கங்கைப் படலம் - 2020
2020.
தொளை கட்டிய கிளை முட்டிய
சுருதிச் சுவை அமுதின்,
கிளை கட்டிய கருவிக் கிளர்
இசையின், பசை நறவின்,
விளை கட்டியின், மதுரித்து எழு
கிளவிக் கிளி விழிபோல்,
களை கட்டவர் தளை விட்டு எறி
குவளைத் தொகை கண்டான்.
தொளை கட்டிய கிளை- தொளை பொருந்திய புல்லாங்குழலிலிருந்து;
முட்டிய -தாக்கி எழுப்பிய; சுருதி - காதால் கேட்டு அனுபவிக்கும்
தன்மையதான; சுவை அமுதின்- சுவையுடைய இசை அமுதம் போலவும்;
கிளை கட்டிய கருவி - நரம்புகள் இணைத்துக்கட்டப்பெற்ற யாழிலிருந்து;
கிளர் இசையின் - உண்டாகின்ற இசையைப் போலவும்; பசை நறவின் -
சாரமுள்ள தேனைப் போலவும்; விளை கட்டியின் - நன்றாக விளைந்த
பாகுக் கட்டி போலவும்; மதுரித்து எழு - இனிமை உடையதாகி எழுகின்ற;
கிளவி -பேச்சினை உடைய; கிளி - கிளி போல்பவளாகிய சீதையினது;
விழி போல் -கண்களைப் போல; களை கட்டவர் - களை பறிப்பவர்;
தளைவிட்டு எறி -வயலிலிருந்து வீசி எறிகின்ற; குவளைத் தொகை
கண்டான் - குவளை மலர்களின்கூட்டத்தைப் பார்த்தான்.
சீதையின் சொல்லினிமைக்குக் குழலிசை, யாழிசை, தேன், கட்டி என
இவை உவமையாம்.களை பிடுங்குவார் எறிந்த கருங்குவளை மலர்கள்
சீதையின் கண்போலத் தோன்றிய இராமனுக்குஎன்பதாகும். 5
