வாயு சம்ஹிதை பூர்வ

வாயு சம்ஹிதை பூர்வ

bookmark


காப்பு: நமஸ் மைஸ்த ஸம்ஸார சக்ரப்ரமண ஹேதவே, கௌரீ குசதடத்வந்த்வ குங் குமாங்கீத வக்ஷஸே (எல்லாவிதமான சம்சார சக்கரத்தை சுழற்றுகிற காரணரும், உமாதேவியாரின் உபயதனங்களில் படிந்த குங்குமத்தால் அடையாளஞ் செய்யப்பட்ட திருமார்பையுடையவருமாகிய சாம்பவமூர்த்தியை வணங்குகிறேன்.)

1. வித்தியாவதாரம் விளக்கம்

சூதமுனிவர், நைமிசாரணிய வாசிகளை நோக்கிக் கூறலானார். அனைத்துலக நாயகனாகிய, சிவபெருமானின் திருவருளால் உபமந்யு முனிவர் உணர்ந்த அநேக நியமங்களை, வாயுதேவனுக்கு சொல்ல, வாயுபகவான் அந்த நியமங்களையெல்லாம் அனுஷ்டித்து ஒருநாள் நடுப்பகலில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது மிகப் பெருந்தவசிகளாகிய மாமுனிவர்கள் பலர், உச்சிக் காலக்கடனை முடித்துக் கொண்டு இருந்து, வாயுதேவனைக் கண்டு, இவரால் நம்முடைய சந்தேகங்களை நீக்கிக் கொள்ளலாம் என்று மகிழும் மனதோடு, அவரை எதிர் கொண்டழைத்து வந்து சிறந்த ஆசனமளித்து, அவரை அதில் இருக்கச் செய்து, தாங்களும் அவரைப் புடைசூழ்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களை நோக்கி, வாயுதேவன் சர்வேஸ்வரனுடைய மகிமாதிசயங்களை இதயத்தில் நிறுத்தி, சாக்ஷõத் சாம்பமூர்த்தியின் விபூதியே சராசரப் பிரபஞ்ச முழுவதும் அன்றோ? அத்தகைய சர்வக்ஞனும் அபராஜிதனுமாகிய மகாதேவனை நான் வணங்குகிறேன் என்று கூறினான். அவ்வார்த்தையைக் கேட்ட முனிவர்கள் யாவரும், தங்கள் பாவங்களை ஒழித்தவர்களாய், வாயுதேவரே! சர்வலோக நாயகனாகிய சாம்பவமூர்த்தியின் மகிமைகளை நாங்கள் கேட்க விரும்புகிறோம். தாங்கள் இதுவரையில் உபமந்யு முனிவர், கிருஷ்ணமூர்த்திக்குப் பாசுபத தீøக்ஷ செய்வித்ததாகச் சொல்லியிருக்கிறீர். ஆகையால் அந்தக் கிருஷ்ணமூர்த்தி, ஞானவானாகிய பாசுபத விரதம் அனுசரித்த வகை யாது என்பதை எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று கேட்க, வாயுதேவன் சொல்லியவாறே சூதமுனிவர் கூறலானார்.

