கைகேயி சூழ்வினைப் படலம் - 1621
1621.
‘ஏவம் பாராய்; இல் முறை நோக்காய்;
அறம் எண்ணாய்;
“ஆ!” என்பாயோ அல்லை; மனத்தால்
அருள் கொன்றாய்;
நா அம்பால், என் ஆர் உயிர் உண்டாய்;
இனி, ஞாலம்
பாவம் பாராது, இன் உயிர்
கொள்ளப் படுகின்றாய்!
‘ஏவம் பாராய் - (என்) துன்பத்தைப் பார்க்கின்றாய் அல்லை; இல்
முறை நோக்காய்- நற்குடிப் பிறந்த பெண்ணின் நடைமுறையையும்
கருதுவாய் அல்லை; அறம் எண்ணாய் -தருமத்தையும் நினைக்க மாட்டாய்;
ஆ என்பாயோ அல்லை - ஐயோ என்று இரங்குவாயும் அல்லை;
மனத்தால் அருள் கொன்றாய் - உன் மனத்தில் அருள் என்னும்
பண்பையே கொன்றுவிட்டாய்; என் ஆர் உயிர் - என்னுடைய அரிய
உயிரையும்; நா அம்பால் உண்டாய் - உன் நாக்காகியஅம்பினால்
கொன்றாய்; இனி ஞாலம் பாவம் பாராது - இனி இவ் வுலகத்து மக்களால்
(பெண்கொலை)பாவம் என்று பாராமல்; இன் உயிர் கொள்ளப்
படுகின்றாய் - உன் இனிய உயிரைக்கொள்ளப்படப் போகின்றாய்.
பெண்ணிற்குரிய எந்த நற்பண்பும் இல்லாத உன்னை உலகத்தாரே
கொன்றொழிப்பர் என்கிறான்.ஏவம் - எவ்வம் என்பதன் விகாரம் மனத்தால்
அருள் - உருபு மயக்கம். உண்டாய் - தெளிவு பற்றிவந்தகால
வழுவமைதி. 42
