கடிமணப் படலம் - 1252

bookmark

உருவெளித் தோற்றம்

1252.    

‘தெருவே திரிவார். ஒரு சேவகனார்.
இரு போதும் விடார்; இது என்னை கொலாம்?
கரு மா முகில் போல்பவர். கன்னியர்பால்
வருவார் உளரோ. குல மன்னவரே?
 
ஒரு  சேவகனார்  தெருவே  திரிவார் - ஒப்பற்ற  வீரர் ஒருவர்
(இங்கே)  தெருவிடத்தே  திரிகின்றார்;  இரு போதும் விடார் - பகல்
இரவு  என்னும்  இரண்டு  வேளைகளிலும்  என்னைவிட்டு  நீங்குவதும்
இல்லை; இது என்னை கொல்ஆம்? - (தெருவிலும் என்னிடத்திலுமாக)
ஒருவரே   இரண்டிடத்திலும்   இருப்பது    எப்படிச்    சாத்தியமாம்?;
கருமாமுகில்  போல்பவர் -  கரிய  மேகம்போன்ற திருமேனியுடைய
அவர்;  குல  மன்னவர்  -  (மகளிரைக்காக்கும்  குலமாகிய)  மன்னர்
குலத்தவர்  ஆவார்; கன்னியர்பால்  வருவார்  உளரோ?  - அப்படி
மதிப்புக்குரிய      மன்னவர்       தனித்திருக்கும்     கன்னியரிடம்
(கண்ணியமின்றி) இப்படி விடாமல் வந்து தொல்லை தருவாரோ?.  

கன்னியரை  ஓயாது  சுற்றல்  குல  மன்னர்க்கு மாண்பு தருவதாகாது
எனப்   பழிப்பது   போல்   புகழ்ந்து.   இராமன்  தன்    நெஞ்சிலும்
நினைவிலும்     நீங்கா     இடம்     பெற்றுவிட்டதை     நயமுடன்
எடுத்தியம்பியவாறு.   கன்னியாகிய    என்னிடம்   கருணை     மழை
பொழிவார்   என்னும்   குறிப்பை.   “கருமா    மழை    போல்பவர்”
என்பதனால்   வெளிப்படுத்தினார்.   கன்னிமாடத்தில்   நின்று.  இராம
பிரானைத்   தெருவில்  கண்ட   காட்சி.  கண்ணிலேயே   நிற்பதனால்
“தெருவதிரிவார்”  என்றாள்.  அக் காட்சி. வீரருள்  வீரராகிய  சேவகக்
கோலமாய்ப்  பதிந்துள்ளது  என்பாள்  “ஒரு   சேவகனார்”  என்றாள்.
தொல்லை   கொடுப்பார்   பகலோ   இரவோ   ஒரு   நேரத்தில்தான்
கொடுப்பர்;இவரோ ”இருபோதும்விடார்” என்றாள்.  இரவில்  கனவிலும்
பகலில்   உரு  வெளியிலும்  ஓயாது.  பெருமானின்    சேவகக்கோலம்.
பிராட்டியின் கண்முன் நின்றது என்பதாம். “துஞ்சுங்கால்  தோள்  மலர்
ஆகி.  விழிக்கும்கால். நெஞ்சத்தர் ஆவர் விரைந்து”  (திக்.1218)  எனும்
அருமைக்  குறளை  நினைவு கூர்க. ஒரு  குல  மன்னவர்.  கன்னியரை.
இருபோதும்  விடாமல்  சுற்றுவது நாகரிகச்  செயலாகத்  தெரியவில்லை
என்பதாம்.     திரிதல்       பலகால்     செல்லல்.     இருபோதும்
தெருவே     திரிவார்;     இருபோதும்     கன்னி   மாடத்திருக்கும்
என்னையும்   விடார்;    இது     எப்படி     நிகழ்தல்    சாத்தியம்?
என்று  வியக்கிறாள்.  எங்கும்  நிறைதன்மையை   எடுத்துக்  குறிப்பால்
உணர்த்தியவாறு.                                            8