ஸநாதனனாகிய விஷ்ணுமூர்த்தியின் அவதாரமாக இருந்தாலும் கிருஷ்ணாவதாரத்தில் தம்முடைய மானுட தேகத்தை நிந்தித்துக் கொண்டு உருத்திராக்ஷ மாலிகாபரணரும் ஜடாமண்டலங்காரரும் சாஸ்திரங்களால் சூழப்பெற்ற வேதத்தைப்போல, உத்தம முனி மாணவர்களால் சூழப் பெற்றவரும், சிவத்தியானத்தையே எப்போதுமுடையவரும், முனிவர்களெல்லோரையும் விட உத்தமருமாகிய உபமந்யு முனிவரைத் தரிசித்து உடல் முழுவதும் புளங்காங்கிதமடைந்து, பக்தியுடன் அந்த முனி புங்கவரை மும்முறை வலம் வந்து நிற்கையில், அந்த முனிவரது தரிசனத்திலேயே, மகாபுத்திமானாகிய ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியின் சகலவிதமான தோஷங்களும் மாயா சம்பந்தமான கர்மங்களும் நீங்கின. அப்பொழுது ஸ்ரீகிருஷ்ண பகவான் உபமந்யு முனிவரை நோக்கி, எனக்குத் தாங்கள் சிவ தீøக்ஷ செய்விக்க வேண்டும் என்று பிரார்த்திக்க உபமந்யு முனிவர் தம்மையடுத்த ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு விதிப்படி அக்நிரிதிபஸ்மா - இத்யாதி மந்திரத்தால் கிரமமாகப் பஸ்மதாரணஞ் செய்து, பாசுபத விரதம் உபதேசம் செய்து பன்னிரண்டு மாதங்கள் அனுஷ்டானம் செய்வித்து, அற்புதமான ஞானத்தை தந்தருளினார். அன்று முதல் சிறந்த பாசுபத ஞானி என்று ஸ்ரீகிருஷ்ணரை யாவரும் கொண்டாடலாயினர். பிறகு ஸ்ரீகிருஷ்ணர், தம் குருவின் கட்டளையை ஏற்று தமக்குச் சற்புத்திரன் உண்டாகவேண்டும் என்னும் கருத்தோடு, பார்வதி தேவியையும் பரமசிவனையும் குறித்து ஓர் ஆண்டுத் தவஞ் செய்தார். அப்போது சிவபெருமான் பார்வதி தேவி சகிதமாகவும் சிவகணங்களோடும் காட்சியளித்தார். அவரை ஸ்ரீகிருஷ்ணர் நோக்கி, மகாதேவா! எளியேனுக்கு ஒரு புத்திரனைத் தந்தருள வேண்டும்! என்று வரம் கேட்டார். இறைவரும் அவ்வாறே வரம் தந்தார். அதனால் ஸ்ரீகிருஷ்ணருடைய அஷ்டபாரியைகளில் ஜாம்பவதி என்பவளிடம் ஒரு புத்திரன் பிறந்தான். அம்பாள் சகிதமான சாம்பவமூர்த்தியின் கிருபையால் பிறந்த புதல்வனாகையால் அந்தக் குழந்தைக்குச் சாம்பன் என்று பெயரிட்டார்கள்.

