ஞான சம்ஹிதை

ஞான சம்ஹிதை

bookmark

காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம்,  நக்வைத த்வர்ண யாம் யஹம் -  உலகங்கள் அனைத்திற்கும் பரமபிதாவான சிவபெருமானையும் அவ்வுலகங்கள் அனைத்திற்கும் அருள் அன்னையான உமா மகேஸ்வரியையும் அவர்களின் பிள்ளையான கணேசப் பெருமானையும் நமஸ்காரஞ்செய்து. இந்தச் சிவதத்துவ புராணத்தை வர்ணிக்கிறேன்.

1. புராண வரலாறு

முன் ஒரு காலத்தில், நைமிசாரண்ணியம் எனும் வனத்தில் வசிப்பவர்களான தவ முனிவர்கள் அனைவரும் அதிவிநயபக்தியோடு, வியாஸ மகரிஷியின் சிஷ்யரும் நற்குணங்களையுடைய வருமான சூதமா முனிவரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்கள்.

மகாபாக்கியசாலியான சூத முனிவரே! நீங்கள் நீண்ட நெடுங்காலம் சிரஞ்சீவியாகச் சுகத்தோடு வாழ்வீர்களாக! தாங்கள் தங்களிடம் சிலவற்றைக் கேட்க விரும்புகிறோம். நீங்கள் வியாஸ பகவானது திருவருளால் கிருத கிருத்தியர் என்ற தன்மையை அடைந்தவர். கடந்த காலத்தில் நடந்தவைகளையும் நிகழ்காலத்தில் நடப்பவைகளையும் இனிவரும் காலத்தில் நடக்கப் போகும் விருத்தாந்தங்களையும் அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்த திரிகால ஞானியாதலால் தங்களுக்குத் தெரியாத விஷயம் துளியுமிராது! குருவான வியாஸ பகவானின் கருணையால் அனைத்தும் சுலபமாகச் செய்யப்பட்டன. நீங்கள் தயவு செய்து சர்வோத்கர்ஷமான சிவபெருமானின் தத்துவத்தையும். அவருக்குரிய சிறந்த பூஜை முறையையும் பரமசிவனாரின் பற்பலவிதமான சரித்திரங்களையும் எங்களுக்குக் கூறியருள வேண்டும். நிர்க்குணனான மகேஸ்வரன் எப்படிச் சகுணனாகிறார்? நாங்கள் சிவதத்துவத்தை நன்றாக விசாரித்து அறிந்தவர்களால் மகாதேவரும் உலகத்திற்கு சுகம் நல்குபவருமான சங்கரன் என்னும் திருப்பெயரையுடைய பகவான் இந்த உலகப் படைப்புக்கு முன்பும் படைப்பின் மத்திய காலத்திலும் முடிவான பிரளய காலத்திலும் எவ்விதமாக இருக்கிறாய்? அவர் எப்படித் தோற்றமளிக்கிறார்? எப்படிப் பிரசன்னமாகி இவ்வுலகங்களை முன்னிட்டு அவர் எத்தகைய பயன்களைக் கொடுக்கிறார்? எந்த உபாயத்தினால் சர்வேஸ்வரன் விரைவாகப் பிரசன்னமாவார்? இவற்றையும் இன்னும் நாங்கள் கேட்காத விஷயங்களையும் உத்தம் விரத சீலரான தாங்கள் சொல்ல வேண்டும்? என்று சவுனகர் முதலான முனிவர்கள் விருப்போடு கேட்கவே சூதமாமுனிவர் மிகவும் உற்சாகத்தோடு கூறலானார்.

2. ஜோதிலிங்கம் தோன்றிய கதை

முனிவர்களில் சிறந்தவர்களே! நீங்கள் இப்பொழுது என்னிடம் கேட்ட விஷயங்களைப் போலவே முன்பொரு சமயம் நாரத முனிவர் பிரம்ம ஞானத்தை அறிவதற்காக அவரது பிதாவான நான் முகப்பிரும்மாவைக் கேட்டார். அதன் விவரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். அந்தணோத்தமர்களே திரிலோக சஞ்சாரியான நாரத முனிவர் எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து வரும்போது பரமாத்மாவான சிவபெருமானின் தத்துவத்தை அறிவதற்காக அவரது திருப்பெயரைச் சிந்தித்துக் கொண்டே தம் தந்தையான பிரும்ம தேவரிடம் சென்றார் பிரம்மாவை அவர் வணங்கி விட்டுப் பின் வருமாறு கேட்டார். பிதாவே! பிரமஞானிகளில் சிறந்தவரே இவ்வுலகங்களையும் உயிரினங்களையும் படைத்து பிதா மகனாக விளங்கும் சிருஷ்டி கர்த்தாவே தங்கள் தயவினால் உத்தமமான விஷ்ணுவின் மகத்துவம் முழுவதையும் பக்தி மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் செயற்கரிய தவமார்க்கத்தையும் தானமார்க்கத்தையும் அறிந்தேன். ஆனால் சிவபெருமானது தத்துவத்தையும், விதிப்படிக் கிரமமாகச் செய்யவேண்டிய அவருடைய பூஜையையும் அவரது சரிதங்களையும் நான் அறிந்து கொள்ளவில்லை. நிர்க்குணமான சிவதத்துவத்தைப்பற்றி, சர்வஞானியான தங்களைத் தவிர வேறு யாரை நான் கேட்கப்போகிறேன்? ஆகையால் சிவபெருமானது மகிமையையும் உலகுய்ய அவரால் அருளப்பட்ட விரதங்களையும் அவற்றால் அவர் மகிழ்ந்து உலகங்களுக்கு எந்தெந்தப் பயன்களைக் கொடுக்கிறாரோ அவற்றையும். சிவலிங்க உற்பத்தியையும் அவர் பார்வதியை மணந்த திருக்கல்யாண மகோத்சவத்தையும் நான் கேட்காத பிறவற்றையும் சொல்ல வேண்டும். இந்த விஷயங்களைப் பற்றி முன்பு நான் பலரிடம் பலவிதமாகக் கேட்டிருந்துங் கூட எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. என்றார், நாரதர். தம் கேத சம்பூதரான நாரதர் அவ்வாறு கேட்டதும் பிதா மகனான நான்முகப் பிருமதேவர் சொல்லத் தொடங்கினார்.

நாரதா! எதைக் கேட்பதனால் எல்லா உலகங்கட்கும் எல்லாவிதப் பாவங்களும் ஒழிந்து போகுமோ அத்தகைய சிவபெருமானது மிகச்சிறந்த தத்துவத்தையும் அவருடைய அற்புதமான திருவுருவத்தையும் என்னாலும் மகாவிஷ்ணுவினாலுங்கூட சரியாக அறிய முடியவில்லை. ஆயினும் எனக்குத் தெரிந்தவரையில் சொல்லுகிறேன் கேள் நாரதா! அஸதாத்மகாமகவும்ஸதாத் மகமாயும் இருக்கிற இந்த உலகம் எப்பொழுது கண்ணுக்குப் புலப்படாததாக ஆகிவிடுகிறதோ, அப்பொழுது வியாபதி ரூபமான (ஒப்பு நிறைவுருவான) பிரமமாக ஆகவிடுகிறது. அப்பொழுது அந்தப் பிரம்மஸ்தூலமும் (பருமையும்) அல்ல சூக்ஷ்மமும்(நுண்மையும்) அல்ல; உற்பத்தியுடையதும் அல்ல; நாசம் அடைவதும் அல்ல; அது உயர்ந்த சக்தியத்தையும் மிகச் சிறந்த அறிவையும் உடையதாகிறது. அத்தகைய பிரமத்தை யோகியர்கள் எப்பொழுதுமே ஞானக் கண்ணால் பார்க்கிறார்கள். யாவுமாகியும் சிறந்ததாகவும் விளங்கிய அந்தப்பிரமம் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் வழங்கியது சிலகாலம். கழித்த பிறகு, அந்தப் பிரம்மத்திற்கு இச்சை உண்டாயிற்று. அதைப் பிரகிருதி என்றும் மூலகாரணம் என்றும் சொல்வார்கள்.

அந்தப் பிரகிருதி என்பவள் எட்டுக் கைகளையும் விசித்திரமான ஆடையையும் ஆயிரம் பூரணச் சந்திரர்களுக்குச் சமமான முகத்தையும் உடையவள். அநேகவிதமான ஆபரணங்களை அணிந்தவள், அனைத்திற்கும் காரணமானவள், அழகு முதலியவற்றால் அத்விதீயையாகவும் புருஷக் கலப்பால் ஸ்தலதீயையாயும் இருக்கிற அந்த மாயாதேவியானவள், எந்தப் பிரமத்தினடமிருந்து எந்தக் காலத்தில் தோன்றினாளோ, அந்தப் பிரமத்தினிடமிருந்தே அதே காலத்தில் புருஷனும் உண்டானான். அவ்விருவரும் ஒன்று சேர்ந்து யோசனை செய்வதில் ஆவல் கொண்டவர்களாய். நாம் இருவரும் யாது செய்ய வேண்டும்? என்று ஒருவரோடொருவர் யோசித்தார்கள், இவ்வாறு அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது மங்களகரமான ஒரு வானொலி வாக்கு, உங்களுக்குத் தோன்றிய சந்தேகத்தைப் போக்க, நாங்கள் இருவரும் தவஞ் செய்ய வேண்டும் என்று கூறியது. அந்த வாக்கைக் கேட்க பிரகிருதி, புருஷன் ஆகிய இருவரும் மிகக் கடினமான தவம் புரிந்தார்கள். நாரதா! கவனமாகக் கேள்! யோக மார்க்கத்தை முக்கியமாகக் கருதிய அந்தப் பிரகிருதியும், புருஷனும் எவ்வளவு காலம் கழித்து தவ நிலையிலிருந்து கண் விழித்து, ஆஹா நம்மால் எவ்வளவு காலம் தவம் செய்யப்பட்டது? என்று வியந்தார்கள், அப்போது அவ்விருவருடைய தேகங்களிலிருந்து பலவிதமான நீர்ப் பெருக்குகள் உண்டாகி, சகல உலகங்களிலும் வியாபித்தது எல்லையற்றதாகவும் தொட்டவுடனே பாபத்தை போக்குவதுமான அந்தத் தண்ணீரானது பிரமரூபமாக ஆயிற்று.

அப்போது புருஷன் மிகவும் களைப்படைந்து பிரகிருதியுடன் சேர்ந்து, அந்த ஜலத்தில் பற்பலகாலம் பிரியத்தோடு துயில்கொண்டான். அந்த மஹாத்மாவான புருஷனுக்கு, அந்த ஜலசயன காரணத்தால், நாராயணன் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்தக் காலத்தில் அவர் களிருவரையும் தவிர வேறொன்றும் உண்டாகவில்லை. பிறகு பரமாத்மா சம்பந்தமான தத்துவங்கள் உண்டாயின பிரகிருதியினிடத்தில் மஹத்தும் அந்த மஹத்தினிடத்தில் ஸத்வம், இராஜஸம் தாமஸம் என்ற முக்குணங்களும் அம்முக்குணத்திலிருந்து ஸப்தம்; ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம்(ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம்) என்ற பஞ்ச தன் மாத்திரைகளிலிருந்து, ஆகாயம் வாயு, தேயு, அப்பு பிருத்வி என்ற பஞ்ச பூதங்களும் (வானம், காற்று, நெருப்பு, நீர், நிலம், என்ற ஐம்பெரும் பருப்பொருட்களும்) அப்பஞ்ச பூதங்களிடமிருந்து, வாக்கு, பாதம், பாணி பாயுரு உபஸ்தம் என்ற கண்மேந்திரியங்களும் (வாய், கால், கை, மலவாய், கண், மூக்கு, செவி என்ற ஞான இந்திரியங்களும்) (ஐம்பொறிகளும்) மனம், புத்தி, சித்தம் என்ற அந்தக் கரணங்களும், (உட்கருவிகளும்) தோன்றின. இத்தத்துவங்களுக்கு இவ்வாறு எண்ணிக்கைப்பட்டது. பிரகருதி புருஷனைத் தவிர அத்தத்துவங்கள் ஜலமாயமாகும். இருபத்து நான்கு தத்துவங்களுடன் சேர்ந்துள்ள அத்தத்துவங்கள் பிரகிருதி புருஷர்களால் ஒன்றாகச் சேர்க்கப்படுகிறது.

அத்தகைய தத்துவத்தைத் தன் சுவாதீனப் படுத்திக் கொண்டு பிரமஸ்வரூபமான ஜலத்தில் நித்திரை செய்யும் தேவனான நாராயணனது நாபியிலிருந்து எண்ணிறந்த இதழ்களுடன் கூடியதாகவும் தாதுக்களால் பரவியதாகவும், பலயோசனை அகல உயரமும், பல கோடி சூரிய காந்தியும் கொண்டதாகவும் பேரழகுள்ள அதி உன்னதத் தாமரை மலர் ஒன்று தோன்றியது அந்தத்தாமரை மலரிலிருந்து ஹிரண்யகர்ப்பனான நான் புத்திரனாக உதித்தேன். நாராயணனுடைய மோகமாயையால் நான் யார்? எங்கிருந்து தோன்றினேன்? நான் யாது செய்ய வேண்டும்? நான் யாருக்கு புத்திரன்? என்னை உண்டு பண்ணியவர்கள் யார்? இவ்வாறான யோசனைகளிலும் சந்தேகங்களிலும் ஆழ்ந்திருந்த எனக்கு ஒன்றும் நிச்சயமாகத் தோன்றவில்லை மறுபடியும் நான் வந்த காரணத்தால் மோகமடைந்தேன், பிறகு இந்தத் தாமரையின் அடிப்பகுதி எங்கு இருக்கிறதோ அங்கு நம்மை சிருஷ்டி செய்தவனும் இருப்பான் அதற்குச் சந்தேகமே இல்லை என்று மனோதிடம் செய்து கொண்டு தாமரை மலரிலிருந்து கீழே இறங்கி அநேக ஆண்டுகள் ஒவ்வொரு நாளத்திலுஞ் சுற்றியும் மோகிதனான நான் உத்தமமான அந்தத் தாமரையின் அடிப்பகுதியைக் காணவில்லை. பிறகு சந்தேகத்தோடு அதன் மலரையடைய விரும்பினேன். அதன் காம்பு விழியாகவே மேல் நோக்கி ஏறினேன். அப்போதும் மலரின் மொக்கை நான் அடையவில்லை. இவ்விதமாக அக்காம்பின் வழியிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன் ஆண்டுகள் பலவாயின க்ஷணநேரம் நான் களைப்படைந்து மூர்ச்சையானேன், அப்போது ஒரு வாக்கு தவஞ் செய்! என்று மங்களகரமாக ஒலித்தது அந்த வானொலியைக் கேட்ட நான், பன்னிரண்டு ஆண்டுகள் தவஞ் செய்தேன். அப்போது, சங்கு, சக்கரம், கதை, ஏந்திய திருக்கரங்களோடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி எனக்கு அருள் புரிவதற்காக காட்சியளித்தார். பிரகிருதியோடு உண்டு செய்யப்பட்ட விஷ்ணுவின் அழகிய ரூபத்தைப் பார்த்த நான் ஆனந்தமடைந்தேன். தங்கமயமான காந்தியோடு வெளிக்கு ஸத்வகுணப்பிரதனாகத் தோன்றியபோதிலும் துஷ்டர்களை நாசஞ் செய்யும் பொருட்டு உள்ளத்தில் தபோகுணப்பிரதனாகவும் நாராயணனாகவும் யார் ஒருவர் என் கண்களுக்குப் புலப்பட்டாரோ, அத்தகைய ஸ்ரீ விஷ்ணுவின் மாயை வயப்பட்ட நான், அவரை நீ யார்? என்று சொல் என்று கேட்டேன்.

அவ்வாறு கேட்டதும் விஷ்ணு என்னைப் பார்த்து, நல்ல விரதமுடையவனே! அடா குழந்தாய்! ஸத்வ குணத்தால் வியாபதனாக உன்னை நிர்மாணஞ் செய்தவனும் விஷ்ணுவும் நான்தான் என்பதை அறிந்துகொள்! இவ்விஷயம் உண்மை! என்று புன்னகை செய்தார் அவரது வார்த்தையைக் கேட்டதும் அவரது மாயை வசப்பட்டு, எப்படி குருவானவன் தன் சீடனை எளிதாகப் பேசுவானோ. அவ்வாறு படைப்புத் தொழில் புரியும் என்னைப் பார்த்து அடா, குழந்தாய் என்று சொல்கிறாய். உன்னை மட்டும் இவ்வுலகங்களை உற்பத்தி செய்கிறவன் என்றும் மாயையை வியாபிக்கச் செய்யும் விஷ்ணு வென்றும் உலகங்கள் யாவற்றையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டு இருப்பவன் என்றும் இரட்சிப்பவன் என்றும் நீயும் என் மோகத்தால் இப்படிப் பேசுகிறாய் அதற்காரணம் வேண்டாமா அதைச் சொல் என்று கேட்டேன், அதற்கு அந்த விஷ்ணு நானே உலக காரணன் என்னுடைய சரீரத்திலிருந்து தான் நீயே உண்டானாய் இவ்வுலகங்களை உண்டு செய்வதற்குண்டான என்னை நீ மறந்து விட்டாய். இந்த விஷயத்தில் தவறு உன்னுடையதல்ல. இது எனது மாயையின் செயல் பிரம்மாவோ: உண்மையாகச் சொல்லுகிறேன். முன்பு என்னால் உற்பத்தி செய்யப்பட்ட இருபத்து நான்கு தத்துவங்களும் என்னிடத்திலேயே இருக்கின்றன என்று கூறினார் ஸ்ரீமந்நாராயணனுடைய அந்த வார்த்தையைக் கேட்டு கோபங் கொண்ட நான் நீ யார்? இவ்வளவு பேசும் உன்னையும் உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும்! என்றுகூறி அவருடன் தீவிரமாக வாக்கு யுத்தஞ் செய்தேன், இவ்விதம் நாங்கள் இருவரும் வாதப் போர் புரிந்து வன்முறைச் செயலில் ஈடுபட்டபோது எங்கள் இருவருடைய விவாதத்தைத் தீர்ப்பதற்காகவும் எங்களுக்கு ஞானம் தோன்றச் செய்யவும் எங்களிருவருக்கும் நடுவே அதியற்புதமானதொரு ஜோதிலிங்கம் உண்டாயிற்று.

நாரதா! பல்லாயிரங்கோடி ஜ்வாலைகளால் பூரணமாகவும் காலாக்கினிக்கு இணையாகவும் நாசவிருத்திகள் இல்லாததாகவும் ஒப்பற்றதாகவும் வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாததாகவும் பிரகாசம் இல்லாததாகவும் உலகங்களை உண்டு பண்ணத்தக்கதாகவும் விளங்கிய அந்த சோதிலிங்கத்தின் சுடர்களால் மயக்க நிலையடைந்த விஷ்ணு என்னைப் பார்த்து  பிரம்மாவே! நீ ஏன் யுத்தஞ் செய்கிறாய்? நான் ஏன் உன்னுடன் யுத்தம் செய்ய வேண்டும்? நம் இருவருக்கும் மத்தியில் தோன்றிய இந்த லிங்கம் எப்படித் தோன்றியது? யாரால் தோன்றியது? ஆகவே இந்த இடத்தில் மூன்றாவது நபர் ஒருவர் இருக்கிறார். நம் இருவரின் போராட்டத்தையும் நிறுத்திக் கொள்வோம். அக்கினி மயமாக இங்கே தோன்றியுள்ள இந்த ஜோதிலிங்கம் எங்கிருந்து உண்டாயிற்று? அதை முதலில் கண்டறிவோம். நான்கு திசைகளிலும், விண்ணிலும், மண்ணிலும் இதற்குரிய ஆதாரம் எங்கிருக்கிறது என்று தேடிக் காண்போம் அதற்காக நீ அன்னப் பறவையின் உருவத்தை எடுத்துக் கொண்டு காற்றின் வேகத்தை விட விரைந்து சென்று அதி வேகமாக ஆகாயத்தில் புகுந்து ஆராய வேண்டும், நானும் வராக வடிவம் (பன்றியுருவம்) எடுத்த இந்த லிங்கத்தின் அஸ்திவாரத்தையே கெல்லிட்பார்த்து விடுகிறேன்! என்று சொல்லிவிட்டு பன்றி வடிவமெடுத்து பூமியைத் தோண்டித் துளைத்துக் கொண்டு சென்றார் நாரதா! நான் அன்னப் பறவையின் வடிவமெடுத்து வானவெளியில் பறந்து சென்றேன், அழகான சிறகுடன் கூடிய நான் அன்று முதல் ஹம்ஸம் என்றும் ஹம்ஸராஜன் என்றும் வழங்கப்படலானேன். ஹம்ஸ ஹம்ஸ என்று எவனொருவன் ஜெபம் செய்கிறானோ நான் அவனாகி விடுவேன். அன்னவிடிவம் ஏற்ற நான் ஆகாயத்தில் காற்றையும் மனத்தையும் விட வெகு வேகமாக பறந்து சென்றேன். ஸ்ரீ மந் நாராயணனோ. பத்து யோசனை நீளமும் பத்து யோசனை அகலமும்மேருமலை போன்ற உடலும் நாகங்களும் கூர்மையான கோரைப் பற்களும் ஊழிக் காலச் சூரியனுக்குச் சமமான காந்தியும் நீண்ட மூக்கும், பெருங்குரலும், சிறு கால்களும் மனோவேகமும் கொண்ட ஸ்வேத வராக (வெண்பன்றி) வடிவம் பெற்று பூமியைத் தோண்டிக் கொண்டே பாதாளலோகத்திற்குச் சென்றார். அவ்வாறு சென்ற திருமால் ஆயிரம் ஆண்டுகள் வரை அந்த ஜோதிலிங்கத்தின் அடியைக் கண்டறிய முடியாமல் பாதாளலோகத்தில் தேடிக் கொண்டிருந்தார் அன்று முதல் எல்லா உலகங்களிலும் ஸ்வேதவராக கற்பம் தோன்றியது.

3. ஹரி அயனுக்கு வரமளித்தல்

முனிவர்களே! பிரும்மாவும் விஷ்ணுவும் முறையே ஹம்ஸ வடிவையும் வராக வடிவையும் எடுத்துக் கொண்டு ஆகாயத்திலும் பூமியிலும் சஞ்சாரம் செய்யச் சென்ற பிறகு நடந்தவற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள்! என்று சூத முனிவர் சொல்லத் தொடங்கினார். பிறகு பிரும்மதேவர் நாரதரைப் பார்த்துச் சொல்கிறார். வராக அவதாரமெடுத்த மகாவிஷ்ணு வெகுகாலம் சுற்றியும் அந்த லிங்கத்தின் அடிவாரத்தின் தடத்தைக்கூட காண முடியவில்லை அந்த ஜோதிலிங்கத்தின் முடியைக் காண்பதற்காக ஆகாயத்திற்கு அன்னமாகப் பறந்து சென்ற நான் விடாமுயற்சியோடு முயன்றேன் அதன் விளைவாக நான் இளைத்துக் களைத்து அந்த லிங்கம் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தேன். அது போலவே ஸ்ரீ மந்நாராயணரும் மிகவும் இளைத்தும் களைத்தும் என்னைப் போலவே புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து சேர்ந்தார். அன்னமாகவும் வராகமாகவும் இருந்த நாங்கள் இருவரும் அந்த லிங்கஸ்வரூபியான சிவபகவானை நமஸ்கரித்தோம். அந்த நிலையில் நாங்கள் இருவருமே அவ்வாறு ஏன் செய்தோம் என்று சிந்தித்தோம் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட நாங்கள் இருவருமே ஒன்றாகச் சேர்ந்து ஒன்றை வணங்கும் நிலை ஏன் ஏற்பட்டது என்று எண்ணினோம். மாயையில் வல்ல மகா விஷ்ணுவும் வித்தையில் வல்ல நானும் அந்த லிங்கத்தை வணங்க வேண்டுமானால் அத்தகைய மாயை அந்த லிங்கத்திற்குரிய பகவானின் மாயை என்பதை அறிந்தோம். இத்தன்மையானது தான் என்று எண்ணக் கூடாததாகவும் பெயரும் செயலும் இல்லாததாகவும் லிங்கம் இல்லாததாகவும் பக்தர்களுக்கு அருள் செய்யும்படி லிங்கத்தின் தன்மையை அடைந்ததாகவும், பரமயோகிகளுக்கும் புலப்படாததாகவும் விளங்கிய அந்த ஜோதிலிங்க உருவத்தை மன உறுதியுடன் வணங்கிய நாங்கள் இருவரும் ஆண்டவனே! அனைத்திற்கும் மூலக்காரணனே! உம் சுயவடிவை நாங்களறியோம்! நீர் யாரோ? அறியவொண்ணாத உம்மை நாங்கள் நமஸ்கரிக்கிறோம்! என்று தோத்திரம் செய்து கொண்டே ஆயிரம் வருடங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்! எங்கள் இருவருக்கும் மகாபிரகாசமாகவும் ஆனந்தமாகவும் மூன்று மாத்திரை லட்சணத்துடன்கூடிய (ப்லுத மாத்திரை) ஓம் என்ற நாதவடிவம் உண்டாயிற்று.

ஓ! நாரதரே! மகா சப்தத்துடன் சேர்ந்த இது என்ன? என்று நாராயணர் யோசித்துவிட்டு எதனிடத்திலிருந்து இந்தச் சப்த முண்டாயிற்றோ அந்தப் பொருளுக்கு நமஸ்காரம் என்று கும்பிட்டு அந்த லிங்கத்தினது தென்பாகத்தில் அழிவில்லாததும் முதலாவதுமான அகாரத்தையும் அதன் வடபாகத்தில் உகாரத்தையும் இவ்விரண்டிற்கும் நடுவில் மகாரத்தையும் உயரத்தில் ஓம் என்னும் சப்த விசேஷத்தையும் பார்த்தார். அவற்றுள் தெற்கிலிருந்த முதலெழுத்தாகிய அகாரம் சூரிய மண்டலம் போலவும், வடக்கிலிருந்த இரண்டாவது எழுத்தாகிய உகாரம் அக்கினியின் காந்தியைப் போலவும் நடுவிலிருந்த மூன்றாவது எழுத்தாகிய மகாரம் சந்திரமண்டலம் போலவும் விளங்க அதன் பேரில் ஸ்படிக கல் போன்ற காந்தியையுடைய தான பரம்பொருளைத் தரிசித்தார்.

லிங்கஸ்ய தக்ஷிணே பாஹே ததாபஸ்யத் ஸனாதனம்
ஆத்யம்வர்ண மஹாரம்து உகாரம் ச்சோத்ரே தத
மகாரம்மத்யத ஸ்சைவ நாதாந்தம் தஸ்பசோமிதி

ஜாக்கிரம் (நனவு). ஸவப்னம்(கனவு), சுக்ஷúக்தி(உறக்கம்) துரியம்(பேருறக்கம்) என்னும் நான்கு அவஸ்தைகளுக்குப் மேம்பட்ட துரிய அதீதமாயும் (உயிர்ப்படக்கமாயும்) நிர்க்குணமாயும், மாயாசம்பந்த விகாரமில்லா ததாயும். ஸஜாதீயம் விஜாதீயம் என்னும் சொந்தமற்றதாயும் இரண்டாவது இல்லாததாயும், உள்வெளி அற்றதாயும் இரண்டாவது இல்லாததாயும், உள்வெளி அற்றதாயும், அதிமத்திய அந்தரகிதமாயும், ஆனந்தத்திற்கு காரணமான பரமானந்தமாயும், சதயமாயும், அழிவில்லாததாயும் முக்கியமாயுமிருக்கிற ஏகாக்ஷரம் என்று சொல்லப்படுகிற பரம் பிரம்மத்தைப் பார்த்தார் அகரமென்னும் பெயரையுடைய பகவான் சிருஷ்டி (படைத்தலை) பண்ணுகிறவர். உகாரமென்னும் பெயரையுடைய பர்க்கர் ஸ்திதி(காத்தல்) தொழில் செய்பவர். மகாரமென்னும் பெயரையுடையவர் (அனுக்கிரகிப்பவர்) நானும் அந்த விஷ்ணுவும் ஆச்சரியம் மிகுந்த மனதோடு அச்சமயத்தில் மிகவும் ஆச்சரியகரமானது அழகுள்ளதும், ஐந்து திருமுகங்களுடையதும், பத்து திருக்கரங்களுடையதும், பச்சைக் கற்பூரம் போன்ற நிறமுடையதும் பல விதமான காந்தியையும் பலவித ஆபரணங்களையும் கம்பீரத்தையும் பராக்கிரமத்தையும் மகா புருஷ லக்ஷணத்தையும் சிறந்த உருவத்தையும் உடையதும் எல்லாவற்றையும் உண்டு செய்யத் தக்கதுமாகிய சிவதத்துவத்தையே பார்த்தோம், உடனே, அவர் தான் எல்லா தேவர்களுக்கும் ஈசனென்று தெரிந்து கொண்டு விதிப்படி வேதாந்தமான ஸத்யோ ஜாதாதி மந்திரங்களினால் விஷ்ணுவானவர் அவரைத் துதித்தார். நானும் அவ்வாறே தோத்திரஞ் செய்தேன் எங்கள் இருவருடைய தோத்திரங்களால் சந்தோஷப்பட்ட மாயா சம்பந்தமற்றவரான மகேஸ்வரன் திவ்விய ஸப்தமயமான ரூபம் கொண்டு அந்த ஜோதிலிங்கத்தில் பெருஞ்சிரிப்புடன் விளங்கினார்.

அகார தஸ்ய மூர்த்தாச லலாடம் தீர்க்க உச்சதே
மகாரம் தக்ஷிணம் நேத்ர மீகாரம் வாமலோசனம்
உகாரம் தக்ஷிணம் க்ரோத்ர மூகாரம் வாமமுச்யதே
ருகாரம் தக்ஷிணம் தஸ்யம் கபோலம் பரமேஷ்டிந
வாமம், கபோலம், ர்ருகாரம் ய ஏந சாயுடே உபே
ஏகாரமோஷ்ட மூர்த்வம் து ஐகார மதரம் விபோ
ஓகாரம் சத தௌகாரம் தநத பங்க்தி சயம் க்ரமாது
அம் அஸ்ச தாலு நீ தஸ்ய தேவ தேவஸ்ய தீமத
காதி பஞ்சாக்ஷராண் ய ஸ்ய பஞ்ச ஹஸ்தாஸ்ச தக்ஷிணே
சாதி பஞ்சாக்ஷராண்யேவம் பஞ்ச ஹஸ்தாஸ்து வாமத
தாதி பஞ்சாக்ஷரம்பாத தாதி பஞ்சாக்ஷரம் தத
பகாரமுதரம் தஸ்ய பகாரம் பார்ஸ்வ முச்யதே
பகாரம் வாம பார்பசுவம் துபகாரம் ஸ்கந்த உச்யதே
மகாரம் ஹ்ருதயம் சம்போ மகாதேவஸ்ய யோகிந
யகாராதி சஹராந்தம் விபோர்வை சப்த தாதவ
ஹகாரம் நாபிரூபம் ஹி ஷகாரம் நாத உச்யதே
ஏவம் சப்த மயம் ரூப மகுணஸ்ய குணாத்மன

இத்தகைய குணசொரூபியாயும், நிர்குணனாயும் சப்தமயமாயும் உள்ள பகவானை என்னோடு திருமாலும் பார்த்து பிரபுவே! எங்கள் சஞ்சலத்தை அகற்ற கிருபை செய்யும்! என்று வேண்டிக் கொண்டோம். எங்கள் பிரார்த்தனைக்கு கருணை புரிந்து உங்கள் மேல் கருணை கொண்டிருக்கிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார், அதைக்கேட்டு அளவிலா ஆனந்தங்கொண்ட நாங்கள் இருவரும் மகாதேவனே! எங்களுக்கு இஷ்டமான வரங்களைக் கொடுத்தருள்வீர்! என்று வேண்டிக் கொண்டோம், உடனே சிவபெருமான் பிரும்மாவான எனக்குச் சிருஷ்டி செய்யும் வரத்தையும் விஷ்ணுவுக்கு சிருஷ்டி செய்யப்பட்டதைக் காப்பாற்றும் வரத்தையும், உருத்திரனுக்கு சங்கரிக்கும் வரத்தையும் அளித்து, இதுதான் தேவ சம்பந்தம் கொண்ட பிரகிருதி என்று கூறியருளினார். மேலும் இந்தப் பிரகிருதியில் பிரமாணி என்னும் பெயருள்ள சக்தி பிரம்மனையும் லக்ஷ்மி என்னும் பெயருள்ள சக்தி விஷ்ணுவையும், காளி என்னும் பெயரில் ஒரு சக்தி உருத்திரனையும் அடையும். இப்படி பிரும்ம விஷ்ணு: உருத்திரர் ஆகிய மூன்று சுபகரமான சக்திகள் உண்டாக அம் மூன்றுதேவரும் மூன்று சக்திகளுடன் சேர்ந்து படைத்தல்-காத்தல்-அழித்தல் என்னும் சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வார்கள் என்று கூறினார். மேலும் விஷ்ணு மூர்த்தி சிவபெருமானை நோக்கி, சுவாமி! தேவரீர் சொன்ன கட்டளையை நாங்கள் தட்டமுடியுமோ உமது சித்தத்தின்படியே உமது ஆணையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆயினும் உம்மிடம் நான் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டிய தொன்றும் இருக்கிறது! என்று வேண்டினார். அதற்கு பகவான் ஓ விஷ்ணுவே! உமது விசுவாசத்தைப் பாராட்டி மிகவும் இஷ்டத்தை உண்டு பண்ணுகிற ரக்ஷிப்புத் தொழிலை செய்யும் பதவியை உமக்களிக்கிறேன் என்று கூற, உடனே விஷ்ணு வானவர், ஓ; சங்கரா, சர்வ ரக்ஷகா தேவதேவா எனக்குப் பதவி முதலியன வேண்டாம்; தத்துவோபதேசம் செய்தருள வேண்டுகிறேன் என்று கேட்டார். அதாவது தியானித்தல், சேவித்தல் பூஜித்தல் ஆகியவற்றிற்குரிய ஓர் உபதேசத்தைக் கேட்டார். எல்லா வல்லமையும் போதித்தருள சந்தேகம் அறுபடும் சக்தியுள்ள உபதேசத்தைப் போதித்தருள வேண்டுமென்று திருமால் கேட்கவே சிவபெருமானோ பரத்தத்துவமாயும், பிரணவஸ்வரூபமாயுமிருக்கிற மங்களமாயுமிருக்கிற நாதரூபத்தை (ஒலி வடிவை) உபதேசித்தார்.

சிவபிரான் அருளால் நாதரூபத்தை பெற்று விஷ்ணு மூர்த்தி பரதத்துவத்தை நன்றாக அறிந்து நாதரூபத்தையும் தரிசித்து மந்திரத்தின் சுபவழிகளடங்கிய உண்மையையும் அனுஷ்டிக்கும் உபாயங்களையும் அறிந்து கொண்டு, நாதரூபமான பரம் பொருளை மேலே பார்த்தார். ஓம் தத்வமசி என்று சொல்லப்பட்டது ஓங்காரத்தைக் காரணமாகவும் ஐந்து கலைகளோடு கூடியதுமான மந்திரமாகும் இம்மந்திரம் சிவ சம்பந்ததான மஹாவாக்கியம், அது சுத்த ஸ்படிக நிறமானதும், மிக மேம்பட்டதும், சகல அபீஷ்டங்களையும் அளிக்க வல்லதாயும், ஞானஸ்வரூபமாயும் மந்திரரூபமாயும் உள்ளது. இன்னும் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்டதும் காயத்திரி ரூபமுடையதும் தருமார்த் காம மோக்ஷங்கள்(அறம், பொருள், இன்பம், வீடு) என்றும் நான்கு வித புருஷார்த்தங்களைக் கொடுப்பதாயும்; மிருத்தியுஞ்சயம், பஞ்சாக்ஷரம் சிந்தாமணி, தக்ஷிணாமூர்த்தி மந்திரம் என்றும் சொல்லப்பட்ட இந்த ஐந்து மந்திரங்களையும் அடையப் பெற்ற ஸ்ரீவிஷ்ணு பகவான் அந்த மந்திரங்களை ஜபித்தார்.

4. சிவலிங்கத்தின் மகிமை

பிரமதேவர் சொல்லுகிறார்-இப்படி தோத்திர ஜெபம் செய்து கொண்டு இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் முன்னால் சிவபெருமான் காட்சியளித்து அவருக்கு சுவாசமார்க்கமாக அமையும்படி அநேக மந்திரங்களும் அனுஷ்டானங்களும் அடங்கிய வேதத்தைக் கொடுத்தார். சகல வித்யைகளுக்கும் நிலைக்களமாகவும் தலைமையாகவுமுள்ள சிவபிரான், சொன்ன அந்த வேதத்தை மகாவிஷ்ணு பெற்றுக் கொண்டு அந்த வேதத்தையே எனக்கும் சுவாஸமார்க்கமாகக் கொடுத்தார். உன்னதரான சிவபெருமானிடமிருந்து சிவதத்துவ ஞானத்தையும் பெற்றுக் கொண்டு ஸ்ரீமந் நாராயணன். அந்த சிவதத்துவஞானத்தை எனக்கும் கொடுத்தார். இப்படிச் சிவபெருமான் அருளிய வேதத்தைச் சாங்கோ பாங்கமான அறிந்து கொண்டு சிவபெருமானை நோக்கி ஸமஸ்த வித்தைகளுக்கும் ஆதிமூலரானவரே! ஜோதி மயமான சுடரொளியே! தேவரீர் எப்படிச் சந்தோஷம் அடைபவர்? எப்படி உம்மை நான் தியானிக்க வேண்டும்? அடியேன் செய்ய வேண்டிய தியானம் எது? சங்கரராகிய தங்களை மனிதன் எப்படி அடைவான்? பாபங்களை யெல்லாம் பரிகரிக்கக்கூடிய இந்தச் சிவ தத்துவ ஞானத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார் உடனே கருணை கடாட்ச மூர்த்தியான சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி நம்மீது தணியாத விசுவாசங்கொண்ட விஷ்ணுவே! இப்போது உன் முன்னால் நாம் எப்படிப் பிரத்தியக்ஷமாக காட்சியளிக்கிறோமோ, அப்படியே பிரத்தியக்ஷமாக இருப்பதாகக் கருதி கொண்டு சகல பலன்களையும் சகலமான மனோ பீஷ்டங்களையும் தந்தருள்வோம்.

எவர் மனத்தில் எப்பொழுது துக்கம் உண்டாகிறதோ அப்போது அவர் இந்த லிங்கமூர்த்தியைப் பூஜித்தால் அந்த துக்கம் ஒழிந்து போகும் பிரம்மன் சதா சிருஷ்டித் தொழிலைச் செய்யவும், நீ ஜீவன்களை ரக்ஷித்துக் காக்கவும், சதா எம்மிடத்தில் மிகுந்த பக்தியும் கொண்டு பூஜை செய்வதால் எல்லா விருப்பங்களையும் கொடுப்பதோ, ஸகல பாபங்களும் நிவர்த்தியாகுமோ அப்படிப்பட்ட பூஜா விதியைப் போதிக்கிறேன்! என்று கூறினார். அவரிடம் விஷ்ணு பகவான் மேலும் வேண்டலானார். சேதனா சேதனமாயும், லோக ரூபமாயும், தேவ தேவர்களுக்குப் பிரபுவாயும் ருக்வேத சாமவேத யசுர்வேத சொரூபமாயும் சிருஷ்டி ஸ்திதி சங்கார கர்த்தாவாயும், ஸர்வாமீஷ்டங்களையுங் கொடுக்க வல்லவராகவும் இருக்கும் பிரபுவே! உம்மை நமஸ்கரிக்கிறேன். ஏகாக்ஷர ரூபமாகி(ஓரெழுத்து வடிவாகி)யும் நாதராகியும் அகாரரூபமாகியும் ஞான ரூபமாகியும், அறிவுருவாகியும் உகார ரூபமாகியும், ஆதி தேவனாகியும், வித்யாஸ்வரூபம் உடையவராகியும் இருக்கும் உமக்கு நமஸ்காரம் மூன்றாவதான மகாரூபமாகியும் சிவமூர்த்தியாகவும் சிரேஷ்டரூபத்தையுடையவராகியும், நீர் உருவாகியும் நீர் வாழ் பிராணிகளைக் காப்பவராகியும், ஜலத்தில் நித்திரை செய்பவராகியும், இருக்கிற உமக்கு நமஸ்காரம்! சித்ரூபமாயும்(அறிவுருவமாகியும்) பிராணி ரூபமாகியும், ஸ்மிருதி ரூபமாகியும், உள்ள உமக்கு நமஸ்காரம்! ஞான ரூபமாகியும், ஞானத்தினால் அடையத் தக்கவராகியும் உயர்ந்த

ரூபமான உமக்கு நமஸ்காரம்! பொன்மயமான கைகளையுடைய வரும், பொன்மயமான இந்திரியத்தை உடையவருமான உமக்கு வந்தனம் விரிசடை தரித்தவரும், யானைத்தோல் போர்த்தியவருமான உமக்கு வந்தனம் மங்கள ஸ்வரூபியாகவும், மங்களத்தையுண்டு பண்ணுபவராயும், பரமாகாய சரீரியாயும் மகாபத்மம் முதலான நிதிகளுக்கெல்லாம் பதியாயும், லிங்காரமாகியும் லிங்க ஸ்வரூபத்தை யுடையவராயுமிருக்கும் உமக்கு வந்தனம். தேஜோரூபியாயும் தேஜஸுக்களுக்கு பதியாகவும்; ஸகல ஸ்வரூபியாயுமிருக்கும் உமக்கு வந்தனம்! அனந்தரும் அனைத்திற்கும் உன்னதரும் நீரை உள்ளே உடையவரும் தவத்தில் ஆசக்தரும், பிரும்ம விஷ்ணுவான எங்களுக்குச் சாமவேத கீதத்தினாலே பாடம் தரத் தக்கவராயும், பரப்பிரம்ம ஸ்வரூபியாகவும், பரமாத்மாவ யும், ரிஷிஸ்வரூபியாயும் சகலத்திலும் வியாபித்தவராயும் பிரபுவாயுமிருக்கிற உமக்கு வந்தனம் அனைத்துமுணர்ந்த ஐயனே; வந்தனம்; வந்தனம்! இவ்வாறு விஷ்ணுபகவான் என்னுடன் சேர்ந்து சிவபெருமானை துதித்துக் கொண்டு நின்றார்(மகாபுண்ணிய உருவாகவும் உன்னதமாகவும் விளங்கும். இந்தத் துதியை எவன் படிக்கிறானோ, கேட்கிறானோ பிராமண சிரேஷ்டர்களைக் கேட்கச் செய்கிறானோ அவன் மகா பாபியாயிருந்தாலும் பிரம பதவியை அடைவான். நாராயணனாகிய விஷ்ணு பகவானால் செய்யப்பட்ட இச்சவ ஸ்தோத்திரத்தைச் சொல்லித் துதிப்பவனுக்கு வளர்பிறை சந்திரன் போல் மங்களம் வளரும்) திருமால் இந்த சிவ ஸ்தோத்திரத்தைச் செய்த பிறகு சிவபெருமான் எங்களைப் பார்த்துச் சொன்னார். உன்னத தேவர்களே! நீங்கள் எமக்குச் செய்த இந்த தோத்திரத்தால், யாம் மனம் மகிழ்ந்தோம், பயத்தைவிட்டு; சிவமூர்த்தியாகிய என்னைப் பிரார்த்தியுங்கள் உங்களை நாம் விரும்பியபடியே மாபெரும் ஆற்றல் வாயந்தவர்களாக உண்டாகியிருக்கிறோம் அதாவது நாமே உங்கள் மூலவராக மாறியுள்ளோம் எமது விருப்பத்தைப் போலவே எமது உருவம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

உலகங்களுக்குப் பதிலாக ஸ்வரூபியான பிரம்மன் எமது வலது பக்கத்திலும் விஷ்ணு எமது இடது பக்கத்திலும் விசுவாத்மனான உருத்திரன் என் இதயத்திலும், இப்படி மூன்று அவதாரமாக இருக்கிறீர்கள், உங்கள் மீது எமக்கு அதிக அன்பு இருப்பதால் நீங்கள் எதைச் சிந்தித்தாலும் அதைக் கொடுப்போம் என்று கூறி கருணை நிறைந்த கடாட்சகரான சிவபெருமான் எங்களிருவரையும் அவருடைய திருக்கரத்தில் தொட்டு ஸ்பரிசித்தார் இதனால் எங்கள் உள்ளங்களில் பொங்கிய ஆனந்தத்தை எவ்வாறு விவரிப்பதென்றே  இப்போதுங்கூடத் தெரியவில்லை மகா விஷ்ணுவோ சிவபெருமானுடன் ஐக்கியமாகும் ஆகையால் உந்தப்பட்டு ஆண்டவரே! எங்களுடைய பக்தி உம்மிடம் நிலைத்திருக்க அருள் புரிவதோடு , எங்களுக்குள் எழுந்த வாதத்தை அறிவீரானபடியால் அதையும் நிறைவு படுத்த வேண்டும் என்று கைகுவித்து நின்றார். சிவபெருமான் அவருடைய வேண்டுதலுக்கிறங்கி நெடுமாலே நீரும் பிரம்மனும் எம்மிடம் எப்பொழுதும் நீங்காத பக்தித் தியானத்தில் மூழ்கியிருப்பீர்களாக நீங்கள் பார்த்த சிவலிங்க மூர்த்தியைப் பூஜை செய்ய வேண்டும். நீங்கள் விதிமுறைப்படி செய்யும் பூஜையால் எம்மை நமஸ்கரித்து வரும்போது சுகத்தையடைவீர்கள் என்று திருவாய் மலர்ந்து பூஜை முறைகளை உபதேசம் செய்து எங்கள் இருவருக்கும் விருப்பமான பல வரங்களையும் தந்தருளினார். பிறகு அவர் என்னைப் பார்த்து பிரமனே! நீ நம்முடைய ஆக்ஞையால் சிருஷ்டிகாரனாக இருந்து படைப்புத் தொழிலை செய்து வா என்று நாராயணனைப் பார்த்து, ஓ விஷ்ணுவே! நீ அசையும் பொருள் அசையாப் பொருட்களையும் அண்டத்திலுள்ள சகலஜீ வராசிகளையும் காத்துரட்சிப்பாயாக நிஷ்களமாகிய நாம் சிருஷ்டி, ஸ்திதி சங்காரமென்னும் முத்தொழிலையும் நடத்த வேண்டி பிரம்மன், விஷ்ணு. ருத்திரனென்னும் மூன்றாகப் பிரித்தோம் ஆதலின் அந்த உருத்திர மூர்த்தி எம்முடைய அம்சத்தைக் காட்டிலும் குறைவுப்பட்டதொன்றும் இல்லையாதலால் நீங்கள் செய்யும் தோத்திர பூஜா கிரியைகள் யாவும் எனக்கும் உருத்திரனுக்கும் ஒன்றேயாகும். ஏனெனில் உருத்திர ரூபமும் சிவரூபமும் ஒன்றேயாகும். ஏனெனில் தங்கத்திற்கு வேறொரு தங்கம் என்கிற பெயர் எப்படிப் பொருந்தாதோ ஒரு மண் கட்டியைப் பாத்திரமாகச் செய்தால் மண்கட்டி வேறு பாத்திரம் வேறு என்கிற பொருட்பேதம் எப்படி வரவே மாட்டாதோ, அது போல் உணர்ந்து கொண்டு நீங்கள் உருத்திரனையும் எம்மையும் வேறு படுத்தி எண்ணக்கூடாது. மேலும் நமது ஸ்வரூபம் எல்லோராலும் பார்க்கத்தக்கது விஷ்ணுவே, பிரம்மனே நீயும் உருத்திரனும் என்னுடைய வடிவமேதான் சத்தியமாயும் ஞான ஸ்வரூபியாயும் நாசமற்றதாயும் அநாதியாயுமிருக்கிற எம்முடைய சிவரூபமே இதற்கெல்லாம் மூலமானதும் முதலானதுமாகும். நீங்கள் சிவ ரூபத்திலிருந்து உற்பத்தியானவர்கள் உருத்திரனாக உருத்திர மூர்த்தி உண்டாவதற்கு நமது ஆக்ஞையே காரணம். நாமே உருத்திரனாக அவதரிக்கப் போகிறோம் பிரம்மனே! விஷ்ணுவே இச்சிவ ரூபத்திலிருந்து சிவாம்சமாக இலக்குமியும் சரஸ்வதியும் அவதரிப்பார்கள். இச் சிவரூபமே காரிய நிமித்தமாகச் சிறந்த வேறு ரூபத்தையடைந்து காளியென்னும் பெயரால் அவதரிக்கப் போகிறாள். ஆகையால் விஷ்ணுவே நீ லக்ஷ்மியைத் துணைவியாகக் கொண்டு காத்தல் தொழிலை செய்து வா! பிரம்மாவே! நீ சரஸ்வதியைத் துணைவியாக கொண்டு எப்பொழுதும் சிருஷ்டித் தொழிலை செய்து வா! உருத்திரன் மகாகாளியை இணைத்துக் கொண்டும் சங்கார(அழித்தல்) தொழிலைச் செய்வான் மிகுந்த அறிவுடன் கூடியிருக்கிற நீங்கள் உலகங்களுக்கு இஷ்டங்களை உண்டு பண்ணுகிறவர்களாய் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர். சூத்திரர் என்னும் நான்கு வருணங்களாகவும், பிரமசரியம் கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், ஸந்நியாசமென்னும் நான்கு ஆசிரமங்களாகவும் கூடியிருக்கவும் இன்னும் பல காரியங்களுடன் கூடியிருக்கவுஞ் செய்து சுகத்தை அடையுங்கள். நீங்கள் இருவரும் வெள்ளி, இரத்தினம் தங்கம் மண் இவைகளில் ஏதாவதொன்றில் விளங்கும் லிங்கரூபத்தை உலகங்களுக்குச் சுகத்தை உண்டு செய்யவும் உம்மைப்போல உலகத்தோர் பூஜிக்கவும் எக்காலத்திலும் இடைவிடாத அன்புடன் பூஜை செய்யுங்கள். இச்சிவ பூஜைக்கு எவன் அந்நியாமாயிருக்கிறானோ அவனை நாம் அடைய மாட்டோம் என்று கூறி மறைந்தோர். அது முதற் கொண்டு நாராயணனும் பிரமதேவனும் சிவபூஜை செய்து கொண்டு சிவபக்தியுடையவராக இருந்தார்கள் லிங்கமே சரஸ்வதி, லிங்கமே மகாலக்ஷ்மி, லிங்கமே மகாகாளி, லிங்கமே பிரம்மாதி தேவர்கள் லிங்கமே சிவபெருமான் எவன் ஒருவன் சிவலிங்கத்தின் பிரபாவத்தை சிவ சன்னிதியில் வாசிக்கிறானோ அவனடையும் பலன்களை அளவெடுத்துச் சொல்ல முடியாது இவ்வாறு சூதமாமுனிவர் நைமிசாரணிய வாசிகளுக்குச் சொன்னார்.

5. சிருஷ்டி தொடங்குதல்

சூதமாமுனிவரே! சிவலிங்க மூர்த்தத்தின் வரலாற்றை நீங்கள் சொல்லக் கேட்டு மகிழ்ந்தோம் இனிமேல் சிவ பெருமான் ஜோதிவடிவமாக இருந்து அர்தர்த்தானமான பிறகு என்னவாயிற்று என்பதையும் சிவபெருமானது பெருமையையும் அவர் உலக சிருஷ்டி செய்த வகையையும் எங்களுக்கு விளக்கமாகக் கூறவேண்டும் என்று சவுனகாதி முனிவர்கள் கேட்டார்கள். உடனே சூதமாமுனிவர், தவஞானிகளே! மஹாப் பிரபுவான சிவ பெருமான் அந்தர்த்தானமான பிறகு, அன்னவடிவில் இருந்த பிரமனும் வராக வடிவில் இருந்த விஷ்ணுவும் செய்த செயல்களைச் சொல்லுகிறேன் என்றார். அப்போது நைமிசாரண்ய வாசிகள் அவரை நோக்கி, சூத புராணிகரே! எங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அதைத் தாங்கள் தான் தயவு செய்து நீக்க வேண்டும். அதாவது பிரம்மாவும், விஷ்ணுவும் முறையே அன்னவடிவத்தையும் வராக வடிவத்தையும் ஏன் எடுத்துக் கொண்டார்கள்? என்று கேட்டார்கள். அதற்குச் சூதமாமுனிவர் சொல்லலானார். அன்னப் பறவையோ ஆகாயத்தில் நெடுந்தூரம் பறந்து செல்லும் ஆற்றலுடையது மேலும் பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் அது தண்ணீரைப் பிரித்து பாலை மட்டும் பருகும் அறிவாற்றல் வாய்ந்தது ஆகையால் பிரும தேவர் ஞானம் அஞ்ஞானம் என்ற இரண்டையும் தனித்தனியாக உணர்ந்து கொள்வதற்காக அன்னப் பறவையின் வடிவை எடுத்துக் கொண்டார் ஆயினும் அவர் ஞானத்தால் விவேகத்தையடையாமல் இளைப்படைந்து திரும்பினார் வராக வடிவமோ வராககல்பம் என்ற கல்பகால நிர்ணயத்திற்காக உதித்தது மகாவிஷ்ணு எந்த தினத்தில் வராகவுருவத்தை ஏற்றாரோ, அந்தத்தினம் முதல் அந்தக் கல்பம் வராக கல்பம் என்று வழங்கலாயிற்று. அன்ன உருவத்தையும் வராகவுருவத்தையும் அடைந்த பிரம்ம விஷ்ணுவின் விஷயத்தில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் சிவ சித்தப்படியே அவர்கள் இருவரும் அவ்வடிவங்களை ஏற்றார்கள். நாசரஹிதமாகவும் நிஷ்களமாகவும் குணவிகிதமாயுமிருக்கும் சிவபெருமான் எதைச் செய்கிறாரோ, அதன்படியே அனைவரும் விளங்குவார்கள்.

முனிவர்களே! இனிமேலே நடந்தவற்றைக் கேளுங்கள் சிவபெருமான், விஷ்ணுவுக்கு அநேக வரங்களைக் கொடுத்து விட்டு பரந்தாமா! யார் உன்னை எந்த இடத்தில் பார்க்கிறார்களோ அந்த இடத்திலுள்ள அனைவருமே மோகத்திற்கு வயப்படுவார்களாக! அப்படி மோகிக்கப்படுவதாலேயே உன்னை மதிக்கவும் துதிக்கவும் செய்வார்கள். பிரமன் படைக்கும் உலகத்தில் எப்போது துக்கங்கள் உண்டாகிறதோ, அப்போது நீ அந்த துக்கத்தை நீக்கி உலகங்களைக் காப்பாய்! நாமோ ருத்திர மூர்த்தியாகி உலகங்கள் அனைத்தையும் அழிக்கும் சங்காரத் தொழிலைச் செய்வோம். இதில் சந்தேகம் வேண்டாம். விஷ்ணுவே! நீயே எம்மை தியானிக்கத் தக்கவன். நான் பற்பல வடிவங்களோடு விளங்குவதால் உனக்கும் எனக்கும் சிறிதளவும் பேதமுள்ளதாக நினைக்கக்கூடாது என்று கூறிவிட்டு பிரும தேவரையும் மகா விஷ்ணுவையும் தம் திருக்கரங்களில் பற்றிக் கொண்டு உங்கள் இருவரையும் எமக்குச் சமமாகவே உலகத்தார் தியானிப்பார்களாக நீங்கள் இருவரும் சகல மக்களுக்கும் பிராணரூபமாக இருப்பீர்களாக! பிரமனே, நாலாயிரம் சதுர் யுகங்களை ஒரு தினமாகக் கொண்ட நூறு ஆண்டுகளாகிய உன் ஆயுள்வரை, ஸத்வம், முதலிய முக்குணங்களுடன் கூடிய பிராணிகளைப் படைக்கும் தொழிலைச் செய்து வா! என்றார். அப்போது விஷ்ணுமூர்த்தி, மிக்க மகிழ்ச்சியுடன் சிவபெருமானை வணங்கி, கருணைக்கடலாகவும் உலகனைத்திற்கும் நாதனாகவும் இருக்கும் சிவபெருமானே, உம் கட்டளையை ஏற்றுச் செய்ய சித்தமாக இருக்கிறேன். ஆயினும் எனக்கு ஒரு விண்ணப்பம் உண்டு அதையுந் திருச்செவி சாற்றியருள வேண்டும் ஐயனே! எப்போதும் என்னால் தியானிக்கத் தக்கவராக இருக்கிறீர். உம்மைத் துதிப்பதிலிருந்து என் மனமானது க்ஷணகாலங்களும் பிரியாமல் இருக்கவேண்டும் என்னிடம் பக்தியுள்ளவனாக இருந்தும் எவன் ஒருவன் உம்மை நிந்திக்கிறானோ அவனுக்கு நீங்காத நரகஸ்தானத்தையே வாசஸ்தலமாகக் கொடுப்பேன். இது நிச்சயம், எவன் உம் பக்தனோ, அவன் என்னையும் பக்தி செய்கிறேன் என்று நான் மகிழ்ச்சியடைவேன் உம்மால் என் மகிமை வளர்ந்தோங்கியுள்ளது! என்று கூறினார். சிவபெருமானும் பெருமகிழ்ச்சியுடன் அங்கிருந்து மறைந்தார்.

பிறகு உலகங்களுக்கெல்லாம் பிதாமகனான பிரும தேவர் தாம் பெற்ற கட்டளைப்படிச் சிவத் தியானபரராய் விஷ்ணுவையும் பணிந்து அவரால் ஞானம் பெற்று படைப்புத் தொழிலைச் செய்ய இச்சைக் கொண்டார். உடனே மகாவிஷ்ணுவும் அங்கிருந்து மறைந்து போய் விட்டார். பூர்வத்தில் எந்த ஜலம் சிருஷ்டிக்கப் பட்டதோ அந்த ஜலத்தில் பிருமதேவர் அஞ்சலி ரூபமாகத் தமது வீர்யத்தை வெளியிட்டார். உடனே அந்த ஜலத்தில் இருபத்து நான்கு தத்துவங்களோடு கூடிய அண்டம் உண்டாயிற்று முனிவர்களே! அநேக வகையான ஆதாரங்களால் பிரகாசமாக இருந்த அந்த அண்டம் ஜடரூபமாக இருந்தது அதைக் கண்டதும் பிருமன் சந்தேகங் கொண்டு, விஷ்ணுவைத் தியானித்த வண்ணம் பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் செய்தார் அதைக் கண்டு மகிழ்ந்த மகா விஷ்ணு அவர் முன்னால் தோன்றி நான் முகப் பிரமனே! நீ விரும்பும் வரத்தைக்கேள் கொடுக்கிறேன். என்னால் கொடுக்கக் கூடியவற்றைத் தடுப்பதற்கு எதுவுமில்லை தடையுமில்லை! என்றார். அதற்கு பிரமன் அவரை நோக்கி ஸ்ரீஹரியே சிவபெருமான் உமக்கு என்னைக் கொடுத்து விட்டபடியால்; நீர் பிரத்தியட்சமானது யுக்தந்தான் எந்தப்படைப்பை செய் என்று சிவபெருமான் எனக்குக் கட்டளையிட்டாரோ அந்தப் படைப்பை என்னால் செய்ய முடியாமல் அந்தப் படைப்பும் ஜடமாய்ப் போய்விட்டது. ஆகையால் நீர் பிராணவாயு ரூபமாய் அதற்குப் பிராணனை உண்டு பண்ணவேண்டும் என்று கூறினார்; அதைக் கேட்டதும் விஷ்ணுமூர்த்தி சிவாக்ஞையின் படியே செய்ய விருப்பங் கொண்டவராய். ஆயிரந் தலையும் ஆயிரங்காலும் கொண்ட அநந்தரூபம் வகித்து அந்த அண்டத்தை வியாபித்தார். இவ்வாறு சூதமாமுனிவர் நைமிசாரண்ய வாசிகளுக்குக் கூறினார்.

6. பிரும சிருஷ்டி

தவமுனிவர்களே! சகல பாபங்களையும் நீக்கவல்ல சரித்திரத்தைச் சொல்லுகிறேன். கேளுங்கள் என்று சூதமாமுனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார். பிருமதேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாவிஷ்ணு அந்த அண்டத்தில் பிரவேசித்ததும், இருபத்து நான்கு தத்துவங்களையுடைய அந்த அண்டம் பாதாளலோகம் முதல் சத்தியலோகம் வரையிலும் பிராணனுடையதாயிற்று. அந்த அண்டத்தினுள் மகாவிஷ்ணு பிரகாசமாக இருந்தார். தவத்தையே தனமாகக் கொண்ட பிருமதேவரோ சிலகாலம் தவலோகத்திலும் மற்றக் காலங்களில் இதர உலகங்களிலும் இருந்தார். பிறகு பிருமா தமது மனத்தால் சில பிள்ளைகளை முதலில் உற்பத்தி செய்தார் அப்பிள்ளைகளோ ஊர்த்துவ ரேதஸாக (சுக்கிலத்தை இறக்காதவர்களாக) இருந்தார்கள். நான்முக பிரமன் மீண்டும் சிலரைப் படைத்தார் அவர்கள் மிகவும் விரக்தர்களாக இருந்தார்கள் அதைக் கண்டதும் பிரம்மா கோபமும் வருத்தமும் கொண்டு அழுதார் அப்பொழுது அஞ்சாதே! என்று சிவாம்சமான உருத்திரர் தோன்றினார். அவர் பிருமாவை நோக்கி அயனே உனக்கு துக்கம் உண்டானால் அதை நான் நாசஞ் செய்வேன். இதில் சந்தேகம் வேண்டாம் என்றார். எனவே பிரமன் உருத்திர மூர்த்தியே! நீர் சொல்வது விந்தையாக இருக்கிறது. ஆயினும் எமது சிருஷ்டித் தொழிலில் இடையூறு வராதபடி செய்ய வேண்டும்! என்றார் அதற்கு உருத்திரர் அப்படியே சிருஷ்டி இடையூறின்றி முடியக் கடவது என்று சொல்லிவிட்டு எந்தக் காலத்திலும் நிலைத்து திருக்கையிலாயத்தில் சிவசன்னதியை அடைந்தார்.

பிறகு பிரம்மன் ஸப்தரிஷிகளை சிருஷ்டித்தார். நாரதரை தமது மடியினின்று உற்பவிக்கச் செய்தார் தமது நிழலிலிருந்து கர்த்தமரிஷியையும் தமது பெரு விரலிலிருந்து தக்ஷப்பிரஜா பதியையும் உற்பத்தி செய்தார். இவ்வாறு மானஸ புத்திரர் பதின்மர்கள் உண்டானார்கள். பிருகு முனிவரிடத்தில் மரீசியும், அவரிடத்தில் காசிபரும் தோன்றினார்கள். காசிபமுனிவரின் சந்ததியினால் தான் இந்த உலகம் விருத்தியடைந்தது தக்ஷப்பிரஜாபதிக்கு அறுபது பெண்கள் பிறந்தார்கள். அவர்களில் பதின்மூன்று பெண்களைக் காசிப முனிவருக்கு தக்ஷன் திருமணம் செய்து கொடுத்தான் அப்பெண்கள் மூலமாகவே, தேவதைகம் அசுரர்கள் தநுஜான் முதலிய அநேகர் உண்டானார்கள் அவர்கள் உலகங்களிளெல்லாம் பரவினார்கள் தட்சப் பிரஜாபதியின் பெண்களிடம் விருக்ஷங்களும் பறவைகளும், சர்ப்பங்களும் மலைகளும் அநேகவிதமான கொடி வகைகளும் தோன்றின. அப்படைப்புகள் பாதாளலோகம் முதல் சத்திய லோகம் வரையிலும் வியாபித்தன. அவை வியாபிக்காத இடமே இல்லை. தட்சப்பிரஜாபதிக்கு சதி என்ற புதல்வி ஒருத்தி இருந்தாள். அவளை தட்சன் சிவபெருமானுக்குப் பத்தினியாகக் கொடுத்தான். அந்த சதி தேவிக்கும் பவானி என்னும் ஒரு பெயருண்டு உருத்திரமூர்த்தி காளியை மணந்தார். விஷ்ணு இலக்ஷ்மியை மணந்தார் பிருமா சரஸ்வதியை விவாகஞ் செய்துகொண்டார் இவ்விதமாக பிருமா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூம்முர்த்திகளும் தங்கள் சக்திகளுடன் சேர்ந்து முறையே ஆக்கல், காத்தல், அழித்தல், என்னும் முத்தொழில்களை செய்து வரலாயினர்.

முனிவர்களே! எந்த சதி என்பவள் சிவபெருமானை கணவனாக அடைந்தாளோ அவளே மஹாகாளி எனப்படுவாள். அந்த மகாகாளியே பின்புஒருகாலத்தில் பர்வதராஜனின் புத்திரியாகி பார்வதி என்ற பெயருடன் சிவபெருமானைப் பதியாக யடைந்தாள் அந்த பார்வதிதேவியே, காளிகா, சண்டிகா, யத்ரா, சாமுண்டா, விஜயா, ஜயா என்ற பல பெயர்களைப் பெற்றுத் திகழலானாள் மும்மூர்த்திகளும் குணபேதத்தாலேயே முத்தொழில்களைச் செய்கிறார்கள் என்று சூதமாமுனிவர் கூறியதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி, ஓ முனிபுங்கவரே மகாகுருவியாஸ பகவான் மூலமாக நீங்கள் யாவற்றையும் அறிந்தவர். நாங்கள் தங்களிடமிருந்து சிவ சரியைதான இன்சுவை அமுதை இன்னும் அருந்த விரும்புகிறோம் மகாகாளி முதலில் தட்சப்பிரஜாபதிக்குப் புதல்வியாகவும் பிறகு பர்வதராஜனின் புத்திரியாகவும் பிறந்த அந்தத் திவ்விய சரிதத்தையும் அந்தப் புண்ணியவதி சிவபெருமானைப் பதியாக அடைந்த கதையையும் மற்ற விஷயங்களையும் எங்களுக்குச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள். சூத புராணிகர் கூறலானார்!

7. சிவபூஜை விதிமுறைகள்

கேளுங்கள் அறிஞர்களே! இதுவரை சிருஷ்டி நிரூபணத்தைச் சொன்னேன் இனி எந்தச் சரித்திரத்தைக் கேட்டால் பிறவிக்கட்டு ஒழியுமோ அந்த மங்களகரமான சரிதத்தைச் சொல்லுகிறேன். ஒரு சமயம் தட்சப்பிரஜாபதிக்கும் சிவபெருமானுக்கும் துவேஷமுண்டாயிற்று. அதனால் தட்சப்பிரஜாபதி ஆத்திரமும் அகம்பாவமும் கொண்டு சிவபெருமானைத் தவிர மற்ற தேவர்களையும் மகரிஷிகளையும் வரவழைத்து ஒரு யாகம் செய்தான் தட்ச குமாரியும் சிவபெருமானின் பத்தினியுமான தாட்சாயணி அதையறிந்ததும் தன் தந்தை தன்னை யாகத்திற்கு அழைக்காமலிருந்தும் கூட, அவன் செய்யும் யாகத்தைப் பார்க்க விரும்பி, சிவபெருமானிடம் விடைபெற்று, தட்சனது மாளிகை அடைந்தாள். தட்சனோ அவளைத் தன் புதல்வியெனவும் கருதாமல் சிவநிந்தையோடு அவளை அவமதித்து ஏசினான். அதனால் தாட்சாயணி துக்கப்பட்டு அவமானம் தாங்காமல் தன் தேகத்தை நீத்தாள். இந்தச் செய்தியை சிவபெருமான் அறிந்ததும் அளவிலாத கோபங்கொண்டு வீரபத்திரையனுப்பி, அந்த தட்சனின் யாகத்திற்கு இடையூறு விளைவித்து அழிக்கும்படிச் செய்து தேவர் முதலானவர்களைத் தண்டித்தார் அதனால் தேவர் முதலானவர் மனம் வருந்தி குறைகூற சிவபெருமான் மீண்டும் அவர்களை உயிர் பெறச் செய்து திருவருள் புரிந்தார் இஷ்டபோகங்களைக் கொடுத்து அனைவருக்கும் நன்மைகள் இயற்றுபவளான தாட்சாயணியின் தேகத்தில் உண்டான ஜ்வாலையானது ஹிமோற்கிரீயில் விழுந்தது அந்த ஜ்வாலாமுகியே சகல இஷ்டங்களையும் கொடுக்கவல்லது. பிறகு அந்த ஜ்வாலாமுகி இமய மன்னனான பர்வதராஜனுக்கும் அவனுடைய மனைவியான மேனை என்பவளுக்கும் புத்திரியாக அவதரித்தாள். அந்த ஜ்வாலமுகியே பர்வதத்தில் அவதரித்த காரணத்தால் பார்வதி என்னும் பெயரைப் பெற்றாள் அவள் சிவபெருமானை விரும்பிவழிபட்டுநன்றாகப்பூஜை செய்து, அவரையே தன் நாயகனாக அடைந்து தன்னை அண்டிய அனைவருக்கும் விருப்பங்கள் அனைத்தையும் வழங்குகிறான் நீங்கள் எதைக் கேட்டீர்களோ, அதைச் சொல்லிவிட்டேன். இந்தச் சரிதத்தைக் கேட்பவர்களுடைய சகல பாபங்களும் நீங்கள்! என்றார்.

அப்போது நைமி சாரண்யவாசிகளான முனிவர்கள் அவரை நோக்கி சூதமா முனிவரே! சிவ சரிதத்தைக் கேட்க நாங்கள் மிகவும் ஆவலுள்ளவராக இருக்கிறோம் சிவபெருமானை எப்படிப் பூஜிக்க வேண்டும்? முதற்காலத்தில் அம்முறைப்படி பூஜித்தவர்கள் யார்? அப்பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் யாருக்குப் பிரசன்னராகி என்னென்ன பலன்களைக் கொடுத்தார்? பார்வதி தேவியார் செய்த தவம் அவரது திருமணம் திரிபுராசுரவதம் ஜ்யோதிர் லிங்கங்களின் உற்பத்தி ஜ்யோதிர் லிங்கங்கள் எத்தனைவிதம், அவற்றைத் தரிசிப்பதால் ஏற்படும் பலன்கள், நான்குவர்ணத்தார்கள் எப்படிச் சிவபூஜை செய்ய வேண்டும் என்பனவற்றையெல்லாம் எவ்வாறு உங்கள் குருவான வியாச மகரிஷியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டீர்களோ அவ்வாறே விளக்கமாக எங்களுக்கும் சொல்ல வேண்டும் என்றார்கள். சூதமாமுனிவர் முறையாக பதில் சொல்லத் துவங்கினார்? ஞானசீலர்களே! நீங்கள் கேட்ட விஷயங்களை முன்பு ஒரு முறை ஸநத்குமாரரிடம் வியாசமுனிவர் கேட்டிருக்கிறார். உபமன்யு முனிவரும் கேட்டிருக்கிறார். பிறகு வியாச முனிவர் ஸநத்குமாரரிடம் சிவபூஜா விதிமுறைகளைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டு உலக நன்மைக்காக எனக்குச் சொன்னார், முனிவர்களே! எந்த விஷயமானது ஸ்ரீகிருஷ்ணனால் மகாத்மாவான உபமன்யு முனிவரிடம் கேட்கப்பட்டதோ, அதைச் சொல்கிறேன். அதைச் சுருக்கமாக என்புத்திக்கு எட்டியவரையிலும் சொல்கிறேன். இதை விரிவாகச் சொல்ல வேண்டுமானால் பல ஆண்டுகள் ஆகும் ஆகவே சுருங்கச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

சுகம் பெற விரும்புகிறேன் அவனது சர்வ இஷ்டங்களும் கைகூடி வருவதற்காக அநாதியான சிவரூபத்தை மிகவும் பக்தியோடு பூஜிக்கவேண்டும் ஒருவன் சிவபெருமானை எத்தனைக் காலம் பூஜை செய்யவில்லையோ, அவனுக்கு அத்தனைக் காலமும் தரித்திரம், ரோகம், துக்கம், சத்ருபயம், முதலிய நான்கு வகையான பாபங்கள் சூழ்ந்து கொண்டு மிகவும் தொல்லைப்படுத்தும் சிவபகவானை பூஜித்தவுடனேயே எல்லாவிதமான துன்பங்களும், மறைந்து போகும் சுகத்திற்காகவும் சந்ததிக்காகவும் கிடைத்த தற்கரிய மனிதப் பிறவியை அடைந்தவன் மகாதேவனைப் பூஜிக்க வேண்டும், பூதேவர்கள் க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர் ஆகிய நான்கு வருணத்தார்களும் சாஸ்திரபடி முறையாகப் ப்ராஹ்மம் முகூர்த்தத்தில்! எழுந்து மேகவர்ணரே நான்கு திருக்கைகளையுடையவரே பக்தர்களின் பயத்தைப் போக்குபவரே, உன் உழகான உருவம் என் மனதில் எப்பொழுதும் வாபம் புரியவேண்டும் என்று விஷ்ணுவையாவது குருவையாவது ஸ்தோத்திரம் செய்து பிறகு தீர்த்தங்களை ஸ்மரணை செய்து எழுந்து தென்திசையில் ஓர் ஏகாந்தமான இடத்தில் மலஜலம் கழித்து விட்டு சுத்தமான மண்ணைப் பிராமணன் ஐந்து தடவையும், க்ஷத்திரியன் நான்கு தடவையும் வைசியன் மூன்று தடவையும், சூத்திரன் இரண்டு தடவையும் கிரமமாக எடுத்து கைகால்களை அலம்பிக் கொள்ள வேண்டும். இந்த மிருத்க்ரஹண சவுசாதி விஷயங்களில் நான்காவது வர்ணத்தாரைப் போலப் பெண்களும் செய்ய வேண்டும் பிறகு வேதியின் பன்னிரண்டு அங்குல அளவும் க்ஷத்திரியின் பதினொரு அங்குல அளவும் வைசியின் பத்து அங்குல அளவும் சூத்திரன் ஒன்பது அங்குல அளவும் கொண்ட பற்குச்சிகளால் ஸ்மிருதிகளில் சொல்லியபடி கைக்கொண்டு காலதோஷத்தை விசாரித்து பல் துலக்கி தீர்த்தங்களில் எந்தெந்தக் குலத்தினருக்கு எப்படியெப்படி ஸ்நானம் செய்ய வகுத்திருக்கிறதோ, அவ்வாறே தேசகாலங்களுக்கு மாறுபாடில்லாமல்  மந்திரங்களுடன் நீராடி சூரிய உதயத்திற்கு மூன்று நாழிகைக்கு முன்பே செய்ய வேண்டும்.

ஸ்நானம் செய்த இடத்தில் முதலில் ஆசமணியம் செய்து விட்டு தூய ஆடை உடுத்தி ஜன நட மாட்டமில்லாமல் இடத்தில் சந்தியாவந்தனம் முதலானவற்றை அந்தந்த ஜாதியாருக்கு விதித்துள்ளபடி செய்து, பிறகு பூஜையைத் துவக்க வேண்டும். பூஜைக்கிரம்ம-மனதை ஒருமுக, நிலைப்படுத்திக் கொண்டு பூஜா கிருஹத்தில் பிரவேசித்து, பூஜைக்குரிய பொருட்களைச் சேகரித்துக் கொண்டு முறையாக சிவபெருமானை பூஜைசெய்ய வேண்டும் முதலில் விநாயகரையும் பிறகு துவார பாலகர்களையும் பிறகு திக்பாலகர்களையும் பூஜித்துவிட்டுப் பிறகு பூஜா திரவியங்களின் அருகே, அஷ்டதளபீடமாவது செய்து கொண்டு அதில் உட்கார்ந்து சிவபகவானைப் பார்த்த வண்ணம் அடிக்கடி கைகளைச் சுத்தஞ் செய்து கொண்டு மூன்று முறை ஆசமனம் செய்து மும்முறை பிரணாயாமம் செய்ய வேண்டும். ஐந்து முகங்களும் பத்துப் பூஜங்களும் கொண்டவராயும், நிர்மலமான ஸ்படிகக் கல்லுக்கு ஒப்பான ஒளியையுடையவராயும் ஸர்வாபரண பூஷிதராயும், புலித்தோலைப் போர்த்தியவராகவும் இருக்கும். சங்கரரைத் தியானித்து அப்பெருமானின் ஸாரூப்யத்தை(இறைவனுருவை)அடைந்து மனிதன் தன் பாவத்தை நீக்கிக் கொள்ள வேண்டும். பரமேஸ்வரனைப் பூஜிக்கும் போது மந்திரத்தால் தேகசுத்தி செய்து கொண்டு கிரமமாக மூல மந்திரத்தை நியாஸம் செய்ய வேண்டும் எல்லாவிடத்திலும் ப்ரணவ மந்திரத்தால் ஆறு அங்க நியாசங்களையும் செய்ய வேண்டும். பிறகு சங்கல்பஞ் செய்து கொண்டு பூஜைக்கு ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் ஆசமனத்திற்காக ஏற்பாடுசெய்தபாத்திரத்தையும் நவ கும்பங்களையும் சாஸ்திரப்படி ஸ்தாபிக்க வேண்டும். அவற்றை தர்ப்பைகளால் முடியவைகளாய் ஸ்தாபித்து தீர்த்தத்தால் புரோக்ஷணம் செய்து அப்பாத்திரங்கள் அனைத்திலும் குளிர்நீரை சேர்க்க வேண்டும், புத்திமானானவன் சாஸ்திரத்தால் பார்த்து ப்ரணவ மந்திரத்தால் இனி குறிப்பிடும் பொருட்களை அந்தந்தப்பாத்திரங்களில் முறையே சேர்க்க வேண்டும். பாத்ய பாத்திரத்தில் விளாமிச்சை வேரும் சந்தனமும், ஆசமனிய பாத்திரத்தில் ஜாதி சுகந்தை, வெட்டிவேர் கர்ப்பூரம் ஆகியவற்றைப் பொடி செய்து சேர்க்க வேண்டும். மற்ற பாத்திரங்களில் சந்தனத்தையும் ஏலத்தையும் சேர்க்க வேண்டும். சிவபெருமான் பக்கத்தில் நந்தீசுவரரை பூஜை செய்ய வேண்டும். வாசனை பொருட்களாலும் நறுமண மலர்களாலும் தூப தீபங்களாலும் இன்னும் பல விதங்களாலும் சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும். அப்போது உபாசகன் மிகவும் மகிழ்ச்சியோடு லிங்கத்திற்குச் சுத்தி செய்து ப்ரணவம் முதல் நாமோந்தமாகிய சிவமந்திரங்களை ஜபித்து பத்மாசனம் செய்து கொள்ள வேண்டும் அதன் கிழக்குப்பக்கம் அணிமா மயம் தெற்கு லகிமா மயம், மேற்கு மகிமாமயம், வடக்கு பிராப்தி ஸ்வரூபம், அக்கினி பக்கதனம்-பராகாமிமயம், நிருதிபக்கம்-ஈசத்வமயம், வாயுதிக்குதளம் வசித்வஸ்வரூப, ஈசானியபக்கம் ஸர்வக்ஞத்தமயம் கர்ணிகையில் சந்திரனும், சந்திரனுக்கு கிழக்குப் பக்கத்தில் அக்கினித் தேவனும் திக்குகளின் இறுதியில் தர்மாதிகளையும் ஸ்தாபிக்க வேண்டும், நான்கு திக்குகளிலும் பிரகிருதி மஹத் அகங்காரம் தத்விகாரம் என்னும் நான்கினையும் கர்ணீகா ரூபமான சந்திரனின் அருகே ஸத்வம், ரஜஸ் தமஸ் என்னும் முக்குணங்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.

முனிவர்களே! அதன் பிறகு ஸத்யோஜாதம், பிரபத்யாமி என்று பரமேஸ்வரனை ஆவாஹனம் செய்து வாமதேவமந்திரத்தால் இரத்தின சிங்காதனத்தில் எழுந்தருளச் செய்து ருத்தர காயத்திரியால் ஸாந்நித்யம் செய்து அஹோர மந்திரத்தால் நிரோதம் செய்து ஈ ஸாநஸ்ஸர்வ வித்யாநாம முதலான மந்திரங்களால் சிவ மூர்த்தத்தைப் பூஜிக்க வேண்டும்.

சத்யோ ஜாத மந்திரம்

சத்யோ ஜாதம் பிரபத்யாமி
சத்யோஜாதவை நமோநம
பவே பவேனாதி பவே பவஸ்வமாம்
பவோத் பவாய நம

வாம வேதமந்திரம்

வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நமோ
ஸ்ரேஷ்டாய நமோ
ருத்ராய நமோ
காலாய நமோ: கலபி கரணாய நமோ
பலபி காரணாய நமோ
பலாய நமோ
பலப் பிரமதமனாய நமோ
மனோ மனானீய நம

ருத்ர காயத்திரி

தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

அஹோர மந்திரம்

அஹோர அகோ ரேப் யாத கோரேப்யோ
கோர கோர தரே ப்ய
ஸர்வேப்ய ஸர்வ ஸர்வேப்யோ நமஸ்தே-அஸ்து
ருத்ர ரூபேப்ய

நிரோதம்

ஈஸான சர்வ வித்யானா மீஸ்வர சர்வபூதானாம்
ப்ரம்மாதி பிர் பிர்மனாதி பதிர் பிரம்மா
சிவோமே அஸ்து சதா சிவோம்

சிவபெருமானுக்குப் பாத்தியம் (திருவடி கழுவு நீர்) அர்க்கியம் (மந்திர நீர் இறைத்தல்) ஆசமந்யம் (உட்கொள் நீர்) கொடுத்து வாசனைத் திரவியம் சந்தனம் முதலியவற்றோடு கூடிய தீர்த்தத்தால் மகா நியாச பூர்வக ஏகாதச ருத்ர மஹாபிஷேகம் செய்ய வேண்டும். பஞ்ச கவ்யத்திற்கு சொல்லியுள்ள முறைப்படி மந்திரித்து பிரணவ மந்திரத்தால் கவ்யஸ்நானம் செய்விக்கவேண்டும், தீர்த்தம், பால், தயிர், தேன், கரும்புரஸம் நெய் இவற்றாலேயும் அபிஷேகம் செய்ய வேண்டும். கஸ்தூரி கந்தம். குங்குமப்பூ பச்சைக்கற்பூரம் முதலிய புண்ணியப் பொருட்களாலும் மந்திரத்தோடு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு தூய்மையான மந்திரங்களால் அபிமந்திரித்து, ஜலகும்பங்களில் வெள்ளிய பரிசுத்தமான துணிகளில் வடிகட்டிய நன்னீரை அபிஷேகிக்க வேண்டும் இந்தப் பூஜையை சிவபெருமானுக்குத் தூரத்திலிருந்து கையினால் எட்டிப் பூஜிக்காமல் மிகவும் அருகிலிருந்து செய்ய வேண்டும் தர்ப்பை, நாயுருவி, ஜாதி, சண்பகம், பாடலம், வெள்ளலரி, மல்லிகை, கமலம், உற்பலம் முதலான பற்பல அபூர்வமலர்களை ஜலத்தோடு சேர்த்தும்; விதவிதமான பாத்திரங்களாலும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பயன்கள் அனைத்தையும் வழங்கக் கூடிய இந்தச் சிவபூஜையை மந்திரப் பூர்வமாகச் செய்தல் வேண்டும். எம்மந்திரங்களால் ஒரு தடவையாவது சிவலிங்கத்தை அர்ச்சிக்க வேண்டுமோ அம்மந்திரங்களை சர்வ பல சித்தியை முன்னிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

8. சிவ பூஜா மந்திரங்கள்

பவமாநாதி மந்திரங்களாலும் வாங்மீயக மந்திரத்தாலும் சூத்திர மந்திரத்தாலும் சுபமான ஸ்ரீசூக்தத்தாலும் ரஜரீ சூக்தத்தாலும் நிலருத்ரத்தாலும் மங்களகரமான சமகத்தாலும் பிரணவத்தாலும் அதர்வண வேத சிரஸ் என்னும் மந்திரத்தாலும் தச்சாந்தி மந்திரத்தாலும் பாருண்டத்தாலும் ஆரூணத்தாலும் உயர்வான ஸாமத்தாலும் தேவவ்ருதம் என்னும் ஸாமத்தாலும் ராந்தர மந்திரத்தாலும், புஷ்ப மந்திரத்தாலும் புருஷசூக்தத்தாலும் மிருத்யுஞ்ஐய மந்திரத்தாலும் சிவபஞ்சாக்ஷரத்தாலும் ஆயிரம்-அல்லது நூற்றியெட்டு ரந்த்ரங்களையுடைய பூர்ணகும்பங்களால் வேத மார்க்கங்களினாலாவது, சிவநாமங்களாலாவது  அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சிவபெருமானுக்கு சந்தனம், புஷ்பம் முதலியவற்றைச் சாற்றி; ப்ரணல மந்திரத்தால் முகவாஸனைகள் கொடுக்க வேண்டும். பிறகு ஸ்படிக மாயமாயும் நிஷ்களமாயும் அக்ஷரமயமாயும் அனைத்துலகங்களுக்கும் காரணபூதமாயும் சகலலோக ஸ்வரூபமாயும் உத்தமமாயும் இந்திரன், பிரமன், விஷ்ணு, ருத்திரன் முதலான தேவர்களுக்கும் புலப்படாததாயும் வேதமறிந்தவர்களாலே வேதாந்தத்தில் கோசரிக்கவில்லை என்று சொல்லப்படுவதாயும், சிருஷ்டி ஸ்திதிநாசம் என்னும் மூன்றும் அற்றதாயும் சகலவிதமான நோய்களுக்கெல்லாம் மருந்தாயும் சிவதத்துவம் என்று பிரசித்திமாயும் சிவலிங்கத்தில் வைக்கப்பட்டும் இருக்கிற சிவபகவானை, லிங்கத்தின் சிரஸில் ப்ரணவத்தால் தூப தீபம் தாம்பூலம் முதலானவற்றை நீராஞ்சனம் சுற்றுவது போலச் சுற்றி நமஸ்காரம் செய்து துதித்து பலவித மந்திரத்தால் பூஜை செய்ய வேண்டும். ஸ்தோத்திரம் ஜபம் நமஸ்காரம் பிரதக்ஷிணம் ஆகியவற்றையும் விதிப்படிச் செய்ய வேண்டும் அர்க்கியம் கொடுத்து திருவடிகளில் மலர்களைச் சமர்ப்பித்துத் தேவர்களுக்கு அதிபரான சிவபிரானை மனத்தால் வணங்கி, பூஜை புரிய வேண்டும். கையில் மலர்களை எடுத்துக் கொண்டு எழுந்து இருகரங்களையும் கூப்பிநின்று நான் குறிப்பிடும் மந்திரத்தால் ஈஸானனான சிவபெருமானைப் பிரார்த்திக்க வேண்டும்.

அஞ்ஞானாத்ய திவாக்ஞானாது ஜபபூஜாதிகம்யா
கிருதம் ததஸ்து ஸபலம் க்ருபயா தவ சங்கர

சுவாமி! சங்கரா! என் அறியாமையாலோ அல்லது அறிவாலோ ஜபம் பூஜை முதலியவற்றைச் செய்திருந்தாலும் அவை உம் திருவருளால் சித்திக்க வேண்டும் என்று சொல்லி அம்மலர்களைச் சிவபெருமானது திருமுடியில் சேர்க்க வேண்டும். பிறகு மங்களாஸ்பதமான அநேக ஆசீர்வாதங்கள் செய்து பரமசிவன் மீது மார்ஜனம் (நீரால் புரோக்ஷணம்) செய்து தன் அபராதங்களைப் பொறுத்தருள வேண்டும் என்று துதித்துக் கும்பிட வேண்டும் பிறகு எல்லாவிதமான பாபத்தோடு கூடியவனாக நினைத்து மீண்டும் துதிக்க வேண்டும்.

சிவே பக்தி சிவே பக்தி சிவே பக்திர் பவே பவே
அந்யத சரணம் நாஸ்தி த்வமேத சரணம் மம

பிறவிகள் தோறும் எனக்குச் சிவபெருமானிடம் பக்தி இருந்து வரவேண்டும் சிவபக்தி இருக்க வேண்டும். சிவபெருமானிடம் பக்தி இருக்க வேண்டும். எனக்கு வேறு ரக்ஷணம் இல்லை நீயே ரக்ஷணம் என்று இவ்வாறு சர்வ ஸக்தியையும் கொடுக்கும் மகேஸ்வரனைப் பிரார்த்தனை செய்து பக்தியுடன் வாத்ய நாதங்களாலும் வழிபட வேண்டும். பிறகு பரிவாரணங்களோடு சேர்ந்து சங்கர பகவானை வணங்கித் தொழுதுவிட்டு மகிழ்ச்சியுடையவனாய் சுகமாகத் தன் வேலைகளைத் துவக்கலாம். இவ்வாறு தினந்தோறும் எவன் சிவபக்தியுடையவனாகச் சிவபூஜை செய்கிறானோ அவனுக்கு அடிக்கடி எல்லாவித நற்பயன்களும் உண்டாகும். மனதில் நினைத்தது ஆறு மாதங்களில் நிறைவேறும் நோய், கவலை, ரோகம், பயம், சூன்யம். கோணல் வியாபாரம், விஷம்  இவை போன்ற எத்தகைய துன்பம் வந்தாலும் நன்மை விளைவிப்பவரும் கருணாமூர்த்தியுமான சிவபெருமான், அத்துன்பங்களை அகற்றி விடுவார். மேலும் சிவபெருமானை வழிபாடு செய்வதால் மனிதனுக்கு சுபங்கள் விளையும் அவனது குணங்கள் சுக்கில பக்ஷத்துச் சந்திரனைப் போல் விருத்தியடையும் வியாச பகவானிடம் இவ்வாறு நான் கேட்ட அரிய பெரிய விஷயங்களை உங்களுக்காகச் சொன்னேன். இனி எல்லா பாவங்களையும் நீக்கக் கூடிய எந்த சரிதத்தை நீங்கள் கேட்கிறீர்களோ அந்த சரிதத்தை சாஸ்திர பூர்வமாகச் சொல்லுகிறேன் என்று சூதமாமுனிவர் கூறினார்.

9. தாராசுரன் பெற்ற வரமும் தேவர்கள் துயரமும்

நைமிசாரண்ய வாசிகள், சூதமாமுனிவரை நோக்கி; மாபெரும் பாக்கியசாலியான வியாசரது மாணவரே! சிவனாரின் திரிபுர வெற்றியைப் பற்றிக் கூற வேண்டும். அந்தத் திரிபுரத்தின் வடிவம் என்ன? அந்தத் திரிபுரத்திலிருந்த படைபலம் எவ்வளவு? சிவபெருமானது சேனை எவ்வளவு? இவற்றை நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும். என்றார்கள். சூதமுனிவர் சொல்லலானார்நற்பேறுள்ள சிவநேசச் செல்வர்களே! எந்தக் கதையைக் கேட்டால், உலக மக்களின் துயரம் நீங்குமோ, அத்தகைய புண்ணிய சரிதத்தையே நீங்கள் கேட்டீர்கள். மாயாஜாலம் செய்பவரையும் மயங்க வைக்கும் மாபெரும் மாயனான தாரன் என்ற அசுரனுக்கு தாரகன் என்ற ஒரு புதல்வன் இருந்தான். அவன் தன் ஆசிரியனின் உத்திரவைப் பெற்று மது என்ற மிகவும் அழகான வனத்துக்குச் சென்று தேவர்கள் அனைவரையும் வெற்றி பெறுவதற்கு அருந்தவஞ் செய்ய எண்ணினான் இருகைகளையும் ஒரு காலையும் தூக்கிக் கொண்டும் சூரியனைப் பார்த்துக் கொண்டும் நூறு ஆண்டுகள் கடுந்தவஞ் செய்தான் பிறகு மேலும் நூறு ஆண்டுகள் பெருவிரலை ஊன்றிக் கொண்டும், நூறு ஆண்டுகள் வரை வெறும் நீரை மட்டும் உட்கொண்டும், நூறு ஆண்டுகள் வெறும் காற்றை மட்டும் உட்கொண்டும், நூறு ஆண்டுகள் ஜலத்தில் இருந்து கொண்டும், நூறு ஆண்டுகள் வெய்யிலிலும், நூறு ஆண்டுகள் பஞ்சாக்கினியின் மத்தியிலும் நூறு ஆண்டுகள் மரங்களின் கிளைகளைப் பிடித்துக் கொண்டும், நூறு ஆண்டுகள் அதோமுகமாகவும் இருந்து கேட்பவர்கள் மனமும் அஞ்சத்தக்க வகையில் அகோர தபஸ் செய்து வந்தான் அதனால் அவனது சிரத்திலிருந்து மகத்தான தேஜஸ் கிளம்பியது அந்த தவாக்கினி தேவர்களின் உலகங்களை சுட்டெரிக்கலாயிற்று. தேவேந்திரன் கூட எங்கே இந்த அசுரன் தன் பதவியைக் கைப்பற்றி விடுவானோ என்று பயப்பட்டான். வெப்பத்தால் மிகவும் துயரத்தையடைந்த தேவர்களோ; இதென்ன விந்தை! சிவபெருமான் அகாலத்தில் பிரம்மாண்ட சம்ஹாரஞ் செய்யப் போகிறாரோ? என்று சந்தேகப்பட்டார்கள் பிறகு, யாரோ ஓர் அசுரன் பிரமதேவனைக் குறித்து அத்தகைய பயங்கரமான தவத்தைச் செய்கிறான் என்று தெரிந்தது.

உடனே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த அரசனுக்குப் பிரமதேவர். கொடுக்கக்கூடாத அரும்பெரும் வரங்களைக் கொடுக்கா விட்டாலும் கூட அவனால் எல்லாவுலகங்களுக்கும் அனர்த்தம் விளையும், அப்படியே பிருமா வரங் கொடுத்தாலும் அவன் அசுரனாகையால் அவனால் உலகங்களுக்கு நாசமும் ஏற்படும் ஆகையால் நான்முகப் பிருமாவிடமே இதைப் பற்றி கேட்போம் என்று ஆலோசித்துக் கொண்டு விரைந்து சென்று அவரைக் கும்பிட்டுவிட்டு தாரகாசுரன் செய்யும் அகோர தவத்தைப்பற்றி அறிவித்தார்கள் அவர்கள் மூலம் விஷயமனைத்தையும் பிருமதேவர் தெரிந்து கொண்டு. அந்த தாரகாசுரன் கடுந்தவஞ் செய்யும் இடத்திற்கு அன்ன வாகனத்தில் சென்று, அவனுக்கு காட்சியளித்து, உன் கடினமான தவத்தைக் கண்டு நாம் மகிழ்ந்தோம். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் தருகிறோம்! என்றார்.

உடனே, தாரகாசுரன் சிருஷ்டி கர்த்தாவை வணங்கித் துதித்து சதுர்முகரே! தேவர்களுக்கு இறைவரான பிரமதேவரே நீர் எனக்கு வரங்கொடுக்கத் தகுந்தவர் என்றால் இரண்டு வரங்கள் வேண்டும் அவையாவன உம்மால் படைக்கப்பட்ட இந்த அகிலத்தில் உடல் வலிமையால் எனக்கு இணையான புருஷன் வேறு எவனும் இல்லை என்று சொல்லும்படியான மாபெரும் வலிமை எனக்கு வாய்க்க வேண்டும் சிவபெருமானின் வீரியத்தினால் உண்டாகும் புத்திரன் எப்போது சேனாதிபதியாக வந்து என் மீது அம்பு எய்வாரோ அப்பொழுதுதான் எனக்கு மரணம் என்பதே உண்டாக வேண்டும் என்று வரம் கேட்டான் பிருமா உடனே அவன் விரும்பிய வரங்களைக் கொடுத்துவிட்டு தமது சத்ய லோகத்திற்குத் திரும்பிச் சென்று தாரகாசுரனின் தபோ பலத்தால் உண்டான தாபத்தைத் தணிவித்துக் கொண்டார் பிறகு, தாரகாசுரன் தவச்செயல்  நீங்கிப் பெரும் வரங்கள் பெற்ற பெரு மகிழ்ச்சியுடன் சோணித புரியை அடைந்தான். அப்பொழுது எங்குமுள்ள அசுரர்கள் அனைவரும் ஒன்று கூடி தாரகாசுரனே! மூவுலகிலுமுள்ள அசுரர்களான எங்களுக்கெல்லாம் நீயே தலைமையரசனாக இருக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்கள்.

அதன் பின்னர் அசுரர்களால் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு மணிமகுடம் சூடி தாரகாசுரன் மன்னனானான், பூமியில் ஒருவரும் செய்யாத ஆக்ஞைகளையெல்லாம் நடத்தச்செய்தான் பிராமணர்கள், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், விஜாதியானவர்கள் தானவர்கள். யக்ஷர்கள் கிம்புருஷர் ஆகியபலரும் அந்த அசுரனால் மிகவும் துன்புறத்தப்பட்டார்கள் அவர்களிடமுள்ள பொருள்களை யெல்லாம் தாரகாசுரன் பறித்துக் கொண்டான் இந்திரன் முதலான தேவர்களெல்லாம் அரும்பெரும் செல்வங்களை அவனுக்குக் கப்பமாகச் செலுத்தினார்கள் தேவேந்திரன் உச்சைஸ்ரவம் என்ற பட்ட குதிரையும் யமதர்மனின் ரத்தினமயமான தண்டமும் குபேரனின்கதையும் நவநிதிகளும், வருணதேவனின் உத்தமமான குதிரைகளும் மகரிஷிகளின் காமதேனு என்ற தெய்வீகப்பசுவும் அவ்வசுரனிடம் போய்ச் சேர்ந்தன; எந்தெந்த இடத்தில் உன்னதமான பொருட்களை அவன் பார்த்தாலும் அப்போதே அவற்றை அவன் கவர்ந்து சென்று விடுவான். சமுத்திரராஜன் அவனுக்கு தன் இரத்தினங்களைக் கொடுத்தான் சூரியன் அந்த அசுரனுக்கு எத்தனைக்காலம் சுகமாக இருக்குமோ, அத்தனைக் காலம் ஒளி வீசிக் காய்ந்தான் சந்திரன் எப்பொழுதும் அவன் அருகிலேயே இருந்து குளுமையூட்டினான் சுகந்தகாற்றை மெல்லென வீசிக்கொண்டிருந்தான். தேவர்களுக்கு செலுத்தும் ஹவ்யமும் பிதுர்களுக்குச் செய்யும் கவ்யமும் பலிஷ்டனான அவ்வசுரனையே சார்ந்தன மூவுலகங்களில் இருந்த அனைவருமே பயந்து நடுங்கி அந்தத் தாரகாசுரனது கட்டளையையே முக்கியமாகக் கருதிக் கொண்டிருந்தார்கள். இவ்விதமாக தேவர்கள் யக்ஷர்கள் முதலியவர்கள் எல்லாம் அவ்வசுரனின் உத்தரவின் படி நடக்கும்போது நோய் நொடிகளுக்கும் சாக்காட்டிற்கும் ஆளாகும் சாதாரண மனிதர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் வானுலகம், பூவுலகம், பாதாளம் என்னும் மூன்று உலகங்களிலும் எங்கெங்கு சிறப்பான நதிகள், நந்தவனங்கள் முதலியவை இருந்தனவோ, அவையெல்லாம் தாரகாசுரனின் தலைநகரிலே ஸ்தாபிக்கப்பட்டன இதுபோலப் பல்லாண்டு காலம் அந்த அசுரன் கொடுங்கோல் செலுத்தி வந்தான் அப்போது தேவர்கள் அனைவரும் ஒன்று கூடிப் பத்மாஸனரான பிருமதேவனிடம் சென்று அவரிடம் சரணடைந்தார்கள்.

10 சிவபெருமான் யோகமும் மன்மதன் மூட்டிய மோகமும்

தேவர்கள் அனைவரும் பிரமனைக் கும்பிட்டுத் தலைகுணிந்து நின்றார்கள். அப்போது நான்முகப் பிரமன் அத்தேவர்களைப் பார்த்து, அமரர்களே! நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்? உங்களுக்கு என்ன துன்பம் நேரிட்டது? என்று கேட்டார். தேவர்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி தாரகாசுரனால் நாங்கள் அனுபவிக்கும் துன்பம் தங்களுக்குத் தெரியாததா? அந்தத் துன்பத்தைத் தயவு செய்து தீர்க்க வேண்டும். என்றார்கள். பிருமதேவன் அவர்களை நோக்கி வானவர்களே நச்சுமரமாக இருந்தாலும் அதை வளர்த்துக் காப்பாற்றியவனே வெட்டுவது உசிதமல்ல என்பதைப் போலவே, என்னால் வரம் பெற்று விருத்தியடையப் பெற்றவன் என்னாலேயே வதம் செய்யப்படுவது சரியல்ல, ஆகையால் உங்களுக்கு நான் ஓர் உபாயம் சொல்லுகிறேன். சிவபெருமானின் வீரியத்திற்கு உற்பத்தியாகும் குமாரன் தான் அவ்வசுரனைக் கொல்ல முடியும்! அப்படி சிவவீர்யத்தில் புத்திர உற்பத்தியாவது துர்லபமாம். இது விஷயமாக ஒரு யோசனை சொல்லுகிறேன். அதன்படி நீங்கள் செய்ய வேண்டும்.

இமயமலையின் அழகான கொடுமுடியின் மீது சிவபெருமான் யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். நாரத முனிவராலும் பர்வத ராஜனாலும் மகாதேவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று பார்வதிதேவி நியமிக்கப்பட்டிருப்பதால் அப்பார்வதிதேவி தன் தோழியர் இருவருடன் சிவபெருமான் யோகஞ் செய்யுமிடத்தில் பணிவிடை புரிந்து வருகிறாள். அவளோடு சிவபெருமான் எப்போது இணங்கி கூடுகிறாரோ அப்போது வீர்யம் உண்டாகும். பிறகு உங்கள் காரியமும் கைகூடும். இதில் சந்தேகமில்லை பரமேஸ்வரனின் வீரியத்தைக் கவர்வதற்கு பார்வதியே தகுதியானவள் அவளையன்றி வேறு அன்னியப் பெண்களால் அது இயலாது எனவே அதற்கேற்ற உபாயங்களை நீங்கள் கையாள முயலுங்கள் அப்போது தான் உங்களுக்குக் காரியசித்தி உண்டாகும்! என்றார். பிரம்மாவின் யோசனையைக் கேட்டதும் தேவர்கள் ஒருவரோடொருவர் ஆலோசித்துக் கொண்டு தேவேந்திரனிடம் சென்று நடந்தவற்றை அறிவித்தார்கள். அமராபதியே! என்ன செய்தால் சிவபெருமானுக்குப் பார்வதியிடம் இச்சை ஏற்படுமோ அதைச் செய்து பிரமனது யோசனையை நிறைவேற்றுவது உமது பொறுப்பு என்று சொல்லி விட்டு தேவர்கள் தம் இருக்கைகளை அடைந்தார்கள். தேவர்கள் சென்றதும் தேவேந்திரன் மன்மதனை நினைத்தான்.

உடனே மன்மதன், தன் தேவியான இரதியோடு இந்திரன் முன்னால் வந்து நின்று வணங்கி, தேவராஜரே, நீங்கள் ஏன் என்னை நினைத்தீர்கள்? அதைச் சொல்லுங்கள், அந்த வேலையைச் செய்வதற்கே நான் வந்திருக்கிறேன்! என்று சொல்லி விட்டு மவுனமாக இருந்தான். இந்திரன் மன்மதனை நோக்கி மீனக்கொடியுடையவனே! இப்போது எந்தக்காரியம் வந்துள்ளதோ அது உன்னால் செய்யக் கூடியதாகும் எவ்வெவை என் காரியங்களோ அவையெல்லாம் உன் காரியங்களே தவிரவேறல்ல, எனக்கு நண்பர்கள் பலருண்டு ஆயினும் காமதேவனான உனக்கு இணையான நண்பன் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை போர்க்களத்தில் எனக்கு பயன்படுவதற்காக, பிரமதேவனால் என் வஜ்ராயுதம் சிருஷ்டி செய்யப்பட்டது மாறனான உன்னை மற்றொரு அஸ்திரமாக பிருமனே நியமித்தார், இந்த இரண்டு அஸ்திரங்களில் வஜ்ராயுதம் ஹிம்சிக்கும் இயல்புடையது ஆனால் காமதேவனான நீயோ இன்பம் விளைவிக்கும் இயல்யையுடையவன், மன்மதனை! இவ்விரண்டு அஸ்திரங்களில் நீயே சிறந்தவன், நீயே ஆற்றல் மிகுந்தவன் ஏனென்றால் என் வஜ்ராயுதம் பயனின்றிப் போனாலும் போகும், ஆனால் பஞ்சபாண மன்மதனான நீயோ ஒரு சமயத்திலும் பயனளிக்காமலிருக்க மாட்டாய்! இப்போது நேர்ந்துள்ள நோக்கத்தைச் சாதிக்க நீயே தகுந்தவன் உன்னைத் தவிர மற்றவர்களால் அதைச் செய்யவேமுடியாது உலகத்தில் வள்ளலுக்கு வறுமை வந்துள்ள போதும் சூராதி சூரனுக்குப்போர்க்களத்திலும், நற்பனுக்கு அபாய நெருக்கடியிலும், புருஷனுக்கு அசக்தி காலத்திலும் பெண்களுக்கும் நற்குலத்தில் பிறந்தவர்களுக்கும் ஆபத்துக் காலத்திலும் தொல்லைகள் மூளும்போது மனிதர்களால் பரீட்சை உண்டாகிறது. ஓ! நட்பிற்சிறந்த ரதிகாந்தனே! இப்போது உன் சம்பந்தமான பரீட்சை ஏற்பட்டுள்ளது இந்தக் காரியம் எனக்கு மட்டும் சுகமளிப்பதல்ல தேவர்கள் அனைவருக்குமே சுகத்தைக் கொடுக்கத்தக்கது; இந்த விஷயமாக நானே யாசிப்பதால் இந்தச் சுபமான காரியத்தை நீயே செய்ய வேண்டும்.

இவ்வாறு தேவேந்திரன் சொன்னதைக் கேட்ட மன்மதன் புன்னகையோடு இந்திரனை நோக்கி தேவாதிபரே! நம் இருவருக்கும் பேதமில்லை ஆகையால் நீர் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? உலகத்தில் உபகாரம் செய்பவன் தான் செய்யும் செயலால்தான் தன்னைத் தெரியப்படுத்திக் கொள்கிறானே தவிர வெறும் வாய்ப்பேச்சால் தெரியப்படுத்துவதில்லை. எவன் ஒரு வேலையைத் தானே செய்து முடிக்கத் திறமையுள்ளவன் என்று விளக்கமாகச் வாய்விட்டுச் சொல்கிறானோ அவன் எந்த வேலை செய்யப் போகிறான்? அப்படி வாய்விட்டு சொல்வது உசிதமல்ல என்றாலும் நான் சொல்வதைக் கேளும், உம்முடைய பதவியைப் பறித்துக் கொள்வதற்காக எவன் உக்கிரமாகதவஞ்செய்கிறானோ அவனை ஒரே க்ஷணத்தில் பெண்ணின் கடைக்கண் பார்வையாலும் என் காம பார்வையாலும் வீழ்த்தி விடுகிறேன் அவன் தேவனாயினும் ராட்சசனாயினும் மகாமுனிவனாயினும் அவனை க்ஷணநேரத்தில் காம இச்சைக்கு ஆளாக்கி வீழ்த்தி விடுகிறேன். இப்போதே உமது வஜ்ராயுதத்தையும் இதர போர்க்கருவிகளையும் தூர எறிந்துவிடு. உமக்கு மிகவும் நண்பனும் மன்மதனுமான நான் வந்திருக்கும் போது அக்கருவிகள் என்ன வெற்றியைத் தரப்போகின்றன? யோகமூர்த்தியான சிவபெருமானைக் கூட என் காமபாணங்களுக்கு இலக்காக்கி விடுவேன் என்றால் மற்றவர் விஷயத்தில் என் வெற்றியைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? என்று பெருமையோடு சொன்னான். உடனே இந்திரன் உற்சாகமடைந்து மன்மதா நான் எந்தக்காரியத்திற்காக உன்னை நினைத்தேனோ அந்தக் காரியத்தையே நீயும் சொல்லி விட்டாய். உன்னை எதற்காக நினைதேன் என்பதைசொல்லுகிறேன், கேள்.

தாரகன் என்ற கொடிய அசுரன் பிரமதேவரிடம் வரம் பெற்று தர்மங்களை அழித்து உலகங்களுக்கு ஒரு பெரும் துன்பமாக பீடித்துக் கொண்டிருக்கிறான். சகல தேவர்களும் நிர்மலர்களான மகரிஷிகளும் அந்த அசுரனால் துக்கப்பட்டு தத்தளிக்கிறார்கள். அவ்வசுரனை எதிர்க்கும் விஷயத்திலோ தேவர்களின் ஆயுதங்கள் பயனற்று போயின இத்தகைய கொடிய அசுரனுக்கு அஸ்திரங்களால் மரணம் கிடையாது, அந்தத் துன்மார்க்கன் தாரகாசுரனுக்குச் சிவபெருமானின் வீர்யத்தால் உற்பத்தியாகும் குமாரனால் தான் மரணம் உண்டாகுமாம்! ஆகவே காமசம் பந்தப்பட்ட இந்தக்காரியத்தை உன்னால் தான் நிறைவேற்ற முடியும். இந்தக்காரியத்தை நீ உடனடியாகச் செய்ய வேண்டும் சிவபெருமான் இப்போது கண்மூடி நிஷ்டையில் அமர்ந்து மாபெரும் யோகஞ்செய்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பணி விடை செய்வதற்காகப் பார்வதிதேவி தன் தோழிருடன் அவர் அருகில் அவளது தந்தையான ஹிமாசல மன்னனின் உத்திரவு பெற்றுக் கொண்டு இருப்பதாக நாமும் கேள்விப்படுகிறோம். ஆகையால் மகாயோகியான சிவபெருமானுக்கு யோகம் கலைந்து எப்படி அந்தப் பார்வதியின் மேல் ஆசையும் காமமும் உண்டாக முடியுமோ, அப்படிச் செய்ய வேண்டியது உன் கடமையாகும். இந்த உபகாரத்தைச் செய்தால் நீயும் கிருதார்த்தனைவாய், இதனால் உலகங்களுக்கு மூண்டுள்ள துன்பங்களும் நீங்கிப் போய் விடும். அதில் சந்தேகமேயில்லை! என்றான்.

உடனே கரும்புவில் காமதேவன் புன்முறுவலோடு தேவேந்திரனை நோக்கி சிவபெருமான் இப்போது யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தாலும் சரி அவரைப் பார்வதியிடம் மிகவும் மையல்கொள்ளச் செய்து விடுவேன், இதில் சந்தேகம் வேண்டாம், என்றான். பிறகு அவன் தேவேந்திரனின் வார்த்தையைத் தன் தலை மீதுதாங்கித் தன் காதல் நாயகியான ரதி தேவியோடும் அன்பனான வசந்தனோடும் சேர்ந்து கொண்டு எந்த இடத்தில் பரம சிவன் கண்மூடி பரமயோகம் செய்து கொண்டிருந்தாரோ அந்த இடத்திற்குப் போய் சேர்ந்தான். உடனே வசந்தன் தன் தர்மச் செயல்களைத் துவங்கினான் வஸந்த ருதுவிற்கு உரிய தர்மங்கள் அந்த வனத்தைச் சேர்ந்தன அந்த வனத்தில் இருந்த பலாமரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கி கமகமவென வாசனை வீசின. தென்னை மரங்களிலும் மாமரங்களிலும் அசோக மரங்களிலும் அரும்புகள் அலர்ந்தன. மகிழம்பூ மரங்களில் வண்டுகள் இன்னிசை மீட்டி மொய்த்தன. பூங்குயில்கள் கூவி மோகமூட்டின குளுமையான சந்திர கிரணங்கள் காமாவஸ்தையடைந்துள்ள ஆடவர்களை கூடிக் களிப்பதற்கான காலங்களில் தம் நாயகரிடம் வேட்கையோடு செல்ல வைத்தன. தென்றல் இன்னிசை பாடி இனிமையாக வீசியது. அவ்வனத்திலிருந்த முனிவர்களுக்கும் அடக்கவொண்ணாத காமப்பெருக்கை தென்றல் காற்று எங்கும் பொங்கி எழச்செய்தது மரங்களும் கற்களும் கூட மன்மதன் சக்தியைப் பெற்றனவென்றால் தேவர்கள் மனிதர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?

யாவருடைய துன்பத்தையும் போக்குபவரான சிவபெருமான் அப்போது அங்கு அகாலத்தில் வஸந்தருது தோன்றியதை கண்டு வியந்துவிட்டு மீண்டும் கடூரமான யோகத்தில் ஆழ்ந்தார். இவ்வாறு வஸந்தருது வியாபித்திருக்கும்போது மன்மதன் தன் தேவி ரதியோடு கூடியவனாய் சிவபெருமானுக்கு இடது புறத்தில் தன் கரும்புவில்லை ஏந்தியவனாக நின்றான். அந்நிலையில் அந்த இரதி மன்மதரைக்கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள் அந்தச் சமயத்தில் பார்வதி தேவியானவள் பலவதிமான நறுமண மலர்களைச் சேகரித்துக் கொண்டு தன் தோழிகளுடன் சிவபெருமான் இருக்குமிடத்திற்கு சிவபூஜை செய்வதற்காக வந்தாள். இந்த உலகத்தில் அதி உன்னதமான சவுந்தர்யங்கள் எத்தனை உண்டோ, அத்தனை அழகுக் கவர்ச்சிகளும் பார்வதி தேவியிடம் பொலிவுடன் நிலைத்திருந்தன. அதோடு வஸந்த ருதுவில் பூத்த புத்திளம் மலர்களும் மன மகிழ்ச்சியோடு அத்தேவியால் அணியப் படுமானால் அவளது பேரழகை பற்பல ஆண்டுகள் வருணித்தாலும் முற்றிலும் வருணித்துவிட முடியுமா? யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் அருகே பருவ சுந்தரியாக பார்வதிதேவி எப்போது நெருங்கினாளோ அப்போதே அவள்மீது சிவபெருமான் காதலும் மோகமும் கொள்ளும்படி காமதேவனான மன்மதன் தன் கரும்புவில்லை விளைக்க முயன்றான். உடனே அந்த வில் அவன் கையிலிருந்து நழுவி சிவபெருமானின் அருகில் போய் விழுந்தது. அதனால் சிவனாரின் யோகமும் கலைந்தது.

அப்போது கருநெய்தல் மலர்களைப் போல் கவர்ச்சியான கண்கள் வாய்ந்த பார்வதி தேவி மிகவும் பிரியத்தோடு சிவபெருமானை வணங்கிப் பூஜைகள் செய்து கொண்டிருந்தாள். அதி அழகான உடற்பொலிவுடன் குலுங்கும் பார்வதி தேவியைச் சிவபெருமான் உற்றுப் பார்த்துக் கவர்ச்சியுற்று அவளது வனப்பையெல்லாம் வருணீக்கத் தொடங்கி விட்டார். இது முகமோ அல்லது முழு நிலவோ? இவை கண்களா கருநீல மலர்களோ? இக்கண் புருவங்கள் இரண்டும் காமதேவனின் கரும்பு விற்களோ? இது அதரமோ கொவ்வைக்கனியோ? இது நாசியோ கிளியின் மூக்கோ? இது குரலோ குயிலின் ஆலாபனையோ? இது மத்யமோ? இந்த சுந்தரியின் நடையையும் உருவத்தையும் மலர்களையும் ஆடைகளையும் சவுந்தரியத்தையும் என்னவென்று வர்ணிப்பது? என்று பார்வதியை வருணித்துக் கொண்டே சிவபெருமான் தமது யோகத்தை விட்டு விட்டார் அவர் பார்வதிதேவியின் முன்றானையை எவ்வளவு நேரம் கையால் தொட்டு ஸ்பரிசித்தாரோ அத்தனை நேரமும் தேவி தூரத்திலேயே நின்று கொண்டிருந்தாள் மங்கையருக்குரிய நாணத்தோடு தன் அங்கங்களில் ஒளிவீச அவள் அடிக்கடி கடைவிழிகளால் சிவபெருமானைப் பார்த்து கொண்டும் நின்றாள். அவ்விதம் பார்வதிதேவி செய்யும் சிருங்காரங்களையெல்லாம் பார்த்த சிவனார் அதிக மையல் கொண்டு ஆஹா! இவளைக் கட்டியணைக்கும் ஆலிங்கனத்தை நான் அடைவேனானால் இதைவிட நான் அடையும் சுகம் வேறுண்டோ என்று க்ஷணநேரம் யோசித்து, நான் ஏன் மோகமுற்றேன்? சர்வேஸ்வரனான நானே ஆனந்தத்தோடு இவளது அங்க ஸ்பரிசத்தை இச்சிப்பேனானால் வேறு எந்த க்ஷúத்திரன்தான் எந்தெந்த அற்பச் செயல்களையும் இச்சிக்கமாட்டான்! என்று மனந்திரும்பி சர்வாத்மாவான சிவபெருமான் திடமான பர்யங்க பந்தமாயற்யோக பட்டத்தைத் தரித்தார்.

11. இரதி தேவியின் புலம்பலும் பார்வதி தேவியின் காதலும்

தவஞானிகளே! அதன் பிறகு நிகழ்ந்தவற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள் யோக நிலையிலிருந்து வழுவியதை உணர்ந்த சிவபெருமான். இதற்குக் காரணம் ஏதாவது இருக்கவேண்டுமே யென்று நினைத்து நான்கு திசைகளையும் பார்த்தார் அப்போது தன் இடது பக்கத்தில் இருந்து கொண்டு மன்மதன் கரும்பு வில்லை வளைத்து காமக்கணைகள் தொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டார் பார்த்ததுமே அவர் கடுங்கோபம் கொண்டு இதென்ன விந்தை? எவராலும் ஆக்கிரமிக்க முடியாத என்னைக்கூட துஷ்டனான மன்மதன் விட்டுவிட வில்லையே என்று சிவபெருமான் தமது திருவுளத்தில் எண்ணும் போதே அவரது நெற்றிக் கண்ணிலிருந்து உயரக் கிளம்பும் ஜ்வாலைகளோடு நெருப்பு வெளிப்பட்டது. அந்த அக்கினியால் அப்பொழுதே மன்மதன் எரிந்து சாம்பலானான் மகா வலிமை சாலியும் காமவல்லபனுமான மன்மதன் மாண்டதை அறிந்ததும் தேவர்கள் மிகவும் துக்கப்பட்டார்கள் சிவபெருமான் அந்த க்ஷணத்திலேயே அந்த இடத்தைவிட்டு வேற்றிடஞ் சென்றார் பார்வதியும் திடமான உள்ளத்தோடு தன் ஆபரணம் முதலானவற்றை எடுத்துக் கொண்டு தன் தோழியருடன் தன் தந்தையின் அரண்மனைக்குச் சென்று விட்டாள்.

அப்போது மன்மதனின் நாயகியான இரதிதேவி கைலாச நாதரின் கடும் கோபத்தால் தன் காதற்கணவன் எரிந்து சாம்பலானதைக் கண்டதும் துக்கம் மேலிட்டு மூச்சுமுட்டி மூர்ச்சையானாள். பிறகு சுயநினைவு திரும்பியதும் ஆற்றமுடியாத துக்கத்தோடு கூச்சலிட்டு அழுதாள். இரதிதேவி அழும்போது அந்த வனமே துக்கத்தில் ஆழ்ந்தது. ஆடும் மயில்கள் ஆட்டத்தை மறந்து அயர்ந்து நின்றன. மரங்களின் கிளைகளும் இலைகளும் அசைவற்று ஒடுங்கியிருந்தன. மிருகங்கள் தங்கள் மேய்ச்சலை ஒழித்தன வண்டுகள் தங்கள் ரீங்காரத்தை நீங்கின. தவமுனிவர்கள் எப்படி மவுனமாக இருப்பார்களோ, அவர்களைப் போலவே, பறவைகளுங்கூட மவுனமாக இருந்தன. காற்றுகளுங்கூட பத்துத் திசைகளிலும் வீசவில்லை, இவ்வாறு சூழ்நிலைகள் முழுவதுமே சோகத்தில் ஸ்தம்பித்துப் போயிருக்கும்போது அசைவற்ற அந்த நிசப்தத்தில் இரதிதேவி பெரியதாகப் புலம்பலானாள். ஐயோ! என்ன செய்வேன்? இனி எங்கு போவேன்? என் கணவரைத் தேவர்கள் வீணிலே அழைத்து என்ன காரியஞ் செய்து விட்டார்கள்? ஓ நாயகனே! என்று கதறி அழுது கைகளையும் கால்களையும் அடித்துக் கொண்டு கூந்தலையும் அறுத்தாள் பிறகு அவள் துயரத்தினூடே, உலகத்தில் சுகத்தைக் கொடுப்பவன் ஒருவனுமில்லை. துக்கத்தைக் கொடுப்பவனும் ஒருவனும் இல்லை, ஆனால் எல்லா உயிர்களும் தான் செய்த வினையே அனுபவிக்கிறது. ஆகையால் தேவர்களைக் குறித்துச் சோகிப்பதில் பயனில்லை! என்றாள்.

