என். டி. ராமா ராவ்

என். டி. ராமா ராவ்

bookmark

இந்தியாவில் மிகவும் பிரபலமாக 'என்.டி.ராமா ராவ்' என்றும், தென்னிந்தியாவில் பெரும்பாலும் 'என்.டி.ஆர்' என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான நேர்த்தியுடன் செம்மையாக சித்தரிக்கப்பட்ட அவர், பின்னர் தெலுங்குத் திரைப்படத் துறையில், திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் கவனம் செலுத்தினார். டோலிவுட்டில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாடும், நடிப்புத் திறமையும், அவரை ஆந்திர பிரதேசத்தில் ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்தவராக மாற்றியது. என்.டி. ராமா ராவ் அவர்கள், திரைப்படத் துறையிலிருந்து ஓய்வுப் பெற்று, ஒரு அரசியல்வாதியாக மாறிய பிறகும் கூட, அவர் தன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகவே திகழ்ந்தார். அவரது தனிச் சிறப்பு வாய்ந்த அரசியல் வாழ்க்கை வரலாற்று வரைபடத்தில், ஆந்திர மாநிலத்தின் வளர்சிக்காகவும், நலனுக்காகவும் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். ஆந்திர மக்களின் இதயத்தில் இன்றளவும் வாழ்ந்துக் கொண்டிருக்கும், என்.டி.ராமா ராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு பின்வருமாறு

என்.டி.ராமா ராவ் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை

என்.டி.ராமா ராவ் அவர்கள், ஆந்திர மாநிலத்திலுள்ள நிம்மகுரு என்ற கிராமத்தில், மே 28, 1923 அன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு விவசாயியாக இருந்தாலும், குடும்பத்தில் செல்வசெழிப்பான, ஆடம்பரமான வாழ்க்கை சூழலே நிலவியது. என்.டி.ராமாராவ் அவர்கள், தனது முதல் நிலைக் கல்வியை நிம்ம குருவிலுள்ள பள்ளியில் பயின்றார். பின்னர், அவரது மாமா அவரைத் தத்தெடுத்ததன் காரணமாக, அவர் விஜயவாடாவிற்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் ஆறாவது வகுப்பிலிருந்து தனது கல்வியை, விஜயவாடாவிலுள்ள ஒரு பள்ளியில் பயின்றார். ஆனால், அதிர்ஷ்டத்தின் அட்டவணைகள் விரைவில் தலைகீழாகத் திரும்பியதால், என்.டி.ராமா ராவ் அவர்களின் குடும்பத்தின் செல்வசெழிப்புக் குறைந்து, ஏழ்மை நிலையை அடைந்தனர். இந்த நேரத்தில், விஜயவாடாவில் ஒரு பால் விநியோகம் செய்யும் சிறுவனாக தனது முதல் வேலையை எடுத்துக் கொண்டார், ராமா ராவ் அவர்கள். உள்ளூர் பலசரக்கு அங்காடியிலும் எழுத்தராகப் பணிபுரிந்தார். தனது பள்ளிப் படிப்பை இருபது வயது அடையும் வரைத் தொடர்ந்த, ராமா ராவ் அவர்கள், பின்னர் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக தனது படிப்பைத் தொடர்ந்தார். என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு அழகான குரல் வளம் இருந்ததால், அவரது இளம் வயதில், பெரும்பாலான நேரங்களில் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் விதி வேறு திட்டங்கள் தீட்டியதால், இந்திய சிவில் சேவைகளில் தனக்குக் கிடைத்த முதல் வேலையை விட்டுவிட்டு, தெலுங்குத் திரைப்படத் துறையில் ஒரு நடிகராக நுழைந்தார்.