இனி சிவபெருமான், சர்வ வித்தைகளுக்கும் உற்பத்தி ஸ்தானம் என்பதைச் சொல்லுகிறேன். புராணம் தர்ம சாஸ்திரம் முதலிய வித்தைகள் பதினான்கு ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்திரம் என்னும் நான்கையும் உடன்கூட்டிப் பதினெட்டு என்று சொல்லுவது வழக்கு. இவ்வாறு பல திறப்பட்ட பதினெட்டு வித்தைகளும், ஆதிகவீஸ்வரனாகிய திரிசூல பாணியினாலேயே இயற்றப்பட்டன. எல்லா உலகங்களுக்கும் நாயகனாகிய சிவபெருமான். சராசரப் பிரபஞ்சங்களையும் சிருஷ்டி செய்யவேண்டும் என்ற விருப்பமுடன், பிரமன் என்னும் புத்திரனை முதலில் படைத்து, பிரபஞ்சத்திற்கு, அந்த வித்தைகளையெல்லாம் கொடுத்து, இனிப் பிரபஞ்சத்தைப் படைப்பாயாக! என்று கூறினார். இறைவனின் அருள்வாக்கின் திருவருளால் பிரமதேவன் பிரஜா சிருஷ்டியைச் செய்துகொண்டு எல்லா சாஸ்திரங்களுக்கும் மத்தியில் முதலாகவுள்ள புராணத்தைப் பிரமதேவன் கூறினான். பிரமனுடைய முகத்திலிருந்து வேதங்கள் தோன்றின. இவ்வாறு பிரமதேவனிடம் தோன்றிய வேத, சாஸ்திர, புராணங்கள், சிறப்பாக விளங்கியதால், பிரஜைகள் அவற்றையெல்லாம் ஓதியுணர்ந்து அத்தியயனஞ் செய்ய அசாத்தியமாக இருந்ததால், அந்த அசக்தியை ஒழிக்கும்படித் திருமால், சிவாக்ஞையின்படி துவாபரயுகாந்தங்களில் வியாஸரூபமாகத் திருவவதாரஞ்செய்து, அவரே இந்தத் துவாபரயுகத்தில், அரணியில் அக்கினியைப் போல, சத்தியவதியிடமாகக் கிருஷ்ணத்வைபாயனராக ஜெனித்தார். வேதம் எனும் பெருங்கடலில் வியாசருடைய புத்தியாகிய மத்தினால் கடைய, உலகத்தில் சிறந்துள்ள பாரதம் என்னும் சந்திரன் தோன்றியது. மீண்டும் வேதங்களைச் சுருக்கி, நான்காகச் செய்தார். அதனால் அவருக்கு வேதவியாசர் என்ற பெயர் உண்டாயிற்று. தேவலோகத்தில் நூறு கோடி கிரந்தங்களையுடைய புராணங்களை நான்கு லக்ஷமாகத் தொடுத்தார்கள். நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் எல்லா உபநிஷத்துக்களையும் உணர்ந்த பிராமணனாயினும் புராணங்களை வாசிக்காதவன் புத்திசாலியாக மாட்டான். வேதங்களின் பொருளைப் புராண இதிகாசங்களாலேயே அறியத்தகும். புராணத்தைச் சிறிது ஆராய்ந்தாலும் வேதத்தின் பொருள் நன்றாக விளங்க மாட்டாது. சர்க்கம், பிரதிசர்க்கம், வமிசம், மன்வந்தரம், வமிசாசாரம் என்னும் ஐந்து லக்ஷணங்களையுடையது புராணம். அந்தப் புராணம், பதினெண் வகையாகச் சொல்லப்பட்டுள்ளது. அவையாவன; பிரமம், பதுமம், வைணவம், சைவம், பாகவதம், பவுஷியம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்நேயம், பிரமகைவர்த்தம், இலிங்கம், வராகம், காந்தம், வாமனம், கூர்மம், மச்சம், கருடம், பிரமாண்டம் என்பவையாகும்.

