உலாவியற் படலம் - 1201
சனகன் யாவரையும் ஒப்ப உபசரித்தல்
அனைவரையும் சனகன் உபசரித்தல்
1201.
ஒழிந்த என் இனி? ஒண்ணுதல் தாதைதன்
பொழிந்த காதல் தொடர. பொருள் எலாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின். அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே.
ஒள்நுதல் தாதை - ஒளிமிகும் நெற்றியாள் ஆகிய சீதையின்
தந்தையாகிய சனக மன்னன்; தன் பொழிந்த காதல் தொடரப்
பொருள் எலாம் அழிந்து - பொழிகின்ற அன்பின் வழிபட்டு. தன்
செல்வம் முழுவதையும் செலவழித்து; மன்றல் கொண்டாடலின் -
இத்திருமண விழாவைக் கொண்டாடுவதால்; அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்தது - அந்த சனக மன்னனின்
அன்பு (வெள்ளம்) தாழ்ந்த நிலையில் உள்ளார்க்கும். (அனைவரிலும்
உயர்ந்த) இராமனுக்கும் சமமாகவே வாய்ந்தது; ஒழிந்த என் இனி? -
(இதற்கு மேல் இம் மண நிகழ்வுபற்றிக் கூற) மீதம் உள்ளவை
யாவை?.
பொழிந்த. தொடர. அழிந்து என்னும் சொற்போக்கால். சனக
மன்னனின் அன்பை வெள்ளமாக்கியுள்ள குறிப்பை உணரலாம். சனக
மன்னது உள்ளம் எனும் மலையில் உதித்த அன்பு வெள்ளம்
பொருள்களையெல்லாம் உருட்டி மக்கட்பரப்பிலேயே பாய்ந்தது என்க.
இன்னார். இனியார் உயர்ந்தார். தாழ்ந்தார் வேற்றுமை
வெள்ளத்திற்கில்லையாதலால். “அன்புதான் இழிந்துளார்க்கும்
இராமற்கும் ஒத்தது” என்றார். அழிந்து - மெலித்தல் விகாரம். மன்றல்
கொண்டாடல் - மணங்கொண்டு வருதல் வெள்ளத்திற்கும்
பொருந்துவது காண்க. ஜனகன் சமதிருஷ்டி உடைய ஞானி
ஆகையால். மருமகனாகிய இராமனிடத்தும் ஏழை எளியவரிடத்து
ஒருதக அன்பு செய்தான் என்பதைப் புலப்படுத்தினான் என்க. 54
