விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் தவம் செய்த இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது. 1892 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்தி சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாறு :-
1963 ஆம் ஆண்டில் இந்திய அரசு விவேகானந்தருடைய நினைவைப் போற்றும் வகையில் இங்கு நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க முடிவு செய்தது. இதன் பிறகு, கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த மீனவர்களில் ஒரு குழுவினர் இந்தப் பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தம் என்று சொல்லி, அவர்களால் அப்பாறையில் சிலுவைச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டது. இதனால் சமயம் சார்ந்த புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. இதில் உண்மையைக் கண்டறிய தமிழ்நாடு அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் விசாரணை முடிவில், இப்பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தமில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சிலுவைச் சின்னம் அகற்றப்பட்டது. அதன் பிறகு இந்த பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு அன்றைய குடியரசுத் தலைவர் வி. வி. கிரியால் திறந்து வைக்கப்பட்டது. கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது விவேகானந்த கேந்திரம் எனும் அமைப்பின் பராமரிப்பில் உள்ளது.
கடைகள்
இந்தப் பாறையின் மேல் விவேகானந்தர் தொடர்புடைய பல மொழிகளிலான புத்தகங்கள், படங்கள் மற்றும் விவேகானந்தர் படத்துடனான பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கின்றன.
படகுப் போக்குவரத்து
கன்னியாகுமரிக் கடலின் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகுப் போக்குவரத்துக்காக சாதாரணக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என இரண்டு வழிகளிலான கட்டணங்கள் உள்ளன. இரு வகையான கட்டணம் என்றாலும் பயணம் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளது. சிறப்புக் கட்டணம் விரைவில் பயணிக்க உதவுகிறது.