இரதி தேவியின் அழுகைக் குரலைக் கேட்டதும் தேவர்கள் நெஞ்சுருகி சிவபெருமானிடம் சென்று அவரைத் துதித்து. உலகங்களுக்குச் சுகத்தை விளைவிக்கும் சர்வேஸ்வரரான சங்கரரே! எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருள வேண்டும். இப்போது மன்மதன் செய்த காரியம் அவனுக்காகச் செய்யப்பட்ட குறும்பல்ல, துஷ்டனான தாரகாசுரனால் பீடிக்கப்பட்ட தேவர்களின் வேண்டுகோளாலே செய்யப்பட்டது இதில் ஐயமில்லை எம் பெருமானே! பிறை சூடிய பெம்மானே, கருணைகூர்ந்து அருள் புரிய வேண்டும். ஆண்டவனான நீரே கோபித்தால் அகில அண்டங்களும் இப்பொழுதே அழிந்துவிடும். காதற்கணவனை இழந்து கதறும் ரதிதேவியின் துக்கத்தைக் கண்டவர்களெல்லாம் மரணமூர்ச்சைக்கு ஆளானவர்கள் போலச் சோகமுற்று இருக்கிறார்கள். ஆகையால் ஐயனே இரதிதேவியின் சோகத்தைப் போக்கவேண்டும்! என்று சொல்லி சிவபெருமானைப் பிரார்த்தனை செய்தார்கள்.

சிவபெருமான், மனமிளகிக் கூறலானார்.

தேவர்களே! இரதிதேவி துக்கிப்பது உண்மை, ஆயினும் எது உண்டோ அது வேறாகமாட்டாது. ருக்மணிபதியான ஸ்ரீகிருஷ்ணன் துவாரகாபுரியில் வாசம் செய்து குமாரர்களை உண்டுபண்ணப் போகிறான். அதுவரையில் சாம்பலான இந்த மன்மதன் சரீரம் இல்லாதவனாகவே இருக்க வேண்டும் அதன் பிறகு கிருஷ்ணன் ருக்மணியிடம் மன்மதனை உருவாக்குவான்; அந்த மன்மதனுக்கு பிரத்யும்னன் என்ற பெயர் வழங்கும் அதில் சந்தேகப்பட வேண்டாம். இந்த மன்மதன் ருக்மணியிடம் மீண்டும் பிறந்தவுடனேயே இவனை சம்பரன் என்ற அசுரன் ஒருவன் கவர்ந்து தூக்கிக் கொண்டு பெருங்கடலைக் கடந்து தன் தலை நகருக்கு செல்வான். அவ்வளவு காலம்வரை இரதிதேவி அவ்வசுரனது பட்டினத்தில் இருக்கட்டும்! அதே நகரத்தில் அவள் மன்மதனையடைவாள்! அதன் பிறகு சம்பராசுரனை மன்மதன் யுத்தத்திலே கொன்று அவனது பொன் பொருட்களையெல்லாம் தன் நகரத்திலே கொண்டு போய்ச் சேர்த்துத் தானும் தன் நாயகியுடன் துவாரகையை மீண்டும் அடைவான். இது சத்தியம்! என்று அருள் புரிந்துவிட்டு தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே. தம் திருவுருவை மறைத்தார். தேவர்களும், இரதிதேவியிடம் சென்று சிவபெருமான் சொன்னவார்த்தைகளை அவளிடம் எடுத்துக் கூறிவிட்டுத் தங்கள் சிவபெருமான் கட்டளையிட்டவாறு அந்த சம்பராசுரனின் நகரத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்.

மாமுனிவர்களே, அவள் அசுரப் பட்டணத்தை அடைந்ததும் சிவபெருமானால் குறிப்பிடப்பட்ட காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தேவர்களும். ஆ ஆ! இனி என்ன நேருமோ? சிவகுமாரன் எப்போது உற்பத்தியாகி எப்போது தாரகாசுரவதம் நடைபெறுமோ? என்று மிகவும் கவலையோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பார்வதி தேவியும் தன் தந்தையான பர்வதராஜனின் அரண்மனையை அடைந்து மாதாவான மேனையுடன் சேர்ந்து, தன்சவுந்தரிய ரூபத்தை நிந்தித்து கொண்டிருந்தாள் தூங்கும் போதும் தண்ணீர் அருந்தும் போதும். உணவருந்தும் போதும், நடக்கும் போது தோழியர்களின் நடுவில் இருக்கும் போதும் சிவபெருமானையே நினைத்து ஏக்கத்தோடு வருந்திக் கொண்டிருந்தாள். இவ்வாறு துக்கத்துடன் சுகமின்றி சிவ தியானத்துடன் சிவ சிவ என்று சிவ நாமங்களை ஸ்மரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் நாரதமுனிவர் புன்சிரிப்போடு வீணாகானம் இசைத்தபடி பார்வதி இருக்குமிடத்தில் வந்து சேர்ந்தார். தேவி பார்வதியும் அவரை வரவேற்று உபசரித்தாள். அப்போது சிவபெருமானை அடையும் வழி பற்றி நாரத முனிவரிடம் பார்வதி கேட்டாள். அதற்கு நாரதர் புன்முறுவல் பூத்து ஓ தேவி! சிவபெருமானைத் தவத்தாலேயே அடைய வேண்டும் அவ்விதம் தவத்தாலும் அவரை அடைய முடியவில்லையென்றால் பிரமன் முதலிய தேவர்களாலும் அவரை அடைய முடியாது! என்றார்.

12. பார்வதியின் தவம்

நாரதர் கூறியதைக் கேட்டதும் பார்வதி தேவி தவஞ் செய்தே சிவபெருமானை அடைய வேண்டும் என்று தீர்மானித்து தவஞ் செய்ய மனங்கொண்டாள். ஆனால் இந்த விஷயத்தைத் தன் தாய் தந்தையரிடம் தானே நேரில் சென்று விஷயத்தை வெளியிட்டு அனுமதி பெற வெட்கப்பட்டாள் அதனால் தன் தோழிகள் மூலம் சொல்லியனுப்பினாள். தோழிகள் பர்வதராஜனிடம் போய் மலையரசே! உங்கள் அருமைச் செல்வி பார்வதியின் வார்த்தையைச் சொல்லுகிறோம் நீங்கள் அதைக் கேட்டு சம்மதிக்க வேண்டும். அதாவது பார்வதி தேவி தன் தேகத்திற்கும் சவுந்தரியத்திற்கும், உமது குலத்திற்கும் அனுகூலம் செய்ய விரும்பி சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து அவரையே தன் காதற்கணவனாக வரித்து திருமணம் புரிந்து கொள்ள விரும்புகிறாள். அதற்குத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்கள். பர்வதராஜன் பார்வதியின் தோழிகள் இருவரும் கூறியதைக் கேட்டு பெண்களே! நீங்கள் சொல்லிய விஷயத்திற்கு நான் சம்மதிக்கிறேன் ஆனால் அவளது தாயான மேனையும், இதற்குச் சம்மதிக்கிறேன் ஆனால் அவளது தாயான மேனையும், இதற்குச் சம்மதிக்க வேண்டுமே அப்படி மேனையுஞ் சம்மதித்து பார்வதி தவம் செய்வாளானால் அதைவிட உத்தமமானது வேறொன்றுமிராது, அதனால் என்னுடைய குலம் சாபல்யம் அடையும் என்பதிலும் ஐயம் இல்லை! என்று சொல்லி அவர்கள் இருவரையும் தன் மனைவியான மேனையிடம் அனுப்பி வைத்தான்.

தோழிகள் இருவரும் மேனியின் அந்தப் புரத்திற்குச் சென்று அவளைப் பார்த்து தாயே உன் மகள் பார்வதி சிவபெருமானைக் குறித்துத் தவஞ் செய்ய விருப்பங்கொண்டு தன் தந்தையின் அனுமதியைப் பெற்று உன்னுடைய அனுமதியையும் பெறும்படி அனுப்பியிருக்கிறாள். உன் உத்திரவு கிடைத்தால் இப்போதே தவஞ் செய்யச் சென்று விடுவான். பதிவிரதையான பார்வதி தன் உருவத்திற்கு பயன் செய்ய ஆவலுற்று விட்டாள். ஆகையால் அனுமதியளிக்க வேண்டும் என்று கெஞ்சினார்கள். அதைக் கேட்டதும் தாய் மேனை தாங்காத துக்கமடைந்து உடனே தன் மகள் பார்வதியை அழைத்து வரச் செய்து பார்வதி! நீ ஏன் துரயப்பட வேண்டும்? முற்பிறவியில் செய்த நற்பயனாய் நீ இங்கு வந்து பிறந்தாய். இங்கு உனக்கு என்ன குறைவு நீ தவஞ் செய்வதற்கு ஏன் போக வேண்டும்? அப்படி எங்கேதான் போகப்போகிறாய்? இங்கு தேவர்கள் இல்லையா? தீர்த்தங்கள் இல்லையா? உன் தந்தையின் மாளிகையிலேயே நீ தவஞ்செய்யலாமே? அப்படி செய்தால் நல்ல திவ்விய சக்தி உண்டாகுமே நீ முன்பு ஒரு முறை சிவபெருமானுக்குப் பணி விடைகள் செய்த போது என்ன காரியத்தைச் சாதித்து முடித்தாய்? இனி எந்தக்காரியத்தைச் சாதிக்கப் போகிறாய்! உன் மேனியோ கோமளமானது உன் உடலோ மென்மையானது ஆனால் தவமோ மிகவும் கடுமையானது, ஆகையால் அது உனக்குத் தகுந்ததல்ல ஆயினும் அந்தத் தவத்தை இங்கிருந்து செய்தால் என்ன? என்று சொல்லி மேனை தடுத்தாள்.

என்ன சொல்லியும் பார்வதி தன் தாய் மேனையின் பேச்சைக் கேட்காமல், சிவபெருமானைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் பார்வதியின் ஏக்கத்தையும் துக்கத்தையும் மேனை புரிந்து கொண்டதும் அவள் நிலையைக்கண்டு சகிக்காதவளாய் தவஞ் செய்ய செல்ல அனுமதியளித்தாள். உடனே பார்வதி மிகவும் அகமகிழ்ந்து தாய், தந்தை இருவரையும் வணங்கி விடை பெற்று தன் இருதோழியரும் தன்னைப் பின் தொடர்ந்து வரத் தவஞ்செயலை மேற்கொண்டாள் தன் உன்னதமான ஆடை ஆபரணங்களையும் விலக்கிவிட்டு மரவுரியும் மவுஞ்சியுமே தரித்துக்கொண்டு இமயமலையில் புனிதமான நதிகள் பெருகும் ஒரு சிகரத்தை அடைந்தாள். அங்கு பார்வதி தேவி தவக் கோலத்தில் அமர்ந்தாள். அது முதல், பார்வதி தவம் செய்த காரணத்தால் அந்தச் சிகரம் கவுரிசிகரம் என்ற பெயருடன் வழங்கலாயிற்று அங்கு மரங்களும் செடிகளும் கொடிகளும் மலர்களோடும் கணிகளோடும் செழித்துக் கொழித்தன. பார்வதிதேவி பூமியைச் சுத்தம் செய்து, மாமுனிவர்களாலும் செய்யமுடியாத கடுமையான தவத்தைச் செய்யத் துவங்கி உடற்பெற்று என்பதே சிறிதுமில்லாமல் சூரியனிடத்தில் பார்வையைப் பதித்து; மேலான தவம் செய்தாள்.

க்ரீஷ்ம ருதுக் காலத்தில் பஞ்சாக்கினி மத்தியிலும் வர்ஷருதுக்காலத்தில் பூமியிலும் குளிர் காலத்தில் தண்ணீரின் மத்தியிலும் இருந்து கடுந்தவம் செய்து கொண்டே மரங்களை நட்டாள், அதோடு அந்தக் கவுரி சிகரத்தில் நாள்தோறும் மரங்களுக்குத் தண்ணீர் வார்த்துக் காப்பாற்றியும் அதிதி பூஜையும் செய்து வந்தாள் பனிக்காலத்தில் குளிராட்டும் வாடைக் காற்றுக்கும் மழைக்காலத்தில் மழைக்கும் எக்காலத்திலும் பசிக்கும் பயத்துக்கும் அஞ்சாமல் மாமுனிவர்களும் செய்ய முடியாத மாபெரும் தவத்தை மகாக்கடுமையாக செய்து வந்தாள் அவளது தவத்தைக் கண்ட அருந்தவமுனிவர்களும் வியந்து பிரமித்தார்கள். பார்வதிதேவி தவஞ்செய்து வந்த ஆசிரமத்திற்கு அருகே இருந்த சிங்கம், புலி, மான், பசு முதலிய மிருகங்கள் இயற்கைப் பகையின்றி ஒன்றோடொன்று அன்பு கொண்டு வாழ்ந்தன. வித விதமான புற்பூண்டுகள் அவளது ஆசிரமத்தைச் சுற்றிலும் செழித்து வளர்ந்தன நறுமணமலர்கள் பூத்துக் குலுங்கின. இவ்விதம் பார்வதிதவஞ்செய்த அந்த கவுரி சிகரம்; கைலாசத்திற்கு சமமாக விளங்கியது.

இவ்வாறு பார்வதிதேவி அருந்தவஞ் செய்யும்போது தேவர்களும் மகரிஷிகளும் பார்வதிதேவியின் தவத்தைப் பார்த்து. அத்தவத்தின் தேஜசால் வியாபரிக்கப் பெற்றவர்களாய் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானை வணங்கி வழிபட்டு கைலாசநாதனே நீரே! ஸ்வயம்பு நீரே சங்கரர்! நீர் மேலான கருணையுள்ளவர் உலகங்களைத்தகனஞ் செய்யும் கூடியதாகவும் மிகவும் பயங்கரமான தாயும் தேவர், முனிவர், தானவர் முதலானவர்களாலுங் கூடச் செய்ய முடியாத பெருந்தவத்தை பார்வதி தேவி இயற்றி வருகிறாள் கருணாநிதியே! தயவு செய்து பார்வதியின் தவத்திற்கு இறங்கி எங்களது காரியத்தையும் நிறைவேற்றியருள வேண்டும் என்று இறைஞ்சினார்கள். அவ்விதம் கூறியதேவர்களையும் நாரதரையும் சிவபெருமான் கடைக் கண்ணால் பார்த்துவிட்டுப் புன்னகைசெய்து தேவர்களே உங்களைப் போன்றவர்களாலும் காண முடியாத நான், மலையரசன்மகளான பார்வதி செய்யும் தவத்திற்கு மனமகிழ்ந்து அவளுக்குத் தரிசனம் கொடுத்து அவளையே திருமணஞ் செய்து கொள்ளப்போவது நிச்சயமாகும் இந்த விஷயத்தில் உங்களுக்கு யோசனை வேண்டாம். உங்கள் காரியம் கைகூடும் ஆகவே உங்கள் இருப்பிடங்களுக்கத் திரும்பிப் போகலாம்! என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினார்.

அதன்பிறகு சிவபெருமான், ஜடைமுடி தரித்த ஒரு கிழப்பிராமணராக வேடம் பூண்டு, பார்வதிதேவி தவஞ் செய்து கொண்டிருந்த ஆசிரமத்தையடைந்தார். அவ்வாறு வந்த வேதியரைக் கண்டதும், பார்வதிதேவி பெருமகிழ்ச்சியோடு அவரை வரவேற்று, அர்க்கியபாத்திய ஆசமனாதிகளால் உபசரித்து வழிபட்டாள். அவ்வனத்திலுள்ள சுனையான பழங்களை உணவாக உவந்தளித்தாள். விருத்தராக வந்த வேதியர் தமது வயதுக்கு ஏற்பச்சிறிது நேரம் நித்திரைசெய்தார் அவர் உறக்கம் நீங்கி எழுந்ததும், பார்வதிதேவி அவரை மேலும் உபசரித்து, அவரை நோக்கி, நீங்கள் எங்கு வந்தீர்கள்! என்று கேட்டாள். வேதியர் வடிவில் வந்திருந்த சிவபெருமான் தன் விருத்தாந்தங்களை ஒருவாறு சொல்லி தன் மெய்வடிவைக் காட்டாமல் தான் கொண்ட வேடத்திற்கு ஏற்ற கபட வார்த்தைகளைப் பேசலானார்.

ஏ தேவி! இந்தத் தீர்த்தம், பலம், உன் தவம் ஆகியயாவும் எப்பொழுதும் பரிபூரணமாக இருக்கவேண்டும். நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீ பதில் சொல்லவேண்டும் பால்யையான நீ என்ன காரணத்திற்காகத் தவஞ்செய்கிறாய்! எல்லா பூஜைகளையும் பூரணமாகச் செய்வதைப் பார்த்தே நம்மிருவருக்கும் சிநேகம் உண்டாயிற்று. உன் அந்தரங்க விஷயம் எதுவாயினும் என்னிடம் பேதம் பாராட்டாமல் சொல்ல வேண்டுகிறேன் உன்னிடத்திலே தவத்தாலாகும் எல்லா விதமான பயன்களும் நிறைந்திருக்கின்றனவே இந்தத் தவத்தை கணவனையடைய வேண்டும் என்று விரும்பிச் செய்வதாக இருந்தால் இத்தவத்தை இத்தோடு நிறுத்திக்கொள். இரத்தினமானது தன்னைக் கொள்வோனை தேடி செல்வதில்லை ஆயினும் இரத்தினத்தைக் கொள்வோன். தானே வந்து அதனைக் கிரகித்துக்கொள்வான்! உன்னுடைய சவுந்தரியமெல்லாம் தவஞ்செய்வதனால் வீணாகின்றன உன் அழகான ஆடையாபரண அலங்காரங்களையெல்லாம் உதறிவிட்டு தோல் மரவுரி போன்றவைகளை ஏன் அணிந்திருக்கிறாய்? அதற்குக் காரணம் சொன்னால் அதை கேட்டு நான் மகிழ்வேன்! என்றார். வேதிய வேடதாரி கேட்ட கேள்விகளுக்குப் பார்வதிதேவி தானே விடை சொல்ல வெட்கப்பட்டு விலகிச் சென்று தன் தோழிகளில் ஒருத்தியை அனுப்பி, அவள் மூலம் எல்லா விஷயங்களையும் அவருக்குத் தெரிவிக்கச் செய்தாள்.

13. வேதிய வேடதாரி தொடுத்த வாக்குவாதமும், கொடுத்தவரமும்

பார்வதி அனுப்பிய பிராண சகி புன்னகையோடு கிழட்டு வேதியரிடம் சென்று ஐயரே! பார்வதிதேவி ஏன் தவஞ்செய்கிறாள் என்பது தானே தங்களுக்குத் தெரியவேண்டும்? சகல ஐசுவர்யங்களும் கூடியிருந்துங்கூட இந்திரன் முதலான தேவர்களையெல்லாம் புறக்கணித்து விட்டு பிநாகம் என்ற வில்லேந்திய சிவபெருமானையே தன் பிரிய காதற் கணவராக அடைய வேண்டும் என்று தான் பார்வதி இப்படி அரும் தவம் செய்கிறாள் இவள் வைத்த மரக்கன்றுகள் கூட பெரிய விருட்சங்களாகிப் பூத்துப்பயன் தரத் துவங்கி விட்டன. இவளோ நாரதர் கூறியபடியே இன்னும் தவஞ்செய்கிறாள் என்றாள். அவளை அவ்வாறு பேசவைத்து விட்டு பார்வதி தனித்து நின்றாள். வேதியர் வியந்தவர்போல் பார்வதியை நோக்கி, ஏ பார்வதி உன் தோழி சொல்பவை உண்மைதானா? அல்லது பெண்களுக்கே உரிய வெறும் பரிகாசமா? நிச்சயத்தை நீயே ஏன் என்னிடம் சொல்லக்கூடாது? என்று கேட்டார். அதற்குப் பார்வதிதேவி பெரியவரே! என் தோழி சொல்வது யாவும் உண்மைதான் மனத்திற்கும் வாக்குக்கும் எட்டாத அச்சிவபெருமானை என்னால் எப்படி அறியத்தாகும்? அப்படித் துர்லபமாக இருந்துங்கூட, என் விருப்பத்தாலேயே நான் அவரைக் குறித்துத் தவஞ் செய்கிறேன்! என்றாள். பார்வதி நான் இப்போது என் விருப்பப்படிச்செல்கிறேன் நீ எதை இச்சித்தாயோ அதை அறிய எனக்கும் பெரு விருப்பம் இருந்தது அதை உன் தோழியரிடமிருந்தும் உன்னிடமிருந்தும் தெரிந்து கொண்டேன். இனி நான் போயாகவேண்டும் இல்லையென்றால் நமது சினேகம் குன்றிவிடும் என்று மறைவர் மந்தகாசத்தோடு சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். உடனே பார்வதி வேதியரைப் பார்த்து,  சுவாமி! நீங்கள் ஏன் புறப்படுகிறீர்? என்று கேட்டாள்.

பார்வதி நான் உனக்கு மிகவும் அன்பனாகையால் சொல்லுகிறேன் நீயோ சந்தனத்தை விட்டுச் சேற்றைப் பூசிக் கொள்ளவும் யானை வாகனத்தை விட்டு எருதின் மேல் ஏறிச் சவாரி செய்யவும், கங்கை நீரை விட்டு, கிணற்று நீரை அள்ளிக்குடிக்கவும், சூரிய ஒளியைவிட்டு விட்டு மின்மினியின் மினுக்கு ஒளியைக் கண்டு ரசிக்கவும், வீட்டு வாசத்தை விட்டுவிட்டு காட்டு வாசஞ் செய்யவும் விரும்பியவளாய் தவஞ்செய்கிறாய் உன்னுடைய இந்த முயற்சி உசிதமாகத் தோன்றவில்லை, தேவர்கள் நிறைந்த சபையைவிட்டு அசுரரும் பைசாசரும் நிறைந்த சபையை நீ இச்சிக்கிறாய்? அலங்காரமான இந்திரன் முதலான தேவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு ஆண்டியான சிவனை நீ விரும்புகிறாய்? இது உசிதமல்ல மிகவும் அலட்டுத்தனமாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னுஞ் சொல்லுகிறேன் கேள். பார்வதி கமலப் பூக்களைப் போன்ற கருவிழிகள் வாய்ந்த கட்டழகியான நீ எங்கே? முக்கண்ணனான அந்தச் சுடலையாடிச் சிவன் எங்கே? வெண்ணிலா முகம் படைத்த நீ எங்கே? ஐந்தலையனான அந்த ஆண்டிப்பித்தன் எங்கே? வருணிக்கவே முடியாத கூந்தல் அலங்காரியான நீ எங்கே? விரிசடையனான அந்த ஜடாதரன் எங்கே? சந்தனம் முதலான வாசனைகள் பூசப்பரிமளிக்கும் உடல் வளம் வாய்ந்த நீ எங்கே? சுடுகாட்டுச் சாம்பலைப் பூசித்திரியும் உடலுள்ள அந்த சிவன் எங்கே? சுகமான வெண்பட்டாடை எங்கே? சுகமற்ற அவனது யானைத் தோல் போர்வை எங்கே? உனது திவ்யமான தோள் வளைகள் எங்கே? அவனது பாம்பு அணிகள் எங்கே? உன் சேவகர்களான தேவர்கள் எங்கே? அவனது பூத கணங்கள் எங்கே? உன் மிருதங்கம் முதலான வாத்தியங்கள் எங்கே? அந்தச் சிவனின் டம்ருகம் எங்கே? உனது பேரிகை எங்கே? அவனது சிருங்கி எங்கே? உனது டங்கம் எங்கே? சிவனது கல்லவாத்தியமெங்கே? ஆகையால் உனக்கும் அந்த சிவனுக்கும் பொருத்தமோ உருவ ஒற்றுமையோ சிறிதும் கிடையாது. அந்தச் சிவனோ விருபாக்ஷ (கோணல் கண்ணன்) அவனது குலங்குடி முதலியனவும் நன்றாக அறியப்படவில்லை. அந்தச் சிவன் என்ன செல்வந்தனா? அப்படியிருந்தால் அவன் ஏன் திகம்பரனாக (நிர்வாணனாகத்)திரிய வேண்டும்.

உலகத்தில் ஆடவர்களுக்குள்ள விசேஷ குணங்களில் ஒன்றாவது சிவனுக்குண்டா? அவன் ஏறித் திரியும் வாகனமோ மாடு! உடுத்தும் ஆடையோ யானைத்தோல் அவனது படைவரிசைகளோ பூத பைசாசங்கள்! அவனது நீல கண்டத்திலோ நீல நிறத்து கடுவிஷம், வீடுகளில் வசிக்கலாயக்கற்றவனாய் வனத்தை அடைந்து காடுமேடுகளில் சுற்றுபவன்! அவன் ஜாதியோ இன்னதென்று இன்னும் தெரியவில்லை! அவனது வித்யையும் ஞானமும் இவ்வளவுதான் என்றும் இன்னும் கணக்கிடப்படவில்லை, அவனே ஏகாங்கி! அதிலும் பற்றற்ற விரக்தன்! அந்தச் சிவன் சர்வ சம்மதமான புருஷனாக இருந்தால் மன்மதனைத் தகனஞ் செய்வானா ஆகையால் அந்தச் சிவனிடம் உன் மனதைச் செலுத்துவது உசிதமல்ல! உனக்கும் அந்தச் சிவனுக்கும் பலவகையிலும் ஏற்றத்தாழ்வுகள் எத்தனையோ இருக்கின்றன. ஆகையால் இது எனக்கு யுத்தமாகத் தோன்றவில்லை. ஆயினும் வினையை வெல்ல முடியுமா? நீ உன் விருப்பப்படியே செய்! தலை விரித்தாடும் அந்த தான்  தோன்றிக் கூத்தனை அறிவேன். அவன் வசிப்பதோ ருத்திர பூமி. அவனே உலகத்திலுள்ள அசத்தான பொருள்களை அடைகிறான். ஆகையால் அப்படிப்பட்டவனிடமிருந்து உன் மனதைத் திருப்புவது உனக்குத்தான் நல்லது. இது உனக்கு இஷ்டமில்லையென்றால் நீ என் முன் நிற்காதே போ! என்று வேதியர் வடிவத்தில் வந்திருந்த சிவனாரே கூறினார்.

அவற்றையெல்லாம் பொறுமையின்றிக் கேட்ட பார்வதிதேவி மிகவும் கோபங் கொண்டாள். அவள் முதுபெரும் வேதியரை நோக்கிக் குமுறிக்குமுறி கூறலானாள். சிவதூஷணை செய்வதில் வாய்த் தேர்ச்சிபெற்ற கிழவரே! இவ்வளவு நேரம் உம்மைத் தன்யர் என்று எண்ணியிருந்தேன். இப்போதல்லவோ நீ அபக்தமானவர் என்பதைப் புரிந்து கொண்டேன் தேவாதி தேவனான சிவபெருமானை அறிவேன் என்று நீர் கூறிய வார்த்தை பொய்யே அன்றி வேறல்ல, நீர் நிச்சயமாக அவரைப்பற்றி அறிந்திருந்தால் அவருக்கு விரோதமாக ஏளனம் சொல்லமாட்டீர்! நீர் ஒரு வஞ்சகர். அதிலும் நீர் வயதான வாயாடிக்காரர், உலகைக் காக்கும் அச் சிவபெருமானின் வாசாமகோசரமான ஸ்வரூபத்தை நான் சொல்கிறேன் கேட்டுத் தெரிந்து கொள்ளும்!...

அந்தப் பரமசிவனார், யோசித்துப் பார்த்தால் நிர்க்குணம் காரணத்தால் ஸகுணராகவும் நிர்க்குணராகவும் விளங்குகிறாரே தவிர அவருக்குப் பிறவி ஏது? ஜாதி ஏது? சகல வித்தைகளுக்கும் அவர் பிறப்பிடமானவர் அவரே முன்பு ஒரு காலத்தில் வேதங்களை ஸ்வாசமார்க்கமான மகாவிஷ்ணுவுக்கு வழங்கியவர் பரமத்மாவும் பரிபூரணருமான அந்தச் சிவனாருக்கு வித்தைகளால் ஆகவேண்டியது என்ன? ஆதிபூதரான அந்த ஆனந்தக்கூத்தருக்கு வயது ஏது? பிரகிருதியே அந்தப் பெருமானை நித்தயமாக அடைகிறானோ? அவனுக்குப் ப்ரஹால உத்ஸாஹ மந்திரஜ எல்லோருக்கும் சுகம் பொங்கி வருமே தவிர, அவருக்கென்று ஏன் சுகம்? துன்மதியாளரே! வேதநுட்பம் தெரியாத கிழட்டு வேதியரே! எந்தச் சிவபெருமானின் கருணைக் கண்ணோக்கினால் தேவர்கள் ஜீவந்தர்களாக இருக்கிறார்களோ, எந்தச் சிவபெருமானின் திருத்தொண்டிற்காகத் தேவர்களும் காத்திருப்பார்களோ அந்தச் சிவபெருமானே ஸ்வயம்பு அத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான் என்னை விரும்பி இச்சிப்பாரானால் கல்யாணரூபரும் தேவதேவருமான அந்தப் பெருமானின் சேவையால் எனக்கு என்ன குறைதான் உண்டாகும்? எல்லாப் பிறவிகளிலும் தரித்திரனாக இருப்போன் ஆண்டியென நீர் இகழ்ந்த அந்த ஆனந்தமூர்த்தியை சேவித்தால் அஷ்ட லக்ஷ்மிகளையும் அடைவான் எந்தச் சிவபெருமானிடம் அஷ்டமாசித்திகளும் நர்த்தனஞ் செய்கின்றனவோ, அந்தப் பரமேஸ்வரனுக்கு ஐசுவரியம் எப்படி எட்டாததாகும்? சாதாரணமானவர்களுக்கு அவர் காட்சிக்கு எளியவராக தமது லீலா மாத்திரையால் காணப்பட்டாலும் அவரை ஸ்மரித்தாலேயே சர்வமங்களமும் கிடைத்துவிடுமே! சிவம் என்ற மங்களகரமான பெயர் எவன் முகத்தில் நிலைத்திருக்கிறதோ அவனைக் கண்ணால் காண்பதாலேயே அன்னியர்களும் பரிசுத்தராகி விடுவார்கள் நீர் சொல்வதுபோல் பஸ்மமானது பரிசுத்தம் இல்லாத வெறும் சாம்பல் என்றால் அம்பலவாணரான அந்த அண்ணல் மாபெரும் நடனமாடிய பிறகு தேவர்கள் ஏன் நமது சிரசின் மீது அந்தச் சாம்பலைப்பூசிக் கொள்கிறார்கள்? பொன்னார் மேனியில் தூய வெண்ணீறு அணியும் எந்தச் சிவபெருமான் அகில உலகங்களுக்கும் ஆதியாக இருக்கின்றாரோ அவர் சர்வேஸ்வரனாக இருந்து, அனைத்தையும் ஆக்கலும் காத்தலும் துடைத்தலுமான முத்தொழில் புரிந்து அலகிலாவிளையாட்டுடைய தலைவராக விளங்குகிறாரோ அந்த ஆதிநாயகரை உம்மைப் போன்ற குறைமதியாளர்களால் எப்படி அறிய முடியும்?

கேளும் வயதான வேதியரே! இன்னும் கேளும் பரமாத்மாவாகவும் பரப்பிரம்மமாகவும் விளங்கும் சிவபெருமானது அறியக்கூடாத உருவத்தை உம்மைப்போன்ற அஞ்ஞானிகள் எப்படி அறியக்கூடும்? துராசாரமுடையவர்களும் மகாப் பாபிகளும் தேவமார்க்கத்திற்குப் புறம்பானவர்களும் நிர்குணரான சிவபெருமானை எப்படி உணர்ந்தறிவார்கள்? தத்துவஞான விசாரணையில்லாமல் எவன் ஒருவன் சிவபெருமானை நிந்திக்கிறானோ, அவன் பல பிறவிகளில் சேகரித்த புண்ணியங்களும் வீண் சாம்பலாகி விடும். நீரோ அளவற்ற தேஜஸ் வாய்ந்த சிவபெருமானை இழித்தும் பழித்தும் பலப்பல பேசிவிட்டீர் உமது அற்பஞானத்தை அறியாமல் வயதான பெரியவர் என்று மதித்து வழிபட்டு உபசரித்த காரணத்தால் நானும் பாபத்தையடைந்தேன் எவன் ஒருவன் சிவநிந்தனை புரியும் துவேஷியாக இருக்கிறானோ அவனைக் கண்ணால் பார்த்தாலும் ஸசேவ ஸ்நானம் செய்ய வேண்டும். துஷ்டவேதியரே உம் ஊனக் கண்களுக்கு சிவபெருமான் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரே என் மணக்கண்ணிற்குப் பிரியரும் என் விருப்பத்திற்கு உரியவருமாவார்! திரும்பத் திரும்பக் கேட்டாலும் அதையேதான் நான் சொல்லுவேன். இவ்வாறு பார்வதி வெகுண்டுரைத்து விட்டு தன் தோழியைப் பார்த்து, சகியே துஷ்ட புத்தியும் கெட்டமனமும் படைத்த இந்தக் குறும்புக் கிழவரை நீயே இங்கிருந்து போகச் சொல்லடி, ஏனென்றால் சிவநிந்தை காது கொடுத்துக் கேட்பவர்களும் பாபத்தை அடைவார்கள். இவர் இங்கிருந்தால் மேலும் சிவநிந்தையே செய்வாராகையால் தாமே இந்த இடத்தைவிட்டு வேறு இடம் செல்வோம் என்று சொல்லிவிட்டு தன் தோழியருடன் காலெடுத்துப் பெயர்த்து வைப்பதற்கு முன், விருத்தவேதியரின் வேடத்திலுள்ள சிவபெருமான் தம் மாறு வேடத்தை நீக்கிவிட்டு தம் சுயவடிவமெடுத்து சிவபெருமானாகக் காட்சியளித்தார். அவ்வாறு அவரைக் கண்டதும் பார்வதிதேவி நாணத்தோடு தலைகுனிந்து நின்றாள், அவளை சிவபெருமான் உற்று நோக்கிப் புன்னகை பூத்து பார்வதி நீ என்னை விட்டு எங்கே போகமுடியும்? நீ என்னால் விட்டுவிடத் தக்கவள் அல்லவே உன் தவத்துக்காக மகிழ்ந்த நான் உன் முன் பிரசன்னமானேன். உன் மனதைச் சோதிப்பதற்காகவே விளையாட்டாக இப்படியெல்லாம் வாய் கொடுத்து வார்த்தையாடினேன். உன் திடப்பக்தியைக் கண்டு உவந்தேன். உனக்கு கொடுக்கத் தகாத வரமே இல்லை உன் தவத்தால் நீ என்னை அடைந்தாய் உன் அழகைக் கண்டால் ஒரு க்ஷணம் ஒரு யுகமாகத் தோன்றுகிறது நீ நாணத்தை விடு நமது வீட்டுக்குப் போகலாம் வா என்று சிவபெருமான் கூப்பிட்டார் பார்வதி நீண்ட காலம் தவஞ்செய்த பயனையடைந்து தவத்தால் உண்டாகிய சிரமமும் நீங்கினாள்.

14. பார்வதிக்கு மணம்பேசிய கதை

நைமிசாரண்ய தவஞானிகளே! நான் சொல்வதைப் பக்தியுடன் கேளுங்கள். பார்வதி தேவி சிவபெருமான் கூறிய வார்த்தைகளைகேட்டதும் தான் முன்பு இனம் புரியாமல் அவரைக் கடிந்து கொண்டதற்காக வெட்கப்பட்டாள். பிறகு தம் வீட்டுக்குப்போவோம் வா! என்று கூப்பிட்ட சிவபெருமானை நோக்கி தேவாதி தேவரே! என் விஷயத்தில் கருணைகாட்டி அனுமதியளித்து இப்போது என்னை என் தந்தை வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள் பிறகு சித்த புருஷர்களால் சுபமான உத்தமமானவிதிக்கிரமமான திருமணத்தை என் பிதாவின் வீட்டில் செய்து கொண்டு என் தந்தையின் கிருகத்தையும் அவரது இல்வாழ்வினையும் சிறப்பித்தருள வேண்டும் என்று பார்வதி தன் தோழி மூலமாக அறிவித்தாள். அவ்வசனத்தைக்கேட்டதும் சிவ பெருமான் அகங்குளிரக் கண்குளிர அவளைப் பார்த்து பார்வதி உனக்கு எதுவிருப்பமோ, அது அப்படியே ஆகுக என்று தருவாய் மலர்ந்து கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார். பார்வதி தன் தோழிகளை அழைத்துக் கொண்டு இமாசலத்தில்தன் தந்தையான பர்வதராஜனின் மாளிகையை அடைந்தாள். அவளது வருகையை அறிந்ததும் அவள் தாயாரான மேனை ராணிபற்பல தாதியரும் தோழியரும் உறவினரும் புடைசூழத்தன் புதல்வியை எதிர்கொண்டு வரவேற்று நீ நற்கருமம் செய்தாய்! உன்னால் நாங்கள் யாவரும் தூய்மையடைந்தோம் என்று சொல்லி சந்தன மலர்களால் பார்வதியை அருச்சித்து கையுறைகள் கொடுத்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள் அப்போது பர்வதராஜனான ஹிமவானின் அரண்மனை மாளிகை முழுவதும் ஆனந்தமயமாக விளங்கியது பர்வதராஜன் நாரதரைத் துதித்து துர்ப்புத்திரனைப் பெறுவதைவிட நற்புதல்வியைப் பெறுவதே சிறந்தது என்று கருதித் தன் இல்வாழ்வைச் சுப வாழ்வாக எண்ணிமகிழ்ந்தான்.

சிவபெருமானோ பார்வதி தேவிக்கு வரங் கொடுத்து விட்டு அந்தர்த்தானமான பிறகு காசிமாநகர் என்னும் புண்ணிய ÷க்ஷத்திரத்தை அடைந்தார். அங்கு அவர் ஸப்தரிஷிகளை நினைத்தார் அதையுணர்ந்ததும் ஏழு ரிஷிகளும் பரமேஸ்வரனைத் தியானித்துக் கொண்டு முத்தாபரணங்கள் பூண்டு தங்களது தவத்தின் பிரத்தியட்ச சித்தி போன்ற அருந்ததி முதலான அவரவர் பத்தினிகளோடு புறப்பட்டு வந்து சிவபெருமான் இருக்குமிடத்தையடைந்து துதித்து நின்றார்கள். சூரியகாந்தியைப் போல விளங்கும் சப்த ரிஷிகளைச் சிவனார் பார்த்து தவமுனிவர்களும் தேஜோவந்தர்களுமான மாமுனிவர்களே மனைவிமாரோடு சம்சார சம்பந்தர்களாக இருப்பதைக் கண்டு நமக்கும் நமது திருமண விஷயத்தில் நாணம் வேண்டுவதில்லை என்று கருதினார். அவரை ஸப்த(ஏழு) ரிஷிகளும் நோக்கி அண்ணலே ஆனந்த வள்ளலே, அம்பலவாணரே அளவற்ற தேஜசையுடைய வராகவும் பகவானாகவும் விளங்கும் எம்பெருமானே நமஸ்காரம் கபர்த்தியான (ஜடாதரரான) தேவரீருக்கு நமஸ்காரம் ஐந்து திருமுகங்களையுடைய உமக்கு நமஸ்காரம் ஹிரண்ய பாஹுவாகவும் (பொன்னார் தோளராகவும்) நீலகண்டராகவும் விளங்கும் விரிசடை சிவபெருமானே நமஸ்காரம் ஸர்வ வியாபகராகவும் வியாப்பியரான உமக்கு நமஸ்காரம் சிவனாராகவும் சிவரூபராகவும் பிரணவ ரூபராகவுமுள்ள உமக்கு நமஸ்காரம் என்று பலவாறாகவும் தோத்தரித்து எம்பெருமானே எல்லோருக்கும் மேலான ஏகாம்பரனே யாவருக்கும் அருள் பாலிப்பவரே நாங்கள் உம்மை எவ்விதம் துதிப்போம். நாங்கள் முன்பு இயற்றிய தவம் வேத அத்தியயனம் யாகங்கள் புண்ணிய காலங்களில் செய்த தான தருமங்கள் தீர்த்த ஸ்நானங்கள் முதலியயாவும் உம் திவ்வியமான தரிசனத்தால் கைகூடின உம்மை நினைத்தவன் கிருதகிருத்தியனாவான். அப்படியிருக்கும் போது தேவரீரே எம்மை நினைத்ததால் எங்களுக்குண்டான பெரும் பேற்றை என்னவென்று சொல்வோம்? மிகவும் குள்ளனுக்கு உயர் மரத்துப்பழம் எட்டியது போலவும் பிறவிக்குருடனுக்கு கண்கள் கிடைத்தது போலவும் ஊமைக்கு வாய் பேச்சு உண்டானது போலவும் பரம தரித்திரனுக்கு பெரும் புதையல் கிட்டியது போலவும் முடவன் மலையைத் தாண்டுவது போலவும் மலடிக்கு மைந்தன் பிறந்தது போலவும் உம் அரும்பெரும் தரிசனமானது அடியேங்கட்குக் கிடைத்தது. அதனால் முனிவர்களில் உயர்ந்தவர்கள் எனப் பெயர் பெற்றோம். எங்களால் இயன்றதாகவும் நன்மை பயப்பதாகவும் உள்ள ஏவல் பணிகளைச் செய்யக் கட்டளையிட வேண்டுகிறோம். என்று இறைஞ்சினார்கள்.

அனைவராலும் வழிபடத் தக்க அறிவியல் முனிவர்களே உங்களை நான் நினைத்து உங்களை இங்கே வருவித்தகாரணம் என்னவென்று சொல்கிறேன். பிருமதேவனைக் குறித்துத் தவஞ்செய்த துராத்மாவான தாரகாசுரன் வலிமையான வரங்களை பெற்று தேவர்களுக்குத் துன்பஞ் செய்கிறான். நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், சூரியன்; சந்திரன் யாகஞ் செய்வோன் எனப்பிரிந்த என் அஷ்ட மூர்த்தங்கள் எட்டு வடிவப் பொருட்கள் உலகத்திற்கு உற்றுதவி செய்வதற்கேயன்றி தன்னலப்பயனுக்காக அல்ல ஆகையால் யான் சிலையுடன் கூடி நிற்க திருமணஞ் செய்து கொள்ள விரும்புகிறேன் சிவையான பார்வதியோ, அரும் பெரும் முனிவர்களாலும் ஆற்ற முடியாத அருந்தவம் செய்து முடித்தாள். அவளுக்கு இஷ்டமான வரத்தின் பயன் அவளுக்குக் கைகூட வேண்டும். ஆகையால் பார்வதியின் பிதாவான பர்வதராஜனின் மாளிகைக்கு நீங்கள் சென்று அந்த ராஜனையும் அவன் மனைவியான மேனையையும் சந்தித்து, நற்செயல் நிறைவேறும் வண்ணம் மணம் பேசி, பார்வதியை எனக்கு மணமுடிக்கும்படி விரும்புகிறேன் பார்வதியோ ஸர்வகுண பரிபூரணையான கன்னிகையாகையால் அவளை எனக்கு மணமுடித்துக் கொடுக்கும்படி பர்வதராஜனை கேட்டு நிச்சயித்துக் கொண்டு தேவர்களுக்கு நன்மையுண்டாகும்படி விதிமுறைப்படி, நீங்களே மணவினையை நடத்துவிக்க வேண்டும் மற்றபடி செய்ய வேண்டியவற்றையெல்லாம் தெரிந்துள்ள உங்களுக்கு விசேஷமாக நான் சொல்லவேண்டியது எதுவுமில்லை என்றார்.

அதைகேட்ட சப்தரிஷிகள் ஆனந்தப் பரவசமடைந்தார்கள், அரி அயனாலும் வணங்கத் தக்கவரும் புருஷார்த்தங்கள் அனைத்தையும் தரவல்லவருமான சிவபெருமான் உலக நன்மையின் பொருட்டு நம்மை இந்தக் காரியத்துக்கு ஏவினார். இவரோ சர்வலோக கர்த்தாவாகவும் பார்வதியோ சர்வலோக மாதாவாகவுமிருப்பதால் இந்த ஏவல் பணி வெகு உசிதமேயாகும் இந்தக் காரியம் வளர்பிறைச் சந்திரனைப்போல் விருத்தியடைய வேண்டும் என்று சப்தரிஷிகளும் சொல்லிக் கொண்டு பிறை சூடிய பெருமானை வணங்கி விடைபெற்று வானவழியாக இமயமலையிலுள்ள பர்வத ராஜனது தலைநகரை அடைந்தார்கள். அந்தத் திவ்விய நகரத்தைக் கண்டதும் சப்தமகரிஷிகளும் உவகை பெருகித் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளலானார்கள்.
இந்த நகரம் குபேரனது அழகாபுரியைவிட தேவேந்திரனின் அமராவதி பட்டணத்தையும் விட ஆதிசேஷனது யோகவதியை விடச் சிறப்பாகத்தோன்றுகிறதே! ஸ்படிகக்கற்களினாலும் பலவகை ரத்தினங்களாலும் கட்டப்பட்ட அழகு கொழிக்கும் மாளிகைகள் மிகவும் மனோரம்மியமாக ஒளி வீசி ஜொலிக்கின்றன சூரிய காந்த மணிகளும் சந்திர காந்த மணிகளும் சுவர்த்தனங்களிலெல்லாம் மின்னுகின்றன. இத்தகைய இமயமலையின் அழகுக்கு ஈடாகுமா? என்று சப்தரிஷிகள் வியந்தும் உவந்தும் சொல்லிக் கொண்டேமுக மலர்ச்சியோடு மலையரசனின் மாளிகையை அடைந்தார்கள்.

சூரியனுக்குச் சமமான தேஜஸ் வாய்ந்த சப்தரிஷிகளைக் கண்டதும் பர்வதராஜன் தன் மனைவியான மேனையை நோக்கி, ஏழு சூரியர்கள் நமது இல்லதுக்கு வருகிறார்களோ? நான் கிரஹஸ்தனாகையால் இவர்களை நம் கன்னிகை பார்வதியே பூஜிக்க வேண்டியவள். இப்போது தான் நாம் தன்யர்களானோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆகாயத்திலிருந்து சப்தரிஷிகள் கீழே இறங்கினார்கள். அவர்களை பர்வதராஜன் எதிர்கொண்டு வரவேற்று வழிபட்டுத் திருவடிகளில் விழுந்து வணங்கினான். சப்தரிஷிகள் தங்கள் கைகளால் ஹிமாவானைப் பற்றித்தூக்கி சுபமுண்டாகுக, சுபம் உண்டாகுக, சுபம் உண்டாகுக என்று ஆசீர்வதித்தார்கள், பர்வதராஜன் அவர்களை வணங்கி, ஞானரிஷிகளே! இன்றுதான் என் குடில் புனிதம் பெற்றது என்று பரவசத்தோடு சொல்லி அவர்களுக்கு ஆசனம் கொடுத்து உட்காரச் செய்து அவர்களுடைய ஆக்ஞையைப் பெற்றுத் தானும் உட்கார்ந்து; மஹாத்மாக்களேநீங்கள் எழுவரும் எந்தக் காரணத்திற்காக என் மாளிகையை வந்தடைந்தீர்களோ? நான் தன்யனானேன். கிருத கிருத்தியனானேன் உலகத்தில் பலராலும் புகழத்தக்கவனானேன். எதற்காக வந்தீர்கள்? தாசனான எனக்குத் தெரிவிக்க வேண்டும் அடியேனுக்கு ஏதாவது கட்டளையிடுவதானால் விரைவில் சொல்லியருளுங்கள்! என்றான் பவ்யமாக, சப்த ரிஷிகள், சந்தோஷித்தார்கள். அவர்கள் பர்வதராஜனை நோக்கி ஹிமவானே! நீயே பாக்கியசாலி நீயே தன்யன்! பரோபகார சிந்தையால் சிவபெருமான் சகல ஜீவன்களுக்கும் சுகம் நல்க விருப்பங்கொண்டு எங்கள் மூலம் உன் புதல்வியான பார்வதியை தன் நாயகியாக்கிக் கொள்ள நாடுகிறார் அது உனக்குச் சம்மதமாகி, பார்வதியை அவருக்கு கன்னிகாதானஞ் செய்து மணம் முடித்து வைப்பாயானால் சகல உலகங்களுக்கும் சுகம் செய்யும் சங்கர பகவானுக்குப் பூஜ்யராவீர்; இதில் ஐயமில்லை, உன் பெண் பார்வதியும் அவரது திருவருளால் உலக அன்னையாவாள். உன் ஜன்மமும் பயன் பெற்ற தாகும் என்று கூறினார்.

அதைக் கேட்டதும் பர்வதராஜன் சப்தரிஷிகளே இந்த விஷயத்தில் என் பத்தினியான மேனையின் கருத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். பார்வதியே என் தேகம் அவளே என் சம்பத்து அவளே என் கீர்த்தி என்று சொல்லிவிட்டு, மேனையோடு ஆலோசித்து அவளையும் இணங்க வைத்து, பார்வதியை உலக அன்னையாகப் பாவித்து ரிஷிகளின் மடியில் அமர்த்தி, முனிவர்களே, இந்தப் பார்வதி என்னால் உங்களுக்கு பிøக்ஷயாகக் கொடுக்கத் தக்கவள். என்னால் கொடுக்கத்தக்க பிøக்ஷ இதுதான் என்றான். அதற்கு சப்த ரிஷிகள், இமவானே, நாங்கள் பிக்ஷகர்கள், நீரோ பிøக்ஷ கொடுப்பவர் பார்வதியே பிக்ஷõ கதம்பமானாள். இதைவிடச் சிறந்தது யாது? என்று சொல்லிப் பார்வதியை நோக்கி, தேவி! நீ சிவபெருமானுக்குச் சுகம் கொடுப்பவளாக என்று வாழ்த்திக் கையைப் பிடித்துக் கொண்டு உனக்குச் சுபம் உண்டாகப் போகிறது. வளர்பிறை நிலவைப்போல்  உன் கணங்கள் உன் வீட்டில் சேர்ந்து நாளா வண்ணம் விருத்தியடையப் போகிறார்கள், என்று சொல்லி விட்டு இமவானிடம் பழங்களோடும் மலர்களையும் தாம்பூலங்களையும் ஒருவருக்கொருவர் திருமண நிச்சயதார்த்தம் சொல்லி மாற்றிக் கொண்டார்கள் அப்போது மேனை கண்ணீர் வடித்தாள். அதைக் கண்ட அருந்ததி சிவபெருமானின் அநந்தகல்யாண குணங்களை அவள் ஆவலுறும் படி எடுத்துச் சொல்லி கண்ணீரைத் துடைத்தாள். பிறகு ரிஷிகள் நான்காம் நாளன்று உயர்ந்த லக்கனத்தை திருமணத்துக்கு நிச்சயித்து பர்வதராஜனிடம் விடைபெற்று மகிழ்ச்சியுடனும் தம்மனைவியருடனும் காசித் தலத்தை அடைந்து, சிவபெருமானைத் தரிசித்து மனைவியின் முடிவு கூறி தம் இருப்பிடஞ் சென்று மீண்டும் வருவதற்கு உத்தரவு கேட்டார்கள். சிவபெருமான், சப்தரிஷிகளே நீங்கள் என்னால் விவாகத்தில் அத்வர்யுக்களாகச் செய்யப்பட்டீர்கள் ஆகையால் நீங்கள் உங்கள் சீடர்களோடு வரவேண்டும் என்று கட்டளையிட்டார் மகரிஷிகள் அவ்வாறே ஆகுக என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார்கள்.

பிறகு சிவபெருமான் தம் கணங்களுடன் திருமண உற்சவத்தைக் கருதிக் கைலாயத்தையடைந்து நாரத முனிவரை நினைத்தார். நாரதரும் உடனே தோன்றி கல்யாண சுந்தரரே! அடியேனை நினைக்கக் காரணம் என்ன? என்று புன்சிரிப்போடு கேட்டார். சிவபெருமான் நிகழ்ந்த செய்திகளைச் சொல்லிக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார். அப்போது சிவபெருமான் பார்வதி கூறியவார்த்தைகளைச் சொல்லி. பார்வதி என்னைத் தன் வசப்படுத்தத்தக்க அரும்பெரும் தவத்தைச் செய்தாள் என்று சொன்னார் அதற்கு நாரதர் சங்கரரே? தாங்கள் பக்தர்களுக்கு தன் வசமாவதையே விரதமாகக் கொண்டவராயிற்றே பார்வதியின் மனோ பீஷ்டத்தை நிறைவேற்றினீர் யான் செய்யத்தக்க செயல் என்ன உண்டு? உத்தரவிட்டால் தடையின்றிச் செய்கிறேன். என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் நாரதா! நீ கூறியபடியே பார்வதியே அடைவேன், இவ்விஷயத்தில் உனக்குச் சந்தேகமே வேண்டாம், இனி நாம் சொல்லும் காரியத்தை நீயே செய்ய வேண்டும். நாரதா, பிரமன், விஷ்ணு முதலிய தேவர்கள் சப்தரிஷிகள், சப்தமாதர்கள், யக்ஷர்கள். கந்தவர்கள், நாகர்கள் முதலான அனைவரையும் என் திருமணத்திற்கு அழைத்து வருவதுடன் இந்த விவாகத்திற்கு வராதவர்கள்எனக்குப் பிரியர்கள் அல்லர் எனக்கூற வேண்டும் என்றார் அவரை நாரதர் வணங்கி விடைபெற்றுச் சென்று, சகலமான தேவர்களையும் கண்டு சிவபெருமானின் கட்டளையை அறிவித்து அதிவிரைவில் சிவ சன்னிதானத்தை அடைந்தார்.

15. ஊர்வலத்தில் மேனை தேடிய மாப்பிள்ளை

தேவர்கள் அனைவரும் சிவபெருமானைத் தரிசித்து வணங்க வேண்டும் என்று ஆசையோடு திருமணத்துக்கு வேண்டிய உபகரணங்களோடும் கந்தர்வர்கள் அப்ஸரஸ்திரீகள், வாத்தியங்கள் முதலியவற்றோடும் திருக்கயிலைக்கு வந்து சேர்ந்தார்கள். பரிபூரணரான பரமசிவனாருக்கு அலங்காரஞ் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை, ஆயினும் எல்லோரும் பகவத்சேவை செய்ய வேண்டும் என்ற கருத்துடையவர்களாய் தம்மால் இயன்றவாறு மண நாயகனாக சிவபெருமானை அலங்கரித்தார்கள். சிவனாரின் மகுடத்தில் அமர்ந்தான். திருநெற்றிக் கண் திலகமாயிற்று, காதணிகளான சர்ப்பங்கள் பொற்குண்டலங்களாயின. விபூதியே சந்தனமாயிற்று. யானைத்தோலே பட்டுப் பீதாம்பரமாயிற்று பாம்பு மாலைகள் நவரத்தின நகைகளாயின சிவபெருமானது மகிமையினாலே அவர் தேகத்திலிருந்து இயற்கைகளே கண்டவர்களுக்கு அலங்காரங்களாகத் தோன்றின மாப்பிள்ளை கோலம் பூண்ட சிவபெருமான் யாராலுமே வர்ணிக்க முடியாத சர்வாபரணலங்கார உருவத்தோடு விளங்கினார். அப்போது பிரமத கணங்கள் சகல வாத்தியங்களையும் முழங்கினர் தேவர்கள் மகேஸ்வரனுக்கு பணியாற்ற வரலானார்கள் அவர்களில் பிருமதேவர். அன்னவாகனத்தில் அமர்ந்து சகல முனிவர்களும் புடைசூழ்ந்து வர பூதபதியான பரமேஸ்வரனைச் சேவிக்க வந்து கும்பிட்டு நின்றார் மகாவிஷ்ணு கருடவாகனத்தில் அமர்ந்து சர்வலங்கார பூஷிதராக சகல சேவர்களுடனும் பரிவாரங்களுடனும் வந்து சேவித்து, அருகில் இருந்தார், இந்திரன் முதலிய திக்குபாலகர்கள் யானை, குதிரை, சிவிகை, விமானம் முதலிய தத்தமது வாகனங்களில் ஏறிப் பரிவாரங்களுடனும் ஆயுதங்களுடனும் வந்து பணிந்து ஒரு புறமாக இருந்தார்கள். அஷ்டவசுக்கள் துவாதச ஆதித்தர்கள், முனிவர்கள். கங்கை முதலிய நதிகள், சப்த சமுத்திரங்கள், கந்தவர்கள், தேவதாசிகள், நாகர்கள் முதலிய யாவரும் சர்வாலங்காரங்களோடு தத்தமது பரிவாரங்களோடும் பேருவகையோடும் சிவபெருமானைக் கண்டு தொண்டு புரிய வந்து சேர்ந்தார்கள்.

அந்தச் சமயம் சிவபெருமான், திருக்கைலாய மலையிலிருந்து புறப்பட்டுத் தேவர்களை நோக்கி, நீங்கள் அனைவரும் எனக்கு முன் செல்லுங்கள்! என்று பணித்தார். உடனே தேவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் சகல வாத்தியங்களையும் முழக்கிக் கொண்டு புறப்பட்டனர். சப்தரிஷிகள் ஆசிர்வதிக்க பாநுகம் பன் தன் ஆயிரம் வாய்களால் சங்கத்வனி செய்ய, பாணாசுரன் தன் ஆயிரங் கைகளால் குடழவு அடிக்க நந்திதேவர் பொற்பரம் யேந்தி தேவர்முனிவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன் செல்ல இந்திரன் காளாஞ்சி ஏந்த, ஈசானன் அடப்பை தாங்க, வாயு ஆலவட்டம் வீச, அக்கினி தூபம் ஏந்த, வருணன் பூரண கும்பம் தாங்க, நிருதி கண்ணாடி ஏந்த, குபேரன் நவநிதிகள் சிந்த: யமன் கஞ்சுகத் தொழில்புரிய நாகராஜன் மாணிக்க தீபங்கள் ஏந்த, வேதங்கள் திருவடியைச் சுமக்க கங்கை யமுனை முதலிய நதிமங்கையர் குளிர்ந்த கவரிவீச குண்டோதரன் குடைபிடிக்க, பிரம்ம விஷ்ணுக்கள் இருபுறமும் கை குவித்து வர, சர்வ அலங்கார ஆடம்பர பூர்வமாகச் சிவபெருமான் ரிஷிப வாகனத்தில் அமர்ந்த வண்ணம் இமயமலையை நோக்கி மணம் புரிய வரலானார். இந்நிலையில் பார்வதியின் தந்தை ஹிமவான் தனது உற்றார் உறவினர்களை யெல்லாம் வரவழைத்து, திருமண மண்டபத்தை வினோதமாக அலங்கரிக்கும்படி கட்டளையிட்டான். நானாவிதவிசித்திர தோரணங்களும் கொடிகளுமாக தன் தலை நகரை அழகுறச் செய்தான்.

பர்வதராஜன் தன் குமாரியைக் கன்னிகா தானஞ் செய்ய மங்கள ஸ்நானம் செய்வித்து கல்யாண திருக்கோலத்திற்கேற்ப அலங்கரித்து நாந்தி, தேவதா, ஆஹ்வாநம அங்குரார்ப்பணம் முதலிய தேவ பூஜைகளைச் செய்வித்து விவாக மஹோற்சவத்திற்கான உபகரணங்களை சித்தப்படுத்திவிட்டு மணமகனாரான சிவபெருமானைச் சகல தேவர்களோடும் அழைத்து வரும்படி தன் ஆத்ம நண்பனான கந்தமாதன பர்வதத்தையும் மற்றொரு சேவகனையும் பதிவெண்வகை மேள வாத்தியங்களோடு எதிர் அனுப்பி, சிவபெருமானின் வருகையை எதிர்பார்த்திருந்தான். மணக்கோலத்து மகேஸ்வரர் தம் சைனனியங்ளோடும் சகல தேவர்களோடும் வைபவமாக பர்வதராஜன் தூதுவரால் அறிந்தான். உடனே தன் பரிவாரங்களுடன் எதிர் சென்று சகல தேவர்களோடும் வரும் சாம்பவ மூர்த்தியை கண்டு ஆச்சிரியமடைந்தான். தேவர்கள் அனைவரும் பர்வத ராஜனின் சேனையைக்கண்டு வியந்தார்கள், இரண்டுமாபெரும் கடல்கள் ஒன்றாகச் சேர்ந்து போல இருசாராரின் சேனைகளும் ஒன்று கூடின. இவ்வாறு அனைவரும் பட்டணத்தை நோக்கி வந்தார்கள். ஹிமவான் தேவர்களுக்குத் தக்கபடி விடுதிகள் நியமித்தனுப்பிவிட்டுத் திருமணமேடைக்குச் சென்று அலங்காரங்களைச் சரிவரப்பார்த்து ஸ்நானம் பானாதி நித்தியக் கடன்களை முடித்துக்கொண்டு மணமகனாரின் வருகையை எதிர்பார்த்திருந்தான்.

பர்வதராஜனின் பத்தினியான ராணிமேனையோ நாரதருடன் தன் உப்பரிகையின் மேல் நின்று பக்தர்களுக்குச் சுகத்தைக் கொடுக்கும் பரமேஸ்வரனைக் காண வேண்டும்! அவர் எவ்வளவு அழகரோ? அவருக்காக என் அருமைச் செல்வி பார்வதி அரும்பெரும் தவஞ்செய்தாளே; என்று சொன்னாள். அதையுணர்ந்த சிவபெருமான் அந்த மேனை பிரமிக்கும்படியாகத் தம் சேனா பலத்தை காட்டி நின்றார். தேவர்களின் மாபெரும் சேனையைக் கண்ட மேனை மகிழ்ந்தாள் இவ்வளவு சேனைகளுக்கும் சிவபெருமானே நாயகராக இருப்பாராகில் அவர் புகழுடையவராகவும் பேராற்றல் உடையவராகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தாள். முனிவர்களே! அப்போது ஒரு வேடிக்கை நிகழ்ந்தது அதையுஞ் சொல்கிறேன். கேளுங்கள்.

மணமகனாரான சிவபெருமானின் ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த தேவர்கள் கந்தர்வர்கள் முதலானோர் நானாவித அலங்காரங்களோடும் பலவித விருதுக் கொடிகளோடும் அதி அழகான தேவமங்கையர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார்கள் அவர்களில் விசுவாசு என்ற கந்தர்வராஜனைக் கண்ட மேனை அவனே சிவன் என்று நினைத்து மகிழ்ந்து என் மருமகன் பெண்கள் சேனையுடன் வருகிறானே! என்று நாரதிரிடம் சொன்னான் நாரதரோ புன்சிரிப்போடு இல்லையே! அது மாப்பிள்ளையல்ல சிவசந்நிதியில் அவன் சங்கீதம் பாடுவோனாயிற்றே என்றார் அதைக்கேட்டதும் மேனை இன்னும் அதிக உற்சாகப்பட்ட அந்த ஆணழகனே மாப்பிள்ளைக்கு ஊழியன் தான் என்றால் மாப்பிள்ளை சிவபெருமான் எப்படியிருப்பானோ என்று நினைத்தாள் அப்போது கீழே ஊர்வலத்தில் மணிக்ரீவன் முதலான யக்ஷர்களும் அவர்களுடைய சேனைகளும் வருவது தெரிந்தது. அவர்களது தலைவனான குபேரனைக் கண்டதும் மேனை மகிழ்ச்சி பொங்க ஆகா! என் மகளுக்கேற்ற மணளானான சிவன் அவன் தான் என்று மயங்கினாள். அதற்குள் வருணன் தன் சேனா சமுத்திரத்துடன் வரவே ஒரு வேளை அவன்தான் சிவன் ஆவனோ? என்றும் இந்திரன் தேவமங்கையருடன் வர, நான் பார்த்த எல்லோரையும் விட இவனே சிறந்தவன் இவனே சிவனாகவேண்டும் என்று நாரதரிடம் குதூகலத்தோடு சொன்னாள். ஆனால் அவர்களில் ஒருவருமே சிவபெருமான் அல்ல வென்று நாரதர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சூரியன் தன் அகண்ட தேஜசுடன் கூடிச் சகல தேவர்களும் புடை சூழ வருவதைக் கண்டு இவன்தானோ சிவன்! என்று மேனை கேட்டாள் அவனுமல்ல என்றார் நாரதர். அப்போது சந்திரன் சகலகிரகங்களோடும் குளிர்ந்த காந்தியோடும் வருவதை மேனை பார்த்துவிட்டு ஆஹா! இவன் தான் சிவன்! இவனே என் மருமகனானால் என் குலம் முழுவதும் குளிர்ந்து பவித்திரமாகுமே!

இத்தகைய தேஜசுடையவன் என் மருமகனாயின் என் புதல்வி பார்வதியின் பாக்கியத்தை எத்தனையாண்டுகள் சொன்னாலும் கூற முடியுமா? என்றாள். அதற்கு நாரதர்., இவனும் சிவன் அல்ல. இவன் சந்திரன் என்றார். அப்போது பிருமதேவர் சகல பிரம்ம ரிஷிகளோடும் தேஜோராசியாக வருவதை மேனை உற்றுப் பார்த்துவிட்டு ஆகா அவனாவது சிவனாவானோ ஆகானோ? என்றும் குழம்பினாள். மகாவிஷ்ணு மேகவர்ணராய் சதுர்புஜ பீதாம் பரதாரயாயும் ஸ்ரீவத்ச சங்கு சக்கர கிரீடம் முதலிய ஆபரண அலங்காரராகவும் கோடி மன்மதர்களின் பேரழகோடும், தாமரை போன்ற கவர்ச்சிகரமான கண்களோடும் பக்தர்கள் புடைசூழ கருட வாகனத்தில் வருவதைக் கண்டு இவனே சிவன் நான் தன்யளானேன் என்று மேனை குதூகலம் பொங்க ஆனால் நாரதரோ இவரும் சிவபெருமான் அல்ல, இவரைக் காட்டிலும் சிறந்தவர் சிவபெருமான் அச்சிவ பெருமானின் அழகை என்னால் வருணிக்கவே முடியாது என்றார். ஒரு குறும்புச் சிரிப்போடு அப்போது பிருகு முதலிய முனிவர்களும் கங்கை முதலிய நதிகளும் சீடர்களும் இஷ்டகாமியங்களைக் கொடுக்கும் கற்பக விருட்சம் காமதேனு முதலியனவும் புடைசூழ அவர்கள் மத்தியில் பிருகஸ்பதி முனிவர் வருவதைக் கண்ட மேனை இவனே சங்கரன் என்றாள். அதற்கு நாரதர் இவரைக் காட்டிலும் சிறந்தவரும் நிர்குணருமான சிவபெருமான் வருவார் என்றார் அதற்கு மேனை? மூவுலத்திலுள்ளவர்களையும் கண்டேன். அவர்களில் ஒருவருமே சிவனல்லவென்றால் அந்த மாப்பிள்ளை எப்படியிருப்பாரோ? என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே  கீழே ஊர்வலத்தில் சிவபெருமான் வந்தார். அவரை மேனைக்கு நாரதர் சுட்டிக்காட்டி மேனையே இவரே சிவபெருமான் என்றார் மேனையும் மிகவும் ஆவலோடு சிவபெருமானைப் பார்த்தாள். அப்போது அவரோடு வாழு ரூபமான சேனைகள் மர்ப சப்தத்துடன் வந்தார்கள் நாரதர் மேனையை நோக்கி  இவர்கள் அவரது சேனைகள் இன்னும் அவரது சேனைகள் வரக்கூடும் என்றார்.

அதே சமயத்தில் பூதப்ரேத பைசாசங்கள் திரும்பிய முகமுடையவர்கள் வேடிக்கையான விகட உருவமுடையவர்கள் பயங்கர கரிய நிறத்தார், நொண்டிகள் ரோமமுடையோர் தண்டதர, பாசபாணிகள் விருத்த வாகனம் டமருக கல்ல வாத்தியக்காரர், கொம்புதாரை ஊதுவோர் முதலியவர்கள் கணக்கில்லாது வருஞ்சேனையைக் கண்டு மேனை பயந்தாள். அத்தகையவர்களுக்கு இடையே நிர்குணராயும் ஐந்து திருமுகமும் பத்து கரங்களும் மூன்று கண்களும், விபூதிப் பூச்சும் சடைமுடியும் சந்திரசேகரமும் கபால மாலிகாபரணமும் பெரும் புலித்தோல் ஆடையும் பிநாகம் என்னும் வில்லும் கங்காளமும் சங்கபூஷணமும் உடையவராய்ச் சிவபெருமான் எருது வாகனத்தின் மேல் யானைத்தோல் விரித்து அதன் மீது அமர்ந்து நித்திரை செய்து உடலசைவான் போல இருந்தார். நாரதர் உடனே குறுஞ்சிரிப்போடு தன் அருகே இருந்த மேனையைக் கூப்பிட்டு மேனா! அதோ அவரே சிவபெருமான் என்று சுட்டிக் காட்டினார். உடனே மேனை திடுக்கிட்டு சூறாவளிக் காற்றில் அடிபட்ட கொடிபோலத் துக்கம் அடைந்து ஆ பார்வதி என்ன காரியம் செய்து விட்டாய் ஏ துன்மார்க்கி என்று சொல்லி கீழே விழுத்து மூர்ச்சையடைந்தாள். பிறகு சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்திருந்தாள்.

16. மேனையின் மனக்குமுறல்

முனிவர்களே! மூர்ச்சை தெளிந்து எழுந்தவுடன் ராணி மேனை ஆத்திரத்தோடு நாரதரையும் தன் மகள் பார்வதியையும் இகழ்ந்து பேசத் தொடங்கினாள். அவள் நாரதரைப் பார்த்து நாரதரே! நீர் தானே எங்கள் மன்னவரிடம் சென்று உன் மகளைச் சிவபெருமான் வரிக்கப் போகிறார் என்று சொல்லி சிவபெருமான் யோகத்திலிருக்கும் போது, பணிவிடை செய்யச் செய்து எங்களை மோசஞ் செய்தீர். நாங்களும் உம் வார்த்தையை நம்பி மோசம் போனோம் அருந்தவ முனிவர்களாலும் செய்ய முடியாத கடுந்தவத்தைப் பார்வதியும் செய்து முடித்தாள். அத்தகைய தவத்துக்கு இத்தகைய பயனாயா அவையச் செய்தீர் நான் என்ன செய்வேன்? எங்கு போவேன் கையில் விளக்கை ஏந்திக் கிணற்றில் விழுந்தவளானேன்! உமக்கு என்ன இதனால் கெட்டது? எங்களுக்குத் தானே எல்லாமே வீணாயிற்று? பார்வதியை திருமணம் பேச வந்த அந்த சப்தரிஷிகள் இப்போது எங்கே போனார்கள்? அவர்களைக் கண்டால் தாடி மீசைகளைப் பிய்த்து விடுவேன் அவர்களுடன் வந்த அந்த அருந்ததியும் மிகக் கொடியவள். அவள் சொன்ன வார்த்தையாலும் என் புத்திரியின் சொந்த விருப்பத்தாலும் அல்லவா இப்படியாயிற்று? என் மகள் பார்வதிக்கு இந்தக்கல்யணத்தை முடிவு செய்தது பொன்னைவிட்டு கருகமணியைக் கைக்கொண்டது போலாயிற்றே? அன்னப் பறவைக்கு பதிலாக காக்கையைப் பொற்கூட்டில் குடியேற்றியது போலாயிற்றே? கங்கை நதியின் நன்னீரைக் குடிப்பதை விட்டுக் கிணற்று நீரைக் குடித்தது போலாயிற்றே? சூரிய ஒளியை விட்டுவிட்டு மின்மினிப் பூச்சியின் ஒளியைக் கண்டு மகிழ்ந்தது போலாயிற்றே? சிங்கத்தை விட்டு சிறு நரியைபணிந்தது போலாயிற்றே? அரிசியை விட்டு உமியைத் தின்றது போலாயிற்றே யாக விபூதியை விட்டு மயான சாம்பலை அணிந்தது போலாயிற்றே! சகல தேவர்களையும் விட்டுவிட்டு இந்த விகாரரூபியான சிவனையடைவதற்குத் தானா என் குமாரி மிகக் கடுமையான தவம் செய்தாள்? நாரதரே நீரும் உமது புத்தியும் உமது கலகமும் கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பார்வதியால் எங்கள் குலம், ஒழுக்கம் திறமையாவுமே வியர்த்தமாகப் போயிற்றே இவற்றை யெல்லாம் கண்ணால் காண்பதைவிட நாங்கள் இறந்தொழிவதே மேல் இனி என் கணவரின்  முகத்தில் எப்படி நான் விழிப்பேன்? என் வீட்டிற்கு அந்த சப்தரிஷிகள் ஏன் வர வேண்டும்? எல்லோருமாகச் சேர்ந்து என் குலத்தைக் கெடுத்துவிட்டார்களே! நான் மலடியாக இருந்திருந்தாலும் நன்றாக இருந்திருக்குமே?அல்லது இறந்து ஒழிந்தாலும் நன்றாக இருந்திருக்குமே? என்று பலவாறும் கவலையோடு ஓலமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது பிரும்மதேவர் அங்கு வந்து சேர்ந்தார்.

அவர் வந்த சமயத்தில் நாரதமுனிவர் மேனையே நோக்கி மேனா நீ சிவபெருமானின் இயற்கையான வடிவத்தை அறியவில்லை? என்றார். அதற்கு நாரதரை சீறிப்பார்த்து ஐயா, துஷ்டரே நீர் கொஞ்சம் தொலைவிலேயே இரும். நீர் எனக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று குமுறினாள். அப்போது அங்கு வந்த பிரும்ம தேவர் மேனையை நோக்கி மேனா! நான் சொல்லும் வார்த்தையைக் கேள். சங்கரபகவானே உலகங்களைச் சிருஷ்டிப்பவரும் ரக்ஷிப்பவரும் சங்கரிப்பவருமாக இருக்கிறார். நீ அவரது திவ்விய சவுந்தர்யத்தை அறியாமல் வீணாகத் துக்கப்படுகிறாய்? என்றார். அதற்கு மேனை, சுவாமி! நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து என்ன காரணத்துக்காக எங்கள் குலத்தை வீணாக்க முயற்சிக்கிறீர்கள்? என் அருமை குமாரி பார்வதியின் அழகையெல்லாம் அவலமாக்கி அவளை இவ்வகையான விகார ஆண்டிக்கு திருமணஞ் செய்து கொடுப்பதைவிட என் குமாரியை கொன்றுவிடுவது நல்லது. நீங்கள் அவளைச் சிவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கும்படிச் சொல்லக் கூடாது என்றாள். அதற்குள் இந்திரன் முதலான திக்குப் பாலகர்கள் மேனையிடம் வந்து, தாயே சர்வ உத்தமரும் சகல துக்கத்தைப் போக்கடிப்பவருமன சிவபெருமான் உன் மகள் பார்வதிக்குத் தரிசனம் கொடுத்தருளினார். அத்தகைய தரிசனம் வேறு ஒருவருக்கும் கிடைக்கத்தக்கது அல்ல என்றார்கள். அதைக் கேட்கச் சகிக்காத மேனை இந்த வார்த்தையை நீங்களும் என்னிடம் சொல்லாதீர்கள். இப்படிச் சொல்வதைவிட என்னைக் கொன்றுவிடுங்கள் மகா அவலட்சணமான அந்தச் சிவனுக்குப் பேரழகியான என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன்.

அப்போது சப்தரிஷிகள் மேனையிடம் வந்து மேனையே! நாங்கள் கூறியது பொய்யல்ல வீணானதுமல்ல சிவதரிசனம் விசேஷ பயன்களைக் கொடுக்கக் கூடியது, சிவனார் உங்களிடம் கன்னிகாதானம் பெறுவதற்கு உத்தம பாத்திரராகவே உங்கள் மனைக்கு எழுந்தருளியிருக்கிறார். அவர் உங்கள் மனைக்கு வந்ததைவிட உங்களுக்குச் சுபத்தை உண்டு பண்ணக்கூடியது வேறு ஒன்றுமில்லை என்று எடுத்துரைத்தார்கள். அவர்களது வாக்கியத்தையும் மேனை புறக்கணித்து நான் ஆயுதங் கொண்டாவது என் பெண்ணைக் கொன்று எறிவேனேயொழிய அந்தச் சாம்பல்பூச்சு சங்கரனுக்கு என் மகளை ஒருபோதும் கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பர்த்தாவான பர்வதராஜன் அங்கு வந்தான். மேனை துக்கத்தோடும் கோபத்தோடும் பேசுவதை அவன் கேட்டதும், பிரியமேனையே! நமது அரண்மனைக்கு யார் யார் வந்திருக்கிறார்கள்? நீ இந்தச் சமயத்தில் துக்கப்படுவானேன்? நீ ஏன் சப்தரிஷிகளை நிந்திக்க வேண்டும்? சர்வலோகங்களையும் காப்பவர் சிவபெருமான். நிக்கிரகானுக்கிரகம் செய்பவரும் அவரே தான் பூஜிக்கத்தக்கப் புனிதரும் அவர்தான். இதையெல்லாம் நான் அறிந்து கொண்டேன் ஆகையால் நீ துயரப்படாதே விவாக காரியம் இனிது நடக்க வேண்டும்! என்றான். ராணிமேனை, மேன்மேலும் ஆத்திரப்பட்டு உணர்ச்சியால் துடித்து பர்வதராஜனை நோக்கி, நாதா நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அவ்வாறே செய்ய வேண்டும். அதாவது என்மகள் பார்வதியின் கழுத்தில் ஒரு பெரிய பாறையைக் கட்டி, அவளைச் சமுத்திரத்தில் விட்டுவிட வேண்டும் என்று சொன்னாள்.

அப்போது அவள் குமாரி பார்வதியே அங்கே வந்து அம்மா! உனக்கு இந்த விபரீதபுத்தி, இந்தப் புத்தி உனக்கு எப்படி வந்தது? தர்மத்தையே முக்கியமாகக் கொண்ட நீ எவ்வாறு தர்மத்தைக் கைவிட்டாய்; சாம்பமூர்த்தி சர்வோத்தமர் பிரம்மா விஷ்ணு ருத்ராதியருக்குக் காரணமானவர். எல்லோருக்கும் நலமும் சுகமும் நல்குபவர் நிக்கிரக அனுக்கிரக சமர்த்தர் சகலமும் தன்னிடத்தில் கொண்டவர் சர்வலோகங்களையும் படைத்துக் காப்பவர்? பிறப்பு இறப்பு பந்தக்கட்டு இல்லாதவர் அதனாலேயே தேவர்கள் எல்லோரும் சேவகர்கள் போல இங்கு அவருடன் வந்திருக்கிறார்கள் அவர்களையெல்லாம் நீ பார்க்கவில்லையா? நீ எனக்கு நன்மை செய்பவளானால் சிவபெருமானைவிடச் சிறந்தவராக யார் இருக்கிறார் என்று எனக்கு சொல்ல வேண்டும் செய்த திருமணமுயற்சியைப் பயனுறச் செய். உலகங்களுக்கெல்லாம் சர்வ சுகங்களையும் பொழிகிற சங்கரபகவானுக்கு என்னை நீ கன்னிகாதானமாகக் கொடுத்து நமது குலத்தையும் வீட்டையும் புனிதமடையச் செய். கவலைப்படாதே, நீ என்னைச் சிவபெருமானுக்கு கொடுக்காவிட்டால் நான் இனிவேறு ஒருவனையும் திருமணஞ் செய்து கொள்ளமாட்டேன். சிங்கத்திற்கு உரியபொருளை சிறு நரி அடையமுடியாது. நானோ, என் மனம், வாக்கு காயங்களால் சுயமாகச் சிவபெருமானையே எனது நாயகனாக வரித்தேன். வரித்து விட்டேன் இனி உனக்கு இஷ்டம் எதுவோ அதைச் செய்து கொள்ளலாம் என்று கூறினாள். பார்வதியின் வார்த்தைகளைக் கேட்டதும் மேனை மிகவும் கோபத்துடன் அடி பெண்ணே உன்னைப் பெற்றவளான என் வார்த்தையை எதிர்த்துப் பேசும் அளவுக்கு நீ வல்லவளாகி விட்டாயோ? இரு உனக்கு விஷமூட்டுகிறேன். அல்லது உன்னைத் தூக்கிக் கிணற்றில் போடுகிறேன். அல்லது உன்னைக்கத்தியால் வெட்டி விடுகிறேன். இல்லையென்றால் நானாவது என் உயிரை மாய்த்துக்கொண்டு விடுகிறேன். என்று பிரலாபித்துப் பல விதமாகத் தனக்குத் தானே யோசித்து தனக்குத் தானே பேசிக் கொள்ளலானாள்.

ஆ! என் மகளுக்கு மணமகனாக வந்த அந்த சிவனைப்பற்றி விசாரித்தால் அவனுக்குத் தாய், தந்தை, உறவினர், உடன் பிறந்தோர் தாயாதியர் நல்ல நடத்தை சாதுரியம் நல்லவீடு, நல்லஆடை, நல்ல அலங்காரம் யோக்கியமான நண்பர்கள் நல்ல வாகனம் வாலிப வயது செல்வம் வித்தை முதலியவற்றில் ஏதாவது இருக்கிறதா? அவனிடம் எதைக் கண்டு என் மகள் மையல்கொண்டாள்? என் மகளை அருகதையற்ற அந்த சிவனுக்கு எப்படிக் கொடுப்பது? என்ன செய்வேன்? என்று புலன்பினாள். அப்போது மகாவிஷ்ணு அலங்காரப் புன்முறுவலோடு அங்கு வந்து அவளை பார்த்து, மேனா பிதுரர்களுக்கு மாயை புத்திரி நீ, பிரம வம்சத்தில் பிறந்தவள் நீ, நீயே மஹாபாக்கியவதி நீயே புண்ணியவதி, ஹிமவானின் மனைவியான உன் பாக்கியத்தை நான் என்னவென்று சொல்வேன்? தர்மத்திற்கே ஆதாரபூதமான நீ தர்மத்தை ஏன் கைவிட வேண்டும் நானும் பிரமனும் மற்ற தேவர்களும் முனிவர்களும் பயனற்ற காரியத்தையா உன்னிடம் சொல்வோம்? நாங்கள் சொல்வது சுபமல்லாது இருக்குமா? அதை சுபமல்லவென்று நீயும் நினைக்கலாமா உன் மகளுக்கு மணாளனாக வந்திருக்கும் சிவபெருமானை நீ உண்மையில் அறிய மாட்டாய். அவர் நிர்க்குணரும் சகுணருமாக இருக்கிறார் அவரால் தான் சகலஜகத்துக்கும் மூலகாரணமான பிரகிருதி நிர்மாணிக்கப்பட்டது பிரகிருதியோடு விராட்புருஷன் படைக்கப்பட்டான். பிறகு பிரமா நான், ருத்திரன் ஆகிய மூவரும் முக்குண வசந்தராகப் படைக்கப்பட்டோம் பிறகுதான் வேதங்கள், தேவர்கள், காணப்படும் தாவர ஜங்கமங்களாகிய சகலஜகத்தும் படைக்கப்பட்டன. ஆகையால் அந்த முழுமுதற்கடவுளாகிய முக்கண் பெருமான் குணரூபங்களை யாரே அறியமுடியும்; நானும் பிரமனும் ஆயிரம் ஆண்டுகள் சொல்வதாயினும்; அந்தச் சிவனாரின் பெருமையைச் சொல்லி முடியாது. சத்திய சொரூபனும் ஞானரூபியும் வியாப்பயனும் வியாபாகனும் மூப்பு மரணமற்றவனும் பிரபுவும் உபாசிப்பவர்களுக்கு அருகிலேயே இருப்பவனும் பிரமன், ருத்ரன், தேவர், சூரியன், சந்திரன் கிரகங்கள் மலைகள், நதிகள் குபேரன் நான் ஆகிய யாவும் யாவரும் அந்தச்சிவபிரானின் சிருஷ்டியே! ஒரு சிறு விதையிலிருந்து ஒரு பெரியமரம் தோன்றி கிளைகள் கொம்புகள் இலைகள் முதலியன உண்டாவது போல ஆதிப்பரம் பொருளான அந்தச் சிவபெருமானிடமிருந்தே சகல பிரபஞ்சங்களும் தோன்றின. ஜகத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் சிவ பெருமானே இருப்பவர். சிவமே ஜகத், ஜகமே சிவம் நானும் சிவம் நீயும் சிவம் சிவத்தைவிட இரண்டாவது பொருள் கிடையாது, அவ்வாறு இரண்டாவது பொருள் ஒன்று இருக்கும் என்று நினைப்பது அஞ்ஞானமே ஆகும் காரியமான ஜகத்தில் காரணமான சிவபெருமானே வியாபித்திருக்கிறார் ஆகையால் காரியம் ஜகம் என்றும் காரணம் சிவம் என்றும் அறிந்துகொள்ள அறியாமையால் காரணகாரியங்களெல்லாம் பேதமாகக்காணப்படுமே தவிர ஞானியருக்குப் பேதமில்லை. சகல ஜகத்தும் சிவமயமே ஆகும் என்று உய்த்துரைத்தார்.

17. பார்வதி கல்யாணம்

ஸ்ரீ மகா விஷ்ணு மலையரசி மேனையைப் பார்த்து மேலும் தொடர்ந்து நல்லுரை கூறலானார். விளக்குகின்ற அனைத்தும் சிவபெருமானே என்று வேத சிவாகமங்கள் கூறுகின்றன. குற்றியை மனிதனாகவும் கயிற்றைப் பாம்பாகவும் சிப்பியை வெள்ளியாகவும் சந்தேகித்துப் பிறகு தான் மனிதனாகக் கருதியது மனிதனல்ல குற்றியென்றும் பாம்பாகப் பயந்தது பாம்பல்ல கயிறு என்றும் வெள்ளியாக மயங்கியது வெள்ளியல்ல வெறும் சிப்பி என்றும் தெரியும். உண்மையைக் கண்டறிந்த பிறகு சந்தேகம் தெளியும் அதுபோல மனத்திடமுற்று இவ்வுலகம் முழுமையும் சிவனுக்கு இரண்டாவதான தோற்றம் என்று கொண்டறிந்து அஞ்ஞானம் நீங்கி ஞானம் பெற்று பிறகே இவ்வுலகம் கூட சிவனுக்கு இரண்டாவது தோற்றமல்ல இவையாவும் முக்காலும் சிவனே சிவமயமானதே என்கிற உண்மை தெளிவாகும். மேனா மேலும் உதாரணமாக உனக்கு மேலும் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன். வேஷம் தரித்துக் கொள்ளுகிற வேடதாரி பலப்பல வேஷங்களில் காட்சியளித்தாலும் அவன் வேஷங்களில் தான் மாறுகிறதேயன்றி ஆண் ஒருவனாகவே இருக்கிறான். அதாவது அவன் அவனாகவே இருக்கிறான். வேஷம் தரித்தவனைப் பார்த்து உண்மையை உணராதவன் அவனை நம்புகிறான் உணர்ந்தவனோ அவனைக் கண்டு நகைக்கிறான் இதைப் போலத்தான் உண்மை தெரியாத அஞ்ஞானி இவ்வுலகம் சிவனுக்கு இரண்டாவது தோற்றம் என்று கருதுகிறான். ஞானியே காணுகின்ற அனைத்தும் காணாதவையான அனைத்தும் யாவும் சிவனே என்ற மெய்யறிவைக் கண்டறிகிறேன். மேலும் ஒரு திருஷ்டாந்தத்தைச் சொல்லுகிறேன் கேள். மனிதன் ஆடை ஆபரணங்களை உடுத்திக் கொள்கிறான். அதை வகை வகையாக உடுக்கிறான் அப்போது அவனும் வகை வகையான தோற்றங்களைப் பெறுகிறான் அவை வகை வகையான அம்சங்களைப் பெறுகின்றன. ஆனால் அவற்றை அணிந்தவன் அப்படியே தான் இருக்கிறான். அது போலத்தான் சிவஸ்வரூபமானது மற்றொரு அம்சத்தில் கலந்த பொழுது நானாத்மகமாகத் தோன்றுமேயன்றி விசாரிக்கும் போது அனைத்தும் சிவனேயாகும் தான் எனது என்னும் தத்போதம் இருக்கும் வரை ஒருவனிடத்தில் மந்தனம் இருக்கும் அகங்காரம் அவனை விட்டு விலகிய பிறகுதான் அவனும் சிவனாக இருப்பதை உணர்கிறான்.

ஸ்படிகமணியானது செம்பருத்திப் புஷ்ப சையோகத்தால் (கலப்பால்) வேறு நிறமாகக் காணப்படுகிறது அல்லவா. இப்படியே பிரகிருதி சம்பந்தத்தால் சிவபெருமானிடம் அநேகத்துவம் தோன்றுகிறது. பிரகிருதியைவிட சிறந்த பரிபூரணப் பிரமமாகிய சிவ தத்துவார்த்தத்தை நாங்களே இன்னும் அறியோம். ஆகையால் நீ துக்கத்தை விட்டுச் சிவபெருமானுக்குச் சேவை செய்! என்று சிவபெருமானிடத்தில் பக்தியுண்டாகும்படி திருமால் போதித்தார். அந்தச் சமயத்தில் நாரத முனிவர் குறு நகையோடு சிவபெருமானிடம் சென்று மணமகனாரே! நாங்கள் ஒவ்வொருவரும் உம் விஷயமாக உம் மாமியார் மேனையிடம் பலவிதமாகவும் இகழ்ந்து ஏளனம் செய்யப்பட்டோம். என்று சொல்வதற்கு முன் சிவபெருமான் பக்தவாத்ஸல்லியத்தால் கண்டோர் மோகிக்கத்தக்க திவ்விய திருவடிவத்தோடு தோற்றமளித்தார் நாரதர் மீண்டும் மேனையை நோக்கி அம்மா உலகமெல்லாம் மோகிக்கத் தக்க பேரழகுடைய உன் மருமகனை இப்போது பார் என்றார் அப்போது சிவபெருமான் கோடி சூரியர்களுக்குச் சமானமான காந்தியும் குளிர்ந்த பார்வையும் கொவ்வை வாயில் குமிழ் சிரிப்பும் அழகான அணிமணிகளும் அதி உன்னதமான கிரீடங்களும் விலையுயர்ந்த வஸ்திரங்களும் தரித்து விளங்குவதை மேனை உற்றுக் கவனித்தாள். சகல தேவசேவையோடு சூரியன் குடை பிடிக்கவும் சந்திரன் விசிறவும் அணிமாதி அஷ்டமாசித்திகளும் நடிக்கவும் கங்காதி கன்னியர்கள் சாமரையிரட்டவும், பிரமன், விஷ்ணு, ருத்திரர் முதலான தேவர்கள் ஜய ஜயவென ஜயகோஷங்கள் முழங்கவும் மாபெரும் முனிவர்களெல்லாம் பலவாறாக துதித்துக் கொண்டு கொடிகள் பிடித்துலாவவும், விச்சுவாவசு முதலிய கந்தர்வர்கள் அரம்பை மேனகை தேவ தாசிகளுடன் பலவிதமான வேஷங்களும் பூண்டு சங்கீதகானஞ் செய்யவும் சிவகணங்கள் யாவரும் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை வாசிக்கவும் வேத-அங்க ஸ்ருதி-ஸ்மிருதிகள் வடிவம் பெற்று முன்னால் நடக்கவும் சமுத்திரங்களும் நதிகளும் அநேகமாக அலங்கரிக்கப்பட்டு முன்னே உலாவவும் மகாப்பிரகாசத்துடன் சிவபெருமான் விளங்கிய திருக்கோலத்தை வர்ணிக்க யாருக்கும் ஆற்றல் இராது அப்படிப்பட்ட திவ்விய மங்களவடிவாக விளங்குஞ் சிவபெருமானைப் பார்த்து ராணி மேனை சித்திரப் பதுமைப் போல அசைவற்று ஒன்றும் தோன்றாதிருந்து சிறிது நேரத்தில் மனந்தெளிந்து தேவர்கள் யாவருங் கூறியபடியே இவர் அவ்வகையான சரீரத்தையேயடைந்திருக்கின்றார்.

இவரை மணாளனாக வரித்த என் மகள் பார்வதி மகா புண்ணியவதி அதனால் தான் இத்தகைய ஜகன் மோகன உருவம் படைத்த சிவனாரைக் கணவனாக அடைந்தாள் என்று கருதி அவரது அவயவங்கள் ஒவ்வொன்றையும் சிறிது உற்றுப்பார்த்து மிகவும் சந்தோஷ மடைந்து மனதில் நாணமுற்று இன்னுங் காணக் கூடாதவளாயிருந்தாள். தேவ கணங்களோடு சிவபெருமான் சர்வாலங்கார பூஷணராய்ப் பர்வதராஜன் மாளிகைக்கு வந்தார் அப்போது பிருமாவும் மகாவிஷ்ணுவும் இரு பக்கத்திலும் சூழ இடையே வரும் சிவபெருமானைக் கண்ட மேனை அவரைப் பூஜித்தாள். மணநாயகன் வருகையைக் காட்டும் பொருட்டு எழுந்த பதினெட்டு வகையான மேளவாத்தியங்களின் ஒலியைக் கேட்டு அந்த நகரத்திலிருந்த மங்கையர் அனைவரும் மணநாயகனைக் காணும் ஆர்வப் பெருக்காலும் ஆசையாலும் அவரவர் செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டு அப்படியே ஓடி வந்தார்கள் அதாவது நீராடிய பிறகு உடம்பில் வாசனைத் தேய்த்துக்கொண்டிருந்த கோமாளாங்கியும் கணவன் பூஜை செய்யும்போது அவனுக்கு விசிறிக் கொண்டிருந்த பத்தினியும், குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கையில் அந்தக் குழந்தையையும்  விட்டு விட்டு ஓடி வந்த தாயும், மெல்லிய இடையில் பொன் ஒட்டியாணம் அணிய முயன்று அதை அப்படியே கையிலேந்திக் கொண்டு வந்த காரிகையும் கண்களில் மைதீட்டிக் கொண்டிருந்த கன்னிகை ஒரு கண்ணில் மைத்தீட்டியும் மறு கண்ணில் தீட்டாமலும் கையில் சலாகையோடும் கண்ணாடி பார்த்திருந்த கையில் ஏந்தியக் கண்ணாடியோடும், கணவனுக்கும் அன்னமிடப் போனவன் அன்னப் பாத்திரத்தோடும் நீராடிய போது தன் கால்களுக்கு மஞ்சள் பூசிக் கொண்டிருந்தவள், ஒரு காலுக்கு பூசியும் ஒரு காலுக்கு பூசாமலுமாக ஓடி வந்தார்கள். இவ்வாறு அவரவரும் அவரவர் வேலைகளை அரைகுறையாக விட்டு விட்டு சர்வமங்கள வடிவமாக விளங்கும் சிவபெருமானைக் கல்யாணக் கோலத்தில் காண்பதற்காக ஓடி வந்து சர்வாங்க சுந்தர புருஷராய்த் தோன்றிய எம் பெருமானை அகல விரித்த கண்களால் அதிகமாகப் பார்த்துப் பார்த்துப் பெருவியப்பால் திறந்தவாய் திறந்தபடியும் திறந்த கண்கள் சிமிட்டாதபடியும் சித்திரப் புதுமைகளைப்போல் அசையாமல் நின்று கொண்டிருந்தார்கள். அவரவர் மனதும் சிவனாரோடு ஐக்கியப்பட்டன. சிவனாரின் வசீகர அழகில் யாவரும் மயங்கி நின்றார்கள் இந்த மயக்கம் நீங்க சிறிது நேரம் ஆயிற்று.

மயக்கத்திலிருந்து தெளிவுற்று எழுந்த அந்நகர மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆஹா! நம் அரசிளங்குமரி பார்வதி செய்த அருந்தவத்தால் அல்லவா இவ்வித அற்புதத் திருவுருவத்தைப் பெற்ற சாட்சாத் சிவபெருமானையே நாயகனாகப் பெறும் பாக்கியமடைந்தாள். மங்களமூர்த்தி எனும் திருநாமம் அவருக்கு அல்லவோ மிகவும் பொருத்தமானது. இத்திருப்பெயருக்குரிய மங்களமூர்த்தியைக் கண்ணாரக் கண்டவர்களுக்கு பற்பலப் புண்ணிய பயன்களெல்லாம் உண்டாகுமே! கடுந்தவம் புரிந்து இவ்வரியத் திருவுருவைக் கணவனாகப் பெற்றதாலல்லவா பார்வதியே தன்யையாயும் கிருக கிருத்யையாயும் இருக்கிறாள். பார்வதியின் தவம் பெரும் பயன் அளித்தது இச்சதிபதியை ஒன்று சேர்க்க பிரமன் செய்த முயற்சி சிறப்பானதல்லவோ? பொன்னும் இரத்தினமும் ஒன்று கூடியனாற்போல், லக்ஷ்மியும் விஷ்ணுமூர்த்தியும் மணஞ்செய்து கொண்டதுபோல, சாம்பவமூர்த்தியான சிவபெருமானைக் கணவனாகப் பெற்ற பார்வதி நல்ல சுகத்தை அனுபவிப்பாள் என்று சொல்லி கந்த புஷ்ப அக்ஷதைகளைச் சிவபெருமான் பேரில் சமர்ப்பித்தார்கள். இவர்களின் உரையாடல்களைக் கேட்டு மகிழ்ச்சியுற்று சிவபிரான் பர்வதராஜன் முன்னின்றழைத்துப் போக இதர பரிவாரங்களோடும் விவாகவிகையைச் சேர்ந்தார். பிருமதேவரே புரோகிதராக முன் வந்து சப்த முனிவர்கள் முதலானவருடன் சதுஷ்கோணமான திருக்கல்யாண மண்டபத்திலிருந்து அத்யா திப்ரயோகம் முதலான விவாகச் சடங்குகளை நடத்தினர். பர்வதராஜனும் ராணிமேனையும் நீராடி ஆடை ஆபரண அலங்காரங்களோடு வந்தார்கள். பர்வதராஜன் தன்னுடைய கோத்திர முறையை சாஸ்திர விதிப்படிக் கூறி சிவபெருமானுக்கு ஆவாஹநம் பாத்தியம் அர்க்கியம் பட்டாடை திலகம் மலர் மாலை பொன்னாரம் முதலானவற்றை வழங்கி வழிபட்டு வேதிகையில் மேனையுடன் அமர்ந்து அக்கினிப்பிரதிஷ்டா பனஞ்செய்தான், மங்கலப்பாடல்களைச் சுமங்கலிகள் பாட லக்ஷ்மியும் சரஸ்வதியும் பார்வதியின் தோழியராகி, பார்வதியை அந்தப் புரத்திலிருந்து கைலாகு கொடுத்து அழைத்து வந்து சிவபெருமான் அருகில் மணப்பெண்ணாக உட்கார வைத்தார்கள். பிருமதேவன் மந்திரோச்சாடனஞ் செய்ய, மேனை கரகநீர் வார்க்க ஹிமவான் சிவபெருமானுடையக் கமலப் பாதங்களை விளக்கி, அவ்வுதகத்தைத் தானும் தன் மனைவியுங் கிருதார்த்தர்களாகத் தங்கள் சிரமேற் புரோக்ஷித்துக் கொண்டும், சிறிது உட்கொண்டும் பின்பு சாக்ஷதோ தகதாரா பூர்வகமாய்ப் பார்வதியின் கையைப்பற்றிச் சிவபெருமான் திருக்கரத்தில் வைத்து என் குமாரத்தியான இப்பார்வதியைத் தேவரீருக்குச் சமர்ப்பித்தேன், என்று கன்னிகாதானம் செய்து கொடுத்தான்.

சிவபெருமான் பூரிப்படைந்து தம் திருக்கரத்தால் பார்வதியின் கழுத்தில் மாங்கல்யதாரணஞ் செய்தார். கல்யாண மண்டபத்தில் சூழ்ந்திருந்த முனிவர்கள் தேவர்கள் அனைவரும் ஆசிர்வதித்தார்கள். சுமங்கலிகள் அக்ஷதைகள் சமர்ப்பித்து வணங்கினார்கள் தேவர்கள் நறுமண கற்பக மலர்களைத் தூவ, தேவதுந்துபிகள் முழங்க, உலகங்ளெல்லாம் உற்சாகப் பரவசமடைந்தன. தம்பதிகளான பார்வதி-பரமசிவன் இருவரும் அக்கினிப் பிரதக்ஷிணம் செய்தார்கள். உமாதேவியின் திருவடியைச் சிவபெருமான் கரத்தால் தொட்டு எடுத்து வைக்க, பார்வதி அம்மிமிதித்தனள் அவர்களை நமஸ்கரித்துக் கொண்டே அவர்கள் எதிரே கற்புக்கரசி அருந்ததி வந்தாள். துருவனும் சப்த முனிவர்களும் எதிர்வந்தனர். அவர்கள் சிவபெருமானையும் பார்வதியையும் மீண்டும் சிங்காதனத்தில் வீற்று இருக்கச் செய்தார்கள். வேதாகமத் துதிகளைப்படி வேதோத்தமாக ஆசீர்வதித்தனர். பார்வதியையும் சிவபெருமானையும் நோக்கித் தாங்களே உலகத்திற்கு மாதாபிதாக்களாகப் பெற்ற நாங்களும் பெரும் புண்ணியத்தையடைந்தோம்! என்று புகழ்ந்தார்கள். கந்தர்வர் அப்ஸரசுகள் நிருத்தம் கானம் வாத்தியம் முழங்கி தானும் தனது வமிசமும் தனது இல்லறவாழ்வும் சிறப்பும் பயனும் அடைந்தது என்று பர்வதராஜன் கூறிப் பெரும் களிப்படைந்தான். அதன் பிறகு சிவபெருமானும் பார்வதியும், தாங்கள் வதூரவர் கோலம் கொண்டதையும் தம்மைப் பார்த்துப் பிறர் புகழவும் குலதேவதா பிரார்த்தனஞ் செய்து கங்கண விசர்ஜனம் முடித்து அங்கு வந்திருந்த சப்தமுனிவர்-சத்புருஷர் சகலகலா வித்யாதரர் தேவர் ஆகியோரை நோக்கி சிவபெருமான் கைகுவித்து வணங்கி அருள்பாலித்தார். ஹிமவானும் யாவரையும் பூஜித்தான் இப்பூஜாதானங்களைக் கண்டு பிரம விஷ்ணு முதலிய தேவர்கள் இது காறும் கண்டும் கேட்டும் இல்லாமையால், எதுவும் கூறமுடியாமல் அதோ முகமானார்கள். இப்படி அங்கு வந்திருந்த அனைவரும் மரியாதை பெற்று மனம் பூரித்திருந்தார்கள்.

சிவபெருமானாலும் ஹிமவானாலும் பூஜிக்கப்பட்ட தேவர்களும் முனிவர்களும் தாங்கள் நன்றாக கவுரவிக்கப்பட்டதை எண்ணி வெகுவாக உள்ளம் பூரித்திருக்கும்போது உங்கள் ஒத்துழைப்பாலும் வருகையாலும் என் பிறப்பு பிழைப்பு கிரகஸ்தாச்சிரமமும் யாவும் பயனடைந்தன என்று பர்வதராஜன் சொன்னான்.  அவனது மனைவியான மேனையோ, எனது குலம் பவித்தரமாயிற்று என் புத்திரியான பார்வதியால் நான் எல்லா புகழ்களையும் அடைந்தேன். இவளே எங்கள் புத்திரியாக எல்லா அவதரிக்காவிடில் சிவபெருமான் திருமால், பிரமதேவர், தேவர்கள், முனிவர்கள், யக்ஷர், கருடர் முதலிய யாவரும் இங்கு வரக் கூடுமோ? இவர்களைத்தான் நாங்கள் காணவும் கூடுமோ? நீங்கள் மகா புண்ணியர்களாகையால் நான் உங்களை முன்பு நிந்தித்துப் பேசிய நிந்தனைகளையெல்லாம் மன்னித்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதைக் கேட்டதும் தேவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்து, மேனா! நீ கிருதகிருத்தியை ஜகத்ரக்ஷகராகிய சிவபெருமானுக்குப் பார்வதியைக் கன்னிகாதானஞ் செய்த பயன் எவ்வளவு என்று நாங்கள் அளவிட்டுக் கூறுவோம்? பர்வதராஜனைப் பதியாய்ப்பெற்ற நீ பார்வதியை உன் குமாரத்தியாய் பெற்ற நீ அடைந்த புகழ், விவரிக்க முடியாததாகும் நீ எங்களை முதலில் நிந்தித்ததையெல்லாம் சுகமயமாக எண்ணுகின்றோம். உன் சுகம் பெருகட்டும்! உன் ஐஸ்வரியம் பெருகட்டும்! நாங்கள் வருகிறோம்! என்று பர்வதராஜனையும் மேனையையும் ஆசீர்வதித்து. அவர்களது நமஸ்காரத்தையும் பெற்று, புறப்பட்டார்கள்.

புதுமண தம்பதிகளாக சிவபெருமானும் பார்வதிதேவியும் தேவர்களும் புறப்பட்டு கைலையங்கிரியை நோக்கிச் சென்றார்கள். பர்வதராஜனும் மேனையும் கந்தமாதன பர்வதம் வரையில் சென்று வழிவிட்டுத் திரும்பினார்கள். அன்று முதல் பர்வதங்கள் கிருதார்த்தமாயின அரி, அயன், இந்திராதி தேவர்கள் மாமுனிவர்கள் முதலான அனைவரும் எல்லாவித வாத்தியங்களோடும் நிருத்தம் நாட்டியம் முதலிய திருவிழாக் கோலத்தோடும் திருக்கைலாச பர்வதத்தையடைந்து சிவபெருமானின் மாளிகையில் பார்வதியை கிருகப்பிரவேசஞ் செய்வித்து, சிவபெருமானே! பார்வதி தேவியுடன் சுகித்திருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்து அவரது திருவருளைப் பெற்று சிவகடாக்ஷமுற்று அவரிடம் விடைபெற்றுப் புறப்பட்டு, அந்த விவாகமகோற்சவமகிமை பெருமைகளைப் பற்றிக் குதூகலம் பொங்கப் பொங்கப் பேசிக்கொண்டே தங்கள் தங்கள் நகரத்தையடைந்தார்கள். தேவர்களுக்குண்டான ஆனந்தத்தையும் சிவபெருமான் அநுக்ரஹித்தையும் விவரிக்க வேண்டுமானால் நூறு ஆண்டுகளானாலும் விவரிக்க முடியாது ஆகையால் சிவஞானிகளே, நீங்கள் கேட்டதைத் தட்ட முடியாமல் என் நினைவிற்பட்டதைக் கூறினேன்! நைமிசாரண்ய வாசிகளே! அந்தத் திவ்விய மங்கள மூர்த்தியான சிவபெருமானின் திருமணக்கோல மஹோத்ஸவ சரிதத்தையோ அல்லது அதில் காணும் ஒரு ஸ்லோகத்தையோ அல்லது அந்த ஸ்லோகத்தின் பொருளையோ கேட்டவர்கள் சகல சம்பத்தும் பெற்று அறியாமை நீங்கி, மெய்ஞானமும் சகல சம்பத்தும் சகல ஐஸ்வரியங்களும் கன்னியாலாபமும் பூர்ணமாகப் பெற்று விளங்குவார்கள்-இவ்வாறு சூதமா முனிவர் சொன்னார்.

18. தாரகாசுரன் வதையும் திரிபுரத் தோற்றமும்

பார்வதி கல்யாண வைபவத்தைக் கேட்டுப் பரவசப்பட்டிருந்த நைமிசாரண்யவாசிகள் சூதபுராணிகரை நோக்கி, மகா ஞானியே! மாபெரும் புண்ணிய சீலரே! சிவபெருமான் பார்வதி தேவியாரை மணஞ்செய்த பிறகு புத்திரனைப் பெற்று, தாரகாசுரனை எப்படி வதைத்தார் என்பதையும் கேட்க வேண்டும். என்று நாங்கள் மிகவும் ஆவல் கொண்டிருப்பதால் அதையும் விபரமாகக் கூறியருள வேண்டும் என்று கேட்டார்கள் சூதமாமுனிவர் சொல்லத் தொடங்கினார்.

நைமிசாரணிய வாசிகளே உமையளான பார்வதிதேவி யாரைச் சிவபெருமான் திருமணஞ் செய்துகொண்ட பிறகு பார்வதிதேவியோடு அந்தப்புரமடைந்து வெகுகாலம் வரைக்கூடி மகிழ்ந்து லீலாவினோதங்கள் புரிந்து கொண்டேயிருந்தார்கள். தாரகாசுரனால் மிகவும் தொல்லைகளுக்குப் பாத்திரமாகித் தாரகாசுரவதத்திற்கு எப்போது சிவகுமாரன் உற்பத்தியாவானோ என்று ஏங்கி கிடந்த தேவர்களோ தங்கள் வேதனைகளுக்கு விமோசனம் தேடவேண்டி துடிதுடித்தார்கள். ஆனால் அந்தப் புரத்திலுள்ள தேவியோடு கூடி மகிழ்ந்து கொண்டேயிருக்கும் சிவபெருமானைக் கண்டு விண்ணப்பஞ்செய்ய சந்தர்ப்பம் வாய்க்காததைக் கருதிப் பெருத் துயரத்திலாழ்ந்தார்கள். அநேக வருஷங்கள் கழித்து தங்களைத் தாங்களே நிந்தனை செய்து கொண்டு தாரகாசுரனின் கொடுமைக்கு எப்படியும் ஒரு முடிவு கண்டாக வேண்டுமென்று தீவிர எண்ணங் கொண்டு, அக்கினி பகவானை அணுகி அக்கினி தேவனே! சிவபெருமான் பார்வதி தேவியாரை அணுகி தாரகனை சம்ஹாரம் செய்ய இன்னும் புத்திரோற்பத்தி செய்யவில்லையே நீர் எங்களிலும் சிறந்தவராதலால் எங்கள் கவலையைச் சிவபெருமானிடம் சொல்லி தாரகனை வதைக்க வழி செய்யும்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். தேவர்கள் வேண்டுகோளைத் தாமதப்படுத்த மனமில்லாத அக்கினித்தேவன் உடனே ஒரு புறா வடிவமெடுத்து சிவபெருமான் லீலா விநோதத்தில் மூழ்கியிருந்த அந்தப்புரத்தினுள் புகுந்து சென்றான்! அப்போது சர்வாந்தியாமியான சங்கரர் அந்த புறா வடிவத்தை கண்டு, யாரடா அவன் கபோதவடிவோடு வந்திருப்பவன்? என் வீரியத்தை இவனே தாங்கட்டும் என்று கூறி வீரியத்தை விட புறாவடிவிலிருந்த அக்கினி தேவன் அவ் வீரியத்தை வாயில் கவ்விக்கொண்டு பறந்து சென்றான். ஆனால் சிவனாரின் வீரிய வெப்பத்தைத் தொடர்ந்து தாங்கிப் பறக்க வலுவில்லாமல் போகவே கங்கா நதியில் விட்டு விட்டான். கங்காநதியும் அதைத் தாங்க முடியாமல் அதைத் தருப்பைப் புல்லில் விட்டது. அந்தருப்பைப் புல்லில் விடப்பட்ட வீரியத்திலிருந்து அதிசுந்தரத் தோற்றமாய் கண்டதும் சகல சுகங்களையும் கொடுக்கத் தக்க வன்மையும் உடையவராய்க் குமார ரூபத்தில் திருமுருகன் தோன்றினார். அப்போது நீராட வந்த ஆறு இராஜ கன்னியர்கள் அக்குழந்தையைக் கண்டு என் குழந்தை இது! என் குழந்தை இது என்று ஒவ்வொருவரும் கூறி, அக்குழந்தைக்குப் பால் கொடுத்தார்கள். அப்போது குமாரக்கடவுளான முருகப்பெருமான் ஆறுமுகத்தோடு ஆறு இராஜ கன்னியரிடமும் பால்பருகினார். இதனால் தான், முருகக் கடவுளுக்கு ஷாண்மாதுரன்(அறுவர் புதல்வன்) என்றும் ஆறுமுகன் என்றும் பெயர் வந்தது.

மதியோயம் மதீயஸ்ச வதந்த்யஸ்ச பரஸ்பரம்
ஸம்பாத்ய ஷண்முகா நீஹ பீதஸ்தந்யம் ஸ்வயம்தநா
ஷண்மாதுரஸ் ததாநாம ப்ரஸித்தந்து மஹாத்மந.

பார்வதி மைந்தன் அக்கினி புத்திரன், ஸ்கந்தன் கங்கா புத்திரன், சரவணபவன் ஷாண்மாதுரன் என்ற பலப்பலத் திருநாமங்களைக் காரணங்களோடு பெற்ற சுப்ரமணியரிடம் ஆறுகார்த்திகைப் பெண்களும் அதிக பாசம் கொண்டவர்களாய். அவரைப் புத்திரராகப் பாவித்து அருமையாக வளர்த்து வந்தார்கள். முருகன் தோன்றியதையும் அவர் கன்னியர் அறுவரால் போஷிக்கப்பட்டு வருவதையும் நாரத முனிவர் தேவர்களுக்கு அறிவித்தார். இந்தச் சங்கதியைக் கேட்டதால் சந்தோஷங்கொண்ட தேவர்கள் யாவரும் சிவபெருமானிடம் கட்டளையைப் பெற்று சுப்பிரமணியரையே தங்கள் சேனாதிபதியாகக் கொண்டு தாரகாசுரன் மீது படையெடுத்துச் சென்று போர் முரசு கொட்டி அவ்வசுரனின் தலைநகரான சோணிதபுரத்தையடைந்து பத்து தினங்களாகப் பயங்கர யுத்தஞ்செய்து குமாரக்கடவுளான ஸ்ரீசுப்ரமணியரால் தாரகாசுரனைக் கொன்று வெற்றி பெற்றார்கள். அப்போரிலிருந்த அசுர சேனையில் ஓடிப்போனவர் தவிர மற்றவர்கள் மடிந்தார்கள். சோணிதபுரத்து யுத்தம் தீயோரை வதைத்து-நல்லோரை வாழச்செய்து உலகத்திற் கெல்லாம் நலம் ஊட்டியது தேவர்களும் முனிவர்களும் தாரகாசுரனை வதைத்து ஜெயங்கொண்ட சுப்பிரமணியரோடு சிவ சன்னதியையடைந்து சிவபெருமானை வணங்கி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேவ தேவா! மகாதேவர் விஸ்வேஸ்வரா! பராத்பரா! பரா! வரதா, பவா புவனா அநந்த பாலா பூதநாதா சம்ஹர்த்தா கங்காதரா திரியம்பகா திரிசூலதாரி கபர்த்தி, பரமாத்மா தண்டதரா, வேதமந்திர பிரதாநா சிருஷ்டி ஸ்திதி சங்கார நாதா! அரூபா, ஸ்வரூபா நீலகண்டா விபூதிதாரி சகல பூதா பர்வதங்களில் மேருவே நக்ஷத்திரங்களில் சந்திரனே மகரிஷிகளில் வசிஷ்டரே! சகலவேதங்களிலும் ஓங்கார ரூபரே! ஸ்வாமி! சம்சார பந்த துக்கத்திலிருக்கும் எங்களைக் கரையேற்றிக் காப்பவர் நீரே மஹாப்பிரபு! தங்களுக்கு நாங்கள் சேவை செய்ய வேண்டிய சேவை எதுவும் உண்டோ உம் கட்டளை எதுவோ? என்று வேண்டி நின்றார்கள். அவர்களின் துதி மந்திரங்களைக் கேட்டு மகேஸ்வரர் மகிழ்ந்து. அமரர்களே! அருமுனிவர்களே! உங்களுக்கு எந்தத் தருணத்தில் துன்பம் வந்தாலும் அத்தருணமே அதைத் துடைத்து உங்களைக் காப்போம் நீங்கள் எப்பொழுதும் எம்மை நினைத்து வணங்கி வாருங்கள் என்று கருணைக் கனிவோடு கண்ணோக்கு செலுத்தினார். அனைவரும் அப்படியே செய்கிறோம் என்று கூறி, அவரைப் பணிந்து விடை பெற்றுச் சென்று அவரவர் இருப்பிடஞ் சேர்ந்து எவ்விதமனக் குறையுமின்றி எப்போதும் சிவபூஜை செய்து கொண்டு வாழ்ந்திருந்தார்கள் இவ்வாறு சூதமா முனிவர் சொன்னார்.

நைமிசாரண்ய வாசிகளாகிய முனிவர்கள் சூதரே! பூஜ்யரே தாரகாசுர வதை நடந்த பிறகு, நிகழ்ந்த சம்பவங்களையும் எங்களுக்கு விவரித்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். சூதமாமுனிவரும் உற்சாகத்தோடு சொல்லத் தொடங்கினார். தாரன் பெற்ற குமாரனாகிய தாரகாசுரனை முருகக் கடவுள் போர் முனையில் கொன்றொழித்த பிறகு, தாரகன் புதல்வர்களாகிய வித்யுன் மாலி, தாரகாக்ஷன் கமலாக்ஷன், ஆகிய மூவரும் கடுந்தவம் புரியத் தொடங்கினார்கள். ஒற்றைக் காலில் நின்று ஒரு நூறு வருஷங்களும் பூமியிலிருந்து ஒரு நூறு காற்றையே உணவாக உட்கொண்டு பற்பலவருஷங்களும் அதிக தாபமுண்டாகப் பல வருடங்களும் தலை கீழாக நின்று ஆயிர வருடங்களும், கைகளை மேலுயர்த்தி நூறு வருடங்களும், துயரமயமான தவத்தை அநேக வருஷங்களுமாக இப்படிப் பல வகையான தவங்களை பிரமதேவனே குறித்துச் செய்தார்கள். தவஞ் செய்வோர் தாரனின் புதல்வர்களானாலும், அவர்கள் அசுரவழி வந்தக் கொடியவர்களானாலும் அவர்கள் செய்கிற தவம் பெரும் மகிமை வாய்ந்ததால் அத்தவாக்கினியின் ஜ்வாலையால் உலகம் அழியக் கூடுமாதலால் அவர்களுக்கு பிரமதேவன் காட்சியளித்து நீங்கள் இம்மாதவம் புரிவது எதற்கோ? உங்களுக்கு வேண்டிய வரம் என்னவோ? என்று கேட்டார். அதற்கு அவ்வசுரர்கள் சிருஷ்டிகாத்தாவே! நாங்கள் சர்வபிராணிகளிலும் ஒருவராலும் இறவாவரம் அளிக்க வேண்டும்! என்று கேட்டார்கள். அதற்கு பிரமதேவர் அவர்களுக்கு விடையளிக்க தவத்தர்களே! நீங்கள் கேட்கும் இந்த வரத்தை நாம் அளிப்பதற்கில்லை. ஏனென்றால் நீங்கள் எப்பொழுதும் இறவாமல் நித்தியமாயிருக்க யோகமில்லை. ஆதலால் உங்களுக்கு யோக பிராப்தம் கொண்ட வேறு வரங்களைக் கேட்டால், அவற்றைத் தந்தருள நாம் சித்தமாயிருக்கிறோம் என்று கூறினார். உடனே அவ்வசுரர் மூவரும் சதுர்முகரே! நாங்கள் எண்ணியவிடத்திற்குப் போகவும் சஞ்சாரம் செய்யவும் பொன் வெள்ளி-இரும்புகளாலாகிய மூன்று பறக்கும் பட்டணங்கள் வேண்டும், அவை ஆயிர வருடத்திற்குகொரு முறை ஒன்று சேர வேண்டும். அம் மூன்று பட்டணங்களும் ஒன்று கூடியிருக்கும் அந்தச் சமயத்தில் ஒரே பாணத்தால் அவற்றின் முப்புரங்களையும் அழிக்கவல்ல எவனாவது இருந்தால் அவனால் மட்டுமே நாங்கள் மாண்டு மடிவோம் என்று வரந்தரவேண்டும் என்று கேட்டார்கள். அதற்குப் பிரமதேவன் நீங்கள் கோரிய வரத்தை தந்தருளினோம் என்று கூறிவிட்டுத் திரிபுரக் கோட்டைகளை நிருமாணித்துக் கொடுக்க மயன் என்னும் தச்சனைக்கண்டு பொன், வெள்ளி, இரும்பகளாலாகிய மூன்று பட்டணங்களை நிருமித்து தாரகாசுர புதல்வர்களுக்குத் தந்தருளும்படி கட்டளையிட்டு மறைந்தார். அப்படியே அந்த மயனும் முப்புர பட்டணங்களை நிர்மாணித்து பொன் பட்டணத்தைத் தாரகாக்ஷனனுக்கு வெள்ளிப் பட்டணத்தைக் கமலாக்ஷனனுக்கும், இரும்பு நகரத்தை வித்யுன் மாலிக்கும் கொடுத்தான். அவைகளில் பொன் பட்டணமானக் காஞ்சனபுரியைச் சுவர்க்கத்திலும் இரசிதபுரியை மத்தியத்திலும் ஆயசபுரியைப் பூமியிலும் சஞ்சரிக்கத் தக்கதான யந்திர சூத்திரம் செய்து வைத்து பட்டணம் ஒன்று ஓர் யோசனை விஸ்தீரணமுடையதாகச் செய்து கொடுத்த அந்த மயனுக்கு மூன்று அசுரரும் பற்பல விதமான பொருட்களை பரிசளித்து வெகு மரியாதை செய்து வழி யனுப்பினார்கள். பிறகு அவரவரும் பறக்கும் திரிபுரங்களில் தம்தம் பட்டணங்களைச் சேர்ந்தார்கள். யானை, தேர், குதிரை, முதலிய சேனைகள், கற்பகவிருக்ஷம், நந்தவனம், மேடை சந்திர சாலை சித்திரத்தொழில்கள், சூரிய மண்டலம் போன்ற விமானங்கள் பதுமராக மணிகளாலாகிய விமானங்கள் கைலாச சிகரம் போன்ற விமானங்கள். அநேக சாரணர் சித்தர் முதலியோர் வசிக்கும் இடங்கள் சிவாலயங்கள், தடாகங்கள் கிணறுகள், பல்லக்குகள் கச்சேரி சாவடிகள் வேதாந்தியன் சாலைகள் முதலியனவற்றை உருவாக்கி பதிவிரதைகளான மனைவிகளோடு அசுர குடும்பங்கள் குடியிருந்து சிரவுத முதலிய நித்ய கருமங்கள் விடாமல் தொடர்ந்து நடத்தி வரும் பட்டணத்தில் குடியேறி, எப்போதும் கண்டிராத சிறப்புடன் விளங்குவதைக் கருதி மனமகிழ்வுற்றிருந்தார்கள் அங்கிருந்த அசுரக் கூட்டத்தில் பலவகைப்பட்டவர்கள் இருந்தார்கள். கோபிகள் சிலர் சாந்தவான்கள் சிலர் குட்டையர் நெட்டையர் சமரதர் அதிரதர் அர்த்தரதர் மாதாரதர், சிவபூஐõவான்கள் பிரம நிஷ்டாபரர்கள் பலவரங்கள் பெற்றவர் சூரியன் வாயு இந்திரன் முதலிய தேவர்களுக்குச் சமானவளமையாற்றல் கொண்டவர்களாகச் சிலரும் விளங்கினார்கள். அந்தத் திரிபுரங்கள் அசுரர்களேயானாலும் வேத சாஸ்திரங்களும் அவர்களது மூன்று புரங்களிலும் பூரணமாக விளங்கின. அப் பட்டணங்களின் பிரகாசத்தின்முன் தேவர்கள் கூட எதிர் தோன்றி நிற்கமாட்டார்தவர்களாக இருந்தார்கள். இதனால் தேவர்களும் முனிவர்களும் வெட்கி மனம் கூசினார்கள். திரிபுரமான அப்பட்டணங்கள் அவ்வசுரர்கள் கேட்டவரத்தின்படி அவர்கள் எண்ணியோதெல்லாம் இடம் விட்டுப் பெயர்ந்து போய் இடம் சேரும் சக்தி பெற்றவைகளாதலால், அப்படி அவை இடப்பெயர்ச்சி கொள்ளும்போது பலகோடி ஜீவராசிகளும் மாண்டு மடிந்தன. அதைக்கண்டு அப்பட்டணங்களின் சிறப்பினை வியந்து ஆச்சரியமும் அவைகளைத் தங்களால் ஒன்றும் செய்ய முடியாததால் ஆத்திரத் துயரமும் கொண்ட தேவர்களும் மகரிஷிகளும் மனம் சகியாமல் சிருஷ்டி கர்த்தாவான பிரம தேவர் அணுகிச் சென்று தங்கள் மனக்கவலையை முறையிட்டுக் கொண்டார்கள்.

