தமிழ் வணிகர் ஒரு பார்வை
தமிழ் வணிகர் எனப்படுவோர் வணிகத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்களையே குறிக்கும். பெரும்பாலானவர்கள் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வாங்கி விற்கும் சிறுவணிகங்களிலேயே ஈடுபட்டுள்ளனர். பொருள் உற்பத்தி செய்பவருக்கும் பொருள் கொள்வனவு செய்வோருக்குமான பாலமாக செயற்பட்டு சந்தைப் பொருளாதாரத்தை ஏதுவாக்குவதில் வணிகர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த செயற்பாட்டில் ஒரு சிறுபான்மை வணிகர் பெரும் இலாபம் ஈட்டி செல்வந்தர் ஆகியுள்ளார்கள்.
தொழில் முனைவோரையும் வணிகர் எனலாம். அதாவது ஒரு புதிய தொழில், சேவை அல்லது உற்பத்தியை ஆரம்பித்து இலாபம் ஈட்ட முனைவோர் தொழில் முனைவோர் ஆவார்.
வணிகத்துறை நோக்கி பண்டையக் காலம் முதல் கொண்டு தமிழர் அணுகுமுறை:-
சங்ககாலம் முதற்கொண்டு வணிகத்தில் தமிழர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது ஒரு முதுமொழி. இருப்பினும் வணிக சமூகம் பல சமயங்களில் நியாமற்ற முறையில் சுரண்டல் மூலம் செல்வம் ஈட்டி சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் அல்லது சமனற்ற போக்கை பெருகச் செய்யும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் "வர்க்க போராட்டத்தில்" ஈடுபட்டு வணிகரை எதிர்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக "உழவர் சமூகத்தைச் சேர்ந்த அப்பர் தலைமையில் தமிழ் நாட்டில் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்கு எதிராக முன்னொரு சமயம் திரண்டெழுந்ததை" குறிப்பிடலாம்.
இலக்கியத்தில் வணிகர்கள்
பழங்கால இலக்கியங்களில் வணிகர்கள் பலவகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். வாணிபத்தைப் பரம்பரையாகச் செய்து வரும் வணிக மரபினர் வைசியர் எனப்படுவர். இவர்களை விட இப்பர், கவிப்பர், பெருங்குடி வணிகர் போன்ற வகையினர் தாம் கொண்ட பொருளால் பெயர் பெற்றனர்.
தாம் செய்யும் வியாபாரத்தாற் பிரிக்கப்பட்டவர்கள் கூல வணிகர் (கூலம் - நவதானியம்), பொன் வணிகர், அறுவை வணிகர் (துணி), மணி வணிகர் போன்றோர். இவர்களைவிட சேனை வணிகர் என்ற உத்தியோகப் பிரிவினரும் உண்டு.
தொல்காப்பியத்தில் வணிகருக்குரிய பின்வரும் ஐந்து தொழில்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவை வருமாறு
(அ) தமக்குரிய நூல்களை ஓதுதல்
(ஆ) தமக்குரிய யாகங்களைச் செய்தல்
(இ) தாம் பெற்ற பொருட்களை நல்வழியில் ஈதல்
(ஈ) உழவு செய்வித்தல்
(உ) பசுக்களைக் காத்தல்
என்பனவாம்.
வணிகர்கள் அரசர்களால் பெரிதும் மதித்துப் பாராட்டப்பட்டனர். வணிகரைப் பாதுகாத்தல் ஒரு நாட்டின் இன்ப வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதை இலக்கியங்கள் கூறியிருக்கின்றன. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனை வாழ்த்தி குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவர் 'பலவகை உணவுப்பண்டங்களை விற்கும் வணிகருடைய குடிகளைக் காப்பாற்றி வருகின்றாய்' என்று பொருள்பட "கூலம் பகர்நர் குடிபுறந் தராஅ" என்று பாடியிருக்கிறார்.
சீத்தலைச் சாத்தனார் (கூல வாணிகர்), இளவேட்டனார் (அறுவை வாணிகர்) ஆகியவர்கள் சங்க காலத்து வணிகர்களாக கருதப்படுகின்றனர்.
