வேள்விப் படலம் - 427

bookmark

நூறு மகளிரும் வாயுதேவன் விருப்பிற்கு
இசையாது இடர் உறுதல்

427.

‘கொடித் தனி மகரம் கொண்டான்
   குனிசிலைச் சரத்தால் நொந்தேன்;
வடித் தடங் கண்ணீர்! என்னை
   மணத்திர்’ என்று உரைப்ப. ‘’எந்தை
அடித் தலத்து உரைப்ப. நீதோடு
   அளித்திடின். அணைதும்’’ என்ன.
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார்.
   ஒளி வளை மகளிர் எல்லாம்.*
 
தனிமகரம்   கொடிகொண்டோன் -    ஒப்பற்ற     மகரமீனைக்
கொடியாகக்   கொண்டவனான  மன்மதனுடைய; குனிசிலைச் சரத்தால்
நொந்தேன் - வளைந்த வில்லம்புகளால்  நான்  மிகவும் வருந்தினேன்;
வடித்தடம் கண்ணீர் -  (ஆகையால்)  மாம்பிஞ்சின்  பிளவு  போன்ற
அகன்ற   கண்களை  உடைய பெண்களே; என்னை மணத்திர் என்று
உரைப்ப -  என்னை  மணம்  செய்து கொள்வீராக என்று வாயுதேவன்
கூற;   எந்தை   அடித்தலத்து   உரைப்ப  - (நீ சென்று) எங்களது
தந்தையை   வணங்கி   அவரிடம்   கேட்க;   நீரோடு அளித்திடின்
அணைதும் என்ன -  (அவர்)   எம்மை  நீருடன்  தாரை  வார்த்துக்
கொடுத்தால் நாங்கள் உன்னை (மணந்து)  அணைவோன்  என்று  கூற;
வெரிநை ஒடித்தனன் - வாயு கோபம்  கொண்டு (அவர்களது) முதுகை
ஒடித்துவிட்டான்;   ஒளிவளை   மகளிர்   எல்லாம்  வீ்ாந்தனர் -
ஒளிபொருந்திய வளைகளை அணிந்த அப்பெண்களெல்லாம் வீழ்ந்தனர்.

மன்மதன்  மீனைக்  கொடியாக உடையவன் என்பதால் ‘’கொடித்தனி
மகரம்     கொண்டோன்’’   என்று   சிறப்பிக்கப்பட்டான்.  குனிசிலை:
வளைந்த   வில்   (வினைத்  தொகை). சரம்: அம்பு. வடி: மாம்பிஞ்சின்
பிளவு.   வடிக்கண்:   உவமைத்  தொகை.  ‘’எந்தை அடித்தலத்து (நீர்)
உரைப்ப.  (அவர்)   நீரோடும்  அளித்திடின்’’ என்று கூட்டிப் பொருள்
கொள்க.   வெரிநை:   முதுகு.    வளை:  வளையல்.  வளை  மகளிர்:
இரண்டனுருபும்   பயனும்    உடன்   தொக்கத்   தொகை.   மன்மத
பாணத்தால் நொந்தேன்-  என்னை  மணந்து கொள்ளுங்கள் என. வாயு
கேட்க.  அப்பெண்கள்  -  எங்கள்   தந்தையிடம்   நீகேட்டு?  அவர்
தாரைவார்த்து  மணம் செய்து வைத்தால் நாங்கள்  உன்னைச்  சேர்ந்து
அணைவோம்  என்றனர்.  சினம்  கொண்ட  வாயுதேவன்  அவர்களது
முதுகை  ஒடித்தான்.  அம்மகளிர்  நிற்க  இயலாது   கீழே  வீழ்ந்தனர்
என்பது பொருளாகும்.                                       8