இரண்டு திறமைசாலிகள்

bookmark

இங்கிலாந்தின் ஒரு பகுதி யார்க்சயர். அங்குள்ள எல்லோருமே திறமைசாலிகள். அவர்களைப் பற்றி வழங்கும் துணுக்கு இது.

உழவன் ஒருவன் தன் குதிரையில் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்தான். திடீரென்று அந்தக் குதிரை இறந்து விட்டது.
அதை அங்கேயே விட்டுவிட்டு ஐந்து கல் தொலைவில் உள்ள தன் நண்பனின் வீட்டை அடைந்தான் அவன்.

நண்பனும் அவனை அன்புடன் வரவேற்றான். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

புறப்படும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்த அவன், "என்னிடம் அழகான பழுப்பு நிறக் குதிரை இருப்பது உனக்குத் தெரியும் அல்லவா?" என்று கேட்டான்.

"நன்றாகவே தெரியும் நல்ல குதிரை" என்றான் நண்பன்.

"அந்தக் குதிரைக்கு உன் வெள்ளைக் குதிரையை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்" என்றான் அவன்.

"மாற்றிக் கொள்ளலாம். உன் குதிரையின் மீது எனக்கு ஒரு கண் உண்டு" என்றான் நண்பன்.

"பிறகு பேச்சு மாற மாட்டாயே" என்று கேட்டான் அவன்.

"நீ பேச்சு மாறினால்தான் உண்டு" என்று உறுதியுடன் சொன்னான் நண்பன்.

"அப்படியானால் நான் உண்மையைச் சொல்லி விடுகிறன். என் குதிரை இறந்து நான்கு மணி நேரம் ஆகிறது" என்றான் அவன்.

"அதனால் என்ன? என் குதிரை இறந்து பத்து நாள் ஆகிறது. அதன் தோலைத் தோட்டத்தில் காய வைத்திருக்கிறேன்" என்றான் நண்பன்.