19. திரிபுர சம்ஹார ஆலோசனை

தேவர்கள் முறையிட்டதை கேட்ட பிரமதேவர் தேவர்களே! என்னால் வரமளிக்கப்பட்ட அவ்வசுரர்களை நானே வதைத்து அழிப்பது முறைமையல்ல. அவர்களை நீங்களே வென்று அழிப்பது தான் சிறந்தது. அதற்கு வேண்டிய உபாயங்களையோ யுத்தியையோ வேண்டுமானால் நானே சொல்லித் தருகிறேன். அது வேறொன்றும் விசித்திரமானதில்லை சாட்சாத் சிவபெருமானிடம் நீங்கள் அனைவருமே சென்று முறையிட்டுக் கொள்வதைத் தவிர வேறு உபாயமில்லை அக்கருணாநிதியிடம் அபயம் கேட்டால் அவர் இல்லை என்று புறக்கணிக்கப் போவதுமில்லை. உங்கள் குறை தீர்க்க அவர்தான் முயற்சியெடுப்பார் ஆகவே அவரிடமே செல்லுங்கள் என்று கூறி அகன்றார்.

அதுவே சரியெனக் கருதிய தேவர்களும் நந்திக்கொடியுடைய சிவபெருமானிடம் விரைந்து சென்று விண்ணப்பித்தார்கள், சிவபெருமான் அவர்களை நோக்கி தேவர்களே! திரிபுரங்களை ஆட்சி செலுத்துகிற அவ்வசுரர்கள் புண்ணிய சீலர்களாதலால் அவர்களையாம் சங்காரம் செய்தல் கூடாது. அவர்கள் புண்ணியர்களாய் விளங்கும் வரையிலும் விபத்துக்கள் அவர்களை தீண்ட முடியாது. ஆகையால் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகா மாயாவியான மகாவிஷ்ணுவிடம் சென்று என்கட்டளையைக் கூறி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். தேவர்களும் அவரிடம் விடைபெற்றுத் திருமாலிடஞ் சென்று முறையிட்டார்கள். தேவர்களின் துயர்கேட்டுத் திருமாலோ வானவர்களே நீங்கள் துயரப்படுவதும் உண்மை தான். ஆனால் நீங்கள் கேட்கும் திரிரபுர சம்ஹாரம் சாத்தியப்படக் கூடுமோ? அத்திரிபுராதிகள் அசுரர்களாயினும் பாபிகள் அல்லவே! தருமம் மிகுந்த புண்ணியசீலர்களாயிற்றே, அவர்களைச் சங்கரிக்க நியாயம் ஏது? தருமம் இருக்குமிடத்தில் அதர்மம் புகமுடியுமா? சூரிய சன்னதியில் இருள் உண்டாகக் கூடுமோ? என்றெல்லாம் சொன்னார். அதைக் கேட்ட தேவர்கள் மிகவும் துயருற்று தலைவணங்கி பரமாத்மாவே! எங்களுக்கு வேறுவழியில்லை நாங்கள் என்ன செய்வோம்? அவ்வசுரர்கள் இருப்பதால் எங்கள் தருமங்கள் விருத்தியடையவில்லை ஒன்று அவர்கள் வாழ வேண்டுமென்று எங்களை அகாலப் பிரளயஞ் செய்து விடுங்கள். அல்லது அவர்களையாவது நாங்கள் வென்றிட வழி செய்யுங்கள் என்று மிகப் பக்திச் சிரத்தையோடு வேண்டினார்கள். திருமாலோ தீவிரமாக யோசித்துவிட்டு தேவர்களே! யச்சுதாரித்தால் சிவபெருமானைப் பூஜித்தால், உங்கள் இஷ்டசித்திகள் கைகூடுமாதலின் நீங்களும் யாகங்கள் செய்தால் திரிபுரங்கள் நாசமாகும்! என்று சொன்னார் தேவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து மனத்திடமும் தெம்பும் பெற்றார்கள் அப்போது திருமால் மேலும் சொல்லலானார்.

திரிபுர அசுரர்கள் மூவரும் மந்திரமஹிமையாலேயே இறக்கவேண்டும். ஆதலால் அதற்குச் சிவனாரின் தயவுவேண்டும் அது இல்லாமல் அவ்வசுரர்களை வதம் செய்ய நானோ, பிரமனோ தைத்தியர்களோ சக்தியற்றவர்களாகி விடுவோம். சிவபெருமானே அவரவர் இஷ்ட சித்திகளை நிறைவேற்றுபவர் தேவர்கள் கூட அவரைப் பூஜித்ததால் தான் வல்லமைகளைப் பெற்றனர், அவ்வளவு ஏன்? பிரமனும் சரி, நானும் சரி, சிவபெருமானைப் பூஜித்ததால் தான் படைக்கும் ஆற்றலைப் பிரமனும் காக்கும் ஆற்றலை நானும் பெற்றோம். ஆகையால் நீங்கள் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறி அவர்களுக்குச் சிவ மூலமந்திரத்தையும் உபதேசித்துக் கந்த புஷ்ப தூபதீப நைவேத்தியங்களால் இலக்ஷ லிங்கார்ச்சனை செய்வித்தார். அப் பூஜையின் முடிவில், கோரப்பல்-சூலம்-வேல்-கதை-பாணம் எறிகல் ஆகிய ஆயுதங்களையேந்திக் காலாக்நி ருத்ரன் போலவும் பிரளயகால சூரியன் போலவும் காந்தி மிக்க பற்பல பூதங்கள். தோன்றித்தேவர்களை வணங்கி எதிர் நின்றன விஷ்ணுமூர்த்தி அப்பூதங்களை நோக்கி நீங்கள் முப்புரங்களையும் கொளுத்தி இடித்துப் பொடிசூரணமாக்கிச் செல்லுங்கள் என்று பணித்தார். ஆனாலும் அவர் மனம் சலனமுற்றது அவர் சிவபெருமானைத் தனியே துதித்து நமஸ்கரித்து நான் இவர்களிடம் இப்படி ஏன் கட்டளையிட்டேன்; அசுரத் திரிபுராதிகளிடம் புண்ணியமும் தருமமும் பூரணமாய் விளங்கும்போது, அவர்களைச் சங்கரிக்கக் கூடுமோ? இப்பொழுதோ அவ்வசுரர்கள் ஒருவராலுஞ் சாகாவரம் பெற்றிருக்கிறார்களே! பாபிகளாயினும் சிவார்ச்சனை செய்தால் தாமரை இலையில் தண்ணீர் சேராதது போல அவர்களை விட்டுப் பாவங்கள் விலகுமாதலால் என்ன செய்வது? என்று யோசிக்கலானார் திரிபுராதிகள் சிவபூஜையை மறக்க நமது மாயா சக்தியால் ஏதாவது செய்ய வேண்டும் வேத தருமங்களும் சிவபூஜையும் தூய நடத்தையும் உள்ளவரையிலும். அவ்வசுரர்கள் அழிய மாட்டார்கள். அதற்குள்ள உபாயத்தைச் சிந்திக்க வேண்டும் என்று மாயோன் நினைத்துதேவர்களை விடை கொடுத்தனுப்பி விட்டு. ஏகாந்தமாகி இரகசிய சிந்தனையில் மூழ்கினார்.

20. மாயரூபி செய்த புறச்சமய உபதேசம்

விஷ்ணு மூர்த்தி தன்னிடமிருந்தே மாயாஸ்வரூபமான ஒரு புருஷனைத் தர்மவிக்நத்தை முன்னிட்டு உண்டாக்கினார். அப்புருஷன் மொட்டைத்தலையும் மலினவுடையும் மரத்தால் செய்த குண்டிகையும் மயில்தோகையால் செய்யப்பட்ட குஞ்சமும் ஒரு கையில் ஆடையும் தர்மாயென்னுஞ் சொல்லுமுடையவனாய், விஷ்ணுவைக் கைகுவித்துப் பணிந்து கட்டளைக்காகக் காத்து நின்றான். அவனைப்பார்த்து திருமால் நீ என்னுடலினின்றுதோன்றியதால் என் கட்டளைப்படி நடக்ககடவாய் மாயாமயமான சிரவுதாசார ஸ்மார்த்தாசார விருத்தமானதும் வருணாஸ்ரமமில்லாததும், இவ்வுலகத்திலேயே சுவர்க்க நரகங்கள் உள்ளன வென்பதும் வேதம் பொய் என்றும் சாஸ்திரங்கள் கர்மவாத மென்பதுமாய் உள்ள அக்கிரந்தங்களை நீ என்னிடமே கற்றுத் தேர்ந்து விரிவு படுத்த வேண்டிய ஆற்றலையும் என்னிடமே பெற்றுபல விதமாயைகளையும் என்னிடமிருந்தே சுவாதீனமாக அடைவாய் தோன்றுதல் மறைதல் வசியம்-அவசியம் சிநேகம்-விரோதம் முதலிய விசித்திர வித்தைகள் யாவும் உனக்குக் கைகூடும் என்று கூறி அவற்றை அவனுக்குக் கற்பித்து நீ திரிபுரம் சென்று அவ்வசுரர்களை உன் மாயா வித்தையால் மயக்கி அவர்களுக்கு இந்த சாஸ்திரத்தைக் கற்பித்து, அவர்களிடமிருந்து சிரவுதஸ்மார்த்த ஆசாரங்களை உன் வலிமையால் விக்கிதிரிபுரம் நாசமாகும்படி செய்ய வேண்டும் என்று பணித்து அம்மாயா புருஷனை அனுப்பி வைக்கலானார் அவ்விசுரர்கள் உன்னிடம் வசப்பட்டு நீ சொல்லும் சாஸ்திரத்தை மோகித்தபிறகு உவர் நிலத்தையடைந்து கலியுகம் வரும்வரையில் இருந்து, கலியுகம் வந்த பிறகு உன் சிஷ்யர்களுக்கும் பிறசிஷ்யர்களுக்கும் இக்கிரந்த சாஸ்திரங்களைப் போதித்து இவைகளை விருத்தி செய்யக்கடவாய் இதை நீ செய்வதால் நீயும் என் பதவியை அடைவாய் என்று ஆசிர்வதிக்கவே மாயாரூபியானவன் நான்கு சிஷ்யர்களைப் படைத்து அவர்களுக்கு இவ்விதத்தையை படிப்பித்து பண்டிதர்களாக்கி, விஷ்ணு சமூகத்திடம் வந்து நால்வரூமாக வணங்கினார்கள். மகிழ்வுற்ற மகாவிஷ்ணு நீங்கள் நால்வரும் உங்கள் குருவைப் போலவே வித்தை பயின்று விளங்குவீர்களாக! என்று ஆசிர்வதிக்க அந்நால்வரும் நமக்கு கிடப்பதெல்லாம் தர்மமே என்று சொல்லிக் கொண்டு சந்தைகளை கட்டிய பிராணி நிவாரண குச்சிகளைக் கையிலேந்தி விஷ்ணுவைப் பணிய அவர்களின் கையில் ஒப்புவித்து இவர்களை உன் போலவே நினைத்து காப்பாற்று என்று கூறி உங்களுக்கு பூஜ்யன் ருஷி பதி ஆசார்யன், உபாத்தியாயன் என்னும் இப்பெயர்கள் விளங்கிப் பரவுவதுடன் (ஆரிஹந்) சத்துருவைச் செபிப்பவன் என்னும் என் பெயரும் கூட உனக்கு உண்டாகுக! என்று ஆசிர்வதித்தார்.

நீங்கள் இப்பெயர்களை உச்சரித்து கொண்டிருங்கள் என்று அவர் கூறியதும் மாயாரூபி நமஸ்கரித்து விடை பெற்று நால்வரையுமுடன் கொண்டு திரிபுரத்திற்கருகில் ஒரு வனத்திலிருந்து மாயையுடையவர்களையும் மயக்கும் மாயை செய்யத் தக்கதான வினோத வித்தைகள் செய்து கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டவர்கள் அம்மதத்தில் போதனை பெற்று அம்மகத்தில் பற்றுக் கொண்டிருந்தார்கள் மாயைக் கண்டோர் மதிமயங்கினார்கள் இப்படி மாயை செய்து வந்த மாயாரூபியின் வித்தைகள் விஸ்தாரமாகிக் கொண்டிருக்கும்போது நாரத மகரிஷி விஷ்ணு மூர்த்தியையடைய விஷ்ணு அவரையும் இந்த ஐவரோடு சேர்ந்துக் கொள்ளும்படிச் சொன்னார் அதனால் மாயாரூபியும் அவர் சிஷ்யர்கள் நால்வரும் அவருடன் நாரதம் ஆக அறுவராக அவர் அசுரர்களின் பட்டணத்தில் பிரவேசித்தார்கள் நாரதர் முதலில் வித்யுன்மாலியைக் கண்டு இவர் மகா புத்திமான் தருமத்தைக் கருமமாகக் கருதுகிறவர். இவரிடம் அநேக தர்மங்கள் உள்ளன. இவருக்குச் சமமானவர் யாருமில்லை நானும் இவர் சிஷ்யனாகி உபதேசம் பெற்றேன். நீயும் இவரிடம் மந்திரோபதேசம் பெற்றுக்கொள்! என்று கூறினார். வித்யுன்மாலி நாரதரை நோக்கி மகா புண்ணியரான தாங்களே உபதேசம் பெற்றுள்ளபோது நானும் பெறுவதுதான் தருமம்! என்று கூறி மாயாரூபியை வணங்கி மகானுபாவரே! நீர் எனக்கு திøக்ஷ செய்யவேண்டும்! என்று வேண்டி நின்றார் மாயாரூபியோ வித்யுன்மாலியை நோக்கி அரசனே! நான் சொல்வதைத் தடையின்றி செய்யவேண்டும்! என்று சொல்வதற்கு முன்னரே அவ்வித்யுன்மாலி தங்கள் கட்டளைப்படியே நான் நடப்பேன்! என்றான் உடனே மாயாரூபி தன் வாயை மறைத்துக் கட்டிக் கொண்டிருந்த வெள்ளைத் துணியை நீக்கி, என் உபதேச மந்திரத்தையடைக! என்று சிவ தருமங்கள் நசிக்கத் தக்கதான சிலவகை மந்திரங்களை உபதேசித்து தீøக்ஷ செய்வித்து உன் பட்டணத்தார் அனைவரும் தீக்ஷõதாரராக மேற்கொண்ட அவ்வரசனும் தன் பிரஜைகளைத் தான் தீøக்ஷ பெற்றது போல் அவர்களும் பெறவேண்டும் என்று கட்டளையிட்டான். இதனால் மாயாரூபியின் சிஷ்யப் பிரஷ்யர்கள் நகர முழுதும் தீøக்ஷ செய்வித்து சமணமதத்தை பரப்பினார்கள்.

21. திரிபுராதியர் வஞ்சிக்கப்பட்ட கதை

மாயாரூபியானவன் திரிபுரம் முழுதும் சிவமதத்திற்குப் புறம்பான தன் கொள்கைகளைப் பரவிச் செய்து பதிவிரதத் தன்மை முதலிய மாதர் அறநெறிகள் சிரார்த்த கருமங்கள் சிவபூஜை யாகங்கள், தானங்கள், தீர்த்த தரிசனங்கள், வைதீக கர்மங்கள் ஆகியவற்றால் யாதொரு பயனுமில்லை என்று உபதேசித்தான் இதனால் அந்நகரவாசிகள் அவ்வாறே அவற்றை விட்டு ஒழித்தனர் விஷ்ணுவின் கட்டளையை ஏற்று அந்த மாயாரூபி அந்த நகரத்தையடைந்தவுடன் அந்த மாயையோடு மூதேவியும் அப்பட்டணத்தில் குடியேறி விட்டாள் திரிபுரசூரர்கள் தவஞ்செய்து அடைந்த ஐஸ்வரியலக்ஷ்மி பிரமதேவரின் கட்டளைப்படி இனி அங்கிருக்க ஒண்ணாது விலகினாள்.

மாயாஜாலனாகிய ஜைனனும் நாரதரும் அந்நகத்தாரையெல்லாம் மாயையால் மயக்கினார்கள் அசுரகுல மக்கள் நற்செயல்கள் விட்டு விட்டார்கள். அதைக் கண்டதும் திருமால் இனிக் காரிய சித்தியாகி விடும் என்று உள்ளூர மகிழ்ந்து சிவபெருமானிடம் சென்று மஹாதேவா! பரமாத்ம ஸ்வரூபா! நாராயணாயா! சம்சாரதுக்க நாசத்தைப் பிரமஞான உபதேசித்தால் போக்குபவரே! பிரமானந்த ஸ்வரூபரே உமக்கு நமஸ்காரம்! என்று வழிபட்டு தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை ஜலத்திலிருந்து மூன்றரைகோடி உரு ஜபித்துக் கொண்டிருந்தார் அப்போது தேவர்கள் அனைவருக்கும் சிவபெருமானைத் தியானித்து, சர்வ ஸ்வரூபா! மங்களதரா! பாபரஹிதா! நித்யா! நீலகண்டா! நாமரூபக்கிரியா ரஹிதா! ஜலஸ்வரூபா! நமஸ்காரம் நமஸ்காரம் துக்கம் அடையும் போது முறையிடக் கட்டளையிட்ட தேவரீரே எங்களுக்கு உற்றதுணை, உம்மை பூஜித்தாலொழிய எங்கள் துக்கங்கள் ஒழியா பிரகிருதி புருஷர்களுக்கு ஆதியானவரே ஜகத்குருவே ஜகத்துக்களை ரட்சிப்பவரே வேதங்கள் உம்மையே பரம த்மனாகக் கூறுகின்றன. அணுவுக்கு அணுவும் மகத்துக்கு மகத் மாய் உள்ளவர் நீரே! விசுவரூபியானவரே ஆயினும் ஒன்றிலும் அகப்படாதவரே! கோடிசூர்ய பிரகாசரே! சுவயம்புவே நீரே. இந்தத் திரிபுர அசுரர்களை சங்கரித்து, எங்களை ரட்சிக்க வேண்டும் என்று துதித்தார்கள்.

அப்போது சிவபெருமான், விஷ்ணுமூர்த்தி செய்த ஜெபத்திற்கும் தேவர்கள் செய்த தோத்திரத்திற்கும் மகிழ்ந்து அப்போதே பிரசன்னமாய் திருமாலை ஆலிங்கனஞ் செய்து கொண்டு, அவர்களைப் பார்த்து தேவர்களே விஷ்ணுவினால் செய்யப்பட்ட மாய உபாயமும் நாரதர் உடன்பாடும் எனக்குத் தெரியும் தர்மசூனியர்களாக மாறியிருக்கும் அத்திரிரபுர அசுரர்களின் திரிபுரங்களையும் இனி சம்ஹாரம் செய்வேன் என்று கூறி அந்தர்தானமானார் அவர் கூறியதைக் கேட்டதும் நாராயணன், நான்முகன், இந்திரன் முதலிய வானவர்கள் யாவரும் தங்கள் கைகளைத் தலைமேல் குவித்துக் கும்பிட்டு மகிழ்ந்தார்கள் இந்தச் சரித்தைக் கேட்டனர். சொன்னோர் எழுதியோர் முதலியவர்கள் சகலமான இஷ்ட காரியங்களையும் அடைவார்கள்.

22. போருக்குப் புதுமையான ரதம்

தேவர்கள், தத்தமது புத்திரர்களுடன் சிவபெருமானின் திருச்சன்னதிக்குச் சென்று, இனி நாம் என்ன செய்யலாம்? எங்கு போகலாம்? இன்னும் என்ன நடக்கப் போகிறதோ? என்று சிலரும் நாம் பாவிகள் என்று வேறு சிலரும் தைத்தியர்களே பாக்கியசாலிகள் என்று சிலரும் சொல்லி தம்மைத்தாமே பழித்துரைத்துக் கொண்டு மீண்டும் சிவசன்னதிக்குள் புகுந்தார்கள். அதுவரை அத்தேவர்கள் கூறியவற்றையெல்லாம் கேட்டிருந்த குபோதரன் அவர்கள் இரைச்சலைச் சகிக்காமல் தன் கையில் இருந்த தண்டாயுதத்தால் தேவர்கள் அடித்தான். அதனால் அமரர் யாவரும் அச்சங் கொண்டு ஓடினார்கள் பிறகு இமையவர் யாவரும் முனிவர்கள் முதலிய புண்ணியருக்கும் இத்தகைய விபத்து விளைந்தது தெய்வபலமா என்று அருகிலிருந்த விஷ்ணுவைக் கேட்டார்கள். அதற்குப் பரந்தாமர் அத்தேவர்கள் நோக்கி உங்களுக்கு ஏன் இத்தகைய துக்கம் வந்தது? இத்துன்பத்தை அறவே ஒழியுங்கள் பயன்கள் யாவையும் ஒருங்கே தரத்தக்க சிவ பூஜையை நீங்கள் செய்வீர்களேயானால் உங்களுக்குக் கிடைக்காதது ஏதாவது உண்டோ? சகல கணங்களுக்கும்  தலைவராகிய சங்கரர் தயையுடையவராவதற்கான வகையைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

தேவர்களே, நீங்கள் முதலில் பிரணவத்தை உச்சரித்து நம: என்பதைப் பிறகு கூறி சிவாய என்பதை இறுதியில் சுபம் சுபம் குரு குரு என்றும் மேல் சிவாய என்றும் நம என்றும் மீண்டும் ப்ரணவம் சேர்த்து சிவகடாக்ஷம் கிடைக்கும் வரையிலும் ஜெபிக்க வேண்டும் இந்த மந்திரத்தைக் கோடி முறை ஜெப்பித்தால் சிவபெருமான் கிருபையோடு இஷ்டப்பட்டக் காரியங்களை அனுகூலமாக்குவார் என்று உபதேசித்தார் பிறகு தேவர்கள் யாவரும் அந்தரங்கமான ஓர் இடம் சென்று அடைந்து சிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டே மந்திரஜபம் செய்தார்கள். இதுபோலக் கோடிமுறைகள் அந்த மந்திரத்தை ஜெபித்த பிறகு சிவபெருமான் கிருபையுடன் தோன்றி. உங்கள் மனோபீஷ்டத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டார். அப்போது தேவர்கள் வரங்கள் அனைத்தையும் கொடுப்பவரான சிவபெருமான் பின்வருமாறு துதிக்கலானார்கள் சகல உலகங்களுக்குச் சுகங்களை அளிக்கும் சுவாமி! பரமாத்மரூபி உலக ரக்ஷணயத்துக்காகச் சூலத்தை தரித்தவரே! உயர்வும் இழிவும் இல்லாதவரே பிரமத கணங்களுக்கு இறைவரே, கபர்த்தி முக்கிருதிக்குக் காரணரே, சர்வ வியாபியே நமஸ்காரம் என்று துதித்து தேவர்கள் அவர் முன்பு கைகட்டி வாய்பொத்தி நின்று எங்கள் விஷயத்தில் கிருபையுடையவராக இருந்தால் திரிபுரங்களை அழிக்கவேண்டும் என்று வேண்டினார்கள் அதனால் சிவபெருமான் விசுவகர்மனை அழைத்து, இரதம், தனுசு, பாணங்கள் ஆகியவற்றை உறுதியுள்ளனவாகச் சித்தஞ்செய் அப்படிச் செய்தால் திரிபுரங்கள் சீக்கிரமே அழிந்து விட்டதாகவே கருதலாம் என்று உத்தரவிட்டார் உடனே, விசுவகர்மன் பிரபஞ்சத்தைக் காக்கும் பொருட்டு சர்வதேவ தேஜோமய திவ்விய மங்கள ஸ்வரூபமான இரதம் ஒன்றைச் செய்து முடித்தான்.

23. திரிபுர தகனம்

சூதமாமுனிவர் மேலும் தொடர்ந்து சொல்லலானார். முனிவர்களே பதினான்கு உலகமயமான திவ்யரதத்தை மிக முயன்று தேவதேவனான மஹாதேவனுக்கு விசுவகர்மன் செய்து முடித்தான், சர்வ பூதமயமாயும் பொன்னால் செய்யப் பட்டதும் வலதுபுரம் சூரியனையும் இடதுபுறம் சந்திரனையும் சக்கரங்களாகக் கொண்டதும் நட்சத்திரங்கள் எல்லாம் வாமபாரிச சக்கரத்திற்கு அலங்காரஞ் செய்யப்பட்டதாயும் ருதுக்கள் ஆறும் கால நிரூபணத்துக்காக இரு சக்கரங்களில் இருக்கத் தக்கதாகவும் ஆகாயமே கொடுமுடியாகவும் மந்திரகிரியே ரதநீடம் ஆகவும் அஸ்தகிரியும் இருசுகள் ஆகவும் வர்ஷங்கள் வேகமாகவும், உத்தராயண தக்ஷணாயனங்கள் ரதஞ் செல்லும் வழியாகவும் சப்தசமுத்திரங்கள் அலங்காரமாகவும் கங்கை முதலிய நதி நங்கையர் சகல ஆபரண பூஷணதாரிகளாய் சாமரை வீசவும், பிரமன் ரதசாரதியாக கடிவாளங்களை ஏந்தவும் பிரணவத்தை குதிரைகளைச் செலுத்தும் கோலாகவும் விந்தமலையைக் குடையாகவும், மந்திர மலையைக் குடைக்கொம்பாகவும் மேருமலையை வில்லாகவும் வாசுகியை நாணாகவும் சரஸ்வதி அதிற்கட்டிய மணியாகவும், விஷ்ணு பாணமாகவும் அக்கினி சல்லியமாகவும் வேதங்கள் நான்கும் நான்கு குதிரைகளாகவும் துருவன் முதலிய நட்சத்திரங்கள் அலங்காரமாகவும் பிரமாண்டத்திலுள்ளயாவும் சம்பந்தமுங் கொண்ட திவ்விய ரதத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தான்.

சிவபெருமான் ஸர்வதேவஸ்வரூபராய் அந்த யுத்த ஸந்நத்தமான இரத்தில் ஆரோகணித்தார். அச்சமயத்தில் முனிவர்கள் ஜயஜய வென்று முழங்கினார்கள் தேவமங்கையர்கள் பல்லாண்டு பாடினார்கள். அந்த ரதம் செல்லும் போது உலகத்தைத் தாங்கும் கூர்ம ரூபியான நாராயணன் இடபரூபத்தை வகித்துவந்து அந்த ரதத்தை தானுஞ் சுமந்தார். அந்த ரதம் மனோவேகத்துடன் நடந்து யுத்தகோலமாகத் திரிபுரமாகிய ராக்ஷஸ வாசஸ்தானத்திற்குச் சென்றது.

அதாதஸ்யர தஸ்யாஸ்ய பகவாந்தரணீதர
வ்ருஷேந்த்ரரூபி சோததாய ஸ்தாபயாமாஸவைரதம்

அச்சமயத்தில் தேவர்களும் மாமுனிவர்களும் சகல உலகங்கட்குஞ் சுகத்தைச் செய்யும் சதாசிவமூர்த்தியைத் தரிசித்துக் களித்து ஜயவென்று புகழ்ந்தார்கள். அந்த ஸ்தோத்திரத்தையும், அவ்வலங்காரத்தையும் நூறு வருஷம் வரை வர்ணித்துச் சொன்னாலும் முடியாது. பார்வதி தேவியும் சிவபெருமானுடன் அவ்விரதத்திலிருந்து திரிபுரசம்ஹாரஞ்செய்து தேவர் முனிவர்கட்குச் சுகம் உண்டாக்குவதற்காகத் தானும் உடன் சென்றாள். விஷ்ணு, இந்திரன், முதலிய இமையவர்கள் தங்கள் தங்கள் வாகனங்களான இரத கஜதுரக விமானாதிகளில் ஏறி ஆயுதபாணிகளாய்ச் சிவபெருமானுக்கு முன்னே திரிபுரத்தை நோக்கி நடந்தார்கள் ஜடைகளையுடைய முனிவர்கள் தண்ட கமண்டலங்களுடன் குதித்து ஆர்ப்பரித்தார்கள். சித்தர் சாரணர் முதலானவர் புஷ்பமாரி பொழிந்தார்கள் சிவபெருமான் யுத்த கோலமாக திரிபுரத்தை நோக்கிச் செல்லும்போது ப்ரக்கிரந்தன் குந்ததந்தன், கம்பன், ப்ரகம்பன், இந்திரன், இந்திர, பகவான், யந்தன், ஹிமகரன், ஸதாட்சன், ஸ்தாயன், கங்கடன், கடபூதனன், த்விசிரன், த்ரிசிரன், ஏகானனன், அஜவக்கிரன்; க்ஷய வக்திரன், கஜவக்திரன் ஊர்த்வவத்திரன் முதலான எண்ணிறந்த லக்ஷக்கணக்குள்ள சிவகணத் தலைவர்கள் ஒரு வார்த்தை சொல்லலானார்கள் ஐயனே தாங்கள் மனதால் நினைத்தவுடனே சகல சராசரங்களையும் சம்ஹரிக்கும் ஆற்றல் படைத்தவராக இருக்கும் போது இந்த ஆடம்பரங்கள் எதற்கு? சகலமான போர்படை பரிவாரங்களுடன் கூடி இப்படி இரதத்தில் ஏறி ஆயுதபாணியாய்த் தேவசேனா சமூகத்துடன் வருவானேன் நம்பிக்கை வரவும் தங்கள் கீர்த்தி உலகத்தில் வியாபிக்கவும் பவர் சிவபெருமானேயன்றிப் பிறிதொருவர் இல்லையாதலால் அவர் திரிபுரசம்ஹார நிமித்தமாக வில்லை வளைத்தார். அப்பொழுது திரிபுரங்கள் ஒன்று சேர்ந்தன. அது கண்ட தேவர்கள் பெருஞ் சந்தோஷமடைந்தார்கள்.

தேவர்கள் முனிவர்கள் சித்தர் முதலிய பதினென் கணங்களும் அஷ்ட மூர்த்தமாக விளங்குஞ் சிவபெருமானைத் துதித்தார்கள். அப்பொழுது பிரம தேவர் முக்கண் பெருமானே! முப்புரங்களும் ஒன்று சேர்ந்துள்ள இந்தச் சமயமே நல்ல சமயம்! சிறிது தாமதமானால் அவைபிரிந்து போகக்கூடும் ஆகையால் சீக்கிரமே பாணத்தை எய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தார் சிவபெருமானும் உடனே மேருமலையை வில்லாக வளைத்து வாசுகியான நாணையேறிட்டு விஷ்ணுவான முனையையுடைய பாசுபதாஸ்திரத்தை ஏற்றி, பிரமன் வார்த்தை பயனற்றதென்றும் நினைத்து, திரிபுரத்தை சினந்து பார்க்கத் திக்கென்று தீப்பற்றிப் புரங்கள் மூன்றும் எரிந்தன. பிரமன் நடு நடுங்கிச் சிவபெருமானைப் பார்த்துப் பணிந்து கைகட்டி வாய் பொத்தி எதிர் நின்று தேவதேவா! நீங்கள் பார்த்தவுடனேயே திரிபுரங்கள் சுடுசாம்பலாக போவதாயிற்றே? இந்த திரிபுரதகனத்திற்கு இரதம் முதலிய ஆடம்பரங்களெல்லாம் என்னையொத்தவர்கள் இதில் பணிவிடைகள் புரிந்து புகழ் பெறுவதற்காகவே செய்தீர் இனி இப்பாணத்தை விட்டுவிட வேண்டும் என்று பிரார்த்தித்தார் அதற்கிணங்கச் சிவபெருமான் அந்த அஸ்திரத்தைவிட அது திரிபுரத்தையடைந்து நாசம் செய்து சிவனாரிடம் திரும்பி வந்தது பல பல கோடி தைத்ய சேனைகளுடன் கூடிய திரிபுரங்கள் ஒரே அஸ்திரத்தால் எரிந்தது அது கற்பாந்த காலத்தில் திரிலோகங்களும் ஒரே பிரளய கால ருத்ரனால் அழிக்கப்பட்ட போலிருந்தது அந்தத் திரிபுரத்தில் சிவபூஜை செய்து வந்த பெருந்தவமுனிவர்கள் யாவரும் சிவகணப் பதவி அடைந்தார்கள் அப்பொழுது மகாவிஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்களெல்லாம் தேவதேவனான சிவபெருமானையும் அவர் வாம பாகத்தில் வீற்றிருக்கும் சகலலோக மாதாவான உமாதேவியையும் பார்த்துப் பயந்தால் ஒன்றும் பேசாது கும்பிட்டு நின்றார்கள். பிரமதேவன் விஷ்ணு இந்திரன் முதலிய இமையவர்கள் ஒன்று சேர்ந்து திரிபுரதகனஞ் செய்த சிவபெருமானை நோக்கி மெய்யன்போடு கைகுவித்து அண்ணலே தேவ தேவனாகவும் பரமேஸ்வரனாகவும் ஜகத் பிரபுவாகவும் உலகத்திற்குச் சுகத்தைச் செய்பவராகவும் விளங்குபவரே! எங்களிடம் கோபந்தணிந்து திருவருள் புரியவேண்டும் பிரணவஸ்வரூபியாயும், குணாஹிதனாகியும், சகுணனாகியும், சதாசிவனாகியும், சாந்தனாகியும் மகேசனாகியும், பிநாகியாகியும், சர்வஜ்ஞனாகியும் சகலத்தையும், ரக்ஷிப்பவனாகியும், ஸத்யோஜாதஸ்வரூபியாகியும் விளங்கும் உமக்கு நமஸ்காரம் என்று தோத்திரம் செய்து அவரவரும் தனித்தனியாக சாஷ்டாங்கமாகப் பணித்து, பகைவரை வென்றமைப் பற்றிப் பெருங்களிப்புடன் சிவத்தியனபரராய் இருந்தார்கள். அப்பொழுது பிரமதேவர் திரிபுர தகனரே எனக்கு உம்மிடம் பிரியாத திடபக்தியும் இதுபோலவே என்றும் சாரதித் தொழிலும் நிலைபெற அருள் பாலிக்க வேண்டும் என்றார். விஷ்ணு, சாஷ்டாங்க மாய்ப் பணிந்து கைகட்டி நின்று சற்குண நிர்குணஸ்வரூபியாகவும் ப்ரகிருதி புருஷ ரூபனாகவும் விசுவாத் மகனாகவும் விளங்கும் உமக்கு நமஸ்காரம் உம்மிடம் எனக்கு என்றும் நீங்காத பக்தியிருந்து வரவேண்டும் என்றார் பிறகுசகல நமஸ்கரித்து புராரியை நோக்கி நுதல் விழிப் பெருமானே எங்களிடம் தயையுடையவராயிருந்து எங்கள் பக்தியை வளர்க்க வேண்டும் என்றார்கள். சிவபெருமான் பெருமகிழ்ச்சியடைந்து தேவர்களே உங்கள் தோத்திரத்திற்கு நாம் மனங்களித்தோம் உங்களுக்கு வேண்டிய வரங்களை கேளுங்கள்! என்றார்.

மகாதேவா! எங்களுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் காட்சியளித்து எங்கள் கஷ்டங்களைப் போக்கியருள வேண்டும் என்றார்கள். சிவபெருமான் அவ்வாறே ஆகுக வென்றும் உங்களுக்கு முக்தியருள் புரிவோம் என்றும் திருவாய் மலர்ந்தருளிச் சில வரங்களைக் கொடுத்தார், அப்பொழுது நிரீசுவர வாதிகளான சில முண்டித சிரசுடையவர்கள் வந்து தேவர்களைப் பணிந்து எங்கள் கதி என்ன? என்று கேட்டார்கள் அதற்கு திருமால் பிரமன் முதலிய தேவர்கள் நீங்கள் கலியுகம் வரும் வரையில் நிர்ஜ்ஜல பூமியில் வசிக்க வேண்டும் என்று கூறவே அவர்கள் பணிந்து அவ்வாறே சென்றிருந்தார்கள் பிறகு தேவர்கள் தத்தமது இருப்பிடஞ் சேர்ந்தனர். இந்த உபாக்யானததைத் கேட்கிறவன் ஸர்வபீஷ்டமுமடைவான் என்பது திண்ணம்.

24. விசுவகர்மா தந்த சிவலிங்கங்கள்

பிருமதேவர் அவருடைய சத்தியலோகம் சென்றார் முனிவர்களை அழைத்தார். அவர்களைப் பார்த்து நகைத்த வண்ணம் முனிவர்களே! உங்களுக்கு இஷ்டகாரிய சித்தியும் இன்னும் அநேக நன்மைகளும் உண்டாக வேண்டுமென்றால் என்னுடன் சேர்த்து திருப்பாற்கடலுக்கு வாருங்கள். நான் தத்வரகசியத்தை நன்றாக விசாரித்திருக்கிறேன் என்று சொன்னார். அதைக் கேட்ட தேவர்களும் முனிவர்களும் பிருமதேவருடன் சென்று விஷ்ணு பகவான் வீற்றிருக்கும் க்ஷராபதியையடைந்து திருமாலை வணங்கி பரந்தாமா ஜகந்நாதா, பக்தப்பிரியா, லக்ஷ்மிநாயகா, அபயங்கொடுத்து அநுக்ரஹிப்போன், மேகவர்ணா, சதுரபுஜங்களையுடையாய்  பீதாம்பரதாரா, சங்கு, சக்கர, கதை, பத்மங்களையளித்தோய், புரு÷ஷாத்தமா, புண்டரீகாஷா கவுஸ்துவாபணா இடர்பட்டவர்களுக்கு இரக்ஷண்யம் அளிப்பவன் நீ தான் ஆதலால் எங்கள் விஷயத்திலும் அபயமளித்திட வேண்டும். சந்தோஷத்துடன் பிரசன்னமாக வேண்டும். ஜய ஜய வென்று துதித்தார்கள் அதனால் மனங்குளிர்ந்த கார்மேக வண்ணர் அவருடைய நிஜ வடிவம் எடுத்து அவர்கள் முன்னால் தோற்றமளித்தார்! அதைக் கண்டு தேவர்கள் மெய்சிலிர்த்தனர், அவர்களை திருமால் நோக்கி தேவர்களே, நீங்கள் என்னை நாடி வந்த நோக்கம் என்ன? என்று கேட்டார் அதற்கு பிரமதேவர் வைகுந்தவாசா உம் குளுமையான கிருபையால் சகல துன்பங்களும் ஒழிந்தன. ஆனாலும் அனைவருக்கும் இதமுண்டாகும்படி ஒன்று உம்மிடம் கேட்க விரும்புகிறோம். நாள்தோறும் எவரைச் சேவித்தால் எல்லாத் துயரங்களும் நீங்கி நித்தமான சுகங் கிடைக்கும் நானும் இவ்வமையவர்களும் எவரை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் பெறுவோம் என்று கேட்டார். அவரை விஷ்ணு பரமாத்மா புன்முறுவலோடு நோக்கி பிரமனே! உனக்கு இதனை நான் ஆதியிலேயே அறிவித்திகுக்கிறேன், நீ அதைக் கேட்டு அறிந்திருக்கிறாய் ஆயினும் மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்துகிறேன் பிரமனே! பூஜிக்கத்தக்கப் பொருள் உனக்குடைதாயிருந்தும் என்னைக் கேட்கிறாய் சகலலோகத்திலும் சங்கரர்தானே பூஜிக்க வேண்டிய பதி? அவரன்றி பிறனொருவன் உண்டோ? இவ்வுண்மையை உனக்கும் எனக்கும் முன்பொரு சமயம் சிவபெருமானே சொல்லியிருக்கிறாரே. அதற்குத் திருஷ்டாந்தமாகத் தாரகாசுரத் திரிபுராதிகளை சிவபக்தியிலிருந்து மறக்கச் செய்து என்னால் சிருஷ்டிக்கப்பட்ட மாயாரூபிகளின் மயக்கத்தில் சுட்டுண்டு அவ்வசுரர்கள் மாண்டு போனதையும் நீ அறிவாயல்லவா? ஆகையால் தேவர்களான நீங்கள் விரும்பும் நித்தியமான சுகத்தை அடைய அதி பத்தி சிரவணத்தோடு, சிவலிங்கமான ரூபியான சிவபெருமானைப் பூஜைசெய்து வாருங்கள், நானும் சாட்சாத் சிவபெருமானைப் பூஜித்து வருவதால்தான், இப்படி உங்கள் தோத்திரங்களுக்கெல்லாம் உரியவனாக இருக்கிறேனேயன்றி மற்றபடியல்ல உலகில் எந்தப் பொருளையும் சிவலிங்க ரூபமாகச் செய்தால் அதில் சிவபெருமான் தோற்றமளிக்கிறார் .

ஆகையால், இஷ்ட சித்தியடைய விரும்பும் யாவரும் சிவலிங்கார்ச்சனை செய்ய வேண்டும் தேவர்களும் வைத்தியர்களும் தானவரும் நாமும் எல்லோரும் சிவலிங்கபூஜை செய்ய வேண்டியவர்களே பிரமனே நீர் இதை அறிந்திருந்து மறந்ததும் ஏனோ? நீ இனிமேலாவது எவ்வகையிலாவது சிவலிங்க பூஜைசெய்து வரவேண்டும். எந்தக் காலத்திலும் சிவத்தியானத்திலேயே மூழ்கியிருக்க வேண்டும் எப்பொழுது சிவத்தியானத்தை மறக்கிறோமோ அப்பொழுதே நமக்கு இடையூறு நெருங்கும் அதுவே அதர்மமாகும். அதுவே விக்னகாலம். அதுவே மூடத்தனம் சிவபக்தி எவருக்குண்டோ , சிவஸ்மரணை எவர் செய்வாரோ அவர்கள் துயரங்களின்றி வாழ்வார்கள் மனோகரமான வீடுகள், பலவிதமான ஆபரணங்கள், சுந்தர அழகான பெண்கள், போது மென்ற அளவு தனம் புத்திர பாக்கிய சந்ததி தேகாரோக்கியம், பலவித சீனி சீனாம்பரங்கள் இரதகஜ துரகம் முதலான வாகனங்கள். பெரும்புகழ் ஸ்வர்க்கபோகம், தீர்க்காயுள், நல்ல சிநேகிதர்கள், முக்திபலம் முதலானவற்றை விரும்புகிறவர்கள் எப்போதும் சிவபகவானை சிவலிங்க மூர்த்தத்தில் பூஜிக்க வேண்டும். பக்தியுடன் லிங்கபூஜை செய்கிறவன் புண்ணிய கருமங்களைச் செய்ய நேரிடுமேயன்றி பாவத்தால் பீடிக்கப்படமாட்டான் என்று மகாவிஷ்ணு விவரித்தார். இம்மகா ஆலோசனையைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களும் முனிவர்களும் திருமாலை வணங்கி நாங்கள் பூஜைசெய்ய லிங்கம் கிடைக்காததால் இஷ்டகாமியங்களெல்லாம் . எங்களுக்குக் கைகூடச் சிவலிங்கங்களை பிரஸாதிக்க வேண்டும். என்று பிரார்த்தித்தார்கள். விஷ்ணுவும் பிரமதேவரும் யோசித்து விசுவகர்மனை அழைத்து இத்தேவர்கட்கெல்லாம் அவரவர் கவுரவத்திற் கேற்றாற்போல் யோக்கியமான லிங்கங்களை செய்து கொடு என்று சொன்னார்கள். விசுவகர்மனும் அப்படியே அவர்களுக்கு லிங்கங்களைக் கொடுத்தான். இந்திரனுக்குப் பதுமராக லிங்கத்தையும் குபேரனுக்கு சுவர்ண(பொன்) லிங்கத்தையும் இமயனுக்கு கோமேதக லிங்கத்தையும் வருணனுக்கு நீலலிங்கத்தையும், விஷ்ணுவுக்கு இந்திரலிங்கத்தையும், பிரமனுக்கு சுவர்ண லிங்கத்தையும் விச்சுவ தேவர்களுக்கு பார்த்திவ லிங்கத்தையும் அஸ்வினி தேவர்களுக்கு ஸ்திரீகளுக்கும் ஸ்படிக லிங்கத்தையும் இலக்குமிதேவிக்கு தாமிர லிங்கத்தையும் துவாசாதித்தர்களுக்கும் சோமனுக்கும் முத்துலிங்கத்தையும் வழங்கினார் வஜ்ரலிங்கத்தை அக்கினியும், சந்தன லிங்கத்தை மயனும் பவளலிங்கத்தை அநந்தன் முதலிய ஸர்ப்பராஜர்களும், கோமயலிங்கத்தை தைத்தியரும் இராக்ஷஸரும் இரும்பு லிங்கத்தைப் பைசாசங்களும், நவநீத லிங்கத்தைச் சசி முதலிய ஸ்திரீகளால் பூஜிக்கப்பட்ட பார்வதிதேவியும், தாருலிங்கத்தை நிருதியும், பஸ்மலிங்கத்தை யோகியும், மாவுலிங்கத்தைச் சூரியன் மனைவியான சாயா தேவியும் இரத்தின லிங்கத்தை சரசுவதி தேவியும், தயிரால் செய்த லிங்கத்தை யக்ஷர்களும் பெறும்படி விசுவகர்மன் கொடுத்தான்.

அவற்றை வாங்கிய தேவர்கள், முனிவர்கள், பிரமாவிஷ்ணு யக்ஷர் முதலானவர்கள் தமது காரியசித்தியின் பொருட்டு அந்த சிவலிங்கங்களை விதிப்படி அருச்சித்தார்கள், விஷ்ணுபகவான் பிருமன் முதலிய தேவர்களுக்குப் பூஜாவிதியைச் சொல்லியருளினார். அவர்கள் ஆனந்தமுற்றுத் தங்கள் வாசஸ்தானத்தையடைந்தார்கள். விஷ்ணுமூர்த்தியும், அந்தர்த்தானமாயினார். பிருமா சத்யலோகமடைந்து, முன்பு தன்னுடன் க்ஷீராப்திக்கு வராத தேவர்கட்கும் சிவபூஜாவிதியை முறைப்படி உபதேசித்தார்.

25. பாஹ்ய ஆந்தரலிங்கங்கள்

நைமிசாரண்ணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி ஞான வள்ளலே! பிரமதேவர், சத்தியலோகஞ் சென்ற பிறகு நடந்தலிருத்தாந்தங்களையும், பிரமதேவர் சிவபூஜா விதியை அவர்களுக்கு உபதேசித்ததையும், எங்களுக்குச் சொல்லியருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள சூதமுனிவர், உலகத்திலிருப்பவர் அனைவரும் சுகமடைய வேண்டிய விஷயமாக என்னைக் கேட்டீர்கள் இவ்விஷயத்தை முன்பு ஒரு காலத்தில் வியாச முனிவர் சநத்குமார முனிவரைக் கேட்க அதற்கு சநத்குமாரர் சொல்லியபடியே வியாசர் எனக்குச் சொல்லியதை உங்களுக்கு சொல்லுகிறேன் என்று கூறலானார். பிருமதேவர் சத்தியலோகமடைந்த பிறகு தேவர், முனிவர் முதலானோரை நோக்கி சிவபூஜா விதியைச் சொல்லுகிறேன் கேட்க வேண்டும். சகல ஜன்மங்களிலும் துர்லபமான மாநுட ஜன்மத்தில் நற்குலத்தில் அங்கக்கேடின்றி உதிப்பது அருமை. அத்தகைய அரிய பிறவியையடைந்த பிறகு தன் குலத்திற்கேற்ற காரியங்களைச் செய்ய வேண்டுமே தவிர, அளவு கடந்திருந்தால் அக்கருமத்திற்குத் தக்க பலன் கிட்டாது, தன் ஞானத்திற்கு எட்டாத காரியங்களில் யாருமே தலையிடக் கூடாது.

கர்மயாகங்கள் பல்லாயிரஞ் செய்வதைக் காட்டிலும் தீர்த்த யாத்திரை முதலான தபோயாகஞ் சிறந்தது. தபோயாகங்கள் பல்லாயிரத்திலும் ஜெபயாகஞ் சிறந்தது. அந்த ஜப யாகங்கள் பல்லாயிரத்தையும் விட மான்சீக தியானயாகம் சிறந்தது. தியான யாகத்திலுஞ் சிறந்தது பிறிதொன்றுமில்லை. அதுவே ஞானமார்க்கத்திற்குக் காரணம் சர்வ வியாபகமாவுள்ள பரம்பிரம வஸ்துவை யோக புருஷன் தன் தியானத்தினால் தன் இதயத்தில் தரிசிக்கிறான். தியான யாகத்தில் இருப்பவனுக்குப் பரமசிவன் எப்பொழுதும் அருகிலேயே இருப்பார். அவன் பிரம ஸ்வரூபமாயிருப்பதால் சத்கருமங்களை விடுத்தாலும் பிராய சித்தம் வேண்டுவதில்லை, சுகம், துக்கம், அதர்மம், ஜபம், ஓமம், தியானம், யோகம் முதலியவெல்லாம் அவனுக்கு அவசியமில்லை பரமானந்தத்தை உண்டு செய்வதும் பரிசுத்தமானதும், நாசமில்லாததும் நிஷ்களமானதும், ஸர்வ பரிபூரணமாயுள்ளதுமான சிவலிங்கத்தை இதயத்திலிருப்பதாக அவன் எண்ணுகிறான். இந்த லிங்கம் பாஹ்யலிங்கம் ஆந்தலிங்கம் என இரு வகைப்படும். அவற்றுள் பாஹ்யம் என்பது ஸ்தூலமாக (பருமையாக) கண்ணுக்குப் புலப்படுவது ஆந்தரம்-இருதயத்தில் சூட்சமாக (நுட்பமாக) உள்ளது. காம்யாகத்திலிருக்கும் எல்லோரும் பாஹ்பலிங்கார்ச்சனை செய்ய வேண்டும். ஏனெனில் அஞ்ஞானிகளுக்கெல்லாம் பக்தியுண்டாவதற்காக ஸ்தூலத்தில் சூட்சமத்தை பாவனை செய்து பூஜிக்க வேண்டும். ஞானிகளுக்குத் தோஷரஹிதமான சூட்சமலிங்கம் பிரத்யட்சமாகவிருக்கும் அஞ்ஞானிகள் அனைவரும் மண் மரம் இவற்றால் செய்யப்பட்ட லிங்கங்களை பூஜிக்க வேண்டும். தத்வார்த்தங்களை உணர்ந்தவர்கள் இம் மிருத்லிங்கம் (புற்றுமண்லிங்கம்) முதலியவற்றால் பயமின்றிச் சகலமுஞ்சிவ மயம் என்று பாவித்து அகண்ட பரிபூரணமாக விளங்குகிறவன் சிவபெருமானென்று தெரிந்திருப்பார்கள். ஞானிக்கு விக்கிரக ஆராதனை (உருவ வழிபாடு) வேண்டியதில்லை. இத்தகைய ஞானம் இல்லாதவனுக்குப் பிரதிமாகல்பனஞ் செய்து கொள்ள வேண்டுவது அவசியம் உயர்விடத்தில் செல்ல வேண்டியவனுக்கு சொபானம் (மடி) இன்றியமையாதது போல நிர்குணமான சிவலிங்கப் பிராப்தியையடைய வேண்டிய அஞ்ஞானிக்கே பிரதிமா பூஜை விக்கிரக வழிபாடு சொல்லப்பட்டிருக்கிறது சகுண பூஜையால் நிர்குணமான சிவப்பிராப்தி யுண்டாகும்.

இவ்வாறே சகல தேவதாப் பிரதிமைகளும் அவரவர் கோரிக்கையின்படி இஷ்டசித்திகளைக் கொடுக்கின்றன பூஜை செய்பவன் பூஜை செய்கிறேன் என்பதேயில்லாமல் பக்திபரவசமாகி அவனுக்கு ஞானோதியம் உண்டாகும்வரை பூஜிக்க வேண்டும். ஞானமில்லாமல் செய்யும் பூஜையால் பூஜை செய்யும் சந்தனம்-புஷ்பம்-தீர்த்தம் நிவேதனம் ஆகிய அனைத்தும் பயனற்றதாகும் சிரத்தையேதுமில்லாமல் பிரயாமையின்றி பூஜை செய்கிறவனின் பூஜை வியர்த்தமாவதுமின்றி அவனும் அதோலோகப் பிராப்தியடைவான். இதனால் உங்களுக்கு மேலும் பாஹ்யலிங்க பூஜையைச் சொல்லுகிறேன் என்று பிரமதேவர் சொல்லலானார், தேவர்களே ஸ்வஜாதி யுசிதமான கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டு எந்தெந்த விக்கிரகத்தில் தனக்குப் பக்தியுண்டாகுமோ அந்தந்தப் பிரதிமையை பூஜை செய்ய வேண்டும். பூஜை தானம் முதலான நற்கருமங்கள் செய்யாவிட்டால் பாதகம் ஒழியாது. பாதகம் ஒழியாவிட்டால் சித்தியுண்டாகாது. மாசுபடிந்த ஆடைகளை படிகாரத்தில் ஊறவைத்த பிறகு தோய்த்துச் சாயம் போட்டால் அந்தச் சாயம் அதில் லேசாக பிடிப்பது போல பாதங்களை ஸ்தூல பூஜையாகிய பிரதிமா பூஜைபோல் போக்கின பிறகு! சூட்சம பூஜையால் ஞானமடைந்து விஞ்ஞானிகளாவர் அந்த விஞ்ஞானத்திற்கு ஞானமும் ஞானத்திற்கு த்ருடபக்தியும், பக்திக்குப் பிரதிமா பூஜையும், பிரதிமா பூஜைக்கு சத்குருவும் சத்குருவையடைவதற்கு சத்சாங்கத்யமும் (நல்லுறவு) காரணமாகும் சத்சாங்கயத்தால் சத்குருவையடைந்து சத்குருவால் மந்தராதிக்க பூஜையும் அந்த பூஜையால் பக்தியும், பக்தியால் ஞானமும் ஞானத்தால் விஞ்ஞானமும் உண்டாவது சத்தியம், விஞ்ஞானிக்கு நான் அவன் என்றும், குமாரன் பிறன் என்றும் சிநேகிதன் பகைவன் என்றும்; மானம் அவமானம் என்றும் லாப நஷ்டம், ஜெயம் அபஜெயம் என்றும் பேதமின்றிச் சம்புத்தி உண்டாகும்.

இத்தகையச் சொந்த புத்தியற்றவன் சிவரூபியாவான், இப்படிப்பட்ட விஞ்ஞானியாக எல்லோரும் ஆவதில்லை, கோடியில் ஒருவனே ஆகிறான் அப்படி உள்ளவனை ஒருவன் கண்டதுமே அவனுடைய சகல பாபங்களும் ஒழிந்துவிடும். பிரதிமாரூபனேதேவர்கள் கூட ஒருவனைப் புனிதப்படுத்த அநேக காலமாகும். விஞ்ஞானியோ அவனைக்கண்ட பொழுதே புனிதமாக்குவான். இல்லறவாழ்க்கையில் இருக்கும் வரையில் பிரதிமா பூஜை செய்ய வேண்டும். சிவரூபமாவது தேவிரூபமாவது, விஷ்ணுரூபமாவது சூரியரூபமாவது கணபதிரூபமாவது அல்லது இந்த ஐந்து ரூபத்தையாவது சகலக் காரணகனான சிவலிங்கப் பெருமானையாவது பூஜிக்க வேண்டும். மரத்தின் வேரில்தான் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அப்பொழுது தான் அது கிளைகளுக்கும் இலைகளுக்கும் பாயும் அதற்கு மாறாகக் கிளையின் மேல் நீர் வார்த்தால் அது மரத்திற்குப் பயனளிக்காது அது போலவே மரத்தின் வேர் போலுள்ள மூல காரணனான சிவபெருமானைப் பூஜித்தால் அது சகல தேவர்களையும் சார்ந்து திருப்தியைத் தரும் சிவபூஜை செய்யாமல் மற்ற தேவர்களைப் பூஜிப்பது மரக்கிளையின் மேல் சொரிய்யப்படும் நீருக்கு ஒப்பாகும் த்ரியம்பகனாகிய சிவபெருமானைப் பூஜித்தால் கோரிக்கைகள் அனைத்தும் சித்தியாகும் என்று பிரமதேவர் கூறினார்.

26. நித்திய கருமங்கள் கூறல்

சூதர் சொல்லலானார். ப்ராம்ஹ முகூர்த்தத்தில் எழுந்து விஷ்ணுவையும் குருவையும் அன்புடன் துதித்து தேக சுத்தி செய்து கால்கைகள் கழுவி சூரிய உதயத்திற்கு முன் தந்ததாவனஞ் செய்து முகத்தை இரு கைகளாலும் நீர் கொண்டு பதினாறு முறைகள் கழுவி நதி முதலியவற்றில் தேசகால விரோதமின்றி ஸ்நானஞ் செய்ய வேண்டியது(ஆதிவாரம்-சிரார்த்ததினம்-சூரிய சங்கராந்தி கிரகணம். மகாதானஞ் செய்யும் சமயம் புண்ணிய காலம், உபவாசதினம் அசவுச தினங்கள் இந்தச் சமயங்களில் உஷ்ணஜல ஸ்நானம் செய்யக் கூடாது) எண்ணை தேய்த்து நீராட வேண்டியவர்கள் முறையே ஆதிவாரம்(ஞாயிற்றுக் கிழமை) ரோகத்தையும் சோமவாரம்(திங்கள்) தேஜசையும், அங்காரகவாரம்(செவ்வாய்) மரணத்தையும் புதவாரம் லக்ஷ்மிகடாட்சத்தையும் குருவாரம்(விழாயன்) தரித்திரத் தன்மையையும் சுக்ரவாரம்(வெள்ளிக்கிழமை) அசுகத்தையும் சனிவாரம் சுகத்தையும், உண்டாக்குமாதலால் நிசித்த வாரங்களில் (விலக்கு கிழமைகளில்) எண்ணை ஸ்நானம் செய்யக் கூடாது. அப்படி நிசித்த (விலக்கு) வாரங்களில் ஸ்நானம் செய்ய நேரிட்டால், ஆதிவாரத்தில் பூவும், மங்கள வாரத்தில் மண்ணும் குரு வாரத்தில் அருகம் புல்லும் சுக்ரவாரத்தில் ஜலத்துளியும் எண்ணையில் சேர்த்து அப்பியங்கனம் செய்து கொள்ள வேண்டும். நித்யாப்யங்கணஞ் செய்யும் நியதியையுடைவன் பரிமளவஸ்துக்கள் சேர்ந்த எண்ணையிட்டுக் கொள்ளலாம், ஸ்ரார்த்தம்-கிரஹணம் உபவாசம் பிரதமை ஆகிய தினங்களில் கடுகெண்ணெயை உபயோகிக்கலாம். தேசகாரிங்களையறிந்து சாஸ்திரப்படி ஸ்நானம் செய்கையில் வடக்கு திசையாயாவது கிழக்குத் திசையையாவது நோக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். முதல் நாளில் உடுத்திய உடையையும் இராத்திரி உடுத்தியதையும் பிறர் உடுத்திய ஆடைகளையும் கட்டிக்கொண்டு நீராடக் கூடாது. நல்ல உடைகளை உடுத்தி கைக்கால் கழுவி ஆசமனஞ் செய்து(நீராடும் தண்ணிரைக்கங்காதி தீர்த்தங்களாகப் பாவனை செய்து துதித்து) சங்கல்பங்கூறி உடலை நனைத்து மிருத்திகா ஸ்நானம் செய்து உடலைத் துடைத்து மடிவஸ்திரங்கட்டிக் கொண்டு ஆசமனஞ் செய்து கோமயம் முதலியவற்றால் சுத்தி செய்த நல்லவிடத்தில் நல்ல மரத்தால் செய்த ஆசனத்தில் கம்பளம் முதலிய சித்ராசனமிட்டு, அதன் மேல் பட்டாடை பரப்பி அதில் உட்கார வேண்டும் அப்படிப்பட்ட ஆசனஞ் கிடைக்காவிட்டால் மான்தோலின் மேலிருந்து த்ரிபுண்டரம் ஊர்த்துவ புண்டரம் அர்த்த சந்திரம் வமிசபத்திரம்-பாரிஜாத புஷ்பம் ஆகிய இவ்வைந்தில் தமக்குரிய ஒரு வகையாகத் தரித்துக் கொள்ளவும் திரிபுண்டர ஊர்த்துவ புண்டரங்கள் சிவ பக்தர்களுக்குரியவை பிரம்மக்ஷத்திரிய வைசியர்கள் நான்கு வகையான திலகங்களை அணியலாம். அர்த்த சந்திரம் ஊர்த்துவ புண்டரமாகிய இரண்டும் சூத்திரர்க்கு உரியவை வத்சபத்ரம் போன்ற திலகம் விஷ்ணு பக்தர்கள் தரிக்க வேண்டும்.

இவ்வாறு தரித்தால் ஜபம், தபம், தானம் எல்லாம் சபலமாகும், பஸ்மம் (திருநீறு) முதலானது இல்லாவிட்டால் ஜலத்தாலாவது திலகந்தரிக்க வேண்டும். பிறகு தங்கள் குலத்திற்கேற்ற அநுஷ்டானங்களைச் செய்து கொண்டு சிவார்ச்சனை செய்ய வேண்டும். எப்படியென்றால் மந்திர பூர்வமாக மூன்று தரம் அல்லது ஒரு தரம் ஆசமனஞ் செய்து கொண்டு வந்து கங்கையைத் துதித்து (ஆத்மதத்வாய சுவாஹா சிவதத்துவாய சுவாஹா வித்தியாத தத்துவாய சுவாஹா) என்று ஆசமனஞ் செய்து சங்கல்பித்து பூஜாபாத்ர ஜலத்தைக் கொண்டு சிவ பூஜைக்கு வேண்டிய உபகாரணங்களைத் தன் சக்திக்கேற்பச் சேகரித்து மனதைத் த்ருடப்படுத்தி லிங்கஸ்ய ஆக்நேய பாகஸ்த ப்ரகாதி முகமர் ச்சயேத் என்று சாஸ்திரப்படி அக்கினி திசையிலிருக்கச் சிவலிங்கத்தை வைத்து மந்திர குருவைத் தியானித்து அவரைப் பூஜித்து மனதில் குருகடாக்ஷத்தைக் கருதி, மீண்டும் தன் மனவிருப்பத்தைச் சேர்த்துச் சங்கல்பங் கூறி, பரிவார தேவர்களுடன் சிவனைப் பூஜிக்க வேண்டும் சங்கம் சக்ரம் தேனு முதலிய முத்திரைகளில் ஒன்றைக்காட்டி முதலில் சித்தி, புத்தி, சமேதராகியும் லக்ஷன், லாபன், என்னும் புதல்வர்களைவுடைய வர கவும் விளங்கும் விநாயகக் கடவுளை சித்தூர வர்ணமான மலர்களால் பூஜித்து நமஸ்கரித்து க்ஷமார்பணம் செய்து நந்திகேசுவரரை சிவகடாக்ஷங் கைகூடும்படி பூஜித்து கைகூப்பி வணங்கி துவார பாலகராகிய மகாதரரை பூஜித்து பார்வதி தேவியை சந்தன, குங்குமம், தூப தீப நைவேத்தியங்களால் அர்ச்சித்துப் பணிந்து சிவசன்னதி கல்பித்துக் கொண்டு தன் வீட்டில் பாத்திரம் பொன், வெள்ளி, இரத்தினம், முதலியவற்றால் செய்யப்பட்ட சரலிங்கமூர்த்தியையாவது ஸ்தாபித லிங்கமூர்த்தியையாவது அன்புடன் பூஜிக்கலாம் இதற்குப் பிராணப் பிரதிஷ்டையும் பூசித்தி பூதசுத்திகளுஞ் செய்து கொண்டு திக்பாலகர்களைப் பூஜிக்க வேண்டும் மூல மந்திரத்தாலேயே சிவபூஜை செய்ய வேண்டும் வீட்டில் சிவபூஜை செய்கையில் துவாரபாலக பூஜாநியமம் வேண்டியதில்லை ஆனால் பரிவாரங்களோடு கூடிய சிவபெருமானே என்று பாவனாமாத்திரமாகப் பூஜை செய்ய வேண்டியது பத்மாசனமாவது பத்ராசனமாவது உத்தானாசமாவது. பர்யநிகாசனமாவது செய்து உட்கார்ந்து ஆதிசைவர்களைக் கொண்டாவது தானேயாவது பூஜை செய்யவும் அர்க்யம் பாத்யம் கொடுத்து தண்ணீரால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் நிர்ச்சலமான மனதுடன் இனிச் சொல்லப்படும் மந்திரத்தால் ஆவாஹனஞ் செய்ய வேண்டும்.

கைலாச ஸிகரஸ்தஞ்ச பார்வதீபதி முத்தமம்
யதோக் த்ரூபிணம் தேவம் நிர்குணம் குணரூபிணம்

பஞ்சவக்த்ரம் தஸ்புஜ த்ரிநேத்ரம் வ்ருஷபத்வஜம்
கர்பூர கௌரகம் திவ்யம் சந்த்ர மௌளிம்கபர் திநம

வ்யாக்ரசர் மோத்தரீயஞ்ச கஜசர்மாம் பர்ம்ஸுபம்
வாசுக்யாதி பரீதாங்கம் பிநாகாதி விபூஷிதம்

கபாலட மருயுக்தஞ்ச கண்டே கரள ஸோபிதம்
ஸித்தயோஷ் டௌச யஸ்யாக்ரே ந்ருத்யந் தீஹ நிரந்தரம்

ஜயஜயேதி ஸப்தைஸ்ச ஸேவிதம் நிஜபக்தகை;
தேஜஸா துஸ்ஸஹேநைவஸம்பத்தம் தேவ ஸேவிதம்

ஸரண்யம் ஸர்வஸத் வாநாம் ப்ரஸந்நமுக பங்கஜம்
வேதஸாஸ்த்ரைர் யதாகீதம் ஸிவமாவாஹயாம் யஹ;

(இதன் தமிழ் பொருள்) கைலாச சிகரத்தில் இருப்பவரும், பார்வதி நாயகரும், உத்தமரும், நிஜஸ்வரூபியும், நிர்குணரும். சுகுணரும், ஐந்து முகங்களும் பத்து கரங்களும், திரிநேத்திரங்களும் ரிஷபக்கொடியும், கற்பூரம் போன்ற வெள்ளிய திருமேனியும் பிரகாசமும், சந்திர சேகரமும் சடையும் புலித்தோல் ஆடையும் யானைத் தோலுடையும் சுந்தர வடிவமும் வாசுகியாதி சர்ப்பங்கள், பிநாகயல்லாதிவியவற்றால் அலங்காரமும் கபால டமருகமும் நீலகண்டமும், அணிமாதியஷ்ட சித்திகளின் நிருத்தமுடைய சன்னதியும் நிஜபக்தர்கள் ஜயஜயதொனியோடு சேவித்தலும் தேஜோரூபியும்! தேவர்களால் சேவையும் சர்வரக்ஷணமும், பிரசன்ன முகபதுமமும் வேதசாஸ்திரங்களாற் புகழப்படுவதுமுடைய சிவபெருமானை ஆவாஹநஞ் செய்கிறேன்! என்பதாகும்.

27. சிவபூஜா விதிமுறைகள்

சூதமுனிவர் சொல்லலானார். பூஜா பாத்திரத்திலிருக்கும் ஜலத்தால் இலிங்கமூர்த்திக்கு அபிஷேகம் செய்யலாம். மகாபிஷேகம் செய்யும் பொழுது சேகரித்து அருகே வைத்துள்ள வேறு நன்னீராலும் அபிஷேகிக்கலாம் முன் அத்தியாயத்தில் சொல்லிய மந்திரம் சொல்லமுடியாவிட்டால் (யதோக்த்ரூபிணம் ஸம்பும் சிவமாவாஹயாம்யஹம்) மேற்கூறிய முறைப்படியே சிவபெருமானை ஆவாஹனம் செய்கிறேனென்று இலங்கிமூர்த்தத்தில் சிவபெருமான் இருப்பதாகப் பாவித்து விதிப்படி உபசாரங்கள் செய்ய வேண்டும். முன் சொல்லிய தோத்திரத்தைக் கூறி ஆசனங் கொடுக்க வேண்டும். சிவாய நம சொல்லி ÷ஷாட ச உபசாரங்களைச் செய்ய வேண்டும். அப்படியே கூறி சர்வவியாபியான பெருமானுக்குப் பாத்யம் ஆசமனங் கொடுத்து வேதமந்திரங்களால் பஞ்சாமிர்தமும் தான் விரும்பிய பழங்களும் அத்தர் பனிநீர் சந்தன முதலிய பரிமள திரவியங்களும் சுத்த ஜலமும் அபிஷேகித்து, தான் கையெட்டுந் தூரத்திலிருந்து சந்தனாபிஷேகஞ் செய்து ஆயிரத்தெட்டு அல்லது நூற்றெட்டுத் தாரைகளையுடைய ஜல பூரணகும்பத்தை மேலே கட்டி வேத மந்திரங்களாலாவது ஆறு மந்திரங்களோடு கூடிய ருத்திரஸுக்த மந்திரத்தாலாவது ஏகாதச ருத்திர மந்திரத்தாலாவது தன்னால் கூடியவரையில் அபிஷேகித்து வஸ்திரத்தால் ஒத்தி, ஆசமநியம் (உட்கொள்ளல் நீர்) கொடுத்து ஆடை தரிக்கச் செய்து! யஜ்ஞோபவீதமும் (பூணூல்) சமர்ப்பித்து. சந்தனம் வெள்ளை யக்ஷதை இவற்றையிட்டு (திலாஸ்சைவ யவாவாபி கோதூமா மாஷகாஸ்ததா, அர்ப்பணீமா-ஸிவாயைவமந்த்ரைர் நாநாவிதைரபி(14) என்ற படி அக்ஷதையாக எள்ளாயினும் எவையாயினும் கோதுமையாயினும் உளுந்தாயினும் தரிக்கலாம். எள் பாபத்தைப் போக்கு மென்றும்யவை (கோதுமையில் ஒருவகை) அன்னபாக்கியமும் கோதுமை தேகபுஷ்டியும் மாஷம்(உளுந்து) வம்சவிருத்தியுஞ் செய்யும் என்பார்கள்-பிரணவரத் நமோந் தகமாகிய சிவமந்திரத்தால் தாமரை, கொன்றை ஆத்தி, மல்லிகை ரோஜா, வில்வம், தர்ப்பை, அறுகு, கரூவூமத்தை துளசி இலை போன்ற தனக்குக் கிடைத்த புஷ்பங்களையோ அல்லது பத்திரங்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

வீட்டிலிருக்கும் சரலிங்கத்தையாவது அசரலிங்கத்தையாவது தானும் சன்னிதானத்தில் இருக்கும் பரார்த்த லிங்கத்தை ஆதிசைவரைக் கொண்டும் மேற்சொன்னவாறு பூஜை செய்த பிறகு பரிமளம் பொருந்திய குங்கிலியம், அகர், சந்தனத்தூள், சாம்பிராணி முதலியவற்றைத் தூபமிட்டு, ஏகார்த்தி, திடயார்த்தி, த்ரியார்த்தி, சதுரார்த்தி பஞ்சார்த்தி என்ற தீபங்களைக் கட்டி திடதீபங்களைக் காட்டி(ரூபந்தேஹி ஜயந்தேஹி பாக்யம் பகவான் தேஹமே புத்தி முக்தி பலம் தேஹி க்ருஹீத்வார்ச்யம் ஸிவாதுநா) பரமேஸ்வரா! நான் தேவரீருக்குச் சமர்ப்பிக்கும் அர்க்கியத்தை ஏற்று எனக்குச் சவுந்தர்யத்தையும் ஜயத்தையும் பாக்கியத்தையும் கொடுக்க வேண்டும் புத்தி, முக்தி பலவிதமான நிவேதனங்களைச் செய்து ஐந்து வர்த்திகளையுடைய தட்டுத்தீபத்தைக் காட்டி கர்ப்பூரதீபராதனை செய்து தாம்பூலம் கொடுத்து வலம் வந்து வணங்கி, குரு உபதேசித்தப்படி மந்திரங்களால் துதித்து ஐந்தெழுந்து மந்திரத்தை ஜெபித்து பலவித சிவ ஸ்தோத்திரங்களைக் கூறி

தாவ கஸ்த்வத் கதப்ராணஸ் தச்சித்தோஹம் ஸதாம்ருடா
கிருபாநித இதிஜ ஞாத்வா பூதநாதா ப்ரஸீதமே

என்றபடி நான் உம்முடையவன், உம்மிடத்தில் பிராணனுடையவன் உம்மிடத்திலேயே மனதையும் உடையவன் கிருபாநிதியே சகல பிராணிகளுக்கும் பிரபுவே, பூதநாதா எனக்கு நீர் பிரசன்னராக வேண்டும் என்று மலர் தூவி புஷ்பாஞ்சலி செய்து வணங்கி! க்ஷமாபணம் செய்து நான் மீண்டும் பூஜை செய்யும்போது இங்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டுதல் வேண்டும்.

28. சிவபூஜைக்கு உரிய மலர்களும் தாரையும்

நைமிசாரண்ய வாசிகள், சூதமா முனிவரைப் பார்த்து வியாசரின் சீடரே! சிவபெருமானை எந்தெந்த மலர்களால் பூஜித்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்? என்று கேட்டார்கள். சூதமா முனிவர் கூறலானார். தவஞானிகளே! பெருஞ் செல்வம் பெற விரும்புவோன் தாமரை மலர், வில்வம், சதபத்திரம் ஸங்கபுஷ்பம் ஆகியவற்றால் லக்ஷணக்கணக்கில் பூஜித்தால், சந்தேகமில்லாமல் பெருஞ் செல்வத்தைப் பெறுவான்.

தாமரை மலர்கள் இருபது கொண்டது பிரஸ்தம், சதபத்திரம் ஆயிரம் கொண்டது அர்த்த பிரஸ்தம் வில்வதளம் ஆயிரம் கொண்டது பிரஸ்தம்(பதினாறு பலம் எடையுடையது பிரஸ்தம்) மஹாபூஜையில் மலர்களைக் கொண்டு பூஜிக்கும்போது மலர்களை எண்ணிக்கொண்டே பூஜிப்பது தவறாகையால் இப்படி நிறுத்துப் பூஜிக்க வேண்டும்.

இராஜ போகத்தை விரும்புவோன் பழுதில்லாத பத்து கோடி மலர்களால் பார்த்திவலிங்கத்தைப் பூஜிக்க வேண்டும், அல்லது பத்து கோடி வில்வதளத்தை சுகந்த சந்தனத்தில் தோய்த்துப் பூஜிக்க வேண்டும் இதற்குத் தாமரை மலர்கள் அல்லது சங்க புஷ்பங்கள் பூஜிக்கத் தக்கவை பிறகு தூபதீப நைவேத்ய, அர்க்ய, ஆரார்திக பிரதக்ஷிண, நமஸ்கார, க்ஷமாபண, விஸர்ஜனம் முதலியவற்றைச் செய்தால், இஷ்ட போகமும் ராஜரீகமும் உலகநாயகரான சிவபெருமான் திருவருளால் கிடைக்கும்.

பிரதானித்துவத்தை விரும்புவோன். ஐந்து கோடி மலர்களாலும் சிறையிலிருந்து நீங்க விரும்புவோன் லக்ஷம் புஷ்பங்களாலும் நோய் நீங்க விரும்புவோன் ஐம்பதாயிரம் மலர்களாலும், அழகான மங்கையை மணஞ்செய்து கொள்ள விரும்புவோன் இருபத்து ஐயாயிரம் மலர்களாலும் கல்வியில் விருப்பம் கொண்டவன் பன்னிராயிரத்து ஐநூறு மலர்களாலும் பகைவன் வெற்றி கொள்ள விரும்புவோனும் பகைவனை ஊரை விட்டு விரட்ட விரும்புவோனும் பத்தாயிரம் மலர்களாலும் பூஜிக்க வேண்டும். மாரணஞ் செய்ய விரும்புவோன் நான்கு லக்ஷம் மலர்களாலும் மோகனஞ் செய்ய வேண்டியவன் இரண்டு லட்சம் மலர்களாலும் ஒரு பிரபுவை வெல்ல விரும்பியவன் கோடி மலர்களாலும் வசியஞ் செய்யவும் கீர்த்தியடையவும் வேண்டியவர்கள் பதினாயிரம் மலர்களாலும் முக்தி வேண்டியவன் ஐந்து கோடி மலர்களாலும் ஞானம் வேண்டியவன் கோடி மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிவபெருமான் பிரத்தியட்சமாக வேண்டியவன் அரைக் கோடி மலர்களாலும் அர்ச்சித்து மிருத்யுஞ்சய மந்திரத்தை ஐந்து லக்ஷம் உரு ஜபிக்க வேண்டும், லக்ஷ மலர்களால் செய்த அர்ச்சனை தேகத் தூய்மையையும் இரண்டு லட்சத்தில் செய்தது ஜன்மாந்தர ஞானமும் மூன்று லட்சத்தால் கர்மநாஞானமும் நான்கு லட்சத்தால் ஸ்வப்னதரிசனமும், ஐந்து லட்சத்தால் சிவப்பிரத்தியக்ஷமும் பத்து லட்சத்தால் எல்லாம் பயன்களும் கைகூடும்

முக்தி நிலை அடைய விரும்புவோன் லட்சம் தருப்பையாலும் தீர்க்காயுளை விரும்புபவன் லட்சம் அறுகினாலும் புத்திரப் பேற்றை விரும்புபவன் லட்சம் கருவூமத்தையாலும் புகழை விரும்புபவன் லட்சம் அகத்திப் பூவினாலும் சித்தி முக்திகள் வேண்டியவள். லட்சம் துளசியாலும் சத்துருக்ஷ்யம் வேண்டியவன். லட்சம் லட்சம் வெள்ளெருக்கமலர் மாதுளைமலர் உற்பல மலர், சப்பாத்தி மலர்களாலும், ரோக நீக்கம் விரும்பியவன் கரவீர மலர்களாலும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தை வேண்டுவோன் அதஸிப் பூவினாலும் முக்திகாமி வன்னியினாலும் அழகான பெண்ணை அடைய விரும்புவோன் மல்லிகையாலும் தானிய சம்பத்தை வேண்டியவன் மலை மல்லியாலும் வஸ்திர சம்பத்தை வேண்டியவன் கோங்க மலராலும் மனநிர்மலத்தை வேண்டுவோன் நிர்க்குண்டியாலும் பூஜிக்க வேண்டும். சிவப் பிரீதியான மலர்கள் கிடைக்கா விட்டால் சண்பகம், தாழை தவிர்த்து, இதர மலர்களால் பூஜிக்கலாம் இவ்விரண்டு மலர்களும் சிவபூஜைக்கு யோக்கியமற்ற மலர்கள்  இவை அவ்வாறு நீக்கப்பட்டதற்கான காரணத்தைப் பின் சொல்லுகிறேன். சிவப்பிரீதியான மலர்கள் லட்சங்கொண்டு அர்ச்சித்தால் அனந்தமான பயன்கள் கிடைக்கும் இனி சிவபெருமானுக்குத் தான்யம் சமர்ப்பிக்கும் பயன்களைச் சொல்லுகிறேன்.

சிவபெருமானுக்கு சுவேத அட்சதையை (வெள்ளையான முனை முறியாத அரிசியை) லட்சம்(ஒன்பது பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சகல சம்பத்தும் உண்டாகும். இது போதாயன முனிவர் அருளிய ருத்ரநியாஸ விதானப்படி சுந்தர வஸ்திரந்தரித்துப் பிறகு சமர்ப்பிக்கத் தக்கது. இதற்கு வில்லப் பழத்தை வைத்து தூபதீப ஆராதனைகள் செய்தால் பூஜாபலன் கைகூடும் இவ்வாறு செய்பவன் இருபது அந்தணருக்கு அன்னமிட்டு நூற்றெட்டு ஸ்ரீருத்திர காயத்திரி ஜெபிக்க வேண்டும். எள் அட்சதை பதினொரு பலம் சமர்பித்தால் சகல பாபங்களும் நாசமாகும். இதற்குப் பிராமண பூஜையும் செய்ய வேண்டும். யவை அட்சதை லட்சம்( எட்டரை பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சுவர்க்க போகம் கிடைக்கும். இதற்கு பிரஜாபத்யகிருச்சிரத்திற்குச் செலவாகும் தொகையைப் பிராமண போஜனத்திற்குச் செலவிடலாம். கோதுமை அட்சதை லட்சம் (நூற்று இருபத்தெட்டு பலம்) சமர்ப்பித்தால் ராஜாதிபத்தியம் உண்டாகும். இதற்கும் மேலே சொன்ன அளவு பிராமண போசனம் செய்விக்கப்பயறு அக்ஷதை லட்சம் (ஏழரை பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சுக ஜீவனமும் உண்டாகும், உளுந்து அட்சதை லட்சம் (பதினைந் தரைப் பிரஸ்தம்) சமர்ப்பித்தால் இஷ்டகாமியங்கள் கிடைக்கும் இதற்கு பதினொரு பிராமணரை போக்ஷிக்கவும் சாமைதினை முதலிய தானிய அட்சதை (சுமார் ஒரு பிரஸ்தம்) சமர்ப்பித்தால் அறம், பொருள், இன்பம், வீடு (கர்ம அர்த்த காம மோட்சங்கள்) கிடைக்கும். இதற்குப் பன்னிரண்டு பிராமணர்களுக்கு அன்னமிடவும் கடுகு இலட்சம் (இருபது பலம்) சமர்ப்பித்தால் சத்துரு மாரணமாகும் இதற்கு நூற்றியொரு பிராமண போஜனமும் ஒரு கோதானமும் ஒரு ரிஷபதானமும் செய்க, இவை தவிர வேறு பல விதமான தானியங்களாலும் பூஜை செய்யலாம் துவரை இலையை குங்குமம் கலந்த சந்தனத்தில் தோய்த்துப் பூஜித்தால் பற்பல பயன்கள் சித்திக்கும் இவ்வாறு சூத முனிவர் கூறியதும் நைமி சாரண்யவாசிகள் அவரை நோக்கி, சிவஞானச் செல்வரே! தானியங்கள் ஒரு லட்சம் எவ்வளவு எடையிருக்கும் என்று சொன்னீர்கள்? இனி மலர்கள் லட்சத்துக்கு எவ்வளவு எடையிருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும் என்றார்கள். சூதமாமுனிவர் சொல்லலானார்

முனிவர்களே, சங்கு புஷ்பம் ஒரு பிரஸ்தமும் ஜாதி மல்லிகை இருபது பிரஸ்தமும், திலபுஷ்பம் பத்தொன்பது பிரஸ்தமும், கரவீரம் நாற்பது பிரஸ்தமும் நிர்க்குண்டி நாற்பது பிரஸ்தமும், கோங்கு திரிசனம் இவை பத்துப் பிரஸ்தமும் லட்சம் மலர்களாகையால் பிற மலர்களை இவ்வாறே எடை நிர்ணயித்துப் பூஜிக்க வேண்டும். இனித் தாரா பூஜையைச் சொல்லுகிறேன்.

சிவலிங்கப் பெருமானின் மீது சொரியும் படி தாராபாத்திரங்கட்டி, அதனால் பூசித்தால் ஜ்வரம் முதலியவை நீங்கும் சதருத்திரம் ஏகாதசருத்திரம், ருத்திரம் புருஷஸுகம், மிருத்யுஞ்ஜயம், காயத்திரி சிவ நாமங்கள் முதலியவற்றாலும், ஆகம யுக்தமான பத்திரங்களாலும் தாரா பூஜையைச் செய்ய வேண்டும் ஜலதாரை பூசையால் சுக விருத்தியும் சந்தான விருத்தியும் கைகூடும். நெய்யைத் தாரா பாத்திரத்தில் சொரிந்து அபிஷேகம் செய்தாலும் செய்வித்தாலும் வமிச விருத்தியும் ரோக நாசமும் உண்டாகும், இது நபும்சகம் வந்தபோது, பத்தாயிரம் மந்திர ஜபத்தோடும், பிரசபத்ய கிருச்சிர செலவின் அளவு தொகைக்கு பிராமண போஜனத்தோடு செய்யத்தக்கது, சர்க்கரை கலந்த பாலை தாரா பாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் ஒருவன் தன்மேல் செய்த பிரயோகம் ஒழியும். இது பதினாயிரம் மந்திராஜபம் முடியுமளவும் தாரை பொழிய வேண்டும். சத்துரு உச்சாடனமும் பயமும் நீங்கும். பரிமளங் கலந்த தைலதாரை சத்ருக்களைத் தொல்லைப்படுத்தும், தேன் தாரைபற் பல ரோகங்களைப் போக்கும். கருப்பஞ்சாற்று தாரை சகல துக்கங்களையும் ஒழிக்கும், சுத்தமான ஜலதாரை மோட்சப்பலன் கொடுக்கும். இவை ஒவ்வொன்றும் தீமையை அகற்றி சுகத்தை கொடுக்கத் தக்கவை, இவற்றைப் பதினாயிரம் மந்திர சபத்தோடும் பதினொரு பிராமண போசனத்தோடும் செய்வித்தால் இஷ்டகாரியங்கள் கைகூடும். முனிவர்களே! நீங்கள் கேட்டவற்றுக்குதக்க பதிலை சொன்னேன். இவ்விதமாகப் பூஜித்தவர்கள் சகலபாபங்களும் நீங்கப்பெறுவர், ஸ்கந்தர், பார்வதி, கணேசர் இவர்களுடன் கூடிய சிவபெருமானை ஒருமுறையாவது பூஜித்தவனுக்கு இம்மை மறுமைப் பயன்கள் கைகூடி கோடி சூரியப் பிரகாசமான விமானத்தில் ஏறி அவ்வுலகை அடைந்து அங்கு அநேக தேவதாசிகள் நடனம் செய்யவும் இன்னிசை முழங்கவும் சிவபெருமானைப்போல, எந்த உலகத்தில் எவ்வளவு காலம்வாழ வேண்டும் என்று விரும்புவார்களோ, அவ்வுலகத்தில் அத்தனைக் காலம் அப்படியே வாழ்வார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமில்லை.

29. தாழம்பூ பெற்ற சாபம்

சூத புராணிகரே; நீங்கள் தன்யர் அதிக புண்யர். நீங்கள் சொன்ன சிவ மஹாத்மியத்தைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அதில் சண்பகம், தாழை என்ற இரண்டு மலர்களும் சிவ பூஜைக்கு அருகதையற்றவை என்று சொன்னீர்களே? அதற்கு காரணம் என்ன? என்று நைமிசாரண்ய வாசிகள் கேட்டார்கள்.

சூதமாமுனிவர் கூறலானார்.

ஒரு காலத்தில் ஸ்ரீராமர் லக்ஷ்மணரோடும் சீதையோடும் தன் தந்தையின் கட்டளைப்படி வன சஞ்சாரம் செய்யச் சென்ற போது பல்குநதி தீரத்தில் தங்கியிருந்தார்கள். அந்தக் காலத்தில் தன் தந்தையின் சீரார்த்த தினம் வந்தது. வரவே இன்று அந்தத் திதியை எவ்வாறு முடிப்போம் என்று யோசித்துத் தம்பியாகிய இலக்ஷ்மணனைப் பார்த்து, தம்பீ! நீ அருகேயிருக்கும் கிராமத்துக்குப் போய் கொஞ்சம் தானியங்களைக் கொண்டுவா! என்று கட்டளையிட்டார். இலக்ஷ்மணன் நாணத்துடன் சென்று சீரார்த்த காலம் சமீபிக்கும் வரையில் திரும்பி வராததால் காலங்கழியும் என்பதையறிந்து இராமபிரானும் அங்குசென்றார். சீதை மட்டும் தனியாக இருந்தாள். அவள் நாம் பகலில் செய்ய வேண்டிய சிரார்த்தத்துக்குத் தேவையான சாமான்கள் இல்லையே? நம் கொழுந்தனும் கணவனும் இன்னும் வரவில்லையே? எப்படி இந்தச் சிரார்த்தத்தை முடிப்பது சிரார்த்த காலமும் கழிந்து போகிறதோ? இனி ஆசுர காலம் வருமே என்று விசனத்துடன் நெடு நேரம் யோசித்தாள். பிறகு விதிப்படி நீராடினாள். தாபசம், இங்குதி என்ற பழங்களைக் கொண்டு வந்து அவற்றை நெருப்பிலே அவித்து மணல் மேட்டில் காத்திருந்தாள். அப்பொழுதும் அவர்கள் வராததால், பிதுர்க்களுக்கு உரிய பிண்டத்தை நான் எப்படிக் கொடுப்பேன் என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு கிடைத்த சிறிதுமாவை பிண்டமாகச் செய்து இது என் மாமனாரான தசரதராஜருக்கு அர்ப்பணமாக வேண்டும் என்று நினைத்தாள். அப்போது பிதுர்க்கள் வந்து நாங்கள் நீ செய்த சிரார்த்தந்தில் திருப்தி அடைந்தோம். சீதா பல பூஷண அலங்காரமான உன் கையால் நாங்கள் பிண்டம் பெற்றதில் மகிழ்ந்தோம் என்று அதை ஏற்று நிற்கும் போது, சீதாதேவி அவர்களை நோக்கி நீங்கள் யார்? என்று கேட்க அதைக் கேட்ட பிதுர்களில் சீதையின் மாமனாரான தசரதர்: நல்ல நியமம் உடையவளே! நான் உன் மாமன், நீ கொடுத்த பிண்டம் எங்களைத் திருப்தி செய்தது அது சபலமாயிற்று சீதை என்றார். அவர்களை நோக்கி நீங்கள் நான் கொடுப்பதை உங்கள் கையால் ஏற்றுக் கொண்டீர்கள். இதை என் கணவர் கேட்டால் நம்பமாட்டாரே! என்றாள்.

அதற்குத் தசரதர் சீதையே நோக்கி, அவ்வாறாயின் தக்க சாட்சிகளை வைத்துக் கொள் என்றார். அச்சமயத்தில் அங்கிருந்த பல்குநதி, பசு, அக்கினி, தாழை என்ற நான்கையும் சீதை பார்த்து, நீங்கள் நால்வரும் இதற்குச் சாட்சியாக இருந்து என் கணவருக்கு இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும் என்றாள். பிதுர்களும் சென்று விட்டார்கள் பிறகு ஸ்ரீராமன் வந்தார். வந்தவர் சீதையைப் பார்த்து சீதை! விரைவில் உன் காரியங்களைச் செய்! உன் மாமன் வருவார் என்றார். அதைக் கேட்ட ஜானகி ஆச்சிரியப்பட்டு நடந்தவை எதையும்சொல்லாமல் இருந்தாள். அவள் தாமதிப்பதைக் கண்ட ஸ்ரீராமர், நீ ஏன் இப்படி சும்மா இருக்கிறாய்? என்று கேட்டார். சீதை நடந்தவற்றையெல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள். அதைக் கேட்டதும் ஸ்ரீராமர் தம் தம்பி லக்ஷ்மணரை நோக்கி, தம்பீ, நீ சீதை சொன்னதைக் கேட்டாயா? என்றார். சீதையைப் பார்த்து, பெண்ணே! நாங்கள் எவ்வளவு சாஸ்திரோக்தமாகச் செய்தாலும் எங்களுக்கு பிரத்யட்ச மாகாத பிதுர்கள் உன் கண்ணெதிரில் தோன்றினார்கள் என்பது அபத்தம் என்றார். அதைக் கேட்ட சீதை ஸ்வாமி! நான் பொய் சொல்லவில்லை எனக்குச் சாட்சிகளும் உண்டு. அச்சாட்சிகளை நீங்களே விசாரித்துக் கொள்ளலாம் என்றாள். ஸ்ரீராமர் சாட்சிகளிருந்தால் நீ சொல்வது நம்பத் தக்கதே என்றார். உடனே சீதை அந்த நான்கு சாட்சிகளையும் காட்டி இவர்களே சாட்சிகள் என்றாள். சாட்சிகள் இராமர் முன்பு உண்மையைச் சொல்லப் பயந்து நாங்கள் அதை அறியோம் என்றன. இராமரும் லட்சுமணரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, நான் வழக்கப்படி சிரார்த்தம் செய்யவேண்டுவதே, ஆகையால் விரைவில் சமையல் செய்! என்று சீதைக்குக் கட்டளையிட்டார். சீதையும் துக்கித்து சமையல் செய்து கொண்டிருந்தாள்.

அப்போது இராமர் சங்கல்பம் செய்து சிரார்த்தத்திற்கான பிராமணர்களை ஆவாஹனம் செய்தார். அப்போது சூரியனின் அருகிலிருந்து ஓர், வானொலி புத்திரனே! ஏன்? ஆவாஹனம் செய்கிறாய்? நாங்கள் ஜானகி செய்த சிரார்த்தத்தாலேயே திருப்தியடைந்தோம் என்று கூறியது. ஸ்ரீராமரோ, நான் ஜானகி சொன்னதை உண்மை என்று ஏற்றுக் கொள்வதற்கில்லை என்றார். அப்போது பிதுர்க்களின் வான்குரல் செய்த சிரார்த்தத்தை மீண்டும் செய்யக்கூடாது என்று கூற இராமர் அதை நம்பாது யோசிக்கும்போது சூரியபகவான் ஸ்ரீராமர் முன்பு பிரத்யட்சமாகி நீயேன் மீண்டும் சிரார்த்தம் செய்கிறாய்? என்றார். உடனே ஸ்ரீராம லக்ஷ்மணர்கள் சீதையைப் பார்த்து நன்றாக இருக்கிறது சீதா! நீயே புண்ணியசாலி! என்று புகழ்ந்தார்கள். பிறகு அவர்கள் அவள் செய்த பாகத்தை புசித்தார்கள். ஸ்ரீராமர் தம்பியைப் பார்த்து, லக்ஷ்மணா! இவர்கள் சாட்சியாகக் கோரப்பட்டும் ஒன்றும் சொல்லாமல் இருந்தார்கள்... துன்மார்க்கர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது சீதை அந்த சாட்சிகளைப் பார்த்து கோபத்துடன் நீங்கள் உண்மையை என் கணவருக்குச் சொல்லாததால், பல்கு நதியே நீ அந்தர்வாஹினியாக இருக்க வேண்டும் தாழம்பூவே நீ என்னால் பூஜிக்கப்படும் பரமேஸ்வரனுக்கு பூஜாயோக்கியமின்றிப் போவதே உனக்குத்தகும். பசுவே உனக்கு வாய் யோக்கியமற்று போவதால் நீ பின்புறத்தில் யோக்கியமும் முகத்தில் அயோக்கியமும் ஆவாய்! அக்கினியே! எல்லா தேவர்களுக்கும் முகஸ்வரூபியாகிய நீ இதனால் எல்லாவற்றையும் தின்றெரிக்கும் சர்வபக்ஷகவாக வேண்டும் என்று சபித்தாள். அந்நால்வரும சீதையின் சாபத்தைப் பெற்றார்கள். அன்று முதல் அந்நான்கும் சாபத்தின்படியே ஆயின. தாழம்பூவுக்கு ஏற்பட்ட சாபத்தின் கதை இதுதான் இனி சண்பகப் பூவுக்கு சாபம் வந்ததைச் சொல்கிறேன்.

30. சண்பகப்பூ பெற்ற சாபம்

நைமிசாரணயவாசிகளே! உலகங்கள் அனைத்திற்கும் சுகத்தைக் கொடுக்கும் சிவபெருமான், கோகர்ணேஸ்வரர் என்ற திருப்பெயர் பெற்றுத் தென் திசையில் இருக்கிறார். அவரது தரிசனத்தால் பாபங்கள் எல்லாம் நீங்கும். ஒரு காலத்தில் நாரத முனிவர் அங்கு வந்தார். அப்படி வரும்போது பரிமளம் மிகுந்த சண்பகமலர்கள் நிறைந்த மரம் ஒன்றையும் அதன் அருகே மலர் கொய்ய வந்த தேவியர் ஒருவரையும் கண்டார். அந்த வேதியர், நாரதரையும் அவர் கையில் ஏந்தியிருந்த மகதி என்ற வீணையையும் பார்த்தார். அதன் நாதத்தைக் கேட்டுச் சிறிது நேரம் அங்கிருந்துதான் செய்து வந்த வேலையைச் செய்யாமலே இருந்தார். நாரதர் அவரைப் பார்த்து மறையோனே! நீ கையில் பாத்திரமேந்தி இங்கு வந்த காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு வேதியர் உண்மையைச் சொல்லாமல், நான் பிச்சையெடுக்கப் போகிறேன் என்றார். பிறகு நாரத முனிவர் அங்கிருந்து ஈஸ்வரசன்னதியின் உள்ளே சென்று, இறைவரைத் தரிசித்து மீண்டும் வெளியே வரும்போது வேதியரைக்கண்டார் அந்தப் பிராணரோ நாரதர் அறியாதவாறு கொய்த மலரைப் பூஜித்துத் தன் கையிலிருந்த பாத்திரத்தை மறைத்துக் கொண்டு வெளியே வந்தார். இருவரும் சந்தித்தார்கள் நாரதர் வேதியரை நோக்கி, நீர் எங்கேயிருந்து வருகிறீர் என்று கேட்க அதற்கு அவர் நான் எங்கும் பிச்சை கிடைக்காததால் போகிறேன் என்று பொய் சொன்னார். நாரதர் தமது ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து சண்பக மரத்தின் அருகே சென்று மரமே! அந்த வேதியர் எங்கே போனார்! உன்னிடமிருந்து எத்தனை மலர்களைக் கொய்தார்? என்று கேட்டார்? ஆனால் வேதியர் தன் வரலாற்றை ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என்று தன்னிடம் சொல்லியிருந்தால் அந்த மரம், அந்தப் பிராமணர் யார்? மலர்கள் ஏது? நீர் யாது? என்னை ஏன் இக் கேள்விகளையெல்லாம் கேட்கிறீர்? என்று கேட்டது. நாரதர் உண்மையை அறிந்து சிவ சன்னதியை மீண்டும் அடைந்து சிவபெருமான் பூஜை செய்திருந்த மலர்களைக் கணக்கிட்டுப் பார்த்தார். நூற்றியொரு மலர்கள் இருந்தன.

இப்படியிருக்கும்போது மற்றொரு வேதியர் மலர்களைக் கொண்டு வந்து சிவலிங்கப் பெருமானைப் பூஜித்தார், அவரைப் பார்த்த நாரத முனிவர் நீ யார்? எதற்காக பூசை செய்கிறாய்? இந்தப் புஷ்பங்களெல்லாம் இதற்கு முன்பு யாரால் கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்டன? என்று கேட்டார். அதற்கு அந்த வேதியர் உண்மையைச் சொன்னார். ஐயா! நான் சதா சிவபூஜை செய்து முக்தியடைய வேண்டி இங்கு வந்தேன். இதற்கு முன் இங்கு வந்து பூஜித்த பிராமணர் இராஜ அனுக்கிரகத்தைப் பெற வேண்டும் என்று சிவபெருமானை தினந்தோறும் நூற்றியொரு சண்பக மலர்களால் அர்ச்சனை செய்து அவ்வாறே ராஜப் பிரியமடைந்து, அரசனால் செல்வம் பெற்று மற்றுமுள்ள மறையோரை வாட்டி வருத்துகிறார். இந்த சண்பகமலரின் சிறப்பைக் கண்டு பெருமையடைந்து இன்னமும் இங்கு வந்து பூஜிக்கிறார், நான் மோட்சம் அடையவேண்டும் என்று நான் பூஜிக்கிறேன், என்றார். நாரதர் உண்மையைச் சொன்ன அந்த அந்தணரைப் பார்த்து உனக்கு நிரந்தர முக்தி கிடைப்பது சத்தியம் என்று சொல்லி விட்டுச் சிவபெருமானின் சன்னதிக்குச் சென்று, சுவாமி! அந்த அந்தணன் சண்பகமலரால் உம்மைப் பூஜித்து ராஜப்பிரியத்தையும் வேதியருக்குத் தானம் கொடுக்கும் அருளையும் பெற்றதால் பிறரை வருத்துகிறான். இவையெல்லாம் சண்பக புஷ்பத்தின் பூஜா பலன், அத்தகைய பயனை அந்தத் துஷ்டனுக்கு ஏன் கொடுக்க வேண்டும்! என்றார்.

அதற்குச் சிவபெருமான் நாரதரே! அது சண்பக மலர்ப் பூஜையின் பயன்! சண்பகத்தால் அர்ச்சனை செய்தவருக்கு வேண்டிய வரங்களை நாம் கொடுப்பதில் எந்தவித தடையுமில்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் ஒரு பிராமண மங்கை துக்கத்துடன் அங்கு வந்து சிவபெருமானை பார்த்து சிவசங்கரா, அந்த துஷ்ட வேதியனை தாங்கள் தண்டிக்க வேண்டும். என் வீட்டிலிருக்கும் பொருட்களையெல்லாம் அவன் பலாத்காரமாகக் கொண்டு போய் விட்டான் என்று முறையிட்டாள். நாரதர் அந்த பிராமண மங்கையை நோக்கி, மாதே யாரால் உனக்கு இத்தகைய துன்பம் நேரிட்டது? நீயே ஏன் அழவேண்டும் என்றார்.

மகானுபாவரே!  என் துக்கத்தைச் சொல்கிறேன் காது கொடுத்துக் கேளுங்கள் என்று சொல்லத் துவங்கினாள். முனிவரே! என் கணவர் கர்மவசத்தால் முடமாகி வீட்டில் இருந்தார் எனக்கு ஒரு புதல்வி திருமணபருவம் நெருங்கியதால் வீட்டில் இருக்கிறாள். அவளுக்குகல்யாணம் செய்யவேண்டிய அவசியத்தாலும் பொருள் இல்லாததாலும் என் கணவர் அரசனிடம் சென்று இன்று தானம் வாங்கினார். அதற்காக இத்துஷ்டவேதியன் என் வீட்டில் பலாத்காரமாக நுழைந்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் கொண்டு போனான். அரசனோ இவை ஒன்றும் அறியாத அந்தகனைப் போல் இருக்கிறான். இந்த விஷயத்தை முறையிட்டும் அவன் கேட்கவில்லை என்ன செய்வது என்று எனக்கு எதுவும் தோன்றவில்லை. என் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் கவர்ந்து சென்ற பிராமணன் இங்கு தினந்தோறும் சிவபூஜைக்கு வருகிறான் என்றாள்!

நாரதர் அந்த மங்கையை பார்த்து, சுந்தரி! உன் கணவனுக்கு அரசன் என்ன தானம் கொடுத்தான்? என்று கேட்டார்.

அதற்கு அவள் முனிவரே அரசன் பெருஞ் செல்வத்துடன் உபயகோமுகி தானஞ் செய்தான்; அதை இங்கே பூஜைக்கு வருகிற பிராமணனே கொடுக்க வைத்து தான் கொடுப்பித்த காரணத்தால் என் வீட்டிற்கு வந்த அவற்றைக் கொள்ளையிட்டான். இந்த விபரீதநஷ்டத்தை நான் யாரிடம் சொல்வேன்? நான் என்ன செய்வேன்? என் கணவர் இது வரையில் இத்தகைய பாப தானத்தை வாங்கியவர் அல்ல. என் கன்னிகைக்கு கல்யாணம் செய்யவே அத்தகைய தானத்தை வாங்கினார், பிராமணனோ அந்தத் தானத்தால் தனக்குப் பாதியைத் தர வேண்டும் என்று தொந்தரவு செய்தான். அதற்கு நாங்கள் தானம் வாங்கியப் பொருளில் பாதியைப் பெற்றுக்கொள் என்றோம். அவனோ தானம் மட்டும் போதாது. பசுவையும் பங்கிட்டு கொடு என்றான். பசுவைவிலை மதித்தலும் பாதியாகப் பங்கிடுவதும் தோஷமாதலால், அந்தப் பாவத்தை ஒழிக்க வழியில்லை என்று நாங்கள் சொன்னோம், என்றாள்.

நாரதர், சிவபெருமானை வணங்கி மகாதேவா! இத்தகைய துஷ்டப் பிராமணன் கையால் தாங்கள் எவ்வாறு பூஜிக்கப்படுகிறீர்? இவனைவிடத் துஷ்டன் ஒருவனுமில்லையே! முதலில் அரசனிடம் தானம் வாங்கவே கூடாதே அத்தகைய தானத்தை வாங்கியவனிடத்திலேயே பசுவை பங்கிட்டுப் பொருள் வாங்குவோனின் பாபத்திற்கு ஓர் அளவு உண்டோ? என்றார்.

கோமஹாத்மியம்

பசுவின் வலது கொம்பில் கங்கையும், இடது கொம்பில் யமுனையும் மத்தியபாகத்தில் சரஸ்வதியும் முன்காலில் பிரமனும் மத்திய பரிவாரங்களுடன் உத்திரனும், பின்புறத்தில் விஷ்ணுவும் பக்கங்களில் அநேக தீர்த்தங்களும் வயிற்றின் வலது புறத்தில் முனிவர்களும், இடது புறத்தில் சகல தேவர்களும் வயிற்றின் கீழ் சகல நதிகளும் குளம்புகளில் வேதங்களும் பால்மடியில் சமுத்திரங்களும், ஆக, பசுவை இடமாகக்கொண்டு உலகம் முழுமையும் விளங்கும் இத்தகைய சிறப்பையுடைய பசுவைப் பூஜித்து பிரதக்ஷிணம் செய்தால் பூப் பிரதக்ஷணம் செய்த பலன் கிடைக்கும். பசுவைத் தானம் செய்பவன் கடல் சூழ்ந்த பயன் கிடைக்கும் பூவுலகையே தானம் செய்த பயனை அடைகிறான். எனவே கோ தானமும் பூமிதானமும் சம பலமுடையன, பசுவின் சாணத்தையும் கோமூத்திரத்தையும் உட்கொண்டவன் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவான். பசுவிடம் பூஜிக்கத் தகாத இடம் எதுவுமில்லை உலகத்தில் கோதானம் பூதானம் வித்யாதானம் ஆகிய மூன்றும் பவித்ரமானவை. இவை நாகத்திலிருந்து நூற்றியொரு தலைமுறைகளை சுவர்க்க வாசத்தில் சேர்க்கக்கூடியவை. பிராயச்சித்தமே இல்லாத பாங்களும் கோதானத்தில் ஒழியும் பசுவின் தரிசனம் ஸ்பரிச தியானம் ஆகியவை உண்டு பண்ணும் பயனைச் சொல்ல முடியாது, அதன் கொம்பில் பொன், குளம்பில் வெள்ளி புட்டத்தில் தாமிரம் கண்களில் பவளம் கழுத்தில் ஆபரணம் உடல் முழுவதும் ஆடைகள் இவற்றால் அலங்கரித்து பால் கறக்கும் வெண்கல பாத்திரத்தோடும் கன்றோடு நன்றாகக் கறக்கும் இளம் பருவமும் அழகும் கொண்ட பசுவை தேசகாலத்தில் யோக்கிமானவனுக்குத் தானஞ் செய்தால் கொடுத்தவனுக்கு எவ்வுலகத்திலும் துர்லமானது ஒன்றுமில்லை. இவ்வகையான கோதானம் கொடுத்தவனுக்குப் பெற்றுக் கொண்டவன் செய்திருக்கும் புண்ணியத்தில் எட்டுப் பங்கு அதிகப் புண்ணியம் கிடைக்கும் தாயை விற்றல். கன்னியை விற்றல் வேத விக்கிரயம் கோவிக்கிரயம் இந்த நான்கு பாபங்களுக்கும் பிராய்ச்சித்தமில்லை.

ஓ சுவாமி இந்தத் துஷ்டப் பிராமணன் பசுவைப் பங்கிடச் சொல்கிறானே? இதற்கு என்ன செய்வது? தங்களுக்குப் பக்தனாக இருப்பதால் ஒன்றும் செய்யக் கூடவில்லையே! என்று வருந்தினார். அதைக் கேட்ட சிவபெருமான் நாரதரே! நீ என் பிரம பக்தனாகையால் உன் மனதில் எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்தால் அது எனக்குச் சம்மதமே, இவன் என் பக்தனாகையால் முன்னால் பாப பலத்தையும் பின்னால் சிவார்ச்சனை செய்த பயனையும் அடையும்படிச் செய்யலாம் என்று கட்டளையிட்டார்.

நாரதர் சண்பக விருட்சத்தையடைந்தார். அதனருகே சென்று சண்பகமரமே? உன்னிடமுள்ள பல மலர்களை நாள்தோறும் அறுத்துச் செல்பவன் யார்? உண்மையை ஒளிக்காமல் சொல் என்றார் .அதற்கு அந்த மரம் ஒன்றும் பதில் சொல்லாதிருக்கவே நாரதர் கோபங்கொண்டு சண்பகமரமே உலகத்தில் உண்மை என்பது யாருக்கும் யாவற்றுக்கும் சாதகமானது, உண்மையைப் பேசினால் இந்த உலகத்திலும் மோட்ச உலகத்திலும் அசாத்தியம் என்பது எதுவுமில்லை. அப்படியல்லாமல் நீ அசத்தியம் கூறியதால் இன்று முதல் உன் புஷ்பம் உலகத்தில் சிவபெருமானுக்குப் பூஜாயோக்யமற்று போவதாகுக என்று சிவனானுக்கிரகத்தால் சாபங்கொடுக்கும் போது அந்த துன்மார்க்க வேதியனும் அங்கு வந்தான். நாரதர் அவனைக் கண்டதும் அடா! நீ சண்பக மலரின் சிறப்பினால் சிவபூஜை செய்து அரசனிடம் அதிகாரம் பெற்று, அநேக பிராமணருக்கு தொல்லை செய்கிறாய் நீ இவ்வாறு ராட்சஸ காரியம் செய்து கொண்டிருப்பதால் ராட்சஸனாகக் கடவாய் என்று சாப மிட்டார். அதைக் கேட்டதும் அந்தப் பிரமணன் நடுநடுங்கி என்தவற்றை மன்னித்துக் காப்பாற்ற வேண்டும் என்று நாரதரின் பாதங்களைப் பணிந்தான். அவர் சிவபெருமான் கூறிய வார்த்தையை மனதில் கொண்டு அவன் விஷயத்தில் தயாசொரூபியாய் பிராமணா! நான் சொன்னது மாறாதாகையால் நீ அவ்வாறே ராட்சஸ வடிவடைவாய் என்று கூற அப்போதே அவன் விராதன் என்று அசுரானானான். அப்போது நாரதர் அவனைப் பார்த்து நீ ஸ்ரீராமருடைய தரிசனமடைந்து அவரால் மரணமடைந்து பிறகு சிவனாரின் அருளால் திவ்விய உருவமடையக் கடவாய் என்று சாப விமோசனமும் கூறினார். அவன் அவ்வாறே சகல உயிரினங்களுக்கும் துன்பமிழைக்கத்தக்க விராதனானான். நாரதர் சிவபெருமானை நமஸ்கரித்து சண்பகத்தின் மகிமையை வர்ணித்து அங்கிருந்து சென்று விட்டார்.
ஆகையால் சண்பக மலர் சிவபூஜைக்கு யோக்கியதை இல்லாததாயிற்று என்று அறியுங்கள். இவ்வாறு சூதமாமுனிவர் கூறினார்.

31. கணபாலன் அவதரித்த கதை

பரம புண்ணியனே! நாங்கள் கேட்ட விஷயங்களுக்கு நீங்கள் சொன்ன பதில்களிலிருந்து எங்கள் சந்தேகங்கள் நீங்கின. நீங்கள் வியாசரின் சீடர், இது வரையில் பஞ்சாயதன பூஜை உத்தமம் என்றும் இஷ்ட காமியங்களைக் கொடுக்கதக்கது என்றும் சொன்னீர்கள். அதில் சிவபஞ்சாயதனம் விஷ்ணு பஞ்சாயதனம் சக்தி பஞ்சாயதனம், சூரிய பஞ்சாயதனம், கணபதி  பஞ்சாயதனம் என்ற ஐவகைப் பூஜைகளையும் பிரதானமாகக் கூறினீர்கள், கணபதி யாருடைய புதல்வர்? அவருக்கு இத்தனை மகத்துவம் எப்படி ஏற்பட்டது? சிவபெருமான் முதலிய பெருந்தேவர்களுடன் அவர் இருப்பானேன்? அதிலும் அவரை முற்படப் பூஜிப்பது ஏன்? என்று முனிவர் கேட்டார் சூதபுராணிகர் அதைக் கூறலானார்.

புண்ணிய புருஷர்களே! உலகத்தினரின் சுகத்திற்காக நீங்கள் கேட்டதால் அதையும் சொல்கிறேன். சிவபெருமான் பர்வத ராஜனின் புதல்வியாக அவதரித்த பார்வதிதேவியைத் திருமணஞ் செய்து அழைத்துக் கொண்டு, திருக்கைலாய மலையை அடைந்தார். சில காலம் சென்ற பிறகு, பார்வதிதேவி தன் தோழிகளாகிய ஜயை. விஜயை, என்பவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அத்தோழியர்களில் விஜயை என்பவள் பார்வதி தேவியைப் பார்த்து, அம்மா சிவபெருமானுக்கு நந்தி, பிருங்கி முதலிய பிரதமகணங்கள் கணக்கின்றி இருக்கும்போது உங்களுக்கு கணங்கள் ஒருவரும் இல்லையே! அவர்கள் தான் நம் வாசலில் சிவாக்கினைப்படி காவல் செய்கிறார்கள். ஆகையால் அவர்கள் சிவபெருமானின் கட்டளையை ஏற்று நடப்பதைப் போல உங்கள் கட்டளையை ஏற்க மாட்டார்களாகையால் நமக்கென்று ஒரு சேவகன் இருந்தால் நல்லது என்றாள். தோழியின் வார்த்தையைக்  கேட்டதும் பார்வதி அதை இதவார்த்தையாகக் கொண்டாள். ஒருநாள் பார்வதி தேவியின் அந்தப்புரத்தில் நீராடிக்கொண்டிருக்கும் போது சதாசிவமூர்த்தியான சிவபெருமான் அங்கு வந்தார். அவர் நந்திதேவரின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல் உள்ளே சென்றார். உள்ளே வந்த அவரைக் கண்டதும் நீராடிக் கொண்டிருந்த பார்வதிதேவி நாணமடைந்து நெளிந்து சென்று தன் தோழி விஜயை கூறியது சரிதான் என்று நினைத்தாள். எனவே தனக்கு என்று யோக்கியமான சேவகன் ஒருவன் இருக்க வேண்டுவது அவசியம் என்றும் அவன் தன் கட்டளையின்றி அணுவைக்கூட தன் அந்தப்புரத்தில் அனுமதிக்ககூடாது என்று எண்ணினான்.

ஏவம் விசார்யஸாதேவி ஜலம் ஜக்ராஹபாணிநா
தேஹஸ்தம் ருதமாதாய த்யாத்வாரூபம் ப்ரபோஸ் ஸாபம்
நிர்மாய ப்ரணவாகாரம் சதுர்பாஹுந்த்ரி லோசனம்
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் கஜவக்த்ரம் ஸுவாச்ருதிம்

இவ்வாறு தேவி யோசித்து கையிலே நீரை எடுத்துக் கொண்டு உடலில் தேய்த்து உருட்டி தன் நாதனான சிவபெருமானின் திருவுருவைத் தியானித்து அதுபோலவே பிரணவஸ்வரூபமும் யானைமுகமும் நான்கு தோள்களும் மூன்று கண்களும் மங்கள ரூபமும் உடையவராய் வெண்ணிற ஆடையுடுத்தி ஸர்வ வியாபியாய் விளங்கும் கணன் என்னும் புத்திரனை உருவாக்கி, உயிர்கொடுத்து வாயிற்படியில் நிறுத்தி, நீ என் உத்தர வில்லாமல் ஒருவரையும் உள்ளே விடாதே, என்று கட்டளையிட்டு நல்ல ஆடைகளையும் ஆபரணங்களையும் கொடுத்து நீ தீர்க்க ஆயுளுடையவனாக இருப்பாய் என்று ஆசீர்வதித்து நீ என் பிரியபுத்திரன் என்று கூறினாள். உடனே உமாபுத்திரன் தன் தாயைப் பணிந்து அம்மா! உனக்குள்ள பணிவிடைகளை யெல்லாம் செய்கிறேன் என்றார். அதைக் கேட்டதும் பார்வதி நீ இப்போது துவாரபாலகனாக இரு, என்று ஒரு தண்டத்தைக் கொடுத்து மகிழ்ந்து, முகத்தில் முத்தமிட்டு அன்போடு அனைத்து விட்டுத்தன் அந்தப்புரத்திற்குச் சென்றாள் அன்று முதல் கணதேவர் பார்வதியின் கட்டளைப்படித் திருவாயிலில் காவலிருந்து வரலானார்.

ஒருநாள் உமாதேவி தன் தோழியருடன் நீராடிக் கொண்டிருக்கும் போது சிவபெருமான் பிரமதகணசகிதராய் தேவியின் அந்தப் புரத்திற்குவந்து உள்ளே நுழைய முயன்றார். அப்போது வாயிற்படியில் காவலிருந்த கஜானனர் என் தாய் நீராடுவதால் உள்ளே போகக்கூடாது என்று சொல்லித் தடுத்துத் தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். அதைக் கண்டதும் சிவபெருமான், என்னை யாரென்று நினைத்தாய்? நானே சிவன் என்று சொல்லி மீண்டும் நுழைய முயலும்போது கணபதி கோபித்துக்கையில் இருந்த தண்டாயுதத்தால் ஓரடியடித்து சிவனாக இருந்தால் என்ன இப்போது ஏன் மீண்டும் போகிறீர்? என்று தடுத்தார். உடனே சிவபெருமான் கணபதியை நோக்கி, நீ என்னை அறிய மாட்டாய்! நீ மூர்க்கனாக இருக்கிறாய் உன்னை இங்கே அமர்த்தினவளுக்கு நான் கணவன் என்று சொல்ல கணபதி மீண்டும் அடிக்க சிவபெருமான் கோபங்கொண்டு பிரதம கணங்களைக் கூவியழைத்து இவன் யார்? இவன் துடுக்குத்தனத்தைப் பாருங்கள் என்று சொன்னார். அப்போது பிரதர்மர்கள் துவாரபாலகராயிருக்கும் விநாயகரைப் பார்த்து நீயார்? நீ ஏன் இங்கு வந்தாய் உன்வேலை என்ன? என்று கேட்டார்கள் அதற்கு கணனோ, நீங்கள் யார் ? இங்கே ஏன் வந்தீர்கள் தூரப் போய் விடுங்கள், என்று அதட்டினார். பிரதம கணங்கள் அவரைப் பார்த்துச் சிரித்து இவன் யார் பகவானைப் போல கடின வார்த்தைகளைப் பேசுகிறானே! என்று ஆலோசித்து மீண்டும் கணபதியைப் பார்த்து: அப்பனே நாங்கள் சிவகணங்கள் சிவபெருமான் இட்ட கட்டளையைச் செய்பவர்கள் உன்னையும் எங்கள் கணத்தைச் சேர்ந்தவன் என்று எண்ணியிருந்தோம். இனி தூரச்செல். இங்கே இருந்தால் நாசமாவாய் என்று அதட்டினார்கள். அந்த மிரட்டலைப் பொருட்படுத்தாமல் யானை முகத்தார் வாயிலை விட்டு நகராமல் அங்கேயே இருந்தார். கணங்கள் சிவபெருமானிடம் நடந்தவற்றைச் சொன்னார்கள் சிவபெருமான் அவர்களை நோக்கி கணங்களே! நீங்கள் என்ன பேடிகளா? அவனைத் துரத்துங்கள்! என்றார்.

