மறைந்தது; அத்தவனும் உய்த்த நல்  அமிர்தினை-
அந்தக்  கலைக்  கோட்டு முனிவனும் பூதம் கொடுத்த நல்ல  அமுதுப்
பிண்டத்தை;    உரிய    மாதர்கட்கு    -   உனக்குரிய பட்டத்து
அரசியர்களுக்கு;  அத்தகு மரபினால் - மூத்தவள். இளையவள் என்ற
முறைப்படியே;    அளித்தியால்    என்றான்.-கொடுப்பாயாக என்று
கூறினான்.

தரை     மிசை: வேள்விச் சாலையின் தரை மீது.  அவ்வழி: அந்த
வழியே.   தைத்தல்:   குளித்தல்  என்பதொரு   பொருளும்  உண்டு.
வேள்வித்  தீயிலே சென்று குளித்தது என்பதும்  ஒரு பொருள். ‘அம்பு
தைத்தது’  என்பது போல உய்த்த: சேர்த்த. வைத்த.  செலுத்திய என்ற
பொருள்  உடையது.  இங்குப்  பூதம்  தரைமிசை   வைத்த அமிர்தம்
‘‘என்பதால்  வைத்து’’ என்று கொள்ளுதல் பொருந்தும்.  ‘அளித்தியால்’
இங்கு  ‘ஆல்’  அசை.  அளித்தி:  கொடு. அத்தகு  மரபின்: மரபாவது
மூத்தவளுக்கு   முதலிலும்.   அதன்   பின்முறைப்படி    வழங்குதல்
என்பதாம்.                                               87