கங்கைப் படலம் - 2065

bookmark

கதிரவன் தோற்றம்

2065.    

துறக்கமே முதல ஆய
     தூயன யாவை யேனும்
மறக்குமா நினையல் அம்மா! -
     வரம்பு இல தோற்றும் மாக்கள்
இறக்குமாறு இது என்பான்போல்
     முன்னை நாள் இறந்தான், பின் நாள்,
பிறக்குமாறு இது என்பான்போல்
     பிறந்தனன் - பிறவா வெய்யோன்.

     பிறவாவெய்யோன் - என்றும் பிறவாது  ஒருபடித்தாகவே  உள்ள
சூரியன்;  வரம்புஇல தோற்றும் மாக்கள் -எண்ணிலவாய் உலகில்
தோன்றும் மக்கள்; இறக்குமாறு இது என்பான்போல் முன்னை
நாள் இறந்தான் -இறப்பது  இவ்வாறு என்று அவர்களுக்கு எடுத்துக்
கூறுவானைப் போல முதல் நாள் மாலை அத்தமித்தான்;பின்நாள் -
மறுநாள் (காலையில்);  பிறக்குமாறு இதுஎன்பான் போல் பிறந்தனன்-
பிறப்பது  இவ்வாறு என்று எடுத்துக் கூறுவான் போலத் தோன்றினான்
(இறப்பும் பிறப்பும் மாறிமாறி வருதலை உணர்வார்);  துறக்கமேமுதல
ஆய தூயன யாவையேனும் - சுவர்க்காதிபோகங்களாகச்
சொல்லப்படுகின்ற தூயனவாகிய மேலான எவையும்; (நிலையற்றவை
என்பதுஉணரப்படுதலின்) மறக்குமா நினையல் அம்மா! - மறக்கும்படி
நினையல் வேண்டும்படியாயின வாறுஎன்னே!

     இறப்பும் பிறப்பும் மாறி மாறி வருதலைச் சூரியனால் உணர்ந்த
மாக்கள் எவ்வளவு  உயர்ந்தசுவர்க்கம் முதலியனவும் நிலையிலாதவை என
உணர்த்தலின் மறப்பாராவர் என்பதாம். அம்மா! வியப்பிடைச் சொல்.
இதனால் மக்கள் உண்மை  உணர்ந்து  இறப்பு பிறப்பு அற்று என்றும் மீளா
உலகம் ஆகிய முத்தியையே வேண்டுதற்குச் சூரியன் உதவலை
உணர்த்தினார். நினையால் -உடன்பாட்டில் வந்த வியங்கோள்
வினைமுற்று.                                                 24