சார்லஸ் டி கோல்
சார்லஸ் டி கோல் எனப் பரவலாக அறியப்படும் சார்லஸ் அண்ட்ரே ஜோசெப் மாரீ டி கோல் (Charles André Joseph Marie de Gaulle - 22 நவம்பர் 1890 – 9 நவம்பர் 1970) பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது சுதந்திர பிரான்ஸ் படைகளுக்கு இவர் தலைமை தாங்கினார். பின்னர் ஐந்தாம் பிரெஞ்சுக் குடியரசை நிறுவிய இவர் அதன் முதல் அதிபராகவும் பணியாற்றினார். இவர் ஜெனரல் டி கோல் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
முதலாம் உலகப் போர்ப் பட்டறிவும் கொண்ட இவர், 1920 களிலும், 1930 களிலும் கவசவண்டிப் போர்முறையின் ஆதரவாளராகவும், படைத்துறையில் வானூர்திகளைப் பயன்படுத்துவதன் ஆதரவாளராகவும் முன்னணிக்கு வந்தார். பதுங்குகுழிப் போர்களில் ஏற்படக்கூடிய இழுபறி நிலையைப் போக்குவதற்கு இதுவே வழி என அவர் கருதினார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இவர் பிரிகேடியர் ஜெனரல் என்னும் தரநிலைக்கு உயர்ந்தார். 1940 ஆம் ஆண்டின் பிரான்ஸ் வீழ்ச்சியின் போது இடம்பெற்ற போர்களில் சில வெற்றிகரமான எதிர்த் தாக்குதல்களை நடத்திய படைகளை இவர் வழி நடத்தினார். பின்னர் இங்கிலாந்தில் நாடு கடந்து வாழ்ந்த பிரான்ஸ் படையினரை ஒன்று சேர்த்து, "சுதந்திர பிரெஞ்சுப் படையை" அமைத்தார். நாசி ஜெர்மனியை எதிர்க்குமாறு பிரான்ஸ் நாட்டினரைக் கோரி 1940 ஆம் ஆண்டில் அவர் நிகழ்த்திய வானொலிப் பேச்சு மிகவும் புகழ் பெற்றது. 1944 ஆம் ஆண்டில் பிரான்சை மீட்ட பின், உருவான பிரான்ஸ் இடைக்கால அரசில் இவர் பிரதமர் ஆனார். அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1946 ஆம் ஆண்டில் அவர் அரசியலில் இருந்து விலகிக் கொண்டார். 1958 மேயில் உருவான நெருக்கடியைத் தொடர்ந்து படையினரின் துணையோடு இவர் மீண்டும் பதவியில் அமர்ந்தார். டி கோல், ஐந்தாம் குடியரசை நிறுவுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதை வழி நடத்திப் பின்னர் பிரான்சின் முதல் அதிபராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
