என். ஆர். தியாகராசன்
என். ஆர். தியாகராஜன் (ஏப்ரல் 14, 1913 - ஏப்ரல் 27, 1969) என்பவர் ஒரு ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரர். இவர் என். ஆர். டி. என சுருக்கமாக அழைக்கப்பட்டார். தேனி மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 14, 1913 அன்று பிறந்த இவர் 7 ஆம் வகுப்பு வரை படித்தார். 1936 ஆம் ஆண்டில் தேனிக்குச் சென்று வசிக்கத் தொடங்கினார். ஜனவரி 15, 1939 ல் திருமணம் செய்து கொண்டார்.
விடுதலைப் போராட்டத்தில் என். ஆர். தியாகராஜன் அவர்களின் பங்கு :-
இந்திய விடுதலைப் போரட்டத்தில் தீவிரமான பங்கு கொண்டு 1930 முதல் 1946 வரை நான்கு முறை (ஐந்தாண்டுகள்) சிறை சென்றிருக்கிறார் என். ஆர். தியாகராஜன் அவர்கள்.
என். ஆர். தியாகராஜன் அவர்களின் அரசியல் பணி :-
சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்திற்கு 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1968 ல் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.
என். ஆர். தியாகராஜன் அவர்களின் நினைவுகள் :-
என். ஆர். தியாகராசன் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் அவரது பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன.
தேனி அரசு மருத்துவமனைக்கு என். ஆர். தியாகராஜன் நினைவு அரசு மருத்துவமனை என அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் பெயரிட்டு பெருமை சேர்த்துள்ளார்.
தேனி நகரில் என். ஆர். தியாகராசன் வாழ்ந்த வீடு உள்ள பகுதிக்கு என். ஆர்.தியாகராசன் நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதே போல தேனி நகரில் என். ஆர்.தியாகராசன் நகர் செல்லும் சாலைக்கு என். ஆர்.தியாகராசன் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
டி.டி.89 தேனி கூட்டுறவு சங்கத்தால் அதன் அலுவலகத்திற்கு எதிரே கட்டப்பட்ட அரங்கத்திற்கு என். ஆர்.தியாகராசன் மக்கள் மன்றம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தேனி – அல்லி நகரம் நகராட்சியின் நகர்மன்றக் கூட்ட அரங்கிற்கு என். ஆர். தியாகராசன் நினைவு நகர்மன்றக் கூட்ட அரங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தேனி அருகிலுள்ள கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு "என். ஆர். தியாகராசன் நினைத் தொடக்கப் பள்ளி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தேனி அருகிலுள்ள பழனி செட்டிபட்டியிலுள்ள ஒரு தெருவிற்கு என்.ஆர். தியாகராசன் தெரு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
