திரு அவதாரப் படலம் - 203
203.
‘போயது எம் பொருமல்’ என்னா.
இந்திரன் உவகை பூத்தான்;
தூய மா மலர் உளோனும்.
சுடர்மதி சூடினோனும்.
சேய் உயர் விசும்பு உளோரும். ‘தீர்ந்தது
எம் சிறுமை’ என்றார்;
மா இரு ஞாலம் உண்டோன்.
கழலுன்மேல் சரணம் வைத்தான்.
‘எம் பொருமல் போயது என்னா- எங்கள் துயரம் தீர்ந்தது என்று
கூறி; இந்திரன் உவகை பூத்தான்- இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான்;
தூய மா மலர் உளோனும்- தூய அழகிய தாமரையில் வாழும்
பிரமனும்; சுடர் மதி சூடினோனும்- ஒளியுடைய சந்திரனைத்
தலையிலணிந்துள்ள சிவபெருமானும்; சேய் உயர் விசும்பு உளோரும்-
மிக உயர்வான விண்ணுலகிலே வாழ்பவர்களும்; தீர்ந்தது
எம் சிறுமை என்றார்- எமது தாழ்வு தீர்ந்தது என்றார்கள்; மா இரு
ஞாலம் உண்டோன்- அகன்ற பெரிய இவ்வுலகை உண்டருளிய
திருமால்; கழலுன் மேல்சரணம் வைத்தான்- தான் ஏறிவந்த கருடன்
மீது திருவடிகளை வைத்தான்.
உவகை பூத்தல்: மகிழ்ச்சியில் முகம் மலர்தல் போல்வது. தீர்ந்தது
என்பன விரைவும். உறுதியும் பற்றி வந்த இறந்த காலவினை
முற்றுக்கள். ‘சரணம் வைத்தான்’ கருடன் மீது திருவடிகளை வைத்துத்
தனது இருப்பிடத்துக்குப் புறப்படத் தொடங்கினான் என்பது கருத்து.
என்னா: என்று; செய்யா என்ற வாய்பாட்டு வினை எச்சம் செய்து
என்ற பொருளையுடையது. உளோன்: ‘உள்ளோன்’ இடை குறைந்து
நின்றது. மா. இரு: உரிச் சொற்கள். மிகப்பெரிய என்பதை உணர்த்தி
நின்ற மீமிசைச் சொல் ஊழிப் பெருவெள்ளத்தில் உலகம் அழியாது.
திருமால் அதனை உண்டு. வயிற்றில் வைத்துப் பாதுகாத்தார் என்பது
புராணக் கருத்து. “உலகம் உண்ட பெருவாயன்” என. நம்மாழ்வாரும்
இதனைக் குறிப்பிடுவார். 24
