சங்கரய்யா

bookmark


என். சங்கரய்யா சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு 1967 ஆம் ஆண்டிலும், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 1977, 1980 ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957, 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

என். சங்கரய்யா வாழ்க்கை வரலாறு:-

கல்லூரி வாழ்க்கை:-

இடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம் ஆண்டில் சேர்ந்தார். வரலாறு பிரதான பாடமாகும். அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதுரை மாணவர் சங்கம் :-

1938 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் (Madras Student Organization) அமைக்கப்பட்டு சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுவுடைமை இயக்கத்தில் என். சங்கரய்யா:-

1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லயா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்கள் ஆவர்.