பிரதம கணங்கள் மீண்டும் வந்து கணனே! உன்னை வாயிற் படியில் காவல் வைத்தவர்கள் யார்? எங்களை மதிக்காமல் நீ பிழைப்பாயா? நரிக்கு சிங்காதனம் கிடைத்தது போலிருக்கிறது! நாங்கள் போர் செய்யும்முன் இங்கிருந்து ஓடிப்போய்விடு இல்லையென்றால் மரிப்பாய் என்று மிரட்டினார்கள். அதைக் கேட்டுக் கஜானனர் கோபங்கொண்டு கையிலே தண்டாயுதத்தைத் தாங்கி இங்கிருந்து போகாவிட்டால் என் பராக்கிரமத்தைக் காட்டுகிறேன் பாருங்கள் என்று சுழற்றி அடித்தார். இவ்விதம் கணநாதரால் அடிபட்ட சிவகணங்கள், இனி இந்தத் துவாரபாலகனை எதிர்த்தால் என்ன விளையுமோ? என்று பயந்தவர்களாய்ச் சிவபெருமானிடம் விரைந்து சென்று பெருமானே! அவன் மிகவும் முரடனாக இருக்கிறான். எங்களையெல்லாம் தண்டத்தால் புடைத்தான்! என்று முறையிட்டுப் பணிந்து நின்றார்கள். சிவபெருமான் அவர்களைப் பார்த்து அவனோ ஒருவன்! நீங்களோ அநேகர் ஒருவன் அடித்தான் என்று இத்தனை பேரும் ஓடி வரலாமா? நீங்களோ பிரதமகணங்கள்? உங்களுக்கு வீரம் இல்லையா? உடனே சென்று அவனைத் துரத்திவிட்டு வாருங்கள் என்று புன்னகையுடன் கூறினார். அதனால் பிரதம கணங்கள் கணபதியிடம் சென்று சிறு பிள்ளையைப் போலப் பேசுகிறாயே! சீக்கிரம் இவ்விடமிருந்து போகாவிட்டால் எங்கள் பிராகிரமத்தைக் காட்டுகிறோம் பார் என்றார்கள். இது போலப் பலமுறைகள் அவர்கள் சொல்லியும் கணபாலர் காவலிருந்த இடத்தை விட்டு நகரவில்லை இதற்குள் அந்தப்புரத்திலிருந்த பார்வதிதேவியும் அவளது தோழியரும் கணபாலருக்கும் பிரதம கணங்களுக்கும் நடந்த பேச்சுக்களைக் கேட்டார்கள். இன்றையதினம் எமது சேவகன் வாயிலைக் காவல் செய்யாமல் இருந்திருந்தால் சிவபெருமான் மட்டுமின்றி மற்ற பிரதம கணங்களும் நாம் நீராடும் போது நம் அந்தப்புரத்தின் மாளிகையிலுள்ளே வந்திருப்பார்கள். அப்படி எல்லோரும் வந்திருந்தால் நன்றாக இராது. கணன் நல்ல காரியஞ் செய்தான். கணங்களுக்கும் கணநாதனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது. இதுவரை அவன் ஒருவரைக்கூட உள்ளே விடவில்லை அவர்களது வாய்ச் சண்டை முற்றி அவர்கள் ஜெயித்தாவது உள்ளே வரக்கூடும். அல்லது விநயத்தாலாவது உள்ளே வரக்கூடும் நமது கணனை தொந்தரவு செய்தது நம்மை தொந்திரவு செய்தது போன்றதாகும் தாயே! இந்த சமயத்தில் நாம் சிறிது கண்டிப்பாக இருக்கவேண்டும். என்று தோழி வற்புறுத்திக் கூறினாள்.

பார்வதிதேவி கணபதியின் மீது அபிமானமுடையவளாய் என் நாதராக இருந்தாலும் சிவபெருமான் நம் வாசலில் காவலிருப்பவனை ஏன் தொந்தரவு செய்யவேண்டும்? அவனை வேண்டிக் கொள்ளக் கூடாதோ? என்று சொல்லி அந்தத் தோழியை கணனிடம் அனுப்பி ஒருவரையும் உள்ளே அனுப்ப வேண்டாம் என்று மீண்டும் கட்டளையிட்டாள். அந்தத் தோழியும் வெளியே சென்று கணனைக் கண்டு, நீ செய்யும் கடமை சிறப்பானது. நீ ஒருவரையும் உள்ளே விட வேண்டாம். இந்தப் பிரதர்கள் உன்னை ஜெயித்தாவது அல்லது உன்னிடம் நல்வார்த்தை கூறியாவது தான் உள்ளே வருவார்கள்? ஜாக்கிரதை! இது தேவியின் கட்டளை என்று சொன்னாள். உடனே கணபதி தன் தாயின் ஆணைப்படி கட்டியிருந்த ஆடையை இழுத்துக் கட்டிக் கொண்டு கிரீடம் தரித்து, தொடையைத் தட்டி பிரதம கணங்களே! நானோ பார்வதி புத்திரன், நீங்களோ சிவகணங்கள் நாமிருவரும் சமபலமாகச் சேர்ந்தோம் செய்யத்தக்கதை பார்ப்போம் இனி உங்களுக்கு உரிய ஆக்ஞையைச் செலுத்திச் சிவாக்கினையைக் காத்துக் கொள்ளுங்கள், நானும் என்னுடைய தாயின் கட்டளைப்படி நடந்து கொள்ளுகிறேன். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமானால் என்னை ஜெயித்தாவது என்னிடம் உத்தரவு பெற்றாவது போகவேண்டும் என்று கர்ஜித்தார். சிவகணங்கள் வேறு வழியின்றி சிவபெருமானிடம் மீண்டும் ஓடி அவரை வணங்கி, நடந்தவற்றையெல்லாம் சொன்னார்கள். அதைக் கேட்டதும் சிவபெருமான் யோசிக்கலானார். நாம் உத்திரவு பெற்று உள்ளே சென்றால் கட்டளைக்கு உட்பட்டவராவோம். ஆகையால் நாம் அனைவரும் போர்புரிய வேண்டுவதே முறை எவ்வாறாயினும் முடியட்டும் என்று முடிவு செய்து சிவபிரமதகணங்களை நோக்கி, நீங்கள் பிரதமகங்களாக இருந்தும் போர் செய்வதை விட்டு வேண்டிக் கொள்வது யுத்தமல்ல, பார்வதியின் செயல் நன்றாக இல்லை! அதற்குரிய பயனை அவளும் அனுபவிப்பாள் யுத்தம் செய்ய வேண்டுவதே யுக்தமானது என்றார்.

32. கணபாலர் போர் புரிந்த கதை

சிவபெருமானின் கருத்திற்கிணங்கப் பிரமதகணங்கள் யுத்தம் செய்வதே தக்கது என்று போர் செய்ய ஆயத்தமானார்கள் அவர்கள் யாவரும் ஆயுதபாணிகளாய்க் கணபதியிருக்கும் இடத்தை அடைந்தார்கள் அவர்களை கண்டதும் போராட்டத்திற்குத் தயாராகி அவர்களைப்பார்த்து, சிவனாரின் கட்டளையைப் பரிபாலிப்பவர்களெல்லாம் வரலாம். நானோ சிறுவன், தனியன், தாயின் கட்டளையை ஏற்று நடப்பவன். பார்வதி தேவியே தனது புத்திரனான என் பலத்தைப் பார்ப்பாள். சிவபெருமானே உங்கள் பலத்தை பார்க்கட்டும் பலவந்தர்களும் பாலனுமாகிய நம்மிருவருடைய யுத்தத்தை நமது தலைவர்களாகிய சிவபார்வதிகள் பார்க்கட்டும் நானும் இதுவரையில் யுத்தஞ் செய்தவன் அல்ல. இப்பொழுதே போருக்கு வருகிறேன், ஆயினும் இறுதியில் உங்களுக்கு நாணமே உண்டாகும் நாமிருவருமே ஜெயிப்போம் என்றோ தோற்று விட்டோம் என்றோ நினைக்க வேண்டாம், நீங்கள் வெற்றி பெற்றால் சிவபெருமான் வெற்றி பெற்றவராவார் நான் வெற்றி பெற்றால் பார்வதிதேவியே வென்றவன் என்று நினைக்க வேண்டும் என்றார்.

அதைக் கேட்டவுடன் பிரதமகணங்கள் கோபங்கொண்டு கண்கள் சிவக்க, பற்களைக் கடித்து ஹுங்காரஞ் செய்து கொண்டு போர் செய்ய வந்தார்கள். அவர்களில் நந்திதேவர் முன்னே வந்து கணனுடைய ஒரு காலையும், பிருங்கி மற்றொரு காலையும் பிடித்து இழுக்க முயலும்போது அவர்கள் இருவருக்கும் பிள்ளையார் ஒவ்வொரு அறை விடவே அவருடைய கால்களை விட்டு ஓட்டம் பிடித்தார்கள். உடனே கணன் தன் அருகிலிருந்த ஓர் இரும்பு உலக்கையால் சிலர் மண்டையையும் சிலரது கழுத்தையும் சிலரது கால்களையும் சிலரது தோள்களையும் அடித்தார். அதைக்கண்டதும் சிவ கணங்கள் இந்தச் சிறுவனை ஜெயிக்க முடியாது என்று எண்ணமிட்டார்கள் சிலர் ஓடினார்கள், சிலர் பிள்ளையாரை கும்பிட்டு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று சிவபெருமானிடம் ஓடிச் சென்றார்கள். அந்தச் சமயத்தில் நான்முகபிரமன் தேவேந்திரன் முதலியவர்கள் இந்தச் செய்தியை நாரதர் மூலமாகச் கேள்வியுற்றுச் சிவபெருமானுக்குச் சகாயம் செய்யும் கருத்துடன் அங்கே திரண்டு வந்தார்கள். அவர்கள் சிவபெருமானை வணங்கி, மகாதேவா எங்களுக்கு அனுமதி கொடுத்தால் நாங்களும் போராடுகிறோம் என்றார்கள். அப்போது கணனால் அடிபட்டு வந்த பரமதகணங்கள் அங்கு வந்து வருந்தி முறையிட்டார்கள். சிவபெருமான் பிரமதேவன் நோக்கி நான்முகனே! நீ அவனிடம் சென்று போர் மேலும் நிகழாதவாறு அவனை இதமான வார்த்தைகளால் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பிரமதேவன் மற்ற முனிவர்களுடன் கணபாலன் இருக்குமிடத்திற்கு வந்தார், அவர் வந்ததுமே பிள்ளையார் அவரது மீசையை பிடித்துப் பறிக்க பிரமன் அந்த வலியைத் தாங்க மாட்டாமல், நான் உன்னோடு போர் செய்ய வரவில்லையே? என்று அலறினார் கணன் இரும்புலக்கையைக் கையிலெடுக்க பிரம தேவனும் மற்றவர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள் அவர்கள் சிவபெருமானிடம் சென்ற முறையிட பெருமான் கோபங் கொண்டு, இந்திரன், சுப்பிரமணியர் முதலிய பிரதமர்கள் பூதபிரேத பைசாசங்கள் யாவரையும் கணனுடன் போர் செய்யச் சொல்லி உத்தரவளித்தார்.

அத்தகைய கட்டளையைப் பெற்றதும் அவர்கள் தத்தம் ஆயுதங்களுடன் யுத்தம் புரியத் தொடங்கினார்கள் அவர்கள் செலுத்திய ஆயுதங்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவிமறைந்தன அந்தச் சமயத்தில் அந்தப்புரத்தில் இருந்த பார்வதி தேவி இரண்டு சக்திகளைச் சிருஷ்டித்துத் தனியனாகப் போர் புரிந்து கொண்டிருந்த கணனுக்குத் துணைசெய்ய அனுப்பி வைத்தாள். அதில் ஒரு சக்தி பயங்கரமான உடலும் கருநிற மேனியும் மலை போன்ற முகத்தில் குகை போன்ற திறந்த வாயும் கொண்டவளாக இருந்தாள். மற்றொரு சக்தி மின்னலைப் போன்ற ரூபமும் அநேகம் கைகளையுடையவளாகவும் வந்து தேவர்கள் எய்யும் ஆயுதங்களையெல்லாம் தன் வாயைத் திறந்து விழுங்கிலானாள். பிள்ளையாரோ இரும்புலக்கையால் அடித்து தேவர்படை வெள்ளத்தைக் கலக்கினார் இதனால் தேவர்கள் மனங்கலங்கி இனி என்ன செய்வோம். எங்கே போவோம். என்று புலம்பி வருந்தினார்கள். அப்போது அரம்பை, மேனகை முதலிய அப்சரசுகள் சந்தன மலர்களைக் கையில் ஏந்தி ஆகாயத்திலிருந்து தூவினார்கள். நாரதர் முதலியோர் கணபாலன் போர் செய்யும் வீரத்தையும் ஆற்றலையும் பார்த்து மகிழ்ந்தார்கள் இத்தகைய வீரனை நாம் கண்டதே இல்லை. பிரளயகால ருத்திரனே இவ்வாறு வந்திருக்கிறான் என்று முனிவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கும் போதே கடல் சூழ்ந்த பூமி முழுதும் குலுங்கியது ஏழு கடல்களும் நிலை கலங்கின நவக்கிரக மண்டலத்தையுடைய ஆகாயம் பிளவடையலாயிற்று யாவரும் மனம் மருண்டார்கள். இந்திராதி தேவர்களும் பிரமத கணங்களும் ஓடினார்கள் அப்போது ஆறுமுகப் பெருமான் சக்தியர் இருவரால் அடுத்த சைன்னியம் ஒழியமிகுந்தவர்களை அழைத்துக் கொண்டு சிவசன்னதியை அடைந்து நமஸ்கரித்து தந்தையே! அந்தக் கணனுடைய வல்லமையைச் சொல்ல முடியாது! அவனைப் போன்ற ஒருவனை இதுவரை கண்டதும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. இவனைத் தாங்கள் எதிர்த்து அடக்காவிட்டால் மஹாப்பிரளயம் உண்டாகும் என்று சொல்லவே சிவபெருமான் கோபங் கொண்டு, அப்படியாயின் நானும் வருகிறேன் என்று புறப்பட்டார் தேவர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

அப்போது நாரதர் புன்முறுவலுடன் சிவபெருமானை நோக்கி, மகேஸ்வரா! அவன் கொல்லத் தக்கவனல்லன், அவன் சிறுவன் தனித்து இருந்து தாயின் கட்டளையை நிறைவேற்றுபவன். அவனை வசப்படுத்தினால், ÷க்ஷமம் உண்டு, ஆகையால் அவனை எப்படியாவது சிநேகம் செய்து கொள்வதே நல்லது. என்றார். அவர் வார்த்தையை சிவபெருமான், மறுத்துவிட்டுப் போர் புரியச்சென்றார்.

கணபாலனைக் கண்டதும் அவர் வியப்புற்று இவனை வஞ்சனையாலடிக்கா விட்டால் இவனை ஜெயிக்கவே முடியாது என்று கருதி படைவரிசைகளின் நடுவில் இருந்தார் நிர்குணராகிய சிவபெருமான் விஷ்ணு முதலியவர்களுடன் யுத்தம் புரியவந்ததைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தார்கள். விஷ்ணு சிவபெருமானை நோக்கி சிவபெருமானே, நான் இவனை மோகப் படுத்துகிறேன். அப்பொழுது நீங்கள் இவனை அடிக்க வேண்டும், தந்திரத்தாலன்றி இவனை வெல்லமுடியாது. என்றார் அப்போது சக்திகள் இருவரும் மறைந்தார்கள் விஷ்ணுவின் எதிரில் கணபாலன், கபட நாடக சூத்திரதாரி என்ற பெயருக்கேற்ப கபடஞ் செய்ய நினைப்பவனே! என்று ஏளனமாகச் சிரித்துத் தம் கையிலிருந்த இரும்புலக்கையால் விஷ்ணுவை அறைய சிவபெருமான் தம் கரத்தில் இருந்து சூலாயுதத்தால் தடுத்து கோபங் கொண்டு கணனைத் தாக்க முற்பட்டார். அப்போது அவர் கையிலிருந்த சூலாயுதம் கை நழுவி விழ அவர் பிநாக வில்லை ஏந்தி நின்றார். கணபாலன் அந்த வில்லையும் தம் பாரிசத்தால் பொடிபடச் செய்தார், அந்தப் பரிச ஆயுதம் ஐந்து கரங்களிலும் ஒரடியடிக்க மற்ற ஐந்து கரங்களால் வேறொரு குலத்தை ஏந்தினார் சிவபெருமான் அப்போது அவர் நாமே இவனால் இவ்வாறு சங்கடப்படுவோமானால் மற்றைய தேவர்களும் கணங்களும் இவனுக்கு எம்மாத்திரம்? என்று எண்ணமிட்டார் அப்போது விஷ்ணு அவரை நோக்கி கைலாச நாதரே! உடலுருவம் அழகு ஆகிய இவற்றில் இந்தச் சிறுவனுக்கு ஈடானவர் எவருமில்லை! என்று வியந்துரைத்தார், கணன் தன் பரிசாயுதத்தை விஷ்ணுவின் மீது பிரயோகிக்க அந்த ஆயுதம் விஷ்ணுவின் சக்கரத்தைப் பொடிப் பொடியாக்கியது விஷ்ணு வேறொரு சக்கரத்தை ஏந்திப் போராடத் தொடங்கினார். கணபாலன் தன் இரும்புலக்கையை அவர் மேல் விடுத்து மல்யுத்தஞ் செய்யலானார், அப்போது சூலபாணியான சிவபெருமான் கணனுக்கு பின்புறமாகச் சென்று கணனைப் பாசத்தால் இறுக்கி பூமியின் மேல் வீழ்த்தினார். இவ்வாறு கணபாலன் பாசத்தால் கட்டுண்டதைப் பார்த்து தேவர்களும் கணங்களும் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்நிகழ்ச்சியைக் கண்ட நாரத முனிவர் உடனே பார்வதி தேவியிடம் விரைந்து சென்று ஓ ஜெகன்மாதா! இப்போது சிவபெருமான் பாசத்தால் கணனைக் கட்டி மூர்ச்சையடையச் செய்து விட்டார், நீ இந்தச் சமயத்தில் தன்மானம் காத்துக் கொள்ள வேண்டும். என்று கலகஞ்செய்து விட்டு அங்கிருந்து மறைந்து போனார். தேவர்கள் ஜெயஜெய சங்கரா! என்று வெற்றி முழக்கமிட்டு ஆன்ந்தத்தால் குதித்தார்கள். முனிவர்களே! இனி பார்வதி தேவி செய்தனவற்றை சொல்கிறேன் கேளுங்கள்.

33. கணபதி பட்டாபிஷேகமும் விரதமும்

முனிவர்களே! சிவபெருமான் கணபதியைப் பாசத்தால் கட்டி மூர்ச்சையடையச் செய்ததை நாரதர் மூலம் அறிந்த பார்வதி தேவி மிகவும் கோபங்கொண்டு இனி, என்ன செய்வேன்? எங்கு போவேன்? பிரளயத்தைச் செய்ய வேண்டி வந்ததே? என்று துக்கித்து, அநேகம் ஆயிரம் சக்திகளை உண்டாக்கினாள். அச் சக்திகள் மஹாதேவியைப் பணிந்து, நாங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? கட்டளையிட வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களை பார்வதிதேவி நோக்கி, நீங்கள் சிறிதேனும் யோசிக்காமல் இந்த சமயத்தில் தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், அசுரர்கள் முதலானவர்களை அழித்து மகாப்பிரளயத்தைக் கிளப்பிவிட வேண்டும்! என்னுடையவன் என்றும் பிறன் என்றும் பார்க்க வேண்டுவதில்லை என்றும் கட்டளையிட்டாள். உடனே கற்பாந்தரத்தில் செய்யும் சங்காரத்தைப் போலவும் பிரமன் விஷ்ணு ருத்திரன், இந்திரன், குபேரன் சூரியன், சுப்பிரமணியன் என்று யோசிக்காமல் அகப்பட்டவர்களை ஆங்காங்கே அவர்களை வாயிற்போட்டு கபளீகரம் செய்யவல்ல சக்திகளில் சிலர் வாயைத் திறந்து கொண்டும் சிலர் பயங்கரமாகவும் சிலர் தலையை ஆட்டிக் கொண்டும் பலவாறு யுத்தம் செய்தார்கள் அந்தச் சமயத்தில் அந்தச் சம்காரத் தொழிலைப் பார்த்து விஷ்ணு முதலான தேவர்களும், முனிவர்களும் ஐயோ! மஹாப்பிரளயமாக இருக்கிறதே! இது அகாலத்தில் சம்பவித்ததே நாம் பிழைப்பது கடினம், ஆகா என்ன செய்வோம்? ஏது செய்வோம்? என்று யோசித்து விட்டு இந்த மகாப்பிரளயம் பார்வதிதேவி கருணை செய்யக் கருதினாலன்றி அடங்காது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு சக்தி சிவபெருமானின் இடுப்பில் ஓங்கி அடித்தாள். அதனால் சிவபெருமான் மிகவும் வருந்தி பார்வதியிடம் சென்று. இது என்ன என்று கேட்டவுங் சக்தியற்று இருந்து விட்டார். சக்திகள் தராதரமின்றி யாவரையும் துன்புறுத்தினார்கள் நாரத முனிவர் அப்போது தேவர்களுக்கெல்லாம் நன்மை செய்யக் கருதி, பிரமா முதலான தேவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து மெல்ல தலைநீட்டி அவர்களோடு கலந்து என்ன செய்யலாம்? என்று ஆலோசித்துவிட்டு ஆகா! இனி பார்வதி தேவிக்குத் தயை வரச்செய்யாவிட்டால் நமக்குச் சுகம் உண்டாவதில்லை என்று கூறினார். அவரை தேவர்கள் உற்று நோக்கி நாரதரே! நீங்களே அதைச் செய்வதற்கு தகுந்தவராதலின் தயை செய்து அந்தப் பார்வதிதேவியிடம் சென்று தேவியின் கோபத்தைத் தணியச் செய்யும்! என்று விநயத்துடன் கூறினார்கள். நாரதர் சில முனிவர்களுடன் பார்வதிதேவியிடஞ் சென்று யாவரும் ஒன்றுகூடி பின்வருமாறு தோத்திரஞ் செய்தார்கள்.

ஜகதம்ப நமஸ்துப்யம் பரக்ருத்யைதே நமோஸ்துதே
அபர்நாயை நமஸ்துப்யம் கிரிஜாயை நமோஸ்துதே
பவாந்யைதே நமஸ் சைவ துர்க்காயைதே நமோஸ்துதே
பத்ராயைதே நமஸ்துப்யம் ப்ரக்ருத்யைதே நமோஸ்துதே
சண்டிகாயை நமஸ்துப்யம் காத்யாயன்யை நமோஸ்துதே

ஜகன்மாதா! பிரகிருதி ரூபியே! சருகு பக்ஷணமுமின்றித் தவஞ் செய்பவளே! பர்வதராஜபுத்திரியே, பவானியே, துர்க்க ஸம்ஹாரியே சகல ஜகத்துக்கும் மங்களஞ் செய்பவளே, முதலாகவுள்ளவளே, சண்டமுண்ட சம்ஹாரியே காத்யாயனியே உனக்கு நமஸ்காரம் நமஸ்காரம் என்று துதி செய்ததும் பார்வதி தேவி அவர்களைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை. அதனால் முனிவர்கள் அனைவரும் பயந்து, அவளது திருவடியில் வீழ்ந்து வணங்கி தாயே சிவபெருமானும் நாங்களும் மிகவும் கஷ்டத்தையடைந்தோம். ஆகையால் ஸம்ஹாரத்தை நிறுத்தி சாந்தமடைய வேண்டும். நாங்கள் அனைவருமே உன்னால் படைக்கப்பட்டவர்களாகையால் சாந்தமடையவேண்டும் மன்னிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்.

அதனால் பார்வதிதேவி தயவு செய்யக் கருதி என் புத்திரன் கணபாலன் மூர்ச்சை தெளிந்து எழுந்த பிறகு இந்த சம்ஹாரம் நிற்கும் அதுவரையில் சம்ஹாரம் நடந்தேதீரும். தாயான என் கட்டளையை முன்னிட்டுத் தனியாகவும் சிறுவனாகவும் ஒருவனாகவும் இருந்து என் அந்தப்புரத்தை காவல் செய்தவன். அவனுக்கு எதிராக நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு போர் செய்தது முறையற்ற செயல் நீதியற்ற செயல் ஆகையால் உங்கள் யாவராலும் அவன் பூஜிக்கப்படுபவனாய்ச் சகலருக்கும் முதற்கடவுளாக இருந்தாலன்றி நான் செய்யும் சம்ஹாரம் ஒழியாது. நீங்களும் சுகமடையமாட்டீர்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார். அவர்கள் அனைவரும் தேவியிடம் விடைபெற்றுச் சிவபெருமானையடைந்து நிகழ்தனவற்றைச் சொன்னார்கள். சிவபெருமானும் விஷ்ணு முதலான தேவர்களும் அதைக்கேட்டு தீவிரமாக ஆலோசித்து விட்டு இப்பொழுது உலகங்களுக்கு ÷க்ஷமம் உண்டாவதே முக்கியமாகும் ஆகையால் பார்வதிதேவியின் விருப்பப்படி நடப்பதுதான் நன்மையைத் தரும் என்று தீர்மானித்தார்கள் பிறகு சிவபெருமான் சஞ்சீவி முதலிய சகல அவுஷதங்களையும் கொண்ட துரோணாசலய என்ற மலையைத் தம் முன்னால் வர வேண்டும் என்று நினைத்தார், உடனே சஞ்சீவகரணம் முதலிய மருந்து மூலிகைகள் நிறைந்த அந்த மலை அங்கு வந்து சேர்ந்தது அதிலுள்ள மூலிகைகள் படிந்த காற்று வீசியது. அதனால் போரில் உயிர் ஒழிந்த தேவ, முனி பிரதமகணங்கள் உயிர் பெற்று எழுந்தார்கள். அப்போது பாசத்தால் கட்டுண்டு மூர்ச்சித்துக்கிடந்த கணபாலனைப் பார்த்த சிவபெருமான் வருந்திப் பாசத்தை அகற்றித் தனது திருக்கையால் அவனது திருமேனியை தடவினார். அக்கணமே கணபாலன் மூர்ச்சை தெளிந்து என் இருப்புலக்கை எங்கே? என்னுடன் போர் செய்த அந்த விஷ்ணு எங்கே? அவனைக் கொல்ல வேண்டும் என்று அறைகூவிக் கொண்டே தன் இரும்புலக்கையைக் கையிலே தூக்கி நின்றான். இந்திரன் முதலான தேவர்களும் நாரதர் முதலான முனிவர்களும் கணன் மூர்ச்சை தெளிந்து எழுந்தது கண்டு மகிழ்ந்து, சிவபெருமான், மஹாவிஷ்ணு பிரமன் முதலிய முப்பெருந்தேவர்களைப் பார்த்து , இனி பார்வதி தேவியார் கேட்ட காரியங்கள் எல்லாம் உங்களால் செய்து முடிய வேண்டும் என்றார்கள்.

இத்யாலோச்ய ஸங்கரஸ்ச லோகாநாம் ஸுகஹேதுகாம்
ஸஞ்ஜீவகரணீ யுக்தத்ரோணா சலமமேய தீ
ஸ்மரணா தேவஸகிரிராகத்வ ஸ்மஸ்திதஸ்ததா
ஸங்கரஸ்தவாக தஸ்ஸத்ய பாஸமோச நமோதநோத்
ஸஞ்ஜீவகரணீ வாயுப்ரசார வஸதஸ்ததா
ஸிவஸ்ய சகரஸ்பர்ஸாத் ஸஞ்ஞாம் லப்த்வ கணஸ்த்தா.
பரிகம் க்வாத்ய விஷ்ணு; க்வஹந்மயதாம் ஹந்யதாமிதி
உக்த்வாமுஸல மாதாய ஸ்திதோதுரி கணோத்தம
இந்தராத்யா நாரதாத்யாஸ்ச கணம் வீக்ஷயமுதாந்விதா
ப்ரஸம் ஸந்தஸ்ததா தேவாஸ்ஸிவம் விஷ்ணும் விதிந்ததா

இவ்வாறு தேவர்கள் கூறியதைக் கேட்ட பிருமா முதலான தேவர்கள் நாம் அனைவரும் எப்படிச் சிவனாரின் கட்டளையால் சஞ்சரிக்கின்றோமோ, அத்தகைய பரிபூரண தேஜஸானது வேத மந்திர சம்பந்தத்தால் இந்தக் கணனுக்கு உண்டாக வேண்டும். என்று அபிமந்திரித்து சுந்தராகாரமுடைய கணனை பிரமத கணங்களும் யக்ஷர்களும் விஷ்ணு முதலான தேவர்கள் அனைவரும் கணநாதராக இருக்கும்படி பட்டாபிஷேகம் செய்து ஆடையாபரண அலங்காரஞ் செய்து, அவனை அழைத்துக் கொண்டு பார்வதியிடம் சென்று காண்பித்தார்கள். பார்வதி தேவி கணனை வாழ்த்தி அவன் உடலைத் தனது திருக்கையால் தடவி மகனே! நீ மிகவும் வருந்தித் தன்யனானாய், கடமையை நிறைவேற்றுவதில் கண்ணியமாக இருந்தாய் இன்று முதல் யாவராலும் நீ மிகவும் முன்னதாக பூஜிக்கத் தக்கவனாகுக, உன் முகத்தில் சிந்தூரம் அணிந்திருப்பதால் சிவப்பு சந்தனத்தால் பூஜிக்க நீ மகிழ்வாயாக, உன்னைச் செம்மலர்கள் சந்தனம் நைவேத்யம் நீராஞ்சனம், தாம்பூலம், அர்க்கியம், பிரதக்ஷிணம், நமஸ்காரம் முதலியவற்றோடு பூஜிப்பவர்களுக்கு சகல காரியசித்தியும் கைகூடும். இதில் ஐயமில்லை என்று சொல்லித் தான் முன்பு கோபித்துப் பிர யோகித்த சக்திகளை திருப்பியழைத்து இனி யுத்தம் வேண்டாம் என்று அச்சக்திகளை தன்னிடத்திலேயே ஒடுக்கிக் கொண்டாள் இப்பொழுதே தேவர்களுக்குச் சுகம் உண்டானதால் இந்திராதி இமையவர்கள் பார்வதி தேவியை பலவாறு துதித்து சிவபெருமானை அழைத்துக் கொண்டு போய் தேவியாருடன் இணைந்திருக்கச் செய்து இருவரையும் சந்தோஷப்படுத்தி. சிவபெருமானது திருத்தொடையின் மீது பிள்ளையாரான விநாயகரை யானை முகப்பிள்ளையாரின் தலை மீது தன் திருக்கையை வைத்து தேவர்களை நோக்கி இவன் என் பிள்ளை என்று கூற கணேசர் சிவபெருமானது திருத்தொடையிலிருந்து இறங்கி எதிர் நின்று சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வணங்கி தேவர்களை கைகுவித்து சிவபெருமானை நோக்கி தேவதேவா! நான் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்றார் சிவபெருமான் அங்கிருந்த தேவர்களைப் பார்த்து, பிருமனே! விஷ்ணுவே நாம் உலகத்தில் பூஜிக்கப்படுவதைப் போல இக் கணேசனும் யாவராலும் பூஜிக்கப்படவேண்டும், மேலும் இவ்விநாயகனை முதலில் பூஜித்து, நம்மைப் பின்னால் பூஜித்தால் தான் நாமே மகிழ்வோம். இவனைப் பூஜிக்காதவர்களுக்கு காரியங்கள் சித்தியாகாது என்றார்.

அதன் பிறகு சிவபெருமானே முதலில் கணபதியைப் பூஜித்தார். இரண்டாவதாக அவரை விஷ்ணுவும், மூன்றாவதாகவும் பிருமதேவனும், நான்காவதாகப் பார்வதியும் பிறகு தேவர்கள் அனைவருமாக மிக்க மகிழ்ச்சியுடன் அவரைப் பூஜித்தார்கள். சிவபெருமான் கணேசருக்குப் பல வரங்களைக் கொடுத்து உன் பெயர் விக்நஹந்தா(விக்கினங்களைப் போக்குபவன்) சகல கணங்களுக்கு தலைவனான நீ பூஜிக்கத்தக்கவனாக வேண்டும் என்று கூறினார். உடனே சிவ கணங்கள் மங்கள வாத்தியங்களை முழங்கினார்கள், தேவமங்கையர் நடனமாடி இன்னிசைப் பொழிந்தார்கள். சிவபெருமான் மீண்டும் கணபதியைப் பார்த்து பாத்திரபத மாச சுக்கில பக்ஷ சந்திரோதய சமயத்தில் இரவு முதற்சாமத்தில் உச்சஸ்தக் கிரஹஞ்சக யோகத்தில் பார்வதி தேவி விக்னேஸ்வரனை நிர்மித்ததால் அந்தச் சமயத்தில் விக்னேஸ்வரனை பூஜித்தல் உத்தமத்திலும் உத்தமமாகும். அன்று முதல் மறு வருஷம் வருகிற அந்தத் திதி வரையில் பிரதி சதுர்த்திகளிலும் விரதத்தை நியமந் தவறாமல் என் கட்டளைப்படிச் செய்யவேண்டும் இப்படிச் செய்பவர்களின் குடும்பம் சகல சவுகரியங்களையும் பெற்றுச் சுகமாக இருக்கும் என்று கூறினார்.

மார்க்கசீரிஷ கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி நாளன்று அதிகாலை உதயத்தில் நீராடிக் குளித்து ஒரு பிராமணனைத் தான் செய்யவிருக்கும் கணபதி பூஜைக்கு இராத்திரி உபயோகப்படும்படி நியமித்து தான் முழுவதும் உண்ணாவிரதத்தோடு உபவாசமிருந்து அந்தப் பிராமணனைக் கணபதியாகப் பாவித்து, தூர்வத்தால் பூஜித்து இரவு ஒரு ஜாமங்கழித்த பிறகு ஸ்நானஞ் செய்து பொன் முதலிய உலோகங்களாலாவது அல்லது பவளத்தாலாவது அல்லது வெள்ளெருக்க மரத்தாலாவது மண்ணாலாவது கணபதிப் பிரதிமை செய்து அதற்கு பிராணப் பிரதிஷ்டை முதலிய நியதியுடன் கந்த, புஷ்ப, தூப தீபங்களால் பூஜிக்க வேண்டும். பிறகு அவரது கீரிடத்தில் விளங்கும் பாலச் சந்திரனைப் பூஜிக்க வேண்டும், பிறகு அந்தப் பிராமணனைப் பூஜித்து அவனுக்கு இன்சுவையுடன் கூடிய அன்னம் இட்டுத் தானும் உப்பில்லாத இனிய அமுதைப் புசிக்க வேண்டும் இவ்வாறு மறு சதுர்த்திகளிலும் செய்து வந்து வருட முடிவில் விரத பூர்த்திக்காக உத்தியா பனமாக பன்னிரண்டு வேதியருக்கு அன்னமிட வேண்டும். இந்த விரதத்தில் தன் சக்திக்கேற்பத் திரவியலோபம் செய்யக் கூடாது. அஷ்டதளபத்மம் எழுதி அதில் ஒரு கலசத்தை அமைத்து, அதில் விக்னேஸ்வரரை ஆவாஹனம் செய்து தூப தீபாதிகளால் பூஜித்து ஹோமம் செய்து இரண்டு சுமங்கலிகளுக்கும் இரண்டு பிரம்மச்சாரிகளுக்கும் அன்னம் அளித்து பூஜித்து விதிப்படித் தான் இரவு முழுவதும் விழித்திருந்து வாத்திய கோஷங்களுடன் உத்சவம் செய்து மந்திரபுஷ்பம் சமர்ப்பித்து அன்புடன் தொழுது தன் இஷ்டங்களைச் சொல்லிக் கொள்ள வேண்டும். மறுநாள் விடியற்காலையில் மீண்டும் வழிபாடு இயற்றி நான் பூஜிக்கும் போது தேவரீர் எழுந்தருள வேண்டும் என்று விசர்ஜனம் செய்ய வேண்டும். இவ்வாறு விரதமிருப்பவர் மனதிலுள்ள கோரிக்கைகளை அடைவார்கள். பக்தியோடு செஞ்சந்தனம் சுவேதாக்ஷதை உபசாரம் முதலியவற்றோடு பூசிப்பவர்கள் சகல காரிய சித்தியும் பெற்று எல்லா விக்கினங்களும் துன்பங்களும் நீங்கப் பெறுவார்கள், இந்த விரதம் எல்லா வர்ணத்தவரும் பெண்களும் பகை வெல்ல விரும்பும் அரசர்களும் செய்வார்களாக! என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார். இந்தச் சமயத்தில் அனைவரும் பிள்ளையாரான கணநாதரைப் பூஜித்து வழிப்பட்டார்கள் தன் புதல்வனுக்கு நேர்ந்த ஏற்றத்தைக் கண்டு பார்வதிதேவி அடைந்த மகிழ்ச்சியை எழுத்தாலும் சொற்களாலும் சொல்ல ஒருவராலுமே முடியாது. அப்போது தேவவாத்தியங்கள் முழங்கின தேவர்கள் மலர் மாரி பொழிந்தார்கள் உலகங்கள் யாவும் மகிழ்ந்திருந்தன.

34. விநாயகர் வலம் வந்த கதை

தவஞானிகளே! தேவர்களும் முனிவர்களும் சிவனாரின் கட்டளையை ஏற்றுச் சிவனாரையும் பார்வதி தேவியையும் கணேசரையும் புகழ்ந்து எத்தகைய பெரிய யுத்தம் உலகமே சம்ஹாரமாகத் தக்கதாக நிகழ்ந்து விட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிவகணங்களும் சிவபெருமானும் உலகங்கள் பிழைத்தற்காக மகிழ்ந்தார்கள். பார்வதிதேவியின் கோபமும் தணிந்தது. மகாவிஷ்ணுவும் பிருமதேவரும் சிவபெருமானிடம் விடைபெற்று தத்தமது உலகை அடைந்தார்கள். நாரதரும் பார்வதிதேவியைப் புகழ்ந்து பாடிவிட்டு தம் சஞ்சாரத்திற்குச் சென்று விட்டார் என்றார் சூதபுராணிகர்.

மாதவரே! கணபதியின் வரலாற்றைச் சொல்லிக் கேட்டோம் ஆயினும் அவருடைய திவ்விய சரிதங்களைக் கேட்க நாங்கள் மேலும் ஆவலாக இருக்கிறோம். என்றார்கள் நைமிசாரண்ய முனிவர்கள்.

சூதபுராணிகர் கூறலானார்

முனிவர்களே! சிவபெருமானும் பார்வதிதேவியும் கணேசரிடம் அதிக வாஞ்சை கொண்டு, அவரை விளையாட்டாகவே வளர்த்தார்கள், கணேசரும் ஆறுமுகனும் தாய்  தந்தையருக்குப் பணிவிடை செய்து அவர்களுக்குப் பிரியம் விளைவித்தார்கள்.
வளர்பிறை நிலவைப்போல் இரண்டு சகோதரரிடமும் நட்பு பெருகிற்று இந்நிலையில் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் தங்கள் புதல்வர் இருவருக்கும் எப்படித் திருமணஞ் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் பேசுவதைக் கேட்ட கணேசரும் முருகரும் ஆச்சரியமடைந்து எனக்கு தான் முதலில் கல்யாணம் ஆக வேண்டும் எனக்கே முதலில் திருமணம் என்று ஒருவரோடு ஒருவர் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அதை அறிந்த சிவபெருமானும் பார்வதிதேவியும் ஒரு யோசனை செய்து ஓரிடத்திலிருந்து புதல்வரிருவரையும் அன்புடன் அழைத்து பிள்ளைகளே! நீங்கள் இருவரும் சமமானவர்கள் நாங்கள் உங்கள் இருவரையுமே ஒரே தன்மையாகவே மதிக்கிறோம். இப்போது உங்களுக்குத் திருமணம் செய்ய வேண்டி ஒரு யோசனை செய்திருக்கிறோம். அதாவது உங்களில் எவன் ஒருவன் இந்த உலகத்தைச் சுற்றி வலம் வந்து முதலில் எங்களிடம் வந்து சேர்வானோ அவனுக்கு முதலிலும் எவன் பிறகு வருகிறானோ அவனுக்கு இரண்டாவதாகவும் திருமணஞ் செய்ய வேண்டும் என்பதே அந்த யோசனை, என்றார்கள் உடனே சுப்பரமணியர் பூப்பிரதட்சிணம் செய்வதற்கு விரைந்து சென்றார். தொந்திப்பிள்ளையாரான கணபதியோ நாம் எவ்வாறு பூவுலகைச் சுற்றுவோம் என்று யோசித்தார் பிறகு முறைப்படி நீராடித் தாய் தந்தையரிடம் வந்து நீங்கள் இருவரும் சிறிது நேரம் சிங்காதனத்தில் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து அவர்களுக்கு ஆசனமளிக்க அவர்களிருவரும் அவ்வாறே அமர்ந்தார்கள், பிறகு கணேசர் அவர்கள் இருவரையும் பார்த்து நான் உங்களை பூசிக்க வேண்டும் என்று கூறி அவர்களை அமைதியாக உட்கார வைத்து அம்மை அப்பராகிய அவர்களிருவரையும் ÷ஷாடசோபசாரத்துடன் பூஜை செய்து ஏழு முறை அவர்களை வலம் வந்து கைகுவித்து இவர்கள் எதிரே நின்று நான் சொல்லும் விஷயத்தைக் கேட்டு சீக்கிரம் எனக்குத் திருமணஞ் செய்விக்க வேண்டும்! என்றார்.

நீ விரைவில் உலகத்தை வலம் வா. சுப்பரமணியன் அதற்காகவே போயிருக்கிறான் நீயும் சென்று பூப் பிரதக்ஷிணம் செய்து முன்னே வந்தால் உனக்கே விரைவில் மணஞ் செய்வோம் என்றார்கள் பெற்றோர்கள்.

நான் பூமியை ஏழு பிரதக்ஷிணம் செய்து வந்திருக்க என்னை மறுபடியும் போகச் சொல்லாமா? என்று கேட்டார் பிள்ளையார், அக்கேள்வியை வியந்த உமா மகேஸ்வரர் நீ எப்பொழுது பூமியை வலம் வந்தாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் உங்கள் இருவரையும் பூஜித்து ஏழு முறை பிரதட்சிணம் செய்தது பிரதட்சிணம் அல்லவா உங்கள் இருவரையும் பிரதட்சிணம் செய்தால் உலகை வலம் வந்தது போலாகுமென்று வேத சாஸ்திரங்கள் கூறுவது எல்லாம் பொய்தானோ? உலகத்தில்தாய் தந்தையரைப் பூஜித்தும் பிரதட்சணம் செய்தால் பூப்பிரக்ஷிண பலன் கிடைக்கும், வீட்டிலிருக்கும் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு தீர்த்த யாத்திரை செய்பவன் தாய்தந்தையரைக் கொன்ற பாபத்தை அடைவான். தாய்தந்தையரின் பாத கமலத்தீர்த்தத்தைவிட புதல்வனுக்கு வேறு தீர்ததங்களே கிடையாது. கங்கை முதலிய தீர்த்தங்களெல்லாம் கஷ்டப்பட்டு அடைய வேண்டியவை இதுவோ அண்மையில் உள்ளதும் எளிதானதும் தர்ம ஸாதனமானதும் பயன்கள் யாவற்றையும் கொடுக்கவும் வல்லது புதல்வனாக இருப்பவன் தன் தாய் தந்தையரைப் பூசிப்பதே தீர்த்த யாத்திரையின் பலனைத் தரும், மனைவியானவள் தன் கணவனைப் பூசிப்பதே தீர்த்த யாத்திரையின் பயனைத் தந்துவிடும் இவ்வாறு திருமறை நூல்களில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் இதைப் பொய்யாக்குவதனால் உங்கள் ஸ்வரூபமும் அசத்தியமேயாம். வேதங்களும் பொய்! ஆகையால் நான் பூப்பிரதட்சணம் ஏழுமுறைகள் செய்தது நிச்சயமும் சத்தியமுமாகும் ஆகவே வேத சாஸ்திரங்களை மெய்யென்றோ பொய்யென்றோ ஆக்குங்கள் அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது என்றார் விநாயகர் வினயமாக அதனால் உமாதேவியும் சிவபெருமானும் பெரிதும் மகிழ்ச்சிடைந்தார்கள்.

35. கணபதியாரின் திருமணம்

சிவபெருமானும் பார்வதிதேவியும் கணபதியைப்பார்த்து கணேசா, நீயே மஹாபுத்திசாலி தாய் தந்தையரிடம் திடபக்தியுடைய நீ சொன்னவை உண்மையானவை துக்கம் ஏற்பட்ட சமயங்களில் எவன் ஒருவன் நிர்மலமுடையவனாக இருப்பானோ அவனது துக்கங்கள் சூரியனைக் கண்ட இருள்போல நீங்கும் தாய் தந்தையரை வலம் வந்தால் பூமியை வலம் வந்த பயன் கிடைக்கும் என்று வேதசாஸ்திர புராணங்கள் கூறுகின்றன. நாங்களும் உன் செயல் கண்டு மகிழ்ந்தோம் என்று பாராட்டிவிட்டுத் திருமண விஷயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் விஸ்வரூபனின் புதல்வியர்களான சித்தி, புத்தி என்ற மிகவும் அழகிய கன்னியரை வேத விதிப்படிச் சர்வ ஆடம்பரமாகத் திருமணம் செய்யத் தீர்மானித்தார்கள். தேவர்கள் முனிவர்கள் யாவரும் கணபதியின் திருமணத்திற்கு வந்தார்கள். விசுவரூபன் தன் புதல்வியர் இருவரையும் கணபதிக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அதன் பிறகு கணபதியும் சித்தி புத்திகளுடன் கூடிச் சுகம் அனுபவித்ததைப் பற்றி அளவிட்டு வர்ணிக்கவே இயலாது சிறிது காலம் கழிந்த பிறகு சித்தி என்னும் மனைவியிடம் லக்ஷன் என்னும் பிள்ளையும் புத்தி என்னும் மனைவியிடம் லாபன் என்னும் பிள்ளையும் உண்டானார்கள்.

அந்த சமயத்தில் பூப்பிரதக்ஷிணம் செய்யச் சென்ற குமாரக் கடவுள்; பூமியை வலம் வந்து கைலாயமலைக்குத் திரும்பி வந்தடையும்போது கலகப் பிரியரான நாரதமுனிவர் புன்சிரிப்போடு அங்கு வந்து சுப்பிரமணியமூர்த்தி உம் தாய் தந்தையர் செய்த காரியத்தைக் கேட்டீரோ? உம்மை பூப்பிரதட்சிணம் செய்ய அனுப்பி விட்டு விக்கினேஸ்வரனுக்கு இரண்டு கன்னியரைக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். இப்போது கணபதி அவ்விரு கன்னியரிடமும் இரு புதல்வரைப் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார். நீரோ இத்தனைக் கஷ்டத்துடன் பூப்பிரதட்சிணம் செய்து வந்திருக்கிறீர் பெற்றோர்களே இவ்வளவு அபகாரம் செய்தால் இதரர் என்ன காரியம்தான் செய்ய மாட்டார்கள்? இது மிகவும் அநியாயம்! இது அவ்வளவு சரியில்லை. இப்படி செய்தவர்களுடைய முகத்தைக் கூடப் பார்க்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது ம்! சொல்ல வேண்டியதைச் சொன்னேன். இனி உம் இஷ்டம் சண்முகா! என்று கோள்மூட்டிவிட்டுப் போய் விட்டார். அதன் பிறகு ஷண்முகர் தம் தாய் தந்தையிடம் விரைந்துவந்து அவர்களை வணங்கி கோபங்கொண்டு புறப்பட்டார் தாய் தந்தையர் தடுப்பதையும் கருதாமல் கிரவுஞ்சகிரி நோக்கிச் சென்றார். அவ்வாறு போகும் போது தாய் தந்தையர் நீ போக வேண்டாம்! பூப்பிரதட்சிணம் செய்து வந்ததும் விவாகம் செய்வதாக நாங்கள் சொன்னபடி இப்போது விவாகம் செய்து வைக்கிறோம்! என்று தடுத்தார்கள். அதற்குள் குமாரர் நீங்கள் என் விஷயத்தில் கபடஞ் செய்தீர்கள் ஆகையால் நான் இங்கிருக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டே நடந்து கிரவுஞ்சகிரி சென்று அங்கேயே நின்றுவிட்டார். அன்றுமுதல் அவருக்கு குமார பிரம்மச்சாரி என்ற பெயர் உண்டாயிற்று.

கார்த்திகைப் பவுர்ணமியன்று தேவர்கள் முனிவர்கள் முதலிய யாவரும் அங்கு சென்று குமார தரிசனம் செய்கிறார்கள் அந்த நாளில் தரிசிப்பவர்கள் பாபம் கழிந்து இஷ்டகாமியங்கள் கைகூடும் புத்திரனது பிரிவுக்கு ஆற்றாத பார்வதிதேவி மிக்க துயரத்துடன் கிரவுஞ்சகிரியையடைந்தாள். பிறகு சிவபெருமானும் மல்லிகார்ஜுனன் என்ற பெயருடன் ஜோதிர் லிங்கஸ்வரூபத்துடன் அங்கு சென்று வசித்தார். அங்கு பார்வதி பரமேஸ்வரன் ஆகியஇருவரும் பிரத்தியட்சமாக இருக்கிறார்கள். அவ்விருவரது வருகையையும் உணர்ந்து ஸ்கந்தர் அங்கிருந்து செல்ல யத்தனிக்கையில் தேவர்கள் அனைவரும் அங்கிருக்கும் படிப் பிரார்த்தித்தார்கள் பிறகு அங்கிருந்து மூன்று யோசனை தூரத்தில் சுப்ரமணியர் தங்கியிருந்தார்.

தாய் தந்தையர்கள் இருவரும் குமாரக் கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தோடு இருவுருவங்களில் அங்கே வருகின்றார்கள். நைமிசாரண்யமுனிவர்களே! கணபதியின் விவாக விஷயத்தை நீங்கள் கேட்டபடியே சொல்லிவிட்டேன். இந்தச் சரிதத்தைக் கேட்டவர்கள் சகல பாவங்களும் நீங்கப் பெற்றுச் சுகமாக வாழ்வார்கள்.

கணபதி விவாஹம் உரைத்த கதை முற்றிற்று.

36. உருத்திராட்சத்தின் பெருமையும் வகைகளும்

முனிவர்களே, சிவ சரிதைகளே உங்களுக்கு விருப்பம் உண்டாக்குகின்றன சிவனாரைப் பணிந்து அவரது திவ்விய சரிதங்களைக்கேட்பவர்களே பரிசுத்தர்கள். அவர்களால் அவர்களது வம்சம் முழுவதும் புனிதமாகும் எவனுடையவாக்கில் சிவநாமங்களும் நெற்றியில் விபூதியும் கழுத்தில் உருத்திராக்கமும் ஆகிய இம்மூன்றும் விளங்குமோ அவனைப் பார்த்தால் திருவேணியில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். அவனை மதிக்காமல் அவமதிப்போர் அப்போதே பெரும் பாவம் அடைவார்கள் விபூதியணியாத நெற்றியும் உருத்திராக்ஷமணி அணியாத கழுத்தும் சிவநாமங்கள் சொல்லாத வாயுமுடைவனைக் கண்டால் சண்டாளனைக் கண்டாற் போல விலகிக் கொள்ள வேண்டும். சிவ நாமமே கங்கை விபூதியே யமுனை உருத்தி ராட்சமே சர்வ பாபங்களையும் போக்கும் ஸரஸ்வதி!

விபூதிர்யஸ்ய கோபாலே களே ருத்திராக்ஷ தாரணம்
நஹிஸிவமயீவாணீ தந்த்யஜே தந்த்ய ஜம்யதா
ஸைவந் நாம ததா கங்கா விபூதிர் யமுநா சுததா
ருத்திராக்ஷõ விதிஜாப் ரோக்தா ஸர்வ பாப ப்ரணாஸ நீ

இம்மூன்றையும் அணிந்த பயனையும் திரிவேணியைத் தரிசித்த பயனையும், உலகத்திற்கு ஹிதஞ்செய்வதற்காக பிருமதேவர் ஒரு துலையில் வைத்து நிறுத்தார். அவை சமமாக இருப்பதைக் கண்டு பிரமன் முதலிய தேவர்கள் அனைவரும் இம்மூன்றையும் அடைந்தார்கள், ஆகையால் அணிந்தவனுடைய பயனைச் சொல்ல என்னால் ஆகுமோ?

இவ்வாறு சூத முனிவர் சொன்னதும் நைமிசாரண்ய வாசிகள் அவரைப் பார்த்து சிவஞான செல்வரே; அத்தகைய பெரும் பேற்றைத் தரவல்ல ருத்திராட்சத்தின் மகிமையைக் கேட்டு நாங்கள் புனிதர்களாகும்படி விரித்துரைக்க வேண்டும்! என்றார்கள்.

சூதமுனிவர் சொல்லலானார்.

தவசீலர்களே! ஆயிரத்தொரு நூறு ருத்திராக்ஷங்களைத் தரித்தவன் ருத்திர ஸ்வரூபத்தையடைவான் அவன் அடையும் பயனை அநேக ஆண்டுகள் சொன்னாலும் முடிவுபெறாது அதிற்பாதியாகிய ஐந்நூற்றைம்பது மணிகளால் கிரீடஞ் செய்து தரித்தவன் சிவரூபியாவான்.

முந்நூற்றுபத்து மணிகளால் உபவீதம்(பூணூல்) செய்து தரிக்கலாம். சிகையில் மூன்றும் இருகாதுகளிலும் ஐந்து அல்லது ஆறும் ,கழுத்தில், நூற்றொன்றும், புயத்தில் பதினொன்றும் கன்னமாலை பதினொன்றும், மணிபந்தங்களிரண்டில் பதினொன்றும், பூணூலில், மூன்றுமாக முக்திகாமி அணியவேண்டும் ஐம்பது மணிகளை கடி சூத்திரமாக அணியத்தகும் இவ்வாறு அணிபவன் முக்தியடைவான் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்விதம் அணிந்து ஆசனத்தில் அமர்ந்து சிவத்தியானம் செய்பவன் சாபாநுக்கிரக சாமர்த்தியமடைவான் அவனை கண்டவர் சகலபாவமும் போய் கங்கா ஸ்நான பலனும் சிவதரிசன பலனுமடைவான் ருத்திராட்ச மாலையைத் தாங்கி நூறு மந்திரஞ் ஜெபித்தால் ஆயிரம் ஜெபித்தபயன் கிடைக்கும். சிவபெருமான், மகாவிஷ்ணு சூரியன், சக்தி, கணபதி இவ்வைவர் மந்திரங்களையும் ஜெபிப்பதற்கு உருத்திராக்கமே சிறந்தது. இதனால் சகல மந்திரங்களும் ஜெபிக்கலாம் முக்தி, புத்திர பாக்கியம், ஐசுவரியம் வித்தை கன்னிகைகள் முதலானவற்றை விரும்புபவர்கள் ருத்திராக்ஷமணி தரித்து ஜெபித்தால் அவற்றைத் தடையின்றி அடைவார்கள் ஆயினும் சிவபக்தன் ருத்திராக்க மணிமாலையைச் சிறப்பாக அணிய வேண்டும். ருத்திராட்சத்தை விருப்பத்தோடணிந்தாலும் விருப்பமில்லாமல் அணிந்தாலும் பயனுண்டாம் எனவே அவை உத்தமமானவை.

செல்வம் விரும்புவோன் பொன்னால் செய்த மணியும், புகழைவிரும்புவோன் முத்து மணியும், பிள்ளைப்பேறு விழைபவன் ஸ்படிகமணியும், வசியகாமி பவளமணியும், வாஹனகாமி வெள்ளிமணியும், கையிலேகொண்டு ஜபம் செய்யலாம் என்று திருநூல்கள் கூறுகின்றன. ஆயினும் ருத்திராட்ச மணியே இவற்றைக் காட்டிலும் சிறந்த பயனைக் கொடுக்கும். உபாசனை பல வகைப்படும், எனவே இந்த மணி மாலைகளில் வேதங்களைச் சொன்னேன். சிவபெருமானையும் விஷ்ணு மூர்த்தியையும் தியானிக்கும்போது ருத்திராட்ச மாலையே சுகம் கொடுக்க வல்லது சூரியனுக்கு ஸ்படிகமணியும் சண்டிகை கணேசருக்கு முத்து பவளமணியும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று பெரியோர் கூறுவர். இவ்விதமாகச் சொன்னாலும் ருத்திராக்கமே சிவபெருமானைப் பெரிதும் மகிழச்செய்யும், முத்துடன் கலந்த ருத்திராக்ஷம் விஷ்ணுவை மகிழச் செய்யும், பூர்வத்தில் வியாசபகவான் முதலிய முனிவர்கள் சாஸ்திர விசாரணையால் ருத்திராட்சம் சிறந்தது என்றார்கள். இனி ருத்திராக்ஷங்களின் பேதங்களைச் சொல்கிறேன்.

ஒரு முக ருத்திராட்சம் சகல காரிய சித்தியைக் கொடுக்கும். இந்த ஒரு முக ருத்திராட்சமணி இருக்கும் இடத்தில் அணிமா முதலான அஷ்டசித்திகளும் இருக்கும். இருமுகமணி இருக்குமிடத்தில் லக்ஷ்மிகடாக்ஷம் விளங்கும். மும்முகமணி சகல சித்திகளையும் விளைவிக்கும், நான் முகமணி அறம், பொருள், இன்பம், வீடு எனும் புருஷார்த்தங்களையும் நல்கும், ஐம்முகமணி பாவத்தைப்போக்கும். ஒரு முகமணிகிடைப்பது அரிது அது இலத்தைப் பழத்தின் அளவில் கிடைத்தாலே சுகசவு பாக்கியங்கள் விருத்தியாகும் நெல்லிக்கனியளவில் கிடைத்தால் சகல துக்கங்களையும் ஒழிக்கும். கடலையளவாயின் விலை மதிக்கமுடியாதது. அத்தகைய மணிகளால் மாலையணிந்தவனை என்னவென்று சொல்வேன்? அவ்வொருமணியை வைத்திருப்பவன் சாட்சாத் சிவபெருமானே! மண்டலாதி பத்யராஜ்யாதி பத்தியமும் அதற்குச் சமானமாகாது அத்தகையமணி யொன்று கிடைத்தால் பொற்குவியலாவது ஆணிமுத்துக்கள் நூறாவது கொடுத்துப் பெறலாம். உருத்திராட்சம் அணியவேண்டியவன் அதைபொருள்கொடுத்து வாங்கியணிய வேண்டும், ஒருவன் இனமாகக் கொடுத்தால் வாங்ககூடாது ஆனால் தானங்கொடுத்தவனுக்கு சிறப்பான பயனுண்டு பொருள் கொடுத்து வாங்க முடியாதவன் தன் புண்ணியத்தைக் கொடுத்தாவது பெறலாம். கடலையளவு மணிபோக மோக்ஷõர்த் தங்களைக் கொடுக்கும் குண்டுமணியளவுடைய மணி காரியசாதனஞ் செய்யும் எவ்வளவு சிறியமணியைப் பூண்டானோ. அவ்வளவு விசேஷ பயனைப் பெறுவான். சிவமந்திரத்தை ஜெபிக்காதவனையும் ருத்திராட்சம் அணியாதவனையும் பரிகாசம் செய்யாமல் தூரமாகப் போக வேண்டும். ருத்திராட்சமாலை அணிந்தவனைப் பார்த்தால், பூதப் பிரேத பைசாச, சாகினிடாகினி முதல் சகல கிரகங்களும் ஆபிசாரம் முதலிய பிரயோகங்களும் அவனை நெருங்காமல் விலகிப் போய்விடும். ஏகமுக ருத்திராட்சத்தை நீரோட்டத்தில் விட்டால் எதிர்த்து ஓடும். இருமுகமணியை அணிந்து நெருப்பில் இறங்கினால் உடல் வேகாது ஜ்வரரோகம் நீங்கும். மூன்று முக மணியை அணிந்தவனை ஆயுதங்கள் ஊறுசெய்யாது. நான்கு முக மணியை வைத்திருப்பவன் வீட்டிற்கு வந்த சோரனுக்குக் கண்தெரியாது. இதைத் தண்ணீரில் விட்டால் மூழ்கி விடும். ஐம்முகமணியிருந்தால் சகல துன்பங்களையும் விலக்கிவிடும். இது நீரில் மூழ்காது இவ்வாறு மணியின் குணத்தைப் பரிசோதித்துப் பார்த்து அணிய வேண்டும், ஸ்நானம் தானம், ஜபம் ஓமம், அத்தியயனம், பிதுர்த்தர்ப்பணம் சிவவிஷ்ணு பூஜைகள் சிரார்த்தம் முதலிய எல்லாக் காலங்களிலும் ருத்திராக்ஷத்தைதரித்துக் கொள்ளலாம் முனிவர்களே! நீங்கள் கேட்ட ருத்திராட்ச மகிமையை விரும்பி கேட்டவன் சிவபெருமானுக்கு மிகவும் பிரிய முள்ளவனாவான்.

37. ஜோதிலிங்கங்களின் தொகை

சூதமுனிவரே! உலகத்திலே புண்ணிய தீர்த்தங்களிலுள்ள புகழ் பெற்ற லிங்கங்களையும் புண்ணிய ÷க்ஷத்திரங்களிலுள்ள லிங்கங்களையும் சொல்ல வேண்டும்! என்று சவுனகாதி முனிவர்கள் கேட்டார்கள் சூதமா முனிவர் சொல்லலானார். மாதவர்களே! நீங்கள் கேட்ட விஷயம் மிகச் சிறந்ததேயாயினும் பூமியே லிங்கமயமாக இருப்பதால் அவற்றின் தொகையைச் சொல்ல முடியாது. லிங்கம் இல்லாத இடமே இல்லை. கங்கை முதலிய தீர்த்தங்கள் யாவும் லிங்கமே. உலகம் யாவும் லிங்கத்திலேயே அடங்கியிருக்கிறது எனவே அவற்றை கணக்கிட முடியாது. ஆயினும் எனக்குத் தெரிந்த சில லிங்கங்களைப் பற்றிச் சொல்கிறேன். உலகத்தில் காணப்படுவதும் சொல்லப்படுவதும் நினைக்கப்படுவதும் கேட்கப்படுவதும் ஆகியயாவும் சிவரூபமே தவிர, வேறெதுவும் இல்லை. ஆயினும் எனக்கு வியாச பகவான் கூறியவற்றைச் சொல்கிறேன். தவசீலர்களே! இந்த உலகத்தின் இருப்பது போலவே பாதாவத்திலும் சொர்க்கலோகத்திலும் எவ்விடத்தும் லிங்கங்கள் இருக்கின்றன. பூமியிலுள்ள மானிடர்களும் பாதாளத்தில் இருக்கும் நாகர்களும் சுவர்க்கத்திலிருக்கும் தேவர்களும் ராட்சஸர் முதலானயாவரும் லிங்க பூஜை செய்கிறார்கள். சராசரத் மகமான பிரபஞ்ச முழுவதும் ஆன்மாக்களுக்கும் அருள் புரியவே சிவபெருமான் லிங்கரூபமாக விளங்குகிறார். பக்தியோடு பூஜிப்பவருக்கு அந்தந்த இடத்திலேயே விளங்கி அவரவருக்கு சர்வாபீஷ்டங்களையும் கொடுக்கிறார். ஆன்மாக்கள் தன்னை அருச்சித்துக் கடை தேறுவதற்காகவே சிவபெருமான் லிங்க ரூபத்தை ஏற்றிருக்கிறார். லிங்கார்ச்சனை செய்தால் சகல பயன்களும் கைகூடும் பிரதானமான லிங்கங்களைக் கேட்டால் சகல பாபங்களும் நீங்குமாகையால் தேஜோ லிங்கங்களைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.

சவுராஷ்டிர தேசத்தில் ஸோமநாத லிங்கமும், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன லிங்கமும், உஜ்ஜயினியில் மகாகாளிலிங்கமும் ஓங்கார லிங்கமும், ஹிமயமலையில் கேதார லிங்கமும், டாகினியில் பீமசங்கர லிங்கமும், வாரணாசியில் விஸ்வேஸ்வர லிங்கமும், கோதாவரி தீரத்தில் திரியம்பக லிங்கமும், சிதாபுரத்தில் வைத்தியநாத லிங்கமும், தாருகாவனத்தில் நாகேஸ்வர லிங்கமும், சேதுவில் இராமேஸ்வர லிங்கமும், சிவாலயத்தில் குஸ்மேஸ் லிங்கமும் எனப் பன்னிரண்டு உண்டு. இந்த லிங்கங்களின் திருப்பெயர்களை விடியற்காலத்தில் எழுந்து துதிப்பவன் தன் பாபங்கள் ஒழிந்து சகல சித்திகளையும் பெறுவான். இந்த லிங்கங்களை எக்குலத்தினரும் அர்ச்சனை செய்து ஆராதிக்கலாம். அவ்வாறு அர்ச்சித்தவர்கள் மகாபாவிகளாக இருந்தாலும் கிருத கிருத்தியர்களாவார்கள். அந்த ஜோதிலிங்கங்களுக்கு நைவேதனம் செய்தவற்றை உண்டால் புண்ணியம் வரும் ஆறு மாதம் இந்த லிங்கங்களை அருச்சித்தவர்கள் உயர் குலத்தில் பிறந்து நற்கருமங்கள் செய்து மோட்சத்தை அடைவார்கள். இத்துவாதசலிங்கங்களேயல்லாமல் ஸ்மரித்தவுடனேயே பாபங்களை ஒழிக்கத்தக்க பஞ்சபூத லிங்கங்களான ஐந்துலிங்கங்கள் உண்டு. அவை காஞ்சியில் பிரித்விமயமான ஏகாம்பர லிங்கமும், ஜம்புகேஸ்வரத்தில் அப்புமயமான ஜம்பு கேஸ்வர லிங்கமும், அருணாசலத்தில் அக்கினிமயமான அருணாசல லிங்கமும், தக்ஷிணகைலாயம் என்ற புகழ் பெற்ற சுவர்ணமுகி லிங்கமும் பூலோக மஹா கைலாயம் என்ற புகழ் பெற்ற தில்லையில் ஆகாயமயமான திருமூல லிங்கமும் ஆகும். இவ்வைந்து லிங்கங்களைக் கண்ணால் கண்டாலும், காதால் கேட்டாலும், வாயால் சொன்னாலும், மனத்தால் நினைத்தாலும் அப்போதே புனிதமடைந்து, இஷ்டசித்திகள் கைகூடப் பெறுவர்.

இனி தீர்த்தங்களிலும் திவ்விய ஸ்தலங்களிலும் புண்ணிய லிங்கங்களின் உபலிங்கங்களைச் சொல்லுகிறேன். சவுராஷ்டிர சோமநாத லிங்கத்திற்கு மஹீநதிசாகர சங்கம் ஸ்தலத்தில் அந்தகேசலிங்கமும், மல்லிகார்ஜுனலிங்கத்திற்குப் பிருகுபர்வத சமீபத்தில் ருத்திரலிங்கமும், மஹாகாள லிங்கத்திற்குத் துக்தேச லிங்கமும், ஓங்காரேசுவர லிங்கத்திற்கு கர்த்தமேச லிங்கமும், கேதார லிங்கத்திற்கு யமுனா தீரத்தில் பூதேச லிங்கமும், பீமசங்கர லிங்கத்திற்கு பீமேஸ்வர லிங்கமும், விஸ்வே சுரலிங்கத்திற்கு சரண்யேஸ்வர லிங்கமும், திரியம்பக லிங்கத்திற்கு சித்தேஸ்வர லிங்கமும், வைத்தியநாத லிங்கத்திற்கு வைஜநாத லிங்கமும், நாகேஸ்வர லிங்கத்திற்கு ஜில்லிகா சரஸ்வதி சங்கமத்திலிருக்கும் பூதேஸ்வரலிங்கமும்,  இராமேஸ்வர லிங்கத்திற்கு குப்தேச லிங்கமும், குங்மேசலிங்கத்திற்கு வியாக்சிரேஸ்வர லிங்கமும் உபலிங்கங்களாகும், இனி பிரதானமான லிங்கங்களையும் சொல்கிறேன். அவை கங்கா தீரத்திலிருந்து பயன் தருகின்றன.

அவை கிருத்திவாகேச லிங்கம், விருத்தகாலதேச லிங்கம், தலை பாண்டேசுரலிங்கம், தவாசுவமேத லிங்கம், கங்காசாகர சங்கமத்தில் சங்கமேஸ்வர லிங்கம், யமுனா தீரத்தில் கோதுமேஸ்வர லிங்கம், பிருந்தாவனத்தின் அருகே நீலேஸ்வர லிங்கம் பூதேஸ்வர லிங்கம், கவுசிகி தீரத்தில் நாரீசுவர லிங்கம், நல்லகி தீரத்தில் கடுகேச லிங்கம், புஷ்கரதீரத்தில் பூரேசலிங்கம், மல்குமணி தீரத்தில் மண்டகேஸ லிங்கம், கோமதி சாகர சங்கமத்தில் சித்த நாகேஸ்வரலிங்கம் பந்தனத்தில்(பாட்னா) தூரேச லிங்கம் மிருகேசலிங்கம், ஜகந்நாதலிங்கம் எனப்படும்.

நருமதை தீரத்திலுள்ள லிங்கத் தொகையை ஒருவராலும் சொல்லமுடியாது அந்த மகாநதியே சிவரூபமாயும் பாபநாசனியாகவும் இருக்கிறது அதிலுள்ள பருக்கை கற்கள் யாவுமே சிவலிங்கமே. ஆயினும் அங்கிருக்கும் லிங்கங்களில் சிலவற்றின் பெயர்களைச் சொல்கிறேன் அங்குள்ள மாமலையில் ஆவர்த்தேசர், பத்மேஸர், சிம்ஹேசர், ஸுமேசர், குமாரேசர், புண்டரீகேசர், மண்டபேசர், தீக்ஷீணேசர், துந்தரேசர், குலேசர், கும்பேசர், குபேரேசர், சோமேசர், நீலகண்டேசர், மங்களேசர் நந்திகேசர் எனப்பெயர் பெற்றவை நந்திகேசர் கோடி பிரம்மஹத்திகளையும் போக்கடிப்பவர் அந்த லிங்கத்தைப் பக்தியோடு பூஜிப்பவன் அடையாத பயன் இல்லை. அங்கு நருமதையாற்றில் நீராடிக் குளிப்பவர்கள் தாம் செய்த பாவங்களையெல்லாம் நீங்குவர்.

38. யாத்ரீகன் கதையும் நந்திகேஸ்வர லிங்க மகிமையும்

சிவ நேசர்களே! பூர்வத்தில் தர்மராஜன் நாரத முனிவரிடம் கேட்ட ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். நர்மதை நதி தீரத்தில் கர்ணகி என்ற பட்டிணத்தில் உதத்திய வமிசத்தில் உதித்த பிராமணன் ஒருவன் காசியாத்திரை செய்ய விரும்பி, தன் இரு குமாரர்களிடம் தன் மனைவியை ஒப்படைத்து விட்டு காசிக்கு யாத்திரை சென்று அங்கு தங்கியிருந்து ஒரு நாள் இறந்து விட்டான். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் புத்திரர்கள் தங்கள் தந்தைக்குச் செய்ய வேண்டிய அந்தியேஷ்டி முதலிய கருமங்களைச் செய்தார்கள். இறந்தவனின் மனைவி தன் மக்கள் மீது கொண்டிருந்த விருப்பத்தால் அவர்களைக் காத்து மணவினை முடித்து முன்னோர் வைத்திருந்த பொருளை இருவருக்கும் பகிர்ந்து கொடுத்து தன் பாதுகாப்பிற்குச் சிறிது தனம் வைத்திருந்து சில காலத்தில் அதைத் தரும வழியில் செலவிட்டுப் புண்ணியம் தேடியும் பிராணன் ஒழியாதிருக்க வாழ்ந்து வந்தாள். அப்போது அவளது புத்திரர்கள் தாயை நோக்கி. அம்மா உனக்கு மனக்குறை ஏதாவது இருந்தால் அதை எங்களிடம் சொல்! என்றார்கள். அதற்கு அவள் எனக்கு ஒரு குறையிருக்கிறது. அதை செய்வீர்களானால் எனக்கு நல்ல மரணம் ஏற்படும், என்றாள். அது என்னவென்று புதல்வர்கள் கேட்டார்கள். அதற்கு அவள் அது என் மூத்தமகன் செய்ய வேண்டியது அவன் அதைச் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை. அதாவது காசியில் மரணம் கிட்டாவிட்டாலும் என் எலும்புகளை கங்கையில் விடவேண்டும் என்பதேயாகும்? அவ்வாறு செய்தால் எனக்கு ÷க்ஷமம் வரும் இதுவே என் விருப்பம் என்றாள். மூத்த மகன் அவளை நோக்கி, தாயே! நீ நல்லமனதோடு உயிர் நீத்தால் உன் காரியத்தை நீ சொன்னபடி நான் செய்த பிறகே என் காரியங்களைச் செய்வேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான். உடனே தாய் சிவஸ்மரணை செய்துகொண்டே பிராணனை விட்டாள். அப்போது அவளது புத்திரர்கள், தகனம் முதல் உத்தரகிரியை சீராக யாவற்றையுஞ் சிறப்பாகச் செய்தார்கள். சுவாதன் என்ற ஜேஷ்ட-குமாரன் முதல் மாசிகம் செய்து காசிக்குப் போகத் தாயின் எலும்புகளை எடுத்துக்கொண்டு தன் மனைவியையும் புதல்வரையும் வீட்டிலே நிறுத்தி விரைவில் வந்து விடுவதாகச் சொல்லி விட்டு ஒரு சேவகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டான். ஒரு யோஜனை தூரம் சென்றதும் இருட்டி விட்டதால் அங்கு ஒரு பிராமணன் வீட்டில் சேர்ந்து சந்தியா வந்தனம் முதலிய கிரியைகளைச் செய்து முடித்துக் கொண்டு அன்றிரவு தங்கி சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தான். அப்போது ஐந்து நாழிகை இரவில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

அந்த வீட்டு வாசலில் பசுவொன்று கட்டப்பட்டிருந்தது. அவ்வீட்டு வேதியன் பசுவை இன்னும் கறக்கவில்லையா? என்று கேட்டுக் கொண்டே கன்றை அவிழ்த்து விட்டு தன் மனைவியை பசுவை கறப்பதற்குக் கூப்பிட்டு அந்தக் கன்றின் கழுத்துக் கயிற்றைப் பற்றி இழுத்துப் போனான். அப்போது அந்தக் கன்று அவன் காலை மிதிக்கவே வேதியன் கோபங்கொண்டு தன்னை மிதித்தற்காக அந்தக் கன்றை கொம்பாலடித்துப் பாலூட்ட விடாமலும் கொண்டு சென்று ஒரு தூணில் கட்டிப்போட்டான். கன்று அருந்தாத பால் பசுவின் மடியில் இருந்ததால் பசுவானது மிகவும் அழுதது. அவ்விரைச்சலைக் கேட்டதும் பசுவின் கன்று தாயே! நீ ஏன் கூச்சலிடுகிறாய்? என்று கேட்டது. அதற்கு தாய்ப் பசு எனக்கு நேர்ந்த துக்கம் உன்னை அவன் கொம்பாலடித்ததால் உண்டானது என்றது. தாயே! நாம் கர்ம வசத்திலுள்ள ஜீவர்கள் ஆகையால் கர்மத்தை அனுபவிக்காமல் நாம் எங்கே போகமுடியும். பூர்வத்தில் சிரித்துக்கொண்டே செய்த கர்மத்தை இப்போது அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்கிறது. சுக துக்கங்கள் அனுபவிக்காமல் தப்புவதில்லை என்று கன்று பதில் கூறியது. அதற்குத் தாய்ப்பசு, மகனே, நீ சொல்லும் வார்த்தை நான் அறிந்ததுதான் ஆயினும் சம்சார மாயையால் துக்கம் அடைந்திருக்கிறேன். நான் அழுதும் துக்கம் அடங்கவில்லை! என்றது. அதற்கு அதன் கன்று நீ அழுவதால் பயன் என்ன! அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து தானே தீர வேண்டும்? என்றது. அதற்குப் பசுவானது எனக்கு இப்போது உண்டான துக்கம் இந்த வேதியனுக்கும் உண்டானாலன்றி ஒழியாது. ஆகையால் இவனுக்கு அத்தகைய துன்பத்தை நான் உண்டாக்குவேன். அப்போதுதான் அது தன் செயலால் விளைந்தது என்பதை உணர்வான். மகனுக்குத் துன்பம் நேர்ந்தால் தாய்க்கும் அதைக் காட்டிலும் துக்கம் அதிகமாக இருக்கும்! நாளை உதயத்தில் அவ்வேதியனின் மைந்தனை என் கொம்புகளில் குத்திவிடப்போகிறேன். அதனால் அவன் புத்திரன் மாண்டு போவான் என்றது. அதற்கு கன்று தாயே! இதுவரையில் நாம் செய்த கர்மத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது போதாதென்று இந்தப் பிரமஹத்தியை வேறு அடைய வேண்டுமா? இவன் புதல்வனைக் கொன்றால் உனக்கும் அத்தகைய துன்பம் மீண்டும் வராமல் இருக்காது நற்கருமம் செய்தால் சுவர்க்கலோகமும் துர்க்கருமம் செய்தால் நரகமும் மிஸ்ர(கலவைக்) கர்மம் செய்தால் மானுடப்பிறவியும் கர்மநவிவால் முக்தியும் உண்டாகும். ஆகையால் நீ இத்தகைய தீச் செயலைச் செய்ய வேண்டாம். என்னை அவன் அடித்தானே என்று நினைக்கிறாயா? நான் யார்; நீ யார்? நீ தாயும் இல்லை, நான் உன் புதல்வனுமில்லை. தாய் தந்தை உற்றார் உறவினர்கள் மக்கள் என்று சொல்லப்படுகின்ற யாவுமே பொய்! எல்லா பிராணிகளும் தத்தமது கர்மத்தை அனுபவிக்க வேண்டும். ஆகையால் இதனை உணர்ந்து தீமை செய்யாமல் நன்மையையே செய்ய வேண்டும் என்றது, அதற்குத் தாய்ப் பசு, உனக்கு விளைவித்த துன்பத்தைக்கண்ட நான் அதை அவர்களுக்குத் திருப்பிச் செய்வது எப்போது என்று நான் பதைக்கிறேன். பிருமஹத்தி வரும் என்றாயல்லவா? அதைப்போக்கடிக்க தக்க புண்ணிய ஸ்தலம் ஒன்று இருக்கிறது. அது எனக்குத் தெரியும். இந்த வேதியச் சிறுவனைக் கொன்றால் என் உடல் கறுத்து விடும். அந்தப் பிரமஹத்தி நீங்கியவுடன் என் உடல் பழையபடி வெள்ளையாகி விடும். இது எனக்குத் தெரியும் என்று சொல்லியது. கன்று பதில் பேசவில்லை. இந்த சம்பாஷணையை மிருகங்களின் பேச்சு மொழியை உணர்ந்திருந்த காசியாத்திரைப் பிராமணன் கேட்டுக் கொண்டிருந்தான். இதைச்சோதித்த பிறகே நாம் போகவேண்டும் என்று அவன் அந்த வீட்டிலேயே தங்கியிருந்தான்.

மறுநாள் காலையில் அவ்வீட்டு வேதியன் எழுந்து. வழிப்போக்கனைப் பார்த்து ஐயரே! பொழுது ஏறுகிறேதே! இன்னும் நித்திரை செய்கிறீரே? என்று கேட்டான். அதற்கு காசியாத்திரை செல்வோன் எனக்கும் என் சேவகனுக்கும் இளைப்பாக இருப்பதால் இரண்டு நாழிகை கழித்துச் செல்கிறோம் என்று மறைத்துச் சொல்லி உறங்குபவனைப் போலிருந்தான். அப்போது பசுவைக்கறக்கும் வேளையாயிற்று. வேதியன் வேறு வேலைக்குப் போக வேண்டியிருந்ததால் தன் மகனை அழைத்து, நீ கன்றை விடு என்று கூறிவிட்டுப் போய் விட்டான். அதன்படி சிறுவன் கன்றை அவிழ்த்து பசுவினிடம் விட அவன் தாய் பால் கறக்க வந்தாள். பசுவின் மடி சுரந்ததைக் கண்டு கன்றைப் பழையபடி கட்ட ஒரு கோலால் புடைத்து இறக்கிக் கட்டும் போது, பசுவானது கோபித்து அவனைத் தன் கொம்புகளால் குத்திற்று சிறுவன் பக்கத்தில் பாய்ந்து விழுந்து மூர்ச்சையானான். அதைக் கண்டோர் சொல்ல தந்தை முதல் அநேகர் கும்பலாகக் கூடித் தண்ணீர் கொண்டு வாருங்கள். என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அந்தச் சிறுவன் மரண மடைந்தான். அதைக் கண்டு அனைவரும் அழுது புலம்பினார்கள். அந்த வீட்டு வேலைக்காரன் பசுவை அடித்து அவிழ்த்து விட்டான். வெண்ணிறமான அந்தப்பசு கருநிறமடைந்தது: எல்லோரும் வருந்தினார்கள். இந்த வினோதத்தையெல்லாம் கண்ட காசியாத்ரீகன் தன் சேவகனுடன் புறப்பட்டு பசு போகும் வழியைப்பின் தொடர்ந்து சென்றான். பிருமஹத்தி தோஷத்திற்கு ஆளான பசுவானது வாலைக் கிளப்பிக்கொண்டு நருமதை நதியை அடைந்து நந்திகேஸ்வரரின் சமீபத்தில் இருந்த திவ்வியமான ஜலத்தில் மூன்று முறை மூழ்கி ஸ்நானம் செய்ததும், வெண்ணிறம் அடைந்து தான் வந்தவழியே திரும்பிச் சென்றது. அதைக் கண்ட காசியாத்ரீகன். ஆஹா! இந்தத் தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்தவுடனேயே பிரமஹத்தி ஒழிந்ததே! என்று தானும் தன் சேவகனுமாக அதில் ஸ்நானம் செய்து நந்திகேஸ்வரரை வணங்கி வழிபாடு இயற்றி விட்டுச் சென்றார்கள்.

அவர்களை அவ்வாறு போகும்போது, அவர்கள் இருவருக்கும் எதிரில் சர்வாபரணங்களையணிந்த பெண் ஒருத்தி வந்து நீ எங்கிருந்து வருகிறாய்? பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! என்று கேட்டாள். அதற்கு யாத்திரீகன் எதையும் மறைக்காமல் நடந்தவற்றைச் சொல்லிவிட்டான். அதன்பிறகு அவள் யாத்ரீகனைப் பார்த்து, நீ இங்கேயே இருக்கவேண்டும் என்றாள். யாத்ரீகனும் தன் சேவகனுடன் அங்கேயே தங்கியிருந்தான். அப்போது கங்கையான அந்த மங்கை நீ எங்கே இவ்விசேஷத்தைக்கண்டாயோ, அங்கேயே இவ்வெலும்புகளை விட்டு விடுவாயானால் உன் தாய் திவ்விய தேகமடைந்து ஸ்வர்க்கம் சேர்வாள் ஒவ்வொரு ஆண்டும் வைகாச சுத்த சப்தமியில் கங்கை இவ்விடத்திற்கு வருவாள். இன்றைய தினம் அந்தச் சப்தமியாகும். நானே கங்கை! நான் அங்கு தான் போகிறேன் என்று சொல்லி மறைந்துவிட்டாள். காசியாத்ரீகன் மீண்டும் நர்மதை நதி தீரத்திலுள்ள நந்திகேஸ்வரத்துக்கு வந்து தன் தாயின் திவ்விய உருவத்துடன் தோன்றி, குமாரா நீயே தன்யன், நீயே கிருத கிருத்யன். உன் வம்சத்தை நீயே பவித்ரஞ் செய்தாய். உனக்குத் தனம் தான்யம் ஆயுள் வசிமவிருத்தி முதலான கிடைக்கும் என்று வரமளித்து. நற்கதியடைந்தாள். இவ்விதமாக, அந்தப் பிராமணன், தன் தாயின் அஸ்தியை நர்மதை நதியில் நந்திகேஸ்வரத்தின் அருகே விடுத்து, தன் யாத்திரையை முடித்துத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். அன்று முதல் அந்தத் தீர்த்தம் மானுடருக்கெல்லாம் பிரசித்தமாகத் தெரிந்தது. ஆகையால் நந்திகேஸ்வரத்திற்கு அருகில் நருமதை நதியில் ஸ்நானம் செய்தால் இஷ்ட காமியங்களையடைவார்கள் என்று தெரிந்து கொண்டார்கள்.

மேலும் ருஷீகை என்ற இளம் பிராமண விதவை ஒருத்தி அந்த ஸ்தலத்திற்குச் சென்று கடுமையான சிவபூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது மூடன் என்ற தைத்தியன் ஒருவன் அவளை சிவபூஜை செய்யாதிருக்கும்படி பலவகையாகப் போதித்தான். அப்படிப் போதித்தும் ருஷீகை சிவபூஜையைச் செய்து வந்ததால் தைத்தியன் தன் கோரரூபம் முதலியவற்றை அவளுக்குக் காட்டி பயமுறுத்தவே அவள் பயந்து சிவ சிவ என்று சிவ நாமங்களை ஸ்மரித்து சரணமடைந்த தன்னைக்காக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள். உடனே நந்திகேஸ்வரர் அவள் எதிரில் தோன்றி, உனக்கு ஒரு பயமுமில்லை. உன்னை நான் இரட்சித்தேன். அவ்வரக்கன் தானாகவே போய்விடுவான் நான் அனைவரையும் காத்தருள்வதற்காகவே இங்கிருக்கிறேன் என்று வரமளித்து அவள் பூஜித்த பார்த்திவ லிங்கத்தில் அந்தர்த்தானமானார், கங்கையும் அவள் முன்பு தோன்றி அவளைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு, அவள் என் பொருட்டு இந்தத் தினமாகிய வைகாச சுத்த சப்தமியில் இங்கு வந்து பிரத்யட்சமாக இருக்க வேண்டும் என்றாள். அதற்கு அவ்வாறே இசைந்த கங்கை ஆண்டுதோறும் அங்கு வருகிறாள். ஆகையால் அந்தத் தினத்தில் அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் சகல பாபங்களும் விலகிப்போகும்; முனிவர்களே! நீங்கள் கேட்ட சிவ சரிதங்களில் நந்திகேஸ்வர மகாத்மியமும் ஒன்றாகும்.

39. அனுசூயை வழிபட்ட கதையும் அத்திரீஸ்வர மகிமையும்

வியாசேஸ்வரர், அமேசுவர, பண்டாரேசுர, ஹாங்காரேசுவர, சுரேசுவர, பூதேசுவர, சையகேசுர, லிங்கங்கள் பாபத்தை நீக்குபவை, இன்னும் தப்திகாநதி தீரத்தில் குமாரேஸ்வர சித்தேஸ்வர ஸ்தாதஸ்வர, ராமேஸ்வர, ருக்ஷிஸ்வர, கும்பேஸ்வர நந்தேஸ்வர பஞ்ச புஞ்சேஸ்வர லிங்கங்கள் தரிசித்தவுடனேயே சகல விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியவை. பூர்ணாநதி தீரத்தில் பூரணாகேஸ்வர வீரேஸ்வர லிங்கங்களும், கோதாவரி தீரத்தில் கபாலேஸ்வர சக்கரேஸ்வர, சந்திகேஸ்வர, தவுதபாபேஸ்வர, பீமேஸ்வர, சூரியேஸ்வர லிங்கங்களும் விளங்குகின்றன. திருப்திகா நதி தீரத்தில் திரியம்கேசுவர, கோகர்ணேஸ்வர, நாரூகேஸ்வர, ராமேஸ்வர; நந்தேஸ்வர, விமலேஸ்வர சண்டகேஸ்வர லிங்கங்கள் பூஜித்தவுடனே ஞானம் உண்டாக்கத்தக்கவை. திருப்திகா நதி கீழ்கடல் சங்கமத்தில் தர்மகேஸ்வர லிங்கமும், மேற்குக் கடற்கரையில் சித்தேஸ்வர, பிலேஸ்வர; அந்தகேஸ்வர லிங்கங்களும் இருக்கின்றன. அந்தகாசுரனை சங்கரித்த உக்கிரரூபத்துடன் சிவபெருமான் நின்ற இடமே அந்தகேஸ்வரம் எனப்படும். எல்லாவுலகங்கட்கும் சுகத்தை விளைவிக்கும் அற்புதாசலத்தல் சங்கேஸ்வர, கர்த்தமேஸ்வர கோடீஸ்வர லிங்கங்கள் இருக்கின்ற கவுசிகி நதி தீரத்தில் அசலேஸ்வர, நாகேஸ்வர அனந்தேஸ்வர யோகேசுவர வைத்திய நாதேசுவர: கோடீசுவர; சப்தேசுவர; பக்திகேசுவர; சண்டசுவர, சங்கமேசுவர லிங்கங்கள் இருக்கின்றன. இதுவரையில் கீழ்த்திசையில் உள்ளவற்றைச் சொன்னேன். முனிவர்களே! இனி தக்ஷிணத்தில் உலகத்தில் இருப்பவர்கள் சுகமடையவும் அத்திரிமுனிவரும் அனுசூயையும் ஒரு பஞ்ச காலத்தில் அன்னதானஞ் செய்யச் சங்கற்பித்துக் கொண்டு அதனை நிறைவேற்றவும் சுயம்புமூர்த்தியாகத் தோன்றிய அத்திரீசுவர லிங்கமொன்று சாக்ஷõத்காரமாக (கண் கூடாக) விளங்குகிறது. இவ்வாறு சூதபுராணிகர் சொன்னதும் அவ்வத்தீஸ்வர லிங்கத்தின் உற்பத்தி முதலியவற்றை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நைமிசாரண்யவாசிகள் கேட்டார்கள் சூதர் சொல்லலானார்.

முனிவர்களே! நீங்கள் கேட்ட விஷயம் அருமையானது அந்தக் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள். தென்திசையில் காமதம் என்று ஒரு வனம் உண்டு. அது தவஞ் செய்வதற்குத் தக்கதாக இருந்தது. அங்கே பிரம்ம புத்திரரான அத்திரிமுனிவர் தன் பத்தினி அனுசூயையுடன் தவஞ்செய்து கொண்டிருந்தார். அப்போது நூறு ஆண்டுகாலம் மழையே பெய்யாததால் எல்லோரும் கஷ்டப்பட நேரிட்டது. எங்கும் தண்ணீரே இல்லாமல் போயிற்று மரங்கள் எல்லாம் உலர்ந்தன தளிர்கள் பழங்கள் எதுவுமே இல்லாமற்போயின. சந்தியாவந்தனம் முதலிய நித்திய கர்மங்கள், ஜலமில்லாமல் நிறுத்தப்பட்டன. எங்கும் நெருப்புக் காற்றடித்தது இதனால் யாவரும் பெருந்துன்பமடைந்தார்கள். இவற்றைக் கண்ட பதிவிரதையான அனுசூயை இந்தத் துயரைச் சகிக்கமாட்டாமல் தன் கணவன் யோகத்தில் அமர்ந்திருக்கும் போது அவரது சீடர்கள் முதலானோர் பசிப்பிணி ஆற்றாது பல இடங்களுக்குச் சென்றதால் நான் மட்டும் தனித்து அவருக்குப் பணிவிடை செய்து கொண்டு பார்த்திவலிங்கம் ஒன்றைச் செய்து பூஜித்து தன் கணவன் முன் இருத்தி இருவருக்கும் தண்டம் செய்தும் பிரதட்சிணம் செய்துகொண்டும் இருந்தாள். அவளது பூஜையைக் கண்ட தைத்தியர் தானவர் முதலியவர்கள் அழகியான அனுசூயையை பார்த்து மயங்கி மோகம் கொண்டார்கள். அவர்கள் ஆசையோடு அவளை நெருங்க முயன்றார்கள். ஆனால் சிவபூஜையின் சிறப்பினாலும் பதிவிரதை மகிமையினாலும் நெருப்பு மயமாய் உஷ்ணம் வீசுவதாலும் அவளை நெருங்க முடியாமல் தூரத்திலேயே இருந்தார்கள்.

அத்திரி முனிவர் செய்த தவத்தைக் காட்டிலும் அனுசூயை செய்த தவம் மிகவும் கடுமையானதாக இருந்தது. அனுசூயை தவஞ்செய்து முடித்தவரையில் அவ்விருவர் நீங்கலாக வேறொருவரும் அங்கில்லை இவ்வாறு சிறிது காலம் கழிந்தது. அத்திரிமுனிவர் தியான யோகத்தில் மயைவயப்பட்டு ஒன்று உணராதவராக இருந்தார் பதிவிரதையான அனுசூயையும் தன் கணவனையும் சிவலிங்க பெருமானையும் அன்றி பிரிதொன்றையும் உணராமல் பெரும் நிஷ்டையிலிருந்தாள். அத்திரி முனிவர் தவத்திற்கும் அனுசூயையின் சிவபூஜைக்கும் சகல தேவர்களும் முனிவர்களும் கங்கை முதலிய தீர்த்தங்களும் மகிழ்ந்து அவர்களைப் பார்ப்பதற்காக அங்கு திரண்டுவந்து அவர்களது அற்புதசமாதியோக  நிலையைக் கண்டு அவர்கள் செய்யும் தவமும் பூஜையும் சிறந்தன. இதைப்போல் யாரும் செய்ததில்லை. இவர்கள் மகா புண்ணியசாலிகள்! என்று சொல்லிக் கொண்டே போய் விட்டார்கள். சிவபெருமானும் கங்காதேவியுமே அங்கே தங்கிவிட்டார்கள். அவர்களில் கங்கை அனுசூயையின் பூஜைக்கிரமத்தைக் கண்டு இவளுக்கு ஏதேனும் வரங்கொடுத்துத் தான் செல்ல வேண்டும். சிவபெருமானும் வந்திருந்தார் அவரும் ஏதாவது நன்று செய்தே அந்தர்த்தானமாவார் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அனுசூயையோ தன் கணவனது நிஷ்டைகலையும் வரையில் சிவபூஜையிலேயே இருக்கவேண்டும். என்று கருத்துடன் அன்னபானாதிகளை நீங்கியிருந்தாள். அவ்விருவர் நிஷ்டையும் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் நீடித்தன.

ஒரு காலத்தில், அத்திரி முனிவர் தன் நிஷ்டை நீங்கி, அனுசூயையைப் பார்த்து, விரைவில் தண்ணீர் கொண்டு வருக! என்றார்; உடனே அனுசூயை கமண்டலத்தை எடுத்துக் கொண்டு போய் எங்கெங்கோ தண்ணீருக்காக அலைந்தாள். எங்கும் தண்ணீர் கிடைக்காமல் அவள் யோசித்தாள். அப்போது கங்காதேவி அவள் முன்னால் தோன்றி, அனுசூயை! உனக்கு வேண்டியதை கேள். கொடுக்கிறேன் என்று சொல்ல அனுசூயை அவளைப் பார்த்து; நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்று கேட்க. அதற்கு கங்கை; நான் உனது பதிவிரதா தர்மத்தையும் நீ உன் கணவனையும் சிவலிங்கத்தையும் பூஜித்து வந்த உறுதிப்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் தான் கங்கை. உனக்கு என்ன வரவேண்டுமோ, கேள் என்றாள். அதற்கு அனுசூயை கங்கையைப் பணிந்து தாயே! எனக்கு தண்ணீர் வேண்டும் என்றாள். அதற்கு கங்கை உன் கையால் சிறுகுழி ஒன்றை தோண்டுவாயின் அங்கே நான் ஜலம் கொடுப்பேன் என்று கூற அனுசூயை அவ்வாறே தோண்ட ஜலதாரை தோன்றியது. அனுசூயை பெரும் வியப்போடு தண்ணீர் முகந்து கொண்டு, கங்கா தேவியைப் பார்த்து, உனக்கு என்மீது தயை இருக்குமானால் என் கணவர் தவஞ்செய்து முடியும் வரையில் இங்கேயே இருக்க வேண்டும்! என்று பிரார்த்தித்தாள். அதற்கு கங்கை உன் கணவனுக்குச் செய்த பணிவிடையால் அடைந்த பயனில் ஒரு மாத பலனை எனக்குக் கொடுப்பாயானால் நான் அப்படியே இருக்கிறேன்! என்றாள். அனுசூயை அப்படியே தந்தேன்! என்று தத்தம் செய்து தண்ணீரை எடுத்துக் கொண்டு தன் கணவனிடம் கொடுத்து அவர் முன்பு நின்றாள். அத்திரி முனிவர் முறைப்படி ஆசமனஞ் செய்து தாகந்தீர்ந்து மிகவும் மகிழ்ந்து  பெண்ணே! நான் தினமும் பானம் செய்யும் ஜலமல்லவே இது. இது சிறப்பாக இருக்கிறதே! என்று கூறி நாற்புறமும் சுற்றிப் பார்த்தார். எந்தப் பக்கம் பார்த்தாலும் உலர்ந்த மரமும் நெருப்புக் காற்றுமாக இருப்பதைக் கண்டு மழையில்லையா என்று அவர்தம் மனைவியைக் கேட்டார். ஆம் மழையில்லை என்றாள் அனுசூயை! மழையில்லையென்றால் இப்பொழுது எங்கிருந்து நீ தண்ணீர் கொண்டு வந்தாய்? என்று முனிவர் கேட்டார். தண்ணீர் வந்த விதத்தைச் சொன்னால் தற்புகழ்ச்சியாகும் சொல்லாவிட்டால் குற்றம் வரும் என்பதால் அனுசூயை சிறிது நேரம் யோசித்தாள் அத்திரி முனிவர் இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டார். அதற்கு அவள் சுவாமி! நான் உண்மையைச் சொல்கிறேன். தங்களுக்கு பணிவிடை செய்த பயனாலும் சிவபூஜை செய்த பலத்தாலும் கங்காதேவியே இங்கு வந்திருக்கிறாள். அந்த ஜலத்தையே உங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தேன் என்றாள். அதைக் கேட்டதும் அத்திரி முனிவர், பெண்ணே! நீ சொல்வது உண்மையா? உண்மையென்று நம்ப முடியவில்லை. யோகியருக்கும் தேவர்களுக்கும் அசாத்தியமான காரியம் உனக்கு எப்படி கைகூடும்? கங்கையை நான் என் கண்ணெதிரே கண்டாலொழிய நம்ப மாட்டேன். கங்கையைக் கண்டால்தான் நம்புவேன்? என்றார்.

நாதா! தாங்கள் என்னுடன் வந்தால் காண்பிக்கிறேன்! என்று கங்கை தோன்றிய இடத்துக்கு அவரை அழைத்துக் கொண்டு அனுசூயை போனாள். அங்கே குழியிலிருந்த ஜலப்பெருக்கைக் கண்டு அத்திரி முனிவர் மிகவும் மகிழ்ந்து நீ தன்யை! என் தவமும் சபலமாயிற்று. கங்கா நதியில் ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைத்ததே. இது பிறருக்கு கிடைக்குமா என்று அந்தக் கங்கை நீரில் நீராடி ஆசமனம் செய்து பல முறை கங்கையைத் துதித்தார். அப்போது கங்கை அவர்களைப் பார்த்து அனுசூயா தேவி! நான் இனி விடை பெறுகிறேன்! என்ற சொல்ல அனுசூயை கங்கையைப் பார்த்து கங்காதேவி! நீ எனக்குப் பிரத்யட்சமாகி பரிபூரண அன்புடையவளாக இருப்பது உண்மையானால் நீ ஏற்கனவே அங்கீகரித்தது போல இங்கேயே இருக்க வேண்டும்! என்று வேண்டினாள். அத்திரி முனிவரும் பலவாறு கங்கையைத் துதித்துத் தயை வைக்க வேண்டும் என்று இறைஞ்சினார். பிறகு கங்கை அனுசூயையை நோக்கி நீ முதலில் உன் கணவனையும் சிவலிங்கத்தையும் பூஜித்ததால் உண்டான பயனில் ஒரு மாத பயனைக் கொடுத்து உன் கணவனின் தவம் முடியும் வரையிலும் இங்கேயே இருக்க வேண்டும் என்றாய். இப்பொழுதும் இங்கேயே இருக்க வேண்டும் என்பாயாகில் அந்தப் பயனில் ஒரு வருஷ பயனைக் கொடுத்தால் தான் அவ்வாறே இருப்பேன். தானம், ஸ்நானம், யாகம், பதிசேவை முதலியவற்றால் அடையும் பயனைவிட பதிவிரதையைக் கண்டால் அதிகப் பயன் கிடைக்கும். ஆகையால் உன்னை தரிசித்துக் கொண்டே இங்கு இருப்பதால் எனக்கும் மகிழ்ச்சி தான், உலகத்துக்கெல்லாம் நன்மை உண்டாக வேண்டும் என்று நீ நினைத்தால், நான் கேட்ட அந்தப் பயனைக் கங்கைக்கு வழங்கினாள். பொன், சந்தனம், கரும்பு, இந்த மூன்றும் தான் துயருற்றாலும் பிறருக்குப் பயன் அளிப்பது போல கஷ்டப்பட்டு தேடியபுண்ணியத்தை உலக நன்மையை உத்தேசித்து அனுசூயை தன் புண்ணிய பயனைக் கங்கைக்குக் கொடுத்து விட்டாள்.

அப்போது சிவபெருமான். அனுசூயை பூஜித்த பார்த்திவலிங்கத்திலிருந்து பிரத்தியட்சமாகி, உன் பதிவிரதா தர்மத்திற்கும் உன் பூஜைக்கும் மகிழ்ந்தேன். உனக்கு வேண்டியவரத்தைக் கேள் என்றார். ஐந்து திருமுகங்களுடன் பிரத்யட்சமாகிய சிவபெருமானை அத்திரி முனிவரும் அனுசூயாதேவியும் வணங்கி வழிபட்டு. தேவரீரும் ஜகன்மாதாவாகிய கங்காதேவியும் ஆகிய இருவருக்கும் எங்கள் மீது தயை இருக்குமானால் எப்போதும் இங்கேயே எழுந்தருளுயிருந்து உலகத்திற்கு நன்மை செய்து அருள் புரிய வேண்டும். என்று பிரார்த்தித்தார்கள். சிவபெருமானும் கங்கையும் அவ்வாறே அங்கீகரித்தனர், சிவபெருமான் அத்திரீஸ்வரர் என்ற பெயரால் சகலருக்கும் நன்மை செய்ய அங்கேயே கோயில் கொண்டார். கங்கையும் தன் சகோதரியாகிய பார்வதி தேவியுடன். அங்கேயே இருக்கிறாள். அதுமுதல் அவ்விடத்தில் குறைவில்லாமல் கங்காஜலம் எக்காலத்தும் விளங்கி வருகிறது. இதையுணர்ந்த தவமுனிவர்கள் தங்கள் பத்தினிமார்களோடும் சீடர்களோடும் அங்கே வந்தார்கள் கோதுமை தானியங்கள் இலைகள், புற்கள் பழங்கள் யாவும் விருத்தியடைந்தன அதைக் கண்ட முனிவர்கள் இதுவே தவத்திற்கு தகுதியான இடம் என்று அங்கேயே தவஞ் செய்திருந்தார்கள். அவர்களது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் மழை பொழியச் செய்தார். அதனால் சகலருக்கும் சுகம் உண்டாகி, அன்னபானாதிகளைப் பெற்றுத் தங்களுக்குரிய தவஞ்செய்து கொண்டிருந்தார்கள். இந்த அத்திரீசுவரரின் மகிமையை கேட்டவர்கள் சகல சுபங்களையும் அடைவார்கள். இவ்வாறு சூத புராணிகர் சொன்னதும் நைமிசாரண்ய வாசிகள் அவரை நோக்கி, ஞானிசிரியரே! இனி தாருகா வனத்திலுள்ள நாகேஸ்வரலிங்கப் பிரபாவத்தைச் சொல்லவேண்டும் என்று வேண்டினார்கள். சூதமுனிவர் சொல்லத் துவங்கினார்.

40. பிக்ஷõடனர் மோகினி கதையும் நாகேஸ்வரலிங்க மகிமையும்

முன்னொரு காலத்தில் ஒரு கற்பத்தில் தேவதாருவனம் என்ற காடொன்று இருந்தது. அதில் வசித்து வந்த மகரிஷிகள் யாகமே எல்லா பயன்களையும் கொடுக்கத் தக்கது என்றும் யாகத்தைக் காட்டிலும் கடவுள் வேறு இல்லையென்றும் தீர்மானித்தார்கள். அவர்களது மனைவியரோ தங்கள் கற்பே சிறந்தது என்றிருந்தார்கள். சிவபெருமான் அவர்களது மயக்கத்தையறிந்து அதை ஒழிக்கக் கருதி மகாவிஷ்ணுவை அழைத்து நீ பெண் வடிவம் ஏற்று என்னுடன் வருவாயாக! என்று பணிந்தார். உடனே திருமாலும் பொற்பதுமை போன்ற உடலழகும் முழுநிலாப் போன்ற முகமும் மன்மதனுடைய கரும்புவில்லைப் போல் வளைந்த புருவமும் உள்ள வேல் போன்ற கூர்மையான கருவிழிகளும் முல்லையரும்பு போன்ற அழகான பல்வரிசையும் கொவ்வைப் பழங்களைப் போன்ற சிவந்த உதடுகளும் பொற் கிண்ணங்கள் போன்ற ஸ்தனங்களும் சாணைக்கல் போன்ற கன்னமும் சங்கு போன்ற கழுத்தும் மூங்கில் போன்ற தோளும் உடுக்கைப் போன்ற இடையும் யானைத் துதிக்கைப் போன்ற தொடையும் பாம்பின் படம் போன்ற நிதம்பமும் செந்தாமரை மலர் போன்ற கைகளும் செம்பஞ்சுக் குழம்பூட்டிய பாதங்களுமுடைய சரவாபரண பூஷிதையான பூங்கொடியென ஒரு பெண்ணுருவம் எடுத்துக் கொண்டார். சிவபெருமானும் அந்த மங்கைக்கேற்ற ஆணழகராய் கோடி சூரியப்பிரகாசமான திவ்விய தேஜசையுடைய திருமேனியோடும் விளங்கினார். அவர் ஒரு கையில் டமருகமும் ஏந்தி, உள்ளாளப்பன் பாடிக்கொண்டு திகம்பரராய் (நிர்வாணமாய்) மதயானைப்போல் நடந்து மாயனாகிய மோகினிப் பெண்ணுடன் தாருகாவனத்து முனிவர்களின் தவநிலையையும் அம்முனி பத்தினியரின் கற்பையும் சோதிக்கக் கருதி அந்த வனத்தை அடைந்து நிர்வாணமாய்த் திரிந்து அம்மங்கையர்கள் மையல் கொள்ளும்படி வீடுகள் தோறும் சென்று பிச்சைக் கேட்டார். ரிஷிபத்தினிகளெல்லாம் பிட்சைப் பொருளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து பிக்ஷõடனரைக் கண்டு காமப் பித்தேறியவர்களும் மதி மயங்கியவர்களும், தூரமாக ஓடியவர்களும் அப்படியே கட்டியணைப்பார்களும், ஆசையோடு அழைப்பவர்களும், மையல் அவஸ்தையால் அவரைத் தன்னோடு கூடி மகிழச் சேரவாரும் என்று கூப்பிடுபவர்களும், மோகாவேசத்தோடு பின் தொடர்பவர்களும், பெருமூச்சு விடுபவர்களும், காமத்தால் தாம் செய்வது எது வென்றே தெரியாதவர்களும் வளையல்களைச் சோரவிடுவோர்களும், ஆடைகளை நழுவ விடுவோர்களும், விழிதெரியாமல் வீழ்பவர்களும், வார்த்தை குழறுவோர்களுமாக அலைந்தார்கள். நீலகண்டராகிய பிக்ஷõடனப் பெருமான் வேத கீதங்களைப் பாடிக் கொண்டும் விநோத வித்தைகளைச் செய்து கொண்டும் வீதியில் திகம்பரராகவே(நிர்டாணமாகவே) உலாவிக் கொண்டிருந்தார்.

மோகினி வடிவமேற்ற மஹாவிஷ்ணுவோ உடல் இளைக்கச் செய்யும் தவமே சிறந்தது என்றறிந்த முனிவர்களைக் கண்டு பெண்மையின் சாகஸங்களையெல்லாம் காட்டத் தொடங்கினார். நாணமுற்றதைப் போல் கவர்ச்சிகரமாக நெளிந்து ஒதுங்கியும் தன் கையில் ஏந்திய வீணையில் சுருதி சேர்த்து இனிமையாகப் பாடியும், கண்வீச்சு வலைகளால் பலரது மதியை மயக்கியும், பண்ணமைந்த பாடல்களினால் பலர் உள்ளத்தை வாட்டியும் புன்னகையால் பலரைத் துன்புறுத்தியும் இவ்வாறு பலவிதத்திலும் மோகினி மோகாக்கினியை அவர்களுக்கு மூட்டி விட்டாள். அதனால் அம்முனிவர்கள் தங்கள் தவச்செயலை மறந்து. அவச்செயல் கொண்டு மதிமயங்கி மாயனாகிய மோகினியின் மலரடியில் விழுந்து பெண்ணே! பேரழகியே, நீ என்ன காரணமாக இங்கே வந்தாய்? நீ இங்கே வந்தது எங்கள் தவப்பயனே என்று தங்கள் சடைகள் அவிழ்ந்து தரையில் விழவும் உத்தரீயமும் நழுவி விழவும் மோகினியைப் பத்தினிகள் கற்பையும், வளையல் முதலான ஆபரணங்களையும் ஆடைகளையும் நழுவவிட்டு பிக்ஷõடனரைச் சூழ்ந்து வருவதைக் கண்டார்கள். உடனே கோபம் கொண்டு நிர்வாணமாகத் திரியும் அத்திகம்பரணையடைந்து பலவிதமாகச் சபித்தார்கள் ஆனால் அச்சாபங்கள் எதுவுமே சர்வலோக சரண்யனான சிவபெருமானை அடையவில்லை அதைக் கண்டதும் முனிவர்கள் பிக்ஷõடனரை நெருங்கி ஐயரே! நீர் யார்! இந்த மோகினி யார்? என்று கேட்டார்கள். அதற்குப் பெருமான் நான் ஒருமுனிவன். இவள் என் மனைவி. இங்கே தவம் செய்ய வந்தோம் என்றார். அதற்கு முனிவர்கள் அப்படியானால் மயக்கு வேசிபோல் திரியும் இவளை நீக்கிவிட்டு நீர் தவஞ் செய்யும்! என்றார்கள் அதற்கு பிக்ஷõடனர் மனைவியோடு தவஞ்செய்வதே சிறந்த வானப்பிரஸ்த தர்மம். நீங்கள் உங்கள் மனைவியரோடு சேர்ந்து தவஞ் செய்யவில்லையா? நீங்கள் உங்கள் மனைவியரின் கற்பு மிகவும் அழகாக இருக்கிறதே! உங்கள் செயல் இப்படியிருக்க கற்பிற்சிறந்த என் மனைவியை விட்டுவிட்டு நானோ தனித்துத் தவஞ்செய்வேன்? என்று சொல்லிக் கோபங்கொண்டவரைப் போல அவர்களை விட்டு நீங்கி மோகினியாகிய மாயவனோடு வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தையடைந்து வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் செய்த பூஜைகளை ஏற்று திருக்கைலையை அடைந்தார்.

வேததாருவனத்தைச் சேர்ந்த முனிவர்கள் சிவபெருமானையும் விஷ்ணுவையும் இகழ்ந்து பேசிய பாவத்தால் ஜ்வரம் முதலிய வியாதிகளையும் பசி முதலான துன்பங்களையும் மனக் கவலையையும் அடைந்து உடல் நடுங்க வாய் குழற சுவாமி! நோய்களாலும் எண்ணற்ற துன்பங்களாலும் நாங்கள் துன்புற்று வருந்துகிறோமே! இதற்குக் காரணம் என்ன? இதை ஒழிக்க வேண்டும், என்று வேண்டினார்கள். அதற்குப் பிரமதேவர், முனிவர்களே யாரானாலும் தன் வீட்டுக்கு வந்த அதிதியை பூஜிக்க வேண்டும் என்பது தர்மம், இதையுணர்ந்த நீங்கள் வேதங்களும் தேடியறியாத சிவபெருமானே பிக்ஷõடனராகவும் திருமாலே அவரது மனைவியாகவும் பிரத்யட்சமாகி உங்கள் இருப்பிடங்களுக்குவந்த போது நீங்கள் அவர்களை அவமதித்தீர்கள். அதனாலேயே இத்தகைய துன்பங்களை அடைந்தீர்கள் பரமேஸ்வரனை அப்பெருமானின் மனமகிழ நாள் தோறும் சிவ லிங்க அர்ச்சனை செய்யுங்கள்! என்றார் தவ முனிவர்களும் தாருகா வனத்தையடைந்து பிருமதேவர் சொல்லியபடி ருத்திராட்ச கண்டிகை அணிந்து விபூதி உத்தானனஞ் செய்து ஸ்ரீபஞ்சாக்ஷரம் ஜெபித்து சிவபக்தியை உடையவராய் மனைவியரோடு இரவும் பகலும் இடைவிடாது நல்லமலர்களால் அர்ச்சனைசெய்து வந்தார்கள். அவ்வாறு இருக்கும்போது சிவபெருமான் முன்பு போலவே பிக்ஷõடனராக மோகினியுடன் தாருகாவனத்தை அடைந்து சிறிதுநேரம் குதித்து விளையாடிக்கொண்டும் சிறிது நேரம் வேத கீதம்பாடிக் கொண்டும் பிøக்ஷ ஏற்பார்போல உலாவியும் யோகஞ் செய்தும் வீணே சிரித்தும் மோகினியோடு சேர்ந்து விளையாடிக்கொண்டும் இருந்தார்.

அவர்கள் அவ்வாறு விளையாடுவதைக் கண்டதும் தவ முனிவர்கள் தங்கள் பத்தினிகளோடு அவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று அவர்களது திருவடிகளை மலர்களால் அர்ச்சனை செய்து பணிந்தார்கள். சிவபெருமான் அவர்கள் மீது தயையும் இரக்கமும் கொண்டு பல்லாயிரங்கோடி உதயசூரியனைப் போன்ற தமது மெய்வடிவைக்காட்டினார் முனிவர்கள் வேத வாக்கியங்களால் துதித்து உடல் சிலிர்க்க ஆனந்தக் கண்ணீர் சொரிய வணங்கி வழிபாடியற்றினார்கள். அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து மகரிஷிகளே! நீங்கள் கடவுளே இல்லை என்று கருதியதால் இவ்வாறு நாம் உம்மைப் பரீட்சித்தோம் என்று அவர்களுக்கு ஞான உபதேசம் செய்து இச்சிவலிங்கத்தை எப்பொழுதும் பூஜை செய்யுங்கள் என்று மோகினியுடன் அந்தர்த்தானமாய் ஆங்கோர் சிவலிங்க மூர்த்தமாய் எழுந்தருளியிருக்கின்றார். அந்த இலிங்கமே நீங்கள் கேட்ட தாருகாவன நாகேஸ்வரலிங்கம் அது முதல் முனிவர்கள் அந்த லிங்க மூர்த்தியைக் காலந் தவறாமல் பூஜை செய்து தங்கள் இஷ்ட காமியங்களை அடைந்தார்கள்.

41. அந்தகாசுரன் போராட்டமும் அந்தகேஸ்வர மகிமையும்

நைமிசாரண்ய முனிவர்கள் சூத புராணிகரை வணங்கி சிவஞான சீலரே! அந்தகேஸ்வர லிங்க மகிமையைத் தாங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள், சூதமுனிவர் கூறலானார். இரண்யாட்சனின் மகனான அந்தகாசுரன் என்பவன் உலகம் புகழ் பெற்றவனாகத் திகழ்ந்து வந்தான். அவன் நான்முகப் பிரமனைக் குறித்துக் கடுந்தவஞ் செய்து பிரமாண்டம் முழுவதும் தன் ஆயுட்காலம் வரையில் ஆட்சி செய்யும் வரத்தைப் பெற்று மூவுலகங்களையும் வென்று ஒருவனுமே தனக்கு நிகர் இல்லையென்று செருக்குற்று மந்திரமலையில் மமதையோடு வாழ்ந்து வந்தான். அப்போது தேவர்களுக்கும் அந்தக்காசுரனுக்கும் இடையே பெரும் போராட்டம் நிகழ்ந்தது. அந்த யுத்தத்தில் அந்தகாசுரன் ஏராளமான அசுரசேனைகளோடு, தேவர்களை எதிர்த்துப் பயங்கரமாக போரிட்டான். ஆயினும் தேவர்கள் சிறப்பாகப் போர் புரிந்ததால் அசுரசேனைகள் தேவர்களுடன் போர் புரிய முடியாமல் புறமுதுகிட்டு ஓடின. அதைக் கண்டதும் அந்தகாசுரன் இனி நாம் இந்த மந்திரமலையில் வாழ்வது நமக்கு நல்லதல்ல என்று எண்ணிக் கடற்கரையில் நிருதி மூலையில் மூன்று யோசனை விஸ்தீரணமுடைய ஒரு பிலத்துவாரம் உருவாக்கி அதில் மறைந்து வாழ்ந்து வந்தான். அவன் நினைத்தபோதெல்லாம் அந்தப்பிலத்திலிருந்து வெளியே வந்து தேவர்களைத் துன்புறுத்துவான்! அவர்கள் அவனை எதிர்க்க வந்தால் அந்தப் பிலத்திற்குள் சென்று மறைந்து கொள்வான். அவன் வசித்த அந்தப் பிலமானது இரண்டாவது சுவர்க்கத்தைப் போல் அதி விசித்திரமாக அமைக்கப்பட்டு விளங்கியது. அந்தகன் அவ்வாறு அடிக்கடி அமரருக்குத் துன்பம் செய்துவிட்டு பிலத்துக்குள் செல்வதும் வெளியே வந்து மீண்டும் மீண்டும் தேவர்களைத் துன்புறுத்துவதாகவும் இருந்ததால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று வணங்கி அவன் செய்துவரும் கொடுமைகளைப்பற்றி முறையிட்டார்கள்.

சிவபெருமான், தேவர்களை நோக்கி வானவரே! நீங்கள் உங்கள் பரிவாரங்களுடன் வந்தால் நானும் உங்களுடன் வருகிறேன் என்றார். உடனே தேவர்கள் தம் தேவப்படைகளோடு வந்தார்கள். சிவபெருமான் அவர்களுடன் சென்றார். தேவர்கள் அந்தகாசுர பிலத்தை அடைந்து அவனை போருக்கு அறை கூவி அழைத்தார்கள். அந்தகன் மிகவும் கோபத்தோடு அந்தப் பிலத்திலிருந்து வெளியே வந்து சண்டையிட்டான். அப்போது சிவபெருமான் அவன் வசித்து வந்த பலபுரத்தினுள்ளே சென்று எழுந்தருளியிருந்தார். அந்தகாசுரன் அமரர்களை அலைக்கழித்து துரத்தி மீண்டும் தன் பிலத்தினுள்ளே செல்லும் பொழுது சிவபெருமான் எதிரே வந்து தம் கைச்சூலத்தால் அவனை குத்தினார். அதனால் அந்தகன் வருந்தாமல் சிவபெருமானைப் பலவிதமாகத் துதித்தான். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அந்தகா உனக்கு வேண்டும் வரத்தை கேள், நான் தருகிறேன் என்றார். அதற்கு அவன் சுவாமி! என் மீது தயை வைத்து தங்களிடம் எனக்கு பக்தியுண்டாகும்படி வரந்தரவேண்டும். இந்த வரம் என் அடுத்த பிறவிகளிலும் மாறாது இருக்க வேண்டும் என்று கேட்டான். கணத்தலைமை கொடுத்து அங்கிருந்த அசுரர்களை அழித்து உலகங்களுக்கு நன்மை செய்தார். தேவர்கள் மகிழ்ந்து தங்கள் உலகத்தை அடைந்தார்கள். அந்த இடத்தில் சிவபெருமான் அந்தகேஸ்வரர் என்ற பெயருடன் அனைவருக்கும் முக்தியருள எழுந்தருளியிருக்கிறார். நாள்தோறும் அந்தப் பெருமானை தரிசித்து வந்தால் ஒரு துக்கமுமில்லாமல் சகல சுகமும் உண்டாகும் அது முதலான ஜோதிலிங்கங்களை ஆதிசைவர்கள், ஆகமரீதியாக ஆறுமாதம் பூஜை செய்வித்துச் சேவித்தவர்கள் தமது இஷ்ட சித்தியை அடைவார்கள்.

