அரசியற் படலம் - 171

bookmark

171.

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.
 
அன்னான் -  மன்னர்  மன்னனான    அத்தயரதன்;  எவர்க்கும்-
தனது    ஆட்சிக் கடங்கியகுடிமக்கள்   எவர்க்கும்;    அன்பின்தாய்
ஒக்கும் -அன்பு  செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான்;   நலம்
பயப்பின்   தவம்  ஒக்கும்  -  நன்மை   செய்வதில்    தவத்தைப்
போன்றவனாவான்;  முன்நின்று  ஒரு  செல்கதி உய்க்கும்  நீரான்-
தாய்தந்தையரின்      கடைசிக்     காலத்தில்     முன்னே    நின்று.
இறுதிச்சடங்குகளைச்  செய்து அவர்களை  நற்கதியில்  சேரச்  செய்யும்
தன்மையினால்;  சேய்    ஒக்கும்  -   அவர்கள்   பெற்ற   மகனை
ஒத்திருப்பான்;    நோய்    ஒக்கும்என்னின்   -    குடிமக்களுக்கு 
நோய்வருமாயின்;  மருந்து ஒக்கும் - அதைப் போக்கி. குணப்படுத்தும்
மருந்து   போன்றவனுமாவான்; நுணங்கு கேள்வி  ஆயப்புகுந்தால்-
நுணுக்கமான  கல்வித்துறைகளை   ஆராயப்புகும்     போது;  அறிவு
ஒக்கும்- நுட்பமான பொருளைக் காணும் அறிவினையும் ஒத்திருப்பான். 

தாயன்பு  சிறந்தது. “தாயினும் சாலப்பரிந்து”  என.  இறையன்புக்கே
தாயன்பை உவமையாக கூறினர் மேலோர். தனது  குடிமக்களிடம்  தாய்
போல்   அன்புடையவன்.   நன்மை  புரிவதில்   தவம்   போன்றவன்;
நற்கதியடையச்  செய்வதில்  சேய்  போன்றவன்;   நோயுறும்   காலை.
அதைப்   போக்கும்  மருந்து  போன்றவன்;  ஆராய்ச்சிக்கு    உதவும்
அறிவு    போன்றவன்   என்றெல்லாம்    தயரதனுடைய    பண்பைச்
சிறப்பித்துக்     கூறுகிறார்.     குருகுமாரனான       சிரவணனுடைய
பெற்றோர்களுக்கு    இறுதிச்   சடங்குகளைச்    செய்து- அவர்களைச்
செல்கதி  உய்த்த செயல் இவனது. “சேயொக்கும்”  என்பது  சிறப்பாகப்
பொருந்துவதொன்றுதானே!     ‘அறிவு’      குணவாகு      பெயராய்
அறிவுடையானை உணர்த்தி நின்றது.                            4