குலமுறை கிளத்து படலம் - 730
அசுவமேத யாகம் நூறு செய்தவன்
730.
‘கயற் கடல் சூல் உலகு எல்லாம்
கைந் நெல்லிக் கனி ஆக்கி.
இயற்கை நெறி முறையாலே
இந்திரற்கும் இடர் இயற்றி.-
முயற் கறை இல்மதிக் குடையாய்!-
இவர் குலத்தோன் முன் ஒருவன்.
செயற்கு அரிய பெரு வேள்வி
ஒரு நூறும் செய்து அமைத்தான்.
முயல் கறை இல் - முயலாகிய களங்கம் இல்லாத; மதிக்குடையாய்
- சந்திரனைப் போல விளங்கும் வெண்கொற்றக் குடையுடையவனே!;
இவர் குலத்தோன்- இம் மைந்தர்களது குலத்திலே; முன்னொருவன்-
முன்புதோன்றினான் ஓர் அரசன்; கயல் கடல் சூழ் உலகு எல்லாம்-
மீன்கள் வாழும் கடலால் சூழப்பட்டுள்ள நிலவுலகம் முழுவதையும்;
கைந் நெல்லிக் கனி - உள்ளங்கையிலுள்ள நெல்லிக் கனிபோல;
ஆக்கி - எளிதாக தன் ஆட்சிக்குக் கொண்டு வந்து; இந்திரற்கும் -
தேவேந்திரனுக்கும்; இடர் இயற்றி - (பதவி இழத்தலாகிய) துன்பத்தை
யுண்டாக்கி; செயற்கு அரிய -(பிறரால்) செய்வதற்கு அருமையான;
பெருவேள்வி ஒருநூறும் - ஒப்பற்ற பெரிய நூறு
அசுவமேதயாகங்களையும்; இயற்கை நெறிமுறையால் - வேதங்களின்
விதி முறைமை வழுவாமல்; செய்து அமைத்தான் - செய்து
முடித்தான்.
இப் பாடலில் குறிக்கப் பெற்றவன் சுதாசன் என்பவர். நகுடன்
என்று குறிப்பாரும் உண்டு. சந்திரனிடமுள்ள களங்கத்தை
முயலென்றும். மான் என்றும் பூச் சாயை என்றும். மறு என்றும்
கூறுவது கவிமரபாகும். 10
