டி. கே. பட்டம்மாள்
வாழ்க்கை வரலாறு
டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி ஆவார். இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஶ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் ‘பெண் மும்மூர்த்திகள்’ என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும், எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.
பிறப்பு:
அலமேலு என்ற இயற்பெயருடைய ‘பட்டா’ எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள் தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர் மற் தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஒரு சிறந்த பாடகி ஆவார். அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப ராஜம்மாள் என்றும் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த மரபுகளையும் தாண்டி பட்டம்மாள் தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார். அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். பட்டம்மாள் 1939 ஆம் ஆண்டில் ஆர்.ஈசுவரன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
இசைத்துறை:
பட்டம்மாள் முறையாக கர்நாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், 1932 இல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார். பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் ஜப்பான், சிங்கப்பூர், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய ‘அகிகோ’வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.
சங்கீத நாடக அகாடெமி விருது-1962, பத்ம பூஷன்-1971, இசைப்பேரறிஞர் விருது-1973, பத்ம விபூஷன்-1998, சங்கீத கலாநிதி, கலைமாமணி விருது, காளிதாஸ் சம்மன் விருது, தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி வழங்கிய சங்கீத கலாசிகாமணி விருது-1978, தேசியகுயில் போன்ற பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
