வேள்விப் படலம் - 427
நூறு மகளிரும் வாயுதேவன் விருப்பிற்கு
இசையாது இடர் உறுதல்
427.
‘கொடித் தனி மகரம் கொண்டான்
குனிசிலைச் சரத்தால் நொந்தேன்;
வடித் தடங் கண்ணீர்! என்னை
மணத்திர்’ என்று உரைப்ப. ‘’எந்தை
அடித் தலத்து உரைப்ப. நீதோடு
அளித்திடின். அணைதும்’’ என்ன.
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார்.
ஒளி வளை மகளிர் எல்லாம்.*
தனிமகரம் கொடிகொண்டோன் - ஒப்பற்ற மகரமீனைக்
கொடியாகக் கொண்டவனான மன்மதனுடைய; குனிசிலைச் சரத்தால்
நொந்தேன் - வளைந்த வில்லம்புகளால் நான் மிகவும் வருந்தினேன்;
வடித்தடம் கண்ணீர் - (ஆகையால்) மாம்பிஞ்சின் பிளவு போன்ற
அகன்ற கண்களை உடைய பெண்களே; என்னை மணத்திர் என்று
உரைப்ப - என்னை மணம் செய்து கொள்வீராக என்று வாயுதேவன்
கூற; எந்தை அடித்தலத்து உரைப்ப - (நீ சென்று) எங்களது
தந்தையை வணங்கி அவரிடம் கேட்க; நீரோடு அளித்திடின்
அணைதும் என்ன - (அவர்) எம்மை நீருடன் தாரை வார்த்துக்
கொடுத்தால் நாங்கள் உன்னை (மணந்து) அணைவோன் என்று கூற;
வெரிநை ஒடித்தனன் - வாயு கோபம் கொண்டு (அவர்களது) முதுகை
ஒடித்துவிட்டான்; ஒளிவளை மகளிர் எல்லாம் வீ்ாந்தனர் -
ஒளிபொருந்திய வளைகளை அணிந்த அப்பெண்களெல்லாம் வீழ்ந்தனர்.
மன்மதன் மீனைக் கொடியாக உடையவன் என்பதால் ‘’கொடித்தனி
மகரம் கொண்டோன்’’ என்று சிறப்பிக்கப்பட்டான். குனிசிலை:
வளைந்த வில் (வினைத் தொகை). சரம்: அம்பு. வடி: மாம்பிஞ்சின்
பிளவு. வடிக்கண்: உவமைத் தொகை. ‘’எந்தை அடித்தலத்து (நீர்)
உரைப்ப. (அவர்) நீரோடும் அளித்திடின்’’ என்று கூட்டிப் பொருள்
கொள்க. வெரிநை: முதுகு. வளை: வளையல். வளை மகளிர்:
இரண்டனுருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. மன்மத
பாணத்தால் நொந்தேன்- என்னை மணந்து கொள்ளுங்கள் என. வாயு
கேட்க. அப்பெண்கள் - எங்கள் தந்தையிடம் நீகேட்டு? அவர்
தாரைவார்த்து மணம் செய்து வைத்தால் நாங்கள் உன்னைச் சேர்ந்து
அணைவோம் என்றனர். சினம் கொண்ட வாயுதேவன் அவர்களது
முதுகை ஒடித்தான். அம்மகளிர் நிற்க இயலாது கீழே வீழ்ந்தனர்
என்பது பொருளாகும். 8
