திரு அவதாரப் படலம் - 234

bookmark

234.

‘வறுமை நோய் தணிதர வான் வழங்கவே.
உறு துயர் தவிர்ந்தது. அவ் உலகம்; வேந்து அருள்
செறிகுழல் போற்றிட. திருந்து மா தவத்து
அறிஞன். ஆண்டு இருக்குநன்; அரச!’ என்றனன்.
 
வறுமை நோய் தணிதர - (மழை   இல்லாமையால்  நீண்ட காலம்
அந்த நாட்டைப் பற்றியிருந்த கொடிய வறுமை நோய்     தணியும்படி);
வான்    வழங்கவே- பெருமழை பொழியவே; அவ்வுலகு   உறுதுயர்
தவிர்ந்தது  - அந்த  நாடு  மிக்க  துன்பம் நீங்கப் பெற்றது;  வேந்து
அருள்   செறிகுழல் போற்றிட   -   வேந்தன்   பெற்ற    செறிந்த
கூந்தலையுடைய   சாந்தை  போற்றி  உபசரிக்க; திருந்து   மாதவத்து
அறிஞன்    -   திருத்தமான   தவத்தை   உடைய    அறிஞனாகிய
அம்முனிவன்;  ஆண்டு  இருக்கு நன் அரச  என்றனன் -  அங்கே
வாழ்கின்றான் அரசே என வசிட்டன் கூறினான்.

வசிட்டன்  தயரதனுக்குக் கூறிய கலைக்கோட்டு  முனிவரின் வரலாறு
இது. அரசே!  அம்முனிவன் உரோமபதன்  நாட்டில் வாழ்கிறான் என்று
வசிட்டன்  கூறினான்.  உறுதுயர்:   வினைத்தொகை.   தணிதர: தணிய.
உலகமென்பது     நாட்டைக்     குறித்து    நின்றது.     செறிகுழல்:
வினைத்தொகை.       திருந்திய      தவம்       அறிவுடைமைக்குக்
காரணமென்பதால்    “ திருந்து  மாதவத்தறிஞன்”    என்றார்.  குழல்:
கூந்தல்.                                                   55