இவற்றின் முறையில் சைவம் நான்காவது. இது சிவபெருமானுடைய புகழை எடுத்துரைப்பதும் எல்லாப் புருஷார்த்தங்களையும் வழங்கச் சாதகமானதும் இலக்ஷம் கிரந்தங்களையுடையதும் பன்னிரண்டு ஸம்ஹிதைகளாகப் பிரிக்கப்பட்டதுமாக, எல்லாத் தருமங்களும் நன்றாக விளங்கும்படி, சாக்ஷõத் சிவபெருமானாலேயே திருவாய் மலர்ந்தருளப்பெற்றது. இந்த சைவ (சிவ) புராணத்தில் கூறிய ஆசாரங்களை அனுஷ்டித்தவர்கள். சாம்பவமூர்த்தியின் திருவருளால் ஒரே பிறவியில் முக்தர்களாவார்கள். ஆகையால் முக்தியை விரும்பியவர்கள், சிவபெருமானே சர்வலோக நாயகன் என்று அவருக்குத் தொண்டு செய்யவேண்டும். தேவர்களும் சிவபெருமானை ஆராதித்தே தங்கள் பதவிகளை அடைந்தார்கள். அவரையன்றி வேறொருவரும் முக்தியை அளிக்க வல்லவர்களல்லர். வேதத்திற்குச் சமானமான இந்தச் சைவ புராணத்தின் பாகங்களைச் சொல்லுகிறேன். வித்யேஸ்வர ஸம்ஹிதை, ருத்திரஸம்ஹிதை, சிரேஷ்டமான விநாயக ஸம்ஹிதை, உமாஸம்ஹிதை, மாத்ருஸம்ஹிதை, ஏகாதச ருத்திரஸம்ஹிதை, கைலாயஸம்ஹிதை, சதருத்திரஸம்ஹிதை, கோடிருத்திரஸம்ஹிதை, ஸஹஸ்ரகோடி ஸம்ஹிதை, வாயுஸம்ஹிதை என்ற பன்னிரண்டு பாகங்களையுடையதாக இருக்கும். அவற்றின் கிரந்த சங்கிதையும் சொல்லுகிறேன். வித்யேஸ்வரம் பதினாயிரமும் ருத்திரம், விநாயகம் உமா, மாத்ரு ஸம்ஹிதைகள் எவ்வெண்ணாயிரமும் ஏகாதசருத்திரம் பதின்மூவாயிரமும் கைலாயம் ஆறாயிரமும் சத்ருத்திரம். கோடிருத்திரம் சகஸ்ர கோடிஸம்ஹிதைகள் பப்பத்தாயிரம் வாயுஸம்ஹிதை நாலாயிரமும், தர்ம ஐயாயிரமும் ஆகிய கிரந்தங்களையுடையனவாகும். ஆக பன்னிரண்டு ஸம்ஹிதைகளும் கூடிய ஸ்ரீசிவ மஹாபுராணமானது. லக்ஷம் கிரந்தங்களையுடையது. அவற்றில் வாயுஸம்ஹிதையானது பூர்வம், பரம் என்னும் இருபாகங்களையுடையது. அவற்றைச் சொல்லுகிறேன். இந்த ஸம்ஹிதையை - வேதம் அறியாதவனுக்கும் சிரத்தையில்லாதவனுக்கும் புராணஞானம் இல்லாதவனுக்கும் சொல்லக்கூடாது. ஒருவனை அசூயை முதலிய துர்க்குணங்களினின்றி சிவபக்தி, தர்மசிந்தனை முதலிய நற்குணமுடையவனாகப் பரிசோதித்த பிறகே இதனைச் சொல்லத்தகும். உத்தம குருவாகிய வியாசபகவானின் கருணையால் இந்த ஸம்ஹிதைகளையெல்லாம் உணர்ந்தேன். அத்தகைய வியாசபகவானுக்கு நமஸ்காரம்! என்று சூதமுனிவர் மேலும் சொல்லத் தொடங்கினார்.

