ஆற்றுப் படலம் - 15

bookmark

மழைத் தாரையின் தோற்றம்

15.

புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி, வான்,
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின், வழங்கின-மேகமே.
 
புள்ளி  மால் வரை-பெருமை மிகுந்ததும் பெரியதுமான இமயமலை;
பொன்  எனல்   நோக்கி   -  பொன்மயமாய்  இருப்பதைக்  கருதி;
வான்-விஷ்ணுலகத்தவர்கள்;  வெள்ளி  வீழ்  இடை   வீழ்த்தென -
வானத்துக்கும் மலைக்கும் இடையே  வெள்ளி  விழுதுகளை  வீழ்த்தியது
போல;  உள்ளி-எண்ணிப்பார்த்து; உள்ள  எல்லாம் - தம்மிடத்துள்ள
எல்லாவற்றையும்: உவந்து ஈயும் - மனம் மகிழ்ந்து பிறர்க்கு  வழங்கும்;
அவ்வள்ளியோரின் -  வள்ளல்களைப்  போல;  மேகம் வழங்கின -
மேகங்கள் மழைத்தாரைகளைப் பொழிந்தன.

இமயம்     பொன்மயமானது;     அப்பொன்னை  மேலுலகத்துக்கு
ஈர்த்தெடுக்க    எண்ணினர்   வானவர்;   பொன்னைப்  பற்றி  இழுக்க
வெள்ளி    விழுதுகளை   ஏராளமாக    வீழ்த்தி,    பொன்மலைக்கும்
வானுக்கும்     இடைவெளி   இல்லாமல்    விழுதுகளை   வீழ்த்தினர்.
பொன்(இமய)  மலைமேல்  ஏராளமாக   மழைத்  தாரைகள்  பொழிவது
இயற்கை.  அதற்கு  ஒரு  காரணத்தைத்   தம்  கற்பனைக்   குறிப்பால்
கவிஞர்  காட்டும்  இக்  காட்சி   தற்குறிப்பேற்ற  அணியாகும்.  மேகம்
ஏராளமாகப்  பொழிதலுக்கு    வள்லல்கள் வழங்குதல் உவமையாயிற்று.
அவ்வள்ளியோர்;   உலகறிந்த    புகழ்   குறித்த   சுட்டு  -   (அந்த
ஆண்டவந்தான்    காக்கவேண்டும்    என்பதிற்   போல)    இரவலர்
கேட்குமுன்  எதனை  வழங்குவது   என எண்ணுதல், இரவலர்  மேலும்
புரவலரை  நாடாதவகை என்ன  கொடுக்கலாம் என எண்ணுதல்  என்று
பலவாறு   எண்ணுதலை  ‘உள்ளி’  என்ற  சொல்  குறித்தது.   புள்ளி:
நன்மதிப்பு.                                                 4