தாடகை வதைப் படலம் - 392

bookmark

தாடகை இராம லக்குமணர்களைப்
பார்த்துப் பேசுதல் (392-393)

392.

ஆர்த்து. அவரை நோக்கி
   நகைசெய்து. எவரும் அஞ்ச.
கூர்த்த நுதி முத் தலை
   அயில் கொடிய கூற்றைப்
பார்த்து. எயிறு தின்று
   பகு வாய்முழை திறந்து. ஓர்
வார்த்தை உரைசெய்தனள் - இடிக்கும்
   மழை அன்னாள்
 
இடிக்கும்   மழை  அன்னாள்   -   இடிக்கின்ற     மேகத்தைப்
போன்றவளான  அந்தத்  தாடகை என்னும் அரக்கி: ஆர்த்து  அவரை
நோக்கி- முழக்கமிட்டு. அம்மூவரையும்  பார்த்து; நைசெய்து  எவரும்
அஞ்ச  -  கோபச்சிரிப்புச் சிரித்து எவரும்  அஞ்சும்படி; கூர்த்த நுதி
முத்தலை  அயில் கொடிய   கூற்றைப்  பார்த்து  -   கூர்மையான
முனையை   உடைய   மூன்று கவடாக உள்ள தனது சூலமான  கொடிய
எமனைப் பார்த்துப் பின்; எயிறுதின்று பகுவாய் முழைதிறந்து - தனது
பற்களைக்   கடித்துக்   கொண்டு  வாயாகிய  குகையைத்  திறந்து; ஓர்
வார்த்தை உரை செய்தனள் - ஒரு வார்த்தை சொல்லலானாள்.

ஆர்த்து:   முழக்கமிட்டு. கூர்த்த: கூர்மைசெய்யப்பட்ட. நுதி: முனை.
முத்தலை  அயில்:  முக்கவட்டுக்  சூலம்.  ‘கொடிய கூற்று’   சூலத்தைக்
கூற்றுவனாக  உருவகித்தார்.  பார்த்து: ஒரு முறை பார்த்துக்   கொண்டு
என்பது   பொருள்.  பகுவாய்:  பெரியவாய்.  வாய்முழை:    உருவகம்
‘அயில்’  என்பதற்கு  வேல்  என்பது  பொருள் ஆயினும்   ‘முத்தலை
அயில்’     என்றதால்     முக்கவட்டுச்    சூலம்      எனப்பொருள்
கொள்ளப்பட்டது.  ‘எவரும்  அஞ்ச’  இராமபிரானைத்   தவிர மற்றைய
எல்லோரும் அஞ்ச என்பது பொருள். ஒரு வார்த்தை: ஒரு சொல்.   33