கடிமணப் படலம் - 1250
நிலவொடு கூறல்
1250.
‘அயில் வேல் அனல் கால்வன ஆம்; நிழல் ஆய்.
வெயிலே என நீ விரிவாய்;- நிலவே!
செயிர் ஏதும் இலார். உடல் தேய்வு உறுவார்.
உயிர் கோள் உறுவார். உளரோ? உரையாய்!
அயில் வேல். கனல். கால்வன ஆம் - கூரிய வேலின் துளைக்கும்
கொடுமையையும் தீயின் வெப்பத்தையும். உமிழ்கின்றனவாகிய; நிழல்
ஆய் வெயிலே என நீ விரிவாய் நிலவே! - ஒளிக்கிரணங்களைக்
கொண்டு. சுடுவதில் வெயில்போலப் பரவுகின்ற சந்திரனே!; செயிர்
ஏதும் இலார் உடல் தேய்வுறுவார் - வன்மம் ஏதும் இல்லாதவர்களும்.
(பிரிவுத்துயரால்) உடல் தேய்ந்து வருபவர்களுமாகிய
(மெல்லியலாராகிய) பெண்களின்; உயிர்கோள் உறுவார் உளரோ?
உரையாய்! - உயிரைப்பறிப்பவர்கள் உன்னையன்றி உலகில் வேறு
ஒருவர் உள்ளாரோ? நீயே சொல்வாயாக.
பெண்டிரைப்பேணல் பேரறம்: பெண்டிரைக்கோறல் பெரும் பாவம்
என்னும் பண்டையறம் ஒன்று பகர்ந்தவாறு. நிலவொளி
பிணைந்தார்க்குப் பேரின்பமும். பிரிந்தார்க்குப் பெருந்துன்பமும்
தருவது ஆதலின். பிரிந்துள்ள பிராட்டி. நிலவினை உயிர்கோள்
உறுவார் என்றாள்.
நான் உடல் தேய்வது போல். நீயும் உடல் தேயும் வழக்கம்
உடையையன்றோ? அத்துயர் உனக்குத் தெரியாதா? என்பாள். “உடல்
தேயுறுவார் உயிர் கோள் உறுவார் உளரோ?” என்றாள். உடல்
மெலிந்தார் உயிர்கொள்வது இரக்கம் அற்ற செயல் என்பதாம்.
பிரிந்தார்க்கு நிலவின் ஒளி. “அனல் கால்கின்ற நிழல்” ஆகும்.
இல்பொருள் உவமை. கூரிய வேலின் துளைப்பினைப் போல்
நிலாக்கதிர் துளைக்கும்; அத்துளை வழியே நெருப்பு நுழையும்
என்பார். “அயில் வேல் அனல் கால்வன” என்றார். நின் ஒளி நிழல்
வேடத்தில் வரும் தகிக்கும் வெயில் என்பார். “நிழல் ஆய் வெயிலே”
என்றார். உனக்கும் எனக்கும் முன்னைய வன்மம் ஏதும் இல்லையே!
பின் ஏன் என்னை இங்ஙனம் வருத்துகின்றாய்? என்பாள் “செயிர்
ஏதும் இலார் உயிர்கோள் உறுவார் உளரோ?” என்றாள். செயிர்
வன்மம். 6