நடிப்பின் மீது அவர் கொண்ட பற்றின் காரணமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில், கல்லூரி நாடகங்களிலும், மற்ற மேடை நாடகங்களிலும் தீவிரிமான உறுப்பினராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கல்லூரி நாடகத்தில், என்.டி.ஆர் அவர்களுக்கு முதல் முதலில் அளிக்கப்பட்டது ஒரு பெண் கதாபாத்திரம். அவர் அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புகொண்டாலும், அவரது மீசையின் காரணமாகத் தயக்கம் காட்டினார்! சமூகத்திலுள்ள ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கு சேவை செய்வதற்காக நிதித் திரட்ட அவர் பல மேடை நாடகங்களை ஏற்பாடு செய்து, தொகுத்தும் வழங்கினார். ஒரு இளைஞனாக, தனது இருபதுகளில், நட்சத்திர அந்தஸ்தை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதுவே ஆந்திர பிரதேச வரலாற்றின் பக்கங்களில் அவருக்கென்று ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த இடத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள உதவியது. எதிர்காலத்தில் புகழ்பெற்ற டோலிவுட் நடிகர் திகழவிருக்கும் இவர், 1942 ஆம் ஆண்டில், அவரது தாய் மாமாவின் மகளான பசவ தராகம் என்பவருடனான காதலை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்தார். தனது பள்ளிக் காலத்தில் ஒரு நல்ல மாணவனாக இருந்தும், பால்ய விவாஹத்தால் அவரது கல்லூரியில் பல பாடங்களில் தோல்வி அடைந்தார். இருப்பினும், என்.டி. ராமராவ் தொடர்ச்சியாக கல்வியில் தோல்வியுற்ற போதிலும், ஒரு உறுதியான மாணவராக இருந்து, அதனைக் கைவிடவில்லை.

என்.டி.ராமா ராவ் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை:-

என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். 43 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 1985ல், அவரது முதல் மனைவி பசவ தராகம் புற்றுநோயால் இறந்தார். என்.டி.ராமா ராவ் அவர்களுக்கும், அவரது முதல் மனைவிக்கும், 7 மகன்கள் மற்றும் 4 மகள்கள் பிறந்தனர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், தனது 70 வது வயதில், 1993 ஆம் ஆண்டில் மீண்டும் திருமணம் செய்தார். அவரது இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதி, பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவரைத் தொடர்ந்து இவரது பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகள் பலரும் ஆந்திர அரசியலிலும், தெலுங்கு திரைப்பட துறையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

என்.டி.ராமா ராவ் அவர்களின் திரையுலக வாழ்க்கை:-

1947 ஆம் ஆண்டு, தெலுங்கு திரையுலகில், என்.டி.ராமா ராவ் அவர்கள் பிரவேசித்தார். தென்னிந்தியாவில் மிகவும் நன்கு அறியப்பட்ட தயாரிப்பாளரான பி.ஏ.சுப்பா ராவ் அவர்கள், முதன் முதலில் என்.டி.ராமாராவிற்குள் ஒளிந்திருக்கும் தலைச்சிறந்த நடிப்புத் திறமையை கவனித்தார். பி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் எதிர்வரும் படமான 'பல்லேடுரி பில்ல' என்ற திரைப்படத்திற்கான ஹீரோவை தேர்ந்தெடுக்கும் விதமாக என்.டி.ராமா ராவ் அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்படத்திற்காக கையெழுத்திடும் முன், ஒருமுறைக்கு இருமுறை அவர் யோசிக்கவே இல்லை. நடிகர்கள் பெரிய திரையில் தனது முதல் செயல் திறனை வெளிபடுத்தும் முன், வழக்கமாக நடத்தப்படும் திரை சோதனை மற்றும் மேக்-அப் சோதனையெல்லாம் என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு நடத்தப்படவில்லை. பி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் படத்தில் முதலில் ஒப்பந்தமானாலும், என்.டி.ராமாராவ் அவர்கள் முதலில் திரையில் தோன்றிய படம், 1949ல் வெளியான எல்.வி.பிரசாத் அவர்களின் படமான 'மன தேசம்'. அதில் அவர் ஒரு துணிகரமான போலீஸ்காரர் என்ற சிறிய வேடத்தில் நடித்தார். 'பிசாரோ' என்ற ஆங்கிலம் நாடகத்திலிருந்து உணர்ச்சியூட்டும் வகையில் உருவான 'பல்லேடுரி பில்ல', என்ற திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடி, ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்று, திறமையான நடிகர் என்ற அங்கீகாரத்தை என்.டி.ராமா ராவ் அவர்களுக்குப் பெற்றுத் தந்தது. அந்நாட்களில், சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு நடிகருக்குக் கடினமாக இருந்தது. ஆகவே, தனது பணியிடத்திற்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சென்னையில் குடியேறினார். படங்களில் நடித்ததிலிருந்து கிடைத்த ஊதியம், குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாததன் காரணமாக, வறுமையில் வாடினார். பணம் சேகரிப்பதன் நோக்கமாக, அவர் பல நாட்கள் உண்ணாமல் கூட இருந்திருக்கிறார்.

