கார்முகப் படலம் - 806
சீதை தோழியை வினாதல்
806.
வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;
அந்தம் இல் உவகையள். ஆடிப் பாடினள்;
‘சிந்தையுள் மகிழ்ச்சியும். புகுந்த செய்தியும்.
சுந்தரி! சொல்’ என. தொழுது சொல்லுவாள்;
வந்து அடி- வந்ததும் சீதையின் அடிகளை; வணங்கிலள் -
விழுந்து வணங்கவில்லை; வழங்கும் ஓதையள் - ஆரவாரம்
செய்பவளும்; அந்தம் இல் உவகையள் - எல்லையில்லாத
மகிழ்ச்சியுடையவளுமாகி; ஆடிப் பாடினள் - ஆடுவதும் பாடுவதும்
ஆயினாள் (அதைக் கண்ட சீதை அவளை நோக்கி); சுந்தரி -
அழகானவளே; சிந்தையுள் மகிழ்ச்சியும் - உன் மனமகிழ்ச்சியின்
காரணத்தையும்; புகுந்த செய்கையும் - (பெரு மகிழ்ச்சிக்குக்
காரணமாக) நடந்துள்ள செயலையும்; சொல் - சொல்லுவாய்; என -
என்று கேட்க; (அந்தத்தோழி சீதையை) தொழுது - வணங்கி;
சொல்லுவாள் - கூறலானாள்.
தலைவியைக் கண்டவுடன் தோழி வணங்கவேண்டுவது முறையாகும்.
ஆனால் பெரு மகிழ்வால் அத் தோழி வணங்காமல் ஆடிப் பாடிக்
கொண்டிருந்தாள். பின்னர்ச் சீதை அவளைக் கேட்கச் செய்தியைக்
கூற முற்பட்டாள். 57
