எழுச்சிப் படலம் - 816
சனகன் தூதர்கள் தசரதன் அரண்மனையை அடைதல்
816.
கடுகிய தூதரும். காலில் காலின் சென்று.
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்;
அடி இணை தொழ இடம் இன்றி. மன்னர்தம்
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார்.
கடுகிய தூதரும்- (சனகனால் அனுப்பப்பெற்று) விரைந்து சென்ற
தூதர்களும்; காலில் சென்று - காற்றைப் போல விரைந்து சென்று;
இடிக்குரல் - இடியின் குரலைப் போல; முரசு அதிர் - பேரிகைகள்
முழங்குகின்ற; அயோத்தி எய்தினார் - அயோத்தி நகரை
அடைந்தனர்; அடி இணை தொழ - அம்மன்னனுடைய பாதங்களைத்
தொழுவதற்கு; இடம் இன்றி - (உள்ளே செல்ல) இடம்
கிடைக்காததால்; மன்னர் தம் முடியொடு? - சிற்றரசர்களின்
பொன்முடிகளோடு; முடி பொரு - முடிகள் தாக்கிக் கொள்கின்ற;
வாயில் - அரண்மனை வாயிலை; முன்னினார் - அடைந்தார்கள்.
மணச் செய்தி சொல்ல வருகின்ற தூதர்களுக்கு ஏற்ப மங்கலமாக
‘முரசு அதிர் அயோத்தி’ என்றார்.
மன்னர்கள் தசரதனை வணங்க முந்துகின்றார்கள். அதனால்
அவர்களின் பொன்முடியோடு முடிகள் மோதுகின்றன என்றார். 1