1949 ஆம் ஆண்டு, என்.டி.ராமராவ் அவர்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக இருந்தாலும், 1951 ஆம் ஆண்டு அதை விட மிக சிறப்பாகவே அமைந்தது. ஏனென்றால், கே.வி.ரெட்டியின் படமான 'பாதாள பைரவியும்', பி.என்.ரெட்டியின் தயாரிப்பில் உருவான 'மல்லீஸ்வரியும்' அந்த ஆண்டில் தான் வெளியானது. 'பாதாள பைரவி' திரைப்படம் இந்தியா முழுவதும் அமோகமாக ஓடி, அபார வெற்றிப் பெற்றதால், சாதாரண மனிதனாக இருந்த என்.டி.ராமா ராவ் அவர்கள், படிப்படியாக வளர்ந்து தனக்கென டோலிவுட்டிலும், தன் ரசிகர்கள் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தார். பாதாள பைரவியிலும், அடுத்தடுத்த வந்த பல படங்களிலும், பெரும்பாலும் புகழ்பெற்ற வரலாற்று கதாப்பாத்திரங்களிலோ, அல்லது சாதாரண மனிதனாக கதாநாயகன் கதாபாத்திரங்களிலோ காணப்பட்டார். எதிர்மறைக் கதாபாத்திரங்களில், அவர் ஒரு சில படங்களிலே நடித்துள்ளார். என்.டி.ராமாராவின் புகழ் படிப்படியாக அதிகரித்ததன் காரணமாக, பல தயாரிப்பாளர்களும், அவருடன் படம் பண்ண ஆவலாக இருந்தனர். 1958 ல், 'பூ கைலாஸ்' என்ற படத்தில் 'ராவண பிரம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை, என்.டி.ராமா ராவ் அவர்கள், கைப்பற்றினார். அவருடைய வாழ்நாளில், 'ராவணன்' என்ற புராண கதாபாத்திரமே, வரலாற்றில் சிறப்புமிக்க மற்றும் மிகச் சிறந்த பாத்திரம் என அவர் கேள்விப்பட்டும், படித்தும் இருந்ததால், இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருந்தது, என்.டி.ராமா ராவ் அவர்கள், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த முதல் புராண படம், 1960 ல் வெளியானது. தென்னிந்தியாவில், எல்லோராலும் மிகவும் நேசிக்கப்படும் கடவுளாகத் திகழும் 'ஸ்ரீ வெங்கடேஸ்வரரை' அடிப்படையாகக் கொண்டு உருவான படமே 'ஸ்ரீ மத்விரதா பர்வம்'. தங்களது அபிமான நடிகரான 'என்.டி.ராமா ராவ் அவர்களைப் பார்க்க, அவரது ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் முன்னால் பல மணி நேரங்கள் காத்திருப்பதிலிருந்து ஒருபோதும் பின் வாங்கியதில்லை.

என்.டி.ராமா ராவ் அவர்களின் திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதி:-

ஒரு நடிகராக என்.டி.ராமா ராவின் புகழ் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அதே போல் அவரது ஊதியமும் உயர்ந்தது. அவரது படங்களான 'லவகுசா' மற்றும் 'மாயா பஜார்' அவரின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றிக் கண்டது. தனது வாழ்க்கை வரலாற்றில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தனது ரசிகர்களுக்குக் கொடுத்த என்.டி.ராமா ராவ் அவர்கள், தனது வாழ்வின் 40 வருடங்களுக்கும் மேலாக ஒரு நடிகராகவே இருந்தார். 200 க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், 15 தமிழ் படங்களிலும், ஒரு சில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார். என்.டி.ராமா ராவ் அவர்கள், ஒரு நடிகராக பல விருதகளை அள்ளிச் சென்றுள்ளார். தெலுங்கில், சிறந்த நடிகருக்கான 'ஃபிலிம்ஃபேர் விருதை' பத்து முறையும், அவரது படமான 'வரகட்னத்திற்காக' 'தேசிய விருதை' 1968 லும் பெற்றுள்ளார். இதைத் தவிர, இந்திய அரசிடமிருந்து மிக உயரிய விருதான 'பத்மஸ்ரீ விருதும்', ஆந்திர பல்கலைக்கழகத்திலிருந்து 'கௌரவ டாக்டர் பட்டமும்' பெற்றார். தென்னிந்திய திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் கதை வசனம் எழுதுவதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். திரை வசனம் எழுத, முறையான பயிற்சிப் பெறாத போதிலும், என்.டி.ராமா ராவ் அவர்கள் எழுதிய பல உரைகள் மிகவும் பிரபலமானது. அவரது சொந்த படங்களான 'சீதாராம கல்யாணம்' மற்றும் 'தான வீர சூர்ண கர்ணன்' போன்ற திரைப்படங்களை அவரே இயக்கினார்.

