கிம் டாய் ஜுங்

கிம் டாய் ஜுங்

bookmark

கிம் டாய் ஜுங் (Kim Dae-jung, ஜனவரி 6, 1924 – ஆகஸ்ட் 18, 2009) தென் கொரியாவின் குடியரசுத் தலைவராக 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். மக்களாட்சிக்காகவும் வட கொரியாவை மீள ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த இவருக்கு 2000 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டில் இருந்து ரோமன் கத்தோலிக்கராக இருந்த இவர் சர்வாதிகார ஆட்சிக்கெதிராகக் குரல் கொடுத்தமைக்காக "ஆசியாவின் நெல்சன் மண்டேலா" என அழைக்கப்பட்டார்.

இவரது வாழ்க்கைச் சுருக்கம்

நடுத்தர விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த கிம் 1943 ஆம் ஆண்டில் மொக்போ வர்த்தக உயர் பள்ளியில் படிப்பை முடித்து விட்டு ஜப்பானியக் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அந்நிறுவனத்தின் உரிமையாளரும் ஆனார். கொரியப் போர்க் காலத்தில் கம்யூனிஸ்டுக்களிடம் இருந்து தப்பினார்.

1954 ஆம் ஆண்டில் அரசியலில் இறங்கினார். 1961 ஆம் ஆண்டில் தென் கொரியத் தேசியப் பேரவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் அப்போது இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து தேசியப் பேரவை கலைக்கப்பட்டது.  1963 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார்.

தென்கொரிய அரசின் அரசியலமைப்பை எதிர்த்தமைக்காக 1973 ஆம் ஆண்டில் டோக்கியோவில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து இவர் தென்கொரிய இரகசியக் காவல்துறையினரால் கடத்தப்பட்டார். எனினும் இவர் உயிருடன் சியோல் திரும்பினார். இவர் அரசியலில் பங்குபெறுவதற்கு தடை செய்யப்பட்டார். அரசு எதிர்ப்புகளில் ஈடுபட்டமைக்காக 1976 ஆம் ஆண்டில் ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இது பின்னர் 1978 ஆம் ஆண்டில் வீட்டுக் காவலாகக் குறைக்கப்பட்டது.

அத்பர் பார்க் 1979 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பின்னர், கிம் மீண்டும் அரசியலுக்குத் திரும்பினார். எனினும், 1980 ஆம் ஆண்டில் மீண்டும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  அமெரிக்காவின் தலையீட்டால் இது பின்னர் 20 ஆண்டுகளுக்குக் குறைக்கப்பட்டு, பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படார். கிம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றி 1985 ஆம் ஆண்டில் மீண்டும் நாடு திரும்பினார்.