திரு அவதாரப் படலம் - 252
கலைக்கோட்டு முனியைத் தசரதன் வணங்குதல்
252.
இழிந்து போய் இரதம். ஆண்டு.
இணை கொள் தாள் மலர்
விழுந்தனன். வேந்தர்தம் வேந்தன்;
மெய்ம்மையால்.
மொழிந்தனன் ஆசிகள் - முதிய
நான்மறைக்
கொழுந்து மேல் படர்தரக்
கொழுகொம்பு ஆயினான்.
வேந்தர்தம் வேந்தன் - மன்னர்களுக்கு மன்னனாகிய தயரதன்;
ஆண்டு இரதம் இழிந்து போய் - (முனிவனைக் கண்ட) அந்த
இடத்திலேயே தேரை விட்டுக் கீழே இறங்கிச் சென்று; இணைகொள்
தாள் மலர் விழுந்தனன்- அம்முனிவனது தாமரை போன்ற இரண்டு
பாதங்களிலும் வீழ்ந்து வணங்கினான்; முதிய நான்மறைக் கொழுந்து
மேல்படர்தர - பழமையான வேதங்களாகிய கொழுந்துகள் வளர்ந்து
படர; கொழு காம்பு ஆயினான் - (கொடி செழித்து வளர்ந்து தன்
மீது படர) ஏற்றுக்கொள்ளும் கொழு கொம்பு போன்ற அம்முனிவன்);
மெய்ம்மையால் ஆசிகள் பொழிந்தனன் - மெய்நெறிப்படியே
மன்னனுக்கு ஆசி மொழிகள் கூறியருளினான்.
இழிதல்: இறங்குதல். ஆண்டு: முனிவனைக் கண்ட அவ்விடத்தில்.
இணைகொள்: இரட்டையான. தாள்மலர்: உருவகம். விழுந்தனன்:
வணங்கினான். நான்மறை: கொடி. அவை கூறியுள்ள மந்திரங்கள்:
கொழுந்து அக்கொடி படர்தற்குரிய கொம்பு: முனிவர். இரதம் இழிந்து:
தாள் மலர் விழுந்தனன். நான்மறை படர்தரக் கொழு கொம்பாயினான்
ஆசிகள் மொழிந்தனன் என்க. வேதங்கள் மிகப் பழமை வாய்ந்தவை
யாதலின் முதிய நான்மறை என்றார். ‘மெய்மையால்’ என்பதற்கு
‘நீர்மையால்’ என்பதொரு பாடமுண்டு. நீர்மை: முறைமையாகும்.
முறைப்படி ஆசி கூறினான் என்பது அப்பாடத்துக்குப்
பொருளாகும். 73
