கடிமணப் படலம் - 1346

bookmark

1346.    

கொய்ந் நிறை தாரன். குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன். மங்கையர் நேர்ந்தார்;
மைந் நிறை கண்ணியர். வான் உறை நீரார்.
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார்.
 
கொய்ந்நிறை   தாரன் -  மலர்களைக்கொய்து தொடுத்து  நிறைந்த
மாலைகளையணிந்த  மார்பினனாகிய    சனகனும்;   குசத்துவசப்பேர்
நெய்ந்நிறை   வேலவன்  -  குசத்துவசன்  என்னும்  பெயரையுடைய
நெய்நிறையப்  பூசப்பெற்றுள்ள  வேல்   ஏந்திய   சனகனின்  தம்பியும்
(ஆகிய   இருவரின்);   மங்கையர்  நேர்ந்தார்  -  மகளிர்  மூவரும்
திருமணத்திற்குப்  பொருந்தியவர்  ஆயினர்; மைந்நிறை கண்ணியர் -
மை  நிறைந்த  கண்களை  யுடையவரும்;  வான்உறை நீரார் -  வான
மகளிரின்   தன்மையையுடையவரும்;  மெய்ந்நிறை மூவரை -  பருவம்
நிரம்பினவரும்  ஆகிய அம்மூவரையும்; மூவரும் வேட்டார் -  (இராம
பிரானின் தம்பியராகிய) மூவரும் மணஞ்செய்து கொண்டனர்.

மெய்    -   ஆகு   பெயராய்ப்   பருவத்தைக்குறித்தது.   சத்திய
ஒழுக்கத்தையும். நிறையென்னும்  பெண்மை  ஒழுக்கத்தையும்  கொண்ட
மகளிர்  என்று  “மெய்ந்நிறை  மூவர்”   எனுந்தொடர்க்குப்   பொருள்
கொள்ளினும் அமையும்.                                     101