எழுச்சிப் படலம் - 818
தூதர் ஓலையைக் கொடுத்தல்
சனகனது ஓலையை வாசிக்கக் கேட்டுத் தயரதன் உவகை கொள்ளல்
818.
கூறிய தூதரும். கொணர்ந்த ஓலையை.
‘ஈறு இல் வண் புகழினாய்! இது அது’ என்றனர்;
வேறு ஒரு புலமகன் விரும்பி வாங்கினான்;
மாறு அதிர் கழலினான். ‘வாசி’ என்றனன்.
கூறிய தூதரும்- (அவ்வாறு இராமனது வீரச் செயலை) கூறிய
தூதர்களும்; கொணர்ந்த ஓலையை - (தாம்) கொண்டு வந்த திருமண
ஓலையைக் குறித்துக் காட்டி; ஈறு இல் வண் புகழினாய்- முடிவில்லாத
வளமான புகழையுடையவனே!; அது - அந்தச் சனக மன்னன்
கொடுத்த ஓலை; இது - இதுவாகும்; என்றனர் - என்று சொல்லி
(அந்த ஓலையை) நீட்டினர்; வேறு ஒரு புலமகன் - (அவையில் ஓலை
வாசிப்பதற்கு என்றுள்ள) வேறு ஓர் அறிஞனாகிய திருமந்திர ஓலை
நாயகம். (அரசனது ஆணையினால்); விரும்பி வாங்கினான் -
(மகிழ்ச்சியோடு) விருப்பத்தோடு அதை வாங்கினான்; மாறு அதிர்
கழலினான் - ஒன்றோடு ஒன்று மாறி ஒலிக்கின்ற வீரக் கழலை
யணிந்த தசரதன்; வாசி என்றனன் - (ஓலை நாயகத்தைப் பார்த்து)
வாசிக்க என்று ஆணையிட்டான்.
கூறிய: இராம லக்குவர் அயோத்தியை விட்டுப் போன பின்னர்
நிகழ்ந்த 1.பலை. அதிபலை ஆகிய இரு மந்திரங்களைப் பெற்றது. 2.
தெய்வீக அம்புகளைப் பெற்றது. 3. தாடகையை வதம் செய்தது. 4.
விசுவாமித்திரன் செய்த வேள்வியைக் காத்தது. 5. அகலிகையின்
சாபம் தீர்த்தது. 6. சிவதனுசை முறித்தது ஆகிய வீரச் செயல்களைக்
கூறல். 3