2. முனிவர்கள் பிரமலோகம் செல்லுதல்

நைமிசாரண்ய வாசிகளே! அனேக கற்பங்கள் கடந்த பிறகு, இந்தச்சுவேத வராஹ கல்பத்தில், சிருஷ்டித்தொழில் விஸ்தரிக்கும் பொழுது, மானுடர் யாவரும் விசேஷ புத்திமான் களாகுகையில், ஆறுகுலத்தில் உதித்த அந்தணர்கள் ஒருவரோடொருவர், பேசிக்கொண்டிருக்கும்பொழுது, பரதத்துவப்பொருள் சம்பந்தமாக விவாதம் உண்டாயிற்று. அந்தப் பரதத்துவப்பொருளைத் தீர்மானிக்க முடியாமற் போனதால், உண்மையறியாது அவர்கள் தத்தமக்குத் தோன்றிய கருத்துக்களைக் கூறியவர்களாய் யாவரும் ஒன்று சேர்ந்து, பகவானாகிய பிரமதேவரிடம் சென்று தம்முடைய சந்தேகங்களை நீக்கிக் கொள்வோம் என்று உறுதி செய்து கொண்டு பிருமலோகத்திற்குப் புறப்பட்டார்கள். மேருமலையை நோக்கிச் சென்றார்கள். அந்தமலை மங்களகரமானது, தேவ சமூகங்களையுடையதும் சித்தர் சாரணர், யக்ஷர், கந்தர்வர் முதலானவர்களால் சேவிக்கப் பெறுவது பலவிதமான பறவைகளின் ஒலிகள் அங்கு நிறைந்திருக்கும். முத்து, பவளம், இரத்தினம் முதலியவற்றால் அலங்கரிக்கப் பெற்றதும் புதர்வீடுகளும் குகைகளும் அமையப் பெற்றதுமான அத்தகைய மேருமலையின் சிகரத்தில் பிரமவனம் ஒன்று உண்டு. அதில் பலவித மிருகங்கள் வசிக்கும். பத்து யோசனை அகலமும் நூறு யோசனை உயரமும் உள்ளது. சுவைமிக்க நன்னீர் நிரம்பிய தடாகங்களும் மதர்த்தவண்டுகள் ரீங்காரம் செய்யும் மலர்கள் நிறைந்த மரங்களும் அந்த வனத்தில் இருக்கும். அதில் தான் பிரமநகரம் இருக்கிறது. அது உதய சூரியன் போன்றதும் மதவெறி கொண்ட தைத்தியதானவர் களாலும் அசைக்க முடியாதது. ஸ்புடமிட்ட பொன்னால் செய்த கூட கோபுரமாட மாளிகைகளும், பலவகை இரத்தின ஒளியால் ஆகாய மளாவியபடி எண்ணற்ற விசித்திர மாளிகைகளும் அந் நகரை அலங்கரிக்கின்றன. அந்த பிரம நகரத்தை முனிவர்கள் அடைந்தார்கள். அங்கு நாசரஹிதனும் சுராசுரர்களால் துதிக்கப் பெற்றவனும், சாதுக்களால் சூழப்பெற்றவனும், பரமாத்ம ஸ்வரூபனும் எல்லாவுலகங்களுக்கும் பிதாமகனும், தூய்மையான பொன் மேனியுடையவனும், தேவராக்ஷஸ முனிவர் கணங்களால் சேவிக்கப் பெற்றவனும் சகல ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவனும் மலர்ந்தமுக மண்டலமுடையவனும், செந்தாமரை மலர் போன்ற நொடிய விழிகளையுடையவனும் திவ்விய சந்தன கந்த புஷ்பாதிகளால் அலங்கரிக்கப் பெற்றவனும் வெள்ளிய பட்டாடையுடுத்தவனும் தேவேந்திரன் முதலிய தேவசிரேஷ்டர்களும் முனிசிரேஷ்டர்களும் அசுர சிரேஷ்டர்களும் நமஸ்கரிக்கும் பாத தாமரைகளையுடையவனும், கலைமகளோடு கூடி வசிப்பவனுமாகிய பிரமதேவனை முனிவர்கள் தரிசித்து, அகமும் முகமும் மலர சிரமிசைத் தம் கரங்களைக் குவித்து, பலவாறு தோத்திரஞ் செய்யலானார்கள்.