என்.டி.ராமா ராவ் அவர்களின் அரசியல் வாழ்க்கை:-

1980 களில், என்.டி.ராமா ராவ் அவர்கள் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். திரைப்படத் துறையில் ஒரு அங்கமாக இருந்த போதும் கூட, அவர் ஆந்திர பிரதேச கிராம பகுதிகளில் திரையரங்குகள் அமைக்க, அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க கடும் முயற்சி எடுத்தார். திரைப்படங்களுக்கு சரியான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பணம் வழங்கும் நிர்வாக அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார் அவர். எனவே, அரசியலில் ஈடுபடும் நோக்கம் எப்போதும் என்.டி.ராமா ராவிற்குள் ஒளிந்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 1982 ல், தெலுங்கு தேசக் கட்சியை உருவாக்கிய என்.டி.ராமா ராவ் அவர்கள், தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 1983 – 1994 ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், 1983 ல் தெலுங்கு தேச சட்டமன்ற கட்சித் தலைவரானார். சாதாரண மக்களிடையே, அரசியல்வாதிகள் நேரடி தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நம்பிய என்.டி.ராமா ராவ் அவர்கள், அவரது கட்சியான 'தெலுங்கு தேச கட்சியை' ஊக்குவிக்கும் விதமாக ஆந்திர மாநிலம் முழுவதும் விரிவான பயணங்கள் மேற்கொண்டார். 'சைதன்யா ரதம்' என்று பெயரிடப்பட்ட ஒரு தனிப்பட்ட வேனில் அவர் பயணம் மேற்கொண்டார்.

சமூகத்தில் ஏழ்மை நிலைக்கான காரணத்தையும், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், என்.டி.ராமா ராவ் அவர்கள் வாதாடினார். ஆந்திர மாநிலத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு வெற்றி வீரர் இவர். 1986 ல் இயற்றப்பட்ட, 'பெண்கள் மூதாதையர் சொத்து மரபுரிமை அனுமதிக்கப் படவேண்டும்' என்ற மசோதாவை முன்மொழிந்தார். என்.டி.ராமா ராவ் அவர்கள், பிரபலமான அரசியல்வாதியாக இருந்ததால், அவரது தெலுங்கு தேசக் கட்சி அப்போதைய ஆட்சியிலிருந்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது. தேர்தலில் என்.டி.ராமாராவ் அவர்கள், வெற்றிப் பெற்றாலும், இந்த அச்சுறுத்தலின் காரணமாக, 1984 ல், ஆந்திர பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என்.டி.ராமா ராவ் காலத்தில், தெலுங்கு தேசக் கட்சி நாட்டின் மிகவும் வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் ஒன்றாக பேசப்பட்டது. தெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கைகளும், அனைத்து வேலைகளும் முறையாக கணினி மயமாக்கப்பட்டதன் காரணமே, அதன் நிறுவனரான என்.டி.ராமா ராவ் அவர்கள் இறந்த பின்பும் கூட, கட்சி இன்றைக்கும் நிலைக்க காரணமானது. 1994ல், என்.டி.ராமா ராவ் அவர்கள், ஏகோபித்த முறையில் ஆந்திர மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது மோசமான உடல் நிலையின் காரணமாக, அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. என்.டி.ராமா ராவ் அவர்கள், 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

என்.டி.ராமா ராவ் அவர்களின் இறப்பு:-

என்.டி.ராமா ராவ் அவர்கள், தனது 72 வயதில், ஜனவரி 18, 1996 அன்று இறந்தார். அவர் இறந்த நேரத்தில், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஹைதெராபாத்தில் ஒரு குடியிருப்பாளராக அவர் இருந்தார். டோலிவுட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேச அரசியலிலும் இன்றும் கூட அவர் இல்லாக்குறை உணர்வு இருந்து வருகிறது.