அகலிகைப் படலம் - 481
அச்சோலையைப் பற்றி
இராமபிரான் வினாவ முனிவர்பிரான் விடைதருதல்
9 அகலிகைப் படலம்
481.
‘இனைய சோலை மற்று யாது?’ என
இராகவன் வினவ.
வினை எலாம் அற நோற்றவன்
விளம்புவான்; ‘மேல்நாள்
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே.
காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள்.
இவண்’ என வலித்தான்.
வினை எலாம் அற நோற்றவன்- விசுவாமித்திரன்; வலித்தான் -
தெளிவாகச் சொன்னான்.
காசிபன் மனைவி திதி என்பவள் தன் மக்களான அசுரர்கள்
தேவர்களால் அடியுண்டு மடிந்து போனதால் மிகத் துயரம் அடைந்து
இந்திரனைக் கொல்லவும். மூவுலகையும் ஆளவும் ஒரு மகனைப்
பெறுமாறு தன் கணவனிடம் அனுமதி பெற்றுப் பல காலம் தவம்
புரிந்த இடம் இது என்று விசுவாமித்திரன் கூறினான். 3-1
