கைகேயி சூழ்வினைப் படலம் - 1679
1679.
‘கார் மினொடு உலாயது என
நூல் கஞலும் மார்பன்,
தேர்மிசை, நம் வாயில் கடிது
ஏகுதல் செய்வானோ?
கூர் கனக ராசியொடு
கோடி மணியாலும்
தூர்மின், நெடு வீதியினை’
என்று சொரிவாரும்.
கார் மினொடு உலாயது என - மேகம் மின்னலொடு உலாவியது
போல; நூல் கஞலும்மார்பன் - முப்புரி நூல் விளங்கும் மார்பையுடைய
இராமபிரான்; நம் வாயில் -நமது வீட்டு வாயில் வழியாக; தேர்மிசை -
தேரின்மேல்; கடிது ஏகுதல் செய்வானோ- வேகமாகக் கடந்து
சென்றுவிடுவானோ?; கூர் கனக ராசியொடு - (அத்தேரைத்தடுப்பதற்காக)
மிகுந்த பொற்குவியலோடு; கோடி மணியாலும் - அளவற்ற மனணிகளாலும்;
நெடு வீதியினைத் தூர்மின் - பெரிய தெருவினை நிரப்புங்கள்; என்று
சொரிவாரும் -என்று சொல்லிக்கொண்டு அவற்றைக் கொட்டுவாரும் சிலர்.
இராமன் வடிவழகைக் காண அவனது தேர் விரைந்து செல்லாதபடி
பொன்னையும் மணியையும்வழியில் கொட்டும்படி சொல்லிச் சிலர்
அவற்றைப் பொழிந்துவைத்தனர். கார் - இராமன்திருமார்பிற்கும்,
மின்னல் முப்புரி நூலுக்கும் உவமை. 100
