கடிமணப் படலம் - 1329
திருமணச் சடங்கு தொடங்குதல்
1329.
தண்டிலம் விரித்தனன்: தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து. மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து. எரி குழும. மூட்டினன்;
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன்.
தண்டிலம் விரித்தனன்- (வசிட்ட மாமுனிவன்) (அக்கினி
வளர்க்கும் இடத்தே பரப்ப வேண்டிய) மணலைப் பரப்பினான்;
தருப்பை சாத்தினன் - தருப்பைகளை உரிய இடங்களில் வைத்தான்;
மண்டலம் விதிமுறை வகுத்து - (அக்கினி வைத்தற்குரிய) வட்டமான
இடத்தை வேத விதிப்படி ஏற்படுத்தி; மென்மலர் கொண்டு நெய்
சொரிந்து எரிகுழும மூட்டினான் - மெல்லிய மலர்களைக் கொண்டு
நெய்யை ஆகுதியாகச் சொரிந்து ஓம அக்கினி குவிந்தெழுமாறு
செய்தான்; பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன் - தொன்று
தொட்டு வந்த வேத நெறிப்படி (மந்திரங்களால்) தொழுது. (மணச்
சடங்கினைச்) செய்தான்.
தண்டிலம்: மணல்;வடசொல். “அக்கினியைப் பிரதிட்டிக்குமிடத்தே
சதுரமாகப் பரப்புகின்ற மணல்” (சீவக. 2463) என்பர்
நச்சினார்க்கினயர் “தருமணல். தருப்பை ஆர்ந்த சமிதை
இம்மூன்றினானும் விரிமலர் அணிந்த கோல வேதிகை” (சீவக. 2463)
என்பார் தேவரும். 84
