கடிமணப் படலம் - 1253

bookmark

இரவு நீட்டித்தது குறித்து இரங்கல்

இரவைப் பழித்தல்
 
1253.    

‘தெருளா வினை தீயர் சேர் நரகோ?
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ?
கருள் ஆர் கடலோ? கரை காண்பு அரிதால்!-
இருளானதுதான் - எனை ஊழிகொலாம்?
 
இருளானது  தான்  -  (இங்குச்   சூழ்ந்துள்ள)    இருள்  என்று
சொல்லப்படுவதுதான்;  தெருளா  வினை  தீயவர்  சேர்  நரகோ -
தெளிவற்ற  பாவச்  செயல்களைச்  செய்வார்   சென்றடையும்  நரகமே
தானோ? (இந்த  இருளில்); அவா அதுவோ அருளான் நெறி ஓடும்-
என்னுடைய   காதல்    வேட்கையோ.  என்னிடம்   இன்னும்  அருள்
காட்டாதவனாகிய  இராமன்  இருக்கும்  இடமே  நோக்கி  ஓடுகின்றது!;
கருள்  சேர்  கடலோ? - (விடிந்தால் அவனை  அடையலாம் எனில்)
(இந்த  இரவோ)  கருமை நிறைந்து (எல்லையற்ற  தாதலின்  கடல் என
முன்நிற்கிறது);  கரை  காண்பு  அரிதால்  -  (இவ்விரவு எனும் கடல்
மெல்லியலாள்  ஆகிய  நான்)   நீந்திக்  கடந்து  கரை  காண்பதற்கும்
அரிதாகிறது;  எனை  ஊழி  கொல்  ஆம்? - எத்தனை ஊழிக்காலம்
சேர்ந்து (இந்த ஓர் இரவு) ஆகியுள்ளது?

பிரிவில்  தவிப்பார்க்கு  ஒரு  நொடியும்  ஒரு  யுகமாகத் தோன்றும்
ஆதலால் “எனை ஊழி கொலாம்” என்று  பிராட்டி தவித்தனள்  என்க.
எனை  -  எத்தனை.  “ஒருநாள்  எழுநாள்   போல்   செல்லும் சேண்
சென்றார்  வருநாள்  வைத்து   ஏங்குபவர்க்கு”  (திருக்.  1296)  எனும்
கூற்றையும் ஒப்பிடுக. கடல் நீந்தற்கு  அரியது  என்பாள்  “இருள் கருள்
சேர்  கடல்; கரை  காண்பு  அரிது”   என்றாள். “காமக்  கடும் புனல்
நீந்திக்  கரை  காணேன்;  யாமத்தும்   யானேயுளேன்”   (திருக்  1167);
“இன்பம் கடல் மன்னும் காமம்; அஃது  அடுங்கால்.  துன்பம்  அதனில்
பெரிது” (திருக். 1166).                                        9