அகலிகைப் படலம் - 541

bookmark

விதேகநாட்டுச் சோலைகளின் சிறப்பு

மிதிலையின் வளம்
 
541.

வரம்பு இல் வான் சிறை மதகுகள்
   முழவு ஒலி வழங்க.
அரும்பு நாள்மலர் அசோகங்கள்
   அலர் விளக்கு எடுப்ப.
நரம்பின் நான்ற தேன் தாரைக் கொள்
   நறு மலர் யாழின்.
சுரும்பு. பாண் செய.
   தோகை நின்று ஆடுவ - சோலை.
 
சோலை   -  (அந்த மிதிலைநாட்டுச்) சோலைகளில்; வரம்பு இல் -
அளவில்லாத;  வான்சிறை மதகுகள் - பெரிய நீர் நிலையின் மதகுகள்;
முழவு  ஒலி வழங்க  -  மத்தள ஓசையைத் தரவும்; அசோகங்கள் -
அசோக  மரங்கள்;  அரும்பு  நாள்  மலர்  -  அரும்புகின்ற  புதிய
மலர்களாகி; அலர் விளக்கு  எடுப்ப  -  பொலிவுள்ள  விளக்குகளை
ஏந்தவும்.   நரம்பின்  நான்ற - யாழின்  நரம்பு போல நீண்ட தேன்
தாரை கொள்- சிறந்த தேனின் ஒழுக்கைக் கொண்ட; நறுமலர் யாழில்
-  நறுமணம்  வீசும்  மலர்களாகிய  யாழிலே;  சுரும்பு பாண் செய -
வண்டுகள்  பாடவும்;  தோகை  நின்று  ஆடுவ  -  மயில்கள் நின்று
கூத்தாடுகின்றன.  

மயிலும்  மகளிரும்: ஆடும் மகளிரின் தன்மை மயில்களுக்கு  ஏற்றிக்
கூறப்பெற்றுள்ளது.  உருகப்  பாங்கு.  சோலைகளின்  மதகுகளில்   நீர்
பாயும்போது  உண்டாகும்  ஒளியை  மத்தள  ஒலியாகவும்.   மலர்களை
விளக்கின்    ஒளிப்பிழம்பாகவும்.     தேன்    தாரைகளை    யாழின்
நரம்பாகவும்.   மலரை   யாழாகவும்.   வண்டுகளைப்    பாடகராகவும்.
மயில்களைக்     கூத்தாடும்      மகளிராகவும்       உருவகப்படுத்தி
யுள்ளார்.  அசோகம்:   இப்போது   அசோகு  என்று   குறிக்கப்படும்
மரமன்று. சிறை: நீரைத் தேக்கி வைத்திருக்கும் ஏரி. குளம்  போல்வன;
அணை என்றும் கூறலாம். ஒப்புமை: கம்பன்-35; அகநானூறு 82.     7