42. ஆதிசைவர்கள் பெருமை

சூத புராணிகரே, அந்தகேஸ்வர லிங்கம் முதலிய ஜோதி லிங்கங்களை ஆதிசைவர்கள் ஆகமரீதியாக பூஜை செய்விக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்களே. அந்த ஆதிசைவர் என்பவர் யார்? அவர்களுக்கு அத்தகைய சிறப்பு எப்படி வந்தது? அவர்களது சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நைமிசாரண்யவாசிகள் கேட்டார்கள் அதற்கு சூதமுனிவர் கூறலானார்.

மாதவர்களே! சைவர்கள்-அநாதி சைவர், ஆதிசைவர் மஹாசைவர் அநுசைவர், அவாந்தர சைவர், பிரவரசைவர் அந்ய சைவர், என்ற ( காமிகாகமம்: ஸ்ருஷ்ட்ய நந்தரகாலேயே தீக்ஷிதா கவுஸிகாதயா ஸிவேந தத்குலோத்தாஸ்யு ஸைவாஸ் ஸாந்தா நிகாத்விஜா)ஏழுவகையினராவர். அவர்களில் ஆதி சைவர் சிவபெருமானது (ஸ்வாயம்பு வசனம் ஊர்த்துவ க்த்ரோத்பவ விப்ரா ஆதிஸைவ ப்ரகீர்திதா; விப்தாஸ்து பக்தாயே தேஷாம் பூஜா கார்யாந்யதாநஹி என்றபடி சிவபெருமானுடைய ஊர்த்துவ முகத்தியிலிருந்து தோன்றியவர்கள் அவர்களுக்கு பக்தர்களாக இருக்கும் விப்பிரர் பூஜிக்கப்படுவர் அல்லாதவர் அபூஜ்யராவர்) ஊர்த்துவ முகத்திலிருந்து தோன்றியவர்கள் அவர்கள் (வீராகமம்: சைவர் எழுவருள் முதலாவது அநாதிசைவர்-சிவபெருமானும், இரண்டவாது ஆதி சைவர் சிவத்விஜரும், மூன்றாவது மஹாசைவர் சிவதீட்சை பெற்ற வைதீகப் பிராமணரும், நான்காவது அநுசைவர் க்ஷத்திரிய வைசியரும், ஐந்தாவது அவாந்தர சைவர் சூத்திரரும், ஆறாவது பிரவர சைவர் சுவர்ணாம் பஷ்ட மத்யஸ்த குலாலர்களும், ஏழாவது அந்ய சைவர் அன்னிய ஜாதியாருமாவர்.

சந்தான ஸம்ஹிதை

ஆதௌ ஸதாசிவே சைவ தீக்ஷிதாஸ்த் வாதி சைவகா
ஆதி ஸை வாஸ்துதே ஜ்ஞேயா ஸர்வாநுக்ரஹகா ஸ்ம்ருதா

என்றபடியே சதாசிவ மூர்த்தியால் தீட்சை செய்யப் பெற்றவர்கள்.

காமியாகமம்

ஆதி சைவ குலே ஜாதா
ஸ்ரேஷ்டாஸ்யு ஸ்தாபநாதிஷு
தீக்ஷõயாம் ஸர்வ மந்த்யாநாம் பிரதிஷ்டாய மதோத்ஸவே
ஸ்தப நேப்ரோக்ஷணே சைவ ப்ராயஸ்சித்தாபிஷேகநே
வ்யாக்யா நாதௌச ஸஸ்தாஸ்யு ஸ்வார்தேவாத

என்றபடி ஆதி சைவ குலத்தில் உதித்த பிராமணர்கள் ஸ்தாபநாதி காரியங்களில் சிரேஷ்டிராகின்றனர். எல்லா வருணத் தாருக்கும் சிவதீட்சையால் அநுக்ரஹிப்பதிலும் பிரதிஷ்டை, உத்ஸவம், ஸ்தபநம், ஸம்புரோக்ஷணம் பிராயசித்தம் அபிஷேகம் முதலியவற்றை நடத்தவதிலும் சிவதருமங்களை வியாக்கியான ரூபமாக வெளிப்படுத்துவதிலும் ஸ்வார்த்த பரார்த்தங்களிலும் அதிகாரிகளாவார்.

அந்தச் சதாசிவமூர்த்தியாலேயே தீட்சை செய்யப் பெற்றவர்கள் அவர்கள் சிவபெருமானை ஸ்தாபனாதி காரியங்களால் அப்பெருமானது முகத்திலிருந்து தோன்றிய காமாகாதி சிவாகமங்களில் சொல்லிய முறைப்படி சிவபெருமானை அர்ச்சனை செய்வதற்குரியவராவர்; மேலும் சிவத்துவிஜர் என்ற பெயரையும் பெற்று; சிவபெருமானாலேயே புத்திரராகமதிக்கப் பெற்று சிவபூஜா உச்சிஷ்ட பொருள்களை அனுபவிப்பதற்கும் தம் அறியாமையால் செய்த குற்றங்கள் மன்னிக்க படுவதற்கும் சுதந்திரமுற்றவர்கள் இவர்கள் சிவபெருமானுக்குப் புத்திரர் உரிமை பெற்றவர்கள் என்பதற்கு ஒரு சரித்திரத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள்!

பூர்வத்தில் ததீசி என்ற ஆதி சைவர் ஒருவர் சிவபக்தியும் சிவார்ச்சனையும் நியமப்படி நீங்காத சிந்தையுடையவராய்ச் சிவாகமங்களை ஐயந்திரியறக் கற்று உணர்ந்து நித்திய நைமித்திகப் பிராயச்சித்தங்களைச் செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு புத்திரன் உண்டு அந்தப் புத்திரன் தன் மரபிற்கு ஏற்பத்தன் தந்தையால் தீட்சை செய்யப் பெற்று சிவாகமங்களை உணர்ந்து காலந்தவறாமல் சிவபூஜை செய்து வந்தான். தக்க திருமணப் பருவத்தில் திருமணம் செய்து கொண்டு மனைவியின் துர்செயல்களால் மதிமயங்கி நான்கு புதல்வர்களுக்குத் தந்தையும் ஆனான். மனைவியிடம் அடிமைப்பட்ட மனமுடையவனாக இருந்தும் சிறிதும் குறையாத ஆர்வத்தோடு சிவபக்தியோடும் தன் தந்தையைப் போலச் சிவார்ச்சனை செய்து பிறருக்கும் சிவதீட்சை செய்து கொண்டு இருந்தான். ஒருநாள் ததீசி அயலூருக்குச் செல்ல வேண்டி வந்ததால், அவர் தன் மகனைப் பார்த்து புத்திரா! நான் ஊருக்குப்போக வேண்டியிருப்பதால் அர்ச்சனை செய்து வா என்று கூறிச் சென்றார். அங்கு சென்ற இடத்தில் உறவினரின் விருப்பத்தின்படிச் சிறிது காலம் அங்கேயே தங்கியிருந்தார். புத்திரனும் காலம் தவறாமல் சிவபூஜை செய்து வந்தான். அச்சமயத்தில் சிவராத்திரி தினம் வந்தது; ஊரிலுள்ளோர் யாவரும் விரதம் இருந்து சிவபூஜை செய்யவேண்டிய நாளாகையாலே புத்திரனும் உபவாசமிருந்து அன்றிரவில் காலம் தோறும் பூஜித்து வந்தான். மூன்றாங்கால பூஜை முடித்த பிறகு தேவகதியாலும் தன் மனைவியின் துஷ்கிருத்தியத்தாலும் மனந்தவறிய நிலையில் நான்காவது கால பூஜையை நடத்த நேரிட்டது. அதனால் சிவபெருமான் சினங்கொண்டு அவனை உன்மத்தனாகும்படிச் செய்தார். அன்று முதல் அந்த உன்மத்தனின் புதல்வர் நால்வரில் மூத்த புதல்வனே சிவலிங்கார்ச்சனையைச் செய்து வர வேண்டியதாயிற்று.

சிலநாட்கள் சென்ற பிறகு ததீசி முனிவர் தம் ஊருக்குத் திரும்பிவந்தார். தம் புத்திரன் உன்மத்தனாக இருப்பதைக் கண்டு துயரமடைந்தார். ஆயினும் நியமனப்படி சிவபூஜை செய்ய சிவபெருமான் பிரத்தியட்சமாகித் ததீசியை நோக்கி இத்தகைய புத்திரனைக் கொண்டு என்னைப் பூஜிக்கச் செய்தாயல்லவா? என்று கண்டிக்க ததீசி மிகவும் பயந்து அந்தோ!  அவன் அப்படியுஞ் செய்தானா அவனால் என் வம்சமே பெருமையிழந்ததே இனி என்ன செய்வேன் இதற்குப் பிராயச்சித்தமும் இல்லையே! என்று தனக்குத்தானே நொந்து கொண்டார். இவ்வாறு இருக்கும்போது அவரது புத்திரனை பதிதனாகும்படிச் செய்த துஷ்டை இறந்து விட்டாள். அவள் சிவபூஜைக்கு விக்கினம் செய்தவளாக இருந்துங்கூட மருமகள் மாண்டதற்காக ததீசி முனிவர் வருந்தினார். தன் புத்திரன் செய்த பாவத்திற்காகப் பரிகாரம் தேட எண்ணி பிராயச்சித்த விதிப்படி சிவபூஜையையும் செய்து வந்தார். அதனால் பார்வதி தேவி ஆதிசைவர்கள் என் புத்திரர்களாகையால் நீ அஞ்ச வேண்டாம் என்று அவரைத்தேற்றி சிவபெருமானிடம் ததீசி புத்திரன் செய்த பாபத்தை மன்னிக்கவேண்டி நெய்யால் ஸ்நானம் செய்வித்து சிவபெருமானால் யக்ஞோப வீதம் தரிப்பிக்கச் செய்து ÷ஷாட சாட்சர சொரூபமாகிய சிவகாயத்திரியையும் ஸ்ரீபஞ்சாட்சரியையும் அபதேசம் செய்வித்து பதினாறுமுறை ஜெபிக்க செய்தார். அதனால் ததீசி புத்திரனை நோக்கி இனி இந்த மந்திரங்களைக் கொண்டே(ஜலாதி நமஸ்காரந்தம்) பாத்யம் முதல் நமஸ்காரம் வரையில் அடங்கிய பூஜையைச் செய்ய வேண்டும். என்று சொல்லி மேலும் சிலமந்திரங்களை உபதேசித்தார். தானியம், பழம், வஸ்திரம், நெய், எண்ணெய் முதலிய சிவபூஜை, செய்த மீதியை யெல்லாம் நீங்கள் என் முகத்தில் தோன்றியவர்களாகையால் எனக்கு நிவேதித்தவைகளை நீங்கள் அனுபவித்தற்கு உரியவரேயன்றிப் பிறர் அதைப் பெறுவதற்கும் பாத்திரராகார். நீங்களே எம்மையும் பார்வதியையும் பூஜிக்கலாமே தவிர பரார்த்த லிங்கங்களை ஆதிசைவர்களைக் கொண்டே பூஜிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இவ்வாறே செய்து நாம் விரும்பிய இகபரபோகங்களை அனுபவிப்பார்களாக என்று ஆசாரிய அபிஷேகம் செய்து சிவபூஜாவுரிமையை வழங்கி நீங்கள் வேதமந்திரங்களைவிடச் சிறந்த ஆகமமுறையாகவே பூஜை செய்யவேண்டும். நீங்கள் எவன் பட்சமாக இருக்கிறீர்களோ அவனுக்குச் சுகம் உண்டாகக் கடவது உங்களைப் பூஜித்தவர்கள் எம்மையும் பூஜித்த பயனைப் பெறுவார்கள். சைவ ஆசாரங்களையும் சிவபக்தியையும் விருத்தி செய்ய வேண்டிய ஆதிசைவர்களாகிய நீங்கள் உலகத்தாரால் எம்மைப் போலவே மதிக்கப்பெற்று குடும்பவிருத்தியடைந்து வாழ்வீர்களாக! என்று வரமளித்து ஆசீர்வதித்தார். ஆகையால் ஆதிசைவர்கள் ஆசாரமுடையவராயினும் ஒருவேளை தெய்வகதியால் ஆசாரம் தவறியவராயினும் அவர்களை உலகத்தோர் கைவிடலாகாது.

சிவபெருமானையும் பார்வதி தேவியையும் கையால் ஸ்பரித்து பூஜிக்கும் பாக்கியத்தையுடைய ஓர் ஆதிசைவனுக்கு அன்னம் அளித்தவன் அனேகம் கோதான பயனைப் பெறுவான் இதற்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன்.

அந்தகேஸ்வர நகரத்தில் நீதி தவறாத அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் பெயர் பத்திரன். அவன் நாள்தோறும் வேதியருக்கு அன்னமளிக்க வேண்டும் என்று நியமனஞ் செய்துகொண்டு நாள் ஒன்றுக்கு அநேகம் ஆயிரம் அந்தணருக்கு அறுசுவையுடன் கூடிய உணவை விருப்பத்துடன் தானமளித்துக் கொண்டிருந்தான். அவன் சிவபக்தனாகையால் சிவபெருமான் அவன் கையில் ஒரு கொடியைக் கொடுத்து, அரசனே! இதை உன் அன்ன சத்திரத்தில் விடியற்காலையில் கட்டி வைத்து, உன் நியமனப்படி அன்னம் அளித்து வருவாயாக. அவ்வாறு அளித்து வரும்போது, எவனேனும் ஒரு சற்புருஷன் அந்த அன்னத்தை உண்பானானால், அன்று நீ நாட்டிய அன்னத்துவஜம் விழுந்துவிடும். அவ்வாறு விழாவிட்டால் அன்றைய தினம் உன் அன்னத்தை சற்புருஷர் உண்ணவில்லை என்று உணர்ந்து கொள் என்று கூறி மறைந்தான். அரசன் அரனாரின் கட்டளைப்படி அந்தக் கொடியைத் தன் மாளிகையில் நாட்டி வழக்கப்படி பிராமண போஜனம் செய்வித்து வந்தான், அப்போது ஓர் ஆதி சைவ பிராமணனுக்கு அன்னமளிக்க உடனே, அந்தத் துவஜம்(கொடி) விழுந்தது. மன்னன் பத்திரன் அந்தத் துவஜத்தின் வரலாற்றை அங்கிருந்த அந்தணர்களுக்குக் கூறி இது என்ன? என்று கேட்டான். அதற்கு அவர்கள் நாங்கள் யாவரும் உண்ணும் முன்பே பதிதனாகிய இந்த அந்தணனுக்கு அன்னம் அளித்ததால் இந்தத் துவஜம் விழுந்ததேயன்றி சிவபெருமான் கூறியபடி, சற்புருஷன் உண்டதால் விழுந்ததல்ல என்றார்கள். அதற்கு அரசன் அந்தணர்களே நீங்கள் சொல்வது உண்மையானால், அதனையும் சோதித்து விடுவோமே! என்று மீண்டும் அந்தத் துவஜத்தை நாட்டி வந்த வேதியருக்கெல்லாம் சில நாட்கள் வரை அன்னம் அளித்து வந்தான் அப்படியும் அது விழாததால், அரசனும் அந்தணர்களும் முன்பு துவஜம் விழுந்தது. ஆதி சைவ வேதியர் உண்டதனாலேயே என்று தேர்ந்தார்கள். முனிவர்களே! ஆதி சைவர்கள் சிவகடாட்சம் பெற்றவர்கள். ஆகையால் அவர்கள் தங்களுக்காகவும் பிறருக்காகவும் சிவபூஜை செய்வதற்கு உரியவர்கள் புண்ணிய சரிதங்களைக் கேட்பதில் அக்கறையுடைய முனிவர்களே! நீங்கள் கேட்ட ஆதி சைவர்களின் மகிமையைச் சொன்னேன் அவர்களைக் கொண்டு ஜோதி லிங்கங்களை அருச்சித்தவர்கள் பெறுகிற பேறுகளை என்னால் சொல்ல இயலாது.

43. சந்திரன் காதலித்த கதையும் சோமேஸ்வர மல்லிகார்ச்சுன மகிமையும்

வியாசரின் சீடரே! ஜோதிர் லிங்கங்களின் உற்பத்தியையும் மனத்துயரத்தையும் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நைமிசாரண்ய முனிவர்கள் கேட்டார்கள். சூத புராணிகர் தொடர்ந்து சொல்லலானார். ஆதிகாலத்தில் தட்சனுக்கு அஸ்வினி முதலிய இருபத்தேழு பெண்கள் பிறந்தார்கள். தட்சன் அப்பெண்களையெல்லாம் சந்திரனுக்குத் திருமணஞ் செய்து கொடுத்தான். அவர்கள் சந்திரனுடன் கூடிப் பொன்னும் மணியும் போலப் பெருமையுடன் வாழ்ந்து வந்தார்கள். சந்திரன், சிறிது காலத்திற்குப் பிறகு தன் மனைவிகளில் உரோகிணி என்பவளை மட்டும் மிகவும் அதிகமாகக் காதலித்து வந்தான். மற்றவர்களை மனைவியராகக் கருதாமல் அலட்சியப் படுத்தினான். அதனால் இருபத்தாறு பத்தினியர்களும் தங்கள் தந்தையான தட்சனிடம் சென்று தங்களைக் காக்க வேண்டும் என்று கெஞ்சினார்கள். தட்சன் மிகவும் வருத்தமடைந்து தன் மருமகனான சந்திரனிடம் சென்று நீ நிற்குலத்தில் பிறந்து கலாநிதி என்ற பெயரைப் பெற்றிருந்தும் உன்னை மணந்த மனைவியரையெல்லாம் ஒரே மாதிரியாக நடத்தாமலிருப்பது சரியல்ல, மனைவியர் அனைவருக்கும் ஒரே மாதிரி சுகங்கொடுக்க வேண்டும் என்று விநயமாகச் சொல்லி விட்டுத் தன் இருப்பிடம் சேர்ந்தான்.

சந்திரன், தட்சனின் சொற்களைச் சிறிதேனும் ஏற்காமலும் இசையாமலும் தன் விருப்பத்தின்படியே உரோகிணியிடம் மட்டுமே அதிகக் காதலுடன் நடந்து வந்தான். சந்திரனுக்குத் தீமை விளைய வேண்டிய காலம் நெருங்கிய காரணத்தால் அவன் தக்ஷண் சொன்ன புத்தியைக் கேளாமல் உரோகிணி ஒருத்தியையே விரும்பினான். சிறிது காலம் கழிந்ததும், தட்சன் என் மருமகன் என் புத்திரிகள் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளுகிறான்? அதைப் பார்ப்போம் என்று எண்ணமிட்டான். அவனது புதல்விகள் சந்திரன் முன்போலவே இருந்து வருவதாகத் தட்சனிடம் புகார் செய்தார்கள். தட்சன் சந்திரனைச் சந்தித்து சந்திரா! நான் சொன்ன நற்புத்தியை ஏற்று நடக்காததால். உன் கலைகள் நாளா வண்ணமாகக் குன்றிக் குறைந்து க்ஷயம் அடைக! என்று சபித்தான். உடனே சந்திரன் தன் ஒளி மங்கி கலைகள் குறைவதைக் கண்டு எங்கே போவேன் யாரிடம் என்குறையைச் சொல்வேன்? என்று துயரத்தால் புலம்பினான். சந்திரனின் நிலையைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் துக்கப்பட்டார்கள். சந்திரன் அவர்களை நோக்கி நீங்கள் எவ்வாறாவது எனக்கு நேர்ந்த சாபத்தை நீக்க வேண்டும் என்று மிகவும் வேண்டிக் கொண்டான். அவனது வேண்டுகோளுக்கு இரங்கிய தேவர் முனிவர் முதலானவர்கள் பிரமதேவனிடம் சென்று, சந்திரன் தன் தவறான நடத்தையால் சாபம் பெற்ற விஷயத்தைச் சொன்னார்கள். பிரமதேவன் ஐயோ! சந்திரன் தன் மனைவியரில் ஒருத்தியை மட்டுமே அதிகமாக மோகித்து மற்றவர்களைப் புறக்கணிப்பது தருமம் அல்லவே! அவன் இத்தகைய துன்மார்க்கனே! இது அவன் இயற்கையே! ஆயினும் தன் மருமகனாயிற்றே என்று உணர்ந்ததும் தட்சன் அவனை இப்படியும் சபிக்கலாகுமா? இதுவும் அன்றி அந்தச் சந்திரன் முற்காலத்தில் செய்த ஒரு கெட்ட செயலும் உண்டு அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

அவன் பிரகஸ்பதி முனிவர் வீட்டில் குருகுலவாசஞ் செய்து வந்தபோது அவர் மனைவி தாரையை மோகித்து அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டுபோய், அவரோடு போர்புரிய தைத்தியர்களையும் உதவியாகக் கொண்டு சென்றான். அப்போது தேவர்கள் அவள் தந்தை அத்திரி முனிவருடன் சென்று சந்திரா! தாரை உன் குருவின் மனைவி ஆகையால் நீ அவளைப் பிரகஸ்பதி முனிவரிடமே கொண்டுபோய் விட்டுவிடு! என்றார்கள் அவனும் அவளைப் பிரகஸ்பதி முனிவரின் ஆசிரமத்தில் கொண்டுபோய் சேர்த்தான். அப்போது  பிரகஸ்பதி முனிவர் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை அறிந்து, இவள் எனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டார். அப்போது நாங்கள் தான் வாதாடி அப்படியல்ல நீங்கள் அவளை ஏற்றுக் கொள்ளலாம், இதில் குற்றமில்லை என்றோம். அதற்கு தேவ குரு பிரகஸ்பதி அப்படியானால் இவளது கர்ப்பம் நீங்கிய பிறகு இவளை ஏற்றுக் கொள்வேன்? என்று சொல்லிவிட்டு அவர் தன் மனைவி தாரையை நோக்கி தாரா! நீ யாருக்குக் கர்ப்பம் தரித்தாய்? என்று கேட்டார். அதற்கு தாரை தலை குனிந்தபடி சந்திரனுக்கே கருவுற்றேன் என்றாள். எனவே அவள் பிரசவித்த பிறகு அந்தக் குழந்தையைச் சந்திரனிடம் ஒப்படைத்து விட்டு, பற்பலவிதமாக வேண்டிக் கொண்டு பிரகஸ்பதி முனிவரிடத்தில் தாரையைச் சேர்த்தோம். அத்தகையச் சந்திரன் இப்பொழுதும் அத்தகைய கொடுந் தொழிலைத்தான் செய்தனனோ அவனுக்காக வேண்டியது நடந்தே தீரவேண்டும். ஆயினும் புண்ணிய ÷க்ஷத்திரமான பிரபாஸத்திற்குப் போய் மிருத்யுஞ்ஜய மந்திரத்தால் சிவபெருமானை ஆராதித்தால் தேஜோரூபியான சிவபெருமான், அவனது தேக நலிவை நீக்குவார் என்றார். இவ்வாறு கூறிய பிரம்ம தேவரின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், தட்சனைக்கண்டு வருந்தி, சந்திரனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு பிரபாஸ ÷க்ஷத்திரத்துக்குப்போய் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் மற்ற தீர்த்தங்களையெல்லாம் ஆவாஹனம் செய்து பார்த்திவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, சிவபூஜை முறைகளைச் சந்திரனுக்குச் சொல்லிவிட்டுத் தங்கள் இருக்கைகளுக்குச் சென்றார்கள். சந்திரன் ஆறுமாதகாலம் இடைவிடாமல் மிருத்யுஞ்சய மந்திரத்தால் சிவபூஜை செய்து அந்த மந்திரத்தைப் பத்துக்கோடி முறைகள் உருச் செபித்தான். அதனால் சிவபெருமான் அவன் முன்பு தோன்றி சந்திரா! உன் தவம் கண்டு மெச்சினேன். உனக்கு வேண்டும் வரத்தைக் கேள்! என்றார் சந்திரன் சாம்பவமூர்த்தியைப் பார்த்து தேவதேவா! தாங்களே என் முன்பு தோன்றி விட்டீர்களாகையால் எனக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என் உடல் நலிவதை விலக்கி என் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினான்.

சிவபெருமான் அவனை நோக்கி, சந்திரா! நீ பெற்ற பிராமண சாபத்திலிருந்து தப்புவதற்கு வழியில்லை ஆயினும் அதற்கு ஓர் உபாயம் சொல்கிறேன். ஒரு பக்ஷத்தில் (பாதிமாதத்தில்) உன் கலைகள் முறையே குறையவும் ஒரு பட்சத்தில் (மற்றொரு பாதி மாதத்தில்) உன் கலைகள் முறையே வளரவும் நான் அருள் புரிகிறேன் என்றார். இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற தேவர்கள் மிகவும் மகிழ்ந்து அங்கு வந்து சந்திரனைச் சந்தித்துப் பலவிதமாகவும் ஆசிர்வதித்து சிவபெருமானை நோக்கி, தேவரீர்! இவ்விடத்தில் பார்வதி பிரமதகண சமேதராய் சந்திரன் பெயரால் எழுந்தருள வேண்டும் என்று வேண்டி நின்றார்கள். சிவபெருமானும் அவ்வாறே சோமேஸ்வரர் என்ற பெயரோடு சந்திரன் விருத்தியடையக் காரணமாகப் பிரசித்தமாக இருக்கிறார் தேவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். சந்திரன் மிகவும் தன்யனானான் என்ற தாங்கள் அங்கே தோண்டிய தீர்த்தத்துக்குச் சந்திரகுண்டம் என்று பெயரிட்டார்கள். பிறகு சந்திரன் மற்ற தேவர்களுடன் தன் நகரத்தையடைந்து முறைப்படித் தன் காரியங்களைச் செய்து கொண்டிருந்தான். அந்தச் சந்திரகுண்டம் ஸ்நானம் செய்வோரின் சகல பாபங்களையும் ரோகங்களையும் போக்கக்கூடியதாகவும் அசாத்தியமான காரியங்களையும் கைகூடச் செய்வதாகவும் அமைந்திருக்கிறது. பிரபாஸ ÷க்ஷத்திரத்தைப் பிரதட்சிணம் செய்தால் உலகை வலம் வந்த பயன் கிடைக்கும். பிராயச்சித்தங்களால் ஒழியாத குஷ்டம் முதலிய ரோகங்கள் எல்லாம் அங்கு ஸ்நானம் செய்து ஆறுமாதம் சிவதரிசனம் செய்தால் ஒழிந்துவிடும். விரும்பிய காரியங்கள் யாவும் விரும்பிய வண்ணம் கைகூடும். இது சோமேஸ்வர ஜோதிலிங்கப் பிரபவமானதாகும். இந்தச் சரிதத்தைப் படிப்பவர்கள் சகல பாபங்களிலிருந்தும் நீங்குவார் இனி முன்பு சொன்ன மல்லிகார்ச்சுனலிங்க மகான் மியத்தைச் சொல்கிறேன். முன்பு, சுப்பிரமணியக்கடவுள் உலகை வலம் வருவதற்கு முன்பே கணபதி திருமணஞ் செய்து கொண்டிருப்பதைக்கண்டு ஒன்றுஞ் சொல்லாமல் கிரவுஞ்சகிரியை அடைந்து, சுப்பிரமணியர் பிரம்மச்சரியாக எழுந்தருளியிருந்தார். பார்வதி மனந்தாளாமல் வருந்தினாள். சிவபெருமான் தேவர்கள் சிலரை அனுப்பி முருகப்பெருமானை அழைத்துவரும்படி அனுப்ப அவர்கள் அழைத்தும் முருகன் வராமல் மறுத்து விட்டதை அவர்கள் சிவபெருமானிடம் அறிவித்தனர். உடனே சிவபெருமானும் பார்வதியும் முருகன் இருக்குமடத்திலேயே நாமும் வசிப்போம் என்று அங்கு சென்று சமீபிக்க முருகக்கடவுளும் அவர்களுக்கு மூன்று யோசனை தூரத்திலேயே நின்றார். அங்கு சிவபெருமானுக்கு மல்லிகார்ச்சுனேசர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்தத் தலமானது தரிசித்தவர்களுடைய பாபங்களையெல்லாம் ஒழித்து, பிறவித் துயரையும் ஒழித்து, தனதான்யாதி ஸகல சம்பத்துக்களையும் கொடுக்கத்தக்கது!

44. வேதியரை வருத்தியவன் கதையும் விந்தியன் கதையும் மஹாகாள ஓங்கார லிங்கங்களின் மகிமையும்

சுவாமி! வேதவியாஸ மகரிஷியால் யாவற்றையும் உணர்ந்த தாங்கள் சொல்லிய விஷயங்களால் நாங்கள் திருப்தியடையவில்லை. ஜோதிலிங்கங்களின் சரிதங்களை நாங்கள் மேலும் கேட்க விரும்புகிறோம்! என்றார்கள் நைமிசாரண்ய முனிவர்கள்.
சூதமுனிவர் கூறலானார்,

உயிரினங்கள் யாவற்றுக்கும் முக்தியளிக்கத்தக்க ஷிப்பிராநதி தீரத்தில் அவந்திகாபுரி என்ற ஊர் ஒன்று உண்டு. அங்கு வேத அத்தியயனமும் வைதீக கர்மங்களும் சிவபூஜையும் செய்யும் வேதப்பிரியன் என்ற வேதியன் ஒருவன் நற்கரும் வசத்தால் உயர் பதவியை அடைந்தான். அவனுக்கு, வேதப்பரியன், வேதன், சுவிரதன், தர்மவாதி என்ற பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் காலந்தவறாமல் சிவபூஜை செய்வதிலும் தம்மை அடுத்தவருக்குத் தர்ம மார்க்கத்தைப் போதிப்பதிலும் தந்தையைப் போலவும் அவரைவிடச் சிறந்தும் வளர்பிறைச் சந்திரனைப் போல விளங்கினார்கள். இவர்கள் பழக்கி வந்தால் அந்த ஊர் முழுவதும் பிரம்மதேஜஸுடன் திகழ்ந்தது. அப்போது இரத்தினமாலா என்ற பர்வதத்தில் தூஷணன் என்ற தைத்திய அரசன் ஒருவன் இருந்தான். அவன் மகாபராக்கிரமசாலியாகத் திகழ்ந்தான். பிரமதேவனிடம் வரம் பெற்ற அவன் தர்ம துவேஷியாகி அதர்ம வெறிக்கொண்டு ஜகத்தையே அலட்சியப்படுத்தி வந்தான். உலகத்தில் வேத ஆகமாதிமார்க்கங்களில் நடப்பவரை, முயலைக் கொல்லும் சிங்கத்தைப்போல அழித்து புண்ணிய திருத்தலங்களில் புகுந்து அங்குள்ள நல்லவர்களையும் பெரியோர்களையும் துன்புறுத்தி வந்தான், அவன் ஒரு நாள் தன் சேனைகளுடன் அவந்தி நகரத்தை அடைந்து அங்கிருந்த வேதியர்களை நோக்கி, நீங்கள் ஏன் என் கட்டளைப்படி நடப்பதில்லை? தேவர்கள். அரசர்கள் முதலானோரை சுவாதீனபடுத்திய எனக்கு நீங்கள் எம்மாத்திரம்? வேதியர்களே! நீங்கள் பிழைக்க வேண்டுமானால் சிவபூஜை வேதமந்திர உச்சாடணம் முதலானவற்றைக் கைவிட்டுவிட்டு என்சொற்படியே நடக்கவேண்டும் என்று கூறித் தன் சேனைகளைக் கொண்டும் அமைச்சர்களைக் கொண்டும் அந்தநகரம் முழுவதும் தன் ஆக்ஞையை அறிவிக்கச் செய்தான். அங்கிருந்த வேதியர்கள் அவ்வரசனது கட்டளையை மதிக்காமல் திடபக்தியோடு சிவபூஜை செய்து சிவத்தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். இவ்வாறு இருக்கும் போது, அவ்வசுர மன்னனின் இருப்பிடமான இரத்தினமாலா மலைச்சாரலிலுள்ள வேதியர்கள் அவ்வசுர மந்திரிகளால் பீடிக்கப்பட்டுத் துன்புற்றார்கள். அவர்கள் அவந்தியை அடைந்து அங்குள்ள வேதியர்களிடம் தங்கள் நிலைமையைச் சொல்லி முறையிட்டார்கள். அதற்கு அவந்தி பிராமணர்கள் எங்களிடம் சத்துருவை ஜயிக்கும் வன்மையில்லை, போர் செய்ய ஆயுதங்களும் இல்லை. நாங்களும் உங்களைப் போன்ற சாமானிய சரீரம் உடையவர்கள்! எங்களைச் சிவபெருமான் தான் காத்தருள வேண்டும். வேறொருவர் காப்பதற்கில்லையென்று தைரியமாக பார்த்திப லிங்கார்ச்சனை செய்து கொண்டும் இரேசக பூரக கும்பங்களாலும் பிராணாயாமாதிகளாலும் அவரையே தியானித்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் இவ்வாறே செய்யுங்கள் என்று சொல்ல அவர்கள் யாவரும் சிவலிங்கார்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது, தூஷணன் மந்திரிகள் நால்வருடன் அவர்களிடம் வந்து, இவர்களைப் பிடியுங்கள், அடியுங்கள் கட்டி வையுங்கள் என்று பயமுறுத்தினான். அவர்கள் தியான நிஷ்டையில் இருந்ததால், அவன் கூறுவதைக் கேட்காமல் இருந்தார்கள்.

அப்போது சிவலிங்கார்ச்சனை செய்வதற்காக வேதியர்கள் பார்த்திவம் எடுத்த இடம் பெருங்குளமாக இருந்தது. அதிலிருந்து உக்கிர சொரூபமான மகாகாளேஸ்வரர் தோன்றி அந்தணருக்கு வந்த அவஸ்தையைக் கண்டு ஹுங்காரஞ் செய்யவே அசுரர்கள் சாம்பலானார்கள், ஓடிப்போனவர்கள் ஒழிய மற்றவர்கள் மாண்டார்கள். சூரிய உதயத்தால் இருள் ஒழிவது போல சிவ தரிசனத்தால் தீயோர் யாவரும் ஒழிந்தார்கள். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தேவதுந்துபிகள் முழங்கின. சிவபெருமான் தியானத்திலிருந்த அந்தணர்களைப் பார்த்து, பிராமணர்களே! நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் தவத்தைக் கைவிடாமல் இருங்கள் உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுங்கள் என்றார். வேதியர்கள் அவரை வணங்கி அடியேங்களுக்கு முக்தியருளி லோகரட்சணார்த்தமாக இங்கு எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். அதற்கிணங்கச் சிவபெருமான், பக்திப்ரியராகி, அந்தக் குளத்திலேயே பிரசன்னமூர்த்தமாக எழுந்தருளியிருந்து வேதியருக்கு முக்தியும் அளித்தார். அந்த குளம் நான்கு பக்கமும் ஒவ்வொரு குரோச அகலமுடையது அப்பெருமான் மகாகாளேஸ்வரர் எனப் புகழ் பெற்று விளங்கி வருகிறார். இவரைத் தரிசித்தால் கனவிலும் கூட துக்கம் வராது இஷ்டசித்திகள் கைகூடும். முனிவர்களே! நீங்கள் விரும்பியவாறு மகாகாளேஸ்வர ஜோதிலிங்க மகிமையைச் சொன்னேன் இனி ஓங்காரரேஸ்வர ஜோதிர்லிங்க மகிமையைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

ஒரு சமயத்தில் நாரதர்முனிவர் சகல உலகங்களிலும் சஞ்சாரஞ் செய்து கொண்டு கோகர்ண ÷க்ஷத்திரத்திற்கு வந்தார். அங்கு சிவதரிசனம் செய்து கொண்டு விந்தியகிரியை அடைந்தார், விந்த மன்னன் அவரை வரவேற்றுப் பூஜித்து உபசரித்தான், அவன் அரசவையில் நாரதர் வீற்றிருக்கும் போது விந்தன் நாரதரைப் பார்த்து மகரிஷியே! நான் எல்லா வகையான இன்பங்களையுமடைந்து இருக்கிறேன். எனக்கு ஒன்றும் குறைவில்லை! என்றான். அதனால் அவனை மானபங்கம் செய்ய நாரதர் விரும்பி உஸ் என்று நெட்டுயிர்ப்பு விட்டார். விந்தன் நாரதரை நோக்கி, முனிவரே! நீர் பெருமூச்சு விட்டதற்கு என்னகாரணம் என் பூஜையில் ஏதாவது குறைவு உண்டா? என்று கேட்டான். அதற்கு நாரதர் உன்னிடத்தில் எல்லாமே அமைந்திருக்கின்றன இருப்பினும் மேருமலை உன்னைவிடப் பெரியதாயும் தேவர்களால் மதிக்கப்பட்டு அவர்கள் வசிக்கத் தக்கதாகவும் இருக்கிறது. என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதனால் விந்த மன்னன் நான் பிழைத்திருப்பதால் யாது பயன்? சிவாராதனை செய்து மேருவை ஜயிப்பேன்! என்று நிச்சயித்துக் கொண்டு ஓங்கார ரூபமான யந்திரம் ஒன்றை இயற்றி பார்த்திபலிங்க பூஜையை ஆறுமாதங்கள் வரை இடைவிடமாலும் இடம் பெயராமலும் செய்தான். அதனால் யோகியருக்கும் புலப்படாத சிவபெருமான் திவ்ய மங்களகரமாய் அவன் முன்னால் தோன்றி, உன் விருப்பம் யாது? என்று கேட்டார். அதற்கு விந்த ராஜன் எல்லோரையும் விடஉயர்வாக வளர்வதற்கான சக்தியை எனக்குத் தந்தருள வேண்டும் என்று கேட்டான். பிறருக்குத் துன்பம் உண்டாகத் தக்க வரத்தைக் கொடுக்கக் கூடாதாயினும் அவன் செய்த அருந்தவத்துக்காக அவன் விரும்பிய வரத்தை சிவபெருமான் கொடுக்க முனைந்து அவ்வாறே விருத்தியடைக! ஆயினும் நீ இறுமாப்பு அடைவாயானால் அந்த பேருருவம் எமது அடியாரால் சிறிதாக அடங்கும்! என்று வரம் கொடுத்தார். அப்பொழுது தேவர்களும் முனிவர்களும் அங்கே வந்து மஹேஸ்வரரே! தாங்கள் அவனுக்கு வரங்கொடுத்த பிரசாத மூர்த்தமாக இங்கு எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பெருமானும் அவ்வாறே அமர்ந்தருளினார், ஓங்கார யந்திரத்தில் சுயம்புலிங்க மூர்த்தம் ஒன்றும் அவன் பூஜித்த பார்த்திபலிங்க மூர்த்தம் ஒன்றும், அங்கு விளங்கும் அவற்றிற்கு ஓங்காரரேசுரம் அமரேசுவரம் என்ற பெயர்கள் வழங்குகின்றன, அம்மூர்த்தங்களைத் தேவர் முதலானோர் பூஜித்து பற்பல வரங்களை அடைந்தனர். ஆகையால் அந்த ஓங்காரேஸ்வரரைப் பூஜிப்பவர்கள், மாத்ருகர்பத்தை அடையமாட்டார்கள். மனோபீஷ்டங்கள் யாவற்றையும் அடைவார்கள். இதுவே ஓங்காரேஸ்வர ஜோதிர்லிங்க மகாத்மியமாகும். இனி கேதாரேஸ்வர ஜோதிலிங்கப் பிரபாவததைச் சொல்லுகிறேன்.

45. பரதகண்டத்தின் பெருமையும் கேதாரேஸ்வர மகிமையும்

முனிவர்களே! பிரம்மதேவரின் புதல்வரான ஸ்வாயம்பு மனுவின் புத்திரன் பிரியவிரதன் அவனுக்கு ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். அந்தப் பிரியவிரதன் தான் ஜீவாநதரனாக இருக்கும் போதே, தன் புத்திரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று கருதி இரதத்தில் ஏறி மேருமலையை ஏழு முறைகள் வலம் வந்து ஏழு தீவுகளாகப் பிரித்தான். அத்தீவுகளைப் போலவே ஏழு சமுத்திரங்களும் உண்டாயின. அவன் தன் புதல்வர்கள் எழுவருக்கும் ஒவ்வொரு தீவாகப் பிரித்துக் கொடுத்து சிறிது காலத்தில் உயர்பதவியை அடைந்தான். அவன் பிள்ளைகளில் மூத்தவனான ஆக்நீத்ரனுக்கு ஜம்புதீவைக் கொடுக்க அவன் அதை அரசு செய்து கொண்டிருந்தான். அவனுக்குப் பிறகு அவன் புதல்வன் நாபி என்பவனுக்கு ருஷபன் முதலாக ஒன்பது புதல்வர்கள் பெற்றார்கள். அவர்கள் க்ஷத்திரிய தர்மப்படி நடந்து முக்திப் பிரியர்களாக இருந்தார்கள். அப்போது ருஷபன் ஒன்பது கண்டமாக இருந்த தன் ராஜ்ஜியத்தை ஒன்பது ஒன்பது கண்டமாகப் பிரித்து அவர்கள் யாவருக்கும் கொடுத்தான் அவை முழுவதற்கும் பரதனையே சக்கவர்த்தியாக நியமித்தான். நாம் இருப்பது பரத கண்டம் இது மற்றெல்லாக் கண்டங்களையும் விடச் சிறந்தது. எல்லாக் கண்டங்களிலும் விஷ்ணு மூர்த்தி பல அவதாரங்கள் செய்து உலகைக் காத்தருளி வருவார். அவர் பரதகண்டத்தில் பதரிகாஸ்ரமத்தில் நரநாராயண ரூபமாக தோன்றியிருக்கையில் அவ்விருவருக்கும் பார்த்திவலிங்க பூஜை செய்யும்போது அவர்கள் பக்திக்கும் இணங்கிய சிவபெருமான் அவர்கள் முன்தோன்றி நீங்கள் நன்றாக பூஜித்தீர்கள் எல்லா சம்பந்தமுள்ள உங்களுக்கு என்ன வேண்டும்? என்றார். அதற்கு நரநாராயணர் எங்கள் விஷயத்தில் தயை இருப்பின் யாவரும் தங்களைப் பூஜித்துக் கடைத்தேறும்படி இவ்விடத்தில் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். அதற்கிணங்கி சிவபெருமான் இமயமலையில் எப்போதும் பணியால் மூடப்பட்டிருக்கும் அவ்விடத்தில் கேதாரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்த குளியிருந்தார். அவ்விடத்தில் தேவர்கள் முடியாது. இந்த பத்ரி காசிமரத்தில் இருப்பவர்கள் கேதாரீஸ்வரரைப் பூஜித்து சகல துக்கங்களும் அகலும் அந்த ÷க்ஷத்திரத்தில் ஒரு கங்கண ரூபம் இருக்கிறது. அதனைக் கையில் பூட்டியவனும் அதைத் தரிசித்தவனும் எல்லாப் பாவங்களையும் போக்கடிப்பான். பதிரீவனம் அடைந்து சிவதரிசனம் செய்பவன் முக்தனாவான், கேதார÷க்ஷத்திரத்தில் நரநாரயணரைச் கேதாரீஸ்வர, இஷ்ட காமியங்கள் கைகூடும். முனிவர்களே! கேதாரீஸ்வர ஜோதிலிங்க மகாத்மியத்தைச் சொன்னேன் இனி பீமசங்கர மகிமையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

46. பீமாசுரன் சங்கரர் கதை

காமரூப தேசத்தில் உலகிலுள்ளவர்களை ரட்சிக்க வேண்டி சகல சத்குணங்களையுமுடைய சிவபெருமானின் வருகையைக் கூறுகிறேன் கேளுங்கள்.
முன்னொரு காலத்தில் உலகத்தையெல்லாம் அழிக்கத் தக்க மகாபல பராக்கிரமசாலியான பீமன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான். அவன் கும்பகர்ணனுக்கும் கற்கடி என்பவளுக்கும் பிறந்து எல்லோருக்கும் துன்பமிழைத்துக் கொண்டு வளர்ந்து வந்தான். இராமர், முன்பு கும்பகர்ணனை வதைத்த பிறகு பீமன் என்பவன் அந்தக் கற்கடியை அழைத்துக் கொண்டு ஜெயகிரியை அடைந்து தாயாகிய கற்கடியைநோக்கி, அம்மா! என் தந்தை எங்கே? நீ ஒன்றியாக இருக்கக் காரணம் என்ன என்று கேட்டான்: அதற்கு அவள் மகனே! இராவணனுடைய தம்பியான கும்பகர்ணன் என்னும் உன் தந்தையை அயோத்தி மன்னனான இராமர் போர் முனையிலே கொன்றுவிட்டான்? உன் தந்தை முன்பொரு காலத்தில் தன் தமையனுடன் இந்தக் காமரூப தேசத்துக்கு வந்து என்னைக் கலந்தானேயன்றி நான் இலங்கையைக் கண்டதும் இல்லை என் தந்தையின் பெயர் கற்கடன் என் தாய் புஷ்கலி எனது முதற் கணவன் விராதன் அந்த விராதன் இராமனால் இறந்த பிறகு தாய் தந்தையரிடம் நான் இருக்கும்போது, அவர்கள் சுதீக்ஷணன் என்ற முனிவரைத் தின்னச் சொல்ல மகாபுண்ணியசாலியான அந்த முனிவர் அவ்விருவரையும் சாம்பலாக்கி விட்டார். நான் ஒன்றியாக இருந்தேன். அப்படியிருக்கும் போது உன் தந்தை என்னைக் கூடி இங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டான், அதனால் நீ இங்கு தான் பிறந்தாய் உன்னைப் பார்த்துக் கொண்டு நான் வாழ்ந்து வருகிறேன்! என்றாள்.

இவ்விதமாகத் தாய் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட பீமாசுரன் என் தந்தையையும் விராதனையும் இராமன் கொன்றான். என் பாட்டனையும், பாட்டியையும் அந்த முனிவன் சாம்பலாக்கி விட்டான். எனக்குப் பெருத்த கஷ்டமாயிற்று. நான் கும்பகர்ணனுக்கு மகன் என்பது உண்மையாக இருந்தால் அந்த இராமனைக் கண்டுபிடித்து அவனைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று வீரவேசமாக முழக்கமிட்டு விட்டு பிரமதேவரைக் குறித்து கைகளை உயரத் தூக்கி ஒரு காலில் நின்று சூரியனைப் பார்த்து மனதில் தியானம் செய்து ஆயிரம் ஆண்டுகள் அருந்தவஞ் செய்தான். அப்போது அவனது சிரசிலிருந்து ஒரு பயங்கரமான தேஜஸ் கிளம்பி உலகைத் தகித்தது அதை சகிக்க முடியாத தேவர்கள் ஓடிப் பிரமதேவரிடம் சரண்புகுந்து கடவுளே! இராட்சதனுடைய தவதேஜஸ் உலகத்தையெல்லாம் துன்புறுத்துகிறது. அவன் எதைக் குறித்துத் தவஞ் செய்கிறானோ அதை நீங்கள் அவனுக்குக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யா விட்டால் நாங்கள் யாவருமே இறந்து விடுவோம்! என்றார்கள். அப்போது பிரமதேவர் அமரர்களின் சொல்லுக்கு இணங்கித் துஷ்டனான அந்தப் பீமாசுரன் முன்பு அன்னவா கனத்தோடு தோன்றி உன் தவத்துக்கு மெச்சினோம் நீ வேண்டுவது என்ன? என்று கேட்டார். அதற்கு பீமாசுரன் சிருஷ்டி கர்த்தாவே! எனக்கு அபரிமிதமான பலத்தைக் கொடுக்க வேண்டும் என்று சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டான். பிரமதேவர் அந்த வரத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அந்தர்த்தானமானார். பீமாசுரன் தன் இருப்பிடம் சேர்ந்து தன் தாயைப் பார்த்து, அம்மா! என் பலத்தைப் பார்! தேவர்கள் அனைவரையும் நாசஞ் செய்கிறேன்! என்று சொல்லி, காமரூபம் தேசத்தை அடைந்து அங்கிருந்த பிரியதர்மன் என்ற அரசனைப் பிடித்து விலங்கிட்டு அவன் அரண்மனையிலிருந்த யானை, சேனை, சத்திரம் சாமரம் முதலிய தனங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு அந்த ராஜ்ஜியத்தைத் தனதாக்கிக் கொண்டான். உரிமை பறிபோன அரசனோ சிறைச்சாலையில் இருந்து கொண்டே பரம இரகசியமாகப் பார்த்திவ பூஜையைச்செய்து கொண்டும் கங்காதேவியைப் பலவாறு மானசீகமாகத் தியானித்துக் கொண்டும் இருந்தான். அப்படியே அவன் மனம் தியானத்தில் லயமாகிவிட்ட. அவனது பூஜையெல்லாம் சிவபெருமானுக்குப் பிரியமாயின. அவன் பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பிரணவத்தோடு உச்சரித்துக் கொண்டிருந்தான். அந்த வேந்தனுடைய மனைவியான தட்சிணை என்பவளும் பார்த்திவ பூஜை செய்து சிவத்தியானத்திலேயே வயித்திருந்தாள்.

அவர்கள் இருவரும் இவ்வாறு இருக்கும்போது பீமாசுரன் சகல உலகங்களையும் வென்றடக்கி புண்ணிய கர்மங்களையெல்லாம் நாசப்படுத்தி தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி கொண்டே ஏகச்சக்ராதிபதியாகச் சர்வாதிகார வெறியோடு அரசாண்டு வந்தான், மக்கள் அனைவரும் மகாகோச நதி தீரத்தில் சிவபூஜையும் சிவத்தியானமும் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்யும் பூஜைக்கு மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி, உங்களுக்கு என்னவரம் வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் சர்வேஸ்வரா தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை ஆயினும் எங்கள் கஷ்டத்தைச் சொல்லுகிறோம். பீமாசுரன் என்னும் பயங்கரமான அசுரன் ஒருவன் எங்களைத் துன்புறுத்துவதால் அவனை சம்ஹாரம் செய்து எங்களைக் காத்தருள வேண்டுகிறோம்! என்றார்கள். அதற்கு சாம்பமூர்த்தி, உங்கள் அரசன் மகாபக்தன்! அவன் சிறையில் இருக்கலாமா? நீங்கள் விரும்பியப்படி பீமனைச் சங்கரிக்கிறேன் என்றார். தேவர்கள் முனிவர்கள் அனைவரும் அவரைப் பணிந்து தமதிருப்பிடம் சென்றார்கள். அப்போது பிரிய தருமன் பார்த்திவ பூஜை செய்து வருவதை அறிந்த சில அரக்கர்கள் பீமாசுரனை அடைந்து சிறையிலிருக்கும் அரசன் உம் விஷயமாக ஏதோ ஓர் அபசாரம் செய்வதாகத் தெரிகிறது. ஆகவே செய்யவேண்டியதை விரைவில் செய்யுங்கள், என்றார்கள். பீமாசுரன் வெகுண்டான், பிரியதர்ம அரசனைக் சொல்ல வேண்டும் என்று உடைவாளை உருவிக்கொண்டு அரசனிடம் வந்து, என்ன செய்கிறாய்? உண்மையைச் சொல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்றான். பிரியதர்ம அரசன் சத்தியவான் ஆகையால் அவன் வருவது வரட்டுமே என்று நான் சிவபூஜை செய்கிறேன். பரமதயாளனான பரமேஸ்வரன் இதில் இருக்கிறார்! என் பூஜைக்கு ஏற்ற பயனைத் தருவார், நான் சிவபெருமானை வணங்குவது வழக்கம் உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்து கொள்ளலாம் என்றான். அதற்கு பீமாசுரன் நான் அந்தச் சங்கரனை அறிவேன். என் மூதாதையான இராவணன் அவனை கைலாயத்தோடு தூக்கி விட்டான். அவன் என்னை என்ன செய்து விடுவான்? அவனைத் துதித்தா நீ என்னை ஜெயிக்க முடியும்? இந்த லிங்கத்தை தொலைவில் எரிந்து விடு, அப்படிச் செய்யாவிட்டால் இதோ என் பராக்கிரமத்தைப் பார்! என்றான். அதற்கு அரசன் நான் சிவபூஜையை விட்டு விட்டாலும் தயாளரான சிவபெருமான் உன்னை விடமாட்டார் என்றான். பீமாசுரன் சிரித்தான் இந்த மண்ணல்ல தெய்வம், நானே தெய்வம் என்று கர்ஜித்தான். அதற்கு அரசன் அப்படிச் சொல்லிக் கொள்வது நீ ஒருவன் தான். நான் உன்னைத் தெய்வம் என்று சொல்லமாட்டேன் என்றான். உடனே பீமாசுரன் உன் கடவுள், உண்மையில் இருந்தால் தன் பலத்தை என்னிடம் காட்டட்டும் என்று கூறி தன் உடைவாளை எடுத்து அரசனை வெட்டுவதற்காகப் பாய்ந்தான் அதற்குள் அந்தப் பார்த்திவ லிங்கத்திலிருந்து சிவபெருமான் தோன்றி, நான் பீமேஸ்வரன் இந்த அரசனைக் காக்கவே இங்கு வந்தேன், உத்தமர்களை காப்பதே என் விரதம். ஆகவே இவனைக் காக்கிறேன்! என்று தம் பிநாகவில்லை வளைத்து அம்பு தொடுத்து பீமாசுரனின் உடைவாளை உடைத்தெறிந்தார் பீமாசுரன் திரிசூலத்தை வீசினான். அதையும் ஈஸ்வரன் நூறு துண்டாக்கினார். கத்தி, ஈட்டி, வேல், முதலியவற்றை வீச அவற்றையெல்லாம் பொடிபொடியாக்கினார் பரமன், உடனே அசுர வீரர்கள் அணி அணியாக வந்தனர். பிரதம கணங்கள் வரிசை  வரிசையாக வந்தனர். பெரும் போராட்டம் நிகழ்ந்தது உலகங்கள் நடுங்கின நட்சத்திரங்கள் உதிர்ந்தன. கடல்கள் கொந்தளித்தன. மலைகள் குலுங்கின தேவர்கள் நடுங்கினர். அப்போது நாரதர் அங்கு வந்து சிவ பெருமானை வணங்கி சம்போ மகாதேவா! தங்கள் கோபம் தணியட்டும் புல்லியின் மீது கோடாரியையா செலுத்தவேண்டும் இவனுக்காக இத்தனை பெரும்யுத்தம் எதற்கு? விரைவில் இவனையும் இவனது அசுரசேனைகளையும் அழிக்க தங்களால் இயலாதா? என்றார். உடனே சிவபெருமான் ஹுங்காரம் செய்ய அதுவே அஸ்திரமாகி பீமாசுரனையும் அவனது சேனைகளான அசுரப்படைகளையும் மயிற்பட்ட சருகுகள் போல்சாம்பலாக்கிவிட்டது சிவபெருமானது கோபாக்கினியால் வனங்கள் கருகினதேவர்கள் பெருமானிடம் சரண் புகுந்தார்கள் பிறகு சிவபெருமான் சாந்தமடைந்து, அவர்கள் வேண்டுதலுக்கு இரங்கி பீமாசங்கரர் என்ற திருப்பெயருடன் அங்கு எழுந்தருளியிருக்கிறார்.

47. பிரமன் நான்முகனான கதையும் காசியின் மகிமையும்

சிவ நேயர்களே! இப்போது நான் உங்களுக்குச் சகல பாபங்களையும் ஒழிக்கத் தக்க விஸ்வேஸ்வரலிங்க மகாத்மியத்தைச் சொல்லுகிறேன். பக்தியுடன் கேளுங்கள். கண்ணுக்குப் புலப்படுகிற(திரிஸ்யம்) இந்த பிரபஞ்சமானது உண்டாவதற்கு முன்னதாகவே அவிமுக்தமாகிய காசி÷க்ஷத்திரம் உண்டாகிவிட்டது. அந்தக் காசியின் பிரபாவம் காசி கண்டம் முதலிய நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது இருப்பினும் நான் உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

நிர்குணமும் சத்ய ஞானரூபமும் அழிவில்லாமையும் சிதானந்தஸ்வரூபமும் நிர்விகாரமுமாக விளங்கும் தேஜஸிலிருந்து பிரகிருதியும் புருஷனும் தோன்றி, நம்மைப் படைத்தவன் யார்? நாம் செய்ய வேண்டுவது யாது? என்ற சந்தேகத்துடன் யோசித்துக் கொண்டிருக்கும் போது நிற்க்குணசொரூபியான பரமான்மாவிடமிருந்து ஓர் அசரீரி வாக்கு தவஞ் செய்து பிறகு படைப்புத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று கூறியது, அதைக் கேட்ட அந்தப் பிரகிருதி புருஷர்கள் எவ்விடத்திலிருந்து நாங்கள் தவஞ்செய்ய வேண்டும்? என்று கேட்க அப்போது அந்த வான்குரல் ஆகாயத்திலே பஞ்ச குரோசவிஸ்தீரணமும் தேஜோமயமான ஒளியும் மாடமாளிகைகளும் நிறைந்த அழகியதொரு நகரம் நிர்மாணிக்கப்பட்டு விளங்குகிறது. அங்கு போய்த் தவஞ் செய்யுங்கள்! என்று கூறியது. உடனே பிரகிருதி புருஷர்கள் இருவரும் அந்த ஆகாய நகரத்தை அடைந்தார்கள். புருஷனாகிய விஷ்ணு படைப்பை விரும்பிப் பலவித தவங்களை செய்து வந்தார் அநேக காலம் தவஞ் செய்ததனால் மகாத்மாவான விஷ்ணுவுக்கு தேகக்களைப்பாலும் உழைப்பாலும் உடலினின்று அதிகமாக வியர்வை உண்டாயிற்று அந்த வியர்வை நீர்பிரபஞ்ச முழுவதையும் வியாபித்தபடியால் பிரபஞ்சமெல்லாம் கண்ணுக்குப் புலப்படாததாயின. அதைக் கண்ட மகாவிஷ்ணு இதென்ன பெருவியப்பாக இருக்கிறதே! என்று சிரக்கம்பனஞ் செய்யும்போது சிவபெருமானுடைய காதிலிருந்து ஒருமணி அவர் எதிரில் விழுந்தது எந்த இடத்தில் அந்த மணி விழுந்ததோ அந்த இடத்திற்கு மணி கர்ணிகை என்று பெயர்.

விஷ்ணு வியர்வையினால் மூடப்பட்ட அந்த ஆகாய நகரம் சிவபெருமானின் திரிசூலத்தின் ஆதரவால் நிறுத்தப்பட்டிருந்தது அந்த இடத்திலேயே மகாவிஷ்ணு பிரகிருதி சகிதமாக சயனித்திருந்தார். இவ்விதம் மகாவிஷ்ணு யோக நித்திரையில் இருக்கும் போது உலகங்களுக்கு பிதாமகனான பிரம தேவர் விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றினார் இவ்விதம் தோன்றிய பிரமதேவர் சிவ கட்டளையை ஏற்று உலக படைப்பைத் தொடங்கினார். சராசரரூபமாகப் படைக்கப்பட்ட அண்டம் முழுவதும் சிவபெருமானுடைய சுத்த தேஜஸே வியாபித்தது அது முதல் படைப்பானதுகிரமமாக நிகழலாயிற்று இவ்விதம் படைக்கப்பட்ட பிரமாண்டத்தின் பரிமாணம் ஐம்பது கோடி யோசனை விஸ்தீரணம் என்று முனிவர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. ஜலத்திலிருந்த அந்தப் பிரமாண்டமானது ஜலத்தின் மீது கப்பல் போலவும் தயிரின் மேல் ஏடுபோலவும் அஷ்டதிக்கு கஜங்களால் தாங்கப்பட்டு நிலைத்து நின்றது அந்தப் பிரமாண்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு நடுவில் உள்ளது மத்தியலோகம் என்றும் மற்ற இரண்டு பாகங்களும் ஊர்த்துவலோகம் அதோலோகம், என்றும் சொல்லப்பட்டன மத்தியலோகம் பூலோகம் என்றும் அதோலோகம் அதலம், விதலம், சுதலம், தராதலம், ரஸாதலம், மஹாதலம், பாதலம், என்றும் சொல்லப்பட்டன. பூலோகத்தின் மேலேயுள்ள ஊர்த்துவலோகம், புவர்லோகம், ஸ்வர்லோகம், மஹாலோகம் ஜனலோகம் தபோலோகம், சத்திய லோகம் என்றும் சொல்லப்பட்டன பாதாள லோகங்கள் ஏழும் ஒன்றின் கீழ் ஒன்றாகவும் சுவர்க்கலோகங்கள் ஒன்றின் மேல் ஒன்றுமாக முறையே விளங்கும்.

முனிவர்களே, அவ்விதம் பிரிக்கப்பட்ட அவ்வுலகங்களின் பரப்பளவை விளக்கினால் இந்த நூல் பெருகி விடும் என்று சொல்லவில்லை பலநூல்களில் சொல்லப்பட்டுள்ளன புண்ணியஞ் செய்தவர்கள். தங்கள் புண்ணியங்களுக்கேற்ப ஸ்வர்க்க லோகங்களிலும் பாவஞ் செய்தவர்கள் தங்கள் பாவங்களுக்கு ஏற்ப அதோலோகங்களிலும் வசிப்பார்கள் இந்த பூலோகத்தில் ஏழு கடல்களும் ஏழு தீவுகள் மேருமுதலான குலபர்வதங்களும் கங்கை முதலான புண்ணிய நதிகளும் விசித்தரமான பல புண்ணிய வனங்களும் இருக்கின்றன. இதுவே படைப்புக் கிரமம், இனி பரப்பிரம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறேன்.

நிர்க்குணமான பரமான்மாவிற்கு க்ஷரம், அக்ஷரம், என்ற இரண்டு வகை உருவங்கள் இருக்கின்றன; காணக்கூடிய ஸ்தூலப் பிரபஞ்சம் க்ஷரரூபம் எனவும் காண்பதற்கு அரிய சூஷ்மப் பிரபஞ்சம் அக்ஷõரூபம் எனவும் அவ்விரண்டும் மணி ஒளி, பூமணம் கதிர்கரம் போல விளங்கும் என்றும் முனிவர்கள் கூறுவார்கள், நிர்க்குண, சகுண, லக்ஷணங்களை உண்மையை உணர்ந்த தத்துவ ஞானிகளே உணர்வார்கள் சகுண உபாசனையை முன்னே செய்து அதன் பயனாலேயே நிர்க்குண உபாசனை செய்யத் தக்கது. சகுண ஞானமான அபரஞானம் உண்டான பிறகு நிர்க்குண ஞானமான பரஞானம் தானாகவே வளர்ந்து விடும். நிர்குணப் பரஞானம் உண்டாகும் வரையில் சகுணோபாசனையைச் செய்தேயாக வேண்டும். சிவஞானம் உற்றபோதே அகங்காரங்கள் விலகும். அவை அகன்றபொழுதே தேகவாஞ்சை இல்லாது ஒழியும் அது ஒழியவே எங்கும் சிவமாகத் தோன்ற பாபக்கிருத்தியாகிதமாய் சிவோஹம்பாவனை உண்டாகும். அது கைகூடியவர்களுக்கு விதி விலக்குகள் இல்லை.

சிவபெருமான் கர்மபக்தர்களான ஜீவர்கள் எவ்வாறு கிருதார்த்தர்களாகித் தம்மைத் தரிசித்து உய்வார்கள் என்று கருதி அந்த ஆகாய நகரத்தை தம் திரிசூலத்தினின்றும் விடுத்தார். சுபத்தை கொடுப்பதும் ஸம்சார கர்மங்களை நசிக்கச் செய்வதும் அவிமுக்தமான லிங்கத்தையுடையதுமான அந்த நகரம் மானுடர்களால் எப்போதும் விடப்படக்கூடாது என்று திருவுளங் கொண்ட சிவபெருமானால் தம் திரிசூலத்திலிருந்து இந்த மத்திய லோகத்தில் நிறுத்தப்பட்டது பிரமாவின் ஒரு பகல் கழிந்த பிரம கற்ப காலத்தில் உண்டாகும் பிரளய காலத்தில் சிவபெருமான் தம் திரிசூலத்தின் மேல் வைத்து, இந்நகரத்தை காத்து மீண்டும் படைப்புக் கிரமத்தில் திரிசூலத்தினின்றும் விடுவார். கர்மங்களை நாசஞ் செய்வதால் இதற்குக் காசி என்று பெயர் (கர்மணாம் கர்க்ஷணாத் காசி) அவிமுக்த லிங்கமானது காசி ÷க்ஷத்திரத்திலிருந்து மகாபாவிகளுக்கும் மோட்சானந்தத்தை அடையச் செய்கிறது. மாதவர்களே! மற்ற புண்ணிய ÷க்ஷத்திரங்களில் எல்லாம் சாரூப்ய (இறைவனுருப் பெறும்) முக்தியும், காசியில் மட்டுமே சாயுஜ்யம்(இறைவனோடு ஒன்றிப்பு) என்னும் உத்தம முக்தியும் பெறப்படும். பஞ்சக்குரோச பரிமாணமுடையதும் கோடி பிரமஹத்திகளைப் போக்கடிப்பதுமான இந்த காசி ÷க்ஷத்திரம் கதியில்லாதவர்களுக்கெல்லாம் கதியாக அமைந்திருக்கிறது. தேவர்களும் காசிமாநகரிலே மடிய விரும்புவார்கள். பிரம விஷ்ணுக்கள் சித்த வித்யாதரர் முனிவர் மனிதர்கள் முதலான யாவரும் விரும்பி வணங்கத்தக்கதே காசித்தலமாகும் அதன் சிறப்பை நூறு ஆண்டுகள் சொன்னாலும் சொல்ல முடியாது. ஆயினும் எனக்குத் தெரிந்த வரையில் சொல்லுகிறேன்.

இச்சையால் சகுணரும் சுயமாக நிர்க்குணராயுமுள்ள சிவபெருமான் ஒருசமயம் இந்த காசிக்கு வந்து பாவங்களைப் பரிகரிக்கத்தக்க தன் ஸ்வரூபமான அவிமுக்த லிங்கத்தை யாவருக்கும் காண்பித்து அந்த அவிமுக்த மகாத்மியத்தைச் சொன்னார். அதனை விவரமாகச் சொல்ல என்னால் இயலாது. பிரமனே அநேக கோடி வருஷங்கள் சொல்வதானாலும் சொல்லி முடியாது. அவிமுக்த ÷க்ஷத்திர அதிபதி பார்வதிதேவி சமேதராக வந்த சிவபெருமானை தரிசித்து அநேகம் ஸ்தோத்திரங்களுடன் நமஸ்காரஞ் செய்து எம் பெருமானே! நான் உன் அடிமை என்னிடம் தயை வைக்கவேண்டும் உலகிற்கு நலம் செய்யும் காரணமாகத் தாங்கள் இங்கு எழுந்தருளியிருக்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்து சிவபெருமானின் திருவடிகளைப் பற்றி கண்களில் ஆனந்த பாஷ்பம் சொரிய தேவதேவரே! இந்த நகரத்தை ராஜதானியாக வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் எக்காலத்திலும் இந்த நகரத்தை நீங்காது இருந்து எங்களுக்குத் தரிசனம் அளித்து எங்களைக் கிருதார்த்தர்களாக்க வேண்டும். இத்தலத்தில் இறங்கும் எல்லாப் பிராணிகளையும் முக்தியடையச் செய்ய வேண்டும்! என்று பிரார்த்தித்தான். அதற்கிணங்கச் சாம்பமூர்த்தி தன் பரிவாரங்களுடன் லோகோபகார நிமித்தமாக அங்கேயே கோயில் கொண்டருளினார்அவர் தம் பிரமகபாலத்தை அந்தக் காசியில் பிரதிஷ்டை செய்ய வந்தவராதலின், அவ்வரசனின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் கருதி வந்தபடியே அவ்விடத்தில் வசித்திருக்க உடன்பட்டார்.

இவ்வாறு சூதமுனிவர் சொன்னதும், நைமிசாரண்ய முனிவர்கள், அவரை நோக்கி பூஜ்யரே, சிவபெருமானிடத்தில் பிரம்ம கபாலம் எப்படி வந்தது? அதன் வரலாற்றையுஞ் சொல்ல வேண்டும் என்று கேட்க, சூத புராணிகர் சொல்லலானார்.

மாதவர்களே! நீங்கள் மிகவும் நல்ல விஷயத்தையே கேட்டீர்கள் என் குருநாதரான வியாச மகரிஷி எனக்கு இந்த விஷயத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவர் சொன்னதையே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பூர்வத்தில் ஒரு காலத்தில் சிவபெருமான் உலக÷க்ஷமங்களை விசாரிக்கத் திருவுள்ளம் கொண்டார். எனவே, அவர் சகல உலகங்களிலும் சஞ்சரித்துக் கொண்டு பிரமலோகத்தையடைய, பிரமதேவர் அவரை எதிர் கொண்டு வரவேற்று அர்க்கிய பாத்திய ஆசமனாதிகளால் பூஜித்து தம்முடைய நான்கு திருமுகங்களாலும் துதித்தார். அப்போது அவரது ஐந்தாவதாகிய ஒருமுகம் சிவபெருமானை குறை கூற அதைக் கேட்ட சிவபெருமான் பிரமனுடைய நான்கு முகங்களும் துதித்ததற்காக மகிழ்ந்து ஐந்தாவது முகம் செய்த தூஷணைக்கு விசனமடைந்து, ஆஹா! இந்த துஷ்டமுகத்தை நிவர்த்திக்கவேண்டும் என்று பாம்பு கடித்த விரலை அறுத்தெறிவதால் அந்த விஷவேகம் தீர்ந்து விடுவதுபோல், முழுவதும் நற்குணமுடைய பிரமதேவனது ஐந்தாவது முகம் மட்டுமே தீச்செயல் புரிந்ததால் அம்முகத்தை நீக்குவதால் அவன் முற்றிலும் நற்குணம் உடையவனாவான் என்று கருதி பிரமதேவனின் நலனுக்காகவே அதை அகற்றத் தீர்மானித்து, தம் நெற்றி விழியில் அக்னிச் சுவாலை தோன்ற பிரமனை நெருங்கி, அவனது ஐந்தாவது சிரத்தைத் தம் திருவிரலின் நகத்தால் கொய்தார். அந்தப் பிரமசிரமானது சிவபெருமானைப் பின் தொடர்ந்தது. அவர் காசியையடைந்தபோது அது அவரை விட்டுவிலகியது இந்த இரண்டு காரணங்களினால் சிவபெருமான் காசியில் அமர்ந்தார்.

இவ்வாறு சூதமுனிவர் சொன்னதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி சுவாமி! தாங்கள் சொல்லி வந்த விஷயங்களில் எங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது சர்வலோகங்களுக்கும் பிதாமகனான பிரமதேவர் உலகத் தலைவரான சிவபெருமான் தம் இருக்கைக்கு வந்ததைக் கண்டு அவரை உபசரித்தார் என்றீர்கள் பிரமனோ மகாசாந்த சீலர் அப்படியிருந்தும் அவர் தமது நான்கு வாயினாலும் துதித்து ஐந்தாவதான ஒரு வாயினால் மட்டும் சிவபெருமானைத் தூஷிக்கக் காரணம் என்ன? இந்தச் சந்தேகம் நீங்க, அருள் செய்ய வேண்டும்? என்றார்கள்.

சூதபுராணிகர் கூறலானார்

முனிவர்களே! பிருமதேவர் முன்னொரு காலத்தில் தான் சிருஷ்டி செய்த சரஸ்வதியை நோக்கி; அவளது பேரழகு காரணமாக, நீ என்னை அணையவேண்டும். நீயே என் மனைவி நானே உன் கணவன்! என்று சொன்னார். அதற்கு கலைமகளான சரஸ்வதி இது என்ன விந்தை நீயே என்னை படைத்து விட்டு நீயே என்னை மணப்பதாகக் கூறுவது தகுமா, தகுமமா? என்று நிராகரித்து, மனந்தாளாமல், புத்திரி என்றும் பாராமல் தகாத வார்த்தைகளைக் கூறிய உன் ஒரு வாயானது. இப்படியே துர்ப்பாஷைகளையே பேசிக் கொண்டிருந்து பின் ஒரு காலத்தில் சிவபெருமானால் தண்டனையடையட்டும் என்று சாபமிட்டாள். அந்தச் சாபத்தாலேயே சிவபெருமானை மற்ற முகங்கள் துதிக்க அந்தச் சிரம் மட்டுமே அவரை நிந்தித்து அவரால் அறுத்து எறியப்பட்டது!

ஸிவோ பிஸ்மரணே நைவ பஜநேந பரஸ்யச
பாபந் தூரீகரோதீ ஹ ஸ்வயந் தூரீக்ருதம் ந ஹி
தத்காரண ஞ்சஸ்ரூயதாம் ருஷய கதயாம்யஹம்
ஸ்ரேஷ்ட ஸ்சாசரிதம் யச்சததே வசநர புந:
கரோதி சரதியச்ச ப்ரமாண ரக்ஷணாயவை
ஈஸ்வரஸ் யத்தாலக்நம் பாதகம் கிம் நரேண ஹி
ஸிவஸ்ய தீர்த்த ஸம்யோகாச் சிரஸ்ச தூரத: ஸ்திதம்
தஸ்மாத் தீர்த்தவரம் ஹ்யே தந்மஹாபாதக நாஸநம்
இத்யேவம் ஜ்ஞாபிதம் லோகே மாஹாத்ம்யம் தீர்த்த ஸம்பவம்

அதவா ஈஸ்வரஸ்யேச்சாம் கஸ்சஜாநாதி சேஷ்டிதம்
க்வாநங்கத ஹனஞ்சைவ க்வாங்கேயுவதி தாரணம்
கண்டே விஷ்ந்த்ருதம்யேன ம்ருத்யுஞ்ஜய உதாஹ்ருத:
திகம்பரஸ் ஸ்வயஞ்சைவ பக்தே ப்யோஹ்ய சலாம் ஸ்ரியம்
ஸ்வலை ந்யஞ்ச பிஸாசாஸ்ச பக்தநாஞ்ச சதுர்விதம்
ஸ்வாங்கேசருண்டமாலாவை பக்தாநாம் மௌக்திகாநிச
சிதாபஸ்ம நிஜஸ்யைவ பக்தே பயஸ் சந்தனந்ததேத்
ஸ்வவாஹாநம் வ்ருஷஸ்சைவ பக்தாநாம் ஹஸ்திகாநத
ஸ்வவாத்யஞ்சைவ கல்ஹாத பக்தநாஞ்சான காநத
ஸ்வஸிரஸி ஜடாதிவ்யா பக்தாநாம் முகுடாதிகம்
ஸ்வபூஷணஞ்ச ஸர்பாதி பக்தாநாம் குண்டலாதிகம்
ஸ்வஸ்ய வஸ்த்ரஞ்ச கர்மாதி பக்தேப்யஸ்ஸுந்தராம்பரம்
வயஸ்ந்ததாதிசா ந்யச்ச பக்தநாஞ்சாந்ய தேவச
யதாபிலாஷம் பக்தேட்ய ஸ்ஸங்கரஸ் ஸம்ப்யச்சதி
தஸ்மாத்த சேஷ்டிதம் நைவஞ்ஞாதும் ஸக்யம்முநீஸ்வரா;

சிவபெருமான் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன்னை தோத்திரஞ் செய்தவர்களுக்கும் பாபத்தை நீக்கும் வன்மையை உடையவராக இருக்கும்போது தான் பிரமன் தலையைக் கொய்த தோஷத்தை நிவர்த்தித்துக் கொள்ளச் சக்தியின்றிப் போகுமா? இல்லை ஆயினும் அவ்வாறு நடித்துக்காட்டிய காரணத்தையும் சொல்லுகிறேன் கேளுங்கள்.

உலக சிரேஷ்டன் செய்த காரியத்தைப் பிறர் நற்கருமம் என்று அங்கீகரிப்பது பிரமாண பூர்வமாகும். ஆகவே சிவபெருமான் தான் பிரமச் சிரச்சேதம் செய்த காலத்தில் அக்கபாலம் ஒட்டிக் கொண்டதேயென்று தீர்த்த யாத்திரை செய்து பிரம கபாலத்தை விலக்கினார். இது உலகினருக்காகச் செய்த நடிப்பு! இதனால், காசி ÷க்ஷத்திரம் பாபங்கள் அனைத்தையும் போக்கடிக்கத் தக்க உத்தம ÷க்ஷத்திரமாகும். இந்தக் கபாலம் விழுந்த இடம் கபாலமோசன தீர்த்தம் எனப்படும். நிக்ரகா நிக்கிரக சமர்த்தராய்ச் சகல பிரமாண்டங்களையும் சிருஷ்டித்துக்காத்து சங்கரிக்கும் சிவபெருமானின் சங்கற்பமும் நடக்கையும் யாவன் அறியவல்லவன்? அவர் செய்த செயல்கள் அநேகம்! மன்மதனைத் தகனஞ் செய்தார். எனினும் தனது உடலிலேயே வாம பரகத்தில் பார்வதிதேவியை அமர்த்தியிருப்பது எங்கே? கண்டத்திலே விஷத்தைத் தரித்திருந்தும் மிருத்யுஞ்சயராய் இருப்பது எங்கே? தான் பிட்சை ஏற்கும் திகம்பரரேயாயினும் தன்னை அடைந்தோருக்கு சகல ஐஸ்வரியங்களையும் அநுகிரகிப்பது எங்கே? தான் பைசாசங்களை சைன்னியமாக வைத்துக் கொண்டு இருந்தும் தன்னை அண்டியவர்களுக்கு ரத, கஜ, துரகபதாதிகள், என்ற சதுரங்க சேனையை அனுக்கிரஹிப்பது எங்கே? தன் உடலில் கபாலமாலை அணிந்திருந்தும் தன் பக்தர்களுக்கு முத்து பவளம் முதலிய மாலைகளைக் கொடுக்கிறார். தான் மயான சாம்பலைப் பூசியிருந்தும் தன் பக்தர்களுக்கு சந்தனம் முதலிய பரிமள சுகந்தத்தைக் கொடுக்கிறார். தான் எருதை வாகனமாக கொண்டிருந்தும் தன்னை துதிப்பவர்க்கும் தனக்கு தொண்டு செய்வோருக்கும் யானை, குதிரை முதலிய வாகனங்களைக் கொடுக்கிறார். தான் சர்ப்பாபரணங்களை அணிந்திருந்தும் பக்தர்களுக்கு மகர குண்டலாதி ஆபரணங்களைக் கொடுக்கிறார். தான் ஜடாதரராக இருந்தும் தம் அன்பர்களுக்குக்கிரீடம் முதலான சகலபொருட்களையும் கொடுக்கிறார். தான் யானைத்தோலை அணிந்திருந்தும் பக்தர்களுக்கு சீனி சீனாம்பரங்களை உதவுகிறார். இவையே அன்றித் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, இகபர போகங்களை கொடுக்கிறார். ஆகையால் அவர் மகிமைகளைத் தெரிந்து கொள்ள ஒருவருக்கும் சக்தி கிடையாது இந்தப் பஞ்சக்குரோச விஸ்தீரணமுடைய காசி ÷க்ஷத்திரத்தைவிட திரிலோகங்களிலும் சிறந்த ÷க்ஷத்திரம் ஒன்றும் இல்லை. அத்தகைய திருத்தலமே இல்லாவிட்டால் சிவபெருமானே அங்கு எந்த காலத்திலும் எழுந்தருளியிருந்து, அங்கே மடிபவர்களின் செவிகளில் தாரக மந்திரோ பதேசம் செய்து, அவர்களுக்கு முக்தியளிக்க முடியுமா? விஸ்வேஸ்வரலிங்க மூர்த்தமாகச் சிவபெருமான் எப்பொழுதிலிருந்து காசி÷க்ஷத்திரத்தில் கோயில் கொண்டிருக்கிறாரோ அது முதல் காசி÷க்ஷத்திரம் சிறப்புடையதாயிற்று. இந்தக் காட்சி மகத்துவத்தைக் கேட்பவர்கள், சகலவித சாம்ராஜ்யங்களையும் அடைவார்கள்!

48. பார்வதியின் கேள்வியும் காசி ÷க்ஷத்திரத்தின் ரகசியங்களும்

சிவஞானச் செம்மலே! காசி நகரமே புண்ணிய ÷க்ஷத்திரங்களில் சிறந்தது என்று சொன்னீர்கள். அதை விளக்கமாக எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நைமிசாரண்ய ரிஷிகள் வேண்டினார்கள். சூத முனிவர் சொல்லத் துவங்கினார். முனிவர்களே! காசி மஹாத்மியத்தையும் விஸ்வேஸ்வர லிங்கம் மகாத்மியத்தையும் உங்களுக்குச் சுருக்கமாகவே சொல்லுகிறேன். ஒரு காலத்தில் பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி, உலகிலுள்ளவர்களுக்கு இந்தக் காசி÷க்ஷத்திர மகிமையைத் தெரிவிப்பதற்காக நாதா! இந்தக் காசி÷க்ஷத்திர பிரபாவத்தைத் தயவு செய்து விபரமாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க சிவபெருமான் உமாதேவியாரின் விருப்பத்திற்கிணங்க, உலகத்தாருக்கு எல்லாம் நன்றாகத் தெரிவதற்காகவும் காசி மகாத்மியத்தைத் திருவாய் மலர்ந்தருள்வரானார். பார்வதி! நீ உலகம் சுகம் பெறவேண்டி, இந்த விஷயத்தை விருப்பத்துடன் கேட்டுவிட்டாய், நீ விரும்பியவாறு நான் உனக்குக் காசியின் சிறப்பைச் சொல்லுகிறேன் கேள்.

இந்த ÷க்ஷத்திரம் மிகவும் இரகசியமானது, எனக்குப் பிரியமானது, சகல பிராணிகளுக்கும் சர்வ காலத்திலும் மோட்சத்தையளிக்க எளிதாயுமுள்ளது. இதில் இருந்து யோகசித்தி அடைந்த புண்ணியசாலிகள் என்னை தியானித்துப் பூஜை விரதம் தவம் முதலயிவற்றைச் செய்து என் சின்னங்களான பஸ்ம உருத்திராட்சங்களைத் தரித்து என் சிவலோகத்தையடைய விரும்பி உயர்ந்ததான சிவயோகத்தை அப்பியாசித்து பஞ்சேந்திரியங்களை ஜெயித்து, இங்கே வசித்திருப்பார்கள். அநேக விதமான மரங்கள் பறவைகள் முதலியவற்றாலும் தாமரை, கருநெய்தல் முதலிய மலர்கள் நிறைந்த தடாகங்களாலும் அலங்கரிக்கப் பெற்று அப்ஸரசுகள் கந்தர்வர்கள் முதலியவர்களால் எப்போதும் சேவிக்கப்படும். இந்த முக்தி ÷க்ஷத்திரம் எனக்கு எப்போதும் வாசஸ்தானமாக இருக்கும்படிச் சம்பவித்த காரணத்தைச் சொல்லுகிறேன் கேள் என்னிடம் அன்புடையவனும் மனம் உடையவனும் இராகம் குரோதம் பயம் முதலியவற்றை விட்டவனும் சுகதுக்க லாப நஷ்டம் முதலியன ஒழிந்த சம மதிப்புடையவனும் கோபமற்றவனும் சிவஞானமுடையவனும் சிவதத்துவத்தை விசாரிப்பவனுமான அத்தகையவனுக்கும் எனக்கும் பேதமில்லை! அவனே சகல தீர்த்தங்களுக்கும் ஒப்பாவான் அத்தகையவனுடைய தரிசனத்தை நானும் விஷ்ணுவும் பிரமனும் மற்ற தேவர்களும் விரும்புவோம். ஏனென்றால், அத்தன்மையான ஒருவன் உயிர்விடுவோன் சமீபத்தில் இருந்தால் அவனைக்கண்டு உயிர் விட்டவன் மோட்சம் அடைவான். அவனை முக்தன் என்று சொல்ல வேண்டும். அவனே ஜீவன் முக்தன் அவனுக்கு விதிவிலக்குகள் கிடையாது.

இங்கு ஒரு விசேஷதீர்த்தம் உள்ளது. அதையும் சொல்லுகிறேன். பார்வதி பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்களும் பிரமசரிய கிரஹஸ்த வானப்பிரஸ்த சந்நியாசிகளும், பால, குமார யவுவனர்களும் அபரிசுத்தனும் குழந்தையும் கன்னிகையும், பதிதையும், விதவையும், மலடியும் ரஜோ(சூத) தோஷமுடையவளும், பிரசவித்து இறந்தவளும் ஜகாகன் மாது சம்ஸ்காரங்கள் இல்லாதவளும் பரிசுத்தமானவளும் பாபியும் கர்மவசத்தையுடைய அஞ்ஞானியுமாயினும் இந்தக் காசி÷க்ஷத்திரத்தில் மடிந்தால் சந்தேகமின்றி மோட்சமடைவார்கள். சுவேதசம் அண்டஜம் உத்பீஜம் சராயுசமாயினும் இங்கேயே இறந்த பட்சத்தில் அவையெல்லாம் மோட்சம் அடையும். கர்வ சத்வவனாயினும் ஞானமில்லாதவனாயினும் பாபியாயினும் சந்தேகமின்றி மோட்சம் அடைவான், ஞானம், தியானம், மோட்சம் யோகம் இல்லாதவர்களாயினும் தடையின்றி மோட்சம் அடைவார்கள். முன்பு நான் சொன்ன உயர் குணங்களையுடைய சிவஞானியர் கணக்கிலாதவர்கள் இங்கு வசிப்பதனால் இந்த ÷க்ஷத்திரம் எனக்கு எல்லா ÷க்ஷத்திரங்களையும் விடச் சிறந்ததாக இருக்கிறது. இந்த விஷயம் மிகவும் அந்தரங்கமானது, இந்த விபரத்தைச் சித்தியோகிகள் அறிவார்களேயல்லாமல் பிறர் அறியார்கள். இங்கு நகரமே யாவருக்கும் முக்தியை கொடுக்கத்தக்கது. இந்த நகரத்துக்கு அவிமுக்தம் என்னும் பெயர் உண்டு. (விமுக்தம்-விடத்தக்கது. அவிமுக்தம்-விடத்தகாதது)

காசிநகரம் ஒரு காலத்திலும் என்னால் நீங்கத்தகாதது என்றும் அந்நகரத்தையடைந்தவர்களை தன் மெய்யன்பர் போலப் பாதுகாத்து முக்தியளிக்கத்தக்கதன்றி விடத்தகாதது என்றும் பொருள்படும், நைமிசாரணியம், குரு÷க்ஷத்திரம், கங்காத்துவாரம் புஷ்கரம் முதலிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து. சேவித்து வருவதால் மோட்சம் உண்டாகலாமன்றி, இறந்தால் மோட்சம் அடைய மாட்டார்கள். இந்தக் காசிப்பதியிலோ இறப்பதனாலேயே மோட்சம் உண்டாவதால் எல்லா தலங்களையும்விட இந்தத் தலத்தில் நான் நீங்காது வசிப்பதால் இது பிரயாகையைக் காட்டிலும் சிறந்ததாகும். இந்த காசி நகரமானது ÷க்ஷத்திர சிறப்பு, தீர்த்தச் சிறப்பு, மூர்த்தி மகிமை என்ற மூவகை சிறப்புக்களையும் தன்னகத்தில் கொண்டது. இந்த நகரத்தில் வசிப்பவர்கள். அன்னம், பானம் நித்திரை ஸ்திரீபோகம் முதலிய யாவும் குறைவின்றி செய்து கொண்டிருந்து உயிரை விட்டாலும் மோட்சம் அடைவார்கள். அநேகம் பாபங்களைச் செய்து, அந்தப் பாப பலத்தால் பைசாசத்துவம் அடைந்தாலும் இந்தக் காசிப்பதியில் வசிப்பது பல கோடிப் புண்ணிய காரியங்களைச் செய்து சுவர்க்கத்தில் வசிப்பதை விட உயர்வானதாகும். இந்தத் தலத்தில் எம்மை நோக்கித் தவஞ்செய்து கொண்டிருக்கும் மகாநுபாவர்கள் அநேகர் வசிக்கின்றனர். எனவே மற்ற ஸ்தலங்களைவிட இந்த நகரத்தில் சுலபமாக உயர்ந்த பதவி கிடைத்து விடுகிறது. எந்தெந்தப் பயன்களையும் சாயுஜ்ய பதவியையும் யான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். குபேரன் என்னிடத்தில் சகல கிரியைகளையும் சமர்ப்பித்து இந்தத் தலத்தில் என்னை சேவிப்பதால் காணாபத்தியம் அடைந்திருக்கிறான். பராசரன் என்ற யோகியும் வேதவியாசனும் வேதங்களைப் பாகுபடுத்திப் பிரித்து எனக்குப் பக்தர்களாக இங்கு இருக்கிறார்கள். திருமாலும் திருமகளும் பிரமனும் அநேக தேவரிஷிகளும் அஷ்டவசுக்களும் சூரியனும் இந்திரனும் ஏனைய தேவர்களும் யாவரும் என்னை உபாசனை செய்து கொண்டே இங்கு இருக்கிறார்கள். இன்னும் சிவயோகிகள் தமது ஸ்வரூபத்தைப் பிறருக்குக் காட்டாமல் என்னை இவ்விடத்தில் சேவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ஐம்புலன்வழி மனதைச் செலுத்துபவனாயினும், தர்மங்களைச் சிதைத்தவனாயினும் இந்தத் தலத்தில் மாண்டவன் மீண்டும் தாயின் கர்ப்பத்தை அடையமாட்டான். ஐம்புலன்களை வென்றவர்களும் ஞானிகளும் உயர்பதவியுற்றவர்களும் என்னை இவ்விடத்தில் சேவித்துக் கொண்டிருப்பதால் இவ்விடத்தில் உயிர் நீங்கியவன் யோகபுருஷனாலும் அடையமுடியாத உத்தமப்பதவியை அடைவான்.

இந்தக் காசி ÷க்ஷத்திரத்தில் பிரமதேவனால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற கோப்பிரேக்ஷகம் ஒன்று உள்ளது. அது நம் கைலாயத்திற்கு சமானமானது இந்தக் கோப்பிரேஷகேச் சுரத்தைத் தரிசித்தவர்கள் துர்க்கதியை அடையமாட்டார்கள். கபிலாஹ்ர தம் என்ற பெயரால் வேறொரு ÷க்ஷத்திரமும் இங்கு உள்ளது. அதைச் சேவித்தாலும் பாபம் ஒழிந்து சிவலோகத்தையடைவார்கள் இதை என் ஸ்வரூபமாகப் பிரமன் படைத்தான் நீயும் இது என் ஸ்வரூமாக விளங்குவதைப் பார். இங்கு தேவர்கள் அனைவரும் என்னைப் பலவிதமாக பிரார்த்தித்ததால் யான் லிங்க ரூபமடையக் கண்ட பிரமன் என்னைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்க யோசித்துக் கொண்டிருக்கும்போது மகாவிஷ்ணு அந்தப் பிரமனின் கையிலிருந்த சிவலிங்கக் குறியைத் தானே! வாங்கிப்பிரதிஷ்டை செய்து முறையாக அருச்சனை செய்து முடித்தார். அதைக் கண்டதும் பிரமன் விஷ்ணுவே! நான் பிரதிஷ்டை செய்யவைத்திருந்த சிவலிங்கத்தை நீ ஏன் பிரதிஷ்டை செய்தாய்? என்று கேட்க, அதற்குத் திருமால், பிரமனே! யான் சிவப்ரீதிமிக்கவன் நானே அதைப் பிரதிஷ்டை செய்தேனாயினும் அது உன் பெயராலேயே விளங்குக! என்று கூறினார். எனவே, அக்காரணத்தால் கபிலாஹ்ரதத்தில் இருக்கும் சிவலிங்கத்திற்கு ஹிரண்யகர்ப்பேசன் என்ற பெயர் வழங்குகிறது. இந்தக் காரணத்தாலும் யான் இங்கே இருக்கலானேன். ஆகையால் இந்த ஹிரண்யகர்ப்பேஸ்வரரைத் தரிசித்தவுடன் என்சிவலோகம் கிடைக்கும். மீண்டும் பிரமன் தன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஒரு சிவலிங்கம் இருக்க வேண்டும் என்று வேறு ஒரு சிவலிங்க ஸ்தாபனஞ் செய்தான். அதிலும் நான் லீனமாக இருந்ததால் லீனேஸ்வரன் என்ற பெயரையடைந்தது இங்கே மாண்டவன் மீண்டும் திரும்பாத மோக்ஷத்தையடைவான்.

பார்வதி! இன்னும் சிறிது தூரத்தில் பூர்வத்தில் தேவர்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்த அசுரேசன் பெரும் புலியின் வடிவைக் கொண்டு அமரர்களை அழைத்தான். அவர்கள் என்னைப்பிரார்த்திக்க நான் மனமிரங்கி அவனைச் சங்கரித்து மோக்ஷமளித்து தேவர்கள் வேண்டியவாறு வியாக்கிரேசுவரன் எனவும் எழுந்தருளியிருக்கிறேன். உன் தந்தையான் பர்வதராஜன் இது எனக்கு இன்பமுள்ள ÷க்ஷத்திரம் என்பதை உணர்ந்து இங்கு வந்து ஒரு சிவலிங்கத்தைத் தன் பெயரால் பிரதிஷ்டை செய்திருக்கிறான், அதுவே சயிலேஸ்வரலிங்கம். அதையும் பார் இந்தப் புண்ணிய÷க்ஷத்திரத்தை அலங்காரம் செய்து கொண்டு கங்கைநதி விளங்குகிறது. வருணா, அசி என்ற நதிகள் இரண்டும் கலக்கின்ற காரணத்தால் இந்த ÷க்ஷத்திரத்துக்கு வாரணாசி என்றும் பெயர் வழங்கும் அவ்விரு நதிகளும் சங்கமமாகும் இடத்தில் பிரமன் ஒரு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அதற்கு சங்கமேஸ்வரன் என்று பெயர். மேலும் மத்தியமேஸ்வரர் கிருத்திவாகேஸ்வரர் சுக்கிரன் பூஜித்த சுக்கிரேஸ்வரர் இந்திராதி தேவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு அவரவர் பெயரால் விளங்கும் இலிங்கங்கள் பாபஹாரமான சிவலிங்கங்களையும் பார்! இந்த இலிங்கங்களேயல்லாமல் இன்னும் சில அந்தரங்கமான விஷயங்களையும் சொல்லுகிறேன் கேள்.

இந்தக் காசிப்பதி நாற்புறத்திலும் ஐந்து குரோச விஸ்தீரண முடையதாக இருக்கிறது. இந்தப் பஞ்சக் குரோசப்பதியின் எல்லைக்குள் எங்கேயாயினும் இறக்க நேரிட்டால் மோக்ஷம் உண்டாகும். பண்டிதன், வேத அத்தியயனமுடையவன், சண்டாளன், பதிதன், சன்னியாசி, முதலிய யாவராயினும் இங்கு இறந்தால் அவர்கள் மோக்ஷம் அடைவரார்கள்! என்று சிவபெருமான் கூறினார். அவ்வார்த்தைகளைக் கேட்டதும் பார்வதிதேவி, சுவாமி! நீங்கள் சொன்ன விஷயமானது எனக்கு ஆச்சரியத்தை விளைவிக்கிறது. கர்மஹீனனான சன்னியாசியும் கர்ம பந்தனாகிய பிறரும் சமானமாக நற்கதியடைந்து சமானமான போக மோட்சங்களை அடைவரார்கள் என்று சொல்லுகிறீர்களே! இது எனக்கு வியப்பூட்டுகிறது. அன்றியும் இறப்பவன் அவனது மனைவி புத்திரர், மித்திரர் தனம் முதலியவற்றில் மனத்தைச் செலுத்துவானாயின் அதற்கேற்ற பிறவியை அடைவான் என்று நீதி நூல்கள் கூறுகின்றனவே. எனவே இங்கு இறந்தாலும் தானஞ் செய்தது, தீர்த்த யாத்திரை செய்தது ஆகியவற்றால் அடையும் பயனை அடையாலாமே தவிர மோக்ஷத்தை அடையக்கூடுமா? இந்தச் சந்தேகங்களை தாங்கள் தயவு செய்து நீக்க வேண்டும்! என்று பார்வதிதேவி கேட்க பரமசிவன் பதில் சொல்லத் துவங்கினார்.

49. வினைப்பயன்களும் காசி, பிரயாகை திரிவேணி யாத்திரைப் பலன்களும்

பார்வதி! நீ கேட்டது மிக நல்ல விஷயம்! இதைக் கேட்ட யாவரும் சகல பாவங்களிலிருந்தும் நீங்குவார்கள்! பிரியையே பாபமற்றவன் இந்தக் காசித் தலத்தில் மடிந்தால் அந்தக் கணமே மோக்ஷத்தை அடைவான். பாபாத்மாவாக உள்ளவன் இங்கே மடிந்தால் சில பிறவிகளை எடுத்துத் தன் பாபங்களைக் கழித்துப் பிறகே மோக்ஷம் அடைவான். காசிப் பதியில் பாபஞ்செய்தவன் பைசாசரூபத்தை அடைவான். அத்தகைய பைசாசரூபத்தையடைந்து கால பைரவர் மூர்த்தியால் பத்தாயிரம் ஆண்டுகள் தண்டிக்கப்பட்டுக் கஷ்டம் அடைந்து அதன்பிறகே மோக்ஷம் அடைவான், காசிப்பதியில் பாபஞ் செய்தவனாயினும் இதர இடங்களிலும் உள்ள பாவிகளின் கதி இதுவேயாகும். எனவே இதையறிந்து இந்த அவிமுக்திப்பதியை அடைய வேண்டும். அவ்வாறு அடைந்து எம்மைச் சேவித்துக் கொண்டிருப்பவன் இறுதியில் மோக்ஷமடைவான் பிராய்ச்சித்தங்களால் அழியாத கர்மங்களைச் செய்தவன் கற்பகோடி காலங்கழிந்தாலும் அதை அனுபவித்தேயாக வேண்டும். அசுபமான பாபகர்மங்கள் ஒருவனை நரகத்தையடையச் செய்து விடும் புண்ணிய கருமங்கள சுவர்க்காதிலோகங்களை அடையச்செய்யும், புண்ணிய கர்மங்கள். பாப கர்மங்கள் ஆகியவை கலந்தமிஸ்ர கர்மங்கள் உலகில், மனிதர்கள், பசுக்கள் பறவைகள் முதலிய பிறவிகளை அடையச் செய்யும், தான் அடைந்த பிறவி உயர்ந்ததாயினும் தாழ்ந்ததாயினும் புண்ணிய பாபங்கள் நசித்தாலன்றி முக்தியையளிக்க மாட்டாது. அவை இரண்டும் ஒழிந்த பிறகே மோட்சம் உண்டாகும்.

நற்கருமங்கள் மூவகைப்படும், அவைகளில் பஞ்சக்குரோச ÷க்ஷத்திரம் (காசி) முதலிய புண்ணிய பூமியில் பிரதக்ஷிணை தியான பூஜைகளால் வருவன ஒன்று கர்ம நிவாரணப்படிப் பிராய்ச்சித்தங்களை செய்து கொண்டு பாபங்களை ஒழித்தல் இரண்டு சர்வ கர்மங்களும் நீங்குவதற்காக என்னிடமே தன் கிரியைகளையெல்லாம் சமர்ப்பித்து; என்னைச் சேவித்துக் கொண்டு இந்த ÷க்ஷத்திரத்திலேயே வாசஞ் செய்வது என்பது மூன்றாவதாகும். இவற்றால் பாபங்கள் நீங்கும். இனிக் கர்மங்கள் மூவகைப்படும் அவை சஞ்சிதம் பிராரத்வம் ஆகாமியம் எனப்படும் அவற்றில் பூர்வஜன்மத்தில் செய்தவை சஞ்சிதம் அந்தச் சஞ்சித வினையால் வேறு பிறவியை அடைந்து அனுபவிக்கப்புகும் சுபாசுபகர்மமே ஆகாமியம், அந்த ஆகாமியம் உடலால் அனுபவிக்கப்படும் போது பிராரத்துவம் என்பர். இந்தப் பிராரத்துவமானது அனுபவியாமல் நாசமடையாது பாபமில்லாமல் எந்தத் தேசத்திற்கும் கஷ்டம் வராது துக்கமயமாகக் காணப்படும் யாவுமே பாபமயந்தான் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் அந்தத் துக்கம் ஸ்தூல துக்கம். குக்ஷ்ம துக்கம் என்ற இருவகையாக, அந்தப் பாபத்தாலேயே உண்டாகும். பாபமே இல்லாவிட்டால் எந்தக் காலத்திலும் ஒருவன் சுகமாகவே இருப்பான் ஓரிடத்தில் சுபமே விருத்தியாகும். ஓரிடத்தில் பாபமே நசித்திருக்கும் ஓரிடத்தில் பாபங்களே விருத்தியாகிக் கொண்டிருக்கும். இக்கர்மங்கள் எல்லாம் நலிய வேண்டுமானால் காசி நகரத்தைவிட வேறு ஓர் இடமும் கிடையாது. உலகத்தில் பற்பல புண்ணிய ÷க்ஷத்திரங்கள் இருந்தாலுங்கூட காசியம்பதியிலே வாசஞ்செய்ய வேண்டும் என்று நினைப்பவருக்கு அது விசேஷப் பிரயாசையோடும் கிடைப்பதற்கு அரிது. ஒருவன் காசிக்குப் போக வேண்டும் என்று நூறு பிறவிகளில் முயன்றாலுங்கூட, அந்தப் புண்ணியத் தலத்தை தரிசிக்க அவனுக்கு பற்பல தடைகள் ஏற்படும் உலகத்திலுள்ள எல்லா ÷க்ஷத்திரங்களையும் தரிசித்தால் அன்றிப் புண்ணியத்தலங்களில் ஆறில் ஒரு தலத்தையுங்கூட தரிசிக்க இயலாது அப்புண்ணியத் தலங்களாகிய ஆறில் ஒன்றைமுற்பிறவியில் சேவிக்கும்பேறு பெற்றவனுக்கே, காசித்தலத்தின் சேவை கிடைக்கும், அத்தகையவனே காசித்தலத்தில் வசித்திருந்து இறக்கும்படிக் கைகூடும் காசித் தலத்தை அடைந்து கங்காஸ்நானம் செய்பவன் ஆகாமிய சஞ்சிதங்களை ஒழிப்பானாயினும் உடல் உள்ளவரையில் விடாமல் அவை தொடருமாதலால் பிராரத்துவத்தை அனுபவித்தே தீர வேண்டும். அங்கே மரணமடைந்துவனுக்குப் பிராரத்துவம் ஒழியும் மரணம் அடையும்போது ஒருவனுடைய மனமானது அவனது கர்மவசத்துக்கேற்பவே இயங்கும். அந்தக் கர்மத்திற்கு மூன்று பாதங்கள் உண்டு. அவை மூன்றும் காசியை அடைந்தபோதே காலொடிந்து பின்தொடரக் கூடாதவையாக ஆகின்றன. அவனது மனமும் அந்தத் தீர்த்தத்திலே ஐக்கியப்பட்டு விடும் தீர்த்த ஸ்நானப் பலனும் அந்தத் தலத்தின் சிறப்பால் சிவத்தியானஞ் செய்த பலனும் ஆகிய இரண்டு பயன்களின் வலிமையால் சோட்சம் கிட்டும் என்று சுருதிகள் சொல்லுகின்றன.

பார்வதி! முதலாவதாகக் காசியாத்திரை செய்து அதன் பிறகு பாபஞ்செய்தவன் முன்புதான் செய்த காசி யாத்திரையின் புண்ணியத்தால் அந்தப் பாபம் நீங்கும் பொருட்டு மீண்டும் அவன் அந்தக் காசித்தலயாத்திரை செய்யும்படிப் பலவந்தமாகக் கொண்டு செல்லப் பெற்று, சகல பாபங்களையும் தீப்பொறி சிதறி விழுந்த பஞ்சுப்பொதி போல நசிக்கச் செய்வான் ஆகையால் கர்ம நிர்மூலம் செய்யத் தக்கதான காசித்தலத்தை எவ்வாறாவது முயன்று சேவிக்க வேண்டும். இவ்வாறு சிவபெருமான் சொல்ல பார்வதிதேவி அவரை நோக்கி மீண்டும் வினவலானாள். நாதா! பிரயாகையில் உயிரை விட்டவன் தன் இஷ்டகாமியங்களை அடைவான் அல்லவா? திருவேணி(கங்கை, யமுனை, சரஸ்வதி, என்ற மூன்று நதிகள் கலக்கின்ற பகுதியில்) திரிவேணி பூஜையும் விஸ்வேஸ்வர பூஜையும் செய்து, காசித் தலத்தில் இறந்தவர்கள் அடையும் பயன் யாது? பிரயாகை இஷ்ட காமியங்களை கொடுப்பது காசி முக்தியைக் கொடுப்பது பிரயாகையில் மாதவன் இஷ்ட காமியங்களைக் கொடுக்க, காசியில் நீங்கள் முக்தியைக் கொடுக்கவும் இருக்கிறீர்கள். நீங்கள் சர்வமங்கள ஸ்வரூபியாகையால் இந்தச் சந்தேகத்தைப் போக்கியருள வேண்டும்!

பார்வதி! காசியில் இறந்தவனுக்கு மீண்டும் பிறப்பில்லை. பிரயாகையில் இறந்தவனுக்கு இஷ்டகாமியங்கள் கைகூடுவதும் நிச்சயம். காசிக்கு வந்து பிறகு பிரயாகைக்குப் போவதானால் காசி யாத்திரை செய்த பயன் வீணாகிவிடும், பிரயாகைக்குப் போகாவிட்டால் திரிவேணி சங்கம தரிசன பயனில்லாமற் போகும். பிரயாகையில் இறந்தாலும் மோட்சகாமியாக இருப்பானாயின் அங்கேயே முக்தியே கைகூடும். இவ்வாறேயன்றி வேறல்ல என்று சிவபெருமான் கூறினார். பார்வதிதேவி மகிழ்ச்சியடைந்தாள். அது முதல் சிவபெருமான் விஸ்வநாதர் என்ற பெயருடன் பார்வதி பிரமதகண சகிதமாகக் காசித் தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இவ்வாறு சூதமுனிவர் சிவபெருமான் காசியில் இடைவிடாமல் எழுந்தருளியிருப்பதற்கான காரணத்தை முனிவர்களுக்குச் சொன்னார். உடனே நைமிசாரண்ய முனிவர்கள் குருமகானே மேலும் மேலும் சிவசரிதங்களை நீங்கள் சொல்ல நாங்கள் கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்! என்றார்கள். நல்லது, சகல பாபங்களையும் போக்கடிக்கும் திரியம்பகேஸ்வரப் பிரபாவத்தைச் சொல்லுகிறேன் என்று சூதபுராணிகர் சொல்லத் தொடங்கினார்.

50. அகல்யாவும் குளத்தில் தண்ணீர் எடுக்கும் தகராறும்

முனிவர்களே! பூர்வத்தில் கவுதம முனிவர் என்ற சிறந்த தவமுனிவர் ஒருவர் தம் மனைவியான அகல்யை என்ற மகாபதி விரதையுடன், தென்னாட்டில் பிரமகிரியில் பத்தாயிரம் ஆண்டுகள் அகண்டமான அருந்தவம் ஒன்றைச் செய்து கொண்டிருந்தார், அப்போது பிராணிகள் எல்லாம் துன்புற வேண்டிய பெரும் பஞ்சம் ஒன்று நூறாண்டுகள் அளவு உண்டாயிற்று அதனால் உலகத்திலிருந்த மரங்கள் உலர்ந்து பட்டுப்போயின. உயிரினங்களில் பல உயிர் பிழைக்கத் தக்கத் தண்ணீர் இல்லாமல் வறண்டு மடிந்தன. முனிவர்கள், பொதுமக்கள், பசுக்கள், விலங்குகள், பற்பல இடங்களுக்கு ஓடிப்பரவின. பிர மகரிஷிகள் பிராணாயாமம் முதலிய யோக நிஷ்டையில் இருந்து காலங் கழித்து வந்தார்கள். அப்போது கவுதமர் பிராணாயாமத்திலிருந்து வருண பகவானைப் பிரார்த்திக்க அவரது தவத்துக்கு இரங்கிய வருணபகவான் அவர் முன்னால் தோன்றி, உமக்கு வேண்டிய வரம் என்ன என்று கேட்டார். கவுதமமுனிவர் மகிழ்ந்து. உலகம் முழுமையும் துன்புறும்படி தோன்றியுள்ள மழையின்மையை ஒழிந்து யாவரும் சுகமடையும் படி மழைபொழியச் செய்யவேண்டும்! என்று வேண்டினார். அதற்கு வருணபகவான் முனிவரே! ஈஸ்வராக்ஞையை விரோதித்து நடக்கப் பிரம இந்திராதி தேவர்களாலும் இயலாது. ஆகையால் நான் இதனைச் செய்வதற்கில்லை நீர் வேறு ஏதாயினும் வரம் கேளும். அதைக் கொடுக்கிறேன் என்றார்.

அதற்கு கவுதம முனிவர், வருணதேவனே! என் விஷயத்தில் வரங்கொடுக்கத் தயவு இருக்குமானால் நான் சொல்லுகிறேன். உலகத்தில் மகாத்மாக்களை ஆஸ்ரயித்தால் ஆஸ்ரயித்தவர்களுக்குப் பெருமை உண்டாகும், மகாத்மாக்களோ பிறருக்கு உற்ற துன்பங்களை விசாரிப்பார்களே தவிர, சாமானியர்கள் விசாரிக்கமாட்டார்கள், சூரியனைக் கண்டவுடனே இருள் ஒழிவது போல மகாத்மாக்களை தரிசித்தவுடனேயே தரித்திரம் தூரவிலகும். துக்கம், சோகம், பாபம், பயம் முதலியன யாவும் நீங்கிச் சிறப்பான நன்மைகளும் உண்டாகும். சாமானிய மனிதரைத் தரிசித்தால் அதற்கேற்ற பயன்களே கிடைக்கும். நரியை அது இருக்குமிடத்தில் சந்தித்தால் எலும்புகள் தான் கிடைக்கும். சிங்கத்தை அது இருக்குமிடத்தில் சந்தித்தால் முத்துக்கள் கிடைக்கும். உத்தமர்கள் பிறர் துன்பத்தை நீக்குவதையே இயல்பாகக் கொண்டவர்கள். தமக்கு உண்டான துன்பங்களைப் பாராட்டாது பிறருக்கு உதவி செய்பவர்கள் அவர்கள் கற்பகவிருட்சமும் சத்ஜனரும் ஒரே சுபாவமுடையவர்கள். விருட்சம், பொன் சந்தனம் போன்றவை தாம் துன்புற்றாலும் பிறருக்குப் பயன் தருவது போலத் தாம் கஷ்டப்பட்டாயினும் பிறருக்கு உதவி செய்ய வல்லவர்கள் உம்மைப் போன்ற பலர் இருக்கிறார்கள் துக்கத்தால் வருந்துவோனுடைய துக்கத்தைப் போக்கச் செய்வது அவ்வாறு போக்கடிப்பவருக்கே சுகம் தருவதாகும் பரோபகாரம் செய்பவன் சிறிதே பாபமுடையவன் என்றும் அவனைக் கண்டு விலகிச் செல்பவன் பாபமுடையவனே என்றும் சுருதிகள் சொல்கின்றன இந்த பூமியானது அண்டசம், சுவேதசம், உத்பீசம், சராயுசம் என்ற நான்கு விதமான பிராணிகளால் நிறைந்துள்ளது. இந்நான்கு வகைத் தோற்றங்களில் யாவர் தயையுடையவரோ  யாவர் மமதை அற்றவரோ யாவர் ஜிதேந்திரியராய் உபகாரஞ் செய்பவரோ யாவர் எப்போதும் மவுவனமுடையவரோ இத்தகைய புண்ணியர்களாலேயே பூமி தாங்கப் பட்டிருக்கிறதேயன்றி ஆதிசேஷன் ஒருவனாலேயே தாங்கப்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டாம் வருணதேவரே! ஜகமுழுவதிற்கும் நீரே பிரபுவாக இருப்பவர். உலகம் முழுவதும் உம் வடிவம். ஆகையால் விளைவுத்தொழில் செய்வதற்குரிய மழைநீர் போன்ற சம்பூரணமான ஜலத்தை நீரே கொடுக்க வேண்டும்! என்று கவுதமரிஷி வேண்டினார். வருண பகவான் அவரைப் பார்த்து நீர் ஒரு குளம் எடுக்க வேண்டும் என்று கூற அவ்வாறே கவுதமரும் செய்தார்.

அந்தக் குளம் நீர் நிறைந்து விளங்கியது அப்போது வருணதேவன் இது எப்பொழுது குறையாத நீர்மயமாக இருக்கவும் சகல தீர்த்தங்களிலும் உத்தமமானதாக இருக்கவும் உம் பெயரால் புகழ் பெறவும் இங்கு தினமும் ஓமம் ஜெபம் சிரார்த்தம் முதலியன செய்தால் ஒன்று பலவாறாகவும் பெருகவும் வரம் தருகிறேன்! என்று வருணதேவன் கூறிவிட்டு கவுதமர் போற்ற மறைந்தார். அங்கு கவுதம முனிவர் அந்த ஜலத்தைக்கொண்டு நித்திய நைமித்தியக் கிரியைகளை விதிப்படி செய்துகொண்டு, நெல், கோதுமை முதலிய தானியங்களை விதைத்துவிட்டு தவத்தில் ஆழ்ந்தார் அவை விளைந்து பயனளித்தன, மரங்கள் பூத்துக் காய்த்துப் பழுத்தன. அங்கு விளைந்த தானியங்கள் பெருங் குவியல்களாகச் சேர்த்து வைக்கப்பட்டன. இவ்வாறு கவுதம முனிவருடைய ஆசிரமம் ÷க்ஷமமாக இருப்பதை தம் சீடர்கள் மூலம் அறிந்த வேறு பல தவமுனிவர்கள் யாவரும் கவுதமரின் விருப்பத்திற்கிணங்க அங்கே தம் கூட்டாத்தாருடன் வந்து சேர்ந்தார்கள். பறவைகள், பசுக்கள் மான்கள் முயல்கள் முதலிய விலங்குகள் யாவும் மேய்ச்சலுக்கான புற்றரையும் நீரும் கிடைப்பது கண்டு அங்கு வந்து சேர்ந்தன. அந்தவனம் பூமண்டலத்திலேயே அதிக அழகுடையதாக விளங்கியது. முனிவர்கள் யாவரும் தம் சீடர்களை கொண்டு உழுவுத் தொழில் வைத்துத் தாமும் தவஞ்செய்து கொண்டு க்ஷõமகாலத் துக்கத்தைக் கவுதம முனிவரின் புண்ணியத்தால் மறந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்அப்போது அங்கு நிகழ்ந்த ஒரு விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

ஒரு காலத்தில் கவுதமர் தன் சீடர்களை பார்த்து, நான் சந்தியாவந்தனம் செய்யவேண்டும் நீங்கள் நமது குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார். அவர்கள் அவ்வாறே குளத்தையடைந்தார்கள் அங்கு க்ஷõமபாதையால் வந்திருந்த ரிஷிபத்தினிகள் அச்சீடர்களைப் பார்த்து, நாங்கள் தண்ணீர் முகந்து சென்ற பிறகே நீங்கள் நீர் எடுத்துச் செல்ல வேண்டும். மேல் இருக்கும் ஜலத்தை நாங்களே முகர்ந்து செல்வோம்! என்று பயமுறுத்த கவுதமரின் சீடர்கள் அவர்களிடம் ஒன்றும் பேசாமலும் அவர்களை மீறி எதையும் செய்ய இயலாமலும் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து அகல்யையிடம் நடந்தவற்றை முறையிட்டார்கள் அகல்யை அச்சீடர்களுடன் குளத்தையடைந்து முனி பத்தினிகளிடம் நல்வார்த்தை சொல்லி விலக வைத்தாள் சீடர்கள் ஜலத்தை முகர்ந்து கொண்டு கவுதம முனிவரிடம் சென்று கொடுத்தார்கள். முனிவர், தம் சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் குளக்கரையில் முன்பு நீர் முகவாமல் தடை செய்த ரிஷி பத்தினிகள் அகல்யாதேவியைக் கடிந்து பேசித் தங்கள் கணவர்களிடம் சென்று, கவுதமர் மனைவி அகல்யை எங்களைத் தினமும் தண்டிக்கிறாள் நாங்கள் அவளது தண்டனைக்கு அடங்கி வாழ்கிறோம் நமக்கு இருக்க இடமில்லாமல் இங்கு வந்திருப்பதால் தான் இவ்வாறு நடந்ததேயன்றி வேறல்ல உலகத்தில் பெண்களுக்குப் பொய் சொல்லுதல் மாயை பிடிவாதம் அதிலோபம் பரிசுத்தமின்மை தயையின்மை முதலியன இயல்பான தோஷங்கள் நமக்கு கவுரவமில்லையா? எங்களை அகல்யா கோபிப்பதும் நாங்கள் அவளுக்கு அடங்கி நடப்பதும் எதற்கு? இது என்ன பிழைப்பு? என்று பலவாறு சொன்னார்கள். அதற்கு முனிவர்கள் ஐயோ அந்த அகல்யை பரம பதிவிரதையாயிற்றே. அவள் இப்படிச் சொல்லியிருக்கக் கூடுமா? இவர்களிடத்தில் ஏதேனும் தோஷங்கண்டு ஒருவேளை இவ்வாறு சொல்லியிருக்கக்கூடுமா நாம் அவர்கள் ஆசிரமத்தில் இருந்து ஜீவக்கின்றோமே! நாம் அந்த அகல்யையின் கிருகத்திலிருந்து ஜீவித்து வருகிறபோது அப்பதிவிரதைக்குக் குற்றஞ்சொல்வது நம்மையே குற்றம் உள்ளவர்களாக்கும் என்று தமக்குள் தாமே கருதினார்கள் ஆனால் முனிபத்தினிகள் தங்கள் சொல்லைத் தங்கள் கணவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் ஒன்றுஞ் செய்ய முடியாதவர்களாய் பிரதி தினமும் கவுதமமுனிவரின் பூஜைக்கு சீடர்கள் ஜலம் கொண்டுபோக வரும்போதெல்லாம் தொடர்ந்து அவர்களைப் பரிகசித்து விகடஞ் செய்வதும் அச்சீடர்கள் அதை அகல்யையிடம் சொல்வதும் அகல்யை அந்தக் குளக்கரையை அடைந்து நமது ஆஸ்ரமத்தில் இருப்பவர்களை எப்படிக் கண்டிப்பது என்று நல்ல வார்த்தைகளால் விளக்கிச் சீடர்களைத் தண்ணீர் முகந்து கொண்டு போகும்படிச் செய்வதும், ரிஷிமங்கையர்கள் தங்கள் கணவன் மாரிடம் அகல்யையைப் பற்றிப் பற்பலவாறு தூஷிப்பதுமாக இருந்து வந்தது. இப்படியிருக்க ஒருநாள் அம்முனிவர்கள் அனைவரும் அவ்வனத்தையடைந்து ஒருவரையொருவர் நோக்கி நமது மனைவிமார் குளத்தில் ஜலம் முகந்து செல்லப் போகும் போதெல்லாம் அகல்யாதேவி அவர்களைக் கண்டிக்கிறாளாமே? அவளுக்கு நல்ல வார்த்தை சிறிது சொல்லவேண்டும் என்றார்கள். அதைக் கேட்ட வேறு சில முனிவர்கள் ஒரு வேளை நாம் எல்லோரும் இங்கு வந்திருப்பதால் அகல்யை அவ்வாறே செய்திருக்கலாம். என்றும் நம் மனைவியர்கள் உண்மையையே சொல்லியிருக்கிறார்கள். இவர்களுக்கு அந்த அகல்யாவால் சங்கடங்கள் சம்பவித்து இருக்கலாம். என்றும் யோசித்து இனிமேல் நடக்கவிருக்கும் தீயகர்மத்துக்குப் பாத்திரமாக வேண்டியிருந்ததால் ஒருவரோடு ஒருவர் யோசிக்கத் தொடங்கினார்கள்.

51. கவுதமரின் வெளியேற்றமும் கோரிக்கையும்

முனிவர்கள் யாவரும் ஒன்றுகூடி ஆலோசித்ததையும் கவுதம முனிவர் காரியத்தையும் சொல்கிறேன் நைமிசாரணிய வாசிகளே! அம்முனிவர்கள் ஒருவரையொருவர் பார்த்து நாமெல்லோரும் பிழைப்பதாக இருந்தால் இந்தக் கவுதமர் ஆசிரமத்தில் இருக்கும் வரையில் துக்கமில்லாமல் ஜீவிக்க முடியாது இதற்குத் தக்கயுக்தியை விரைவில் செய்து நம் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு நம் தவத்திற்கு இடைஞ்சல் எதுவுமில்லாமல் இருக்க வழியொன்றைக் கண்டு பிடித்து இந்தக் கவுதம முனிவரை இங்கிருந்து எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் அப்பொழுது தான் நாம் சுகமாக வாழ்ந்திருக்கலாம். கவுதமன் எங்கேயாவது போகட்டும். நாமெல்லோருமாகச் சேர்ந்து அவனை அடித்துத் துரத்திவிடலாம் என்று தீர்மானித்தார்கள்.

