திரு அவதாரப் படலம் - 258

bookmark

கலைக்கோட்டு முனி தன்னை அழைத்த
காரணம் வினாதல் (259-260)

258.

என்னலும். முனிவரன் இனிது நோக்குறா.
‘மன்னவர்மன்ன! கேள்; வசிட்டன் என்னும் ஓர்
நல் நெடுந் தவன் துணை; நவை இல் செய்கையால்
நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வரோ?’
 
என்னலும் முனிவரன் இனிது நோக்குறா- என்று தயரதன் கூறக்
கேட்டதும்  அம்முனிவர் மன்னனை இனிமையுறப்  பார்த்து; மன்னவர்
மன்ன!   கேள்   -  மன்னர்களுக்கெல்லாம்  மன்னனாக  விளங்கும்
பெருமையுடையவனே!   கேட்பாயாக;  வசிட்டன்  என்னுமோர் நல்
நெடும்  தவன்  துணை - வசிட்டன் எனப் புகழ் பெற்ற நல்ல. நீண்ட
தவத்தினை   உடைய   இம்   முனிவனது   துணையும்;   நவையில்
செய்கையால்   -  குற்றமில்லாத  நல்ல  செய்கையும்  உடைமையால்;
நின்னை இவ்வுலகில் நிருபர் நேர்வரோ-உனக்கு இவ்வுலகத்துப் பிற
மன்னர்கள் ஒப்பாவார் உண்டோ?

என்னல்:   என்று சொல்லுதல். நோக்குறா: பார்த்து: செயா என்னும்
வாய்பாட்டு  உடன்பாட்டு  வினையெச்சம்.  ‘‘தவன்துணை   நவையில்
செய்கையால்’’  எனக்  கூட்டி  முனிவனது  துணையாகிய   குற்றமற்ற
செய்கையால்  எனவும்  கூறலாம்.  சூரிய  குல  வேந்தர்களுக்கு இந்த
வசிட்டனது  நீண்ட காலம் தொடர்ந்துள்ள துணையைக்  குறிப்பதாகும்.
நவை:   குற்றம்.   நேர்தல்:   ஒப்பாதல்.  நேர்வரோ  என்பதில்  ‘ஓ’
எதிர்மறைப்   பொருள்தந்து  நின்றது.  செய்கையால்:   நடத்தையால்.
ஒருவனை   அவனது  துணைவரையும்  செய்கையையும்   கொண்டே
உலகத்தவர்   அளவிடுவர்  நீ  நல்ல  துணையைப்   பெற்றிருக்கிறாய்
நற்குண  நற்செய்கைகளையும்  உடையவனாய்  இருக்கிறாய்.   எனவே.
உனக்கு நிகரான அரசர்கள் உண்டோ? என்கிறார் முனிவர்.        79