தாடகை வதைப் படலம் - 387
தாடகை எங்கிருப்பவள் என்று இராமன் வினாவுதல்
387.
அங்கு. இறைவன் அப் பரிசு
உரைப்ப. அது கேளா.
கொங்கு உறை நறைக் குல
மலர்க் குழல் துளக்கா.
‘எங்கு உறைவது. இத் தொழில்
இயற்றுபவள்?’ என்றான் -
சங்கு உறை கரத்து ஒரு தனிச்
சிலை தரித்தான்.
அங்கு இறைவன் அப்பரிசு உரைப்ப - அங்கு ஆசிரியனாகிய
தவ முனிவன் அத்தன்மையைக்கூற; அது கேளா - அதனைக்கேட்டு;
சங்கு உரை கரத்து ஒரு தனிச்சிலைதரித்தான் - சங்கிருக்கும்
கையில் ஒப்பற்ற வில்லைப் பிடித்திருக்கும் ராமபிரான்; கொங்கு உறை
நறைக் குலமலர் - மணம் பொருந்திய தேன்மிகுந்த மலர்களை
அணிந்துள்ள; குழல் துளக்கா - தலையை அசைத்து; இத்தொழில்
இயற்றுபவள் - இத்தகைய கொலைத்தொழில் புரியும் அக்கொடிய
அரக்கி; எங்கு உறைவது என்றான் - வாழ்வது எங்கே என்று
கேட்டான்.
இறைவன்: ஆசிரியன் (இங்கு விசுவாமித்திரன்). பரிசு: தன்மை.
கேளா: கேட்டு (செயா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்). கொங்கு:
தேன். நறை: மணம். குழல்: கூந்தல் (இங்குத் தலையை
உணர்த்துகின்றது). துளக்கா: துளக்கி (செயா என்ற வாய்பாட்டு
வினையெச்சம்).‘ எங்குறைவது இத்தொழில் இயற்றுபவள்’ என்பது
வழுவமைதி. ‘’சங்கு உறை கரத்து ஒரு தனிச்சிலைதரித்தான்’’
இடக்கையில் சங்கைப் பிடித்தவன் அதில் வில்லைத் தரித்திருக்கிறான்
எனவும். சங்கை மறைத்து வில்லைப் பிடித்துள்ளான் எனவும் சங்கு
ரேகையுடைய கையில் அதன் பயனாக வில்லைத் தரித்தான் எனவும்
பொருள் கூறுவர். சிலை: வில். தரித்தல்: பிடித்தல். 28
