காவியம் பிறந்த களம் - 11

bookmark

11.

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே.
 
நடையின்  நின்று-நல்லொழுக்கத்தில்    நின்று;   உயர்-உயர்ந்த;
நாயகன்  -     திருமாலின்;       தோற்றத்தின்         இடை
நிகழ்ந்த-அவதாரங்களுக்குஇடையே  ஒன்றாக நிகழ்ந்த; இராமாவதாரப்
பேர்-இராமாவதாரத்தைக்    குறித்தும்   புகழ்மிக்கதுமான;   தொடை
நிரம்பிய தோம்  அறு  மாக்  கதை-செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற
சிறந்த    இந்தக்   காப்பியம்;   சடையன் - வள்ளல்   சடையப்பரது;
வெண்ணெய்        நல்லூர்     வயின்-திருவெண்ணெய்நல்லூரில்;
தந்தது-இயற்றப்பட்டது.

இராமாவதாரம்      என்ற    பெயரில்  பாடப்பட்ட இக் காப்பியம்
தோன்றியகளம்  சடையப்பரின்    திருவெண்ணெய்நல்லூராகும் என்பது
செய்யுளின் செய்தி. நடையின்  நின்றுயர்  நாயகனாவான் இறைவனாகிய
திருமால்.  தன்  இயல்பில்    வைகுந்தத்தில்  எழுந்தருளியிருக்குங்கால்
குணங்குறி  கடந்தவனாகிய   பிரான்,  அவதாரமெடுத்து இறங்கி/இரங்கி
வரும்போது     சாத்துவீக     குணமுடையவனாகிறான்;      இதனை
உணர்த்துவது’நடையில்  நின்றுயர்  நாயகன் தோற்றம்’   என்ற தொடர்,
இராமன்  என்ற  பெயர்கொண்ட  அவதாரங்கள்  மூன்று;   பரசுராமன்
பலராமன்   ஆகியோருக்கு   இடையே  நிகழ்ந்த   அவதாரம்  தசரத
ராமாவதாரம்.

தம்மை ஆதரித்த வள்ளலாகிய  சடையப்பரை  394,  8264,  10327
ஆம் பாடல்களிலும் கம்பர் குறிப்பார்.                          11