அந்த யோசனை கைகூடும்படி விக்னேஸ்வரப் பெருமானை உபாசித்து அறுகு, தாமரை, அக்ஷதை, சிந்தூரம், சந்தனம், தூபம், தீபம், மோதகம் முதலியவற்றால் பூஜித்து வழிபட்டார்கள். அவர்களுடைய பூஜைக்கு மகிழ்ந்து தயை செய்ய விழைந்த விநாயகர் அவர்கள் முன் தோன்றி முனிவர்களே! உங்களுக்கு என்ன காரியம் நடக்க வேண்டும்? அதை வெளியிடுங்கள் என்று கேட்டார் அதற்கு முனிவர்கள் கணபதியைப் பார்த்து, விநாயகப் பெருமானே, எங்கள் விஷயத்தில் தாங்கள் தயையுடையவராக இருந்தால் கவுதம முனிவனை இந்த ஆசிரமத்திலிருக்கும் அவனது சீடர்களோடு துரத்திவிட வேண்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரம் என்று வேண்டினார்கள். அதைக் கேட்டதும் விக்னேஸ்வரர் சிரித்துவிட்டு முனிவர்களே! நீங்கள் இப்போது தீயகாரியத்தை விரும்புகிறீர்கள் குற்றம் எதுவுமில்லாத கவுதமன் விஷயத்தில் நீங்கள் கோபித்தால் உங்களுக்கு இடையூறு ஏற்படும். உபகாரஞ் செய்தவருக்கு அபகாரம் செய்வது சரியல்ல, அப்படி அபகாரம் செய்ய எண்ணங்கொண்டால் இப்போதே நீங்கள் நாசமடைவீர்கள், அருந்தவம் செய்து என்னிடம் நல்ல வரத்தைக் கேட்டீர்களே! ஆஹா! நல்ல பயனை விரும்பாமல் நினைக்கவும் கூடாத இத்தகைய வரத்தைக் கோருவது கையில் இருக்கும் இரத்தினத்தை விட்டுவிட்டுக் கருமணியை விரும்புவதுபோல இருக்கிறது. உங்களுக்கு வேறு எது விருப்பமோ, அதைக்கேளுங்கள்! என்றார். ஆனால் முனிவர்கள் அனைவரும் மீண்டும் மதி மயக்கத்தால் அதே வரத்தையே வேண்டினார்கள்.

அப்போது விநாயகர், மீண்டும் அவர்களை நோக்கி, உலகத்தில் ஒரு துஷ்டன் சாதுக்களின் சகவாசத்தால் ஒரு காலத்தில் சாதுவாகிறான். ஒரு சாதுவோ துஷ்ட சகவாசத்தால் ஒரு காலத்தில் துஷ்டனாகிறான். அந்தச் சாது புருஷனுக்கு ஒருவன் தீமை செய்தால் இதுவும் நமது வினையே என்று நினைத்து அனுபவித்து தனக்குத் தீமை செய்தவனுக்கும் நன்மையே செய்கிறான் ஆகையால் உங்களை எப்பொழுதாவது கவுதமர் துன்பப்படுத்தினால் அப்போதே அவர் உங்களுக்கு சுகத்தைச் செய்ததாகவே எண்ணுங்கள்  நீங்கள் அவருக்கு மீண்டும் அபகாரஞ்செய்ய நினைப்பது சரியல்ல நீங்கள் மங்கையர் மொழியில் மதிமயங்கி இவ்வாறு செய்ய எத்தனித்திருக்கிறீர்கள் அந்தக் கவுதமரே உங்களுக்குச் சுகத்தை விரைவில் செய்வார்! என்று பலவகையான நீதிகளை அவர்களுக்குப் போதித்தார். இவ்வாறு விநாயகர் பலவாறு சொல்லியும் முனிவர்கள் சம்மதிக்காமல் இருந்ததாலும் அவர்களுக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பதாக முன்னதாக வாக்களித்து விட்டதாலும் கணேசர் அவர்களைப் பார்த்து, முனிவர்களே! நான் எத்தனையோ நீதிகளை உங்களுக்குச் சொல்லியும் கேட்காததால் உங்கள் விருப்பப்படி நடக்க வரம் கொடுத்தேன்! அதனால் விளையும் நிந்தனையை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று வரந்தந்து மறைந்தார் கவுதம முனிவர் மற்ற முனிவர்களின் யோசனை யொன்றையும் அறியாமல் தம் தவநிலையிலே இருந்தார். இனி மேலே நடந்தவற்றைச் சொல்லுகிறேன்.

கவுதமரின் ஆசிரமத்திலிருந்த முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விநாயகப் பெருமான் நடக்கச் சக்தியற்றதொரு கிழட்டுப்பசுவின் வடிவம் பூண்டு கவுதமருடைய கோதுமைப் பயிர் நன்றாக விளைந்து அறுவடையாகும் தருணத்தில் அங்கு சென்று மேய்ந்து கொண்டிருந்தார், அப்போது தெய்வகதியாய்க் கவுதமமுனிவர் அங்கே வந்து பயிரில் மேயும் பசுவைக் கண்டு கையினால் ஒரு பிடி வைக்கோலை எடுத்து எறிந்தார். அது பட்டவுடனேயே கவுதமரின் கண்ணெதிரில் அந்தப் பசு கீழே விழுந்து இறந்து விட்டது. அதைக் கண்டதும் அங்கு வந்த முனிவர்களும் முனிபத்தினிகளும் பேரிரைச்சலிட்டு ஆ! கவுதமன் என்ன காரியத்தைச் செய்துவிட்டான் பசு வதைச்(கோஹத்தி) செய்து விட்டான். அவன் மஹா துன்மார்க்கன்! என்றார்கள். கவுதமரும் அவருடைய பத்தினியான அகல்யையும் மிகவும் துக்கப்பட்டு என்ன செய்வது? எங்கே போவது? நிஷ்காரணமாக கோஹத்தி சம்பவித்ததே இதை எவ்வாறு ஒழிப்பது? என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது முனிவர்கள் அனைவரும் கவுதமரிடம் வந்து உன் ஞானம் என்னவாயிற்று? உன் தவம் ஒழிந்தது உன் சர்வக்ஞத்வம் என்னவாயிற்று? உன் கல்வி எங்கே மறைந்தது? என்று இதுபோல அவரை பலவாறு தூற்றி, கோஹத்தி செய்த உன் முகத்தைப் பார்க்கவும் கூடாதே. என்றார்கள் முனிபத்தினிகளோ கவுதமரையும் அகல்யையும் பலவாறு தூற்றி, ஓ கவுதமா! இனி நீ இங்கே இராதே, எங்கள் கண்களில் புலப்படாமல் எங்கேயாவது ஓடிவிடு. நீ இங்கிருந்தால் நாங்கள் கொடுக்கும் அவிர் பாகத்தை அக்கினி தேவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். நாங்கள் செய்யும் சிரார்த்தத்தை பிதுர்க்கள் அடையமாட்டார்கள் என்று கணக்கின்றித் தூஷித்து யாவரும் அவர் மீது கற்களை எறிந்தார்கள் கவுதமமுனிவர் இன்னும் யாது நிகழுமோ என்று கருதி அம்மகரிஷிகளை நோக்கி, மாதவர்களே! நான் இங்கேயிருந்து உண்மையாகவே போய்விடுகிறேன்! என்று சொல்லித் தம் ஆசிரமமாகிய அந்த இடத்தை விட்டு மனைவியும் சீடர்களும் தன்னைப் பின் தொடர ஒரு குரோச தூரஞ் சென்று அங்கேயே இருந்து கொண்டு கோஹத்தி பாபந் தீரும் வரையில் பிதுர்க்காரிய சந்தியாவந்தனாதிகளைச் செய்யக் கூடாதாகையால் சூதகாசவுசம் உற்றவன் போலத் தங்கியிருந்தார்.

கவுமதரைக் கண்டாலே முனிவர்களும் முனி பத்தினியரும் தங்கள் முகத்தை ஆடையால் மூடிக் கொள்வார்கள். இவ்வாறு பதினைந்து தினங்கள் கழிந்தன.
கவுதமர் அங்கிருக்கும் முனிவர்களை வருவித்து, ஸ்வாமிகளே! நீங்கள் எவ்வாறாவது எனக்கு அநுக்கிரகம் செய்ய வேண்டும். என் பாபம் ஒழியும் வகை ஏதேனும் இருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும் பெரியோர்களின் உபதேசமில்லாமல் ஒருவருக்கும் பிராயச்சித்த சித்தி முதலியன கைகூடாது! என்று விநயத்துடன் கேட்டுக் கொண்டார். அதற்கு அவர்கள் ஒருவரும் பதில் எதுவும் சொல்லவில்லை அவர்களைக் கவுதமர் அதிக வணக்கத்துடன் தயையேற்படும்படி வேண்டிக்கொண்டதன் பேரில் அம்முனிவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நெருங்கி வந்து கவுதம முனிவர் பாபாத்மாவாகையால் பிராமணருக்குச் சமீபத்தில் வரக்கூடாது என்று நினைத்து தூரத்தேயிருந்து அவர்களை நமஸ்கரித்துக் கையேற்று நின்று; தவஞானிகளே! என் பாபம் போவதற்குரிய வகையை எவ்விதத்திலாவது யோசித்து சொல்ல வேண்டும்! என்றார். அதற்கு முனிவர்கள் நீர் முதலில் உன் பாபத்தை ஊரெங்கும் தெரியும்படிச் சொல்லிக் கொண்டு உலக வலம் வந்து வயலிலிருந்து கோஹத்தி செய்த நான் பிøக்ஷக்கு வந்தேன்! என்று பசித்தவிடத்தில் வேதியருக்குணர்த்தி அவர்களிடம் ஏழு வீடுகளில் ஒவ்வொரு கவளம் கையில் ஏற்று உண்டு மீண்டும் இங்கு வந்து ஒரு மாதகாலம் சாந்திராயண விரதம் (இது சந்திர கலைகள் உயரும்தோறும் முறையே நாளுக்கு ஒரு கவளமாகக் குறைத்தும் புசிக்கும் விரதம்) அனுஷ்டித்து இந்தப் பிரமகிரியை நூற்றொரு பிரதக்ஷிணம் செய்து வரவேண்டும். இவ்வாறு செய்தால் நீர் பரிசுத்தராவீர், வேறொரு வகையாகவும் சொல்கிறோம் நீர் கங்கையை இங்கே வரவழைத்து அதில் ஸ்நானம் செய்து கோடி பார்த்திவ லிங்க அர்ச்சனை செய்யவேண்டும். இப்படிச் செய்தாலும் பாவ நிவர்த்தியாகிப் புனிதராவீர் முதலில் இந்தப் பிரமகிரியைப் பதினாரு பிரதக்ஷிணம் செய்யும், அதற்குப் பிறகு சதகும்பாபிஷேகம் செய்து கொண்டால் இப்பார்த்திவ சரீரம் தூய்மையடையும் என்றார்கள்.

சவுனகாதி முனிவர்களே அம்முனிவர்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் கவுதம மகரிஷி கோடி பார்த்திவ லிங்க பூஜையும் கிரிபிரதக்ஷிணம் செய்வேன் என்று சங்கற்பம் செய்து கொண்டு பிராமணர்களின் உத்தரவைப் பெற்று, கிரிபிரதக்ஷிணமும் செய்வேன் என்று சங்கற்பம் செய்து கொண்டு பிராமணர்களின் உத்தரவைப் பெற்று, கிரிபிரதக்ஷிணம் (மலையை வலம் வருதல்) செய்து சாஸ்திரோக்தப்படி கோடி லிங்கார்ச்சனையும் செய்து முடித்தார். பதிவிரதையான அகல்யையும் முறைப்படி சிவபூஜை செய்து  கொண்டிருந்தாள். சீடர்கள் அவர்கள் இருவருக்கும் தொண்டு செய்து கொண்டிருந்தார்கள். கவுதமர் இவ்வாறு பூஜை செய்து கொண்டிருக்கும் போது சிவபெருமான் பக்தப்பிரியராகையால் அவரது பூஜைக்கு மகிழ்ந்து பிரமத கணங்களோடும். பார்வதி தேவியோடும் ரிஷப வாகனத்தில் வந்து தரிசனமளித்து, கவுதமரை நோக்கி உன் பூஜைக்கு மகிழ்ந்தோம்! நீ வேண்டும் வரத்தைக் கேள் என்றார்.

கவுதமர் சிவஸ்வரூபத்தைத் தரிசித்துப் பெரிதும் மகிழ்ந்து கவுரீ சங்கரரைப் பணிந்து துதிக்கலானார்.

நிர்க்குணாய நமஸ்துப்யம் ஸுகராய நம புந
பஸ்சாத ப்ரக்ருதி ரூபாயா புருஷாய நம புந
பஸ்சாத விஷ்ணு ஸ்வரூபயா ததஸ்சப் பிரஹ்மணே நம
ப்ரஹ்மணா விஷ்ணு நானசவபூஜ்யாய ஸம்ஸயசசிதே
பஸ்சாத்ருத்ர ஸ்வரூபாய ததஸ்சவ்யாபகாயச
வ்யாப்யாய நமஸ்துப்யம் ப்ரஹ்மணே பரமாத்மநே
அகாராதி க்ஷகாரந்த பீஜரூபாயதே நம
நிர்குணாய குணாயைவ ஸ்வரூபாய நமோஸ்துதே

இதன் பொருள்: குணரகிதரும் பக்தர்களுக்குச் சுகஞ்செய்பவரும் படைப்பின் துவக்கத்தில் பக்தாநுக்கிரகத்திற்காக மாயையுடன் கூடிய ரூபமுடையவரும் எல்லாப் பிராணிகளின் சரீரங்களிலும் அந்தர்யாமியாக இருப்பவரும் பக்தரக்ஷணைக்காக விஷ்ணு ஸவ்ரூபமுடையவரும் ஹிரண்ய கர்ப்பரூபமுடையவரும், பிரமவிஷ்ணுக்களால் பூஜிக்கப்பட்டவரும் சர்வ வியாபகரும் வியாப்பிக்கப்படும் பொருளாக உள்ளவரும் தானே சர்வ மயமானவரும் பரமாத்ம ஸ்வரூபியானவரும் அகாரம் முதல் க்ஷகாரம் இறுதியாகிய வர்ணமாலிகா ஸ்வரூபமும் குணாஹிதரும் குணஸ்வரூபரும் ஸகல ஸ்வரூபரும் ஆகிய தேவரீருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்!. இவ்வாறு துதித்து என்னைப் பாவம் நீங்கியவனாகச் செய்ய வேண்டும் என்று வேண்டினார், அப்போது சிவபெருமான் கவுதம முனிவரைப் பார்த்து கவுதமா! நீ தன்யன்! கிருத கிருத்தியன்! துஷ்ட வேதியர்கள் உன்னிடம் பாபத்தைக் கபடத்தால் ஏற்றினார்களேயன்றி உனக்கு எப்போதும் பாபமே  கிடையாது உன்னைக் கண்டவுடனேயே சகலரும் பாபம் நீங்கியவர்களாவார்கள். இந்தத் துரோகச் சிந்தையுடைய முனிர்வர்கள் செய்நன்றி மறந்தவர்கள் ஆகையால் இவர்கள் செய்த பாபங்கள் பிராயச்சித்தங்களாலும் பரிகரிக்கமாட்டா. உனக்கு ஏதேனும் சிறிதேனும் பாபமிருப்பின் அதுவும் என்னைத் தரிசித்தால் ஒழிந்துவிடும்! என்று சொல்லி அத்துஷ்ட வேதியர்கள் செய்த ஸகல வஞ்சனைகளையும் கவுதம முனிவரிடம் எடுத்துரைத்தார்.

அவ்வந்தணரின் வஞ்சகத்தைக் கேட்ட கவுதமர் கண்ணுதல் பெருமானே! அம் முனிவர்கள் அனைவரும் எனக்கு எந்த விதத்தீமையும் செய்யவில்லை ஐவரே செய்தார்கள் ஆயினும் அது பெரிதல்ல அவர்கள் என் விஷயத்தில் நன்மையைத்தான் செய்தார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் மறைகளாலும் அறியவொண்ணாத மஹேஸ்வரரானதங்களைத் தரிசிக்க முடியுமா? ஆகையால் அவர்கள் புண்ணியவான்களே! என்று கூறினார் அவருடைய சற்குணச் சிறப்பிற்கு சிவபெருமான், நீ மஹா புண்ணியன்! உனக்கு வேண்டிய வரம் என்ன? என்று கேட்டார். கவுதமர் சிறிது யோசித்து விட்டு தம் பெயர் நிலை நிற்பதாக வேண்டும் என்று நினைத்து, சுவாமி! சகல லோகங்களுக்கும் நன்மையைத் தரத்தக்க கங்கையைக் கொடுக்கவேண்டும் என்று சாஷ்டாங்கமாகப் பணிந்து நமஸ்கரித்தார். சிவபெருமான் பூவுலகத்திலும் சுவர்க்கலோக்த்திலும் நிறைந்து பூரணமாய் இருக்கத்தக்க தம் ஜடாமகுடத்திலிருந்து கங்கையில் சிறிது கவுதமருக்குக் கொடுத்தார் அந்த கங்கை உடனே ஒரு பெண்ணுருவம் கொண்டு கவுதமரின் முன்னால் நின்றாள்.

கவுதமர்-கங்காதேவியைத் துதித்து தாயே! நீயே தன்யை எல்லா உலகங்களையும் புனிதமாக்கவல்லவளான நீயே என்னையும் பரிசுத்தனாக்கி, என் பாவங்களையும் ஒழிக்க வேண்டும். என்றார். அப்போது சிவபெருமான் கங்கையை நோக்கி, பெண்ணே! இந்தக் கவுதம முனிவனை என் கட்டளைப்படி கிருதார்த்தனாகச் செய் என்றார். கங்கை சிவாக்கினையையும் கவுதமரின் வேண்டுகோளையும் கருதி என் பரிவார சகிதமாகவுள்ள இந்த முனிவனைப் பரிசுத்தமாக்கி மீண்டும் உம்மிடமே சேருவேன் என்றாள். அதற்கு சிவபெருமான் கங்கையே! இருபத்தெட்டாவது மஹாயுகத்தில் நடக்கும் வைவஸ்வத மநுவந்தரத்தில் கலிகாலம் வரும், அப்போது மனிதர்கள் அற்பாயுளும், அற்பபுத்தியும் உடையவர்களாக இருப்பார்கள். ஆகையால் அந்தக் காலத்தவர்கள் உன்னைத் தரிசிக்கும்படி அது வரையில் நீ இங்கேயே இருக்க வேண்டும்! என்று கூறினார் அதற்கு கங்கை சுவாமி! நான் இங்கேயே இருக்க வேண்டும்! என்று கூறினார். அதற்கு கங்கை சுவாமி! நான் இங்கேயே இருக்கும்படி தங்கள் கட்டளையை ஏற்றால் காசி ÷க்ஷத்திரத்தில் என்னிடம் வருவோரைப் புனிதமாக்க முடியாது. ஆகையால் இவரைப் புனிதராக்கி நான் அங்கேயாவது போகிறேன் என்றாள். அதற்கு கவுதமர் தாயே! நீ எங்கும் போகக்கூடாது என்று விநயமாகக் கூறிவேண்டினார். அப்போது சிவபெருமான், கங்கா! நீ இங்கே கவுதமனின் விருப்பப்படி இருக்கவும், காசியிலும் விளங்கி வருவோரைப் புனிதமாக்கவும் வல்லவள், ஆகையால் நீ இங்கும் அங்குமாக இருப்பாயாக என்றார். அதற்குக் கங்கை நான் எல்லாத்தீர்த்தங்களையும் விடச்சிறப்பாக இங்கே இருந்து கொண்டிருந்தாலும் கவுதமரை வஞ்சனையால் வருத்திய அப்பாவிகளைப் புனிதமாக்க வல்லவளல்லேன். இவரைக் காரணமில்லாமல் துன்புறுத்தியவர்களின் முகத்தைப் பார்க்கக்கூட நான் விரும்பவில்லை ஆகையால் நான் அந்தர்த்தானமாகிறேன்! மேலும் பார்வதி புத்திரர்களோடும் பிரமத கணங்களோடும் சிவபெருமான் இங்கு எழுந்தருள்வதானால் நானும் இங்கே இருக்கக்கூடும் என்றாள். சிவபெருமான் கங்கையை நோக்கி கங்கையே நீ தூய்மையானவள், நீ என்னை விட்டு வேறானவல்ல ஆயினும் நீ என்னை இங்கேயே இருக்கக் கோருவதால் நானும் இங்கு இருக்கிறேன். நீயும் இங்கேயே இருக்கவேண்டும் என்றார். கங்கையும் மகிழ்ந்து சிவபெருமானைப் பூஜித்தாள்.

52. கங்காத்துவாரமும் திரியம்பக லிங்க மகிமையும்

பிருமா முதலான தேவர்களும் சப்த ரிஷிகளும் நானா தீர்த்தங்களும் வந்து கவுதமரையும் கங்கையையும் சிவபெருமானையும் கண்டு ஜய ஜய என்று பூஜித்து பலவாறாகவும் துதித்து மகிழ்ந்தார்கள். கங்கையும் சிவபெருமானும் மகிழ்ச்சியடைந்து நீங்கள் வேண்டும் வரம் என்ன? என்று கேட்டார்கள். நீங்கள் இருவரும் எப்போதும் இவ்விடத்திலேயே எழுந்தருளியிருந்து நற்கருமம் புரியும் முனிவர்களுக்கெல்லாம் அருள் பாலிக்க வேண்டும் என்று ரிஷிகள் கூறினார்கள். கங்கை அவர்களை நோக்கி நீங்கள் யாவருமே தீர்த்த ஸ்வரூபமாக நிற்பதால் நான் இங்கிருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன? நீங்கள் யாவருமே கவுதமரிடத்திலேயே இருக்க வேண்டும். நான் மட்டும் தற்சமயம் போகிறேன். உங்களுக்கெல்லாம் ÷க்ஷமம் உண்டாகட்டும் நீங்கள் உலகத்தைப் புனிதமாக்கிக் கொண்டு இங்கேயே இருங்கள் என்றாள். உடனே தேவர்கள் முனிவர்கள் யாவரும் மீண்டும் கங்கையை வணங்கி தாயே! எங்களையெல்லாம் புனிதமாக்கும் நிமித்தமாக நீ இங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டினார் அதற்கு அவள், உங்களைவிட என்னிடம் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது! என்று கேட்டாள்.

அப்போது நதி மங்கையர் அவளை நோக்கி தாயே! மானிடர்கள் செய்த பாபங்களை யெல்லாம் அவர்கள் எங்களைச் சேவிப்பதாலும் எங்களிடம் ஸ்நானதானாதிகளைச் செய்ததாலும் பதினோரு ஆண்டுகளிலும் பெற்று அவற்றைப் பன்னிரண்டாவது ஆண்டில் யாவரும் சிங்கராசியில் பிரகஸ்பதி பிரவேசிக்கும் போது உன்னிடம் வந்து ஸ்நானம் செய்து போக்கடித்துக் கொண்டிருப்போம் ஆகையால் நீ எங்களுக்காகவேனும் தயவு செய்து சிவபெருமானோ இங்கேயே எழுந்தருளியிருக்க வேண்டும் குரு சிங்கத்திற்கு எழுந்தருளியிருக்கும் ஒரு வருஷகாலம் வரையில் இங்கே வந்து உன்னிடத்தில் ஸ்நானம் செய்து எங்கள் பாபத்தை ஒழித்துச் செல்வோம் என்று விண்ணப்பித்தார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கியும் கவுதமருக்குக் கொடுத்த வரம் காரணமாகவும் கங்காதேவியும் சிவபெருமானும் அங்கேயே எழுந்தருளியிருக்கிறார்கள் அந்த நாள் முதல் சிம்மராசியில் குருபிரவேசிக்கும் பொழுதெல்லாம், பிரமாதி தேவர்கள் தீர்த்தங்கள், ÷க்ஷத்திரங்கள் யாவரும் வருவார்கள் ஆகையால் சிங்கராசியில் குரு பிரவேசித்திருக்கும் காலத்தில் பிற தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதனால் ஒரு பயனுமில்லை அந்தச் சிங்கக்குரு கழிந்த பிறகு தான் அந்தத் தீர்த்தங்கள் தம் இடத்திலிருக்கும், ஆகையால் அவ்வவற்றிற்குரிய பயன்களை அளிக்க சக்தியுடையனவாக இருக்கும். எப்படியிருப்பினும் கங்கை, நர்மதை, கயை, கோமதி இவற்றில் எந்தக்காலத்திலும் ஸ்நானம் செய்யலாம். சிங்ககுரு வென்பது கணக்கில்லை. தீர்த்த யாத்திரை செய்பவர்கள் முதலில் கோமதி நதிக்குச் சென்று அதன் பிறகே கோதாவரி நதியை அடைந்து மீண்டும் கோமதி நதிக்குச் சென்று ஸ்நானம் செய்தால் சகல பாபங்களும் ஒழியப் பெறுவர். இந்தக் கோதாவரிக்குக் கவுதமி என்றும் பெயர் இப்பொழுது கவுதமி தீர்த்தக்கரையில் எழுந்தருளியிருக்கும் திரியம்பகேஸ்வர ஜோதிர்லிங்க மகிமைச் சொன்னேன்.

இவ்வாறு சூதபுராணிகர் கூறினார். சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி மாதவரே! கங்கை ஜலமயமாக வந்ததாக இந்தச் சரிதத்தில் சொன்னீர்களே அது எங்கிருந்து வந்தது? கவுதம முனிவருக்கு அபகாரம் செய்த துஷ்டப் பிராமணர்கள் அதற்காக என்ன கதியை அடைந்தார்கள்? அவற்றையும் எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று வேண்டினார்கள். சூதமுனிவர் சொல்லானார். முனிவர்களே, கேளுங்கள் கவுதமரால் பிரார்த்திக்கப் பெற்ற கங்கையானவள் பிரமகிரியிலிருக்கும் அத்திமரத்தின் வேரிலிருந்து புறப்பட்டு வந்தாள். அவ்விடத்தில் கவுதமர் ஸ்நானம் செய்து கிருதார்த்தரானார், அநேக முனிவர்களும் மானுடர்களும் அங்கே புண்ணிய நீராடி கிருதார்த்தர்களானார்கள். அது தோன்றிய இடத்திற்கு கங்காத்துவாரம் என்ற பெயர் பிரசித்தமாக உள்ளது. இனிக் கவுதமத் துவேஷிகளான முனிவர்களின் கதியை சொல்லுகிறேன். அவ்வேதியர்கள், அந்தக் கவுதமி தீர்த்தத்தில் பிரமாதி தேவர்கள் வந்து ஸ்நானம் செய்வதைப் பற்றிக் கேள்வியுற்று தாங்களும் அதிலே நீராட விரும்பி வந்தார்கள். அதைக் கண்டதும் கங்கை. அந்தப் பாவிகள் தன்னிடத்தில் ஸ்நானம் செய்வதை மனம் சகியாமல் மறைய முயன்றாள். உடனே கவுதம முனிவர் கங்கையை நோக்கி தாயே நீ இவ்வாறு மறைய வேண்டாம் இவ்வந்தணர்கள் யோக்கியரானாலும் அயோக்கியரானாலும் என்னுடைய ஆசிரமத்திற்கு வந்து காலம் கழிப்பவர்கள், இவர்கள் செய்த காரியங்களாலேயே நான் உன்னையும் சிவபெருமானையும் இங்கு இருக்கப் பெற்றேன் என்றார். அதற்குக் கங்கை இவர்கள் மிகவும் கொடியவர்கள். துரோகிகள் செய்ந்நன்றி மறந்தவர்கள் நீசர்கள் அகங்காரிகள், கபடவாதிகள், வேடதாரிகள் ஆகையால் இவர்களை விலக்க வேண்டும் என்று கூறினாள். கவுதமரோ தாயே நான் சொல்வதைக் கேட்க வேண்டும் அபகாரஞ் செய்தவர்களுக்கு யார் உபகாரஞ் செய்கிறார்களோ அத்தகைய புண்ணிய புருஷர்களால் நான் பவித்தரமடைகிறேன் என்று லோகநாதரான சிவபெருமானே சொல்லியிருக்கிறார். ஆகையால் அவரது வார்த்தையை நீயும் பரிபாலிக்க வேண்டும் என்று சொல்ல ஆகாய வாணி மீண்டும் கவுதமரே, நீர் சொல்வது உண்மை ஆயினும் அவர்கள் உம்மோடு கூடியிருக்கும் யோக்கியதையை  நீர் அடைவதற்காக வேண்டி அவர்கள் உம்மைப் பிரமகிரியை நூற்றொரு பிரதக்ஷிணம் செய்யச் சொன்னார்கள் அல்லவா! இப்போது, அவர்களும் இந்தப் பிரமகிரியை நூற்றொரு பிரதக்ஷிணங்கள் செய்ய வேண்டும். அதனால் அவர்கள் செய்த துஷ்கிருத்தியத்திற்குப் பிராயச்சித்தம் உண்டாகி யோக்கியர்கள் ஆவார்கள் என்றாள் அதைக்கேட்டுக் கொண்டிருந்த முனிவர்கள் அப்படியே பிரமகிரியை நூற்றொரு முறை வலம் வந்து நின்றார்கள்.

பிறகு கவுதமர் கங்கையை தியானித்து, கங்காதேவியே இவர்களுக்கெல்லாம் அருள்புரிய வேண்டும்! என்று இறைஞ்சினார். கங்கையும் கவுதமரின் விருப்பத்திற்கேற்ப அவர்களை அநுக்கிரகித்தாள். அதன்பிறகு அவர்கள் கங்காத்துவாரத்தின் கீழ்ப்பக்கத்தில் தர்ப்பையால் செய்த பவித்திரம் அணிந்துமுறைப்படி ஸ்நானம் செய்தார்கள். அந்த இடம் குசாவர்த்தம் என்ற பெயரைப் பெறலாயிற்று அங்கு கங்கை பிரத்யக்ஷமாக இருந்தாள் அகல்யா தேவியை அவமதித்துப் பேசிய முனிபத்தினிகளும் அங்கு ஸ்நானம் செய்து சிவதரிசனமும் செய்து மட்டற்ற  மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். கங்காதுவாரம் குசாவர்த்தம், திரியம்பகேஸ்வர சன்னதி, புண்ணிய தீர்த்தங்கள் கங்கையைத் தரிசித்த கோடி தீர்த்தம் இவ்விடங்களில் ஓரிடத்திலாவது ஸ்நானம் செய்வதன் மீண்டும் கர்ப்பகாசாயப் பையை அடைய மாட்டார்கள். அத்தகைய கோதாவரியின் மகிமையை நான் என்னவென்று சொல்லுவேன். பிரம விஷ்ணு ருத்திரர்களும் தினமும் அதனைச் சேவிப்பார்கள். கோதாவரியைச் சேவிக்காதவர்கள், தேவர்கள், முனிவர்கள், பெரியோர்கள், ஒருவருமிலர் சாமானிய மானுடன் இந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷமடைவான். இதன் சிறப்பை அறிந்தவன் முறைப்படி ஸ்நானம் செய்தால் அவன் வெறும் பேற்றை என்னவென்று சொல்வேன்? பூர்வத்தில் ஸ்ரீராமபிரான் இந்த கோதாவரி நதியைக் கண்டு தான் உலகத்தைப் பவித்திரஞ் செய்விக்க எண்ணிப் பஞ்சவடி தீரத்தில் இருந்தான் முதலில் கங்கையும் பின்னர் சிவபெருமானும் அதற்குப் பின்பு விஷ்ணுவுமாக இம்மூவர் பொருந்தியிருக்கும் புண்ணிய ÷க்ஷத்திரத்தில் வசிப்பவர்களுக்கு துர்லபமானது ஒன்றுமில்லை. பிறந்தது முதல் மரணம்வரையில் காசி ÷க்ஷத்திரத்தில் வாசஞ் செய்தவன் அடையும் பயனை இந்தப் பஞ்சவடி முதலில் உலகசங்கரனாகிய திரியம்பகேஸ்வரனையும் பிறகு ஸ்ரீராமனையும் பிறகு கங்காத் துவாரத்தையும் தரிசிப்பவர்கள் சகல பாபங்களிலிருந்தும் நீங்குவார்கள். இந்தத் தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தவர்கள் ஜீவன் முக்தர்கள் கவுதமரும் மற்ற முனிவர்களும் ஒன்று கூடி அங்கு சுகிக்திருந்தார்கள் கவுதமி நதியின் மகிமையையும் திரியம்பகேஸ்வர பிரபாவத்தையும் நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன் இவற்றைப் பக்தியோடு கேட்டவர்கள் இஷ்டகாசியங்களைப் பெற்று மகிழ்வார்கள் இனி வைத்திய நாதேஸ்வரப் பிரபாவத்தைச் சொல்லுகிறேன்.

53. இராவணன் வலிமைபெற்ற கதையும் வைத்திய நாதேஸ்வர மகிமையும்

சவுனகாதி முனிவர்களே! நான் சொல்வதை அன்போடு கேளுங்கள்! துரகங்காரியும் துஷ்டர்களையே விரும்புகிற அரக்கனுமான இராவணன் பூர்வத்தில் கைலாச கிரியில் சிவபெருமானை ஆராதித்துப் பெருமான் பிரத்யக்ஷமாகாமையால் ஹிமோத்கிரியின் தென் திசையிலுள்ள ஒரு வனத்தில் குண்டந்தோண்டி அதில் அக்னி வளர்த்து அதன் அருகே பார்த்திப லிங்கப் பிரதிஷ்டை செய்து அந்தக் குண்டத்தில் ஹோமஞ் செய்தான் அப்போதும் சிவபெருமான் காட்சியளிக்காததால் தன் தலைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாக அறுத்து ஒன்பது சிரங்கள் வரையில் ஹோமாக்கினியில் இட்டான். அப்பொழுதும் சிவதரிசனம் கிடைக்காததால் இராவணன் தன் பத்தாவது தலையையும் வெட்டிக் கொள்ள உடைவாளை எடுக்கும் போது சிவபெருமான் மனந்தாளாது பிரத்யட்சமாய் இராவணனது கையைப் பிடித்துக் கொண்டு உனக்கு நான் பிரசன்னமானேன் உனக்கு விருப்பமான வரங்களைக் கேள் என்றார்.

அதற்கு இராவணன் மகேஸ்வரரே! என் மீது நீர் தயை கொண்டு பிரசன்னமாக இருந்தால் எனக்குப் பகைவருக்கு இளைக்காத வலிமையைத் தந்து நான் அறுத்தெறிந்த என் சிரங்கள் எனக்கு மீண்டும் உண்டாகவும் அருள் புரியவேண்டும்! என்று வேண்டினான். அடியாருக்கு எளியரான சிவபெருமான் அவன் இஷ்டப்படி அபரிமிதமான பலமும் முன் போலப் பத்துத் தலைகளும் பெறும்படிச்செய்து நோயற்றவாழ்வையும் தந்தருளினார். இராவணன் அவ்வரங்களைப் பெற்றுக் கொண்டு சிவபெருமானைப் பணிந்து விடை பெற்றுத் தன் நகரத்திற்குச் சென்றான். இதையறிந்த தேவர்களும், முனிவர்களும் ஆகா அந்த இராவணனால் இனிமேல் நமக்கு என்ன துன்பங்கள் விளையுமோ? என்று நினைத்துப் பயந்து என்ன செய்வோம்! எங்கே போவோம்? இராவணனிடம் துஷ்டர்களான அரக்கர்களெல்லோரும் சகாயஞ் செய்து கொண்டிருக்கிறார்களே. எவ்வகைய காரியத்தையும் சாதிக்க வல்லமையுடையவனாயிருப்பானே! என்று துக்கித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது நாரதமுனிவர் அங்கே வந்தார். தேவர்கள் அவரை வணங்கி திரிலோக சஞ்சாரியே! சகல காரியங்களையும் நிறைவேற்றத்தக்க ஆற்றல் கொண்டவரே, துஷ்டனான இராவணன் சிவப்பிரசாதம் அடைந்து விட்டானாகையால் எங்களுக்குக் கஷ்டமுண்டாக்கச் சித்தமாக இருக்கிறான். அவன் எங்களைத் துன்புறுத்தினால் நாங்கள் எங்கே போவோம்? என்று வருந்தினார்கள். அதற்கு நாரதமுனிவர் தேவர்களே மகரிஷிகளே நான் ஒரு உபாயம் சொல்லுகிறேன் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு மகதி என்ற வீணையை மீட்டிக் கொண்டே சென்று இராவணனைச் சந்தித்தார்? நாரதமுனிவர் அவனை நோக்கி, இராவணா! சிவபூஜையை பக்தியோடு நீ செய்து வருவது பற்றி எனக்கு மெத்த மகிழ்ச்சி நீ கிருதார்த்தன் உன்மீதுள்ள பிரியத்தால் ஒன்று கேட்கிறேன் அதை நீ சொல்ல வேண்டும் இவ்வளவு மகிழ்ச்சியோடு இருப்பதற்கு காரணம் என்ன? என்று கேட்டார், அவரை இராவணன் உற்று நோக்கி நாரதரே நான் சிவார்ச்சனை செய்த பரமபதியின் அனுக்கிரஹத்தால் பெரும் வல்லமை பெற்றிருக்கிறேன் என்றான். அதற்கு நாரதர் இராவணா நீ சிவபெருமானை எப்படி அருச்சித்தாய்? நீ எனக்கு ஆப்தனாகையால் அதைச் சொல்லவேண்டும் என்றார்.

நாரதா முனிவரே! நான் பூர்வத்தில் கைலாயகிரியை அடைந்து பெருந்தவஞ் செய்தேன். யான் செய்த அருந்தவத்திற்குச் சிவபெருமான் தரிசனம் தராததால் அங்கிருந்து புறப்பட்டு ஹிமாலய மலையின் தென் திசையிலுள்ள வனம் ஒன்றில் கிரீஷ்ம காலத்தில் பஞ்சாக்கினி மத்தியிலும் மழைக்காலத்தில் வெளியிலும் குளிர் காலத்தில் ஜலத்திலும் இருந்து தவஞ் செய்தேன் அப்படித் தவம் செய்தும் சிவபெருமானுக்கு என் மீது தயவுண்டாகவில்லை. அதனால் எனக்குப் பெருவருத்தம் உண்டாயிற்று நாம் பார்த்திவ லிங்கத்தைக் கந்தப் புஷ்பங்களால் அருச்சித்து நிவேதனம் செய்து நமஸ்கரித்துக் கீதவாத்தியங்கள் வாசித்து நிருத்தஞ் செய்து சிவப்ரீதியான யாகங்கள் செய்தேன். அப்போதும் சிவபெருமான் காட்சியளிக்காததால் துக்கமிகுந்து செயலற்று என் தவத்தை நிந்தித்துக் கொண்டு அந்த யாகாக்கினியில் என் பிராணனையே விட்டுவிட வேண்டும் என்று கருதிச் சிரங்களைச் சந்தனாதிகளால் அலங்கரித்து ஒவ்வொன்றாக அறுத்து ஒன்பது சிரங்களை ஹோமஞ் செய்து, பத்தாவது தலையையும் அறுத்து எறிய உத்தேசித்தேன். அப்போது சிவபெருமான் தேஜோரூபியாய்ப் பிரசன்னமாகித் தலையை அறுக்க வேண்டாம் என்று என் கையைப் பிடித்துக் கொண்டு உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்றார். அப்போது நான் அவரைத்தரிசித்து உலகத்திலுள்ளவர்களை யெல்லாம் ஜெயிக்கத் தக்கப்பலத்தை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன் அவர் அப்படியே ஆகுக என்று வரங்கொடுத்து, என் சிரங்களை மீண்டும் பழையபடி உண்டாகச் செய்து நோயின்றி வாழ்க என்று வாழ்த்தித் தயவுடன் பார்த்தார் அந்தச் சிவப்பிரசாதத்தால் யாவும் எனக்குக் கிடைத்தன. அந்த வரத்தைக் கேட்டதும் நான் மகாதேவா! இவ்வாறே தாங்கள் இங்கு கோயில் கொண்டிருக்கவேண்டும் என்று பிரார்த்தித்தேன். சிவபெருமான் வைத்திய நாதேஸ்வரர் என்ற பெயருடன் அங்கேயே எழுந்தருளியிருக்கிறார். பிறகு நான் சிவபெருமானை வணங்கித் திரிலோகத்தையும் வென்று கைப்பற்ற விரும்பி வந்தேன்! என்றான்.

உடனே நாரதர் புன்சிரிப்போடு அசுரேசா! உனக்கு இதமான வார்த்தைகளைச் சொல்லுகிறேன் கேள். சிவபெருமான் நீ கோரியபடியே உனக்கு வரங்கள் கொடுத்ததாகச் சொன்னாயல்லவா அவ்வாறு கொடுத்தது உண்மையென்று எண்ண வேண்டாம். அந்தச் சிவபிரான், விஷபானஞ் செய்து தன்னை மறந்தவராகையால் அவற்றை நீ நம்பலாமா? ஆயினும் அவர் கொடுத்த வரம் கைகூடுமா கைகூடாதா என்பதை நான்சொல்லும் காரியத்தைச் செய்து பரிஷித்து அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் நீ எனக்கு அன்பன். அதனால் சொல்கிறேன் கேள் அதாவது உன் வல்லமையைப் பரிசோதிக்க நீ எவ்வாறாயினும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கையிலாய மலையை உன்கைகளால் தூக்கி எடுக்க வேண்டும் நீ அதைத் தடையின்றி எடுத்தாயானால் அவர் உனக்குக் கொடுத்த வரங்கள் கை கூடியிருக்கின்றன என்று நினைத்து, அம்மலையை மீண்டும் முன்னிருந்த படியே வைத்து விடு என்றார்.

இராவணன் அவர் சொன்னதைச் சத்தியமாக நம்பி, கைலாய கிரிக்கு விரைந்து சென்றான். அங்கு சிவபெருமான் பிரமதகணங்களுடன் கொலுவீற்றிருப்பதும் பிரமாதி தேவர்கள் சிவசேவை செய்து கொண்டிருப்பதும் கற்பாந்தத்திலும் சிறிது கூட அசையாததாகவும் உள்ள அவ்விரசிதகிரியைத் தன் இருபது கரங்களாலும் அசைத்து எடுத்தான். அதனால் அந்த மலையில் இருந்த மரங்கள் எல்லாம் குலுங்கின. அருவிகள் வழிதவறின. பிரமன் தன் நிலை தவறி விழுந்தான். விஷ்ணு மூர்ச்சையடைந்தார். தேவர்கள் பிரமத கணங்கள் மாமுனிவர்கள் முதலிய யாவரும் தம்மை மறந்து இறந்தவர்களைப் போலானார்கள். அப்போது சிவபெருமான் இஃதென்ன என்று யோசித்தார். பார்வதிதேவி சிவ சன்னிதானத்திலேயே அவர் பக்கத்திலேயே இருந்ததால் நிர்பயமாக சிரித்து சிவபெருமானைப் பார்த்துக் கைகூப்பி வணங்கி ஸ்வாமி! தங்கள் சீடனான இராவணனக்கு பெருவலிமை உண்டாக வரங்கொடுத்தீர்கள் அவன் யோக்கியதை மிகுந்தவனாகையால் தக்க பயன் உண்டாயிற்று என்றாள். உடனே சிவபெருமான் இராவணன் மீதுகோபம் கொண்டு இராவணா! உன் கரங்களைச் சங்கரிப்பதற்காக ஒரு புருஷன் ஜனித்து அவற்றை விரைவில் சங்கரித்து விடுவான் என்று சாபமிட்டார். அங்கு வந்திருந்த நாரதமுனிவர் அதைக் கேட்டு மகிழ்ந்திருந்தார். இராவணனும் கைலாயமலையை பழைய படியே வைத்து விட்டு சிவபெருமான் தனக்குக் கொடுத்தவரம் கைகூடியது என்று கருதி கர்வத்துடன் தன் வழியே சென்று அன்று முதல் உலகத்தைத் துன்புறுத்தித் தன் ஆக்ஞையைச் செலுத்தி வந்தான் இதுவே வைத்திய நாதேஸ்வர மகிமை. இந்த மகாத்மியத்தைக் கேட்டவர்களுடைய பாபங்கள் நீங்கும். இனி போகேஸ்வர ஜோதிர்லிங்க மகிமையையும் அதன் உற்பத்தியையும் சொல்லுகிறேன் என்று சூத முனிவர் சொல்லத் தொடங்கினார்.

54 பறக்கும் தாருகை வனமும் போகேஸ்வரர் மகிமையும்

சவுனகாதி முனிவர்களே! ஒரு காலத்தில் தாருகை என்ற அரக்க மங்கை ஒருத்தி பார்வதிதேவியை பூஜித்து தேவியால் பெருவலிமை பெற்று கர்வத்துடன் வாழ்ந்து வந்தாள். அவள் கணவனான தாருகன் என்பவனும் பெருவலிமை பெற்று பலவானாகத் திகழ்ந்து வந்தான். அவன் பல அசுரர்களுடன் சேர்ந்து கொண்டு பல இடங்களிலும் போர் செய்து வெற்றி பெற்று, யாகங்களையும் தர்மங்களையும் அழித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி தாருகைக்கு மேலைக் கடற்கரையில் பதினாறுயோசனை பரப்பளவுடைய வனமே வாசஸ்தானமாக இருந்தது. அவள்பார்வதி தேவியை நோக்கிக் கடுந்தவஞ்செய்து பெற்ற வரத்தின் காரணமாக அந்த வனம் அவள் நினைக்கும் இடத்திற்கெல்லாம் செல்லத்தக்கதாக இருந்தது. ஆகையால் அந்தத் தாருகை ஓடும் இடம் எல்லாம் அந்த வனமும் அதிலுள்ள விருட்சங்கள் தடாகங்கள் மாடமாளிகைகள் அசுரர்கள் அவர்களது குடும்பங்கள் முதலியயாவையும் உடன் கொண்டு செல்லத்தக்கதாக இருந்தது தாருகையும் தாருகனும் அந்த வனத்துடன் ஆங்காங்கே சென்று எல்லோரையும் துன்புறுத்தி வந்தார்கள். அதனால் எல்லோரும் பயந்து அவுர்வ முனிவர் என்ற தவமுனிவர் ஒருவரிடம் சென்று ஸ்வாமி! நீங்கள் தயை செய்யாவிட்டால் நாங்கள் யாவரும் அசுரர்களால் அழிந் தொழிந்து விடுவோம் நீங்களோ சர்வ காரியங்களையும் நிறைவேற்றக் கூடிய வல்லமையுடையவர் நீங்கள் விழித்துப் பார்த்தாலே எல்லோரும் ஓடிப்போய் விடுவார்கள். இல்லாவிட்டால் சாம்பலாவார்கள் தங்களிடத்தில் சிவதேஜசு பிரகாசிக்கிறது. தங்களைச் சரணடைந்தவர்களுக்குத் தங்கள் சந்திரனைப் போலச் சுகங் கொடுப்பவர் என்று பற்பலவாறாகவும் துதித்துப் போற்றினார்கள் அவுர்வமுனிவர் அடுத்தவரைக் காப்பாற்றும் பண்புடையவராக இருந்ததால் நீங்கள் எதற்கும் அஞ்சவேண்டாம் என்று சொல்லி இராட்சதர்களுக்குச் சாபமிட்டார்.

இராக்கதர்கள் இனிமேல் இவ்வாறு உலகத்திலுள்ள உயிரினங்களைத் துன்பப்படுத்தினாலும் தர்மங்களை அழித்தாலும் யாகங்களைச் சிதைத்தாலும் அவர்கள் உடனே மரணமடைவார்கள் என்பது அந்தச் சாபமாகும் இவ்விதமாக அவுர்வ முனிவர் அரக்கர்களைச் சபித்து தம்மைச் சரணடைந்தவர்களை அனுப்பிவிட்டு மீண்டும், தவஞ் செய்யத் தொடங்கினார். அவ்வசுரர்களுக்கு அவுர்வ முனிவர் சாபமிட்டதை அறிந்ததும் தேவர்கள் உற்சாகமடைந்து போருக்கு எழுந்து பயமின்றி அவ்வசுரர்களை எதிர்த்துச் சண்டையிட்டார்கள்.

அந்தப் போரில் அசுரர்கள் பலர் மாண்டு மடிந்தார்கள் பெருந்தோல்வியைக் கண்டதும் அவர்கள் யோசிக்கலானார்கள் அவுர்வ முனிவரது சாபத்தால் அசுரர்கள் அபஜயமடைவதை வனத்தோடு வந்து கொண்டிருந்த தாருகை கேள்விப்பட்டு அசுரர்களே! நான் பூர்வத்தில் தவஞ்செய்து நான் செல்லும் இடம் எல்லாம் இந்த வனத்தோடும் இதிலுள்ள எல்லாவற்றோடும் பின் தொடர்ந்து வரப் பார்வதி தேவியிடம் வரம் பெற்றிருக்கிறேன். ஆகையால் நமக்கு எந்த வகையிலும் கஷ்டமே வரமாட்டாது இந்த வனத்தைச் சலத்திலேயே நிறுத்திக் கொண்டு வசித்தால் சிறிதும் கஷ்டமின்றிச் சுகமாக வாழலாம் என்றாள். அதைக் கேட்ட அரக்கர்கள் மிகவும் மகிழ்ந்து நீ மகா புண்ணியவதி எங்களுக்கு மகாராணியான உன்னால் நாங்கள் அவுர்வ முனிவரின் சாபத்தை ஏற்றிருந்தும் இறந்து போகாமல் காப்பாற்றப்பட்டோம் என்று சொன்னார்கள். அரக்கர்கள் அனைவரும் தாருகையே தங்களை இரட்சிப்பாள் என்று தீர்மானித்து. இந்த வனத்தோடும் இவளோடும் நாம் அப்படியே விரைவாகச் சென்று, எங்கேயாவது சென்று சுகித்திருப்போம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தேவர்கள் அனைவரும் மீண்டும் போர்செய்ய வந்தார்கள். அமரர்களால் அலைப்புண்டு அசுரர்கள் வருந்தினார்கள். அதைக் கண்ட தாருகை அந்த வனத்தை சுகமான இடத்திற்கு கொண்டு செல்ல நினைத்து பார்வதி தேவியை ஜய ஜய என்று துதித்தாள். உடனே சிறகுடைய பர்வதம் எவ்வாறு விரைந்து பறக்குமோ அதுபோல, அந்த வனமானது அங்கிருந்து மேலே கிளம்பி சமுத்திர மத்தியில் போய்ச் சேர்ந்தது. அதனால் உபவனம், நீர்நிலை, கோட்டை, மாட மாளிகைகள் சுவர்க்கத்தை விடச்  சுகங்கொடுக்கும் உத்தியானவனம் முதலியவற்றுடன் அந்த வனம் வந்து சேர்ந்ததால் அவர்கள் அனைவரும்பயமில்லாமல் இருந்தார்கள் அதுமுதல் அவுர்வ முனிவரின் சாபத்துக்கு அஞ்சி பூமிக்கு வராமல் சமுத்திரத்திலேயே வாழ்ந்தனர் யாராவது மரக்கலங்களில் ஏறிவரக்கண்டால் அவர்களைக் கொலை செய்வதும் விலங்கிடுவதும் சிறையில் தள்ளுவதுமாகத் துன்புறுத்தி வந்தார்கள். முன்பு பூமியில் இருக்கும்போது செய்த துன்பங்களைப் போலவே சமுத்திரத்தில் அகப்பட்டவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள்.

இந்நிலையில் வியாபார விஷயமாகவாவது, விநோதார்த்தமாகவாவது ஓடம் ஏறிக் கடலில் எவராவது வரக்கண்டால். அசுரர்கள் தங்கள் மாயையால் கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்து நின்று சமீபித்ததும் அவர்களையெல்லாம் அந்த ஜலமார்க்கமாகவே இழுத்துச் சென்று தங்கள் வனத்தில் பலவாறு துன்புறுத்திவந்தார்கள். இவ்விதம் அசுரர் செய்யும் கொடுமைகளால் மனிதர்களும் தேவர்களும் வருந்தினார்கள். அசுரர்களால் சிறையிலடைக்கப் பட்டவர்களில் சுப்பிரியன் என்ற வணிகர்குல உத்தமன் ஒருவன் சிறந்த சிவபக்தனாக இருந்தான் அவன் தன்னுடன் சிறையில் அடைப்பட்டிருந்தவர்களை நோக்கி, அன்பர்களே! நாம் சிவ பூஜை செய்யும்வரையில் இத்தகைய துன்பங்களை அனுபவிக்க வேண்டியதுதான் நாம் விரைவில் சிவலிங்க அர்ச்சனையைச் செய்யத் துவங்க வேண்டும் என்றான். பிறகு அவன் அவர்களுக்குச் சிவ மந்திரங்களை உபதேசித்து பார்த்திப லிங்க பூஜை செய்யப் பழக்கி, தானும் அவர்களுடன் சிவலிங்க அர்ச்சனை செய்துவந்தான். அவர்களில் சிலர் சிவத்தியானத்தில் இருந்தார்கள்.

சிலர் மானஸ பூஜையால் சகல துன்பங்களும் நீங்கியிருந்தார்கள். வைசியன் சுப்பிரியனோ பார்த்திவலிங்கத்திற்கு விசேஷபூஜையை இடைவிடாமல் விதிப்படி செய்து வந்தான். சிவபூஜை செய்யத் தெரியாதவருக்கு அந்தப் பூஜையை முறைப்படி செய்யக் கற்றுக் கொடுத்தான். அதனால் சிறையிலிருந்தவர்கள் எல்லோரும் ஸ்ரீபஞ்சாக்ஷர மந்திரத்தால் சிவத்தியானத்தில் இருந்தார்கள் சுப்பிரியன் என்பவன் சிவப்பிரியனானான். அவன் சிவயோகத்தில் இருக்கும்போது சிவபெருமான் மகிழ்ந்து. தன்னை மறந்த நிலையில் இருந்த சுப்பிரியனை விழிக்க வைத்தார். அவர்கள் யாவரும் சிவபூஜை செய்து கொண்டிருந்த காலம். ஆறு மாதங்களாகியதால் அசுரர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிந்து வரும்படிச் சேவர்களை அனுப்பி வைத்தார்கள். அங்கு சிவபெருமான் பிரத்தியட்சமாகியிருப்பதைக் கண்ட சேவகர்கள் விரைந்து சென்று தாருகனிடம் இந்தச்செய்தியை அறிவித்தார்கள். தாருகன் உடனே சிறைச்சாலைக்கு வந்து சிவப்பிரியனைப் பார்த்து நீ எப்படித் தியானஞ் செய்கிறாய்? அதைச் சத்தியமாகச் சொல் என்றான். அதற்குச் சிவபிரியனும் அவனுடன் இருந்தவர்களும் ஒன்றும் சொல்லாமல் நீயே தெரிந்து கொள்வாய் என்று சொன்னார்கள் தாருகன் கோபங்கொண்டு அசுரர்களை அழைத்து இவர்கள் எல்லோரையும் கொல்லவேண்டும்? என்று கட்டளையிட்டான் அவன் கட்டளையை ஏற்று அசுரர்கள் பற்பல ஆயுதங்களைத் தூக்கி வந்தார்கள் வைசியச் சிரேஷ்டனாகிய சிவப்பிரியன் பயங்கொண்டு கண்ணுதல் பெருமானை நினைத்து சிவபெருமானே! அபயம்! சங்கரா! அபயம்! ஸர்வமும் தானேயானவரே! அபயம் என்று தியானித்தான். உடனே பூமியிலிருந்து ஓர் ஆலயம் நான்கு வாயில்களோடும் தோன்றியது அதன் மத்தியில் திவ்விய தேஜோமயமான சிவபெருமானின் திருவுருவமும் தோன்றி நான் உங்களைக் காக்கிறேன் என்று அபய வார்த்தகளைச் சொல்லி பாசுபதாஸ்திரத்தைக் கொடுக்கவே சுப்பிரியன் அந்த பாசுபதாஸ்திரத்தால்; சகல அசுரர்களையும் சங்கரித்துவிட்டான். இவ்வாறு அசுரர்கள் யாவரும் அழிந்த பிறகு, இவ்வனத்தில் இனி வர்ணாசிரம தர்மங்கள் செவ்வனே நடைபெறும், ஆசிரமவாசிகள், தத்தமது ஆஸ்ரம ஒழுக்கங்களை நீங்க மாட்டார்கள். துஷ்டர்கள் இங்கிருக்க இடமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அரக்கி தாருகை உமாதேவியைக் குறித்துத் தோத்திரஞ் செய்தாள், உடனே பார்வதிதேவி அவள் முன்பு தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாள். அதற்கு தாருகை என் வமிசம் அழியாதிருக்க வேண்டும் என்றாள். அதற்குத் தேவி உன் வமிசத்தைக் காக்கிறேன் என்று வரங்கொடுத்து சிவபெருமானிடம் சென்றாள். அங்கு பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி ஸ்வாமீ! நான் அசுர வமிசத்தை இரட்சிப்பதாக வரங்கொடுத்து வந்திருக்கிறேன் தாங்களும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றாள்.

சிவபெருமான் கோபித்தார் அதற்குப் பார்வதிதேவி தாங்கள் சொன்ன வார்த்தை யுகாந்தரத்தில் அவசியம் நிகழுமாக அதுவரையில் அரக்கர்களும் இருக்கவே வேண்டும் இந்தத் தாமத சிருஷ்டியில்லாவிட்டால் பிரளயம் உண்டாகாது அரக்கி தாரகை பலமுள்ளவள் அவளது ஆட்சியில் அசுரவிருத்தி உண்டாகட்டும். அவர்கள் இந்த வனத்தில் வசித்திருக்கட்டும் என்றாள் சிவபெருமான் தேவியின் விருப்பம் கைகூடவும் சிறையிலிந்தவர்களுக்குத் தாம் கொடுத்த வரம் சரிவர நடக்கவும் கருதி நான் இங்கேயே இருந்து அசுரர்களால் தீமைகள் நிகழாதவாறு செய்வேன். மஹாசேன ராஜன் மகன் வீரசேனன் என்பவன் கலியுகம் முடிந்து கிருதயுக ஆரம்பமாகுங்காலத்தில் என்னைத் தரிசித்து என்னை பூஜித்து, அதன் பயனாகச் சக்கரவர்த்தியாவான். அவனுக்கு பலவித தர்மங்களை உபதேசித்து விருத்தி செய்ய வேண்டும் என்றார். இவ்வாறு சிவபெருமானும் பார்வதிதேவியும் உரையாடி விட்டுப் போகேஸ்வரர் என்ற பெயரில் அங்கு சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

இவ்வாறு சூத முனிவர் சொன்னார். அவரை நைமிசாரணிய வாசிகள் நோக்கி, சூதமுனிவரே! வீரசேனன் என்ன காரணமாக அங்கு போனான்? என்று கேட்டார்கள் சூத புராணிகர் அதைக் கூறலானார்.

நைஷதம் என்ற பட்டணத்தில் வேந்தர் குலத்தில் மஹாசேனராஜனுக்குப் புத்திரனாக வீரசேனன் தோன்றி அகண்டமான பார்த்திவலிங்க பூஜையைப் பன்னிரண்டு ஆண்டுகள் செய்து சிவபெருமானைத் தரிசித்து, மரத்தால் ஒரு மீனைச்செய்து அதை ஈயத்தால் அலங்கரித்து அதற்கு மாயாசக்தி உண்டாக்கிக் கொடுக்கப் பெற்றான். அவனிடம் சிவபெருமான் நீ ஏராளனமான மரக்கலங்களுடன் மிலேச்ச சேனையோடு தாருகையின் வனத்திற்குச் செல் அந்த வனத்தில் நீ தனியாக சென்று என்னால் படைக்கப்பட்டுள்ள திருக்கோயிலில் போகேஸ்வர லிங்கத்திற்கு பூஜை செய்து, பாசுபதாஸ்திரத்தைப் பெற்று பார்வதிதேவியின் பரிபூரண கடாட்சத்தையும் பெற்று தாருகை முதலிய அரக்க மங்கையரையும் தாருகன் முதலிய அரக்கர்களையும் சங்கரிப் பாயாக உன்னைக் கண்டதுமே அந்தத் தாருகையின் வலிமை சிறிதுமில்லாமல் விலகிவிடும் என்றார்.

அவ்வாறு விரசேனன் வரம்பெற்றுச் சர்வசக்தனாகி தாருகையின் வனத்தை அடைந்து அரக்கர்களையெல்லாம் சங்கரித்து அங்கேயே அரசாண்டான், இதுவே போகேஸ்வர ஜோதிர்லிங்க மகாத்மியமாகும். இனி இராமேஸ்வர ஜோதிர்லிங்கத்தின் மகிமையைச் சொல்லுகிறேன்.

55. ஸ்ரீராமர் பெற்ற வரமும் இராமேஸ்வர மகிமையும்

சவுனகாதி முனிவர்களே! சிவசரிதங்களைக்கேட்க விரும்பிய நீங்கள் இராமேஸ்வர ஜோதிர்லிங்க மகிமையைப் பக்தியுடன் கேளுங்கள். அது சகல பாவங்களையும் அகற்ற வல்லது.

ஒருகாலத்தில் அயோத்தி தேசத்து தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரரான ஸ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணரோடும், சுக்ரீவன் முதலிய பதினெட்டுப் பதுமத் தொகையுடைய மஹாபலசாலிகளாகிய வானர வீரர்களோடும் கூடித்தெற்குக் கடற்கரையை அடைந்தார். அங்கே அவர் தங்கி தம்பியாலும் சகல வானர வீரர்களாலும் சேவிக்கப்பட்டு ஜனகராஜ குமாரியான சீதாதேவி என்னுடன் எப்பொழுது கூடி வாழ்வாள் என்று கவலைப் பட்டார். இந்தச் சமுத்திரமானது மிகவும் பெரிதாக இருக்கிறதே. தாண்டிச் செல்ல வேண்டிய என் சைன்னியங்களோ, வானரச் சேனைகளாக இருக்கின்றன. எனக்குப் பகைவனான இராவணன் திருக்கைலாய மலையையே தன் கைகளால் தூக்கிய மகாபல பராக்கிரமசாலி! இது எவ்வாறு நடக்குமோ? என்று ஸ்ரீராமர் துக்கப்பட்டுத் தம் தம்பியைப் பார்த்து,

தம்பீ! லக்ஷ்மணா! எனக்குத் தாகமாக இருப்பதால் ஜலம் வேண்டும் என்று கூறினார். அவர் விருப்பத்தை அவர் அருகில் இருந்த வானர வீரர்கள் உணர்ந்து கொண்டு அதிவிரைவில் புனிதமான தீர்த்தத்தைச் சேகரித்துக் கொண்டு வந்து வைத்து, சுவாமி! தூய நன்னீர் கொண்டு வந்திருக்கிறோம். இதைப் பருகலாம் என்றார்கள். ஸ்ரீராமர் அந்த ஜலகும்பத்தைக் கையில் எடுத்துச் சிவபூஜை செய்யாததை நினைத்துக் கொண்டு, வானர வீரர்களே, நான் சிவபூஜை செய்யும் வழக்கம் உடையவன் என்பதை நீங்களும் அறிவீர்களே! நான் இன்னும் சிவபூஜை செய்யாததால் நீர் அருந்துவது யுக்தமல்ல என்று கூறித் தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டுப் பார்த்திவலிங்கம் ஒன்றை உருவாக்கினார். அந்த லிங்கத்திற்கு ஆவாஹனம் முதல் நமஸ்காரம் இறுதியாகவுள்ள பூஜை முழுவதையும் கிரமப்படிச் செய்து சிவபெருமானைப் பலவிதத் தோத்திரங்களால் துதித்து. சங்கரா! இந்தக் கடல் நீர் விசேஷமானது, என் பகைவனான இராவணன் மிகவும் பலவான் என்வசமோ மனோவிகாரமுடைய வானரங்களே சேனைகளாக இருக்கின்றன. இந்தச் சமயத்தில் உம் திருவருள் கடாட்சம் மிகுதியாக வேண்டும். இராவணன் உமக்கு அன்பனாகையால் மானிடரால் ஜெயிப்பதற்கு அசாத்தியமாக இருக்கிறான், உலக உபகாரமான இந்த இராவண சங்கார விஷயத்தில் கருணைவைத்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துப் பிரதக்ஷிணம் செய்து சிவமந்திரத்தியானத்துடன் புனர்பூஜை செய்து, கல்லல வாத்தியத்தை முழக்கினார். அப்போது சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து சகல பரிவாரங்களோடும் உண்மை வடிவமாகக் காட்சியளித்து ஸ்ரீராமா உனக்குச் சுபம் உண்டாகுக என்று கூறினார் அவருடைய திவ்வியமங்கள தேஜோரூபத்தை ஸ்ரீராமர் தரிசித்து மீண்டும் முறைப்படி அர்ச்சனை செய்து பலவிதத்தோத்திரங்களால் துதித்து; வணங்கி இராவணனை ஜெயிக்கத்தக்க வரங்களை எனக்குத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார் சிவபெருமான் நீ விரும்பியவாறே உனக்கு ஜெயம் உண்டாகும் என்று கூறினார் ஸ்ரீராமர் தான் பருகும்படிச் சேகரித்து வைத்த ஜலத்தை சிவபெருமானுக்கு சமர்ப்பித்து அதைப் பருகி மீண்டும் சிவபெருமானை நோக்கி சுவாமி! இந்தத் திருவுருவத்தோடு இங்கேயே கோயில் கொண்டருளி எல்லோரையும் புனிதராக்க வேண்டும்! என்று பிரார்த்தித்தார் அவ்வாறே சிவபெருமானும் ஸ்ரீராமரது வேண்டுகோளுக்கு இணங்கி, இராமேஸ்வர என்ற பெயருடன் திரிலோகத்தாராலும் புகழும்படி அங்கு கோயில் கொண்டிருக்கிறார். இந்த இராமேஸ்வர ஜோதிர்லிங்கப் பிரபாவத்தைக் கேட்டவர்களுக்குச் சகல பாபங்களும் விலகும்.

56. குசுமையின் புத்திர பாக்கியமும் குசுமேஸ்வரர் மகிமையும்

தவமுனிவர்களே! தென்னாட்டில் தேவகிரி என்று ஒரு மலையுண்டு அதன் அருகில் ஒரு பிராமண அக்கிரஹாரம் உண்டு. அந்த அக்கிரஹாரத்தில் பாரத்வாஜகோத்திரத்தில் பிறந்த சுதன்மன் என்ற பெயருடைய சிவஞானியாகிய உத்தமப் பிராமணன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சுதேகை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள் அவள் அன்புள்ளவளாகவும் தர்ம மார்க்கத்தில் மனமுடையவளாகவும் பதிவிரதையாகவும் விளங்கினாள் சுதன்மன் வேதபூஜை அதிதி பூஜை முதலியவற்றைக் கிரமப்படிச் செய்துவந்தான். வேதவேதாந்தங்களைப் பாராயணஞ் செய்வான். திரிகாலத்திலும் அக்கினி காரியஞ் செய்வான். சூரியனுக்குச் சமானமான சிவதேஜஸோடு சீடர்களுக்கு. வேத அத்தியயனம் முதலியவற்றை நன்றாக உணர்த்தி யாசித்தவர்களுக்கு குறைவில்லாமல் கொடுக்கும் குறைவற்ற மனமுடையவனாக விளங்கினான் தனவானாகவும் நற்குணங்களுக்கும் இருப்பிடமானவனாகவும் விளங்கி வந்தான். அவனது ஆயுட்காலம் அதிகமாகச் சென்று விட்டதால் அவன் மனைவி சுதேகை என்பவளுடைய ருதுகாலம் முழுதும் வியர்த்தமாயிற்று அவன் சிவஞானியாக இருந்ததால் அவன் இந்த விஷயத்தை மனதிற் கொள்ளவில்லை. எனக்கு மோட்சம் கொடுப்பவன் சிவபெருமான். சம்சார துக்கத்திலிருந்து புனிதமாக்குபவனும் சிவபெருமானே என்று நினைத்து சுதன்மன் மனோதுக்கமற்று இருந்து வந்தான். அவனுடைய பத்தினி. சுதன்மையோ புத்திரப் பேறில்லாமல் போயிற்றே என்று துக்கப்பட்டுத் தினந்தோறும் தன் புருஷனைப் பார்த்து, பிராணநாதா! நமக்குச் சந்தானம் உண்டாகத் தக்க விஷயத்தில் பிரயத்தினம் செய்ய வேண்டும். என்று கூறினாள். அதற்கு சுதன்மன், தன் மனைவியைப் பார்த்து, பெண்ணே பிள்ளைகள் யார்? தாய் தந்தையர் யார்? பந்துக்கள் யார்? பிரியன் யார்? உயிருக்கும் உடலுக்கும் சொந்தம் என்ன? இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் யாவும் மாயாவிலாசமேயன்றி வேறல்ல எனவே பிள்ளை இல்லையே என்ற துக்கத்தை விட்டுவிட வேண்டும். தினந்தோறும் இந்த விஷயத்தை என்னிடம் சொல்லாதே! என்று கண்டித்துவிட்டு, சிவதருமங்களில் மிகவும் விருப்பம் உடையவனாய், பெருஞ் சந்தோஷத்துடன் சுகத்துக்கங்களை நீக்கிவந்தான்.

அவன் ஒரு நாள் தன் வீட்டிலிருந்து நீங்கித் தன் மனைவியோடு புண்ணிய சீலர்களை அடைந்து விநோதமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தான் அவன் பத்தினி சுதேகை மற்ற வேதியர் மனைவியரோடு பேசிக் கொண்டிருந்தாள். அப்போது மங்கையரில் ஒருத்தி அம்மா நீ பிள்ளை இல்லாதவள், புத்திரசந்தானம் இல்லாதிருக்கும் போதே இத்தனை கர்வத்துடன் இருக்கிறாய். இந்தக் கர்வத்தால் என்ன பயன்? நான் புத்திரபாக்கியம் பெற்றவள், என் செல்வத்தை என் புத்திரன் அனுபவிப்பான், உன் செல்வத்தை அனுபவிப்பவர் யார்? ஓ மலடி உன் பொருளை மன்னன் அனுபவிக்கவேண்டி வருமேயன்றி வேறெவர் அனுபவிப்பதற்கு உரியவர் என்று அவமதித்துப் பேசினாள் அதைக் கேட்ட சுதேகை மனவருத்தத்தோடு வீட்டுக்கு வந்தாள் அவள் கணவனும் சிறிது நேரத்தில் வீட்டுக்குத் திரும்பினான் சுதேகை தன் கணவனிடம் நடந்த விஷயத்தை வெளியிட்டாள்.

அவர்கள் என்ன சொன்னாலும் நமக்கு என்ன? சொல்வதை சொல்லட்டும் நீ ஏன் அவற்றைக் கவனிக்கிறாய்? என்று சுதன்மன் பலவாறாகவும் கண்டித்து, தான்மட்டும் வருந்தாமல் இருந்தான் இவ்வாறு தான் அவமான முற்றதைச் சகிக்காத அவன் மனைவி நாதா, எவ்வகையிலாவது நாம் ஒரு புத்திரனைத் தேடிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் யான் உயிர் துறப்பேன் என்று கூறினாள். அதனால் சுதன்மன் மனவருத்தம் அடைந்து, சிவாக்கினி வளர்த்து பூஜை முடித்து அதனருகே இரண்டு மலர்களை வைத்து வலது புறத்து மலர் கிடைத்தால் புத்திரபாக்கியம் உண்டாகும் என்று நியமணஞ்செய்து கொண்டு மனைவியை அழைத்து, பெண்ணே நீசிவபெருமானைத் தியானஞ் செய்து புத்திரபாக்கியம் உண்டாவதற்கு உனக்கு இஷ்டமான மலரை எடுத்துக்கொள். என்று கூறினான் உடனே சுதேகை என் கணவன் புத்திரப் பேறடைவதானாற் கிடைக்கவேண்டும் என்று நியமித்த மலரை நான் அடையவேண்டும் என்று சர்வலோக நாதனாகிய சிவபெருமானைத் தியானித்து விட்டு, அக்கினிதேவனையும் வணங்கி விட்டு தன் கணவன் வைத்த மலர்கள் இரண்டில் ஒன்றை எடுத்தாள். அது புத்திரஹீனமான மலராக இருந்ததால் சுதன்மா பெருமூச்சுவிட்டு பெண்ணே ஈஸ்வராக்ஞை இவ்வாறு இருக்கிறதே, என்று அவளைச் சமாதானப்படுத்தி, இனி நீ சிவத்தியானஞ் செய்யவேண்டும் என்று கூறித் தானும் புத்திர பேற்றில் விருப்பமில்லாமல் சிவத் தியானியாக இருந்து வந்தான்.

ஆனால் சுதேகையோ புத்திர விருப்பம் கொண்டவளாகவே இருந்தாள் அவள் தன் கணவனைப் பார்த்து நாதா! என்னிடம் புத்திர உற்பத்தி இல்லையானால் நீங்கள் வேறொரு பெண்ணை மணந்து கொண்டாலாவது நமது வமிசத்தை விருத்தி செய்யுமாறு புதல்வனைப் பெறவேண்டும். நீங்கள் மறுமணஞ்செய்து கொள்ள நான் சம்மதிக்கிறேன் நீங்கள் வேறு பெண்ணை மணந்து கொண்டால் அவளிடத்தில் புத்திர சந்தானம் உண்டாவதற்குத் தடையில்லை என்றாள் அதற்குச் சுதன்மன் , பெண்ணே நான் மறுமணஞ் செய்து கொண்டால் தற்காலம் நான் செய்து வரும் தருமங்களுக்கெல்லாம் இடையூறு உண்டாகும். உனக்கும் எனக்கும் பலவித மனஸ்தாபங்கள் வரும். ஆகையால் இனிமேல் நான் மறுமணஞ் செய்து கொள்ளச் சம்மதிக்கமாட்டேன் என்று சொன்னான். சுதேகை! தன் தமையனது மகளாகிய குசுமை என்ற கன்னிகையை மணஞ்செய்து கொள்ளவேண்டும் என்றாள் அதற்கு சுதன்மன் நான் இவளை மணம் செய்து கொள்வது இப்போது உனக்குச் சம்மதமாக இருக்கிறது நான் மணஞ்செய்து கொண்டு இவள் பிள்ளை பெற்றால் அப்போது உனக்கு மனவருத்தம் ஏற்படும் நீயே இவளோடு சண்டை செய்வாய் அதனால் இந்தத் திருமணம் வேண்டாம் என்றான் ஆனால் சுதேகை விடாமல் இவள் என்தமையன் மகள் என்மருகி ஆகையால் நீங்கள் இவளை மணஞ் செய்து கொள்வதால் நான் இவளைக் கண்ணியமாக நடத்தி வருவேன். எனக்கு புத்திர சந்தான விருப்பம் இருப்பதால் உங்கள் இருவருக்குமே நான் ஊழியஞ் செய்து வருவேன். நீங்கள் கட்டாயம் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்றாள்.

சுதன்மன் தன் பத்தினியின் விருப்பப்படியே மறுமணஞ் செய்து கொண்டு குசுமை என்ற தன் இளைய மனைவியைப் பார்த்து இந்தச் சுதேகையோடு நீ சண்டையிடாமலும், இவளைப் பிரியாமலும் அன்போடு பாதுகாக்க வேண்டும் என்று மூத்தாள் கையைப் பிடித்து இளையாளின் கையில் ஒப்புவித்தான். இளையாளும் கணவன் சொன்ன வார்த்தைகளைக் குருமொழியாக ஏற்றாள். மூத்த மனைவியான சுதேகையும் தன் தமையன் மகள் வயதில் சிறியவளாக இருந்ததாலும் தானே தன் கணவனுக்கு மணஞ்செய்வித்த பெண்ணனதாலும் வீட்டு வேலைகளையெல்லாம் தானே செய்து வந்தாள்.

ஒரு காலத்தில் சுதன்மன் தன் இளைய மனைவியான குசுமையைப் பார்த்து குசுமா! நீ தினந்தோறும் சிவபூஜையைத் தவறாமல் செய்துவர வேண்டும் என்று சிவபூஜைக்கிரமத்தையும் சொல்லிப்போதித்தான் குசுமையும் அவ்வாறே நாள்தோறும் நூற்றியொரு பார்த்திபலிங்கங்களைப் பூஜித்து அருகிலிருந்த ஒரு தடாகத்தில் விட்டு வருவாள். அவள் அவ்வாறு ஒவ்வொரு நாளும் தவறாமல் செய்து வரும்போது அவள் பூஜித்த லிங்கங்களின் தொகை லக்ஷமாயிற்று அப்பொழுது சிவபெருமானுக்குக் கிருபையுண்டாகி குசுமை கர்ப்பம் தரித்துச் சுப்பிரியன் என்ற புத்திரனைப் பெற்றாள் சுதன்மன் மகப்பேற்றையடைந்த மகிழ்ச்சியில் காலத்தை அனுசரித்து தன் இளைய மனைவி மீதும் புத்திரன் மீதும் அதிகப்பற்றுதல் வைத்தான். அதைக் கண்டதும் அவளது மூத்தமனைவி சுதேகை குழம்பினாள். தன் கணவன் குசுமையிடத்திலும் அவளுடைய புத்திரனிடத்திலும் அதிக அன்புடனிருப்பதால் மனவருத்தங் கொண்டு முன்பு இருந்த அன்பு சிறிது சிறிதாகக் குறைந்து பெரும்பகை கொள்ளலானாள். சவுனகாதி முனிவர்களே இனி நடந்தவற்றைக் கேளுங்கள்.

சுதன்மனுடைய மனைவியர் இருவரில் இளையவளான குசுமையையும் அவளது புத்திரனையும் எல்லோரும் கண்டு அன்போடு பேசுவதையும் பழகுவதையும் பார்த்து சுதேகையின் மனம் பொறாமையால் நெருப்பாயிற்று. அந்தக் குமாரன் சிவானுக்கிரகத்தால் பிறந்தவனாக இருந்ததால் வித்தை, புத்தி, வயது முதலியவற்றில் படிப்படியாக விருத்தியாவதைக் கண்டு உறவினராகிய வேதியர்கள் அவனுக்குப் பெண் கொடுக்க விரும்பினார்கள். எனவே அவனுக்கு ஒரு சுபதின சுபலக் கினத்தில் விவாகம் நடந்து முடிந்தது. சுதன்மன் குசுமையைத் திருமணம் செய்து கொண்டதால் தான் அடைய வேண்டிய புத்திரசந்தானத்தை அடைந்தாள் வீட்டுக்கு வருகிற உறவினர்கள் யாவரும் இளையாளிடத்தில் பேசுவதும் அன்பு செலுத்துவதுமாக இருந்தார்கள். மூத்தாளிடத்தில் யாரும் அக்கறை செலுத்தவில்லை இதனால் சுதேகை மிகவும் வருந்தினாள். சுதன்மன் தன் மகனையும் மருகியையும் குசுமையின் இருதொடைகள் மீது குதூகலிப்பதைப் பார்த்து மூத்தாள் சுதேகை மிகவும் எரிச்சலுற்றாள். பிறகு அழுது கொண்டு கீழேவிழுந்தாள்.

சுதன்மன் உண்மையில் தன் மூத்த மனைவியான அவளிடம் அதிக அன்பு வைத்திருந்து கூட, சுதேகையிடத்தில் குசுமை மரியாதையாக நடந்துங்கூட சுதேகையின் மனத்தில் ஏதோ ஒரு வருத்தம் குடி கொண்டிருந்தது. அதைக் கண்ட குசுமை ஒரு நாள் அவளைப் பார்த்து நீ ஏன் இப்படியிருக்கிறாய்? உன் மருகி உன் மகன் என்ற எண்ணமில்லையா உனக்கு? கணவரோ உன் மீது அன்பு வைத்திருக்கிறார் இப்படியிருந்தும் நீ வருந்துவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டாள் ஆனால் சுதேகையின் கோபந்தணியவில்லை அவள் குசுமையின் கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை குசுமை கண்ணீர்விட்டு அழுதால் ஒழியத் தன் துக்கமானது சிறிதும் தணியாது என்று சுதேகை கருதினாள் அதற்கு என்ன செய்யலாம் என்பதையே அவள் அடிக்கடி யோசித்துக் கொண்டிருந்தாள். அதன் முடிவாக எப்படியாவது தன் சக்களத்தியின் மகனான சுப்பிரியனை மட்டும் கொன்றுவிட வேண்டும் அதற்கு மேல் நடப்பது நடக்கட்டும்? என்று தீர்மானித்தாள்.

ஒருநாள் குசுமையின் குமாரனும் மருமகளும் தூங்கிக்கொண்டிருக்கும் போது குமாரன் சுப்பிரியனைச் சுதேகை அரிகையால் பல துண்டுகளாக வெட்டி, அப்பொழுதே ஒருவரும் அறியாதவாறு அவற்றை எடுத்துக் கொண்டு, குசுமை சிவபூஜை செய்த

லக்ஷம் சிவலிங்கங்களையும் விடுத்த அந்தத் திருக்குளத்தில் ஒரு பக்கத்தில் கொட்டிவிட்டு வீட்டிற்கு வந்து ஒன்றும் அறியாதவளைப் போலச் சயனித்துக்கொண்டிருந்தாள். பொழுது விடிந்தது குசுமை விழித்து எழுந்து ஸ்நானம் செய்து வீட்டு வேலைகளை முடித்து சிவபூஜையில் ஈடுபட்டாள் அவள் கணவன் சுதன்மனும் எழுந்து ஸ்நானம் செய்து நித்ய கருமம் சிவபூஜை முதலானவற்றைச் செய்து கொண்டிருந்தான். மூத்த மனைவி சுதேகையும் எழுந்தாள். தினமும் வருத்தமாய் இருப்பது போல இராமல் மனத்திருப்தியாக வீட்டு வேலைகளில் முனைந்தாள். மருமகள் நித்திரை தெளிந்து எழுந்து பக்கத்தில் தன் கணவனான சுப்பிரியனை காணமலிருப்பதையும் இரத்தம் சிந்தியிருப்பதையும் அவயங்களைத் துண்டித்த துண்டுகளிற் சில கீழே விழுந்து கிடப்பதையும் கண்டு அலறித் துடித்து மிகவும் துக்கத்துடன் தன் மாமியை கூப்பிட்டு உன் மகன் எங்கே? பக்கமெல்லாம் இரத்த மயமாக இருப்பது ஏன்? அவயவத்துண்டுகள் காணப்படுவது ஏன்? என்று பதறினாள் மூத்தாள் அதைக்கேட்டு உள்ளூரச் சந்தோஷப் பட்டும் வெளியே காட்டிக் கொள்ளாமல் ஐயோ! அப்படியா! முடிந்தது என்று மேலுக்கு அழுதாள். இளையாள் குசுமை தன் மருமகளின் முறைப்பாட்டைக் கேட்டுங்கூடச் சிவபூஜையை விடாமல் செய்து தியானத்தில் இருந்தாள். எனவே தியானத்தைக் கைவிடாமலும் மனமிளையாமலும் இருந்தாள் சுதன்மனும் தன் சிவத்தியானத்துடன் சிவயோகத்தில் இருந்தான் அவர்களது சிவத்தியானம் முடிவதற்கு இரண்டு ஜாமங்கள் ஆயின. அவர்கள் இருவரும் புத்திரன் மடிந்து போனதைத் தெரிந்து கொண்டு; சிறிதும் துக்கப் படாமல்; இதுவரை நாம் யாரை உபாசனை செய்து வந்தோமோ, அவரே நம்மைத் திருப்தி செய்ய நம் புத்திரனை எழுப்பித்தரவேண்டும்! என்று கருதி மனந்தளராமல் இருந்தார்கள் அவ்விதம் அண்ணலான சிவபெருமான் நம்மை இரட்சிக்கா விட்டால் நமது கர்மானுசாரம் இவ்வளவே என்று எண்ணிக் கொள்வோம் மலர் கொய்பவன் கட்டிக் கொடுத்த மாலையானது சிறிதுநேரத்தில் வாடி விடுமானால் அதன் தன்மை அதுவே என்று எண்ணுவது போல என்று நினைத்து மவுனமாக இருந்தார்கள். குசுமை வழக்கம் போலத் தான் பூஜித்த லிங்கங்களை எடுத்துக் கொண்டு திருக்குளத்துக்குப் போய் அதில் அவற்றை விட்டுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது மூத்தாளால் துண்டித்து, எறியப்பட்ட புத்திரன் அந்தக் குளத்தில் உயிர் பெற்று எழுந்து அம்மா! நானும் வருகிறேன். நான் இறந்து பிழைத்தேன் என்று கூவினான் அதைக் கேட்டதும் குசுமை முன்பு போலவே மகிழ்ந்தாள் அப்போது சிவபெருமான் அவள் முன்பு தோன்றி நான் உனக்கு வரம் தருகிறேன். உன் மகனை மூத்தாள் சுதேகையே கொன்றாள் நான் அவனை உயிர்ப்பித்துக் கொடுத்தேன் அந்தச் சுதேகையை எனது திரிசூலத்தால் சஞ்காரஞ் செய்கிறேன் என்றார். அப்போது குசுமை சர்வேஸ்வரா! அவள் என் அத்தை என் கணவரின் பத்தினி, எனக்கு மூத்தவள் அபகாரஞ் செய்தவர்களுக்கு உபகாரஞ் செய்வதே உயர்வைத் தரும், தங்களது தரிசனத்தாலேயே அவளது பாவங்கள் எல்லாம் ஒழியும். அவளுக்கு நல்ல புத்தி உண்டாக்கும். அவளுக்கு தீங்கு செய்வது யுக்தம் அல்ல! என்றாள் அவளைச் சிவபெருமான் நோக்கி குசுமையே! இனி ஏதேனும் வரம் வேண்டுமானால் கேட்டுக்கொள் என்றார். அதற்கு குசுமை எம்பெருமானே! எனக்கு வரம் கொடுப்பதானால் தாங்கள் உலகங்களைக்காத்தருள்வதற்காக இத்தகைய சுந்தரவடிவத்தோடு இவ்விடத்திலேயே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள் சிவபெருமானும் அவ்வாறே உன் பெயரால் குசுமேஸ்வரன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளுகிறேன் நீ சிவலிங்கங்களை விடுத்த இந்தத் தடாகமே ஓர் ஆலயமாகுக! உங்களுக்கு ஒருவனே புத்திரன் அவன் மூலமாக இந்த வமிசத்தில் அநேக புத்திரர்கள் உண்டாகி, அவர்கள் தீர்க்க ஆயுளை உடையவர்களும் வித்துவான்களும், புத்திமான்களும் தனவான்களும் யாகாதிகாரிகளும் மனைவி; புத்திரர்களுடன் கூடியவர்களுமாக விளங்குவார்கள் உன் வமிசம் விருத்தியடைக என்று வரம் கொடுத்து சிவலிங்கரூபமடைந்து குசுமேஸ்வரர் என்ற பெயரால் அந்தத் திருக்குளத்தையே திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருக்கிறார். சுதன்மனும் குசுமையும் சுதேகையை அழைத்து சிவபெருமானையும் பார்வதிதேவியையும் நூற்றொரு பிரதக்ஷிணம் செய்யச் சொல்லி; அவள் கையால் சிவபூஜை செய்வித்து சிவாநுக்கிரகத்தால் அவள் மனதிலிருந்த பொறாமையை போக்கடித்து யாவரும் சுகித்திருந்தார்கள் இத்தகைய பிரதாபத்தையுடைய குசுமேஸ்வரரைத் தரிசித்தவுடனேயே சகல பாபங்களும் ஒழியும்; சுக்கிலபக்ஷத்துச் சந்திரன் போலச் சம்பத்துக்கள் விருத்தியடையும்

முனிவர்களே! இதுவரையில் நீங்கள் கேட்ட ஜோதிர் லிங்கங்களின் சரிதங்களைச் சொன்னேன்.

இவ்வாறு சூதபுராணிகர் சொன்னதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி மகாத்மாவே! தாங்கள் கூறிய சரிதங்களைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஆயினும் மேலும் மேலும் சிவசரித்திரங்களையே நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்றார்கள். சூதமுனிவர் ஆனந்தமயமாய்ச் சிவத்தியர்னஞ் செய்து சொல்லத் தொடங்கினார்.

57. இரணியாக்ஷன், இரணிய கசிபு கதைகள்

முனிவர்களே! சிவபெருமானின் திவ்ய கல்யாணகுணங்களை வருணித்துச் சொல்ல யாராலும் முடியாது. ஆகாயத்திலிருக்கும் நக்ஷத்திரங்களையும் உலகத்தில் இருக்கும் மணலையும் மழைத்துளிகளையும் எண்ணி முடித்தாலும் முடித்து விடலாம். சிவபெருமானின்லீலா விநோதங்களையும் குணங்களையும் கணக்கிட யாரும் வல்லவரல்லர். ஆயினும் நீங்கள் அனைவருமே என்னை விரும்பிக் கேட்பதால் என் புத்திக்குத் தோன்றியவரையில் என் குருநாதரான வியாசபகவான் எனக்குச் சொன்னது போலச் சொல்லுகிறேன் கேளுங்கள். முன்பு ஒரு காலத்தில் நரசிங்க ரூபம் எடுத்த மகாவிஷ்ணுவானவர் இரணிய கசிபனைச் சங்கரித்தும் தமது கோபாக்கினி தணியாமல் எவ்வௌர் எத்தகைய ஸ்தோத்திரம் செய்தும் அடங்காமல் இருந்தார் அதைக் கண்ட தேவர்கள் அனைவரும் சிவபெருமானைப் பிரார்த்தித்தார்கள் சிவபெருமான் சரபரூபம் அடைந்து நரசிங்கத்தைக் கண்ட மாத்திரத்தில், நரசிங்கம் சில பெருமானிடத்தில் ஐக்கியமடைந்தது. இவ்வாறு சூதபுராணிகர் கூறியதும் நைமிசாரணிய வாசிகள் அவரை நோக்கி, ஞானமூர்த்தியே! நரசிங்க அவதாரச் சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள் சூதமுனிவர் அதைச் சொல்லத் தொடங்கினார். ஒரு காலத்தில் மகாலக்ஷ்மி மகாவிஷ்ணுவைப் பார்த்து சுவாமி! தங்கள் திருவுருவம் இத்தனைச் சவுந்தர்யமாகவும் மிகவும் கோமளமாகவும் இருக்கிறதே இத்தகைய சரீரத்தோடு தங்களால் எப்படி போர் புரிவதற்கு இயலும்? என்று கேட்டாள். அதற்கு திருமால் பெண்ணே! நீ விரும்பினால் நான் போர் புரிவதை விரைவில் பார்ப்பாய்! என்று சொன்னார்.

அவருடைய துவாரபாலகர்களான ஜய விஜயர் என்னும் இருவர் முன்பொரு சமயம் சனத்குமார முனிவர் முதலானவர்களோடு போராடிய போது மகாவிஷ்ணு அங்கே சென்று, நீங்கள் இம்முனிவர்களை வழிமறித்தது தவறு என்று தடுத்து முனிவர்களை நோக்கி, நீங்கள் துவாரபாலகர்களைச் சபிக்கலாமா? அதுவும் அவர்கள் தங்கள் பதவியை இழந்து உலகில் பிறந்து துன்புறும்படிச் சபிக்கலாமா? அவர்களுக்கு நீங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்றார். முனிவர்கள் திருமாலைப் பார்த்து பரமாத்மாவே! இவர்கள் உன்னை பக்தி செய்வதான ஜன்மங்கள் எடுத்தால் ஏழு பிறவிகளிலும் உன்னை பகைகொள்வதான பிறவிகளை எடுத்தால் மூன்று பிறவிகளிலும் மீண்டும் தங்கள் பதவிகளை அடைந்து உன்னிடம் வந்து சேர்வார்கள், இதில் இவர்கள் விரும்புவது எதுவோ, அதை இவர்கள் அடையட்டும் என்றார்கள். அதற்கு துவாரபாலகர்களான ஜய விஜயர்கள் இருவரும் நாங்கள் ஏழு பிறவிகள் வரையில் ஸ்ரீலக்ஷ்மிபதியைப் பிரிந்திருக்க மாட்டோம். ஆகையால் மூன்று பிறவிகள் வரை அவரைப் பகைத்தாயினும் எங்கள் பதவியை அடைகிறோம் என்றார்கள். அவர்களது விருப்பமே விஷ்ணுவின் விருப்பமாக இருந்தது. உடனே ஜய விஜயர்கள் தங்கள் பதவியிலிருந்து நீங்கி உலகத்தில் காசிபரது வம்சத்தில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற இராட்க்ஷதர்களாகப் பிறந்தார்கள். சனகாதி முனிவர்கள் முதலிய நால்வரும் பிரகலாதன் முதலியவர்களாகத் தோன்றினார்கள். ஸ்ரீவிஷ்ணுவே ஹிரண்ய கசிபனைச் சங்கரித்து சாப விமோசனமடையச் செய்வதற்காக நரசிங்க ரூபமெடுத்து வந்தார். வேறொரு பிறவியில் அவர்களே, இராவண கும்பகர்ணர்களாகப் பிறந்தார்கள். அப்போது நரசிங்க மூர்த்தியே தசரத குமாரன் ஸ்ரீராமனாக வந்தார். அந்த அவதாரத்தின் போது சனகாதி முனிவர்களே விபீஷணர் முதலியவர்களாகப் பிறந்தார்கள் தேவர்களே சுக்ரீவ, அங்கதாதி வானர வீரர்களாக வந்தார்கள். மூன்றாவது பிறவியில் அத்துவாரபாலர்களே சிசுபால தந்த வக்கிரர்களாகத் தமகேஷன் என்ற அரசர் குலத்தில் பிறந்தார்கள். அப்போது விஷ்ணு மூர்த்தியே கிருஷ்ண அவதாரமெடுத்தார். அப்போது சனகாதி முனிவர்கள் அக்குரூரர் முதலியவர்களாகத் தோன்றினார்கள். இனி பாபங்களை ஒழிக்கத் தக்கதான நரசிங்கமூர்த்தியின் சரித்திரத்தை உங்களுக்கு சொல்லுகிறேன் கேளுங்கள்.

முனிவர்களே! ஹிரண்யாக்ஷன் இளைஞனாக இருக்கும்போதே விளையாடலுக்காகச் சூரியனை அழைப்பான். அவன் காடுகளிலுள்ள சிங்கங்களையும் மதயானைகளையும் பிடித்து அவற்றின் மீது ஏறிச் சவாரி செய்வானே தவிரச் சாதாரணக் குதிரைகள் மீது ஏறிச் சவாரி செய்வதில்லை. சண்டை செய்ய விரும்பினால் சிங்கம் முதலிய துஷ்ட மிருகங்களுடன் சண்டை செய்வான் இத்தகைய பலபராக் கிரமசாலியாக இரண்யாக்ஷன் இருந்ததால் அவன் தேவர்களைத் துன்புறுத்த வேண்டும் என்று நினைத்தான். சாமானிய அரக்கர்களைப்போல அடிப்பதும் பீடிப்பதும் வேதியர்களையும் யாகங்களையும் அழிப்பதும் சரியல்ல என்று எண்ணி, உலகத்தையே ஒரு பாயைப் போலச் சுருட்டி, நாயானது மாவு முட்டையை வாயில் கவ்விக் கொண்டு அனாயாசமாக ஓடுவது போல இரண்யாக்ஷன் பூமியையேச் சுருட்டி வாயில் கவ்விக் கொண்டு ஜலத்தினுள் மூழ்கியிருந்தான். அதனால் பிரமதேவர் மிகவும் வருத்தம் அடைந்து, விஷ்ணுமூர்த்தியைத் துதித்தார். விஷ்ணு அவருடைய நாசியிலிருந்து வராக உருவத்தோடு அவதரித்து, விரைவில் விருத்தியடைந்து, அங்கிருந்து உலகத்தை மீட்கச் சென்றார், உலக முழுவதும் நீர் மயமாக இருப்பதைக் கண்டு அதில் பிரவேசிக்க நினைத்தார்.

ஸமுத் பந்நஸ்ததா விஷ்ணுர் நாஸார ந்த்ராச்ச ப்ரஹ்மண:
வராஹம் ரூபமாஸ் தாயக்ரமேண விருத்தி தாங்கத; வராஹ உவாச
யாவச்ச யுத்யததேந தாவஜ் ஜலவிசேஷணம்
கர்த வ்யஞ்சத் வயாசாத்ர இத்யே வங்க்த்ய தேமயா
ததஸ் சாஞ்ஜலிநாதேந ஜலந்நீத்வா முகேததா
பீதஞ்சறு ஷிணாதாவத் யாவத் யுத்தம் ஸமாப்யதே!

அப்போது நாரத முனிவர் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் அங்கு வந்து வராஹ மூர்த்தியை பார்த்து  நான் சந்தியாவந்தனம் செய்ய உத்தரவளிக்க வேண்டும் என்றார். வராஹமூர்த்தி அவரைப் பார்த்து நாரதரே! நான் ஹிரண்யாக்ஷனைக் கண்டு அவனுடன் சண்டை செய்து அவனைச் சங்கரிக்கும் வரையில், இந்த ஜலத்தை உலர்த்துவிக்க வேண்டும். இது உம்மாலேயே செய்யத் தக்கது? என்றார் நாரத முனிவர். அதற்கு இணங்கி, தமது இருகரங்களாலும் தண்ணீரை எடுத்து தன்வாயிற் பெய்து கொண்டு வராஹமூர்த்திக்கும் ஹிரண்யாக்ஷனுக்கும் போர் முடியும்வரை வைத்துக் கொண்டிருந்தார். பிறகு வராக மூர்த்தி ஹிரண்யாக்ஷனைக் கண்டு பிடித்து அதனுடன் ஜலத்தில் (நாரதர் சமுத்திர பானஞ்செய்து மிகுந்து சேற்றுடன் கலந்த தண்ணீரில்) ஐந்நூறு ஆண்டுகளும், உலகத்தில் ஐந்நூறு ஆண்டுகளும் பெரும் போர் செய்து அவனைச் சங்கரித்து பூமியை மீட்டுத் தம் வாயிலேயே எடுத்துக் கொண்டு வந்து பிரமனிடம் ஒப்படைத்து விட்டுத் தம் திருவுருவை மறைத்தார்.

விஷ்ணுமூர்த்தியால் ஹிரண்யாக்ஷன் இறந்தான் என்ற செய்தியை அறிந்த  ஹிரண்யகசிபன் தன் தம்பியைக் கொன்ற விஷ்ணுவைச் சங்கரித்து தன் துக்கத்தையொழிக்க கருதினான். எனவே அவன் பிரமதேவனைக் குறித்துப் பத்தாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். அதனால் அவன் மீது மரங்கள் முளைத்து நாற்புறங்களிலும் கிளைத்துப் பெருவனமாயிற்று. அம்மரங்களில் பலவகைப் பறவைகள் கூடிகட்டி வாசஞ்செய்து முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரித்தன. ஆயினும் ஹிரண்யகசிபோ தன் தவத்திலிருந்து நீங்கவில்லை அவனது தவாக்கினி, தேவலோகத்தையடைந்து கொளுத்தியது. தேவர்கள் அந்த அனலைத் தாங்க முடியாமல். பிரமதேவனிடம் சென்று ஹிரண்யாக்ஷன் உம்மைக் குறித்து கடுந்தவம் செய்கிறான். நீங்கள் சும்மா இருப்பது சரியல்ல அவனது தவச் சுவாலையால் நாங்கள் அழிவுற நேரிடும் என்று சொல்லி முறையிட்டார்கள். அதனால் பிரமதேவர் ஹிரணியனுக்கு வரங்கொடுக்க நினைத்து, அவன் முன்பு தோன்றி, உனக்கு வேண்டிய வரம் என்ன? என்று கேட்டார். அதற்கு ஹிரண்யகசிபன் சிருஷ்டிகர்த்தாவே! உமது படைப்பான இந்த உலகத்தில் எவன் ஒருவனும் எத்தகைய ஆயுதத்தாலோ இரவிலோ பகலிலோ என்னைக் கொல்லக்கூடாது இத்தகைய வரமே எனக்கு வேண்டும் என்றான். பிரமதேவர் அவ்வாறே வரங்கொடுத்து விட்டுத் தம் உலகையடைந்தார். ஹிரண்யகசிபன் சோணிதபுரியை அடைந்து சகல தைத்தியர்களையும் திரட்டி, அசுரர்களே! நீங்கள் அனைவரும் எம் கட்டளைக்கு அடங்கி இருக்கவேண்டும். அவ்வாறில்லையென்றால் சங்காரம் செய்துவிடுவோம். எம் கட்டளைக்கு அடங்கியவர்களைக் காப்பாற்றுவோம் சுவர்க்கலோகம் மத்தியலோகம் ஆகிய அனைத்தும் எங்களால் ஜெயிக்கப்பட்டன. திரிலோகங்களையும் தன் வசமாக்கிய ஹிரணியகசிப மஹாராஜன் ஏகச்சக்கராதிபதியாக விஷ்ணுத் துவேஷத்துடன் அரசு செய்து விருகிறான். இனி எங்கும் யாக காரியங்களை யாரும் செய்யக்கூடாது என்று யாவரும் அறிய முரசறையுங்கள் அதுபோலவே சுவர்க்கத்திலும் பாதாலத்திலும் மற்ற உலகங்களில் எல்லாம் கைப்பற்றப்பட்டன. போர்புரிய விரும்புவோர் போர் செய்ய வரலாம். சரணாகதி என்று வந்தவர்களை நாங்கள் காப்பாற்றுவோம் என்று முரசறையுங்கள் என்றான். அவர்களும் அவ்வாறே மூவுலகங்களிலும் சென்று யாவரும் அறிய முரசு அறைந்தார்கள். இவ்வாறு ஹிரண்யகசிபன் எவரும் எதிர் இன்றி ஆட்சிபுரிந்து வந்தான்.

சிறிது காலத்திற்கெல்லாம், விஷ்ணுத் துவேஷங் கொண்ட ஹிரண்யகசிபனுக்கு விஷ்ணு பக்தியுடைய பிரகலாதன் என்னும் புத்திரன் ஒருவன் பிறந்தான். அந்தச் சிறுவன் பிள்ளைமைத்தனத்தால் வாய்விட்டு அழும்போது விஷ்ணுவின் திருநாமங்களையே கூறும் இயல்பையுடையவனாக இருந்தான். அவன் ஐந்து வயதையடைந்தவுடன் ஹிரணியகசிபன் சகல வாத்தியங்களும் முழங்க அசுரர் சேனைகள் புடைசூழ அவனுக்கு வித்தியாப்பியாசம் செய்விக்க வேண்டி அசுரகுருவின் வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து, அவனுக்கு வித்தியாப்பியாசம் செய்விக்கும்படிக் கட்டளையிட்டான். அசுரகுரு வழக்கம் போல; அந்தச் சிறுவனைப் பார்த்து முதலில் ஹிரண்யாய நம என்று சொல்லும்படிச் சொல்ல பிரகலாதன் ஓம நமோ நாராயணாய என்று சொன்னான். உபாத்தியாயர், அப்பா குழந்தாய்! அப்படிச் சொல்லாதே! சர்வலோகங்களுக்கும் மகாப் பிரபுவாகிய உன் தந்தையின் பெயரையே முதலில் தோத்திரஞ் செய்ய வேண்டும் என்றார். பிரகலாதன் மீண்டும் அப்படியே சொல்ல அசுரகுரு ஹிரண்யகசிபனைப் பார்த்து; அசுரேஸ்வரா! இது முதல் நாளாகையால் இதுவரையில் இருக்கட்டும். நாளையத்தினம் நான் கற்பிக்கிறேன் சிறுவனும் சரியாகச் சொல்லுவான் என்றார். ஆனால் பிரகலாதனோ இன்றல்ல நாளையல்ல என்றைக்கும் நான் விஷ்ணு நாமத்தைத் தவிர வேறு எதையும் சொல்ல மாட்டேன் என்றான் அசுரர்கள் பிரகலாதனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். சில தினங்கள் சென்ற பிறகு, ஒரு நாள் ஹிரண்யகசிபன் தன் மகனை அழைத்து தொடை மீது உட்காரவைத்துக் கொண்டு குழந்தாய் பிரகலாதா! இதுவரையில் என்ன வாசித்தாய்? அதைச் சொல் என்றான். அதற்குப் பிரகலாதன் நான் ஓம் நமோ நாராயணாய என்று படித்தேன்; என்றான். உடனே ஹிரணியகசிபன் அளவிலாத கோபம் கொண்டு உபாத்தியாயரை அழைத்து வரச் செய்து என் பிள்ளைக்கு என்ன கற்பித்தாய்? என்று குமுறினான்.

அசுரகுரு அதிபா! உம் புத்திரனால் என் பள்ளி மாணவர்கள் எல்லோருமே கொடியவராயினர். இது என்னால் ஆகத் தக்கது அல்ல இவன் எனக்கு அடங்கமாட்டான்! என்று உபாத்தியாயர் சொல்லிவிட்டார். அதன் பிறகு ஹிரணியன் தன் மனைவியான கயாதுவைக் கூப்பிட்டு உன் பிள்ளை படித்ததைக் கேட்டுக் கொள்! அதற்கு ஏற்பத் தண்டனை கொடு; என்றான். கயாது தன் செல்வனைக் கூப்பிட்டு குழந்தாய்! இனிமேல் ஹரிநாமத்தைச் சொல்லாதே! உன் தந்தை மூவுலகங்களுக்கும் தலைவராக இருக்கிறார் உன் சம்பத்து எப்படிப்பட்டது? அசுரர்கள் எவ்வளவு கவுரவமானவர்கள்? இதை விட்டு விட்டு ஹரி நாமத்தை ஏன் விரும்புகிறாய்? என்றாள். அதற்குப் பிரகலாதன் தாயே! நீ என்ன சொன்னாலும் பயன்படாது. ஒருபோதும் நான் விஷ்ணுவின் நாமத்தை மறக்கவேமாட்டேன். ஒரு யானை தன்னைக் கொசு கடிக்கும் என்று பயந்து அரசனின் மாளிகையை விட்டுப் போய் விடுமா? இந்த நீசன் ஹிரணியனின் வலிமை எவ்வளவு? ஸ்ரீவிஷ்ணுவின் வலிமை எவ்வளவு? இதையறியாமல் நான் ஹரி பக்தியை விட்டு விடுவேனா? நாவினால் விஷ்ணுவைத் துதிப்பதும், காதுகளால் ஹரிநாமங்களைக் கேட்பதும். தலையால் விஷ்ணுவை வணங்குவதும். கையால் பூஜிப்பதும். பாதங்களால் வலம் வருவதுமாக என்னுடைய அவயவங்களையெல்லாம் விஷ்ணுமூர்த்திக்கே சமர்ப்பித்து, அவருடைய கிருபையை அடையவே நான் விரும்புகிறேன். எது நடந்தாலும் நடக்கட்டும் நான் ஹரிநாமத்தை விடமாட்டேன் என்று தீர்மானமாகச் சொன்னான். அவன் தாய் பெருந்துயரத்துடன் அவனைத் தன் கணவனிடம் அழைத்துச் சென்று இவன் எனக்கு அசாத்தியனாகயிருக்கிறான்! என்றாள். ஹிரணியன் கோபங்கொண்டு அமைச்சர்களை அழைத்து மந்திரிகளே! நமது அசுர குலத்துக்கே ஒரு நெருப்பு புத்திரனாகப் பிறந்தது குலத்துக்கே விரோதியான இந்தச் சிறுவனை எந்த வகையிலாவது நெருப்பிலிட்டோ, ஆயுதங்களால் துண்டித்தோ, விஷமூட்டியோ, ஜலத்தில் மூழ்கடித்தோ கொன்று விடுங்கள். இவனே விஷ்ணுவை விட்டு விடுகிறானா அல்லது உயிரை விட்டு விடுகிறானா என்று பார்ப்போம் என்று கட்டளையிட்டு அவர்கள் வசம் பிரகலாதனை ஒப்புவித்தான், அவர்கள் அரசன் இட்ட கட்டளைப்படியே பிரகலாதனைப் பலவிதமாகவும் தண்டிக்கலானார்கள்.

அமைச்சர்கள் பிரகலாதனை அழைத்துச் சென்று தண்டலாளர்களால் நெருப்பில் இடுவித்தனர். ஆனால் அந்த நெருப்போ பிரகலாதனுக்குக் குளிர்ந்திருந்தது. பிறகு அவனை ஜலத்தில் வீசி யெறிந்தார்கள் உடனே ஜலம் இருந்த இடம் மேடாயிற்று. மலைகளின் உச்சியிலிருந்து பிரகலாதனை உருட்டி விட்டார்கள். அது பிரகலாதனுக்குப் பஞ்சு மெத்தை போலிருந்தது அவனுக்கு விஷ மூட்டினார்கள் அது அமிர்தமயமாக இருந்தது. ஆயுதங்களால் அவனை அடித்தார்கள் அவை ஹரிநாமத் தியான பலத்தால் புஷ்பங்கள் போலிருந்தன. அவர்கள் அவனுக்கு அளித்த தண்டனைகள் எல்லாமே பயன்படாமற் போயின. பிரகலாதன் மேலும் மேலும் ஹரிநாமப் பஜனையோடு மகிழ்ச்சியாக இருந்தான். அமைச்சர்கள் அனைவரும் பிரகலாதனுக்கு தாம் செய்த தண்டனைகள் பயன்படவில்லையே என்பதால் துக்கமும் அவனுக்குத் துன்பமுண்டாக வில்லையே என்பதால் வியப்பும் அடைந்தார்கள். அசுர ராஜனிடம் இந்த நிலையை எப்படிச் சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தார்கள் அப்போது பிரகலாதன் அவர்களைப் பார்த்து நீங்கள் எப்படிக் கஷ்டப்படுத்தினாலும் எனக்கு ஒரு வருத்தமும் உண்டாகாது ஏனென்றால் விஷ்ணுவிற்கு ஜலமே சயனஸ்தானம் அது என்னை என்ன செய்யும்? அக்கினியே விஷ்ணுவின் திருவாய். விஷமும் லக்ஷ்மியும் திருப்பாற்கடலில் பிறந்தவை, விஷமோ என் மாமன் ஹிரணியாக்ஷனால் துன்புற்ற பூமியானது விஷ்ணுமூர்த்தியால் சுகம் பெற்றது அதுவும் என்னை ஒன்றுஞ் செய்யாது. உலகம் முழுவதும் நானும் நீங்களும் பராதீனமுடையவர்கள் என்னை உங்களால் யாது செய்ய முடியும்? என்றான். அதைக் கேட்டதும் அமைச்சர்கள் முகம் சோர்ந்து வருந்தியவர்களாய் ஹிரணியகசிபனிடம் வந்து பிரபுவே! நாங்கள் இப்படிப்பட்டவனைப் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை இவனை இனித் துன்புறுத்துவதால் ஒரு பயனும் இல்லை; நல்ல வார்த்தைகளால் இவனைச் சுவாதீனம் செய்து கொள்ளுங்கள் என்று ஹிரணியனுக்குச் சொன்னார்கள். தாங்கள் அவனுக்கு அளித்த தண்டனைகளையெல்லாம் எடுத்துரைத்தார்கள்.

அதனால் ஹிரணியன் தன் புத்திரனைத் தன் வசப்படுத்த எண்ணி யானை, குதிரை, தேர், பல்லக்கு முதலிய வாகனங்களைக் கொடுத்தும் தன் அரியணையில் அமர்த்தியும் மகிழ்ச்சியூட்டினான் அப்போதும் பிரகலாதன் ஹிரிநாமத்தை உச்சரிப்பதை விடவில்லை ஏனெனில் சம்சார சுகத்தை வெறுத்த சுத்த ஞானிகள் உலக சுகங்கள் எல்லாவற்றையும் துரும்பாக நினைத்து. பகவத் பக்தி செய்வதையே பெறும்பேறு எனக் கொள்வார்களாகையால் பிரகலாதன் ஹரி நாமஸ்மரணையையேப் பெரிதாகக் கருதி வந்தான். ஹிரண்யனின் உபசாரங்கள் பிரகலாதனை எவ்வகையிலும் திருப்திப் படுத்தவில்லை; அதனால் ஹிரணியன் மீண்டும் அசுர குருவை அழைத்து இனி இவனைத் தண்டித்து வித்தியாசப்பியாசம் செய்து கொண்டு வருக! என்று விடுத்தான் அசுர குரு பிரகலாதனைப் பார்த்து அப்பா குழந்தாய்! நீ இங்குள்ள பிள்ளைகளோடு கூடி விளையாடிக் கொண்டே வாசிக்கலாம். உன் தந்தை அகண்ட ஐஸ்வரியத்தையும் மூன்று உலகங்களையும் அரசு செய்கிறார் அவருக்குப் பிறகு இவற்றிற்கெல்லாம் நீயே அதிகாரி எங்களுக்கெல்லாம் நீயே அரசன். இந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் நீயே ஆசிரியனாக இருப்பாயாக! என்றார்.

அப்படியானால் நான் இந்தச் சிறுவர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கிறேன் என்று பிரகலாதன் கூறிவிட்டு நாராயணாய நம என்று மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். பிரகலாதன் அச்சிறுவர்களை யெல்லாம் அந்தரங்கமானவொரு இடத்திற்கு அழைத்துச் சென்று தாய் இல்லை! தந்தையில்லை உறவினர் இல்லை சகோதரர்கள் இல்லை நண்பர்களில்லை மனைவியும் இல்லை. இவர்கள் எல்லாம் சம்சார சுகத்தையன்றிப் பிரமானந்த சுகத்தைக் கொடுக்கவல்லவர்கள் அல்ல சாஸ்வத சுகம் வேண்டுமானால் விஷ்ணுமூர்த்தியைச் சேவித்தே அடைய வேண்டும் என்று தத்துவ உபதேசம் செய்தான் அதைக்கேட்டதும் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் நாராயண ஸ்மரணையே செய்து கொண்டிருந்தார்கள் அதைக் கண்டதும் அசுரகுரு,. அப்பிள்ளைகளைப் பார்த்து பிள்ளைகளே! நீங்கள் என் பிழைப்பை கெடுப்பதற்காக ஹரிநாம ஸ்மரணை செய்கிறீர்கள்? என்று தண்டித்தான் அந்த தண்டனையைப் பொறுக்க முடியாத பிள்ளைகள் ஆசிரியருக்குப் பயந்து நாராயண நாம பாராயணத்தை விட்டுவிட்டார்கள் பிரகலாதன் மட்டுமே ஆசிரியரின் தண்டனைக்குக் கொஞ்சுமும் பயப்படாமல் பக்தியோடு ஹரிநாம ஸ்மரணை செய்து கொண்டிருந்தான் ஆசிரியர் பிரகலாதனைப் பார்த்து ஏது நீ உன் தந்தையின் கட்டளையைக் கடந்து நடக்கிறாயே உன்னைப் பலவிதங்களிலும் தண்டிப்பேன் இனி ஹரி நாமத்தைச் சொல்லாதே! என்றார்.

அதற்குப் பிரகலாதன், ஐயா! நீங்கள் சொல்வது சரியே தந்தை சொல்லைத் தட்டி நடக்கக் கூடாது பரமாத்தமான பிதா வெளிப்படும் வரையில் சரீர சம்மந்தியான பிதாவின் சொல்லை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்தப் பிதாவினால் உலகத்திற்கு என்ன நன்மை? சகல உலகங்களுக்கும் சுகத்தைக் கொடுத்து சகலபாபங்களையும் போக்கடிக்கும் ஹரியே பரமபிதா விளக்கொளியைக் கண்டு மகிழ்வதெல்லாம் சூரியோதயம் ஆகும் வரையில் தான்! சூரிய உதயத்திற்குப் பிறகு அந்த விளக்கினால் ஏதேனும் உபயோகமுண்டோ? அஞ்ஞானியாக இருக்கும் வரையில், சுக்கில இரத்த சம்பந்தமான சரீரத்துக்குப் பிதாவினால் பிரயோஜனமுண்டு ஞானம் முதிர்ந்த பிறகு அஞ்ஞானியாக இருக்கும் பிதாவினால் என்ன பயன்? இது என் பிதாவுக்கும் எனக்கும் உள்ள சம்பந்தம்! இந்த விஷயத்தைப் பற்றி நான் மிகவும் ஆலோசித்து ஆராய்ந்தேன் சரீர பிதாவாகிய ஹரணியன் என்னை அடித்தால் ஆத்ம பிதாவாகிய ஸ்ரீஹரி என்னைக் காப்பாற்றுவார். இவன் என் உயிரையே வாங்கி விட்டாலும் வாங்கிவிடட்டும். நான் ஹரிநாம ஸ்மரணையை விடமாட்டேன்! என்றான்.

அசுரகுரு, மிகவும் கோபங்கொண்டு அவனைப் பலவிதங்களிலும் தண்டித்தான் அவை சிறிதேனும் பிரகலாதனைத் துன்புறுத்தவில்லை சாதாரண மனிதனை ஒருவன் தண்டிப்பதால் கஷ்டம் வராதிருப்பது பிரத்யக்ஷமாதலின் விசேஷபக்தியை விஷ்ணுவிடம் கொண்டிருந்த பிரகலாதனுக்குச் சிறிதேனும் ஆபத்து வருமா? ஆசிரியர் தன் முயற்சிகள் எதுவும் பயன் படாததைக் கண்டு பிரகலாதனை அவன் தந்தையிடம் அழைத்துச் சென்று உம் மகனை நீரே ஒப்புக்கொள்ளும் என்னால் இயன்றவரை சர்வ விதத்திலும் பார்த்து விட்டு விட்டேன் இவனால் மற்ற மாணவர்களும் ஹரி நாமத்தைச் சொல்லக் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்று சொல்லி, தன் வீட்டிற்குப் போய்விட்டார் ஹிரணியன் தன் புத்திரனது விஷயத்தில் தீராத கவலை கொண்டான். இனி அவன் நடத்திய இதர காரியங்களையும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

58. பிதாவுக்கு பிரகலாதன் உபதேசம்

பிராகலாதனின் தந்தை ஹிரண்யன், தன் மகன் என்ன செய்தும் ஹரிநாமத்தையே நினைத்தும் புகழ்ந்தும் வருவதைக் கண்டு மனம் பொறாமல் மற்ற மந்திரிகளின் புதல்வர்களை அழைத்து வந்து அவர்களை நோக்கி, நீங்கள் அனைவரும் யோக்கியர்கள் உங்கள் தந்தை சொல்லை ஏற்று நடப்பவர்கள். ஆகையால் நீங்கள் என் மகன் பிரகலாதனுடன் சிநேகம் செய்து கொண்டு, அவனுக்கு நற்புத்தி கற்பிக்க வேண்டும் என்றான் அதற்கு அவர்கள் ஆஹா! அப்படியே செய்கிறோம் என்று பிரகலாதனை அங்கிருந்து ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று நண்பனே! நாங்கள் சொல்வதைக் கேட்டு நடந்துக்கொள்! மகாநுபாவரான உன் தந்தைக்குக் கோபம் வரும்படிச் செய்தால், நீ என்ன சுகத்தை அடைய முடியும்? தந்தை சொல்லும் வார்த்தையைக் கேட்டு நன்மை அடை இதுவே எங்கள் விருப்பம் இதை உனக்கு நண்பர்கள் என்ற முறையில் சொல்லுகிறோம். உன் விருப்பம் எப்படியோ அப்படியே நீ நடந்து கொள்ளலாம்! என்று போதித்தார்கள்.

ஆனால் பிரகலாதனோ, நண்பர்களே! தந்தை என்பது யார்? பந்து யார்? தாய் யாவள்? சகோதரர் யாவர்? சிநேகிதர் யாவர்? மனைவி எவள்? இது முழுவதும் தேக சுகத்துக்கே அன்றி மோக்ஷ சுகத்துக்கு அல்ல, மாலைப்பொழுதில் பற்பல இடங்களிலிருந்து வருகின்ற பறவைகள் எல்லாம் ஒரு மரத்தைச் சேர்ந்து பொழுது விடிந்தவுடனேயே தத்தமது காரியங்களுக்குப் பறந்து போகின்றன. தாய் தந்தையரின் சங்கதியும் இப்படிப்பட்டது தான் இதுதேக சம்பந்தமான கர்மபோகத்தை அனுபவித்து மீண்டும் வேறு சுகம் இல்லை இது கனவுபோன்றது உண்மையானதல்ல பகலில் பார்த்த விஷயங்கள் இரவில் கனவாகின்றன ஆகையால் நீங்கள் அனைவரும் விஷ்ணு பக்தி செய்து கிருதார்த்தர்களாகி நித்திய சுகத்தையடைய வேண்டும்! அப்படிச் செய்யாமல் சம்சார சுகத்திலேயே மூழ்கியிருந்து விட்டால் யம பாசத்தில் கட்டுப்பட்டுக் கஷ்டப்படுவீர்கள் நாம் இதுவரையில் பிள்ளைகளாகவும் பிதாக்களாகவும் சகோதரர்களாகவும் எத்தனையோ பிறவிகளில் தோன்றினோம் இவை கர்ம சம்பந்தத்தால் கருப்பாசமுற்றவையேயன்றிவேறல்ல முழுப்பாபியானால் ஒருவன் நகரத்தை அடைவான். முற்றும் புண்ணியத்தையே செய்தவன் சுவர்க்கத்தையே அடைவான் புண்ணிய பாவங்கள் இருண்டுமே கலந்திருப்பதால் மனிதப்பிறவி உண்டாகிறது. புண்ணிய பாவங்கள் நசித்தவிடத்தில் நிசதமான முக்தி கிடைக்கும் கர்ம சம்பந்தமான தேக அபிமானம் இருக்கும் வரை முக்தி கிடைக்க மாட்டாது. கர்ம நாசம் உண்டாகும். நிமித்தம் விஷ்ணுவைத் தியானிக்க வேண்டும். ஹரி நாமத்தால் கர்மங்கள் ஒழியும் ஹரிசேவை இன்றிக் கர்மம் ஒழிய வேண்டுமானால் கர்மங்களை அனுபவித்தாவது பிராயசித்தங்களைச் செய்தாவது ஒழிக்க வேண்டும், அப்படி ஒழிக்காவிடில் பிறவியை அடைந்து அனுபவித்தேயாக வேண்டும் அழுக்குத் துணியில் சாயம் ஏறாது அழுக்கில்லாத ஆடையிலேயே சாயம் பிடிக்கும் அதுபோலவே, தேகாபிமானத் தான் உண்டான மனத்திலுள்ள அழுக்கு. ஹரி பஜனையால் ஒழியுமேயல்லாமல், வேறு எதனாலும் ஒழியமாட்டாது நீங்கள் அனைவரம் மூர்க்கர்கள்! நீங்கள் என்ன சொன்னபோதிலும் என் தந்தையின் கட்டளைப்படி, நடப்பவர்களாக இருக்கிறீர்கள். சத்தியத்தை நீங்கள் அறியீர்கள் இனி உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் நான் மட்டும் ஸ்ரீவிஷ்ணுவையே பக்திசெய்வேனே அன்றி, என் தந்தையின் கட்டளையை சிறிதும் கேட்கமாட்டேன் என் விருப்பப்படியே நடப்பேன், நீங்கள் போகலாம் என்றான்.

