கலைமகளைவேண்டுதல்

கலைமகளைவேண்டுதல்

bookmark


எங்ஙனம் சென்றிருந்தீர் - எனது 
  இன்னுயிரே! என்றன் இசையமுதே! 
திங்களைக் கண்டவுடன் - கடல் 
  திரையினைக் காற்றினைக் கேட்டவுடன், 
கங்குலைப் பார்த்தவுடன் - இங்கு 
  காலையில் இரவியைத் தொழுதவுடன், 
பொங்கு வீர் அமிழ்தெனவே - அந்தப் 
  புதுமையி லேதுயர் மறந்திருப்பேன். 

மாதமொர் நான்காநீர் - அன்பு 
  வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்; 
பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன் 
  பாவமெலாங் கெட்டு ஞானகங்கை 
நாதமொ டெப்பொழுதும் என்றன் 
  நாவினிலே பொழிந் திடவேண்டும்; 
வேதங்க ளாக்கிடுவீர் - அந்த 
  விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்! 

கண்மணி போன்றவரே! இங்குக் 
  காலையும் மாலையும் திருமகளாம் 
பெண்மணி யின்பத்தையும் - சக்திப் 
  பெருமகள் திருவடிப் பெருமையையும், 
வண்மையில் ஓதிடுவீர் - என்றன் 
  வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்! 
அண்மையில் இருந்திடுவீர்! - இனி 
  அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ! 

தானெனும் பேய்கெடவே - பல 
  சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே, 
வானெனும் ஒளிபெறவே - நல 
  வாய்மையி லேமதி நிலைத்திடவே 
தேனெனப் பொழிந்திடுவீர்! - அந்தத் 
  திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்! 
ஊனங்கள் போக்கிடுவீர்! - நல்ல 
  ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்! 

தீயினை நிறுத்திடுவீர் - நல்ல 
  தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்! 
மாயையில் அறிவிழந்தே - உம்மை 
  மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம் 
தாயென உமைப்பணிந்தேன் - பொறை 
  சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்; 
வாயினிற் சபதமிட்டேன்; - இனி 
  மறக்கிலேன், எனை மறக்ககிலீர்!