அரசியற் படலம் - 178
தசரதன் திகிரியின் சிறப்பு
178.
குன்றென உயரிய குவவுத் தோளினான்.
வென்றிஅம் திகிரி. வெம் பருதியாம் என.
ஒன்றென உலகிடை உலாவி. மீமிசை
நின்று. நின்று. உயிர்தொறும் நெடிது காக்குமே.
குன்று என உயரிய - மலைபோலும் வளர்ந்து ஓங்கிய; குவவுத்
தோளினான்- திரண்ட தோள்கள் கொண்ட தயரதனுடைய; வென்றி
அம்திகிரி- வெற்றிமிக்க ஆணைச் சக்கரமானது; வெம்பரிதி ஆம்என
- வெம்மையுடைய சூரியனோ என்னும்படி; மீமிசை நின்று- மிக
உயரமான வானிலே நின்றும்; ஒன்று என- ஒன்றாகிய
பரம்பொருளைப் போல; உலகிடை உயிர்தொறும் உலாவி நின்று-
உலகில் வாழும் சர. அசரங்களாகிய உயிர்கள் தோறும் உலாவி. நின்று;
நெடிது காக்கும்- பெரிதும் காத்தல் தொழிலைச் செய்யும்.
பரம்பொருள் ஒன்றாக நின்று. உயிர்தொறும் உலாவி. நெடிது
காத்தல் போல வென்றியம் திகிரி. பரிதியாமென நின்று காக்கும்
என்பது கருத்து. குன்று: தோளின் திரட்சி உயர்ச்சிவுண்மையாலும்
உவமையாகும். ‘ஒன்றென’ என்பதற்கு. பொதுவறத் தனித்தே நின்று
என. திகிரிக்கு ஏற்றிக் கூறினும் பொருந்தும்.
குன்றென. பருதியாம் என. ஒன்று என. என்றுவரும் ‘என’ என்பன
உவமை உருபுகள். நெடிது: நீண்டகாலம் என்னும் பொருளும் கூறுதல்
பொருந்தும். குவவுத் தோள்: திரண்டதோள். வெம்பருதி: வெப்பமும்
ஒளியும் தரும் சூரியன். மீமிசை: மிகமேலே (மீமிசைச் சொல்).
காக்குமே: என்பதில் ‘ஏ’ அசை. பருதிஆம்: பருதி ஆகும்
(இடைக்குறை)