மந்திரி குமாரர்கள் மன வருத்தத்துடன் ஹிரணியகசிபனிடம் சென்று, அரசே! நாங்கள் எவ்வகையாகச் சொல்லிய போதிலும் உங்கள் புதல்வன் எங்கள் பேச்சைக் கேட்பவனல்லன் என்றார்கள். ஹிரணியகசிபன் எல்லையில்லாத கோபங்கொண்டு புத்திரனை அழைத்து வரச்சொல்லிவிட்டு தன் கோபத்தை வெளியேகாட்டி கொள்ளாமல், அவனைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டு மகனே! நான் சொல்வதை கேள்! உன் பிடிவாதத்தை விட்டுவிடு உலகத்திலுள்ள மக்கள் ஹரியை ஏன் சேவிக்கிறார்களோ! அத்தகைய ஐஸ்வரியத்தை நீ என்னாலேயே அடைந்திருக்கிறாய் உனக்கு நான் ஹரியேயன்றி, ஹரி என்று வேறு ஒருவன் இல்லை, தேவர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், தானவர்கள், முனிவர்கள் முதலானவர்களும் எனக்கு வசப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். சகல லோகங்களும் என் ஆதீனத்தில் இருக்கின்றன நிக்கிரக அனுக்கிரக சாமர்த்தியமுடைய என்னை காட்டிலும் சிறந்த ஹரியாவன். என்னை விட்டுவிட்டு நீ சொல்லுகிற ஹரி எங்கே இருக்கிறானோ? நீ அவனைக் காட்டுவாயா? நீ இதை அறியாததால் என்னைச் சேவிக்காது இருக்கிறாய்! என்றான்.

அதைக்கேட்டதும் பிரகலாதன் ஓ! தைத்தியா! ஹிரணியகசிபா! நானே விஷ்ணு, என்னைவிட விஷ்ணு வேறில்லை. என்று சொல்கிறாயே! விஷ்ணு மூர்த்திக்கும் உனக்கும் அதிக ஏற்றுத் தாழ்வுகள் இருக்கின்றன. இரத்தினத்திற்கும் பருக்கைக் கல்லுக்கும், குயிலுக்கும் காகத்திற்கும், சந்தனத்திற்கும் சேற்றுக்கும், சாந்தமுடையவனுக்கும் கோபமுடையவனுக்கும், சூரியனுக்கும் மின்மினிப் பூச்சிக்கும் வேதத்திற்கும், சாதாரணப் பேச்சுக்கும் பொன்னுக்கும், இரும்புக்கும், பசுவுக்கும், பன்றிக்கும் உள்ள வித்தியாசத்தை போல விஷ்ணுமூர்த்திக்கும் உனக்கும் அவ்வளவு உயர்வு தாழ்வுகள் இருக்கின்றன. அவரோ சாந்தசீலர் நீயோ அகங்காரி, பாபி, காமுகன், தேக அபிமானி, நீசன், இறப்பவன், பிறரைத் தூஷிப்பவன், நீ வீணாகச் சந்தோஷமடைவதால் மோட்சம் அடையமாட்டாய் விஷ்ணுவைச் சந்தோஷப்படுத்தினால் மோக்ஷமடைவாய், நீயே விஷ்ணு என்று சொல்ல உனக்கு நாணமில்லையோ? அதை நீ எவ்வளவு தைரியமாகச் சொல்லுகிறாய் விஷ்ணுவுக்கும் உனக்கும் உள்ள தாரதம்மியங்களை நான் உனக்கு எடுத்துச் சொல்லிவிட்டேன் அதை அறிந்து கொள் யானைமேல் ஏறுவதை விட்டு நரி மேல் ஏறுவார் உண்டோ? இல்லை! ஆகவே நான் விஷ்ணுவையே சேவிப்பேன் உனக்கு ஏதாவது செய்யச் சக்தியிருந்தால் அதை விரைவில் செய்யலாம் என்று தன் தந்தைக்கு கொஞ்சமும் அஞ்சாமல் கூறினான். ஹிரணியகசிபன் பிரகலாதனைப் பார்த்து மகனே நான் எவனைச் சேவிக்க வேண்டும் என்று நீ சொல்லுகிறாயோ அந்த அவன் எங்கிருக்கிறான் அந்த விஷ்ணு எங்கே இருக்கிறான்? அவனை எனக்கு உன்னால் காட்ட முடியுமா? என்றான் அதற்கு பிரகலாதன் சொல்லியவற்றையும் அதற்கு மேல் நடந்தவற்றையும் சொல்லுகிறேன் கேளுங்கள்.

59. நரசிங்க சரப அவதாரங்கள்

ஹிரணியகசிபன் கேட்ட கேள்விகளுக்குப் பிரகலாதன் பின்வருமாறு பதில் சொன்னான். உலகத்தில் காணப்படும் பெருங்கடல்கள் உயர்ந்த மலைகள் மிகப் பெரிய மரங்கள் மேகங்கள் நதிகள், சேதன அசேதனப் பொருட்கள், கிராமங்கள், பட்டணங்கள், பெருநகரங்கள் சூரியன் சந்திரன் சைத்தியரதம் முதலிய வனங்கள், ஸ்மசானம், நீ நான் முதலிய ஸ்தூல சூஷ்மப் பிரபஞ்சங்கள் முழுவதிலும் நிறைந்திருப்பவனே ஸ்ரீமந் நாராயணன் அவன் முன் பின் நடுவு முடிவு முதலிய எவ்விடத்திலும் எந்தக்காலத்திலும் விளங்குபவன்; அவனுடைய உருவத்தை வருணிக்க எனக்குச் சக்தியில்லை ஹரி இல்லாத இடமே இல்லை என்று கூறினான். அதைக் கேட்டதும் ஹிரணியன் ஆத்திரம் அதிகரிக்கப் பெற்று அடா பிரகலாதா! அந்த ஹரி என்பவன் எவ்விடத்திலும் இருப்பதாக நீ கூறுவதால் அவன் இந்தத் தூணில் இருக்கிறானா? சொல் என்றான் பிரகலாதன். சர்வ வியாபியாகிய ஸ்ரீவிஷ்ணு இந்தத் தூணிலும் இருக்கிறான், தடையில்லை என்றான்.

தன்னிலும் மிக்கக் கடவுளே இல்லையென்று இனிமேல் வருவதையறியாமல் மிகவும் செருக்குற்ற ஹிரணியன் அப்படி இந்தத் தூணில் ஹரி என்பவன் இருப்பானேயாகில் நான் அவனை பூஜிக்கிறேன் பார் என்று கூறிக் கோபத்தால் கண்கள் சிவக்க, பற்களைக் கடித்து மீசை துடிக்கக் கத்தியைக் கையிலே ஏந்தித் தான் உட்கார்ந்திருந்த பீடத்திலிருந்து கொதித்தெழுந்து, தன் கையிலிருக்கும் கத்தியை ஓங்கி அந்தத் தூணை வெட்டினான். அவ்வாறு அவன் தூணை வெட்டியபோது மலையின் மீது பேரிடி யொன்று விழுந்தது போன்ற சப்தம் உண்டாயிற்று. உடனே அந்தத் தூணிலிருந்து விஷ்ணுமூர்த்தி சந்தியா காலத்தில் உக்கிரமான கோபத்துடன் தைத்தியர்கள் அனைவருமே அஞ்சத்தக்க உருவத்துடன் அவதரித்தார். அந்த விஷ்ணுமூர்த்தியின் பாதிசரீரம் சிங்க வடிவமாகவும் பாதி சரீரம் மானுட வடிவமாகவும் நரசிங்க வடிவத்துடன் பிரளயகால மேக கோஷம் போலக் கர்ஜித்துக் கொண்டு பிடரிமயிர்கள் ஆகாயத்து மேகங்களை உடைக்கவும் சிங்க கர்ஜனைகள் திசைகளைச் செவிடுபடுத்தவும், முகத்தில் உற்பவிக்கும் அக்கினி ஜ்வாலையினால் அசுரர்கள் எரிந்து போகவும், ஹுங்காரங்களால் அசுரமாதரின் கர்ப்பத்திலுள்ள பிண்டங்கள் விழுந்து விடவும், பெரிய கூரிய வளைவு நகங்களுடன் விளங்கினார். அத்தகைய நரசிங்காவதாரத்தைக் கண்ட அசுரர்கள் யாவரும் பயந்து, ஹிரணியகசிபனின் உத்திரவுபடி யுத்த சன்னத்தராய், பயங்கரப்போர் புரிந்து நரசிங்கத்தின் மூக்கிலிருந்து வந்த மூச்சுக் காற்றின் வேகத்தாலேயே அழிந்தொழிந்தார்கள்.

அசுரர்கள் யாவரும் க்ஷண நேரத்தில் அழிந்ததைக் கண்ட ஹிரணியகசிபன் தானே அவருடன் போர்புரிய நினைத்து, சர்வாயுதங்களையும் தாங்கி நரசிங்க மூர்த்தியோடு போர் புரியலானான் அப்போது பூமிதேவி தன்னுடைய நிலையில் இருக்க முடியுமோ என்று ஏக்கமடைந்தாள். கடல்கள் கலங்கின ஆகாயம் அசைந்து நட்சத்திரங்கள் உதிர்ந்தன இவ்வாறு நரசிங்க மூர்த்திக்கும் ஹிரணியனுக்கும் ஒரு முகூர்த்த காலம் பெரும் போர் நிகழ்ந்தது. உலகங்களுக்கெல்லாம் கொடுமை செய்யும் ஹிரணியனைவரத்தின் படி சம்ஹாரம் செய்வதற்கு அதுவே தக்க சமயம் என்று நரசிங்கமூர்த்தி திருவுளங் கொண்டு அந்தத் தூணின் துவாரபீடத்தில் தன் தொடை மீது ஹிரணியனை இருத்தி இரவும் பகலும் இல்லாத சாயங்கால வேளையில் ஆயுதம் என்று சொல்ல முடியாத தமது திருவிரல்களிலுள்ள நகங்களால் அவனது மார்பைப் பிளந்து பெருங்கர்ஜனையுடன் அவன் குடலைப் பிறித்துத் தமது கழுத்தில் மாலையாகச் சூடிக்கொண்டு நின்றார். இவ்விதமாக நரசிங்கப் பெருமானால் சகல தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்க ஹிரணியன் மரணமடைந்தான். தேவர்கள் யாவரும், இன்றல்லவோ நாம் மகிழும் நல்ல நாள்! அசுர உபாதை நீங்கிய நாள் என்று மகிழ்ந்து மலர்மாரி பொழிந்து ஜயஜயவென்று நரசிங்கமூர்த்தியைத் துதித்து நிருத்தியமாடிப் புகழ்ந்தார்கள்.

இந்தப் பெரும் போரில் அநேகர் இறந்தார்கள். பலர் இந்த யுத்தத்தைப் பார்க்கப் பயந்து, உலகத்தை விட்டே மறைந்து ஓடிப்போனார்கள் பூமியில் இராக்ஷசப் பூண்டில்லாமல் ஒழிந்தது. துக்கம் நீங்கியது யாவரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். முன்பு வைகுண்ட பதவியில் விஷ்ணுமூர்த்தியை நோக்கி,  சுவாமி, கோமள தேகமுடைய தேவரீர் எவ்வாறு போர்புரிகிறீர்? என்று கேட்ட திருமகள் இந்த நரசிங்க அவதாரத்தில் உடன் இருந்து, அதைக் கண்டு, சுவாமி, எத்தகைய கொடிய உருவத்தை வகித்து விட்டீர்? என்று வியந்து சந்தேகம் நீங்கினாள். தேவ துந்துபிகள் முழங்கின ஹிரணியன் மடிந்ததற்காக மனம் வருந்திய அவன் மனைவி கயாது தன் துக்கத்தை வெளியே காட்டாமல் தன் மகன் பிரகலாதனைச் சாந்தப்படுத்த வேண்டியத் துக்கிப்பதைப் போலத் துக்கித்தாள் பிரகலாதனும், நான் தன்யனானேன் விஷ்ணுமூர்த்தியின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். துஷ்டனான ஹிரணியன் இறந்து ஒழிந்தான் என்று மகிழ்ந்திருந்தான்.

நரசிங்கமூர்த்தியின் கோபாக்கினி தணியவில்லை. தேவர்கள் முதலிய யாவரும் அவரது கோபாக்கினிக்கு ஆற்றாது, இவரது கோபத்தால் என்ன துன்பம் அடைய நேரிடுமோ, என்று துக்கித்தார்கள் என்றாலும் நரசிங்க வடிவிலிருந்த விஷ்ணுமூர்த்தியின் அருகே சென்று அவரைத் தோத்திரம் செய்து கோபத்தைத் தணித்தவர் ஒருவருமில்லை. தேவர்கள் ஒவ்வொருவரும் நீர்போம்; நீர்போம் என்று நரசிங்கத்திடத்தே பிறரை அனுப்ப முயன்றார்களேயன்றி, தாமே போனால் தமக்கு என்ன விபரீதம் விளையுமோ என்று அச்சத்தோடு இருந்தார்கள். அவர்கள் இந்திரனை வணங்கி நரசிங்கமூர்த்தியை சாந்தப்படுத்துங்கள் என்றார்கள். இந்திரனோ ஆஹா! இந்தக் கோர ரூபத்தினிடம் நான் சொல்லவல்லவனல்லேன் என்றான். பிருமாவைத் தேவர்கள் வேண்ட அவர் என் உடல் பொரிந்து விடும். நான் போகமாட்டேன் என்றார் பிறகு திருமகளைத் தேவர்கள் வேண்ட அவளோ நான் இந்தப் பயங்கர ரூபத்தை இதற்கு முன்பு எப்பொழுதும் கண்டதில்லை ஆகையால் நான் போகமாட்டேன் என்றாள். முனிவர்கள், தேவர்கள் அனைவரும் அவரை அணுகப் பயந்து கொண்டிருந்தார்கள். யாராவது ஒருவர் சென்று பிரார்த்தித்தாலொழிய நரசிங்கமூர்த்திக்குக் கோப சாந்தி உண்டாகாது என்ற நிலையில் அவர்கள் பிரகலாதனைப் பார்த்து. நீ தான் அவரை சாந்தப்படுத்த வேண்டும்! என்றார்கள். பிரகலாதன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கி அவரிடத்தே நீங்காத பக்தியுடையவனாக நரசிங்க மூர்த்தியை அடைந்து சுவாமி சாந்தமடைய வேண்டும்! என்று பிரார்த்திக்க நரசிங்க மூர்த்தி, அவனைத் தூக்கி நாவினால் அவன் உடலை நீக்கி, யாவரும் கேட்கும்படி பிரகலாதா! நீ இதுவரை பலவகையிலும்கஷ்டங்களை அனுபவித்தாய் இனி உனக்கு கஷ்டமேயில்லை! என்று கூறி, அவனைக் கட்டியணைத்துக் கொண்டு, என் மனம் இப்போது தான் குளிர்ந்தது துஷ்டனான ஹிரணியனால் என் மனம்கொதித்தது. அவன் புத்திரனான உன்னை ஆலிங்கனம் செய்ததால் அது தணிந்தது. நான் எப்படி உன்னை மார்போடு அணைத்துச் சுகமடைந்தேனோ, அவ்வாறே நீயும் உன் புத்திராதிகளைத் தழுவிச் சுகமடைவாயாக, நீ புத்திர பவுத்திரர்களுடன் கூடி நெடுங்காலம் ஆட்சி புரிவாய். உன் வமிசம் விருத்தியடையும் நீ பக்தனாகையால் உன்னை ஜெயிப்பது எனக்கும் அசாத்தியமே என்று வரங்கொடுத்து பூத்காரம்(புஸ் என்னும் ஓசை) செய்து கொண்டிருந்தார்.

அப்போது தேவர்கள் யாவரும் நரசிங்கமூர்த்தி சாந்தமடையாமல் இருப்பதைக் கண்டு பயந்து, விநாயகக்கடவுளை தியானித்து விகடராஜரே! விகடகாரியங்களைச்செய்து அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். கணபதி தம் யானை முகமும் பெருவயிறும் தோன்றச் சிறிய தொரு பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து சென்றார் அப்போது பெருச்சாளி விரைவாக நடவாததால், கணபதிதமது வாகனத்தை அடிக்க அதுகாலொடிந்து இடறியது விநோதஞ் செய்ய அந்த விநாயகர் விளையாட்டுக்காக நிலமிசை விழுந்தார். அதைக்கண்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள். நரசிங்க மூர்த்தியும் நகைத்தார். அவர் சிரித்ததைக் கண்டு அவரது கோபம் தணிந்தது என்று தேவர்கள் மகிழ்ந்தார்கள், ஆயினும் நரசிங்கமூர்த்தியின் முகத்தில் உண்டாயிருந்த அக்கினி ஜ்வாலை மட்டும் தணியாமலிருப்பதைக் கண்ட தேவர்கள் திருக்கைலாய மலையை அடைந்து நந்திதேவரிடம் அனுமதி பெற்று சிவபெருமானின் சன்னதியை அடைந்து சேவித்து, மகேஸ்வரா எங்களுக்கு அடிக்கடி வருகிற துன்பங்களை நீக்கி இரட்சிப்பவர் நீரன்றோ? சமுத்திரத்தைக் கடைந்த காலத்தில் சுபகரமான பொருள்களையெல்லாம் எங்களுக்குக் கொடுத்து ஆலால விஷத்தை தேவரீர் புசித்து, நீலகண்டர் என்ற பெயரைப் பெற்றீர் எங்களுக்கு விபத்து வரும் போதெல்லாம் உம்மிடம் நாங்கள் விண்ணப்பம் செய்து அவ்விபத்துக்களைப் போக்கிக்கொண்டு வருகிறோம் நரசிங்கமூர்த்தியின் உக்கிரமான ஜ்வாலை எங்களைத் துன்பப்படுத்துகிறது. அதைத் தணித்துவிட தேவரீரே சமர்த்தர். ஆகையால் அதைச் சாந்தி செய்து எங்களைக் காக்க வேண்டும் என்று வேண்டினார்கள், சிவபெருமான் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் தேவர்களே! நான் என்னைச் சரணடைந்தவர்களுடைய துன்பத்தை ஒழிப்பதையே விரதமாகக் கொண்டவன் ஆகையால் அதைக் காப்பேன் உங்கள் துக்கங்கள் ஒழிந்தன வென்றே நினையுங்கள்! என்றார். அதற்குத் தேவர்கள் கருணா மூர்த்தியாகிய நீர் எங்களிடம் கருணை வையாது இருந்தால் எங்களுக்கு நேரும் ஆபத்துக்கள் நீக்குப வரும் வேறு உண்டோ? என்று துதித்து அவரிடம் விடைபெற்றுத் தங்கள் இருப்பிடம் சேர்ந்தார்கள்.

சிவபெருமான் தேவர்களுக்குக் கொடுத்த வரத்தை நிறைவேற்றத் திருவுளம் கொண்டு சரபத் திருவுருவம் வகித்து நரசிங்க மூர்த்தி இருக்குமிடத்திற்கு புறப்பட்டார். நரசிங்க மூர்த்தியோ அதிதூரத்தில் வருகின்ற கடும் பயங்கரமான சரப வடிவத்தைத் தம் கண்களால் கண்டவுடனே யோசித்தார். சரபவடிவில் எழுந்தருளிய சிவபெருமான் நரசிங்கமே! நீ ஹிரண்யகசிபனையும் அசுரர்களையும் சங்கரித்து உலகத்திற்கு நன்மை செய்தாய் அல்லவா? என்று கேட்டார் உடனே நரசிங்கம் ஜயஜய சங்கரா என்று சொல்லிக் கொண்டு சரபமூர்த்தியான சிவபெருமானைப் பிரதக்ஷிணம் செய்து (இந்தச்சரிதம் வேறுவகையாகவும் வழங்குகிறது. அதாவது: நரசிங்கமூர்த்தி ஹிரணியகசிபனுடைய இரத்தத்தில், ஒரு துளிக்கூடக் கீழே சிந்தித் சிதறாதபடி கையில் பிடித்து வாய் வைத்துப்பருகினார். அவ்வாறு உதிரம் அருந்தியதால் உன்மத்தங் கொண்டவர் போலத்தன்னை சமீபத்தவர்களை வாரி வாயிற்பெய்து செருக்குற்று நின்றார். அதைக் கண்ட அமரர்கள் அவருகில் செல்லப் பயந்து இனி ஒரு நொடியில் உலகமே அழிந்து விடும் என்று கருதி ஓடித் திருக்கையிலைமலையை அடைந்து சிவபெருமானின் சன்னதியில் விண்ணப்பிக்க சிவபெருமான் அமரர்களே! அஞ்சாதீர்கள்! என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு இரு சிரமும் இணையில்லாத சிறகுகளும் கூரிய நகமுடைய எட்டுக்கால்களும் கடுங்கோபமும் நெடியவாளும் பேரிரைச்சலும் கொண்ட சரபத் திருவுருவத்துடன் நரசிங்கத்தையடைந்து, இடி முழக்கம் போலக் கர்ஜித்து உதிர வெள்ளம் ஊற்றெடுத்தோட சிங்கச்சிரத்தையும் கைகளையும் அறுத்துத் தள்ளி மேலே உட்கார்ந்து சிங்கத்தின் சர்மத்தை உரித்து போர்வையாக்கி கொண்டு, வெள்ளி மலையை அடைந்து எழுந்தருளியிருந்தார். விஷ்ணு பழைய உணர்வைப் பெற்று சிவபெருமானைப் பூஜித்து தேவர்களும் முனிவர்களும் கேட்கும்படி நரசீங்கபுராணத்தை ஓதி, வைகுந்தம் அடைந்து எழுந்தருளியிருந்தார் என்பதாகும்)

இதனைப் பின்வரும் பிரமாணங்களால் அறியலாம்.

ருக்வேதம்: அஹம்ம்ருணா ஸரபாய ருக்ஷிபந்தவே

தைத்ரீயோபநிஷதம்: ஹரீம் ஹரந்த மதுயந்திதேவா
விஸ்வஸ்யே ஸாநம் வ்ருஷபம் மதீநாம்

ஸ்ரீஸ்காந்தம்: ஹரிம் ஹரந்தம் ஸரபம்விஸ்வஸ்யேஸாந மீஸ்வரம்
அநுயாந்தி ஸுராஸ் ஸர்வே நமோ வாக்யைஸ் ஸஹத்ருதம்

காசி கண்டம்: புராஹிரண்ய கசிபும் தைத்ய ராஜம் மஹாபலம்
ஹத்வாதத் ருதிராபாந பரமத்தம் யாசித ஸுணா
ருத்ர: ஸரப ரூபணே நரஸிஹ மபீடயத்

அவரிடத்திலேயே லயமானார். அதைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து மலர்மாரி பொழிந்து, சிவபெருமானையும் நரசிங்கமூர்த்தியையும், பிரகலாதனையும் புகழ்ந்தார்கள்.

 சிவபெருமான் தேவர்களை நோக்கி, இப்போது இரணிய கசிபனைச் சங்கரித்த நரசிங்கனும் வேண்டியவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பான் என்று சொல்லி வெள்ளிமலையை அடைந்தார். பிறகு இரண்யாக்ஷ ஹிரண்யகசிபர்களே இராவண கும்பகர்ணர்களாகப் பிறந்து ஸ்ரீராமபிரானால் சங்கரிக்கப்பட்டார்கள். அவர்கள் மீண்டும் தமகோஷனுக்குப் புதல்வராய் சிசுபால தந்தவக்கிரராக ஜனித்து ஸ்ரீகிருஷ்ணனால் சங்கரிக்கப்பட்டார்கள். இவ்வாறு ஜய விஜயர்கள் மூன்று பிறவிகள் எடுத்து விஷ்ணுவைப் பகைத்து அவரால் சங்கரிக்கப் பட்டு, வைகுந்தத்தையடைந்து தமது பதவியில் நிலைத்து விஷ்ணுவுக்குச் சேவை புரிந்து சுகமாக வாழ்ந்திருந்தார்கள். முனிவர்களே! நரசிங்க அவதாரச் சரிதத்தையும் சிவபெருõனின் சாரூபக் கதையையும் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இந்தச் சரிதங்களைக் கேட்பவர்கள் துக்கங்களை ஒழித்து சகல சுகங்களையும் அனுபவிப்பார்கள்.

இவ்வாறு சூதமுனிவர் நைமிசாரணிய வாசிகளுக்குச் சொன்னார்.

60. நளராஜனின் பூர்வக கதை

சூதமுனிவரே! நீர் மாபெரும் ஞானசீலர், புண்ணிய சரித்திரங்களை இன்னுஞ் சொல்லவேண்டும் பூர்வத்தில் தேவர்களும் அரசர்களும் யாரைப் பூஜித்து, கிருத கிருத்தியர்களானார்கள் என்று நைமிசாரணிய முனிவர்கள் கேட்டார்கள். சூதபுராணிகர் கூறலானார்.

முனிவர்களே! நீங்கள் கேட்டது மிகவும் நல்ல விஷயம், உலகங்களுக்குப் பிதாமகனான பிரமதேவரும் அவரது புத்திரர்களாகிய மரீசி முதலிய பிரம்ம ரிஷிகளும் சிவபூஜையைச் செய்தே கிருதார்த்தரானார்கள். அவர்கள் பார்த்திவ லிங்கத்தையும் சுவர்ணம், வெள்ளி முதலிய உலோகங்களாலும் இரத்தினங்களாலும் செய்யப்பட்ட லிங்கங்களையும் அர்ச்சித்தும் மானசீகபூஜை செய்தும் கீர்த்தி பெற்றார்கள். இப்பொழுதும் பலர்பூஜித்து வருகிறார்கள். நாரத முனிவர், சிறப்பான சிவபூஜை செய்திருக்கிறார். முனிவர்களில் உயர்ந்த வசிஷ்டரும், பதிவிரதைகளில் உயர்ந்த அருந்ததியுஞ் சிவபூஜை செய்தவர்கள், காசிபரும் அதிதியும் பார்த்திவலிங்க பூஜை செய்து, தம் இஷ்ட பலன்களை அடைந்தார்கள். சுவாயம்புவமநு முதலிய யாவரும் சிவபூஜை செய்து இராஜ்யபோகம் அடைந்தார்கள் சுவாயம்புவமநுவின் புதல்வன் பிரியவிரதனும் சிவ பூஜையாலேயே தன்யனானான், இஷ்வாகு மாந்தாதா, சகரன், நகுஷன், திலீபன், தசரதன் முதலியவர்கள் அனைவரும் தமது ஆயுட்காலம் முழுமையும் சிவபூஜை செய்து வந்தார்கள். அவர்களில் தசரதன் எவ்வளவு காலம் சிவபூஜை செய்தும் புத்திர பாக்கியம் இல்லாமல், அதனை அடையும் பொருட்டு கோடி லிங்கார்ச்சனை செய்து, பிறகு புத்திர காமேஷ்டியாகத்தைச் செய்தான் அப்போது சிவஸ்வரூபமான அக்கினி தேவன் விஷ்ணு ரூபமாகப் பிரசன்னமாகி நான்கு புத்திரர்களாகப் பிறந்தனன். கவுசலையும் வசிஷ்டரது கட்டளையை ஏற்று பார்த்திவலிங்க பூஜையை செய்து வந்தாள். ஸ்ரீராமரும் தினந்தோறும் பார்த்திவலிங்கபூஜை செய்துவந்தார். அந்தச் சூரிய வமிசத்தில் பிறந்தவர்கள் யாவருமே கிரமப்படி சிவபூஜை செய்து சகல ஐஸ்வர்யங்களையும் அடைந்தார்கள். பார்வதிதேவியின் சாபத்தால் பெண் தன்மையடைந்த புரூரவன் சிவலிங்க அர்ச்சனையைச் செய்து சிவகடாட்சத்தால் ஒருமாதம் ஆணுருவமாகவும் ஒருமாதம் பெண்ணுருவமாகவும் இருந்து வந்தான். பரதன் சிவார்ச்சனை செய்திருக்கிறான் பஞ்சபாண்டவர்களும் சிவபூஜை செய்து வந்தார்கள். அவர்களில் அர்ச்சுனன் வேதலியாசரின் உபதேசத்தை பெற்று விசேஷமாக சிவபூஜை செய்திருக்கிறான் கண்ணன் ஒரு காலத்தில் வடுககிரியில் ஏழுமாதங்கள் வரையில் சிவபூஜையை இடைவிடாமற் செய்து, சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்று உலகத்தைச் சுவாதீனம் செய்து கொண்டான். அந்தச் சிவலிங்கத்திற்கு அவன் பூஜித்த வில்லதளங்கள் பர்வதாகாரமாயிருக்கின்றன நளராஜன் பூர்வஜனனத்தில் தான் வேடுவனாக இருக்கையில் தினந்தோறும் சிவபெருமானைப் பூஜித்ததால் இராஜ சம்பத்தையடைந்தான். இவ்வாறு சூத முனிவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது சவுனகாதி மனிவர்கள் அவரை நோக்கி, சிவஞானச் செம்மலே! அந்த வேடன் தினந்தோறும் பூஜித்த வகையையும் அந்தப் பூஜைக்குச் சிவபெருமான் மகிழ்ந்து அவனுக்கு இராஜ்யசம்பத்தைக் கொடுத்து அருளிய தன்மையையும், சிவபெருமானை அர்ச்சனை செய்த முறைமையையும் எங்களுக்கு விவரமாகக் கூற வேண்டும் என்று வேண்டினார்கள் சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார்.

முனிவர்களே அற்புதம் என்ற பர்வதத்தில் வசிக்கும் வேடர் குலத்தில் பிறந்த ஆகுகன் என்பவன் தன் மனைவியான ஆகுகி என்பவளுடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் இருவரும் அந்த மலைக்கு அருகிலுள்ள ஒரு சிவாலயத்தை அடைந்து வேடன் சிவாலயத்தினுள்ளும் அவன் பத்தினி சிவாலயத்தின் வெளியேயும் நாள்தோறும் சிவலிங்கார்ச்சனை செய்து சிவதரிசனம் செய்து வருவதை நியமமாகக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இவ்விதம் இருக்கும்போது, ஒரு சமயம் ஜடாதரராகிய ஒரு யோகி மாலைப் பொழுதில் அவ்வழியே வந்து, அங்கு சிவாலயம் இருப்பதை அறிந்து சிறிது நேரம் நின்றார். அவர்வரவைக் கண்ட வேடன் பத்தினி ஆகுகி அவரிடம் சென்று அவரை வணங்கி, சுவாமி! தாங்கள் எங்கே போகவேண்டியவர்கள்? நீங்கள் இங்கேயே இருக்கலாம். நேரம் இருட்டி விட்டது என்று மரியாதையுடன் உபசரித்தாள். அந்த யோகியோ தன்னுடன் பேசியது பெண்பாலாக இருந்ததால், அவளுடன் எதையும் பேசாமல் மவுனமாக இருந்தார். அப்போது சிவதரிசனத்துக்கு வந்த வேடன் ஆகுகன் அந்த சிவயோகியைப்பார்த்ததும் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, சுவாமி எங்களுக்குத் தெய்வம் போல இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதற்காகப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். தாங்கள் எங்கே போக வேண்டும்? இப்போது தங்களுக்கு வேண்டுவது என்ன? என்று கேட்டான். அதற்கு யோகி அப்பா! நான் ஒரு யாத்ரீகன் எனக்கு ஒன்றும் வேண்டாம். இராப்பொழுதைக் கழிக்கும்படிச் சயனிக்க இடம் வேண்டும்! என்றார் அவ்வேடன் அப்படியே ஆகுக! என்று தன் குடிசையில் அவரை இருக்கச் செய்து நாமிருவரும் புறம்போயிருக்கலாம் என்று தன் மனைவியிடம் கூறினான். அப்போது, சிவயோகியார் ஐயோ, பெண் பிள்ளையை இரவு காலத்தில் வெளியே இருத்தப்படாது என்றார். உடனே ஆகுகன் சுவாமி! அப்படியானால் தாங்களும் இவளும் இவ்வீட்டில் இருங்கள். நான் ஆயுதபாணியாக வெளியே இருக்கிறேன். என்று சொல்லி அவரை உள்ளே அனுப்பி தன் மனைவியையும் அந்தக் குடிசையினுள்ளேயே இருக்கும்படியே வைத்துவிட்டு தான் மட்டும் வில் அம்பு முதலிய ஆயுதங்களுடன் வெளியே விழித்துக் கொண்டு காவலிருந்தான். சிவயோகியார் தம் வழக்கப்படி அந்தக் குடிசையில் சிவயோகத்தில் இருந்தார். வேடன் மனைவி ஆகுகி படுத்துக் கொண்டிருந்தாள். நள்ளிரவில் பெரும்புலி ஒன்று வந்து ஆகுகனைத் தின்று விட்டது.

பொழுது விடிந்ததும் வேடன் மடிந்ததைக்கண்டு சிவயோகியார் மனம் வருந்தினார். அப்போது வேடன் மனைவி ஆகுகி சுவாமி தாங்கள் வருந்த வேண்டாம் என் கணவர் பிராமணருக்கு உதவி செய்து தம் உயிரை விட்டதால் நற்கதியடைவார் என்று நான் சந்தோஷப் படுகிறேன். இனி அடியாளும் அவருடன் பிராணனைவிடத் தாங்கள் உத்தரவு கொடுக்க வேண்டும்! என்று கூறிவிட்டு காஷ்டமூட்டி புலிக்கோட்பட்டு இறந்த தன் கணவனது தேகத்தின் மிகுதியை அதிற்பெய்து, தானும் விழ எத்தினித்தாள் அப்போது சிவபெருமான் பிரத்தியட்சமாகி அவள் கையை பிடித்துத் தடுத்து நீ விதர்ப்ப தேசத்தில் வீமராஜன் மகளாய்த் தமயந்தி என்ற பெயருடன் பிறப்பாய் உன் கணவனும் நிஷதத் தேசத்தில் வீரசேன மகாராஜனின் மகனாய் நளமகாராஜன் எனப் பிறப்பான். இந்த யோக புருஷன் உங்கள் நட்பைப் பிரித்தவன். ஆகையால் இவன் அன்னப் பறவையாகத்தோன்றி உங்களுக்குத் தூது நடந்து உங்களிருவருக்கும் திருமணஞ் செய்விப்பான். உங்களுக்கு இனி வேறு ஜனனமில்லை. முக்தி கைகூடும்! என்று வரங்கொடுத்தார்; வேடுவச்சி ஆகுகி மனமகிழ்ச்சியுடன் அந்தத் தீயில் பாய்ந்து உயிர் நீத்தாள்; பிறகு சிவபெருமான் அவ்விடத்தில் கோயில் கொண்டு அசலேசுவரர் என்ற பெயர் பெற்று விளங்குகிறார், இனி நீங்கள் கேட்ட அர்ச்சுனனுடைய சிவபூஜையைப் பற்றிச் சொல்லுகிறேன்.

61. கண்ணனும் வியாசரும் பாண்டவரிடம் வருதல்

முனிவர்களே! முன் ஒருகாலத்தில் துரியோதனனால் துரத்தப்பட்டு, வனத்தையடைந்த பாண்டு புத்திரர்களாகிய தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற ஐவரும், தம் பத்தினியான திரவுபதியுடன் துவைத வனத்தில் இருந்தார்கள். சூரிய பகவான் கொடுத்த அன்ன பாத்திர மகிமையினால் அவர்கள் கானகத்தில் காலங்கழித்து வந்தார்கள். அப்போது துரியோதனின் தூண்டுதலின் பேரில் துர்வாச முனிவர் பதினாயிரம் சிஷ்யர்களுடன் அங்கு சென்று தரும ராஜனே! எங்களுக்கு ஆறுசுவையுடன் கூடிய விசேஷ அன்னம் அளிக்கவேண்டும் என்று கேட்டார். அதற்குத் தர்மராஜர், மகானே! அவ்வாறே அன்னமளிக்கிறேன் ஸ்நானம் செய்து வாருங்கள் என்று அவரை அனுப்பிவிட்டு நம்மால் எவ்வாறு இவர்களுக்கெல்லாம் அன்னமிட முடியும்? அன்னமிட முடியாத நிலையில் அவர்கள் திரும்பி வந்தால், அவமானப்படுவதைவிட உயிரை விடுவதே நலம் என்று எண்ணித் தீர்மானித்தார். அப்போது திரவுபதி தங்களுக்கு ஆபத்துக்கு உதவும் கிருஷ்ணனைத் தியானித்தாள். கிருஷ்ணன் அவ்விடம் வந்து, நடந்ததை அறிந்து அன்ன பாத்திரத்திலிருந்த இலைக்கறியைக் கையிலெடுத்து அதன் மீது ஜலத்தை விடச்சொல்லி, பதினாயிரம் பேருக்கும் போதுமான அன்னபானாதிகளை உண்டுபண்ணினார். துர்வாச முனிவர் தம் சீடர்களுடன் ஸ்நானம் செய்து முடித்து, அங்கு வந்து சந்தோஷமாகப் புசித்துச் சென்றார்.

பாண்டவர்களே! கடவுளின் கிருபை எவன் சார்பில் உண்டோ அவனுக்கு குறையெதுவும் இராது. நீங்கள் கடவுள் பக்தியுள்ளவர்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் புன்முறுவலோடு கூறினார். அப்போது பாண்டவர் ஐவரும் ஸ்ரீகிருஷ்ணரைப்பார்த்து இன்று உமது தயவால் எங்களுக்கு வந்த கஷ்டம் விலகியது. பலவானாகிய துரியோதனன் எங்களுக்குப் பகைவனாக இருக்கிறான். இனி என்ன நடக்குமோ? இனி நாங்கள் என்ன செய்வோம்? என்று வருத்தப்பட்டார்கள். அதற்கு கிருஷ்ணர்; பாண்டவர்களே! நான் சொல்கிறபடிச் செய்யுங்கள். நான் துவாரைகையிலிருந்து பகைவர்களை வெற்றிக் கொள்வதற்காக வேண்டி உபமன்யு முனிவரிடம் சிவ பூஜாக்கிரமத்தை உபதேசம் பெற்று வடுககிரியில் ஏழு மாதம் தீøக்ஷவகித்து; சிவபூஜை செய்தேன். சிவபெருமான் பிரத்தியட்சமாகி இஷ்டமான வரங்களை எனக்கு வழங்கி. வில்வேஸ்வரர் என்ற பெயரோடு அங்கு எழுந்தருளியிருக்கிறார். நான் சிவாநுக்கிரகத்தால் பகைவர்களை வென்றேன். இப்போதும் புத்தி முக்திகளைக் கொடுக்கும் சிவபூஜையை செய்து வருகிறேன். ஆகையால் நீங்களும் சகல சுகங்களையும் தரும் சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும் என்று சொல்லிப் பாண்டவர்களைத் தேற்றி; அங்கிருந்து மறைந்தார்.

அதன் பிறகு பஞ்சபாண்டவர்கள்; புத்திமானான ஒரு வேடனைத் துரியோதனனிடம் போய் அவன் குணங்களைப் பரீட்சித்துப் பார்த்து வரும்படி அனுப்பி வைத்தார்கள். அவன் அவ்வாறே சென்று அங்கு ராஜ்ய காரியங்களை துரியோதனன் சரிவர நடத்துவதைக் கண்டு வந்து தருமராஜரிடம் சொன்னார்கள். அதனால் பாண்டவர்கள்; இனி என்ன செய்வோம்? என்று கவலைப்பட்டார்கள் அப்போது ஜடா மகுடதாரியாய் விபூதி உத்தாளனஞ் செய்து கொண்டு வேத வியாஸர் தர்மதேவதையைப் போல அங்கு வந்தார் பாண்டவர்கள். அவரைக்கும்பிட்டு முறைப்படிப் பூஜித்து உயர்ந்ததொரு ஆசனத்தில் அமர்த்தி அவரை மகிழ்வித்து நாங்கள் இன்றுதான் தன்னியர்களானோம். இன்று தான் எங்கள் ஜன்மம் சாபல்யமாயிற்று. எங்களது சற்கருமங்கள் இப்போது தான் பயனளித்தன; தேவ; பிராமணர்களை நாங்கள் பூஜித்ததும்; எங்கள் தவமும் தானமும் தங்களது தரிசனத்தால் பயனடைந்தன. எங்கள் கஷ்டங்கள் விலகின மகாத்மாக்களின் அநுக்கிரகம் கிடைத்தபோது துக்கமும் வருமா? எளியோரைக் காப்பதே பெரியோர் கடன் அடியார்கள் செய்த தீக்கர்மங்களை ஒழித்து அவர்களுக்குச் சற்குணம் வரும்படி ஆசீர்வதிப்பதே பெரியோர் கடமை. ஒருவன் செய்யவேண்டியது பெரியோர் சேவையே! தங்கள் தரிசனத்தால் எங்கள் உள்ளங்கள் வாடிய பயிர் மழை பெய்யப் பெற்றது போலக் களிப்புற்றது! என்று பலவாறு துதித்தனர் வியாஸ மகரிஷி அவர்களிடம் தயையுடையவராய்ச் சொல்லத் தொடங்கினார்.

62. வியாசர் உபதேசமும் அர்ச்சுனன் தவமும்

பாண்டவர்களே! நீங்கள் ஐவரும் புண்ணியர்கள் சத்தியவான்கள். நீங்கள் தருமத்தைக் கைவிடாமல் இருப்பதால் உங்களுக்கும் ஒப்பாரும் இல்லை. நற்குணசீலர்கள் தங்கள் ஆயுளுக்கு இறுதி வந்தாலும் பொய் சொல்லமாட்டார்கள் அத்தகைய சத்தியத்தால் வரும் தர்மமே சுவாக்காதி நற்பயன்களுக்கும் காரணமாகும் எனக்கு நீங்களும் துரியோதனாதிகளும் சமமானவர்கள். ஆயினும் தர்மவான்களிடத்திலேயே பெரியோருக்குக் கிருபை இருக்கவேண்டும். ஆகையால் உங்களையே நான் அதிகமாக விசுவாசிக்கிறேன். முன்பு துஷ்டனான திருதராஷ்டிரன் உங்களுடைய இராஜ்யத்தைப் பேராசையால் பறித்துக் கொண்டான் அவனுக்கு நீங்களும் துரியோதனாதியரும் புத்திரர்களே! உங்கள் தந்தை பாண்டு இறந்து நீங்கள் சிறியவர்களாக இருந்ததற்காக உங்கள் விஷயத்தில் தயை வைக்க வேண்டிய அவன் சிறிதும் இரக்கம் இல்லாமல் இருந்து விட்டான் தப்பிதம் செய்த தன் புத்திரனை அவன் தண்டிக்கவும் இல்லை. அவனைத் தடுத்தல் விபரீதம் விளையுமோ என்று வாளாவிருந்தான். நடப்பவை நடந்தே தீரும் அந்தத் திருதராஷ்டிரன் துஷ்டன் சத்தியவான்களாகிய நீங்கள் தர்மவான்கள் விதைத்த விதைகள் முளையாமல் இருக்குமா? அவன் சுகத்திற்குப் பிறகு சங்கடத்தையும் நீங்கள் துன்பத்திற்குப் பின் சுகத்தையும் அனுபவிப்பீர்கள் ஆகையால் நீங்கள் வருந்த வேண்டாம் என்றார். தருமராஜன் முதலானவர்கள் அவரை நோக்கி மகாத்மாவே! தாங்கள் உண்மையையே சொன்னீர்கள் நாங்கள் நகரத்தை விட்டுக் காட்டுக்கு வந்தும் துஷ்டர்களான துரியோதனாதிகள் பெருந்துன்பங்களைச் செய்கிறார்கள் அக்கஷ்டங்கள் ஒழியுங்காரணமாகவே தாங்கள் எங்களுக்கு நற்கருமங்களை உபதேசிக்க வேண்டும் கிருஷ்ணர் எங்களைச் சிவாராதனை செய்யும் படிக் கட்டளையிட்டிருக்கிறார். தாங்களும் அவ்வாறே கட்டளையிட்டுச் சிவபூஜா விதியை உபதேசித்தால் தங்கள் உத்தரவின் படிச் செய்வோம் என்றார்கள். அதன்பிறகு வியாஸ முனிவர் பெரிதும் மகிழ்ந்து நானும் சிவபூஜை செய்து கொண்டு வருகிறேன் நீங்களும் அப்படிச் செய்தால் நிலையான சுகத்தை அடைவீர்கள். என்று பாண்டவர்கள் ஐவரின் அர்ச்சுனன் ஒருவனே சிவபூஜை செய்வதற்குக் தக்கவன் என்று நினைத்துத் தவஞ் செய்யத்தக்க இடத்தையும் யோசித்துச் சொல்ல தொடங்கினார்.

பாண்டவர்களே! கேளுங்கள் ஹிரண்யகர்ப்ப பிபீலிகாபரியந்தமான பிரபஞ்ச முழுவதும் சிவரூபமே தவிர வேறில்லை. கண்ணுக்குப் புலப்படும் யாவும் சிவரூபம் என்றே தியானிக்க வேண்டும் தன்னை உபாசித்த யாவரையும் சிவபெருமான் சுகமடையச் செய்வார். சிவரூபமே விஷ்ணுமூர்த்தியாக இருக்கிறார். அவரை ஆராதித்தால் நெடுங்காலத்தில் தான் தரிசிக்கலாம் சிவபெருமானோ விரைவில் பிரசன்னராய் புத்தி முக்திகளை அளிப்பார். ஆகையால் எளிதாகப் புத்தி முக்திகளைப் பெற விரும்புவோர் சிவார்ச்சனையையே செய்யவேண்டும். க்ஷத்திரியனுக்கு இந்திரனே இஷ்டமுடையவன் ஆகையால் அவன் விரைவில் தோன்றி வேண்டிய அருள் செய்வான் முதலில் இந்திர மந்திரத்தை உபதேசிக்கிறேன் என்று கூறினார் அர்ச்சுனன் ஸ்நானம் செய்து கிழக்கு நோக்கி வீற்றிருந்து வியாச மகரிஷியால் இந்திர மந்திர உபதேசம் செய்யப் பெற்று, பின்னர் பிறகு பார்த்திவலிங்க பூஜை செய்யும் முறையையும் உபதேசமாகக் கேட்டான். வியாஸர் அவனைப் பார்த்து அர்ச்சுனா! முதலில் நீ இந்திரனை ஆராதித்து அவன் கட்டளையைப் பெற்று, பிறகே சிவாராதனை செய்யக் கடவாய்! இப்போதே நீ இங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் இருக்கும் இந்திரகீல பருவதத்திலிருந்து தவஞ் செய்வாயாக! தவஞ்செய்யும்போது அநேகர் உன் தவத்திற்கு இடையூறு செய்வார்கள், ஆகையால் சகல ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு நீ இருக்கும் இடம் ஒருவருக்கும் புலப்படாது இருந்து தவஞ் செய். தினந்தோறும் சிவ ஸ்தோத்திரங்களையே ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறி, ஒருவர் கண்ணுக்கும் புலப்படாதிருக்கத்தக்க, அதிசய வித்தையை உபதேசித்து, ஆசிர்வதித்தார், தர்மராஜன் முதலிய நால்வர்களையும் பார்த்து, நீங்கள் தர்மத்தை பாதுகாப்பீர்களாக, சீக்கிரத்தில் காரியசித்தி உண்டாகும் என்று ஆசீர்வதித்துச் சென்றார்.

அப்பொழுதே, மந்திர உபதேசம் பெற்ற மகிமையால் சிவதேஜஸோடு அர்ச்சுனன் விளங்கவே தருமன் முதலியோர் இவனே காரியசித்தியுண்டாக்கும் காரியத்தை சாதிக்கவல்லவன் மற்றவர் சாதிக்கமாட்டார்கள் வியாஸர் மொழிந்தது உண்மையே என்று கருதி, அர்ச்சுனனைப் பார்த்து நமது பிழைப்பைப் பயன்படுமாறு செய்வாயாக! என்று கூறி அவனைத் தவத்திற்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். ஆயினும் அவனைப் பிரிந்திருக்கப் பயந்து கடைசியாக அப்பா! எந்த வகையிலாவது தவஞ் செய்து எங்கள் கஷ்டத்தை நீயே ஒழிப்பாய் என்று கூறி, அவன் தவஞ் செய்யச் சொல்ல விடை கொடுத்து அனுப்பினார்கள். திரவுபதி தன் துக்கத்தை மனதில் அடக்கிக் கொண்டு அர்ச்சுனனைப் பார்த்து எப்படியாவது காரிய அனுகூலஞ் செய்து கொண்டு வர வேண்டும் என்று விடை கொடுத்து அனுப்பினாள், தருமன், பீமன், நகுலன், சகாதேவன், திரவுபதி ஆகிய ஐவரும் ஒன்று கூடித் துக்கித்துக் கொண்டு, நாம் அர்ச்சுனனைப் பிரிந்து தைரியத்துடன் இருப்பது என்ன மகிமை என்று யோசித்தார்கள் அப்பொழுது வேதவியாசர் மீண்டும் அங்கு வரவே அவருக்கு ஆசனமளித்துப் பூஜித்து, சுவாமி கஷ்டத்தில் இருக்கும் எங்களுக்குத் தங்கள் தரிசனத்தால் மகிழ்ச்சி உண்டாகிறது. தாங்கள் சிறிது காலம் இங்கேயே இருந்து எங்கள் துயரத்தை அகற்றி ரட்சிக்கவேண்டும் என்றார்கள் வியாசர் அவ்வாறே அவர்களது விருப்பத்திற்கு இணங்கி நானாவிதமான புண்ணிய சரித்திங்களைச் சொல்லிக் கொண்டு அங்கு வசித்திருந்தார் அவ்வாறு இருக்கும் போது ஒரு நாள் வியாஸர் சொல்லிக் கொண்டிருந்த ஒரு சரிதத்தில் தருமராஜன் ஒன்று கேட்டன்; வியாஸ முனிவரே நான் துக்கச் சாந்தியடைய வேண்டி ஒன்று வினவுகிறேன். இப்போது நாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப்போலப் பூர்வத்தில் எவரேனும் அனுபவித்திருக்கிறார்களா? அல்லது நாங்கள் தான் அனுபவிக்கிறோமா? என்று கேட்டான். வியாசபகவான் சொல்லலானார்.

கேளும், தருமராஜனே நீங்கள் அனுபவிப்பது ஒரு கஷ்டமா மனைவியோடும் சகோதரரோடும் முனிவர்களோடும் வசித்துக்கொண்டு, சூரியன் கொடுத்த அன்னபாத்திர மகிமையால் சுகித்திருக்கிறீர்கள். மகாத்மாவான நளன் என்ற மன்னன் அடைந்த துக்கங்கள் அனந்தம். அரிச்சந்திர மன்னன் அதைக் காட்டிலும் பெருந்துயரமடைந்தான். எல்லோரைக் காட்டிலும் ஸ்ரீராமன் மிகவும் கஷ்டப்பட்டான். அவர்களுக்கு உண்டான சங்கடத்தை நான் எவ்வளவு காலஞ் சொன்ன போதிலும் சொல்லி முடியாது. இத்துக்கங்களைக் காட்டிலும் பிறப்பிலும் இறப்பிலும் உண்டாகும் துன்பங்கள் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. முதலில் தாயின் வயிற்றில் கருவாக உண்டான பொழுதுந்துக்கமே! பிறக்கும் போதே அழுகை யவுவனத்தில் சுகபோகங்களை அனுபவிக்கும் போதும் பல குறைபாடுகளாலும் துக்கமே சம்சார தசையிலும் இல்லறகாரியங்களிலும் துக்கமே! இறக்கும் பொழுதும் துக்கம். ஆகையால் எப்பொழுதும் துக்கமே என்பதே உணர்ந்து தேக சுகம் அநித்தியம் என்று விடுத்து திடமான சத்தியத்தையே ஆஸ்ரயித்து பகவானான சிவபெருமான் மகிழும்படி நடந்துகொள்ள வேண்டும்! அவனைச் சேவித்தால் சகல துக்கங்களும் விலகும்! என்றார்.

அதைக் கேட்டதும் பாண்டவர்கள் எங்கள் கஷ்டங்கள் எப்போதாவது விலகாமல் இருக்குமா? என்று எண்ணி வியாஸரையே நம்பியிருந்தார்கள். தவஞ் செய்யச் சென்ற அர்ச்சுனனோ வழியில் அநேக சுப சகுனங்களைக் கண்டு சத்துரு க்ஷயமானதாகவே நினைத்து தன் தவத்திற்கு யோக்கியமான இடங்களைப் பார்த்துக் கொண்டு சந்தோஷத்தோடு இந்திர கீலமலையில் கிருஷ்ணா நதி தீரத்தில் அசோகவனத்தில் சுவர்க்கத்துக்கு ஈடான இடத்தில் தங்கி வியாஸர் உபதேசித்த மந்திரங்களை மனதில் தியானித்து, குருவான வியாஸரை நினைத்து வணங்கினான். அவர் சொல்லியபடி விபூதி ருத்திராக்ஷங்களை அணிந்து முதலாவதாக இந்திர ஜபம் செய்து பிறகு பார்த்திவலிங்க பூஜை செய்வதற்காக கவுதம தந்திர விதிப்படி (பஞ்ச சூத்திரம்) பார்த்திவலிங்கம் ஒன்றைச் செய்து அதன் முன்னால் இருந்து அதை பூஜித்து ஜபம் செய்து கொண்டிருந்தான். முக்காலங்களிலும் மூழ்கி குளித்து சிவபூஜை செய்து வந்தான். இப்படியே கடுமையான தவஞ் செய்து கொண்டிருக்கும் போது அந்த லிங்கமூர்த்தத்திலிருந்து தேஜஸ் ஒன்று கிளம்பிற்று. அதைக்கண்ட தேவர்கள் இந்த அக்கினியில் இவன் எவ்வாறு பூஜிக்கிறான் என்று யோசித்து இந்திரனிடம் அப்போதே சென்று யாவற்றையும் சொல்லி, தேவனோ, சூரியனோ, அக்கினியோ, மகாமுனியோ, எவனோ ஒருவன் உன் வனத்தில் தவஞ்செய்து வருகிறான். அவனது தேஜஸால் உஷ்ணம் தாளாது உன் சமூகத்துக்கு வந்தோம் என்றார்கள். இந்திரன் தன் மைந்தனே அவ்வாறு தவஞ் செய்கிறான் என்பதை உணர்ந்து ஒரு விருத்தவேதிய வடிவில் ஜடாதாரியாய், தண்டதரனாய் காற்றடித்தாலே கீழே விழுவான் போல மான் தோலைப் போர்த்திக் கொண்டு அடிக்கொரு முறை கால் இடறிக் கீழே விழுவான் போல  அர்ச்சுனன் எதிரே வந்தான். அவனைக் கண்ட அர்ச்சுனன் விரைந்து சென்று பூஜித்து துதித்து ஸ்வாமி! எங்கிருந்து வருகிறீர்? என்று கேட்டான். இந்திரன் அர்ச்சுனனுக்குத் தைரியம் உண்டாகும்படி நீ இந்தச் சிறு வயதில் முக்தியைக் குறித்துத் தவஞ் செய்கிறாயா ஜெயத்தைக் குறித்துத் தவஞ்செய்கிறாயா? என்று கேட்டான். அதற்கு அர்ச்சுனன் தன் சரித்திரம் முழுவதையும் சொன்னான். அதன்பிறகு இந்திரன் நீ நன்றாகத் தவஞ் செய்கிறாய் ஆயினும் யுக்தமான காரியத்தைச் செய்யவில்லை, சுகம் கனவுக்குச் சமானமானது, அதற்காக இத்தகைய கடுந்தவத்தைச் செய்வதைக் காட்டிலும் இப்போதே முக்தியை நாடித் தவஞ்செய்! இந்திரன் சுகத்தைக் கொடுப்பானேயன்றி மோக்ஷத்தைக் கொடுக்க மாட்டான். ஆகையால் நான் சொல்லும் வகையில் முக்தியைக் குறித்துத் தவம் செய்! என்றான். அதைக்கேட்டதும் அர்ச்சுனன் கோபம் கொண்டு கிழவா! நீ ஏன் என்னிடத்தில் இவ்வாறு சொல்ல வேண்டும்? நான் வேத வியாஸரின் உத்தரவுப்படி இந்தத் தவத்தைச் செய்கிறேன். என் தவத்தைக் கெடுக்கவா இப்படிச் சொல்கிறாய்? உடனே இங்கிருந்து போய்விடு, என்று சீறினான். அதனால் இந்திரன் மகிழ்ந்து அழகான தன் திவ்விய வடிவத்துடன் அவனுக்குத் தரிசனம் தந்தான். அர்ச்சுனன் நாணமுற்றான். இந்திரன் அவனைத் தேற்றி, நீ தன்யன் கிருதகிருத்தியன் திட புத்தியுடையவன் துரியோதனாதிகளான உன் சத்துருக்கள் பலவான்கள், பீஷ்மன், துரோணன் கர்ணன் முதலியவர்கள் ஜயிப்பதற்கு அசாத்தியமானவர்கள். அவர்களை நானும் ஜெயிக்கவில்லவன் அல்லேன் அவர்களை ஜெயிக்கத் தக்கவன் ஒருவனுமிலன் அவர்களை ஜெயிக்க வேண்டுமானால் சிவபெருமானே அத்தகைய வல்லமை அளிக்க முடியும். ஆகையால் சிவபூஜையைச் செய்; சிவபெருமானே போக, மோக்ஷங்களைக் கொடுப்பார். நானும் பிரமாதி தேவர்களும் விஷ்ணுவும் யாவரும் சிவபூஜை செய்பவர்களே; இன்று முதற்கொண்டு என்னைத் தியானித்த இந்திர மந்திரத்தை விடுத்து, சிவ மந்திரத்தை ஜெபித்துப் பார்த்திவ லிங்க விதானமகாச் சிவபூஜையைச் செய்வாயாகில் உனக்குச் சந்தேகமின்றிக் காரிய சித்தி உண்டாகும் என்று வரங்கொடுத்து மீண்டும் அர்ச்சுனனை நோக்கி, அர்ச்சுனா! நீ செய்யும் சிவபூஜை மனதிடத்துடன் செய்யதக்கது, புத்தி பிரமையடையாமல் தைரியத்துடன் செய்ய வேண்டும், சத்கருமங்களுக்கு இடையூறுகள் நேரும் நெஞ்சத் துணிவுடன் நேர்மையாகப் பூஜித்தால் சிவபெருமான் நீ விரும்பிய பயன்களை விரைவில் கொடுப்பார் என்று கூறி விட்டு அந்தர்த்தானமானான். அர்ச்சுனன் சிவபெருமானைக் குறித்து அகண்டமான தவம் செய்து கொண்டிருந்தான்.

63. மூகாசுர சங்காரம்

அர்ச்சுனன் ஸ்நானஞ் செய்து நித்யகர்மானுஷ்டானங்களை முடித்து மந்திராதி ஷடங்க நியாசங்களைச் செய்து வியாசர் கூறியவண்ணம் ஒரு காலின் மீது நின்று சூரியனிடத்தில் நாட்டத்தைச் செலுத்திக் கொண்டு, தியான யோகத்தில் இருந்தான். அவனது தவத்தைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தார்கள். அவர்கள் சிவலோகம் சென்று சிவபெருமானைத் தரிசித்து சம்போ மகாதேவா! உலகத்தில் அர்ச்சுனன் தங்களைக் குறித்துத்தவஞ் செய்கிறான். அவனுக்குத் தாங்கள் ஏன் வரமளிக்கக் கூடாது? என்று கேட்டுத் துதித்தார்கள். தேவர்களே! நீங்கள் போகலாம் அர்ச்சுனனுக்குச் சந்தேகமின்றி வரமளிப்பேன் என்றார் சிவபெருமான், தேவர்கள் தமதிருப்பிடஞ் சேர்ந்தார்கள் அதற்குள்ளாக மூகன் என்ற அசுரன் ஒருவன் துரியோதனனின் விருப்பத்திற்கு இணங்க பன்றியுருவேற்று அர்ச்சுனன் தவஞ்செய்யும் இடத்தை அடைந்து அங்குள்ளபாறைகளைத் தன் கோரைப் பற்களால் பொடிசெய்து மரங்களைப்பறித்தும் எறிந்தும் பலவித சப்தங்களைச் செய்து கொண்டிருந்தான். அர்ச்சுனன் அந்தப் பன்றியைப் பார்த்து யோசிக்கலானான்.

இத்தகைய குரூரமான செயலைச் செய்பவன் யார் இங்கு வந்து என் காரியங்களை இவன் ஏன் கெடுக்க வேண்டும்? இவனும் நமக்குப் பகைவனாகவே இருக்க வேண்டும்! என்று நிச்சயித்து நான் பூர்வத்தில் அநேகம் அரக்கர்களை கொன்றவன். ஆகையால் அவர்களைச் சேர்ந்த எவனோ ஒருவன்தான் அந்தப் பகைமையுணர்வுடன் பன்றியாக உருவெடுத்து வந்திருக்க வேண்டும் அல்லது துரியோதனனுக்கு நண்பனான அரக்கனாகவும் இருக்கக்கூடும் இவன் பகைவனல்லவென்றால் என் மனம் இவனை ஏன் சந்தேகிக்க வேண்டும். இவனைப் பார்க்கும்பொழுதே நமது மனம் வேறுபடுவதால் இவன் பகைவன் என்பதில் ஐயமில்லை உலகத்தில் ஒருவனுடைய ஆசாரம் அவனது குலத்தை உணர்த்தும், சரீரம் அவனுடைய போஜனத்தை அறிவிக்கும் வாய்மொழிகள் அவனுடைய கல்வியை உணர்த்தும், கண்பார்வை, அவனுடைய மனக்குறிப்பை உணர்த்தும் நடந்தை, செய்கை, பேச்சு இவற்றைக் கொண்டு ஒருவனுடைய எண்ணத்தை அறிந்து கொள்ளலாம். கண்பார்வை நான்குவகை உஜ்வலம், சரசம், வக்கிரம் ஆரக்தம் ஆகும் இவை வெவ்வேறு வகை உஜ்வலம், சிநேகிதனைக் குறிக்கும் சரசம், புத்திரனைக் குறிக்கும் வக்கிரம், ஸ்திரீயை உணர்த்தும் ஆரக்தம், சத்துருவை குறிக்கும் ஆகையால் இவனைப்பார்க்கும் பொழுது சர்வ இந்திரியங்களும் தகதக வென்று எரிவதால் இவன் பகைவனேயாவான். இந்தப் பகைவனைச்சங்கரித்தேயாக வேண்டும் நமது குருவாகிய வேத வியாசரும் உன்தவத்திற்கு விக்கினம் நமது குருவாகிய வேத வியாசரும் உன்தவத்திற்கு விக்கினம் செய்பவர்களைச் சங்கரித்துவிடு என்று உத்தரவளித்திருக்கிறார். இதற்காகவே என்னுடன் ஆயுதங்களை இருக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார் என்று யோசித்து பாணத்தைத் தன் காண்டீபத்தில் ஏற்றிக் கொண்டிருக்கும் போது சிவபெருமானும் தமது பிரமத கணங்களோடு வேடரூபம் தரித்து அர்ச்சுனனைக் காக்கவும் பரீட்சிக்கவுமாக அவனருகே வருவரானார்.

அரையில் கச்சை கட்டி, தலை முடியைக் கொடிகளால் இறுக்கிக் கட்டி உடலில் வெண்கீற்றுகளும் வில்லும் அம்பறாத்தூணியுமாக வந்த சிவபெருமான் தம் போலவே வேடம் தரித்த பிரமதகணங்களுடன் வேடுவர்க்குரிய பலவகைக் கூச்சலிட்டுக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். அவரது பிரமதகணங்கள் எழுப்பிய கூச்சல்கள் அந்தக் காட்டில் எதிரொலி செய்தன. அர்ச்சுனன் சந்தேக மடைந்தான், அந்த மலையிலிருந்த மலைவாசிகள் சங்கடப்பட்டார்கள். அர்ச்சுனன் அப்போதும் மனந்தயங்காமல் என்ன நடந்தாலும் நடக்கட்டும். சிவபெருமான் சுகம் செய்யாமல் விடமாட்டார்கள். பூர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியும் சிவபெருமானே சுகங்கள் சுகபோகங்கள் மோட்சம் முதலியவற்றைக் கொடுப்பவர் என்று கூறியிருக்கிறார். சிவநாமங்களை ஸ்மரிப்பவருக்கு சத்தியமாகச் சுகமே உண்டாகும். பாபத்தால் உண்டாகும் துக்கங்கள் முதலியன நசிக்கும்; அப்படியில்லாமல் சிவசேவை செய்யும் போதே கஷ்டம் வருமானால் அவை கர்மத்தால் வந்ததே என்று கொள்ள வேண்டும். பெருந்துன்பங்களை அனுபவிக்க வேண்டியவன் சிவபக்தனாக இருந்து அப்பெருமானுக்கும் அன்பிருந்தால் அவனுக்கு அவை சிறியனவாகும். அல்லது அவற்றை அனுபவித்தே தீரவேண்டுமானால் வருவது வரட்டும். அவனிஷ்டத்துக்கு மாறு கொள்பவர் யார்? சிவபெருமானுக்கே பரிபூரண தயை இருக்குமானால் எத்தகைய கஷ்டம் வருவதானாலும் அவையாவும் சூரியனைக் கண்ட மின்மினிப் பூச்சிகளைப் போலவே போய்விடும். எம்பெருமான் திருவருள் கொண்டால் விஷத்தையே அமிர்தமாகவும், அமிர்தத்தையே விஷமாகவும் செய்து விடலாம், நாம் சுகமே உண்டாக வேண்டும் என்று இந்தத் தவத்தைச் செய்து வருகிறேன். இறைவனோ பக்தர்களைக் காப்பதையே விரதமாக அனுஷ்டித்து வருபவர். ஆகையால் நன்மையே நடக்கும் மரணம் சமீபத்திலிருக்கும் போது பிறர் நிந்தித்தாலென்ன? துதித்தால் என்ன? ஐஸ்வரியம் வந்தால், வரட்டும் வராவிட்டால் ஒழியட்டும் வருவது வந்தே தீரும்! சிவபெருமான் சுகத்தையே கொடுப்பார். ஒருவேளை என்னைப் பரீட்சிக்க வேண்டித் துக்கத்தைக் கொடுத்தாலும் தயாளனாகையால் இறுதியில் சுகத்தைக் கொடுக்காமல் என்னைக் கை விட்டுவிடமாட்டார். சோதித்த பிறகுதான் பொன்னும் புனிதமடைகிறது. இப்படித்தானே வேதவியாசரும் நம்மிடம் சொல்லியிருக்கிறார். ஆகையால் சிவபூஜை செய்வதால் எனக்குச் சுகம் உண்டாவதில் தடை எதுவும் இல்லையென்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே பன்றி வடிவத்திலிருந்த மூகன் சமீபித்தான். அதன் பின்புறத்தில் சிவபெருமான் வேடரூபத்தில் கணசகிதமாய் வந்து கொண்டிருந்தார். சிவ அர்ச்சுணருக்கு மத்தியில் பர்வதாகாரமான பன்றி நிற்கையில் சிவபெருமானோ இது நமது பக்தனை கொல்லவிடக் கூடாது என்று கருதியிருந்தார். அந்தச் சமயத்தில் அர்ச்சுனனும் சிவபெருமானும் தங்கள் கையிலிருந்த வில்லை வளைத்து அம்புகளை எய்தார்கள். சிவபெருமான் பிரயோகித்த பாணம் பன்றியின் வாலில் பட்டது. அர்ச்சுனன் பிரயோகித்தபாணம் அந்தப் பன்றியின் முகத்தில் தைத்தது அதில் சிவபெருமானின் அம்போ வாலினின்று வாய்வழி ஊடுருவி நிலமிசைகுத்திக் கொண்டு பாய்ந்தது. அர்ச்சுனன் பிரயோகித்த பாணமோ பன்றியின் தலையிலிருந்து வால்வழி ஊடுருவி மீண்டும் அர்ச்சுனனின் அம்பறாத்தூணியை அடைந்து அப்போதே மூகசூகரம் மரணமடைந்து விழுந்தது. அதைக் கண்ட தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள். சிவபெருமானும் மகிழ்ந்தார். அர்ச்சுனன் சுகமடைந்தான் தைத்தியனான மூகனது நிஜ வடிவத்தைக் கண்ட சிவ அர்ச்சுனர் இருவரும் ஆச்சரியமடைந்தார்கள். அவர்களில் அர்ச்சுனன் அவனது மாயா ரூபத்தைக் கண்டு சிவபெருமானே இவனைச் சங்கரிப்பதற்கான நற்புத்தியைத் தனக்குக் கொடுத்ததாகக் கருதி, சிவநாமஸ்மரணை செய்து கொண்டு மகிழ்ந்தார்கள்.

64. பாணத்தால் மூண்ட தர்க்கம்

முனிவர்களே! அதற்குமேல் நடந்தவற்றைக் கேளுங்கள் வேட வடிவத்தில் வந்த சிவபெருமான் தன்னுடன் வந்த பிரமதகணங்களில் ஒருவனை அனுப்பித் தாம் எய்த அம்பை எடுத்துக் கொண்டு வரும்படிஅனுப்பினார். அவன், அந்தப் பாணத்தைக் கொண்டு போக வந்தான் அர்ச்சுனன் தன் எதிரில் விழுந்த அம்பைக் கண்டதும் க்ஷத்திரியனாக இருந்ததால் அதை விடக் கூடாது என்ற நியாயத்தால் எடுக்க வந்தான். இவ்வாறு இருவரும் அங்கு சென்றதும் அர்ச்சுனன் வேடுவனையடித்து அந்த அம்பைக் கைப்பற்ற அவன் எங்கள் பாணத்தை எங்கள் எஜமானனின் உத்தரவுபடி கொண்டு போக வந்தால் அதை நீ பறித்துக் கொள்ளலாமா? நியாயப்படி என் கையில் கொடுத்து விடு என்றான். அதற்கு அர்ச்சுனன் நீ வனசஞ்சாரம் செய்யும் மூர்க்கன், என் முன்னால் விழுந்த பாணம் என்னுடையதே! அது உன்னுடையதல்ல இது இருக்கும் ரேகை, ரூபம், மயிற்குஞ்சும் பெயர் இவற்றைப்பார்; இவையெல்லாம் என்னுடையதேஉன்னுடையதாகுமா? உன்னுடைய துஷ்ட சுபாவத்தால் உன்னுடையது என்று சொல்கிறாய் என்றான். அதற்கு கணன் சிரித்து அடா நீ எதற்காகத் தவஞ்செய்கிறாய்? நீ வேஷத்திற்காகத்தவஞ் செய்கிறாயேயன்றி உண்மையாகத்தவஞ் செய்யவில்லை உலகத்தில் தவமுனிவன் பொய் பேசுவானா? நீ என்னை ஒன்றியாக வந்தவன் என்று நினைக்காதே. நான் சேனாநாயகன் என்று நினை; என் தலைவர் வனசஞ்சாரம் செய்யும் வேடர் பலருடன் அதோ இருக்கிறார். நிக்கிரதா நிக்ரக சமர்த்தனவர்! நீ எடுத்துக் கொண்ட பாணம் அவருடையது உன் பாணம் என்று ஒரு போதும் சொல்லாதே! களவு, பொய், அகங்காரம் புத்திப்பிரமை மோசம் ஆகியவற்றால் தவப்பயன் அழியும் என்று நான் கேட்டிருக்கிறேன் என் பாணத்தைக் கொடுத்துவிடு! இல்லாவிட்டால் பாபியாவாய் உனக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமே என்பதற்காகத் தான் என் எஜமானன் பாணத்தைப் பிரயோகித்தார். அவர் மீண்டும் அந்தப் பாணத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; நீ சத்தியவான் என்றால் விரைவில் அந்த அம்பைக்கொடு. சத்தியத்தை விட்டால் உன் இஷ்டகாமியம் கைகூடாது. உனக்குப் பாணம் வேண்டுமானானல் எங்கள் தலைவனைக் கேள்; இதுபோன்ற பல பாணங்களை அவர் கொடுப்பார். அம்பு மட்டுமல்ல அநேகம் பொருள்களையும் அவர் கொடுப்பார், நற்கருமத்தை யொழித்துப் பாப பாத்திரமாகாதே என்றான்.

வேடன் கூறியதைக்கேட்ட அர்ச்சுனன் வேடா நீ என்னை பொய்யனாகக் கூறி நீயே பொய் பேசுகிறாயே, அது உன்ஜாதிக்கு அடுத்தது நான் பிரபு நீ திருடன் உன்னுடன் போர் செய்வது எனக்குத் தகுதியல்ல! உன் எஜமானனும் உன்னைப்போலத் தானே இருப்பான்? உன் தலைவன் கொடுப்பான் என்று சொல்கிறாயே; கொடுக்கத் தக்கப் பிரபுக்கள் க்ஷத்திரியர்களாகிய நாங்களேயன்றி நீங்கள் அல்ல! ராஜ குலத்தினனான நான் வேடனான உன் தலைவனை எவ்வாறு யாசிக்கலாம்? பாணத்திற்காக அவனை யாசிக்கும்படி என்னிடமே சொல்கிறாயே! என்னிடம் அநேகம் பாணங்கள் இருக்கின்றன. இந்தப்பாணம் உங்களுக்கு வேண்டுமானால் ஏன் உங்கள் தலைவனே, என்னிடம் வந்து கேட்கக் கூடாது? அவன் வந்து என்னுடன் சண்டை செய்து என்னை ஜெயித்து இதைப் பெற்றுக் கொண்டு செல்லட்டுமே! என்றான். அதைக் கேட்டதும் வேடன், நீ ஒன்றும் தெரியாதவனாக இருக்கிறாய்! நீ தவமுனிவன் அல்ல; உனக்கு நீயே மரணத்தைத் தேடி கொள்ளுகிறாய் பாணத்தைக் கொடுத்தால் சுகமடைவாய் இல்லாவிட்டால் உனக்கே துக்கம் உண்டாகும் என்று கூறினான் அதனால் அர்ச்சுனன் சினந்து அடே வேடா! உன் தலைவன் வந்தால் அவனுக்குத் தக்க பலனை உண்டு செய்வேன்! உன் தலைவனுக்கும் எனக்கும் சிறு நரிக்கும் சிங்கத்துக்கும் உள்ள உயர்வு தாழ்வுகள் இருக்கின்றன. நான் சொன்னவற்றை அவனிடம் போய்ச் சொல் அவன் இஷ்டப்படி செய்யட்டும் என்றான். வேடுவன் இனி இவனுடன் பேசுவதில் பயன் இல்லையென்று சிவபெருமானான வேடர் தலைவனிடமே திரும்பிச்சென்று நடந்தவற்றை யெல்லாம் அவரிடம் சொன்னான்.

சிவபெருமான் மகிழ்ந்து புன்னகை செய்து, தன் வேடுவப் பரிவாரங்களுடன் யுத்தத்துக்குப் புறப்பட்டார். அர்ச்சுனன் அந்த சைந்தியத்தைக் கண்டு எதிர் வந்து நின்றான். அந்தச் சமயத்தில் சிவபெருமான் மீண்டும் அந்தக் கணனை நோக்கி நீ அந்தத் தவசியிடம் சென்று எங்கள் வேடுவப்படையைப் பார், தவத்தாற் கஷ்டப்படும் நீ மோசஞ் செய்யாமல் பாணத்தைக் கொடுத்து விடு. அற்பத்துக்காக மரணமடையாதே! உன் சகோதரர்களும் உன் மனைவியும் துக்கித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீ மடிந்தால் இவ்வுலக சாம்ராஜ்ஜியத்தை இழந்து விடுவாய் என்று சொல்! என்று கூறியனுப்பினார். அவனும் அவ்வாறே சென்று, அர்ச்சுனனிடம் சிவபெருமான் சொன்னவாறு கேட்டான். அதற்கு அர்ச்சுனன் நான்க்ஷத்திரியனாக இருந்து என் முன்பு விழுந்து கிடந்த அம்பை எடுத்து மீண்டும் அதை உன்னிடம் கொடுத்தால் க்ஷத்திரிய தர்மத்திற்கே குறைவு வரும். என் சகோதரர்கள் இந்த விஷயத்தைக் கேட்டால் துக்கமடைவார்கள். சிங்கம் நரிக்குப் பயப்படாது! நான் உனக்குப் பயப்படமாட்டேன் என்றான். அதை அவ்வாறே வேடுவன் சென்று சிவபெருமானிடம் சொல்ல, சிவபெருமான் பக்தப் பிரியராகையால் அர்ச்சுனனின் வார்த்தைகளுக்கு அகமிகமகிழ்ந்து வேடர் தலைவன் வேடத்திலேயே போர் செய்யக் கருதி அர்ச்சுனனை அணுகினார்.

65. அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற கதை

தன்னெதிரில் வேடுவரூபத்துடன் போர்புரிய வந்த சிவபெருமானை அர்ச்சுனன் பார்த்தான். சர்வாந்த்யாமியான சிவபெருமானைத் தன் மனத்திலே தியானித்துத் தானும் போருக்கு வந்து பயங்கரமாகப் போர் செய்தான். சிவகணங்களாகிய வேடர்களும் பலவகையான ஆயுதங்களை அர்ச்சுனன் மீது பிரயோகித்துத் துன்புறுத்தினார்கள். சிவபெருமானும் அர்ச்சுனனோடு பயங்கரமாகப் போரிட்டார். கணங்கள் விட்ட பாணங்களையெல்லாம் அர்ச்சுனன் மத்தியிலேயே துண்டித்து எறிந்தான் சிவகணங்கள் தாம் எத்தனை ஆயுதங்களை விடுத்தும் பயனற்றுப் போனதால் நாற்புறமும் கலைந்தோடினார்கள். ஓடுகிறவர்களைப் பார்த்து. நீங்கள் பயப்படாமல் போர் செய்யுங்கள்! என்று சிவபெருமானான வேடர் தலைவர் சொல்லியும் அவர்கள் அர்ச்சுனனை எதிர்த்து நிற்பதற்கும் பயந்தார்கள். மேலும் வேடர் தலைவரும் அர்ச்சுனனும் தொடர்ந்து போர் செய்தார்கள். சிவபெருமான் மனத்திலே தயையுடையவராக இருந்தும், அர்ச்சுனன் தைரியத்தைச் சோதிக்க வேண்டிப் போர் செய்யவந்தராகையால் சிறிதும் தாக்ஷண்யம் பாராமல் சிறந்த அஸ்திரங்களை எய்தார். அர்ச்சுனன் அவற்றையெல்லாம் கண்டந்துண்டமாகச் செய்து ஓர் அஸ்திரத்தால் சிவபெருமானைக் காயப்படுத்தினான். சிவபெருமான் அர்ச்சுனனுடைய அம்புகளையெல்லாம் துண்டித்து விட்டு, அவன் அணிந்திருந்த கவசத்தையும் உடைத்து வெற்றுடலாக்கினார். அதன்பிறகு சிவபெருமானும் அர்ச்சுனனும் மல்யுத்தம் செய்யத் துவங்கினார்கள். அப்பொழுது பூமி நடுங்கியது. தேவர்கள் யாவரும் என்ன விபத்து நேரிடுமோ என்று பயந்தனர்! ககன மார்க்கத்தில் கிளம்பி, ஒருவருடன் மற்றொருவர் மற்போர் செய்தார்கள். அர்ச்சுனன் சமயமறிந்து வேடர் தலைவரின் சிரத்தின்மேல் கதையாலடித்தான். அர்ச்சுனின் அந்த அடியானது எம்பெருமானுக்கேயன்றி திருமால் பிரமன் முதலிய தேவர்களுக்கும் கருட காந்தர்வ, சித்தவித்தியாதராதி கணங்களுக்கும் நாகர், மானவர் முதலியவர்களுக்கும் சராசரப் பொருள்கள் முதலியயாவற்றுக்கும் பட்டன. சிவபெருமான் யாவுஞ் செய்யவல்லவராயினும் பக்தவாத்ஸல்யராய் அந்த அடியைப் பெற்றுக் கொண்டு அர்ச்சுனனுக்கு அபகாரம் ஒன்றும் செய்யாமல் புன்னகையுடன் அவனிடமிருந்து தப்பித்து தன்னுடைய சுந்தரமான ரூபத்தைக் காட்டியருளினார். அர்ச்சுனன் சிவபெருமானைத் தரிசித்து மனத்தில் நாணத்துடன் ஐயோ! நான் யாரைக் குறித்துத் தவஞ்செய்து கொண்டிருந்தேனோ அந்தச் சர்வேஸ்வரரோடு போர் புரிய நேரிட்டதே, எத்தகைய கொடிய காரியத்தை நான் செய்து விட்டேன்? சர்வலோகாதிகாரியாகிய சிவபெருமானின் மாயை உலகத்தையெல்லாம் மயங்கச் செய்யும், சர்வேஸ்வரன் இத்தகையவேடர் வடிவமெடுத்து வந்ததால் அல்லவோ நான் மதிமோசம் போனேன்! என்று துக்கித்து எம்பெருமானே! என்னை மன்னிக்கவேண்டும் என்று அவரது திருவடிவகளில் சாஷ்டாங்கமாக விழுந்துவணங்கினான். சிவபெருமான் அர்ச்சுனனை எழுப்பித் தேற்றி நீ என் பக்தன்! புத்திரசிரேஷ்டன். உன் வலிமையைப் பரிக்ஷிக்கக்கருதிய இத்தகைய வேடுவ உருவை எடுத்து வந்தேன்.  நீ என்னுடன் போர் புரிந்ததற்காக விசனப்பட வேண்டாம் என்று கூறி அவனைத் தழுவிக்கொண்டு தம் பிரதம கணங்களிடம் அர்ச்சுனனது பக்திச் சிறப்பைக் கூறி விட்டு அர்ச்சுனா! நான் பிரத்யக்ஷமானேன் வேண்டிய வரத்தைக் கேள். நீ என்னைப் பாணத்தால் அடித்த அடிகளைப் புஷ்பார்ச்சனையாகவே ஏற்றுக் கொண்டேன். அது என் விருப்பத்தால் நடந்தது உன் குற்றமல்ல. உனக்குக் கொடுக்கத் தக்கது ஒன்று மல்ல. நீ எவனிடத்தில் போர் செய்தாலும் சிவபெருமானைப் போரில் ஜெயித்தவன் என்ற புகழை நீ அடையச் செய்தேன். உன் மனதில் பயமும் துக்கமும் வேண்டாம் என்றார் அர்ச்சுனன் சிவபெருமானை நோக்கி, சுவாமி, தாங்கள் பக்தப்பிரியர் ஆகையால் தங்கள் திருவுளச் சம்மதப்படிச் செய்யலாம் என்று வேத சம்மதமான தோத்திரங்களால் துதிசெய்தான்.

கைலாயகிரியில் வசிப்பவனே! பிரமாதி தேவர்களில் பிரகாசமுடையவனே! ஐந்து முகமும் ஜடையும் உடையவனே! ஐந்து திருமுகங்களையுடையவனே! எப்போதும் மங்களகரமானவனே திரிநேத்திரமுடையவனே! சர்ப்பருத்திராஷ மயமான கர்ண குண்டலங்களை அணிந்தவனே! பிரசன்னமான முகத்தையுடையவனே! புன்னகையுடன் கூடிய முகமும் பிரசன்னத் திருவுருவம் கொண்டவனே! நீலகண்டனே! சத்யோஜாதஸ்வரூபியே, இடபக்கொடியை பிடித்தவனே வாமபாகத்தில் பார்வதியே அமர்த்தியவனே! பத்துத் திருக்கரங்களையுடையவனே பரமாத்மஸ்வரூபியே! டமருக கபாலங்களைத் திருகரத்தில் ஏந்தியவனே! சிரோமாலை யைத்தரித்தவனே! பரிசுத்தமான ஸ்படிக்ககல்லைப் போன்ற தேக காந்தியையுடையவனே! கற்பூரம் போலச் சிறந்தவனே! பிநாக வில்லையும் சிறந்த திரிசூலத்தையும் உடையவனே புலித்தோலையும் கரித்தோலையும் அணிந்த மெல்லிய திருவடியையுடையவனே முக்தியைக் கொடுப்பவனே நிர்க்குண சகுண சொரூபமுடையவனே காணும் பிரபஞ்ச முழுவதும் தேவரீருடைய ஸ்வரூபமேயன்றி வேறல்ல. உன் குணங்களை வர்ணிக்க சதுர்வேதங்களும் சக்தியுடையனவல்ல ஆயினும் மந்த புத்தியையுடைய நான் யாதென்று வர்ணிப்பேன்! யாவராலும் கண்டறியக் கூடாத மகானுபாவனாகிய உனக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்! நமஸ்காரம் என்னிடம் தயவு வைத்து என்னை இரட்சிக்க வேண்டும் என்று பலவாறு துதித்து வணங்கி நின்றான்.

சிவபெருமான் மகிழ்ந்து, அர்ச்சுனா! உன் மனத்தல் விரும்பியதை விரைவில் கேள். கொடுப்பேன்! என்றார் அர்ச்சுனன் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி கண்ணுதல் பெருமானே! என் பகைவர்களால் நான் அடைந்த துன்பங்கள் தங்களது திவ்ய தரிசனத்தால் ஒழிந்தன. இகலோக சுகத்தை நான் நன்றாக அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்று கூறிக் கைகட்டி நின்றான். சிவபெருமான் அவனுடைய எண்ணத்தையுணர்ந்து இந்தப் பிரமாண்டத்தில் ஒருவராலும் ஜெயிக்க முடியாத பாசுபதாஸ்திரத்தை அர்ச்சுனனுக்குக் கொடுத்து, இந்த அஸ்திரத்தால் நீ ஜெயமடைவாய்! சத்துருக்களால் வெல்வதற்கு அசக்தனாக இருப்பாய். உனக்கு எல்லாவகையான சுகங்களும் உண்டாகும். நான் கிருஷ்ணனிடம் சொல்கிறேன். அந்தக் கிருஷ்ணன் எல்லாச் சமயங்களிலும் உனக்கு உதவி செய்வான். மேலும் அவன் எனது அமிசமாகப் பிறந்தவன் நீ அவனது சகாயத்தால் சகல சத்ருக்களையும் ஜெயித்து இராஜ்யத்தை அடைவாய் என்று வரங் கொடுத்தார். தமது திருக்கரத்தை அவனது சிரசின் மீது வைத்து ; அர்ச்சுனனைப் புகழ்ந்து ஆலிங்கனம் செய்து கொண்டு அர்ச்சுனனால் பூஜிக்க பெற்று பிரமத கணங்களுடன் மறைந்தார். அர்ச்சுனன் மகிழ்ச்சியோடு தன் ஆசிரமத்தையடைந்து  தர்மராஜனைப் பணிந்து நின்றான். தேவ துந்துபிகள் முழங்கின மலர்மாரி பொழிந்தது, சிவபெருமானிடம் வரம் பெற்று வந்த அர்ச்சுனனைக் கண்டு துரோபதையும் பாண்டவர் ஐவரும் தம் உயிரே மீண்டும் வந்தது போலச் சுகம் பெற்றார்கள். அவர்களுக்குச் சுபமுண்டாவதற்கு அறிகுறியாக சுகந்த சந்தனங்கலந்த மலர்மாரி பெய்தது  சிவபெருமான் அர்ஜுனனுக்கு வரங்கொடுத்தது பற்றிப்புகழ்ந்து முடித்து விட்டதால் இனி நமக்கு ஜயம் உண்டாகும் என்று கருதியிருந்தார்கள். அப்பொழுது அர்ச்சுனன் வந்ததையறிந்த கிருஷ்ணன் அவனைப் பார்க்க அங்கு வந்து அர்ச்சுனா! சிவபெருமானே சகல துக்கங்களையும் நீக்கிச் சுகம் அளிப்பவர். ஆகையால் நானும் அவரைப் பூஜிப்பது போல நீங்களும் சிவபூஜை செய்யுங்கள் என்றார். பிறகு அவர் துவாரகையை அடைந்தார். இவ்வாறு சூதமா முனிவர் கூறினார்.

66. சிவபூஜை செய்யும் விதிமுறைகள்!

சவுனகாதி முனிவர்கள், சூதமா முனிவரை நோக்கி வியாஸரின் மாணவரே! எல்லாம் உணர்ந்தவரே! அர்ச்சுனனுக்குச் சுகம் உண்டாகும்படி வேதவியாசர் பார்த்திவ லிங்கத்தைப் பூஜிக்கும்படி உபதேசித்த விதத்தையும் எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று வேண்ட சூத முனிவர் சிவத்தியானஞ் செய்து சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! நீங்கள் நல்ல விஷயத்தையே கேட்டீர்கள். மனிதனுக்கு எப்போது அசாத்தியமான துக்கம் உண்டாகுமோ அப்போது அந்தத் துக்கம் ஒழியவும் சுகம் உண்டாகவும் முக்தியடையவும் சற்குருவைப் பணிந்து அந்தக்குருவின் மூலம் மந்திர உபதேசம் பெறவேண்டும். பிறகு நாள்தோறும் ஸ்நானம் செய்து குருவின் உபதேசக் கிரமப்படி ஆராதனை செய்ய வேண்டும். உஷத்காலத்தில் எழுந்து மலவிசர்ஜனம் (மலம் ஜலம் கழித்தல்) தந்ததாவணம் (பல் விலக்கல்) முதலிய கர்மங்களை முடித்து சிவபக்தியோடு குரு நமஸ்காரம் செய்து சிவ நாமங்களையும் தீர்த்த நாமங்களையும் ஸ்மரித்துக் கொண்டு நீராடி சிவநாமங்களைச் சொல்லி, ஆசமனம் செய்து தேகத்தின் பன்னிரண்டு இடங்களில் திருவெண்ணீறு அணிந்து சாஸ்திரோக்தமாக பூசித்து, பூதசுத்தி, பிராணப் பிரதிஷ்டைகளை மூலமந்திரத்தால் செய்து கொண்டு தேஜோ ரூபியான சிவ பெருமான் இதயத்தில் இருக்கிறார். இதயவாசியான சிவபெருமான் என் தேகத்தை ஜெபசித்தியாகும் பொருட்டு பரிசுத்தப்படுத்துவாராக என்று நினைத்து சிவ மந்திரத்தை ஜபித்து பிதுர்த்தர்ப்பணம் செய்துமுடித்து சூரியனுக்கு அர்க்கிய தானம் கொடுத்தும் பிறகு பூஜாக்கிருஹத்தை அடையவேண்டும்.

முதலில் கணபதியையும் பரிவாரத தேவர்களையும் பார்வதி தேவி யாவரையும் முறைப்படிப் பூஜித்து அதன்பிறகு பார்த்திவலிங்க பூஜையை விதிப்படி செய்யவேண்டும். அதைசெய்யும் முறையாவது பரிசுத்தமான இடத்திலுள்ள மிருத்திகையைத் தினந்தோறும் ஓம் ஸ்ரீம் அஷ்டமூர்த்தயே நம என்று மந்திரத்தை ஜெபித்து கொண்டு அதில் பிராணிகள் ஒன்றுமில்லாமல் சோதித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு முடியாமற்போனால் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியில் ஒரு மாதத்திற்கு வரும்படியாகப் போதுமான அளவு மேல் மந்திரத்தை ஜெபித்து எடுத்து வந்து வைத்துக் கொள்ளலாம். மிருத்திகையைக் கொண்டு வந்த பிறகு அத்யாதிப் பிரயோக புரஸ்ஸரமாக அங்கநியாஸ கர நியாஸங்களை செய்ய வேண்டும். அது எப்படியென்றால்.

மமோபாத்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர முத்திஸ்ய ஸ்ரீ பரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தம் ஸபேஸோபனே முஹுர்த்தே ஸ்ரீஸம்போ ராஜ்ஞ்யா ப்ரவர்தமாநஸ்ய அத்யப்ரஹ்மணா, த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹகல்பே, வைவஸ்வத மநவந்த்ரேகலியுகே ப்ரதம பாதே ஜம்பூத்வீபே பரதவர்ஷே பரதகண்டே மேரோந் தக்ஷிணதிக்பாகே ஸ்ரீஸைலஸ்ய, ஆக்நேய திக்பாஹே தேவ ப்ராமண ஸந்நிதௌ, கிருஷ்ணா, காவேரி மத்ய தேசே, அஸ்மந் வர்தமாநே வ்யாவஹாரிக சாந்த்ர ஸௌúமானேக ப்ரபவாதி ஷஷ்டி ஸ்ம்வதஸராணாம் மத்யே-ஸம்வத்ஸரே -அயனே -திதௌ மாஸே -ப÷க்ஷ-சுபதிதௌ-வாஸரயுக்தாயாம்; சுப நக்ஷத்திர சுபயோக சுபகரண ஏவங்குண விஸேஷண விஸிஷடாயாம சுபதிதௌ ஸ்கந்த கணபத்யாதி பரிவார ஸமேத ஸ்ரீபவாநீம் சங்கரமுத்திஸ்ய ஸ்ரீ பவானி சங்கர ப்ரீத்யர்த்தம் பார்த்திவ விதாநேந ஸ்ரீ பவானி சங்கர பூஜாங் கரிஷ்யே

என்று சங்கற்பம் செய்யவும்.

ஸிவாய அங்குஷ்டாப்யாந் நம பவாய தர்ஜநீப்யாந் நம ஸர்வாய மத்ய மாப்யாம் நம பசுபதயே அநாமிகாப்யாந் நம மஹா தேவாய கரிஷ்டிகாப்யாந் நம ஈசாநாய கரதல கரப்ருஷ்டாப்யாந் நம ஏவம் ஹ்ருதயாதிந்யாஸ சிவாய ஹிருதயாய நம பவாய சிரஸேஸ்வாஹா சர்வாய சிகாயைவெளஷட் பசுபதயே கவசாய ஹும் மஹாதேவாய நேத்ர த்ரயாயவஷட், ஈஸாதாய அஸ்த்ராயபட் பூர்புவஸ்ஸுவ ரோமதி திக் பந்தத்யாநம் த்யாயேந் நித்யம் மஹேஸம் ரஜித கிரிநிபஞ் சாரு சந்த்ராவதம் ஸம்ரத் நாகல்போஜ் வலாங்கம் பரசு ம்ருகவரா பீதி ஹஸ்தம் ப்ரஸந்நம பத்மாஸீகம் ஸமந்தாத் ஸ்துதமமர கணைர் வியாக்ரக்ருத்திம் வஸா நம் விஸ்வாத்யம், விஸ்வவந்த்யம் ஸகலபயாஹரம் பஞ்சவக்த்ரம் திரிநேத்ரம் கர்ப்பூர நௌரங் கருணவதாரம் ஸம்ஸாரஸாரம் பஜநேத்ரஹாரம் ஸதாவஸந்தம் ஹ்ருதயார விந்தே பவம் பவாநி ஸஹிதாந் நமாமி கைலாஸ பீடாஸ நமத்ய ஸம்ஸ்தம் பக்தைஸ் சநந்த்யாதி பிஸ்ஸேவ்ய மாநம் பக்தார்த்தி தாவாநல மப் ரமேயந் தியாயே துமாலிங்கித விஸ்வரூபம்.

என்று தியானஞ் செய்து, பிறகு சிவபூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
அப்படியில்லை யென்றால் சிவபெருமானுடைய திவ்விய மங்கள ஸ்வரூபத்தைத் தியானிக்கிறேன் என்று நினைத்தாவது சிவபூஜை செய்யலாம்.

ஹரோ மஹேஸ்வரோ தேவ சூலபாணி பிநாகத்ருக்
பசுபதிச் சிவச் சைவ யஜமான இதிக்ராமாத்

இந்த அஷ்டநாமங்களில் மிருதா ஹரணம்(மண் எடுத்துக் கொள்வதும்) நீர் விட்டுப் பிசைந்து லிங்கம் செய்வதும் பிராணப் பிரதிஷ்டை செய்வதும் அழைத்தலும் ஸ்நானம் செய்வதும் பூஜை செய்வதும் க்ஷமாபணமும் விஸர்ஜனமும் செய்ய வேண்டுவது எப்படியேன்றால்

ஹராய நம என்று மண்ணை எடுத்துக் கொண்டு. மகேஸ்வராய நம என்று பிருதிவியில் நீர் சேர்த்துச் சிவலிங்கம் செய்து சூல பாணயே நம என்று பிராணப் பிரதிஷ்டை செய்து இருத்தி பிநாக பாணயே என்றும்.

கைலாஸ சிகராத் ரம்யாத் சமாகச்சமமப்ரபோ
பூஜாம் மோம்க் ருஹாத் வாசய தோக்த புலதோபவ
யதோக்த ரூபிணம் சம்பு மஹா மாவா ஹயாம்யஹ

என்று ஆவாஹனம் செய்ய வேண்டும். இனி சொல்லவிருக்கும் மந்திர ஜபத்திற்குப் பத்தில் ஒரு பாகம் ஹோமமும், ஹோமத்திற்கு பத்தில் ஒரு பாகம் பிராமண போஜனமும் செய்ய வேண்டும், மஹாப் பிரதாபமுடைய நந்திதேவரையும் பிரமத கணங்களையும் பூஜித்த பிறகே சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும்.

நாமபிரவிவிதை: ஸ்தோத்னரர் ம்ருத்யுஞ்ஜய
ஸ்நாபயேச்ச சிவம் ஸம்யக்தே வஹ்யர் கோதகேநச

என்றும் ஸ்நானம் செய்விக்கவேண்டும். ஸ்ரீசிவாய நம என்ற மந்திரத்தாலேயே வஸ்திரதாரணம் யக்ஞோபவீதம்(பூணூல்) விபூதி தாரணம், கந்தம், அக்ஷதை, அலங்காரம், புஷ்பம் இவற்றையும் சிவாய நம என்றே சமர்ப்பிக்கவேண்டும். மேலும் தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், கர்ப்பூர நீராஞ்சனம் ஆகியவற்றையும் சிவாய நம என்றே சமர்ப்பிக்க வேண்டும். யஜமாநாய நம என்று க்ஷமாபணம் செய்து முன்பு கூறிய பூதியாயே நித்யம் என்ற தியானத்தைக் கூறி மந்திரஜபம் செய்ய வேண்டும். அதன் செய் முறையாவது

அஸ்ய ஸ்ரீ ஸதாசிவ மந்த்ரைஸ்ய
வாமதேவருஷி தேவீ பங்க்தி ஸ்சந்த
ஸ்ரீ ஸிவோ தேவதா
மமபுக்தி முக்தி ப்ராட்தயே மந்த்ரஜபே விநியோக

என்று குரு உபதேசம் செய்த மந்திரத்தைச் சேர்த்து சிவசன்னிதியிலே அநந்த பலன்களைப் பெறவேண்டி ஜெபிக்க வேண்டும். மந்திர ஜெபம் செய்யும்போது தன் மனதைப் பரிபூரணமாகச் சிவபெருமானிடம் வைத்தே ஜெபிக்க வேண்டும். சக்திக்கு ஏற்ப நூற்றெட்டுக்குக் குறையாமல் ஜெபித்து, ஜபத்தில் பத்தில் ஒரு பங்குக்குத் தர்ப்பணமும் செய்து, தர்பணத்தில் பத்தில் ஒரு பங்கு மார்ஜனமும் (தன் சிரசன் மேல் கும்பஜலத்தைப் புரோக்ஷித்தல்) செய்து சிவத் தியானம் செய்து, தன் பூஜை சத்பலன் கொடுக்கும்படி சிவபெருமானது அஷ்டமூர்த்தங்களையும்

சர்வாய க்ஷிதிமூர்த்தயே நம
பவாய ஜலமூர்த்தயே நம
ருத்ராய தே÷ஐõ மூர்த்தியே நம
உக்ராய வாயு மூர்த்தயே நம
பீமாய ஆகாயமூர்த்தயே நம
பசுபதயே ய ஜமானமூர்த்தயே நம
மஹா தேவாய ஸோமமூர்த்தயே நம
ஈசாநாய சூர்யமூர்த்தயே நம

என்று அக்ஷதை, சந்தனம், புஷ்பம் முதலியவற்றால் பூஜித்து கிருத்திய கீத கல்ல வாத்தியம் முதலியவற்றால் சிறப்புச் செய்து, அக்ஷதை புஷ்பம் இவற்றை இரு கைகளிலும் தாங்கி

தாவகஸ்த் த்கதப்ராண ஸத்வச்சித்தோஹம் ஸதாம்ருட
கிருபாநிதே இதிஜ்ஞாத்வா பூதநாதப் ரஸிதயே
அஜ்ஞாநத்ய திவாஜ் ஞாநாஜ்ஜய பூஜாதிகம்மயா
க்ருதந்த தஸ்து ஸபலங் க்ரு பயாதவ சங்கர
அஹம்பாபீ மஹாநத்ய பாவநஸ்சம ஹாந் பவாந்
இதிவிஜ்ஞாயதேவே ஸயதிச்சஸிததாகுரு
வேதை புராணை ஸித்தாந்தை நுஷி பிர்விவினதரபி
நஜஞாதோஸி மஹாதேவ குதோ ஹம்த்வாம் ஸதாஸிவ
சதாததாத்வ தீயோஸ்மி ஸர்வபானவர் மஹேஸ்வர

யான் உன்னுடையவன் உன்னிடத்தே என் சித்தத்தையும் பிராணனையும் வைத்தவன். சகல சுகங்களையும் கொடுப்பவனே! தயா சமுத்திரனே! சகலருக்கும் பிரபுவே! என் முன் தோன்றுவாயாக, நான் தெரிந்தும் தெரியாதுஞ் செய்த ஜபமும் பூஜையும் உன் தயவால் சபலமாக வேண்டும். நான் பெரும்பாவங்களைச் செய்தவன் நீயோ பவித்திரஞ் செய்வதில் சிறந்தவன். யோசித்து உனது விருப்பப்படிச் செய்யலாம். வேத புராண ஸித்தாந்தங்களைக் கற்றும் அறியவொண்ணாத நின்னை நான் எவ்வாறுஉணரவல்லேன் சர்வ பாவங்களாலும் உன்னையே நம்பி, நின்றவனாக இருப்பதால் என்னை நீயே காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி சிவபெருமானின் சிரத்தின் மீது சமர்ப்பித்து அநேகவித பிரார்த்தனைகளைச் செய்து, தேவாய நம என்றும்

யதேதா நீஞ்க் தேவேஸக்ரு பார்தம் ஸமு பாகத
ததாத்வ யாபுநர் தேவ ஸமாகந்தவ்ய மேவச

சுவாமி யான் பூஜை செய்வதற்குத் தயை செய்தது. போலவே இப்பொழுது யதாஸ்தானம் சென்று நான் நாளையத்தினம் செய்யும் பூஜைக்கு எழுந்தருள வேண்டும்! என்று விசர்ஜனம் செய்ய வேண்டும். மீண்டும் அத்யாதிப் பிரயோகத்தைக் கூறி; மந்த்ரஹீனம் கிரியாஹீனம் பக்திஹீனம் மகேச்சுவர

யத் பூஜிதம் மயாதேவ பரிபூரணந்ததஸ்துதே
அநேகஸ் கந்தாதிபரிவார சமேத
ஸ்ரீ பவானி சங்கர பார்திவ பூஜா விதாநோ ஸகலதேவாத்மக
ஸ்ரீ பவானி சங்கர ஸுப்ரீத ஸ்ஸுப்ர ஸன்னோ
வரதோபவது ஏதத்பலம் ஸ்ரீசிவார்ப்பணமஸ்து

என்று பூஜையை முடிக்க வேண்டும். பிறகு சம்சார சம்பந்தமான காரியங்களில் பிரவேசிக்கலாம் இவ்வாறு சிவபூஜை செய்து வந்தால் இஷ்ட சித்திகள் எல்லாம் கைகூடும். இந்தப் பூஜையை ஆதிசைவ வேதியர்களை வைத்துக் கொண்டு அவர்கள் சொல்லத்தான் செய்ய வேண்டும். அவ்வாறு அந்தணர் கிடைக்காவிட்டால் தானே செய்து கொள்ளலாம் சிவபெருமானை அர்ச்சித்த புஷ்பம் அக்ஷதை ஆகியவற்றை சிவாக்கினையாக எடுத்து தன் சிரசுமேல் தரித்துக் கொள்ளலாம். இவ்விதம் பூஜிப்பவர்களுக்கு ஒருகுறையும் இராது. ஆறுமாத காலம் இவ்வாறு பூஜித்தவன் ஜீவன் முக்தனாவான். சாபாநுக்ரஹசமர்த்தனாவான் அவனைத் தரிசித்தாலே சிவ சேவை செய்த பயனும் கிடைக்கும். இதில் சந்தேகம் இல்லை இவ்விதமே முனிவர்களாகிய வேத வியாசர் முதலியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதுபோலவே ஸ்ரீ கிருஷ்ணன், இந்திரன், முதலியோர் பார்த்திவ லிங்கபூஜை செய்தார்கள். இதைக் கேட்டவர்களுக்கு நீங்காத போக பாக்கியங்கள் கைகூடும் என்று சூத முனிவர் நைமிசாரணிய வாசிகளுக்குக் கூறினார்.

67. கண்ணன் செய்த சிவபூஜை

சூதமுனிவரே! கண்ணன், தினந்தோறும் சிவபூஜை செய்ததாகச் சொன்னீர்களே அவர் எந்தச் சமயத்தில் பூஜித்தார் என்பதை எங்களுக்குச் சொல்ல வேண்டும்! என்று நைமிசாரணிய வாசிகள் கேட்டார்கள் சூதபுராணிகர் கூறலானார்.

ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பிருந்தாவனத்திலிருந்து வடமதுரையை அடைந்து கம்ஸன் முதலியவர்களைச் சங்கரித்து, வசுதேவர் தேவகி முதலானவர்களை சிறைமீட்டு; சகல யாதவர்களையும் அழைத்து உக்கிரசேன ராஜனுக்குப் பட்டங்கொடுத்துப் பரிபாலித்து வந்தார். பிறகு ஸ்ரீ கிருஷ்ணன் தந்தையால் உபநயனம் செய்விக்கப் பெற்று அவந்தி பட்டணத்திலுள்ள சாந்தீபன் என்ற குருவையடைந்து சேவித்து, அவரால் சிவபஞ்சாக்ஷர மந்திர உபதேசம் பெற்று அந்தச் சிவமந்திரப் பிரபாவத்தால் குறுகிய காலத்திலேயே சகல வித்தைகளையும் கற்றுணர்ந்து முதலையால் விழுங்கப்பட்டு மறைந்த அந்தக் குரு புத்திரனைக் கொண்டு வந்து, குரு காணிக்கையாகக் கொடுத்து; மதுராபுரியை அடைந்து; அநேக தைத்தியர்களுடன் போர் செய்தார். தைத்தியவீரர்கள் மேன்மேலும் யாதவ வீரர்களைத் துன்புறுத்துவதைக் கண்டு சமுத்திரத்தில் துவாரகாபுரியில் யாவரையும் இருக்கச் செய்து அப்பட்டணத்தில் சகல சம்பத்துக்களையும் உண்டாக்கி முசுகுந்தனை அனுக்கிரகித்து காலயவனன் முதலிய ராக்ஷஸர் மேன்மேலும் போருக்கு வந்ததால்  ரைவதகிரியை அடைந்து சிவபூஜா துரந்தரரான உபமன்யு முனிவரை தரிசித்து சத்துருஹீனம் எவ்வாறு உண்டாகும் என்று கேட்டார். அதற்கு அந்த உபமன்யு முனிவர் நீ விஷ்ணு ஸ்வரூபியாகையால் சிவபெருமானை நீ ஏன் ஆராதிக்கக்கூடாது? தன்னைச் சேவித்தவர்களுக்குச் சகாயனாக இருக்கச்சிவபெருமான் காத்திருக்கின்றவர் ஆகையால் நீ சிவபூஜை செய்யும் பக்ஷத்தில் சகல சத்துருக்களையும் ஜயிப்பாய்! என்று கூறி சிவமந்திரத்தை உபதேசித்தார். அது போல ஸ்ரீகண்ணனும் ஸப்தமாஸ தீøக்ஷயை வகித்து கமலம் வில்வம் சதபத்திரம் குசை காவீரம், அறுகு, வெள்ளெருக்கு முதலிய அநேகவிதமான மலர்களைக்கொண்டும் தியானயோகத்தாலும் பூஜைசெய்தார் அதனால் சிவபெருமான் கண்ணனின் பக்திக்கு மகிழ்ந்து காட்சியளித்து, கிருஷ்ணா! நீ விரும்பிய வரத்தைக் கேள்! என்றார்.

சிவபெருமானே! உம் பரிபூரண கடாட்சத்தால் யாவும் எனக்கு இருந்தும் தைத்தியர்களுடைய தொந்தரவிலிருந்து நீங்குவதற்காகவே உம்மைச் சரணம் அடைந்தேன் பூர்வத்தில் என் பெரியோர் யாவரும் உம்மை ஆராதித்திருக்கிறார்கள். பிரமனும் உம்மை உபாசித்திருக்கிறான். ஆகையால் நீர் எனக்கும் அருள்புரிய வேண்டும் என்றார் கண்ணன் அதற்கு சிவபெருமான் ஓ கிருஷ்ணா! உனக்குத் தனதான்ய சம்பத்துக்களும் புத்திரர்களும் அநேகம் ஸ்திரீகளும் விசேஷமான சத்துரு சங்கார சமர்த்தும் உண்டாகும்! என்று வரம் கொடுத்தார், அப்போது அங்கிருந்த பார்வதிதேவியும் மகிழ்ந்து பல வரங்களையும் கொடுத்தாள் சிவசக்தியர் கொடுத்த வரங்களால் கண்ணபிரான் மகிழ்ந்து மகாதேவா பூர்வத்தில் சுதர்சனம் என்னும் சக்கரத்தை எனக்கு கொடுத்துக் காத்தீர் அந்தச் சக்கரத்தால் ராட்சஸர்களை ஜெயித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதும் வரங்கள் பலவற்றைத் தந்தீர் என்று விசேஷமாகப் போற்றிப் பூஜித்தார். கருணாநிதியான சாம்பவமூர்த்தி நீ போவாயாக உனக்கு விசேஷமான சுபங்கள் உண்டாகத் தயை செய்வோம் என்று கூறியனுப்பி வைத்தார், கிருஷ்ணன், துவாரகையை அடைந்து. மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தார். இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வரம் கொடுத்து வில்வேஸ்வரர் என்ற பெயருடன் அந்த ரைவதகிரியில் கோயில் கொண்டருளி தன்னைச் சேவிப்பவர்களுக்கு நன்மைகளை அனுக்கிரகித்துக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணன் ஏழுமாத காலமும் வில்வதளங்களாலேயே சிறப்பாக அருச்சனை செய்த காரணத்தால் அந்தச் சிவலிங்க மூர்த்தத்துக்கு வில்வேஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. அன்று முதல் ஸ்ரீகிருஷ்ணன் சகல சாம்ராஜ்யங்களையும் கொடுக்கும் சிவபெருமானைச் சேவித்து வந்தார் முனிவர்களே! இந்தச் சரிதத்தைக் கேட்டவர்கள் சகலபாவங்களிலிருந்தும் நீங்குவர்! இவ்வாறு சூதமுனிவர் கூறினார்.

68. திருமால் சக்கிராயுதம் பெற்ற சரிதை

சூத முனிவரே! விஷ்ணுமூர்த்திக்குச் சிவபெருமான் சக்கிராயுதம் கொடுத்தார் என்று கிருஷ்ணமூர்த்தி, தோத்திரஞ் செய்ததாகச் சொன்னீர்களே! தாங்கள் யாவும் அறிந்தவராகையால் அந்தச் சரிதத்தையும் எங்களுக்குச் சொல்ல வேண்டுகிறோம்! என்றார்கள் சவுனகாதி முனிவர்கள். சூதமுனிவர் கூறலானார். முனிவர்களே! ஒரு காலத்தில் பலசாலிகளான அரக்கர்கள் அதிகமாகி உலகங்களைப் பீடித்துத் தர்ம நாசம் செய்து வந்தார்கள். அதனால் தேவர்கள் அனைவரும் சங்கடப்பட்டு விஷ்ணுமூர்த்தியை அடைந்து பரமாத்மாவே! எங்கள் விஷயத்தில் தயை வைக்க வேண்டும். தைத்தியர்களால் நாங்கள் மிகவும் துன்பப்படுகிறோம். நாங்கள் எங்கே போவோம்? காத்தல் கடவுளான தங்களையடைந்தோம்! என்று பிரார்த்தித்தார்கள். திருமால் அவர்களை நோக்கி, அமரர்களே! அஞ்சாதீர்கள் நான் சிவபெருமானை ஆராதித்து அவரருளால் உங்களைக் காப்பேன் பகைவர்கள் பலவான்களாயிருப்பதால் பிரயத்தனம் செய்து வெல்ல வேண்டியிருக்கிறது. அதற்காகவே சிவாராதனை செய்கிறேன் என்றார். தேவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து தங்கள் இருப்பிடங்களை அடைந்தார்கள்.

அதன்பிறகு விஷ்ணு கைலாயமலைக்குச் சென்று சிவபெருமானைக்குறித்துத் தவஞ்செய்யக் கருதி ஹோமகுண்டம் அமைத்து யாகம் வளர்த்தி. பார்த்திவ பூஜாவிதானமான பலவித ஸ்தோத்திரங்களாலும் மந்திரங்களாலும் சேவித்து மானஸ ஸரஸிலிருக்கும் தாமரை மலர்களால் பூஜித்து பத்மாசனத்தில் வீற்றிருந்து யோக நிலையில் இருந்தார். அவர் அநேக காலம் பூஜை இயற்றியும் சிவபெருமான் காட்சியளிக்காததால் திருமால் கடின தவத்தையும் சிவபூஜையையும் மேற்கொண்டு பலகாலம் செய்து வந்தார். அப்போதும் சிவபெருமான் தோன்றாமல் இருக்கவே அவரது ஆயிரம் திருநாமங்களையும் தியானித்து ஆயிரங்கமலங்களால் அர்ச்சனை செய்யச் சங்கற்பம் செய்து ஆயிரம் தாமரைகளைச் சேகரித்து வந்து ஒவ்வொரு திருநாமத்துக்கு ஒவ்வொரு மலராக அர்ச்சித்து வந்தார். அவரது பக்தியைச் சிவபெருமான் பரீட்சிக்க விரும்பிக் கடைசியில் ஒரு திருநாமத்துக்கு ஒரு மலர் குறையும்படிச் செய்தார். அதனால் திருமால் தம் சிவ பூஜா நியமத்துக்கு குறைபாடு ஏற்படுவதைச் சகிக்காமல் எனது கண் தாமரை மலரேயாகும் இதனாலேயே என் பூஜையை முடிப்பேன் என்று அதனைப் பறிக்கத் தொடங்கினார். அப்போ சிவபெருமான் அவர் முன்பு காட்சியளித்து விஷ்ணுவே! உன் கண்ணைப் பறிக்கவேண்டாம். உன் பக்திக்கு மகிழ்ந்தேன் வேண்டியவரம் கேட்டால் தருகிறேன். உனக்குக் கொடுக்கக் கூடாதது எதுவுமில்லை என்றார். அதற்கு மகா விஷ்ணு சங்கரா! நீர் அறியாதது யாதுமில்லை. உலகங்கள் தைத்தயர்களால் துன்புறுகின்றன. யாவரும் சுகமடைவதற்கும் தைத்ய சங்காரம் செய்வதற்கும் தக்க ஆயுதம் எதுவும் என் கையில் இல்லை. எனவே உம்மைச் சரணடைந்தேன்! என்று கூறித்துதித்தார் சிவபெருமான் விஷ்ணுவுக்கு இரங்கி சுதர்சனம் என்ற சக்கரா யுதத்தைக் கொடுத்தருளினார், அதைப் பெற்றுக் கொண்ட விஷ்ணு

கமலாநாம் ஸஹஸ்ரந்து ஹ்ருதமே கங்கரேணச
நஞ்ஞானு விஷ்ணு நாதச்ச மாயாரணமத்புதம்
ந்யுநந்தச் சாபிதத்ஜ் ஞாத்வா நேத்ரமேக முதாஹ்ருதம்
தந்தீருஷ்ட் வாசப்ரஸ ந்நோ பூச்சரங்கரஸ் ஸர்வது க்கஹா
தைத் யாந்ஹந்துங்கதந்தேவ ஹ்யாயு தந்தப் ப்ரவர்ததே
கிங்க ரோமிக் வகச்சாமி ஸரணந்த்வா முபாகத
இத்யுக்த்வாச நமஸ்க்ருத்ய ஸிவாய பரமாத்மநே
ஸ்திதஸ்சை வாக்ர தோ தேவ ஸ்வயஞ்சஸுõரபீடித
ததா தஸ்மைஸ்வயம் ஸ்ம்யு சக்ரஞ் சதத்தவாந்ப்ரபு
தேஸ நவ பீடிதே விஷ்ணு தைத்யாம்ஸ்ச பலவத் தராந்

சிவபெருமானிடம் உத்திரவு பெற்றுச் சகல தைத்தியர்களையும் சங்காரம் செய்தார்.
இவ்வாறு சூதமுனிவர் சொன்னதும் அவரைச் சவுனகாதி முனிவர்கள் வணங்கி வியாசரின் சீடரே! விஷ்ணு மூர்த்தி சிவபெருமானைப் பூஜித்த சஹஸ்ரநாமங்கள் யாவை? எந்த சஹஸ்ர நாம பூஜையால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து விஷ்ணுவுக்குச் சக்கராயுகத்தை அனுக்கிரகித்தாரோ, அந்தச் சஹஸ்ரநாமத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள் சூத முனிவர் அதைக் கூறலானார்.

69. சிவ சஹஸ்ர நாமம் (சிவ நாம ஆயிரம்)

முனி சிரேஷ்டர்களாகிய நைமிசாரணிய வாசிகளே நான் வியாச மகரிஷியிடம் எவ்வாறு கேட்டிருக்கிறேனோ அவ்வாறே சொல்லுகிறேன். கேளுங்கள் விஷ்ணுவினால் சிவபெருமான் மகிழ்ச்சியடையும் படி ஸ்தோத்தரிக்கப்பட்டதும் புண்ணிய கரமுமான சிவஸஹஸ்ர நாமங்களை இப்போது சொல்லுகிறேன் விஷ்ணு வாக்கியம்.

