கார்முகப் படலம் - 790

bookmark

790.    

ஐயன் வில் இறுத்த ஆற்றல்
   காணிய. அமரர் நாட்டுத்
தையலார் இழிந்து. பாரின்
   மகளிரைத் தழுவிக் கொண்டார்-
செய்கையின். வடிவின். ஆடல்
   பாடலின் தெளிதல் தேற்றார்.-
மைஅரி நெடுங் கண்நோக்கம்
   இமைத்தலும். மங்கி நின்றார்.
 
அமரர்  நாட்டுத் தையலார்- விண்ணுலகத்து மகளிர்; ஐயன் வில்
இறுத்த  -   இராமன்   வில்லை   முறித்த;   ஆற்றல்  காணிய  -
வல்லமையைக்   காணும்  பொருட்டு; இழிந்து - (வானிலிருந்து) இறங்கி
வந்து; செய்கையின்  வடிவின் - (செய்யும்) செயலாலும் வடிவத்தாலும்;
ஆடல் பாடலின் -  ஆடல்  பாடல்களாலும்;  தெளிதல் தேற்றார் -
(தமக்கும்    மண்ணுலக    மடந்தையர்க்கும்)    வேறுபாடு     காண
முடியாதவர்களாய்;   பாரின்  மகளிரை  -  மண்ணுலக  மங்கையரை;
தழுவிக்   கொண்டார்  -   (வானுலக   மங்கையர்   என்று  கருதி
மகிழ்ச்சியால்)  தழுவிக்  கொண்டார்கள்;  மை அரி நெடு நோக்கம்-
(அப்போது)  அம் மங்கையரின் மையிட்டுச் செவ்வரி படர்ந்த    நீண்ட
பார்வையுள்ள;  கண்  இமைத்தலும்  -  கண்கள் இமைகொட்டி நின்ற
அளவில்;  மயங்கி  நின்றார் - (இவர் நம் இனத்தவர் அல்லர் என்று)
மயங்கி நின்றார்கள்.

வானத்திலிருந்து     இறங்கிவந்த     தேவ     மகளிர்    செயல்
முதலானவற்றால்   ஒத்திருந்த   நிலவுலக   மடந்தையரைத்   தம்மவர்
எனக்கருதி மகிழ்ச்சியால் தழுவிக்  கொள்ள.  அப்பொழுது  அவர்களின்
கண் இமைத்தலைக் கண்டு திகைத்தனர் என்பது - மயக்கவணி.      41