கண்ணன்பிறந்தான்

கண்ணன்பிறந்தான்

bookmark

கண்ணன் பிறந்தான் - எங்கள் 
கண்ணன் பிறந்தான் - இந்தக் 
காற்றை யெட்டுத் திசையிலுங் கூறிடும் 
திண்ண முடையான் - மணி 
வண்ண முடையான் - உயிர் 
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன் 
புண்ணை யொழிப்பீர் - இந்தப் 
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை 
எண்ணிடைக் கொள்வீர் - நன்கு 
கண்ணை விழிப்பீர் - இனி 
ஏதுங் குறைவில்லை, வேதம் துணையுண்டு (கண்ணன்) 

அக்கினி வந்தான் - அவன் 
திக்கை வளைத்தான் - புவி 
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன் 
துக்கங் கெடுத்தான் - சுரர் 
ஒக்கலும் வந்தார் - சுடர்ச் 
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள், 
மிக்க திரளாய் - சுரர், 
இக்கணந் தன்னில் - இங்கு 
மேவி நிறைந்தனர், பாவி யசுரர்கள் 
பொக்கென வீழ்ந்தார் - உயிர் 
கக்கி முடித்தார் - கடல் 
போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்) 

சங்கரன் வந்தான், - இங்கு 
மங்கல மென்றான் - நல்ல 
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன், 
பங்க மொன் றில்லை - ஒளி 
மங்குவதில்லை, - இந்தப் 
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று, 
கங்கையும் வந்தாள் - கலை 
மங்கையும் வந்தாள், - இன்பக் 
காளி பராசக்தி அன்புடனெய்தினள், 
செங்கம லத்தாள் - எழில் 
பொங்கு முகத்தாள் - திருத் 
தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்)