ஸ்ரீ விஷ்ணு நுவாச:

ஓம் ஸிவோ ஹரோம்ரு டோருத்ர நம:
ஓம் புஷ்கர நம:
ஓம் புஷ்பலோசன நம:
ஓம் அந்திகம்ய நம:
ஓம் ஸதாசார நம:
ஓம் ஸர்வ ஸம்புர் நம:
ஓம் மஹேஸ்வர நம:
ஓம் சந்த்ராபீடஸ் சந்த்ர மௌலீர் விஸ்வம் விஸ்வா மரேஸ்வர வேதாந்தஸார ஸந்தோஹ நம:
ஓம் கபாலீ நீலலோஹித நம:
ஓம் தியாநா தாரோ பரிச்சேத்யோ கௌரீ பர்த்தா கணேஸ்வர நம: 10

ஓம் அஷ்டமூர்த்திஸ்த்ரிவர்கஸாதன நம:
ஓம் ஞானகம்யோ த்ருடப்ரஜ்ஞோ தேவதேவ ஸ்த்ரிலோசன நம:
ஓம் வாமதேவோ மஹாதேவ நம:
ஓம் படுபரிப்ரு டோத்ருட நம:
ஓம் விஸ்வரூபோ விரூபா÷க்ஷõ வாகீஸ நம:
ஓம் சுசி ஸத்தம் நம:
ஓம் ஸர்வப்ரமாண ஸம்வாதீ வ்ருஷாங்கோ விருஷவாஹந நம:
ஓம் ஈஸ நம:
ஓம் பிநாகீ கட்வாங்கீ சித்ரவேஷஸ் சிரந்தந நம:
ஓம் தமோ ஹரோ மஹா யோகீ கோப்தாப்ரஹ்மாசதூர்ஜடி நம: 20

ஓம் காலகால நம:
ஓம் க்ருத்திவாஸா நம:
ஓம் ஸுபக நம:
ஓம் ப்ரணவாத்மக நம:
ஓம் கூக்நத்ர நம:
ஓம் புரு÷ஷாஜுஷ்யோ துர்வாஸா புரஸாஸந நம:
ஓம் திவ்யாயுத ஸ்கந்த குரு நம:
ஓம் பரமேஸ்டீ பராத்பர நம:
ஓம் அநாதிமத்ய நிதநோ கிரீஸோ கிரிஜா தவ நம:
ஓம் குபேர பந்து நம: 30

ஓம் ஸ்ரீகண்டோ லோக, வர்ணோத்த மோம்ருது நம:
ஓம் ஸமாதி வேத்ய நம:
ஓம் கோதண்டீ நீலகண்ட நம:
ஓம் பரஸ்வதீ நம:
ஓம் விஸாலா, ÷க்ஷõம் ருநவ்யாத நம:
ஓம் ஸுரேஸ நம:
ஓம் ஸுர்யதாபந தர்மதாம க்ஷமா நம:
ஓம் ÷க்ஷத்ரம் பகவாந் பகநேத்ரபித் உக்ர நம:
ஓம் பசுபதி ஸ்தார்க்ஷய நம:
ஓம் ப்ரியபக்த நம 40

ஓம் பரந்தப நம:
ஓம் தாதாதயாச ரோதக்ஷ நம:
ஓம் கர்மந்தீ காமஸாஸந நம:
ஓம் ஸ்மஸாநநிலய நம:
ஓம் ஸுக்ஷ்ம நம:
ஓம் ஸ்மஸானஸ்தோ மஹேஸ்வர நம:
ஓம் லோக கர்த்தா ம்ருகபதிர் மஹாகர்த்தா மஹாஷதி நம:
ஓம் உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞானகம்ய நம:
ஓம் புராதந, நீதி நம:
ஓம் ஸுநீதி நம:  50

ஓம் ஸுத்தாத் மாஸோம் நம:
ஓம் ஸோமாத நம:
ஓம் ஸுகி ஸோக போம்ருதப நம:
ஓம் ஸெளம்யோ மஹாதேஜோ மஹாத்யுதி நம:
ஓம் தேஜோம்யோம் ருதமயோந்நமயச்ச ஸுதாபதி நம:
ஓம் அஜாத ஸத்ருரா லோக நம:
ஓம் ஸம்பாவ்யோ ஹவ்ய வாஹந நம:
ஓம் லோக கரோ வேதகர நம:
ஓம் ஸுத்ரகார நம:
ஓம் ஸநாதந மஹர்ஷி கபிலாசார்யோ விசுவதீப்திர் விலோசந நம: 60

ஓம் பிநாக பாணிர் பூதேவ நம:
ஓம் ஸ்வஸ்தித் ஸ்வஸ்திக் ருத்ஸுதீ தாத்ருதாமாதாமகர நம:
ஓம் ஸர்வச ஸர்வகோசர நம:
ஓம் ப்ரஹ்மஸ்ருக் விசுவஸ்ருக் ஸர்க நம:
ஓம் கர்ணி கார நம:
ஓம் ப்ரிய, கவி நம:
ஓம் ஸாகோவி ஸாகோகோ ஸாக நம:
ஓம் ஸிவோபீஷக நுத்தம நம:
ஓம் கங்காப் லவோதகோபவ்ய? புஷ்கல நம:
ஓம் ஸ்தபதி நம: 70

ஓம் ஸ்திர நம:
ஓம் விஜிதாத்மா விஷயாத்மா பூதவாஹநா ஸாரதி ஸகணோ கணகாயச்சஸுகீர் திக்சிந்ந ஸம்ஸய நம:
ஓம் காமதேவ நம:
ஓம் காமபாலோ பஸ்மோத் தூலித விக்ரஹ, பஸ்மப்ரியோ பஸ்மஸாயீ காமிகாந்த நம:
ஓம் க்ருதாகம ஸமாவர்தோ நிவ்ருத் தாத்மா தர்மபுஞ்ஜ நம:
ஓம் ஸ்தாஸிவ நம:
ஓம் அகல்மஷச்சதுர் பாஹுர் துராவாஸோ துராஸத நம:
ஓம் துர்லமோதுர்க மோதுர்க நம:
ஓம் ஸர்வாயுத விஸாரத நம:ஓம் அத்யாத்ம யோகநிலய நம:
 80

ஓம் ஸுதந்து ஸிதந்து வர்தந நம:
ஓம் ஸுபாங்கோ லோக ஸாரங்கோ ஜகதீஸோ நம:
ஓம் ஜநார்தந நம:
ஓம் பஸ்மசுத்திகரோ மேருரோஜஸ்வீ சுத்த விக்ரஹ அஸாத்ய நம:
ஓம் ஸாதுஸாத் யச்ச ப்ருத்ய மர்கடரு பத்ருக் ஹிரண்யரேதா நம:
ஓம் பௌராணோரிபு ஜீவ ஹரோ பல நம:

ஓம் மஹாஹ்ரதோ மஹாகர்த்த நம:
ஓம் ஸித்த நம:
ஓம் ப்ருந்தார வந்தித நம:
ஓம் வ்யாக்ர சர்மாம் பரோவ்யாலீ மஹா பூதோ மஹாநிதி நம: 90

ஓம் அம்ருதா ஸோம்ருதவபு நம:
ஓம் பாஞ்சஜந்ய ப்ரபஞ்ஜந நம:
ஓம் பஞ்சவிம்ஸதி தத்வஸ்த, பாரிஜாத நம:
ஓம் பராவர ஸுலப நம:
ஓம் ஸுவ்ரத குரோப்ரம் ஹவேத நிதிர் நிதி நம:
ஓம் வர்ணாஸரம குருவர்ணி ஸத்ரு ஜித்சத்ருதாபந நம:
ஓம் ஆஸ்ரம நம:
ஓம் க்ஷபண நம:
ஓம் க்ஷõமோஜ்ஞானவாநச லேசுவர நம:
ஓம் ப்ரமாண பூ தோதுர்ஜ்ஞேய நம100

ஓம் ஸுபர்ணோ வாயு வாஹந நம:
ஓம் தநுர்தரோ தநுர்வேதோ குணராசிர் குணாகர நம:
ஓம் ஸத்ய நம:
ஓம் ஸத்ய பரோதீனோ தர்மாங்கோதர்ம ஸாதந நம:
ஓம் அநந்தத்ருஷ்டிரா தந்நோ தண்டோத்மயிதாதம நம:
ஓம் அபிவாத்யோ மஹாமாயோ விசுவகர்மா விஸாரத வீதராகோ விநீதாத்மா தபஸ்வீ பூத பாவந நம:
ஓம் உந்மத்தவேஷ நம:
ஓம் ப்ரசந்நோ ஜுதகாமோ ஜிதப்ரிய நம:
ஓம் கல்யாண ப்ரக்ருதி நம:
ஓம் கல்ப ஸர்வலோக ப்ரஜாபதீ நம: 110

ஓம் தரஸ்வீதார கோதீமாந் ப்ரதாநப்ரபு ரவ்ய லோக பரலோந்தர் ஹி தாத்மா கல்பாதி நம:
ஓம் கமலேக்ஷண நம:
ஓம் வேத சாஸ்த்ராந்த தத்வஜ்ஞோ நியமோ நியதாஸ்ர சந்திரஸுர்ய நம:
ஓம் சநி கேதுர்வராங்கோவித் ருமச்சவி, பக்திவசிய நம:
ஓம் பரப்ரஹ்மம்ருக பாணார் பணோநக, அத்ரி ரத்ரியாலய நம:
ஓம் காந்த நம:
ஓம் பரமாத்மர்ஜக த்குரு நம:
ஓம் ஸர்வகர்மா லயஸ் துஷ்டோ மங்கல்யோ மங்கலாவ்ருத நம:
ஓம் மஹாதபா தீர்கதபா நம:
ஓம் ஸ்தவிஷ்ட நம: 120

ஓம் ஸ்தவிரோத்ருய நம:
ஓம் அஹஸம்வத்ஸ் ரோவ்யாப்தி, ப்ரமாணம் பரமந்தப நம:
ஓம் ஸம்வத்ஸரக ரோமந்த்ர ப்ரத்யய நம:
ஓம் ஸர்வ தர்ஸந நம:
ஓம் அஜ நம:
ஓம் ஸர்வேசுவர நம:
ஓம் ஸித்தோ மஹாரேதா மஹா பவ நம:
ஓம் யோகி யோக்யோ மஹா தேஜோ! ஸித்தி நம:
ஓம் ஸர்வாதி நக்ரஹ வஸுர்வஸுமநா நம:
ஓம் ஸத்ய நம: 130

ஓம் ஸர்வ பாப ஹரோஹரா நம:
ஓம் ஸுகீர்தி நம:
ஓம் சோபந நம:
ஓம் ஸ்ரீமா நவாவ்ம ஸகோசர நம:
ஓம் அம்ருத நம:
ஓம் சாசுவத நம:
ஓம் சாந்தோ பாண ஹஸ்த நம:
ஓம் ப்ரதாபவாந் கமண்டலு தரோதந்வீ வேதாங்கோ வேதவிந்முநி நம:
ஓம் ப்ராஜ்ஷ்ணுந் போஜனம் போக்தா லோகநாதோதுராதர நம:
ஓம் அதீந்திரியோ மஹாமாய நம: 140

ஓம் ஸர்வவாஸஸ் சதுஷ்பத நம:
ஓம் காலயோகீ மஹா நாதோ மஹோத்ஸாஹோ மஹா பல மஹாபுத்திர் மஹா வீர்யோ பூதசாரீ புரந்தர நம:
ஓம் நிஸாசர நம:
ஓம் ப்ரேதசாரீ மஹாசக்திர் மஹாத்யுதி நம:
ஓம் அநிர்தேஸ்யவபு ஸ்ரீமாந்த் ஸர்வாசார்ய மநோகதி நம:
ஓம் பஹு ஸ்ருதோ நம:
ஓம் மஹா மாயோ நியதாத்மா த்குவோ த்ருவ நம:
ஓம் ஓஜஸ்தேஜோ த்யுதிதரோ நர்தக நம:
ஓம் ஸர்வ ஸாஸக ந்ருத்ய ப்ரியோ ந்ருத்யநித்ய நம:
ஓம் ப்ரகாஸாத்மா ப்ரகாஸக நம: 150

ஓம் ஸ்பஷ்டாக்ஷரோ புதோ மந்த்ர் நம:
ஓம் ஸமாந ஸாரஸம்ப் லவ நம:
ஓம் யுகாதி க்ருத் யுகாவர்தோ கம்பீரோவ்ருஷ வாஹந நம:
ஓம் இஷ்டோ விசிஷ்ட நம:
ஓம் சிஷ்டேஷ்ட நம:
ஓம் ஸாபபஸாரபோதநு நம:
ஓம் தீர்த ரூபஸ்தீர்த நாமாதீர்தாத்ருஸ்ய நம:
ஓம் ஸ்துதோர்தத, அபாந் நிதிர திஷ்டாநம் விஜயோஜயகாலவித் நம:
ஓம் ப்ரதிஷ்டித ப்ரமாணஞ்ஞோ ஹிரிண்யகவசோ ஹரி நம:
ஓம் விலோசந நம: 160

ஓம் ஸுரகணோ வித்யே ஸோபிந்து ஸம்ஸ்ரய பாலரூபோ பலோந் மத்தோ விகர்தாகஹ நோகுஹ நம:
ஓம் கரணங் காரணங் கர்த்தா ஸர்வ பந்த விமோசனா நம:
ஓம் வ்யவஸாயோ மஹா சாப ஸ்திக்மாம் சுர்பதிர நம:
ஓம் கக நம:
ஓம் அபிராம நம:
ஓம் ஸூஸரண ஸுப்ரஹ்மண்ய ஸூதாபதி மகவாந்கௌஸிகோ மாந்விராம  நம:
ஓம் ஸர்வஸாதந நம:
ஓம் லலாடா÷க்ஷõ விஸ்வதேஹ நம:
ஓம் ஸார ஸம்ஸார சக்ரப்ருத் அமோக தண்டோ மத்யஸ்தோ ஹிரண்யோ ப்ரஹ்ம வாசஸி நம:
ஓம் பரமந்த பரோமாயீ ஸ்ம்மரோவ்யாக்ரலோசந ருசிர் விரஞ்சி நம: 170

ஓம் ஸ்வர்பந்துர் வாசஸ்பதிரஹர்பதி நம:
ஓம் ரவிர்விரோசந ஸ்கந்த நம:
ஓம் ஸாஸ்தா வைவஸ்வதோயம நம:
ஓம் யுக்திருந் நதகீர்திஸ்ச ஸாதுராக பரஞ்ஜாய நம:
ஓம் கைலாஸாதிபதி நம:
ஓம் காந்த நம:
ஓம் ஸவிதார விலோசந நம:
ஓம் வித்வத்த மோவீதபயோ விஸ்வ பர்தா நிவாரித நம:
ஓம் நித்யோ நித்ய கல்யாண நம:
ஓம் புண்ய ஸ்ரவணகீர்தா நம: 180

ஓம் தூரஸ்ரவா விஸ்வஸஹோத்யே யோது நம:
ஓம் க்கப்ரநாஸக நம:
ஓம் உத்தாரணோ துஷ்க்ருதி ஹாவிஞ்ஞேயோ துஸ்ஸ ஹோபவ நம:
ஓம் அநாதிர்பூர் புவோலக்ஷ்மி நம:
ஓம் கிரீடித்ரிதஸாதிப நம:
ஓம் விஸ்வ கோப்தா விஸ்வகர்தா ஸுவீரோரு சிராங்கத நம:
ஓம் ஜநநோ ஜகஜந்மாதி ப்ரீதிமாந் நீதி மாந்தவ நம:
ஓம் வசிஷ்ட நம:
ஓம் கஸ்ய போபாதுர் பீமோ பீம பராக்ரம நம:
ஓம் ப்ரணவ நம: 190

ஓம் ஸப்ததா சாரோ மஹாகாளோ மஹாதந நம:
ஓம் ஜந்மாதி போமஹதேவ நம:
ஓம் ஸகலாகமபாரக நம:
ஓம் தத்வந்தத்தவ விதேகாத்மா விபுந்விஸ்வ விபூஷண நம:
ஓம் நுஷிர்ப்ராஹ்மண ஐஸ்வர்ய ஜந்மம் ருத்யுஜராதிக நம:
ஓம் பஞ்ச யஜ்ஜஸமுத்பத்திர் விஸ்வேஸோ விமலோ தய நம:
ஓம் ஆத்மயோநி ரநாதயந்தோ வத்ஸலோ பக்த லோகத்ருக் காயத்ரீ வல்லப நம:
ஓம் ப்ராம்ஸுர் விஸ்வாவாஸ நம:
ஓம் ப்ரபாகர நம:
ஓம் ஸீஸுர் கிரிரத ஸம்ராட் ஸுஷேண நம: 200

ஓம் ஸுரஸத்ஹா அமோகோ ரிஷ்ட நேமிஸ்ச குமுதோ விக்தஜ்வர ஸவயஞ்ஜ் யோதிஸ்தநுஜ்யோதி ராத்மஞ்யோதிர சஞ்சல நம:
ஓம் பிங்கல கபில ஸ்ம ஸ்ருர் பால நேதர ஸ்த்ரயீதநு நம:
ஓம் ஜ்ஞாநஸ்கந்தோ மஹாநீதிர் விஸ்வோத் பத்திரு பப்லவ நம:
ஓம் பகோ விவஸ்வாநாதித்யோ யோக பாரோதிவஸ்பதி நம:
ஓம் கல்யாண குணநாமாச பாபஹா புண்யதர்ஸந நம:
ஓம் உதாரகீர்தி ருத்யோகீ ஸத்யோகீ ஸதஸந்மய நம:
ஓம் நக்ஷத்ரமாலீ நாகேஸ நம:
ஓம் ஸ்வாதிஷ்டாந பதாஸ்ரய நம:
ஓம் பவித்ர நம:
ஓம் பாபஹாரீச மணி பூரோந போகதி நம: 210

ஓம் ஹ்ருத் புண்டரீக மாஸீத நம:
ஓம் ஸுக்ர நம:
ஓம் ஸாந்தோவ்ருஷாகபி நம:
ஓம் உஷ்ணோக்ருஹபதி நம:
ஓம் க்ருஷ்ண நம:
ஓம் ஸமர்தோநர்த நாஸக நம:
ஓம் அதர்மஸத்ருரஜ்ஞேய நம:ஓம் புருஹுத நம:
ஓம் புருஸ்ருத நம:
ஓம் ப்ரஹ்மகர்போ ப்ருஹத் கர்போ தர்மதேநுர் தநாகம் நம: 220

ஓம் ஜகத்திதை ஷீஸுகத நம:
ஓம் குமார குஸலாகம் நம:
ஓம் ஹிரண்ய வர்ணோ ஜ்யோதிஷ்மான் நாதா பூதரதோ த்வநி நம:
ஓம் அராகோ நயனாதய÷க்ஷõ விஸ்வாமித்ரோ தநேஸ்வர நம:
ஓம் ப்ரஹ்ம ஜ்யோதிர் வஸுதாமா மஹாஜ்யோகிர நுத்தம நம:
ஓம் மாதா மஹோ மாதரிஸ்வா நபஸ்வாக் நாகஹாரத்ருக் புலஸ்த்ய நம:
ஓம் புலஹோ கஸ்த்யோ ஜாது கர்ண்ய நம:
ஓம் பராஸர நம:
ஓம் நிரா வரண நிர்வாரோ வைரஞ்ச் யோவிஷ்ட ரஸ்ரவா நம:
ஓம் ஆத்மபூர நிருத்தோத்ரிர்ஜ்ஞானமூர்திர் மஹாயஸா நம: 230

ஓம் லோக வீராக்ரணீர் வீர ஸ்சண்ட நம:
ஓம் ஸத்யபராக்ரம நம:
ஓம் வ்யாலாகல்போ மஹாகல்ப நம:
ஓம் கல்பவ்ருக்ஷ நம:
ஓம் கலாதர நம:
ஓம் அலங்கரிஷ்ணு சலோ ரோசிஷ்னுர் விக்ர மோக்கத நம:
ஓம் ஆயு நம:
ஓம் ஸப்த பதிர்வேகீ ப்லவந நம:
ஓம் ஸிகிஸாரதி அஸம் ஸ்ருஷ்டோதுதிதி ஸக்ர ப்ரமாதீபாதபாஸந நம:
ஓம் வஸுஸரவா ஹவ்யவாஹ நம: 240

ஓம் ப்ரதப்தா விஸ்வபோஜந ஜப்யோஜ ராதிஸமநோ லோஹிதாத் மாதநூநபாதப்ருஹதஸ்வோநபோ
 யோரி ஸுட்ரதீ கஸ்தமிஸ்ரஹா நிதாகஸ்தப நோமேக ஸ்வக்ஷ நம:
ஓம் பரபுரஞ்ஜய ஸுகாநில நம:
ஓம் ஸுநிஷ்பக்ந நம:
ஓம் ஸுரபிஸிஸிராத்மக நம:
ஓம் வஸந்தோ மாதவோக்ரீஷ்மோ நபஸ்யோ பீஜவாஹந நம:
ஓம் அங்கிராகுரு ராத்ரேயோ விமலோ விஸ்வ வாஹந நம:
ஓம் பாவந நம:
ஓம் ஸுமதிர்வித் வாம்ஸ்த்ரைவித்யே நரவாஹந நம:
ஓம் மகோபுத்திரஹங்கார நம:
ஓம் ÷க்ஷத்ரக்ர நம: 250

ஓம் ÷க்ஷத்ரபாலக நம:
ஓம் ஜமதக்னிக் பலநிதிர்  நம:
ஓம் விகாலோ விஸ்வ காலவ நம:
ஓம் அகோரோதுத்தராயேஞ்ஞ ஸ்ரேயோநி நம:
ஓம் ஸ்ரேய ஸாம்பத நம:
ஓம் ஸைலோகக நருந்தாபோ தானவாரிரநித்தம நம:
ஓம் ரஜநீஜக கஸ்சாரு விஸால்யோ லோக கல்பந்ருக் சதுர்வேத ஸ்சர்பாவஸ் சதுரஸ் சதுரப்ப்ரிய நம:
ஓம் ஆம்நாயோத ஸமாம்நாய ஸ்தீர்ததேவ ஸிவாலய நம:
ஓம் பஹுரூபோ மஹாரூப நம:
ஓம் ஸர்வரூப ஸ்சராசர நம: 260

ஓம் ந்யாய நிர்மாய கோந்யாயீ ந்யாயகம்யோ நிரந்தர நம:
ஓம் ஸஹஸ்த்ர பாஹு ஸர்வேஸ நம:
ஓம் ஸரண்ய நம:
ஓம் ஸர்வ லோகத்ருக் பத்மாஸந  நம:
ஓம் பரஞ்ஜ்யோதி நம:
ஓம் பரம்பார நம:
ஓம் பரம்பலம் நம:
ஓம் பத்மகர்போ மஹா கர்போர் விஸ்வகர்போ விசக்ஷண நம:
ஓம் சராசரஜ்ஞோ வரதோவரே ஸஸ்து மஹா பல நம:
ஓம் தேவாஸுர குருர் தேவோ தேவா ஸுரமஹாஸ்ரய நம: 270

ஓம் தேவாதிரேவோ தேவாந்நிர் தேவாக்நிஸுகத நம:
ஓம் ப்ரபு நம:
ஓம் தேவாஸுரேஸ்வரோ திவ்யோ தேவா ஸுர மஹேஸ்வர நம:
ஓம் தேவதேவ மயோசிந்த்யோ தேவதேவாத்ம ஸம்பவ  நம:
ஓம் ஸத்யோ நிரஸுரவ்யாக்ரோ தேவ ஸிம்ஹோ திவாகர நம:
ஓம் விபுதாக்ரவஸ்ரேஷ்ட நம:
ஓம் ஸர்வதேவோத்தமோத்தம ஸிவக்ஞானரத நம:
ஓம் ஸ்ரீமாந்ஸிகி ஸ்ரீபர்வதப்ரிய நம:
ஓம் வஜ்ரஹஸ்த  நம:
ஓம் ஸித்தகட்கீ நரஸிம்ஹநிபாதந ப்ரஹ்மசாரீ லோகசாரீ தர்ம சாரீ தநாதிப நம: 280

ஓம் நந்தீநந் தீஸ்வரோ நந்தோ நகநவ்ரததர நம:
ஓம் ஸ்வர்க ஸுசி நம:
ஓம் லிங்கத் யக்ஷஸுராத் ய÷க்ஷõ யோகாத் ய÷க்ஷõயுகாலஹ நம:
ஓம் ஸ்வதர்மா ஸ்வர்கத ஸ்வர்க கர நம:
ஓம் ஸ்வரமயஸ்வந பாணாத்ய÷க்ஷõபீ ஜகர்தா தர்ம கருத்தர்ம ஸம்பவ நம:
ஓம் தம்போலோ போர்த்தவிச் சம்பு ஸர்வ பூத மஹேஸ்வர ஸமஸாந நம:
ஓம் நிலயஸ்த்ர்யக்ஷ நம:
ஓம் ஸேதுரப்ரதிமாக்ருதி லோகோத் தரஸ்புடோலோக ஸ்த்ரியம் பகோ நாக பூஷண நம:
ஓம் அந்தகாரிர் மகத்வே விஷ்ணுகந்தர பாதந நம:
ஓம் ஹுநதோ÷ஷா க்ஷயகுணோ தக்ஷõரி நம: 290

ஓம் பூஷதந்தபித் தூர்ஜடி நம:
ஓம் கண்ட பாஸுகஸகலோ நிஷ்கலோநக நம:
ஓம் அகால நம:
ஓம் ஸகலாதா நம:
ஓம் பாண்டு ராபோம் ருடோ நட , பூர்ண நம:
ஓம் பூரயிதாபுண்ய நம:
ஓம் ஸுகுமார நம:
ஓம் ஸுலோசந நம:
ஓம் ஸாமகேய ப்ரியோக்ரூர புண்யகீர்திர நாமய மநோஜ வஸ்தீர்த்தகரோ ஜடிலோ ஜீவிதேஸ்வர நம:
ஓம் ஜீவிதாந்தகரோ நித்யோ வஸுரேதா வஸுப்ரத நம: 300

ஓம் ஸத்கதி நம:
ஓம் ஸத்க்ருதி ஸித்தி நம:
ஓம் ஸஜ்ஜாதி நம:
ஓம் காலகண்டக கலாதரே மஹாகாலோ பூதஸத்ய பராயண நம:
ஓம் லோகலாவண்ய கந்தாச லோகோத்த ரஸீகாலய சந்த்ரஸஞ்ஜீவந நம:
ஓம் ஸாஸ்தா லோக கூடோமஹாதீப நம:
ஓம் லோக பந்தூர்லோகநாத நம:
ஓம் க்ருதஞ்ஞ கீர்திதக்ஷண நம:
ஓம் அநபாயோக்ஷர நம:
ஓம் காந்த நம: 310

ஓம் ஸர்வ ஸஸ்த்ர ப்ருதாம் வர நம:
ஓம் தேஜோமயோ த்யுதிதரோ லோகாதாம க்ரணீரணு நம:
ஓம் ஸுசிஸ்மித நம:
ஓம் ப்ரஸந ..... துர்ஜேயோதுரநிக்ரம நம:
ஓம் ஜ்யோதிர்மயோ ஜகந்நாதோ நிராகாரோஜலேஸ்வர ..... வீணோ மஹாகோபோ விஸோக நம:
ஓம் ஸோக நாஸந நம:
ஓம் த்ரிலோக பஸ்த்ரிலோகேஸ ஸர்வ ஸூத்திர தோஷஜ நம:
ஓம் அவ்யக்த லஷ்ணேதேவோ வ்யக்தாவ் யக்தோ விஸாம்பதி நம:
ஓம் வரஸீலோ வரகுண நம:
ஓம் ஸாரோமாந தநோமய நம: 320

ஓம் ப்ரஹ்மா விஷ்ணு நம:
ஓம் ப்ரஜாபாலோ ஹம்ஸோ ஹம்ஸகதிக்வய நம:
ஓம் வேதா விதாதா தாதாச ஸ்க்ரஷ்டா ஹர்த்தா ரசதுமுக நம:
ஓம் கைலாஸ ஸிகராவாஸி ஸர்வா வாஸீஸதா கதி நம:
ஓம் ஹிரண்ய கர்போத்ருஹிணோ பூதபாலோதபூபதி நம:
ஓம் ஸத்யோகீ யோக வித்யோகீ வரதோ ப்ராஹ்மண நம:
ஓம் ப்ரிய நம:
ஓம் தேவப்ரியோ தேவகாதோ தேவஜ்ஞோ தேவசிந்தக நம:
ஓம் விஷமா÷க்ஷõ விஸாலா÷க்ஷõ வ்ருஷதோ வ்ருஷவர்தந நம:
ஓம் நிர்மமோ நிர ஹங்காரோ நிர்மோஹா நிருயத்ரவ நம: 330

ஓம் தர்பஹாதர்ப தோத்ருப்த நம:
ஓம் ஸர்வர்து பரிவர்த்தக ஸஹஸ்ர ஜீஸஹஸ் த்ரார்கி நம:
ஓம் ஸ்நிக்தப்ருக்ருதி தக்ஷிண நம:
ஓம் பூதபவ்யபயந்நாத நம:
ஓம் ப்ரபவோ பூதி நாஸந அர்த்தோ நர்த்தோ மஹாகோஸ நம:
ஓம் பரகார்யைந பண்டித நம:
ஓம் நிஷ்கண்டக நம:
ஓம் க்ருதாநந்தோ நிர்வ்யா ஜோவ்யாஜ மர்தந நம:
ஓம் ஸத்வவாந் ஸாத்விக ஸத்யகீர்தி நம:
ஓம் ஸ்நேஹக்ருதாகம நம: 340

ஓம் அகம்பிதா இணக்ராஹி நைகாத் மானநககர் மக்ருத், ஸுப்ரீத நம:
ஓம் ஸுமுக நம:
ஓம் ஸுக்ஷ்ம நம:
ஓம் ஸுகரோத க்ஷிணாநில நந்திஸ் கந்ததரோ துர்ய நம:
ஓம் ப்ரகட ப்ரீதீவர்த்தன நம:
ஓம் அபராஜித நம:
ஓம் ஸர்வ ஸத்வோ கோவிந்த் நம:
ஓம் ஸத்வவாஹந நம:
ஓம் அத்ருத ஸ்வத்ருத நம:
ஓம் ஸித்த  நம: 350

ஓம் பூதமூர்திர் யஸோதந வாராஹா ஸ்ருங்கத்ருக் ஸ்ருங்கி பலவாநேக நாயக நம:
ஓம் ஸ்ருதப்ரகாஸ ஸ்ருதிமா ரேகபந்துர நேகக்ருத் ஸ்ரீ வத்ஸலஸி வாரம்ப நம:
ஓம் ஸாந்த பத்ர ஸமோயஸ நம:
ஓம் பூஸயோ பூஷணோ பூதிர் பூதக்ருத் பூதபாவந நம:
ஓம் அகம்போ பக்திகா யஸ்து காலஹா நீல லோஹித நம:
ஓம் ஸத்ய வ்ரதமஹாத்யாகீ நித்ய ஸாந்தி பராயண பரார்த்த வ்ருத்திர்வாதோ விவிக்ஷúஸ்துவிஸாரத ஸுபத நம:
ஓம் ஸபகர்தாச ஸுபநாமா ஸுப நம:
ஓம் ஸ்வயம் அநர்த்திதோ குண ஸாக்ஷீ த்யகர்தாகநகப்ரப  நம:
ஓம் ஸ்வபாவ பத்ரோ மத்யஸ்த யீக்ரக நம:
ஓம் ஸ்ரீக்ரநாஸந நம: 360

ஓம் ஸிகண்டிகவசீ ஸூலிஜடீமுண்டி சகுண்டலீ அம்ருத்யு நம:
ஓம் ஸர்வத்ழிக்ஸிம் ஹஸ்தே ஜோராஸிர்ம ஹாமணி நம:
ஓம் அஸங்க்யேயோ ப்ரமோ யாத்மா வீர்ய வாக் வீரியகோவித நம:
ஓம் வேத்யஸ்சைவ வியோகாத்மா பராமா முநீஸ்வர நம:
ஓம் அதுத்தமோ துராதர்÷ஷா மதுரப்ரிய தர்ஸன நம:
ஓம் ஸுரேஸி நம:
ஓம் ஸரணம் சர்வ நம:
ஓம் ஸப்தப்ரஹ்ம ஸதாங்கதி நம:
ஓம் காலபக்ஷ நம:
ஓம் கால காரீகங்கணீ க்ருத வாஸுகி நம: 370

ஓம் மஹேஸ் வாஸோமஹீபக்தா நிஷ்களங்கோ விஸ்ருங்க் கல நம:
ஓம் த்யுமணி ஸ்தரணிர் தந்ய நம:
ஓம் ஸித்தித நம:
ஓம் ஸித்தஸாதந நம:
ஓம் விஸ்வத நம:
ஓம் ஸம்வ்ருத ஸ்துல்யோ வ்யூடோரஸ்கோமஹாபுஜ நம:
ஓம் ஸர்வயோநிர் நிராதங்கோ நரநாராயணப்ரிய நம:
ஓம் ஸ்தோதாவ்யாஸ முர்திர் நம:
ஓம் நிரஸ்குஸ நம:
ஓம் நிரவத்ய மயோ பாயோ வித்யாராஸீ ரஸப்ரியா ப்ரஸாந்த புத்திரக்ஷúண்ண ஸங்க்ரஹீ நித்யஸுந்தர நம: 380

ஓம் வைய்யாக்ரதுர்யோ தாத்ரீஸ ஸாகல்ய ஸர்வரீபதி நம:
ஓம் பரமார்த்த ருருர் த்ருஷ்டி நம:
ஓம் ஸரீராஸ்ரிதவத்ஸல நம:
ஓம் ஸோமோரஸ ஜ்ஞோரஸத நம:
ஓம் ஸர்வ ஸத்வாவலம்பந நம:
ஓம் ஏவம் நாம்நாம் ஸஹஸ்ரேண துஷ்டாவ வ்ருஷபத்வஜம் நம:
ஓம் பரார்த்தயாமாஸ ஸம்புஞ்ச பூஜயாமாஸ பங்கஜை நம: 387

இத்தகைய ஆயிரம் திருநாமங்களால் ரிஷபத்துவஜ காளகண்ட திரிநேத்திரதாரரான சிவபெருமானை, விஷ்ணுமூர்த்தி பிரார்த்தனை செய்ததும் தாமரை மலர்களால் அர்ச்சனையும் செய்து கொண்டும் இருக்கும் போது சிவபெருமான் மஹா விஷ்ணுவின் பக்தியைச் சோதிக்க வேண்டி, அந்தத் தாமரை மலர்களில் ஒன்றை அர்ச்சனைக் காலத்தில் மறையச் செய்தார். விஷ்ணு, ஒரு திருநாமத்திற்கு மலர்காணாது குறைந்ததை உணர்ந்து, தாமரையிழந்த பிறகு இனி எனது கண்கள் இருந்தும் என்ன பயன்? எல்லாப் பிராணிகளுக்கும் ஊன்று கோலாகவுள்ள சர்வேஸ்வரன் சிவபெருமானே! என்று உணர்ந்து தனது கண்களில் ஒன்றைத் தோண்டியெடுத்து, மனப் பூர்த்தியாக இத்தோத்திரத்தைச் சொல்லிப் பூஜித்தார். சிவபெருமான் பிரத்தியட்சமானார். மஹாவிஷ்ணு அவரை நமஸ்கரித்து எதிர் நின்றார் பார்வதி சமேதராகத் தரிசனம் தந்த சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி, விஷ்ணுவே! எல்லா தேவ காரியங்களையும் தெரிந்து கொண்டேன் ஆகையால் சுதர்சனம் என்ற பெயரையுடைய சக்ராயுதத்தை உனக்குத் தருகிறேன் அது மிகவும் மங்களகரமானது. அதன் வடிவத்தை நீ பார்த்து மிருக்கிறாய், அது எல்லா உலகங்களுக்கும் சுகத்தையளிக்க வல்லது, உன்னுடைய இதத்திற்காக அது செய்யப்பட்டிருக்கிறது. நல்ல விரதமுடைய நீ இந்த விஷயத்தை ஆலோசித்து அறியவும். இது யுத்தக்களத்திலே, ஸ்மரித்தவுடனே தேவர்களுடைய துக்கத்தை ஒழிக்க வல்லது. இதோ சக்ரம்! இதோ எனது வடிவம். இதோ நீ செய்த ஸஹஸ்ர நாமம்! இவை மூன்றையும் கொடுத்தோம். இந்தச் சரிதத்தைப் பக்தியோடு கேட்பவர்கள் இடையிலே நீங்காத சித்திகளையடைவார்கள்.

ஸங்கார உவாச ஜ்ஞாதம் மயேதம்
ஸகலந்தேவ கார்யஞ்ஜ நார்த்தந ஸுதர்
ஸநாக்யஞ் சக்ரஞ்ச ததாமிதவ ஸோப நம யத்ரூபம்.
பவதாத்ருஷ்டம் ஸர்வலோக ஸுகாவஹம் ஹிதாய தவ தேவேஸ்
ஸ்ருதம்பாவய ஸுவ்ரத ரணாஜிரேபிஸம் ஸம்ருத்ய தேவா
நாந்துக்கநாஸதம் இதஞ் சக்ரம் இதம் ரூபம் இது நாம ஸஹஸ்ரகம் ஏஸ்ருண் வந்திததா பக்த்யா ஸித்திஸ்யஸரத நபாயி நீ
ஏவமுக்த்யாத தவுசக்ரம் ஸுர்யாயுத ஸம்பரபம்

என்று திருவாய் மலர்ந்தருளி அநேக சூரிய காந்திக்கு சமமான காந்தியையுடைய சக்ராயுதத்தைக் கொடுத்து அருளினார். விஷ்ணுவும் மிக்க மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு மஹாதேவனைப் பணிந்து பரமேஸ்வரா! என் வேண்டுதலைக் கேட்க வேண்டும் நான் துக்க நாசத்திற்காகத் தியானிப்பதற்கும் துதிப்பதற்கும் தரிப்பதற்கும் தகுதியாக இருப்பது எது? என்று கேட்டார்.

சிவபெருமான் மகிழ்ந்து விஷ்ணுவே! என்னுடைய ரூபமே சகல துக்கங்களும் விலகித் தியானிக்கத் தக்கது என் சகஸ்ர நாமங்களே துதிக்கத் தக்கது, எத்தகைய துன்பங்களும் ஒழியும்படி என் பிரசாதமாகிய சுதாசனமே தரிக்கத் தக்கது. திருமாலே இந்த சரிதத்தை யாவர் வாசிக்கிறார்களோ, அவர்களுக்கு கனவிலும் துக்கம் என்பது சம்பவியாது அரசர்கள் சங்கடப்படும் சமயத்தில் எனது சகஸ்ரநாமங்களை நூறுமுறை தியானித்தால் அவர்களது சங்கடங்கள் விலகிவிடும் அதை விதிமுறையாக ஜெயிப்பவன் சகல சுகங்களையும் அடைவான். எல்லாவித நோய்களையும் ஒழிப்பான். கல்வியை விரும்பியவன் கல்வியைப் பெறுவான் அரும்பெருங்காரியங்களை விரும்புபவன் அவற்றை அடைவான், இதில் ஐயமில்லை நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து என்னை முறைப்படி பூஜை செய்து என் சஹஸ்ர நாமத்தால் துதிப்பவன் எப்பொழுதும் என்னிடத்திலேயே வாழும் சித்தியை அடைவான். இகபர சிக்திகளை அடைவான். எட்டு மாத காலம் நாள்தோறும் முறைப்படித் தியானித்துத் துதித்தால் என்னுடைய சாயுஜ்ஜிய பதவியை அடைவான். இதில் சிறிதும் பிசகில்லை என்று கூறி ஆனந்தமயமாய் விஷ்ணுவைத் தம் திருக்கரத்தால் தடவி நான் வரதனாகையால் உனக்கு வேண்டிய வரங்களைக் கேள்! உன் தோத்திரத்தால் நான் உனக்கு வசமானேன்! என்றார்.

விஷ்ணு சிவபெருமானை மீண்டும் பணிந்து, மகேஸ்வரா! உமக்கு என்மீது இப்போது தயை வந்திருப்பதை விட விரும்பத்தக்கது ஏதேனும் இருக்கும் பட்சத்தில் நீர் தயாள ஸ்வரூபியாக இருப்பதால் ஆலோசித்துத் திருவாய் மலர்ந்தருள வேண்டும். ஆயினும் உம்மிடம் எப்போதுமே நீங்காத திடபக்தி உண்டாயிருக்க மட்டுமே வரங்கொடுக்க வேண்டும். பகவானே! உம்திருவருளால் நான் சர்வ சம்பூரணனாக இருப்பதால் வேறு ஒரு வரம் எனக்கு வேண்டுவதில்லை! என்றார். விஷ்ணுவே! உனக்கு என்னிடம் திடபக்தி உண்டாகுக நீ தேவர்கள் அனைவருக்கும் பூஜ்யனாகுக உலக சம்ரக்ஷணம் செய்யும் சக்தியைக் கொடுத்தேன். உன் பெயரைத் தியானிப்போரின் பாவங்கள் சந்தேகமின்றி ஒழியும் என்று சிவபெருமான் வரந்தந்து அந்தர்தானமானார். அதன் பிறகு திருமால் மங்களகரமான சக்ராயுதத்துடன் எப்போதும் சிவஸ்தோத்திரங்களை தியானித்துக் கொண்டு தன்னை நாடிவரும் அன்பர்களுக்கும் இந்த ஸ்தோத்திரத்தை அத்தியயனம் செய்வித்து வந்தார். இந்தச் சகஸ்ரத் திருநாமங்களால் துதிப்பவர்கள் மிகச் சிறந்த பயன்களை அடைவார்கள். இதைக் கேட்பவர்களுடைய பாபங்கள்யாவும் நசிக்கும் நைமிசாரணிய வாசிகளே திருமால் ஸ்தோத்திரம் செய்து சிவபெருமானிடத்திருந்துச் சுதர்சனம் என்ற சக்கரத்தையடைந்த சிவ சகஸ்ரநாமங்களை வியாஸ முனிவர் கூற, நான் கேட்டவிதமே உங்களுக்குச் சொன்னேன் இனி நீங்கள் கேட்க வேண்டியவிஷயத்தைக் கேட்கலாம்! இவ்வாறு சூதமா முனிவர் சொன்னார்.

70. சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

சூதமுனிவரே! நீங்கள் சொல்லிவரும் விஷயங்களாலேயே எங்கள் சந்தேகங்கள் ஒழிகின்றன சிவார்ச்சனை செய்வதில் சிறந்தபக்திமானாகிய தங்களையே கேட்கிறோம் உலகத்தில் எந்த விரதத்தை மேற் கொண்டால் சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து சகல சுகங்களையும் புத்தி முக்திகலையும் கொடுப்பாரோ அந்த விரதத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள் நைமிசாரணியவாசிகள். சூதமுனிவர் கூறலானார். முனிவர்களே! நீங்கள் என்னைக் கேட்ட இந்த விஷயத்தையே ஒவ்வொரு காலங்களிலும் பிரமனும் விஷ்ணுவும் பார்வதியும் சிவபெருமானைக் கேட்டிருக்கிறார்கள் அதற்குச் சிவபெருமான் கூறிய, பாபங்களை ஒழிக்கவல்ல, அந்த உரையாடலை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி, விஷ்ணுவே! உத்தமமானதொரு விரதத்தை உனக்குச் சொல்கிறேன். வேதங்கள் ஸ்மிருதிகள் புராணங்கள், தர்ம சாஸ்திரங்கள் இவைகளில் எல்லாம் சொல்லப்பட்டுள்ள இரகசியங்களில் எல்லாம் அதிரகசியமான விஷயத்தை உனக்குச் சொல்கிறேன். உலகத்தில் முக்தியளிக்கத் தக்கவை நான்கு. அவை சிவார்ச்சனை, உருத்திர பாராயணம், அஷ்டமி சோமவாரம் கிருஷ்ணபக்ஷத்து சதுர்த்தசி (பிரதோஷம்) இந்த மூன்று நாள் உபவாசம் காசி÷க்ஷத்திரத்தில் மரணம் என்பவையாம். இந்த நான்குமே முக்தியளிக்கத் தக்கவை. இந்த நான்கிலும் சிவராத்திரி விரதமே மிகவும் யுக்தமானது ஆகையால் புத்தி முக்திகளை விரும்புவோர். இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டியதாகும். இதைவிடச் சிறந்த விரதம் ஒன்றும் இல்லை என்றார்.

பிறைசூடிய பெம்மானே! அந்தச் சிவராத்திரி விரதத்தைப் பற்றி எளியேனுக்குச் சொல்லவேண்டும். எந்த மாதத்தில் எந்த விதிப்படி எப்படிப் பூஜிக்க வேண்டும்? இதை உலக உபகாரத்திற்காகக் கேட்கிறேன். எவ்வளவு காலம் இந்த விரதத்தை ஆஸ்ரயிக்க வேண்டும் மற்ற திதிகளை விடச் சதுர்த்தி திதி எப்படித் தங்களுக்குப் பிரியமானதாயிற்று? அதைச் சொல்ல வேண்டும்! என்று திருமால் கேட்டார். சிவபெருமான் கூறலானார், இந்த விரதம் யாவருக்குமே தர்ம சாதனமானது. நான்கு வருணத்தினரும் பிரம்மச்சாரி முதலிய ஆசிரமத்தினரும் மங்கையரும் குழந்தைகளும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். மாசி மாதத்தில் வருகின்ற கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியின் நள்ளிரவு பதினான்கு நாழிகையானது கோடிபிரமஹத்திகளை நசிக்கச் செய்யும், ஆகையால் அந்தத் தினத்தில் செய்யத்தக்க செயல்களைச் சொல்லுகிறேன்.

அன்று விடியற்காலையில் எழுந்து மகிழ்ச்சியுடன் மானுடப்பிறவி எடுத்தல் அரிது அது துக்கமுடையதும் சாரமற்றதுமாக இருத்தலால் அந்த மானுடப் பிறவியை இந்த விரதத்தால் பயன்படுத்தும் படிச்செய்வேன், என்று நிச்சயித்துக் கொண்டு, அருகிலிருப்பவரையும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க செய்ய வேண்டும், பிறகு பல் துலக்கி, புண்ணிய தீர்த்தத்தில் தேசகால விரோதமின்றி ஸ்நானம் செய்து நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்து நைமித்தியானுஷ்டானம் செய்யத் துவங்க வேண்டும்.

சிவலாயத்திலிருந்து எந்தக் காரியத்தைச் செய்வதானாலும் ஒன்று அனந்தமாகும், ஆகையால் சிவ சன்னிதானத்திலிருந்து வழக்கப்படிச் சிவபூஜை முடித்து வணங்கி, வாம தேவா! மஹா தேவா! சதாசிவா, நீலகண்டா உமது கருணையால் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று இச்சை கொண்டேன். ஆயினும் அது விக்கினமின்றி முடியும்படி இந்த விரதம் முடியும் வரை காமம் முதலியவைகள் என்னைத் துன்புறுத்தாமலும் துஷ்டர்களுடன் வார்த்தையாடல், அசுத்தர்களை ஸ்பரிசித்தல் ஐம்புலன்வழி மனத்தைச் செலுத்தல், ஜலபானம் செய்தல் முதலியன விலகவும் அனுக்கிரகம் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிறகு பூஜா திரவியங்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும் தன் வாசஸ்தானத்துக்கு அருகே எந்தச் சிவலிங்க மூர்த்தம் பிரசித்தமாகவும் புண்ணியகரமாகவும் பூஜிக்கத்தக்கதாகவும் இருக்கிறதோ, அந்தச் சிவலிங்கத்திற்கு அருகே சென்று அந்தப் பார்த்திவ லிங்கத்தின் தென் திசையிலாவது மேலைத்திசையிலாவது பூஜிப்பதற்குத்தக்க இடத்தை நிச்சயித்துக் கொண்டு, தான் சேகரித்த பூஜைப் பொருள்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் அந்தத் திருக்கோயிலிலேயே விதிப்படி ஸ்நானம் செய்து தூய்மையாகத் துவைத்து உலர்த்திய ஆடைகளைத் தரித்து மும்முறை ஆசமனஞ்செய்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். முதலில் அசரலிங்கமான அந்தப் பார்த்திவலிங்கத்திற்கு மந்திரபூர்வமான உபசாரத்துடன் பூஜை செய்வித்தல் வேண்டும் மந்திரமில்லாமல் பூஜிக்கக்கூடாது. எந்தெந்தத் திரவியங்களுக்கு எந்தெந்த மந்திரங்கள் சொல்லப் பட்டிருக்கின்றவோ அந்தந்தத் திரவியங்களை அந்தந்த மந்திரங்களைச் சொல்லியே பூஜை செய்ய வேண்டும். பிறகு கீதம் நிருத்தம் வாத்தியம் இவற்றைப் பக்தியுடன் சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு முதற் ஜாமத்தில் பூஜை செய்து சிவமந்திரம் ஜெபித்து தான் தினந்தோறும் பார்த்திவலிங்க பூஜை செய்யும் வழக்கமுடையவனாக இருந்தால், தன் வழக்கப்படியே பார்த்திவலிங்க பூஜை செய்ய வேண்டும் அல்லது முன்னதாகப் பார்த்திவலிங்கப் பூஜை செய்துவிட வேண்டும்.

பிறகு, சிவபெருமான் தன்னிடம் தயை வைக்கும்படி பலவித சிவஸ்தோத்திரங்களால் தியானிக்க வேண்டும் சிவ மகிமையைப் பிறருக்குச் சொல்லவேண்டும் அல்லது பிறர் சொல்லச் சிரவணஞ் செய்ய வேண்டும் இவ்வாறு நான்கு ஜாமங்களிலும் நான்கு பார்த்திவலிங்கங்களைச் செய்து ஆவாஹானாதி விசர்ஜனாதி பூஜைகளைச் செய்து முடித்து ஸ்தாபித லிங்கத்தையும் பூஜை செய்வித்து நித்திரையில்லாமல் உத்ஸவம் முதலிய சிவபணிவிடைகளைச் செய்து கொண்டே விழித்திருந்து இரவைக் கழித்து விடியும் முன்பு மீண்டும் ஸ்தாபிதலிங்கத்திற்குப் பூஜை செய்வித்து ஸ்நானம் செய்து சந்தியா வந்தனம் முதலியவற்றை  முடித்து  எம் பெருமானே! உம் கிருபையால் நான் ஆஸ்ரயித்த சிவராத்திரி விரதத்தை முடித்தேன். என் சக்திக்கு தரவேண்டும் என்று புஷ்பாஞ்சலி செய்த பார்வதிதேவியையும் நமஸ்கரித்துத் தான் செய்த பூஜா பயனைச் சிவப்ரீதி செய்து, ஜலபானஞ் செய்து அவ்விரத நியமத்தை விட வேண்டும். விஷ்ணுவே, அது எப்படி என்பதைக் கூறுகிறேன் யாமங்கள் நான்கினும் தன் மனதிலுள்ள கோரிக்கையைச் சேர்த்து அத்தியாதிப் பிரயோகமாகிய சங்கற்பம் செய்து ஸ்தாபிதலிங்கத்தையும் பார்த்திவலிங்கத்தையும் பக்தியோடு பூஜிக்க வேண்டும். பால், தயிர், நெய், தேன் சர்க்கரை முதலியவற்றால் அவ்வற்றிற்குரிய மந்திரங்களைக்கூறி அபிஷேகம் செய்யவேண்டும் பிறகு உலர்ந்த வஸ்திரத்தால் சிவலிங்கமூர்த்தியை உபசாரமாக ஒற்றி சுகந்தபரிமள சந்தனஞ்சாத்தி முதல் ஜாமத்தில் அரிசி அக்ஷதையும் இரண்டாவது ஜாமத்தில் யவை அட்க்ஷதையும் மூன்றாவது ஜாமத்தில் கோதுமை அக்ஷதையும் நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை அல்லது ஏழு விதமான தான்யாக்ஷதையும் சமர்ப்பிக்கவும் புஷ்பங்கள் முதல் ஜாமத்தில் சதபத்ரம் கமலம் கரவீரம் முதலியனவும் இரண்டாம் யாமத்தில் கமலமும், வில்வமும் மூன்றாம் யாமத்தில் அறுகும் ஆத்தியும் நான்காம் ஜாமத்தில் நறுமணங்கமழும் பல மலர்களோடும் சிவநாமங்களாலாவது குரு உபதேசித்த மந்திரங்களாலாவது, அர்ச்சனை செய்யவேண்டும். நிவேதனம் முதல் யாமத்தில் சுத்தான்னமும் கறிவகைகளும் பலகாரங்களும் இரண்டாம் யாமத்தில் பரமான்னமும் லட்டு முதலிய பலகாரமும் மூன்றாம் யாமத்தில் மாவாற் செய்த நெய் சேர்த்த பலகாரவகையும் பாயசமும் நான்காம் யாமத்தில் கோதுமை சர்க்கரை நெய் சேர்த்துச் செய்த மதுரமான பலகாரங்களும் நானாவிதமான பழவகைகளையும் நிவேதிக்கவும், முதல் யாமத்தில் வில்வம் பழத்தையும் இரண்டாம் யாமத்தில் பலாபழத்தையும் மூன்றாம் யாமத்தில் மாதுளம் பழத்தையும் நான்காம் யாமத்தில் பலவித பழங்களையும் சமர்ப்பிக்கலாம் தாம்பூலத் தக்ஷிணைகளோடு யாமங்கள் நான்கிலும் பிராமண போஜனம் முதலியன செய்யவேண்டும்.

அந்தந்த ஜாமத்தின் முதலிற் சங்கற்பம் செய்ததற்கு ஏற்ப அந்தந்த யாம பூஜையை முடித்து. அந்தந்த பார்த்திவலிங்கங்களை விசர்ஜனம் செய்து விடவேண்டும். பூஜையின் முடிவில் ஸ்ரீம்பவாய, ஸர்வாய, ருத்ராய, பசுபதயே, உக்ராய, மஹாதேவாய, பீமாய, ஈசிநாய என்ற அஷ்ட நாமங்களால் பூஜித்து புஷ்பாஞ்சலி செய்து தன் கோரிக்கைகளைச் சொல்லிக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு யாமத்திலும் ஓர் அந்தணனுக்குக் குறையாமல் அன்னமிட வேண்டும். மறுநாள் போஜனத்திற்கும் அந்தந்த ஜாமத்திலே பிராமணர்களுக்குத் தக்ஷிணை கொடுத்து நியமித்துக் கொள்ள வேண்டும். அவரவர் சக்திக்கு ஏற்ப தானம் செய்து பிராமணர் அதிதிகள் முதலானவர்களுக்கு இரவு நான்கு ஜாமங்களிலும் சங்கற்பித்துக் கொண்டபடி அன்னமளித்து சிவபெருமானை நமஸ்கரித்துப் புஷ்பாஞ்சலி செய்து சுவாமி! நான் உம்முடையவன் என் உயிர் உன்னிடத்துள்ளது என் சித்தம் உனதே! தயாசமுத்திரனான நீ உன் இஷ்டப்படியே செய். தெரிந்தோ, தெரியாமலோ நான் செய்யும் ஜெபபூஜைகளைப் பயன் பெறச் செய்வாயாக, சகல பிராணிகளுக்கும் பிரபுவான நீ எனக்குப் பிரசன்னமாக வேண்டும். நான் செய்த பூஜாக்காரியங்களால் நீ மகிழ்ந்து. குறைவை நிறைவாக்கி விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று புஷ்பாஞ்சலி செய்து சிவ நிர்மாலியத்தை ஆசிர்வசன பூர்வமாகப் பெற்று சிவபெருமானையும் பிராமணரையும் நமஸ்கரித்து திரும்பவும் நான் பூஜை செய்யும் சமயத்தில் எழுந்தருள வேண்டும்! என்று பிரார்த்தித்து என் வம்சத்தில் உன் பூஜை எப்பொழுதும் இருக்கவேண்டும் என் மனதிற்கு அருகில் நீ சமீபத்திருக்க வேண்டும். இரவும் பகலும் உனது நாமஸ்மரணையில் நான் இருக்கவேண்டும்! என்று பிரார்த்தித்து விசர்ஜனம் செய்து பிராமண போஜனம் செய்வித்தால் சகல பாபங்களும் நீங்கும். இப்படி விரதம் செய்தவர்களுக்கு அருகில் சிவபெருமான் எழுந்தருளியிருப்பார் இதன் பயனைப் பதினாயிரம் ஆண்டுகள் சொன்னாலும் முடியாது இந்த விரதத்தைப் பக்தியின்றிச் செய்தவனுக்கும் முக்தியுண்டாகும், இதுபோலவே பிரதி சிவராத்திரியிலும் செய்யவேண்டும். பிறகு விரதசாந்திக்காக உத்தியாபனம் விதிப்படிச் செய்ய வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார், இவ்வாறு சிவபெருமான் சொல்லிக் கேட்ட விஷ்ணு முதலிய தேவர்கள் அனைவரும் மகிழ்ந்து தங்கள் இருக்கைகளை அடைந்தார்கள்.

71. சிவராத்திரி உத்தியாபனம்

நைமிசாரணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி, சுவாமி! சிவராத்திரி விரதசாந்திக்காக உத்தியாபனம் செய்தால், சிவபெருமான் பிரசன்னமாவார் என்று தாங்கள் சொல்வீர்களே! அதை முறைப்படி எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று கேட்கச் சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! நான் இதுவரை வேதவியாஸர் திருவாக்கால் கேள்விப்பட்ட சிவராத்திரி உத்தியாபன விதியைச் செல்லுகிறேன், கேளுங்கள்.

சிவராத்திரி தினத்தில் நித்திய நியமவிதானத்தை முடித்துக் கொண்டு, சிவாலயம் சென்று அங்கு சாஸ்திர விதிப்படிச் சிவபூஜை செய்து குரு நியமப்படி சிவராத்திரி விரதம் செய்வதற்காகச் சங்கற்பம் செய்து கொண்டு இரவு முழுவதும் நித்திரையில்லாமல் நான்கு ஜாமத்திலும் ஸ்தாபிதலிங்கத்திலாவது பார்த்திவலிங்கத்திலாவது முடியுமானால் இரண்டிற்கும் சிவ பூஜைசெய்து மறுநாள் விடியற்காலத்தில் ஸ்நானம் முதலான நித்தியக் கிரியைகளை முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு சிவசன்னதியில் சங்கற்பம் செய்து கொண்டு, சிவபிரசாதத்தால் இந்த விரதத்தைச் செய்கிறேன் என்று பிரதி மாதமும் தேவரீரது கட்டளையால் இந்த விரதம் செய்யத் தக்கது இது விக்கினமில்லாமல் முடியும்படி அநுக்ஞை செய்ய வேண்டும் என்று சிவாலயத்தில் நியமித்துக் கொண்டு பிராமணர்களுடன் தானும் புசித்து பிராமண ஆசியைப் பெற்று நியமத்தை முடித்துக்கொள்ள வேண்டும். பின்வரும் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் விடியற்காலத்தில் எழுந்து தீர்த்தத்திலாவது வீட்டிலாவது ஸ்நானம் முதலிய நித்தியக் கருமங்களை முடித்துக்கொண்டு சிவ சன்னிதிக்குச் சென்று சிவபூஜை செய்து எம்பெருமானே! இன்று உம் கட்டளையால் நிராகார விரதத்தை நிர்ச்சலமாகச் செய்ய நிச்சயித்திருக்கிறேன் இந்த விரதத்தை அனுஷ்டிக்க உத்தரவு கொடுக்கவேண்டும் என்று கும்பிட்டு காமக்குரோதாதிகளை விட்டு பகலைக்கழித்து, இரவு நான்கு ஜாமங்களிலும் பூஜித்து மந்திர ஜெபம் செய்து பக்தி செய்து விடியும் வரை விழித்திருந்து பிறகு ஸ்நானம் செய்து சிவபூஜை முடித்து பிராமணர் அதிதிகளுக்குப் போஜனம் செய்விக்க வேண்டும் இவ்வாறு செய்வதற்குச் சக்தியற்றவன் ஓர் அந்தணனுக்காவது அன்னமிட வேண்டும். பிராமண ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு தான் கிரக்கிருத்தியங்களைச் செய்ய வேண்டும். இவ்விதமாக மாதந்தோறும் உத்தமமான சிவராத்திரி விரதத்தைச் செய்து கொண்டு மஹா சிவராத்திரி வரும்வரையில் எல்லாச் சிவராத்திரிகளையும் அனுஷ்டித்து, மஹாசிவராத்திரி நாளன்று விதிப்படி உத்தியாபனம் செய்யவேண்டும் அவ்வாறு செய்யும்போது சிவராத்திரி விரத உத்தியாபனஞ் செய்த பிராமணர்களை வருவித்து அவர்களைக் கேட்டும் சாஸ்திரங்களை ஆராய்ந்தும் உத்தியாபனம் செய்ய வேண்டும் அது எப்படி யென்றால். அதையும் சொல்கிறேன் கேளுங்கள்.

பிராதக்காலத்தில் ஸ்நானம் செய்து நித்தியகர் மானுஷ்டானங்களை முடித்து, சிவாலயத்திலாவது வீட்டிலாவது புனிதமான இடத்தில் கவுரீ திலகம் என்ற பிரசித்தமான பெயருடைய அலங்கார மண்டபம் அமைத்து, அதில் மண்டிலஞ் செய்து; ஒன்பது கலசங்கள் வஸ்திர பலதக்ஷிணை சகிதமாக அந்தக் கவுரீ திலக மண்டபத்தில் வைத்து அதில் பார்வதி சமேதராகச் சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்து, சிவபெருமானுக்கு வலப்புறத்தில் தீபாராதனைகளை வைத்து இரவில் பூஜை செய்ய வேண்டும். இரவு முழுவதும் விழித்திருந்து பிரதியாமத்திலுஞ் சிவபூஜை செய்து கொண்டு நிருத்தகீதம் முதலியவற்றுடன் வேதயுக்தமான விதிப்படி பூஜித்து விடியற்காலத்தில் ஸ்நானம் முதலியவற்றில் முடித்துப் புனர்பூஜை முடித்து, ரிஷிகளுக்குச் சமானமான வேதபாரகரான பிராமணர்களுக்கு யக்ஞோப வீதம் (பூணூல்) வஸ்திரம், மிதியடி, பொன் மோதிரம், காது கடுக்கன் முதலியவற்றைத் தானஞ்செய்து, நெய், பாயாசம் முதலியவற்றால் ருத்திர மந்திர ஜபத்துடன் ஹோமஞ் செய்ய வேண்டும் முதலில் நவக்கிரகசாந்தி, நவக்கிரக ஹோமம் செய்ய வேண்டும், சிவமந்திரம் ஜெபித்துக் கொண்டே, யவையோடு எள்ளையும் சேர்த்து ஹோமம் செய்து பிறகு தேவி மந்திரத்தால் ஹோமஞ் செய்து பொன்னால் சிவபெருமானும் வெள்ளியால் பார்வதியுஞ் செய்து கட்டில் மெத்தை வைத்து ஏழுவகை தானியங்களை அதன் மேல் பரப்பி பசுவுடன் வேதியனுக்கு தானஞ் செய்ய வேண்டும், இவ்வாறு ஹோமத்தை முடித்து பிறகு ஆசாரியனை ஆடையாபரணம் மலர்கள் முதலியவற்றில் அலங்கரித்து விசேஷமாக பூஜிக்க வேண்டும். கொம்பிற் பொன்னும் குளம்புகளில் வெள்ளியும் வெண்கலப் பாத்திரமும் இரத்தினங்களால் வாலும் உடலில் வஸ்திரமும் முதுகில் தாமிரமும் மற்றுள்ள அல்ஙகாரங்களையும் செய்து, நன்றாகப் பால் கொடுக்கும் சாதுவான இளம் பசுவைக் கன்றுடன் ஆசாரியனுக்குக் கொடுக்க வேண்டும், பிராமணர்களுக்கு, நெய், பாயசம், பலகாரம் முதலியவற்றுடன் சிறப்பான அன்னமளிக்கவேண்டும். அநேகம் தானங்களைச் செய்யவேண்டும் பன்னிரண்டு வேதியருக்குக் குறையாமல் பிராமண போஜனம் செய்ய வேண்டும் அந்தப் பயனைச் சிவப்ரீதி செய்து ஸ்வாமி சங்கரா! நான் செய்த இந்த விரதத்தால் என்னிடத்தில் கிருபை கொண்டு என்னை உமக்கு உரியவனாக்கிக் கொள்ள வேண்டும் என் சக்திக்கு ஏற்ப இவ்விரதத்தைச் செய்தேன். அஞ்ஞானத்தாலாவது, ஞானத்தாலாவது நான் செய்தது பயன் அளிப்பதாகுக! என்று புஷ்பாஞ்சலி செய்து நமஸ்கரித்து மீண்டும் நான் பூஜிக்கையில் எழுந்தருள வேண்டும். உம்முடைய திருவடிகள் என் இதயத்திலிருந்து நீங்காமல் இருக்கவேண்டும்! என்று கூறவேண்டும்

இவ்வகையாகச் சிவராத்திரி விரத உத்தியாபனஞ் செய்தவன் இஷ்ட காமியங்களையெல்லாம் அடைவான். இந்த விரதத்தைத் தெரிந்து செய்தாலும் தெரியாமற் செய்தாலும் சிவபெருமான் மகிழ்ச்சியடைவார் இவ்விதமாக விரதஞ்செய்பவன் சிவலோகத்தில் சுகித்திருப்பான் மனோவாக்குக்காயங்களால் வந்த துன்பங்கள் இந்த விரதத்தால் அழியும் இவ்வாறு விரதத்தை முடித்துக் கொண்டு மறுநாள் அமாவாசையில் பிதுர்களுக்குப் பிண்டப் பிரதான தர்ப்பண முதலியன செய்து பிராமண போஜனம் செய்விக்கவேண்டும். அமாவாசையில் அன்னமளித்தால் அந்த பக்ஷம் பதினைந்து தினங்களிலும் அன்னமளித்த பயன் உண்டாகும் பக்தியுடையவனாய் வேதபாரகனாய், நற்குலத்தில் உதித்தவனாகவுள்ள பிராமணனுக்கும் யதிதிக்குமே அப்போது அன்னம் அளிக்கத்தகும் பிறகு பந்துக்களுடன் தானும் உணவு அருந்த வேண்டும் இதுவே சிவராத்திரி விரதஉத்தியாபன விதியாகும் நற்பயன் விரும்புவோர் இந்த விரதத்தைச் சகல முயற்சியுடனும் ஆஸ்ரயிக்க வேண்டும்; இதைக் கேட்டவர்களும் படித்தவர்களும் சொன்னவர்களும் சிவ அருள் பெறுவார்கள்.

72. வேடன் சிவராத்திரி பலன் பெற்ற கதை

நைமிசாரணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி சிவஞானச் செல்வரே! தாங்கள் கூறிய சிவராத்திரி மகிமையைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்தோம். மேலும் இந்த விரதத்தின் பயனை விரிவாகச் சொல்லியருள வேண்டும் அஞ்ஞானத்தோடு இந்த விரதத்தை கடைப்பிடித்தால் ஏதாவது பயனுண்டாகுமா? என்று கேட்டார்கள். சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! சிவராத்திரி மகிமையில் ஒரு வேடனின் பாபங்களையெல்லாம் ஒழித்துள்ளதான பூர்விகமான கதை ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது அதைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ஒரு வனத்தில் மகாப்பலசாலியும் பெருங்குடும்பஸ்தனுமான வேடன் ஒருவன் இருந்தான் அவன் மிருகங்களை வேட்டையாடுவதோடு வழிப்பறி செய்தும் பிழைத்து வந்தான். அவன் இளம் பருவ முதல் ஒரு போதும் நற்கருமம் எதையுஞ் செய்யாதவனாக இருந்தான் அவன் பெயர் குருத்ருஹன். அவன் இவ்வாறிருக்க ஒரு சமயம் சுபகரமான சிவராத்திரி சம்பவித்தது. அது அந்தத் துராத்மாவுக்குத் தெரியாது அந்த மஹாசிவராத்திரி தினத்தன்று அந்த வேடனின் தந்தை தாய் மனைவி முதலியோர் அவனை நோக்கி, எந்த வகையிலாவது ஜீவஹிம்சை செய்து தங்களுக்கு உணவு  வகைகளை கொண்டு வந்து கொடுக்கும்படிக் கேட்டார்கள். உடனே வேடன் தன் வில்லை எடுத்துக்கொண்ட காட்டுக்குச் சென்று மிருகங்களைத் தேடியலைந்தான். ஒரு மிருகமும் அவன் பார்வையில் படவில்லை பறவைகளுங்கூடக் கிடைக்கவில்லை, தெய்வயோகம் அவனுக்கு அப்படியிருந்தது. மாலைப்பொழுதும் நெருங்கியது சூரியனும் அஸ்தமித்தது வேடன், தன் வீட்டில் தன் குழந்தைகளும் தாய் தந்தையரும் மனைவியும் ஆகாரமின்றி வருந்துவார்களே என்று எண்ணி வருந்தினான். எனவே எந்த வகையிலாவது சிறிதேனும் ஆகாரந்தேடிக்கொண்டு தான் வீட்டிக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு அருகிலிருந்த தடாகத்தில் சிறிது தண்ணீர் பருகி ஒரு பாத்திரத்தில் சிறிது ஜலங்கொண்டு தடாக கரையில் தழைத்திருந்த வில்வமரம் ஒன்றில் ஏறி மறைந்து கொண்டான். தாகத்தை தணித்துக் கொள்ள தடாகத்திற்கு ஏதேனும் மிருகங்கள் வரக்கூடும் அப்படி வந்தால் அவற்றைக் கொன்று விடலாம்! என்று எண்ணினான் மிருகங்கள் எப்போது வரும்? நான் எப்போது அவற்றை எய்வேன்? என்று வேடன் நினைத்து பசியுடன் வருந்தி இன்று நமக்கு இரையில்லையே உபவாசமிருக்க நேர்ந்ததே என்று சிந்தை நொந்து வருந்திக் கண் விழித்துக் கொண்டிருந்தான், முதல் ஜாமத்தில் பெருந்தாகத்தோடும் பயத்தோடும் பெண்மான் ஒன்று அங்கே வந்தது அதைக் கண்டதும் வேடன் மனம் மகிழ்ந்து அம்மை வில்லில் பூட்டினான். அவனது உடலசைவால் அவன் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து சிறிது ஜலமும் வில்வ மரத்திலிருந்து சிறு வில்வதளங்களும் அந்த மரத்தடியிலிருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுந்தன. இதனாலேயே அந்த வேடன் அந்தச் சிவராத்திரியின் முதற்கால பூஜையைச் செய்தவனானான் அத்தகைய பூஜையின் பயனாக அவனது மாபாதகங்கள் நசித்தன.

இந்நிலையில் வேடன் அம்பை வில்லிற் பூட்டிய சத்தத்தைக் கேட்ட பெண்மான் ஐயோ! எங்கே போவேன்? என்ன செய்வேன்? இந்த வேடன் என்னை எப்படியும் பாணத்தால் கொன்று விடுவானே ஆயினும் ஓர் உபாயம் செய்ய வேண்டும் என்று யோசித்து வேடனை நோக்கி, வேடா நீ என்ன செய்ய நினைத்திருக்கிறாய்? என்று கேட்டது. அதற்கு அந்த வேடன், மானே! நான் ஒரு பெரிய குடும்பஸ்தன் என் குடும்பம் முழுவதும் ஆகார மில்லாமல் பெரிதுங் கஷ்டப்படுகிறது. ஆகையால் உன்னைக் கொன்று அவர்களுக்கும் எனக்கும் ஆகாரமாக்கப் போகிறேன் என்று கூறினான். அதற்கு பெண்மான், பாபாத்மாவாகிய அந்த வேடனை நோக்கி அப்படியானால் நான் தன்யையானேன் பயனற்ற இந்த உடலின் இறைச்சியால் உனக்கு உன் குடும்பத்திற்கும் சுகம் உண்டாகுமேயானால் பரோபகாரத்தால் உனக்கும் உண்டாகும் புண்ணியத்தை நானும் அடைவேன். இந்தப் புண்ணியப் பயனை பல வருஷங்கள் சொன்னாலும் சொல்லி முடியாது. பயனற்ற என் தேகத்திற்கும் சாபல்லியங் கிடைக்கும். ஆனால் எனக்குச் சில குட்டிகள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்கும் படி என்னுடன் பிறந்த ஒரு பெண்மானை நியமித்து விட்டு, என் கணவனுக்கு அந்த மானையே மனைவியாக இருக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் இங்கே வருகிறேன். என் இறைச்சியாலேயே நீங்கள் திருப்தியடைவதாயின் எனக்கு மிகவும் சுபமே என்று கூறியதும் அதைக்கேட்ட வேடன் அதைச்சிறிதும் நம்பாமல் ஆபத்துக் காலத்தில் யாவரும் சமயோசிதமாகப் பொய் பேசுதல் வழக்கம் என்றான். ஆனால் பெண்மானோ வனசார சத்தியத்தாலேயே சூரியன் முதலிய தேவர்கள் யாவரும் பிரகாசிக்கின்றார்களென்றும் சத்தியத்தாலேயே சமுத்திரம் அணையின்றிருக்கின்றனதென்றும் சத்தியத்தாலேயே இந்திரன், மழை பெய்விக்கிறான் என்றும் சத்தியத்தாலேயே யாவும் நிலைத்திருக்கின்றன என்றும் அறிவாயாக ஜீவஹிம்சை செய்கின்ற நீ என் சொல்லை பெய்யெனக் கொள்ள வேண்டாம் என்றது வேடன் அதையும் நம்பாமலிருக்க பெண்மான் மேலும் சொல்லியது.

வேடனே, நான் சொல்வதைக் கேள் நான் சொல்லியபடி மீண்டும் உன்னிடம் வந்து உனக்கு இரையாகத் தவறுவேனாகில் நான் பெரும் பாபத்தை அடைவேன். எப்படி என்றால் வேதவிக்கிரயம் செய்த பிராமணன் பெறும் பாபத்திலும் திரிகால சந்தியா வந்தனங்களைச் செய்யாதவன் போகும் பாபத்திலும் கணவன் கட்டளையை நிராகரித்த மனைவி அழுந்தும் பாபத்திலும் செய் நன்றி மறந்து தனக்கு நன்மை செய்தவனுக்குத் தீமை செய்தவன் அடையும் பாபத்திலும் சிவத்துரோகியும் விஷ்ணுத் துரோகியுமடையும் பாபத்திலும் குருத்துரோகி பெறும் பாபத்திலும் வேத விருத்தமான ஆசாரத்தில் நடப்பவன் அடையும் பாவத்திலும் போவேன் என்று பலவாறாகவும் கூறியது வேடன் அதன் வார்த்தைகளைகேட்டு நம்பிக்கையுடையவனாய்! மானே! நீ இனி உன்னிடத்திற்கு விரைவிற் சென்று திரும்பி வருக என்று விடை கொடுத்தான் பெண்மான் பெருங்களிப்படைந்து தாகந்தணிந்துக் கொண்டு தன்னிடத்தையடைந்தது அதுவரையில் முதல் ஜாம முற்றும் வேடனுக்கு நித்திரையின்றிச் சென்றது.

அவ்வாறிருக்கையில் முன் வந்து போன பெண்மான் தன் மூத்தாள் தாகவிடாயுடன் நீர் பருகச் சென்று நெடு நேர மட்டும் வராமையின் அதைத் தேடிக்கொண்டும் இரைச்சலிட்டுக் கொண்டும் அந்தக் குளக்கரையை அடைந்தது. வேடன் அதைக் கண்டு குணத்தொனி செய்தான். அப்பொழுதும் முன்போலவே சிறிது ஜலமும் சில வில்வபத்திரங்களும் அம்மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அதனால் சர்வேஸ்வரனாகிய  சிவபெருமானுக்குச் சிவராத்திரி காலத்தில் வேடன் இரண்டாம் ஜாமபூஜை செய்தவனானான். அவ்வேடுவனை அவனது பாணகர் ஷணஞ் செய்யும் ஒலியால் உணர்ந்த இளையமான் ஓ வேடா! என்ன செய்யக்கருதினை? என்று வினவியது வேடன் முன் அதன் தமக்கைக்கு கூறியவாறே கூறினான். அது அவன் வார்த்தையைக் கேட்டுமகா சந்தோனுமடைந்து நான் மகாதன்யை! ஓ வனசர சிரேஷ்டா! அநித்தியமான இத்தேகம் பிறனுக்கு உபகாரமாகுமேயானால் என் தேகம் பலனடையும் ஆயினும் என் வீட்டில் இளம்பிராயமுடைய சில குட்டிகளிருக்கின்றன. அவற்றை என் கணவனுக்கு ஒப்புவித்து விட்டு நான் மீண்டும் சத்தியமாக வருவேன்! என்று கூறியது அதற்கு வேடன், நான் உன் வார்த்தையை நம்பமாட்டேன் தடையின்றி உன்னைக் கொல்லுவேன்! என்றான் ஆனால் பெண்மானே, வியாதனே, நான் திரும்பவும் உன்னிடம் வராவிட்டால் அசத்திய வார்த்தைகள் கூறினோர் தாம் அது காறும் செய்த புண்ணியங்களை இழந்து எவ்வகைய பாபத்திற்போவாரோ அவ்வகைய பாபத்திலும் அடிக்கடி பூமியைக் காலால் உதைப்பவர் உறும்பாபத்திலும் கற்புடைய மனைவியை விலகிப் பிரஷ்டையான ஓர் சோர ஸ்திரீயைப் புணர்ந்தவன் போகும் பாபத்திலும் வேதோக்தமான மார்க்கத்தை விடுத்துக் கல்பிதமான மார்க்கமாக நடப்பவர் அடையும் பாபத்திலும் விஷ்ணுபக்தி செய்து கொண்டு சிவ தூஷணஞ் செய்வோரும் சிவபக்தி செய்து கொண்டு விஷ்ணு தூஷணஞ் செய்வோரும் பெறும் பாபத்திலும் தாய் தந்தையர்களது வருஷாப்திகத்தை விடுத்தவன் செல்லும், பாபத்திலும் முதலில் இதவார்த்தைகள் கூறிப் பரிதாபமுண்டாக்கிப் பின்னர் வஞ்சிப்பவர் அடையும் பாபத்திலும் போகக்கடவேன் என்று கூறியது.

வேடுவன் அதன் வார்த்தைகளைக் கேட்டு அதனிடத்தும் நம்பிக்கை வைத்து ஓ மானே! நீ அப்படியே உன்னிடத்திற்குச் சென்று அதிசீக்கிரத்தில் வருக! என்று விடுவித்தான். அந்த மான் மகிழ்ச்சியுற்றுத் தண்ணீர் பருகித் தன்னிடத்தையடைந்தது அதுவரையில் அவ்வேடுவனுக்கு இரண்டாம் ஜாமமுற்றும் நித்திரையன்றி நீங்கியது. இதற்குள் அவ்விரு பெண்மான்களுக்கும் கணவனாயுள்ள ஆண்மான் அவ்விரண்டு மான்களையும் தேடிக் கொண்டு அந்த நீர்த்துறையை யடைந்தது. பருத்துயர்ந்திருக்கும் அவ்வான் மானை வேடுவன் கண்டு பெருங்களிப்படைந்து ஆ! ஆ! மிக்க மாமிசமுடைய தாயிருத்தலின் நமக்குத் திருப்தியான ஆகாரமாகுமென்று கருதிவில்லை டங்காரம் செய்து அதை எய்ய யத்தனித்தான். அப்போது முன்போலவே அவன் வசமிருந்த ஜல பாத்திரத்திலிருந்து சிறிது ஜலமும் மரத்திலிருந்து சில வில்வதளங்களும் அம்மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அதனால் அவன் சிவராத்திரி காலத்தில் மூன்றாம் ஜாம பூஜைசெய்தவனானான் சவுனகாதி முனிவர்களே! பக்தியின்றி சம்பவித்த செயல்களுக்கும் களிகூர்ந்து பூஜை செய்ததாகக் கருதிய சிவபெருமானுடைய கருணையை என்னவென்று சொல்லக் கூடும் மேலே கதையைக் கேளுங்கள்.

வேடுவனது நாணெறிந்த ஒலியைக் கேட்ட ஆண்மான் அவ்வேடுவனை நோக்கி நீ என்ன செய்யக் கருதினாய்? என்று வினவியது வேடன் முன்போலவே கூறினான். அதைக் கேட்ட ஆண்மான் சந்தோஷித்து நான் இப்பொழுது தான் தன்யனானேன் பூரித்திருக்கும் என் தேக மாமிசத்தினால் உன்னைப் போன்றவர்கள் திருப்தியடைவது பற்றிப் பெரும் பிரயோசனமடைவேன். ஒருவன் தன் தேகத்தைப் பரமார்த்தமாகப் பிறர்க்கு உபகாரஞ் செய்யாவிட்டால் அவன் பெற்றுள்ளயாவும் வீணாகி விடும், சமர்த்தனாயிருந்தும் பிறர்க்கு உதவாதவனின் சவுகரியம் பயன்பெறாது. ஆதலின், என் உடலால் உனக்கும் உன் குடும்பத்திற்குந் தடையின்றி திருப்தியுண்டாகும். ஆயினும் எனக்குச் சில குட்டிகள் இருப்பதால் அவற்றை என் பேடுகளிடம் ஒப்பித்து விட்டு, அவைகட்கு நல்ல வார்த்தைகளால் புத்திகூறி நிச்சயமாக வந்து உனக்கு இரையாகிறேன் என்று கூறியது. ஆனால் வேடுவன் அதன் வார்த்தையைக் கேட்டு ஓ மிருகமே! இதுகாறும் இங்கு வந்த மிருகங்கள் யாவும் உன்னைப்போலவே இதவார்த்தைகள் சொல்லி என்னை வஞ்சித்து விட்டுப் போயின ஒன்றேனும் இதுகாறும் வரவில்லை நீயும் அப்படியே ஆபத்து வேளையில் அபத்தமுரைத்துப் போய் விட்டால் எனக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வாறு ஜீவனம் நடக்கும்? என்றான்

ஆண்மான் அவன் வார்த்தைகளைக் கேட்டு ஓ வனசரா என்னிடத்தில் பொய் என்பதே கிடையாது சத்தியத்தினாலேயே சராசரப் பிரமாண்ட முழுவதும் விளங்குகின்றது. பொய் பேசுகிறவன் பூர்வத்திற் செய்த புண்ணியம் முழுவதையும் க்ஷணகாலத்திலே நாசப்படுத்துகிறான் இப்பொழுது நீ நம்பாத பக்ஷத்தில் நான் ஒரு பிரதிக்கினைச் செய்கிறேன். அதாவது சந்தியாவந்தன காலத்திலும் இரதிகேளிக்கையிலும் சிவராத்திரி காலத்திலும் போஜனஞ் செய்தவன் பெறும் பாபத்திலும், பொய்சாட்சி சொல்லுவோர் அடையும் பாபத்திலும், வைத்து வைத்திருக்கும் பொருளை அபகரித்தவன் அடையும் பாபத்திலும் சந்தியாவந்தனத்தை விடுத்த பிராமணன் பெறும் பாபத்திலும் லலாடசூனியமாயுள்ளவன் அடையும் பாபத்திலும் பிறர்க்கு உதவி செய்யாத மகா சமர்த்தனாயுள்ளவன் பெறும் பாபத்திலும் பகற்புணர்ச்சி செய்தவன் பெறும் பாபத்திலும் பர்வகாலத்திலும் விரதகாலத்திலும் புசிக்கத்தகாத பதார்த்தங்களைப் புசித்தவன் பெறும் பாபத்திலும் நான் வாராத பக்ஷத்திற் போகக் கடவேன்! என்று கூறியது. அதனால் வேடன் வியாதன் அதன் வார்த்தையின் நம்பிக்கையுடையவனாகி போய் வருக! என்று விடுப்பித்தான். ஆண்மான் அகமகிழ்ச்சியோடு நீர் பருகித் தன் இடத்தை அடைந்தது. அப்பொழுது அம்மூன்றும் சந்தித்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லிக் கொண்டவைகளாய் சத்தியபாசத்தாற் கட்டப்பட்டவைகளாய், அவசியம் அவ்வேடுவனிடம் போக வேண்டுமென நிச்சயித்துக் கொண்டு, குட்டிகளை நல்ல வார்த்தைகளால் இதமாக அவ்விடத்திலேயே விட்டுவிட்டுப் புறப்பட்டன.

அப்பொழுது அவற்றுள் மூத்தப் பெண்மான் தன் கணவனை நோக்கி இக்குட்டிகள் அநாதரவாக இருப்பதால் இவை எவ்வாறு ஜீவிக்கும்? நான் முதலில் வருகிறேன் எனப் பிரதிக்கினை செய்து வந்தமையால் நான் மட்டுமே போக வேண்டும். நீங்கள் இங்கே இருக்க வேண்டும் என்று கூறியது அதைக் கேட்ட இளைய பெண்மான் நான் உங்களிருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டியவளாயிருக்கிறேன் ஆதலின் நான் இவனுக்கிரையாகப் போகிறேன். நீங்கள் இங்கேயே இருக்கலாம்! என்றது அப்போது ஆண்மான் அவ்விரண்டின் வார்த்தைகளையுங் கேட்டு நான் ஒருவனே அவனிடம் போகிறேன் நீங்கள் இங்கேயே இருக்கலாம்! என்றது. ஆனால் பெண்மான்கள் ஐயோ! நீ இறந்தால் நாங்கள் விதவைத் தன்மையடைந்து ஜீவிப்பதைக் காட்டிலும் கஷ்டம் வேறுண்டா? என்று கூறி, தங்கள் குட்டிகளைத் தக்கபடியே சில மான்களிடம் ஒப்படைத்து விட்டு மூன்றும் ஒன்றுகூடி அவ்வேடுவன் இருக்குமிடத்திற்கு வந்தன. வேடுவனும் அம்மான்கள் மூன்றும் எப்பொழுது வருமோவென்னும் எண்ணத்துடன் வழி பார்த்துக் கொண்டிருந்தான். சத்தியப் பாசத்தாற் கட்டப்பட்டு வருகின்ற அந்த மூன்று மான்களையுங் கண்ட வேடன் சந்தோஷப்பட்டு ஆ, இம் மிருகங்கள் நம்மிடத்தே சொல்லிப் போனதுபோல மீண்டும் வந்தன என்று நினைத்துத் தன் வில்லை டங்காரம் செய்தான். அவ்வாறு டங்காரஞ் செய்கையில் அவன் கையிலிருந்த ஜலபாத்திரங்களும் அம்மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. அதனால் அவன் சிவராத்திரிகாலத்தில் நான்காம் ஜாம பூஜை செய்தவனானான். அவ்வேடுவனுடைய பாபங்கள் அப்பொழுதே அவனை விட்டொழிந்தன. இதற்குள் அம்மிருகங்கள் மூன்றும் ஓ வனசரா எங்கள் மாமிசங்களை விரைவில் உனக்கு உணவாக்கிக் கொண்டு எங்களைக் கிருதார்த்தர்களாக்க வேண்டும்! என்று கூறின.

வேடன் அவற்றின் வார்த்தைகளால் மிக்க வியப்படைந்து தான் அன்றைய தினம் அறியாமற் செய்த சிவபூஜாபலத்தினால் திவ்விய ஞானமடைந்து ஆஹா! அறிவுக்குறையுள்ள இம்மிருகங்கள் தங்கள் தேகத்தால் அன்னியருக்கு உதவி செய்து எவ்வளவு தன்யமாகின்றன? நான் மனுஷ ஜன்மம் எடுத்து என்ன புண்ணியம் சம்பாதித்தேன்? பிறரைத் துன்புறுத்தி என் உடலையும் என் குடும்பத்தையும் போஷித்தேன் பிறரை வருத்தியே உயிர் வாழ்ந்த எனக்கு என்ன கதி கிடைக்குமோ? நான் எவ்வெவ் கஷ்டங்களை அனுபவிபபேனோ? இந்த உடலால் பலவிதமான பாபங்களைச் சம்பாதித்தேனல்லவா? இதுகாறுந் தீவினைகளையே செய்து இப்பொழுது துக்கிக்கிறேன். என் வாழ்க்கை நிந்திக்கத்தக்கது என்று தனக்குள் தானே சொல்லிக் கொண்டு அவற்றை எப்படியும் தன் வில்லிலுள்ள அம்பால் இனி கொல்லப்படாதென்னங் கருத்துடன் உடனே வில்லினின்று எடுத்து விட்டு ஓ உத்தமமான மிருகங்களே! நீங்கள் பரோபகாரம் செய்து வந்தமையால் தன்யர்களாக இருக்கிறீர்கள்! உங்களைக் கொல்லமாட்டேன் இனி உங்கள் வாசஸ்தானத்திற்குத் திரும்பிப் போங்கள்! என்று கூறுகையில், கடூரமான முடையவனாயிருந்து திவ்ய ஞானத்தையடைந்த அவ்வேடனாற் பூஜிக்கப்பட்ட சிவபெருமான் அவனது பூஜைக்கும் மனம் பட்ட ஐந்து திருமுகங்களோடும் தமது திவ்ய திருவுருவ தரிசனங் கொடுத்து, தயாசமுத்திரமான சிவபெருமான் என்ன வரம் வேண்டுமோ அதைக் கேட்டுக் கொள் உன் விஷயத்தில் தயையுடையவனாக இருக்கிறேன் என்றார். உடனே வியாதன் திவ்விய ஞானமுடைய ஜீவன் முக்தனாய் சர்வேசுவரனுடைய திருவடிகளில் சாஷ்டாங்காமாகப் பணிந்து எல்லாப் பாபங்களும் என்னாற் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மன்னித்து எளியேனை அனுக்கிரகிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். மகாதேவனாகிய சிவபெருமான் அவனுக்கு குகன் என்னும் பெயரளித்து உன் மனத்திற் கருதிய சுகபோகங்களை அடைவாய் நீயொரு இராஜ தானியையுங் காக்க வல்லவனாவாய், உன் வமிசம் விருத்தியாகும் தேவர்களாலேயும் துதி செய்யத்தக்க திவ்யமான கீர்த்தியை அடைவாய். அயோத்தி மன்னனாகிய தசரதன் குமாரனாக விஷ்ணுவே இராம அவதாரஞ் செய்யும் போது உன்னிடத்தில் வந்து உன்னாற் பூஜிக்கப்பட்டுச் செல்லுவான். தேவர்கட்கும் முனிவர்கட்குங் கிடைத்தற்குத் துர்லபமான செய்யும் விரதத்தை விகித்து மகாபலவான்களாக விளங்குவார்கள் என்று வரங்கொடுத்தருளினார்.

இவ்வாறிருக்கையில் மான்களின் குட்டிகளும் தங்கள் தாய் தந்தை பலருக்கு உண்டாகுங் கதியே தங்களுக்குஞ் சம்பவிக்கட்டுமென்று நினைத்து உடனே அவ்விடம் வந்து சேர்ந்தன. அதனால் அந்த மான்களுக்குங் குட்டிகளுக்குஞ் சிவதரிசனங் கிடைத்தது. சிவதரிசனத்தால் அம்மிருகங்கள் சமுசார விருப்பத்தையும் மிருக தேகத்தையும் ஒழித்துத் திவ்விய தேகம் பெற்று அங்கு வந்திறங்கிய விமானத்தில் ஏறிச்சுவர்க்க லோகத்தை அடைந்தன. சர்வேசுவரனாகிய சிவபெருமான் அவ்விடத்தில் அற்புதாசலத்தில் வியாதனாகிய வேடுவனால் பூஜிக்கப் பட்டமையால் வியாதேசுவரர் என்னும் பெயரையடைந்து எழுந்தருளியிருக்கிறார் அக்குகவேடனும் அதுமுதல் அகண்ட ஐசுவரியமடைந்து இராமமூர்த்தியைத் தரிசித்துப் பல காலங் கழித்து ஆயுள் முடிவிற் சிவசாயுச்சியத்தையடைந்தான். ஆகையால் அறியாமையாலேயே, சிவராத்திரி விரதத்தை அனுசரிப்பவர்கள்  சிவசாயுச்சியத்தை அடைவதானால் ஞானவான்களாய் பக்தியோடு அவ்விரதத்தை அனுசரித்தவர்கள் சிவரூபத்தை அடைவார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை எல்லாச்சாஸ்திரங்களும் தருமங்களும் விரதங்களும், தீர்த்த யாத்திரைகளும், தானங்களும் பலன்களும் சிவராத்திரி விரதத்துடன் விசாரிக்கையிற் சமானமாகமாட்டா, ஆகவே மிக்க சுபகரமான இச்சிவராத்திரி விரதத்தை இதத்தை விரும்புவோராகிய நீங்கள் ஆசரிக்க வேண்டும் இந்த விஷயத்தைப்பற்றி இதுகாறுஞ் சொல்லிய தோஷ பாபத்தை ஒழிக்கத் தக்க வேறொரு சரிதமும் உங்கட்குச் சொல்லுகிறேன்.

73. வேதநிதியின் கதை

சவுனகாதி முனிவர்களே அவந்தி நகரில் ஒரு தீக்ஷிதர் இருந்தார். அவர் உயர் குலப்பிறப்பும் வைதிக ஆசாரமும் மங்களகரமான செயல்களும் வேதசாஸ்திரங்களில் பூரண ஞானமும் கல்வி கேள்வியிலும் போதிப்பதிலும் வல்லமையுடையவர். அவருக்கு நற்குல நற்குணப்பண்பும் கற்பும் கொண்ட மனைவி ஒருத்தியிருந்தாள் அவர்களுக்கு ஸுநிதி வேதநிதி என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஸுநிதி தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதில் மிகவும் விருப்பமுடையவனாக இருந்தான். வேதநிதி வேதங்களில் வல்லவனாக இருந்தும் ஒரு வேசியின் வீட்டில் வாழ்ந்து அங்கேயே ஸ்நான போஜனாதிகளைச் செய்து கொண்டிருந்தான் இதையறிந்த அவனது தாய் தந்தையர்கள் அவனைக் கண்டித்தார்கள். அவன் துராத்மாவாக இருந்ததால் தன் இயற்கையை விடவில்லை.

இவ்வாறு இருக்கும்போது அந்த நகரத்து மன்னனுக்குத் தீக்ஷிதர் தம் மீது தயை உண்டாகி விலையுயர்ந்த இரத்தினமயமான மோதிரம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளித்தான். தீக்ஷிதர் அந்த மோதிரத்தைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோய் தன் தீய மகனுக்குத் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டுமென்று தன் மனைவியிடம் கொடுத்தார். அவ்வம்மையும் அவ்வாறே மறைத்து வைத்தாள். அதையறிந்த குமாரன் வேதநிதி அதைத் திருடிச் சென்று, அன்றிரவே தன் ஆசைக்குகந்த தாசியிடம் கொடுத்து விட்டான். அந்த வேசையோ, அதையணிந்து கொண்டு அரசனது அவையில் நடனமாடச் சென்றாள். தீக்ஷிதருக்கு அளித்த மோதிரம், வேசையின் கரத்தில் ஜொலிப்பதை அரசன் கண்டதும் இது நாம் தீக்ஷிதருக்குக் கொடுத்தது ஆயிற்றே! என்று உணர்ந்து அந்த நாட்டியக்காரியை நோக்கி, பெண்ணே! விலை மதிப்பு மிகவுமுடைய இந்த மோதிரம் உனக்கு யாரால் கிடைத்தது? என்று கேட்டான். அவள் உண்மையைச் சொல்லவில்லை அரசன் அவளைப் பயமுறுத்திக் கேட்ட பிறகு அவள் கடைசியாக அந்த மோதிரத்தை வேதநிதியே தனக்குக் கொடுத்தான் என்ற உண்மையைச் சொன்னாள். அரசன் பலாத்காரமாக அந்த மோதிரத்தை வாங்கித் தன்னிடம் வைத்துக் கொண்டு மறுநாள் பொழுது விடிந்ததும் தீக்ஷிதரை வரவழைத்து நான் உமக்குக் கொடுத்த ஆபரணத்தை என்னிடம் சிறிது நேரம் கொடுங்கள் மீண்டும் அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டான். தீக்ஷிதர் தன் வீட்டுக்குச் சென்றார் மனைவியை அழைத்து நான் உன்னிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைக்கச் சொன்ன மோதிரத்தை எடுத்துத் தா! என்று கேட்டார். அவள் அதை வைத்த இடத்தில் தேடிக் காணாததால் திரும்பி வந்து தன் கணவனிடம் அது காணவில்லையே என்றாள். தீக்ஷிதர் துக்கத்துடன் அரசனிடம் சென்று அரசே! அந்த மோதிரம் அகப்படவில்லை அது எவ்வாறாயிற்றோ அறியேன் என்றார்.

வேந்தன் நடந்தவற்றைத் தான் யூகித்தபடி வெளியிட தீக்ஷிதர் தம் வீட்டிற்கு வந்து மனைவியைக் கண்டித்து உனக்கு இவ்வளவு அஜாக்கிரதையா? என்று கோபித்தார். பிறகு தீக்ஷிதரும் அவர் மனைவியும் வேதநிதியை அழைத்து, இனி நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது. உன்னால் பிரயோசனமுமில்லை. நீ குலதூஷகன்! என்று அவனைத் தூஷித்துத் துரத்திவிட்டார்கள். வேதநிதி பல நாட்கள் வெளியில் அன்ன ஆகாரம் ஒழுங்காகக் கிடைக்காமல் வருந்தித் தன் காதற்கிழத்தியிடம் சென்றான். அவளும் அவனால் தனக்குப் பொருள் எதுவும் கிடைக்காது என்று உணர்ந்து துரத்தி விட்டாள் அவன் ஆதரவற்றவனாகி விட்டான். அன்றையத் தினம் உலகம் முழுவதும் கொண்டாடத்தக்கச் சிறந்த சிவராத்திரி விரதத் தினமாக இருந்தது. அன்று அந்நகர மக்கள் சிலர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து விசேஷபூஜையைச் செய்யவிரும்பிப் பலவகையான நிவேதனப் பொருட்களுடன் ஒருசிவலாயத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களைக்கண்டான் வேதநிதி நாம் இவர்களுடன் சென்று எவ்வாறாவது இவர்களை வசப்படுத்தி ஆகாரம் வாங்கிப் புசிக்கலாம், என்ற நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். சிவாலயத்தில் பெரும் பசியுடனிருந்து அவர்கள் செய்யும் பூஜையைப் பார்த்துக் கொண்டு உணவருந்த வேண்டும் என்ற அவாவுடையவனாக இருந்தான். அவர்கள் எப்போது போவார்கள்? எப்போது அன்னம் புசிப்பது? எவ்வாறு அந்த அன்னத்தைப் பெறுவோம்? என்று எண்ணியபடி தன் விருப்பம் கைகூட வேண்டுமென்று கண்விழித்துக் கொண்டிருந்தான். சிவபூஜை செய்தவர்கள் யாவரும் முதல் ஜாம பூஜை முடித்து நிருத்தம் கீதம் முதலியவற்றை இயற்றி விட்டுத் தங்கள் இருப்பிடங்களை அடைந்தார்கள் சிலர் அங்கேயே தூங்கினார்கள். அங்கிருப்பவர்கள் தூங்குவதைக் கண்ட வேதநிதி சிவபெருமானுக்கு நிவேதித்து அங்கு வைத்திருந்த பக்குவான்னத்தை, இச்சமயத்திலே தான் கொண்டு போகவேண்டும் என்று நினைத்து சிவலிங்கத்தை நோக்கி மெதுவாக நடந்தான். அங்கிருந்த தீபங்கள் பிரகாசங்குறைவாக இருந்தன. எனவே நிவேதனப் பொருள்கள் அவன் பார்வைக்குப் புலனாகவில்லை. அவன் அவற்றைக் களவு செய்வதற்காக தன் உத்தரீயத்தில் சிறிது கிழித்துத்திரித்துப் போட்டுத் தீபத்தைத் தூண்டினான். அவன் தீபம் ஏற்றியதால் சிவ சன்னிதியில் இருந்த இருள் முழுவதும் விலகியது. அவன் தனக்கு வேண்டிய ஆகாரங்களை எடுத்துக் கொண்டு வெளியேபுறப்பட்டான், அப்படிப் போகும் போது அங்குத் தூக்கி கொண்டிருந்த கோயில் சேவகர் காலை மிதித்து விட்டான். அதனால் தூங்கிக்கொண்டிருந்த சிலர் கண் விழித்து திருடன் திருடன்! என்று கூச்சலிட்டார்கள். வேதநிதி பயந்து ஓடினான் சிலர் அவனைப் பின் தொடர்ந்து கூச்சலிட்டு செல்லவே இராஜ சேவர்கள் அக்கூக்குரலைக் கேட்டு திருடனைப் பின் தொடர்ந்து பிடிக்கச் சென்றார்கள். வேதநிதி அவர்களிடம் அகப்படாததால் அவர்கள் அவன் மீது பாணப் பிரயோகம் செய்தார்கள். அந்தப் பாணங்களில் ஒன்று வேதநிதியின் உடலிற்பட்டு உருவிச் சென்றதால், அவன் பூமியில் விழுந்து மடிந்தான்.

அந்த வேதியன் அஞ்ஞானத்தாலேயே சிவராத்திரி விரதமும் ஜாகரணமும் இருந்தவனானான், சர்வதயாளரான சிவபெருமான் வேதநிதியை விரதப் பூர்த்தி செய்தவனாகவே அங்கீகரித்தார். அப்போது சிலதூதர்களும் யமதூதர்களும் வந்தார்கள். அவர்கள் இரு தரத்தாரும் இவனைக் கொண்டு போகவேண்டியவர்கள் நாங்கள் தான் என்று வாக்குவாதம் செய்தார்கள். எமதூதர்கள் சிவகணத்தினரை நோக்கி இவன் தான் கொடிய பாபியாயிற்றே! அணுவளவும் புண்ணியமே செய்யாதவனாயிற்றே? இவனுக்காக நீங்கள் ஏன் வந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு சிவகணங்கள் இவன் பாபியேயானாலும் சிவராத்திரி விரதம் இருந்து ஜாகரணம் செய்ததால் புனிதமாயினன் என்றார்கள். எமதூதர்கள் யமதர்மராஜனிடம் சென்று அவர்கள் கூறியதைச் சொல்ல யமன் உண்மை! அவன் பாபங்கள் சிவராத்திரி விரதமிருந்ததால் ஒழிந்தன! என்று சொல்லி வேத நிதியைப் பார்த்து, நீ பாக்கியவனானாகுக என்று வாழ்த்தினார். அதனால் வேதநிதி தன் மறுபிறவியில் கலிங்கதேசத்து மன்னனாகப் பிறந்து சிவபூஜை செய்வதையே பக்தியாகக் கொண்டு சிவராத்திரி விரதத்தை எக்காலமும் ஆதரித்துதன் ராஜ்ஜியம் முழுமையும் சிவாலயப் பிரதிஷ்டைகளும் சிவாலய நித்திய நைமித்திகப் பிராயச்சித்தாதிகளும் செய்வித்து மோஷம் அடைந்தான்.

சிறிதும் பக்தியில்லாமலேயே சிவராத்திரி விரதத்தால் இத்தகைய இஷ்ட போகங்களையும் மோக்ஷத்தையும் அஞ்ஞானிகளே பெறமுடிந்தது என்றால், இந்த விரதத்தைப் பக்தியோடு அனுசரித்தவர்கள் சிறந்த முக்தியை அடைவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? திருடுவதற்காகவே சிவாலயத்துத் தீபத்தை வேதநிதி தூண்டியதால் இத்தகைய பயன் கிடைக்குமானால் ஞானத்தோடு சிவாலயத்தில் தீபம் வைத்தவர்கள் சுபமான மோக்ஷத்தை அடையமாட்டார்களா? சிவபெருமானை விட ஒருவன் தயாளனாகவும் தூய்மையாக்குவோனாகவும் இல்லை முனிவர்களே மோக்ஷத்தைக் கொடுக்கத்தக்கது இந்தச் சிவராத்திரி விரதமே! சிவபெருமான் ஒருவனே பரத்துவப் பொருள் அந்தச் சர்வேஸ்வரனே முக்தி ஸ்தானமாக விளங்குபவன் இந்தச் சிவராத்திரிக்குச் சமமானதும் இதைவிடச் சிறந்ததும் ஒரு விரதமும் இல்லை.

74. முக்தி இலக்கணமும் சிவரூபமும்

நைமிசாரணிய முனிவர்கள் சூத புராணிகரை நோக்கி, ஞான வித்தகரே! முக்தி என்று நீங்கள் சொன்னீர்களே? அது எத்தகையது என்பதை எங்களுக்கு விவரமாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! நீங்கள் கேட்ட முக்தி என்பது சாரூப்பம் (இறைவன் உருப்பெறும் பேறு) சாலோக்கியம்(இறைவன் உலகம் அடையும் பேறு) சாந்நித்யம் (இறைவன்  அருகில் இருக்கும் பேறு) சாயுஜ்ஜியம் (இறைவனோடு இரண்டறக் கலத்தல்) என்று நான்கு வகைப்படும். அந்த முக்தி இந்த விரதத்தினாலேயே கிடைக்கும் அம்முக்தியை யாராலடைய வேண்டுமெனின் உலகங்களையெல்லாம் படைத்து இரட்சித்துச் சங்கரிக்கச் செய்யுஞ் சிவபெருமானாலேயே ஆகும் என்று புத்திமான்களால் சாகா சந்திர நியாயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய சிவ பரம்பொருளை விஷ்ணு பிருமா, சனத்குமாரர், நாரதர், மார்க்கண்டேயர், சுகர், பிரமபுத்திரர் முதலிய யாவரும் அறியார் ஆனால் வேதங்கள் மட்டும் அபரோக்ஷமாகச் சச்சிதானந்த ஸ்வரூபம் சிவபெருமான் என்று சொல்லுகின்றன. நிர்க்குணமும் மாயாரஹிதமும், நிரஞ்சனமும் நித்தியமும் செம்மை, பசுமை, வெண்மை, கருமை, முதலிய நிறமற்றதும் மனோவாக்குக் காயங்களுக்கு அதீதப்பட்டதுமாக உள்ளது சிவபரம் பொருள் அந்தப் பொருள் ஆகாயத்தைப் போலச் சர்வ மூர்த்தத்திலும் வியாபித்துள்ளது அது ஸ்தூல சூக்ஷ்மங்களாலாகாது; சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டது. மாற்சரியமற்றது நிர்விகாரமானது இகலோகத்திலும் பரலோகத்திலும் அந்தப் பரம்பொருளை அர்ச்சனை செய்வதாலேயே அதன் பிராப்தியாகிய முக்தி கைகூடும். ஆகையால் சர்வேஸ்வரனுடைய சேவை முக்திப் பிராப்தத்திற்காகவே செய்யத் தக்கது நீங்கள் கேட்ட விஷயத்தைச் சொன்னேன். இதைக் கேட்டவர்கள் சகல பாபங்களிலிருந்தும் நீங்குவர் என்பதில் ஐயமில்லை. அதை விஸ்தீரணமாகச் சொல்லப் புகுந்தால் ஆதிசேஷனாலும் சொல்லி முடியாது. இவ்வாறு சூதபுராணிகர் கூறினார்.

75. சிவபெருமானின் நித்யத்துவம்

சவுனகாதி முனிவர்கள், சூத புராணிகரை நோக்கி மகாத்மாவே! சிவபெருமான் என்பது யார்? உருத்திரன் என்பவர் யாவர்? இவர்களில் இவ்வுலகங்களுக்கெல்லாம் கர்த்தாவாக இருப்பவர் யார்? நிர்க்குண ஸ்வரூபியானவர் யார்? நிர்க்குண ஸ்வரூபியாக இருந்தும் பஞ்சக்கிருத்தியம் (ஐந்தொழில்) காரணமாக குணசொரூபியாக உலகச் செயல்களைச் செய்பவர் யார்? இந்த விஷயத்தில் எங்களுக்குள்ள சந்தேகத்தை நீங்கள் விளக்கியருள வேண்டும் என்று கேட்டார்கள் சூத புராணிகர் சொல்லத் தொடங்கினார்.

ஞான சீலர்களே நிர்க்குணமாயுள்ள எந்தப் பரமாத்மாவினால் இந்த உலகங்கள் தோன்றினவோ அந்தப் பரமாத்மாவே சிவபெருமான் என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. அத்தகைய பரமாத்மாவின் மகிழ்ச்சியினால் உண்டாகிய ஜலமானது சராசரப் பிரபஞ்சம் முழுவதும் வியாப்தமாகையில் விஷ்ணு தவஞ்செய்து இளைத்து, அந்த ஜலத்திலேயே நித்திரை செய்தார். அந்த ஜலசயன முதல் புருஷனுக்கு நாராயணன் என்றப் பெயர் உண்டாயிற்று பிரகிருதிக்கும் நாராயணி எனப் பெயர் வந்தது. அந்த விஷ்ணுயோக நித்திரையில் இருக்கும் போது அவருடைய உந்தி கமலத்திலிருந்து பிரமன் தோன்றினான். அவன் பலகாலம் தவம் செய்து தனக்குக் காரண பூதனான விஷ்ணுவைக் கண்டான். அந்த விஷ்ணு வைகுண்டப் பதவியிலிருந்து மஹாபிரளயத்தில் சிவபெருமானிடத்தில் முக்தி நிலையடைவர். இத்தகைய விஷ்ணுவும் பிரமனும் ஜகத் கர்த்தாக்களாக விவாதம் செய்த போது பரமேஸ்வரன் அவர்களுக்குக் காட்டிய உருவமே மகா தேவவுரு. இந்த மஹாதேவனுடைய கபோலத்தால் தோன்றிய வடிவமே உருத்திரன் அந்த மூர்த்தமே தியான யோக்கியமான சிவ சொரூபம் மற்ற விஷ்ணு வாதி தேவர்கள். பிரகிருதி சம்பந்தமானவர்கள். ஆகையால் காலாநுக்கிரகமாக நாசவருமாவர் உருத்திரன் அப்படி நாசமடையாமல் சிவபெருமானிடத்தில் ஐக்கியமாவான்! பிரமாதி தேவர்கள் மகரிஷிகள் அனைவரும் உருத்திரனைத் தோத்திரஞ் செய்ய வேண்டியவர்களே யாவார்கள்.

பிருமா விஷ்ணு முதலானவர்களை பக்தி செய்பவர்கள் அவர்களிடத்தில் ஐக்கியமடைய அத்தேவர்கள் காலக்கிரமத்தில் முக்திபெறும்போது அவர்களோடு முக்தியடைவார்கள் உருத்திரபக்தி செய்பவர்கள்: இதரர் அபேøக்ஷயில்லாமலேயே தக்ஷணம் சிவசாயுஜயம் பெறுவார்கள் என்று க்ஷரம்-பிரதானம் முதலிய வேதங்கள் கூறுகின்றன. ஹிரண்ய கர்ப்ப பிபீலிகாதி வரையில் காணப்படும் உலகத்தில் உள்ளவர்களுக்கு அஞ்ஞானம் பலவகைப்படும். விஞ்ஞானமோ நித்ய சுத்த புத்தி முக்தி ஜீவசுவபாவத்தால் பல திறப்பட்டதல்ல ஆனால் அகண்ட ஏகரஸமாக ஒன்றியாக இருக்கும் இவை யாவும் சிவஸ்வரூபமே! இதை விசாரிக்க வேண்டியதில்லை, சர்வேஸ்வரனுக்குச் சதாசிவன் என்னும் பெயர் எவ்வாறு உண்டாயிற்று என்று தெரிந்து கொள்ளுங்கள். சிவபெருமானே சிருஷ்டிக்கு முற்பட்டவர். வயத்துக்குப் பிற்காலத்திலும் இருப்பவர் சிருஷ்டிக்குப் பிற்காலத்திலும் இருப்பவர் ஆகையால் சதாசிவம் என்னும் பெயர் நிர்க்குணராகிய சிவபெருமானுக்கு உண்டாயிற்று முதலில் தன் நிசுவாசத்திலுண்டான வேதம் என்ற பெயரை யுடையவாக்கையும் பலவகைப்பட்ட மந்திரங்களையும் தியானத்தையும் பூஜைகளையும்  ஈஸாநஸ் ஸர்வ வித்யாநாம் முதலிய ஸ்ருதிகளால், ஸர்வ வித்தைகளுக்கும் பிரபுவான சிவபெருமான் தன்னாற்படைக்கப்பட்ட பிரபஞ்சம் முழுவதும் நல்ல நிலைக்குவர வேண்டும் என்ற கிருபா நோக்கமுடையவராய் விஷ்ணு மூர்த்திக்குக் கொடுத்தார் ஆகையால் ஜகத்துக்குச் சிருஷ்டித்துவமும் (படைத்தலும்) இக்ஷணத்துவமும் (காத்தலும்) சாட்சியும்(சான்றும்) சம்ஹாரத்துவமும் (அழித்தலும்) ஜகதீஸ்வரரான சிவபெருமானிடத்தில் உள்ளனவே அன்றிப் பிறரிடத்தில் இல்லை விஷ்ணுவாதி இதர தேவர்களுக்கு காலவரையுள்ளதேயன்றி சர்வேஸ்வரனான சிவபெருமானுக்குக் காலக் கணிதம் கிடையாது சிவபெருமானுக்கு மஹாகாலன் என்று பெயர் இவரது கட்டளைப்படி காலம் இயங்குவதேயன்றி அது இவரை ஒன்றுஞ் செய்யாது. அனைத்திற்கும் இவரே காரணபூதர் விஷ்ணுவாதியர் காரியபூதர் சிவபெருமானது இச்சையால் படைத்தல் காத்தல் அழித்தல் முதலிய கிருத்தியங்கள் நடக்கின்றன சிவத்துவேஷியாக இருப்பவரும் சிவபெருமானைச் சங்கரிப்பவரும் ஒருவரும் இல்லை. ஒரு விதையானது இலைகளை, பூ காய் முதலிய பலரூபங்களாகக் காணப்பட்டுக் கடைசியில் யாவும் அழிய அந்தவிதையே மீதமாக இருப்பது போல இவர் தமக்குத்தாமே காரணவடிவமாகவும் ஒன்றியாகவும் இருந்தும் சிருஷ்டியாதி காரணமாக அநேகராய் பிரளய காலத்தில் ஒன்றியாகிறார் இதை ஞானியர் அறிவார்கள் இவர் மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாதவர். இவ்வாறு சூதமுனிவர் கூறியதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி, சிவபெருமானே பிரபஞ்சம் என்றும் பிரபஞ்சமே சிவபெருமான் என்றும் சொன்னீர்களே, அதன் விளக்கத்தை எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டார்கள்.

76. ஞானப் பிரகரணம்

சூதபுராணகர் சவுனகாதி முனிவர்களை நோக்கிக் கூறலானார், நீங்கள் மஹா புண்ணியசாலிகள், நான் பூர்வத்தில் கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள். ஒரு காலத்தில் பிரமதேவர், நாரதர், ஸநத்குமாரர், வியாஸர் கபிலர் முதலியவர்கள் ஒருங்குகூடி நிச்சயித்துக் கொண்ட விஷயமாவது ஞாதுரு ஞானம், ஞேயம் ஆகிய இம்மூன்றும் பிரமாதி குணப் பரியந்தமாகக் காணப்படும். உலக முழுவதும் சிவஸ்வரூபமே பிறிதில்லை. இச்சையுண்டானபோது உலகம் சிருஷ்டிக்கப்படுகிறது. தன்னால் படைக்கப்பட்ட சகல பிரபஞ்சத்தையும் தானே சாட்சிபூதமாகச் சிவபெருமான் பார்த்துக்கொண்டிருக்கிறார் பிரபஞ்சவாசிகள் யாவரும் மாயா வயப்பட்டவர்களாதலின் சிவபெருமானை ஒருவரும் அறிகிலர் சூரியன் ஆகாயத்திலிருந்து ஜல நதிகளில் பிரதிபிம்பித்தவாறு யாவற்றிலும் பிரவேசித்திருக்கிறார் நிச்சயமாக விசாரிக்கும் போது பிரவேசமே கிடையாது. மீண்டும் தாம் தாமாகவே விளங்குகிறார் அஞ்ஞானத்தால் துவிதம் என்பது மனப்பிராந்தியாகும் வைஸேஷிக சாஸ்திரங்களிலே துவிதம் கூறப்படுகிறது! சிவபெருமானுடைய அம்சமே ஆன்மாக்கள். அவை மலசம்பந்தத்தால் ஜீவன் எனப்படும் ஜீவஸ்வரூபமான யான் என்னும் பொருளைப் பரமாத்ம ஸ்வரூபம் எதை தெரிந்து கொண்டவன் மலரகிதனாய் சிரவணாதி சாதன சம்பத்துக்களை அடைந்து சிவரூபம் அடைகிறான் எங்கும் வியாபகமாகியுள்ள சிவபெருமான் எல்லாப் பிராணிகளிலும் வியாபித்து சேதனா சேதனங்கள் யாவும் தாமேயாகி விளங்குகிறார். விறகுகளில் எல்லாம் நெருப்பிலிருந்தும் மதிக்கப்பட்ட விறகிலேதான் அக்கினி தோன்றுவது போல ஆன்மாக்கள் தோறும் சிவபெருமான் வியாபித்தும் சிரவணாதி உபாயங்களைச் செய்பவனுக்குச் சர்வேஸ்வரராகிய சிவபெருமானுடைய தரிசனம் சந்தேகம் இல்லாமல் கிடைக்கும். சிவபெருமானே பரத்துவம் சிவபெருமானே அநேக ஸ்வரூபமாக எப்போதும் பிரகாசிக்கிறார். சமுத்திரத்தில் உப்பும் மலரில் மணமும் மணியில் ஒலியும் போலச் சிவபெருமான் பிரிவற்றவர். காரியபூதமானது நானாபேதமாகக் காணப்படினும் இறுதியில் விதை ஒன்றே எஞ்சி நிற்பதால் காரணத்தில் காரியம் உண்டானதாக அறிதல் வேண்டும். மாயையே விதை என்றும் ஜகத்து மாயாஸ்வ ரூபம் என்றும் உணரவேண்டும். இத்தகைய நியாயத்தால் மாயை நீங்கிய பிரபஞ்சம் முழுவதும் சிவபெருமானே வியாபித்திருக்கிறார். ஜலாதிகளில் பிரதிபிம்பத்திற்கு சூரியாதி பிம்பங்கள் வாயுவாதி சலனத்தால் தோஷம் சம்பவித்ததாகக் காணப்படினும் ஜலத்தின் சம்பந்தப்படாத சூரியாதி பிம்பங்களுக்கு உபாதி இல்லாததுபோல சிவபெருமானது வியாபகத்தால் அநேகத்துவம் அடைந்தபோதும் அவருக்கு அவித்யை சம்பந்தமான தோஷங்கள் சம்பவியா சுத்தமான பொன் தாமிரத்துடன் கலந்திருப்பதால் மதிப்புக் குறைவு ஏற்பட்டும் புடமிட்ட பிறகு மீண்டும் உயர்வடைவது போலவே, ஆன்மா அந்தக்கரண பந்தத்தால் அடைந்த பசு என்னும் பெயரை  பத்தியாதிகளால் சர்வேஸ்வரனை ஆராதித்து நீங்கி இறுதியில் சிவசாயுஜ்ய பதத்தை அடையும் இதில் ஐயமில்லை.

முனிவர்களே! சிவபெருமானே கடவுள் அவரை அடைந்தவர்கள் பிறவியடைய மாட்டார்கள் இத்தகைய இறைவனிடத்தில் பக்தியுண்டாவதற்கு ஆயிரம் பிறவிகளில் சிறப்பான தவம், தானம் விரதம் முதலியவற்றைச் செய்து சிவபக்தனாக வேண்டும் பிறகு அந்த ஜீவன் முக்தனாவான் இச்சரிதமே அந்தச் சபையில் நிச்சயித்துக் கூறப்பட்டது. இதைச் சிவபெருமான் லிங்கஸ்வரூபத்துடன் விஷ்ணுவுக்கும், பிரமனுக்கும் அவர் ஸநத் குமாரருக்கும் அவர் நாரத முனிவருக்கும் அவர் வியாச முனிவருக்கும் அவர் எனக்கும் கூறினாள், அதையே நான் உங்களுக்குச் சொன்னேன் நீங்களும் இதைப் பக்தர்களுக்கு விளக்கமாகச் சொல்லுங்கள் இவ்வாறு சூதமுனிவர் கூறினார். அதைக் கேட்ட முனிவர்கள் ஆனந்தமாகி, எங்கள் மனத்திலிருந்த சந்தேகங்கள் நீங்கின, என்றார்கள், சூதமுனிவர் மீண்டும் சொல்லத் துவங்கினார்.

சவுனகாதி முனிவர்களே! இந்தச் சரிதங்களை வியாசபகவானின் மாணவன் சொன்னது என்று உறுதியாகக் கொண்டு, நாஸ்திகளுக்கும் சிரத்தையில்லாதவருக்கும் பக்தியில்லாதவருக்கும் பணிவிடை செய்யாதவருக்கும் சொல்ல வேண்டாம். பதினெண் புராணங்களையும் இதிகாசங்களையும் வேதார்த்தங்களையும் பலமுறை ஆராய்ந்து உணர்ந்து இதுவே விஷயங்களைக் கேட்பதால் பக்தியற்றவர்களுக்கும் பக்தியுண்டாகும் பக்தியுடைவர்களின் பக்திமேலும் அதிகரிக்கும். இதை ஒரு முறை கேட்டதனால் ஒருவனுடையபாபங்கள் எல்லாம் நசிக்கும், இரண்டு முறைகள் கேட்பதனால் சிவபக்தி உண்டாகும். மும்முறை கேட்பதனால் அந்தச் சிவபக்தி விருத்தியடையும் நான்காம் முறை கேட்பதனால் சிவதரிசனம் கிடைக்கும். ஐந்தாம் முறை கேட்பதனால் விரும்பிய பயனையெல்லாம் நிர்விக்கினமாகப் பெற்று வாழ்வார்கள். அத்தகையோருக்கு உலகத்தில் கிடைக்காதது ஒன்றுமிராது பூர்வத்தில் சில மன்னர்கள் இந்த ஞான சம்ஹிதையை ஐந்து முறைகள் கேட்டு சிவதரிசனம் பெற்று சிறப்பான மனோபீஷ்டங்களைப் பெற்று வாழ்ந்திருந்தார்கள். ஆகையால் இதை இப்போது கேட்பவர்களும் கிடைத்ததற்கு அரிய உயர் பதவிகளை அடைவார்கள். இவ்வாறு சூதபுராணிகர் கூறியதும் சவுனகர் முதலான முனிவர்கள் வியந்து விலையுயர்ந்த பீதாம்பரம் முதலிய ஆடைகளையும் சந்தன புஷ்பங்களையும் ஆபரணங்களையும் சூதமுனிவருக்குப் பாதகாணிக்கையாக வைத்து அவரைப் பூஜித்துப் புகழ்ந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துப் பரமானந்தம் அடைந்தார்கள் சூதமுனிவரும் சந்தோஷத்துடன் இருந்தார்.

இந்த நூல் மிகவும் சிறந்தது என்று மனத்திடமுறக்கருதி சிவபெருமானை வழிபட்டு பக்தியுடன் சிவபூஜை செய்து இந்தச் சிவமஹாபுõரண ஞான சம்ஹிதையைக் கேட்டவர்கள் இஷ்டகாமிங்களை அடைந்து ஆயுள் முடிவில் சிவசாயுஜ்யத்தை அடைவார்கள். இதை எழுதிப் பொன் முதலிய தக்ஷிணையோடு சிவபக்தியுடைய வேதியருக்குத் தானமளித்தவன் எப்போதும் சிவலோகத்தில் வசித்து சிவரூபத்தை அடைவான். ஆகையால் எவ்வகையாலாவது இச் சிவமஹா புõரணத்தைச் சதுர்வர்ணத்தவர்களும் பலருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்; அவ்வாறு கொடுப்பவர்கள் எப்போதும் சிவலோகத்திலேயே வாழ்வார்கள் இதைச்சொன்ன புராணிகளை அன்னவஸ்திரத்தால் திருப்தி செய்தவன் சிவபக்தி அடைவான்.

ஞான சம்ஹிதை முடிந்தது.