விவேகானந்தர் முதியவருக்கு கொடுத்த தன்னம்பிக்கை

விவேகானந்தர் முதியவருக்கு கொடுத்த தன்னம்பிக்கை

bookmark


விவேகானந்தர் முதியவருக்கு கொடுத்த தன்னம்பிக்கை அது இன்றைய இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டு

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இமயமலையில் நீண்ட மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மலைச்சரிவில், மேற்கொண்டு ஏறமுடியாமல் களைத்துப் போய் அமர்ந்திருந்தார் முதியவர் ஒருவர்.

அவரைப் பார்த்ததும் அங்கே சென்றார் சுவாமி விவேகானந்தர். "நான் மிகவும் சோர்ந்து போய் விட்டேன். இந்த பாதையை இனி எப்படி கடக்கப் போகிறேன்? இனி மேல் என்னால் நடக்க இயலாது. என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது" என்று அவரிடம் புலம்பினார் அந்த முதியவர்.

அதற்கு விவேகானந்தர், "பெரியவரே! சற்று கீழே பாருங்கள். காலுக்கு கீழே நீண்டு தெரிகின்ற அந்த பாதை முழுவதும் உங்களால் கடக்கப்பட்டது தான். இன்னும் கொஞ்சம் நடந்தால் போதும். முன்னால் தெரிகின்ற பாதையும் விரைவில் உங்கள் காலுக்கு கீழே வந்துவிடும்" என்றார்.

அவரது தெம்பூட்டுகின்ற இந்த வார்த்தைகளை கேட்டதும், சோர்ந்து போய் இருந்த பெரியவர் எழுந்து நடக்க ஆரம்பித்தார் மலையின் உச்சியை அடைந்தார்.

விவேகானந்தரின் சாராம்சம் இதுதான்... 'முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால் இதயத்தைப் பின்பற்றி நடங்கள்'!