வேள்விப் படலம் - 471
சுவாகுவைக் கொன்று மாரீசனைக்
கடலிலே தள்ளுதல்
471.
துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்.
‘பிணத்திடை நந்து இவர் பிடிப்பர் ஈண்டு’ எனா
உணர்த்தினர். ஒருவர்முன் ஒருவர் ஓடினார்
துணர்த்த பூந்தொடையலான்- கொத்தாக விரிந்தமலர் மாலையை
அணிந்த ராமபிரான்; பகழி தூவினான் - (மற்றுமுள்ள அரக்கர்களின்
மேல்) அம்புகளை ஏவினான்; கணத்திடை விசும்பினைக் கவித்து-
அவ்வம்புகள் ஒரு கணப்போதில் வானத்தைச் சூழ்ந்து கொண்டு;
தூர்த்து - மூடிவிட்டது; இவர் பிணத்திடை நடந்து - இந்த
அரசகுமாரர்கள் பிணங்களின் மீது நடந்து வந்தேனும்; ஈண்டு
பிடிப்பர் எனா இங்கு - நம்மைப் பிடித்துக் கொள்வார்கள் என்று;
உணர்த்தினர் - ஒருவருக் கொருவர் தெரிவித்துக் கொண்டவர்களாய்;
ஒருவர்முன் ஒருவர் ஓடினர் - அந்த அரக்கர்கள் ஒருவருக்கு முன்
மற்றொருவராக ஓடலாயினர்.
துணர்த்த: கொத்தாக விரிந்த. தொடை: மாலை. பகழி: அம்பு.
கவித்தல்: சூழுதல். தூர்த்தல்: மூடுதல் அல்லது மறைத்தல். விசும்பு:
வானம். எனா: என்று. செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம்.
உணர்த்தினர். - முற்றெச்சம். ராமபிரான் அம்புகளை ஏவ அவை
வானையும் மறைத்துவிட்டது. அஞ்சிய அரக்கர்கள் பிணத்தின் மேல்
நடந்தேனும் நம்மைப் பிடித்துவிடுவார் என ஒருவருக்கு முன்
ஒருவராக ஓடலாயினர் என்பது கருத்து. 52
