கார்முகப் படலம் - 790
790.
ஐயன் வில் இறுத்த ஆற்றல்
காணிய. அமரர் நாட்டுத்
தையலார் இழிந்து. பாரின்
மகளிரைத் தழுவிக் கொண்டார்-
செய்கையின். வடிவின். ஆடல்
பாடலின் தெளிதல் தேற்றார்.-
மைஅரி நெடுங் கண்நோக்கம்
இமைத்தலும். மங்கி நின்றார்.
அமரர் நாட்டுத் தையலார்- விண்ணுலகத்து மகளிர்; ஐயன் வில்
இறுத்த - இராமன் வில்லை முறித்த; ஆற்றல் காணிய -
வல்லமையைக் காணும் பொருட்டு; இழிந்து - (வானிலிருந்து) இறங்கி
வந்து; செய்கையின் வடிவின் - (செய்யும்) செயலாலும் வடிவத்தாலும்;
ஆடல் பாடலின் - ஆடல் பாடல்களாலும்; தெளிதல் தேற்றார் -
(தமக்கும் மண்ணுலக மடந்தையர்க்கும்) வேறுபாடு காண
முடியாதவர்களாய்; பாரின் மகளிரை - மண்ணுலக மங்கையரை;
தழுவிக் கொண்டார் - (வானுலக மங்கையர் என்று கருதி
மகிழ்ச்சியால்) தழுவிக் கொண்டார்கள்; மை அரி நெடு நோக்கம்-
(அப்போது) அம் மங்கையரின் மையிட்டுச் செவ்வரி படர்ந்த நீண்ட
பார்வையுள்ள; கண் இமைத்தலும் - கண்கள் இமைகொட்டி நின்ற
அளவில்; மயங்கி நின்றார் - (இவர் நம் இனத்தவர் அல்லர் என்று)
மயங்கி நின்றார்கள்.
வானத்திலிருந்து இறங்கிவந்த தேவ மகளிர் செயல்
முதலானவற்றால் ஒத்திருந்த நிலவுலக மடந்தையரைத் தம்மவர்
எனக்கருதி மகிழ்ச்சியால் தழுவிக் கொள்ள. அப்பொழுது அவர்களின்
கண் இமைத்தலைக் கண்டு திகைத்தனர் என்பது - மயக்கவணி. 41