பகவானே! திருமூர்த்தி ஸ்வரூபனும் சுவர்க்காதி போகங்களைக் கொடுக்கும் காரணனும் புராண புருஷனும் பரமாத்மனும் திரிகுணாத்மகனுமான பிரகிருதி சரீரனும் மஹதாதி தத்துவபேதனும் விகாரமற்றவனும் பிரமாண்டத்துக்குக் காரணமாகவுள்ளவனும் அந்தப் பிரமாண்டத்திலேயேயுள்ளவனும். பிரமாண்டத்தில் உண்டான பஞ்சீக்ருத மஹாபூதாத்மக சிருஷ்டியாதி காரியங்களையுடையவனும் யாவற்றையும் காணவல்லவனும் எல்லாவுலகங்களிலுமுள்ள பிராணிகளுக்கெல்லாம் சையோக வியோகலிபிக்குக் காரணனுமாகிய தங்களை வணங்குகிறோம். தாங்களே யாவற்றையும் படைப்பவரும் காப்பவரும் அழிப்பவருமாக இருக்கிறீர். தங்களை நாங்கள் அறிந்து கொள்ளச் சக்தியற்று இருக்கிறோம் என்று பலவாறு தோத்திரஞ் செய்தார்கள். அத்தகைய தோத்திரங்களால் மனங்களித்த பிரமதேவன், கம்பீரமான வார்த்தைகளால் சொல்லலானார். மகிமையும் தேஜசுமுடைய மாமுனிவர்களே! நீங்கள் யாவரும் ஒருங்குகூடி இங்கு எதற்காக வந்தீர்கள்! அதை சொல்லுங்கள் என்றார். ரிஷிகள் யாவரும் அவரை வணங்கி, சிருஷ்டி கர்த்தாவே நாங்கள் பெரிய அந்தகாரத்தில் அகப்பட்டவர்களாய் ஜகத்துக்குக் காரணமான பரம்பொருளை இன்னது என்று உணராமல் விவாதஞ்செய்து கொண்டு தங்களிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ளவே வந்தோம். உலகங்கள் யாவையும் படைத்தவரும், எல்லாக் காரணங்களுக்கும் பரமகாரணரும் தாங்களேயாகையால் தாங்கள் அறிந்திராத விஷயம் ஏதுமில்லை. ஜீவகோடிகள் யாவற்றுக்கும் புராண புருஷன் யார்? மாயையற்றவன் யார்? பரிபூரணன் யார்? நித்தியன் யார்? யாருடைய சித்திரச் செயலால் இந்த உலகம் இவ்வாறு சித்திக்கப்பட்டுள்ளது? இது மீண்டும் எவனிடம் ஒடுங்கும்? எவனுக்குப் பூதங்கள் அனைத்தும் வசமாக இருக்கும்? எவன் யாவற்றையும் நடத்துவிப்பவன்? அத்தக புருஷனை நாங்கள் எவ்வாறு காணவல்லவர்களாவோம்? இவற்றையெல்லாம் திருவாய் மலர்ந்தருள வேண்டும் என்று கேட்டார்கள்.

அதற்குப் பிரமதேவன் ஆச்சரியமும் ஆசையும் அடைந்து அவர்களை நோக்கி, தேவதானவ முனிவர்கள் முன்னிலையில், துண் என்று எழுந்து, தன் இருகரங்களையும் சிரமிசை கூப்பிக் கொண்டு ருத்ரா என்று சொல்லிய வண்ணம் ஆனந்த மயமாகி எந்தப் பிரமா சமீபத்திலிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அந்தப் பிரமத்தையுணராதவனாக மயங்குகின்றனவோ, எந்தப் பரப்பிரம ஸ்வரூபத்தின் நிரதிசயானந்த சுகத்தைப் பிரமஞானி தெரிந்து கொண்டு, எதனாலும் பயப்படாது இருப்பானோ, எந்த பரமாத்ம ஸ்வரூபத்தில் எல்லாப் பூதேந்திரியங்களுடன் பிரம, விஷ்ணு, ருத்திரன், இந்திரன் முதலியவர்களுடன் இந்தப் பிரபஞ்சம் முதலில் தோன்றியதோ, எவன் படைப்புக்குக் காரணமாகவுள்ள ஆகாசாதிகளுக்கும் கர்த்தனோ. எவன் பரமகாரணமாகத் தியானிக்கத்தக்கவனோ, எவன் அன்னியனாலும் வேறொன்றும் உண்டாகவொட்டாமல், யாவையும் படைத்தானோ, எவன் எல்லா ஐசுவரியங்களையும் அடைந்து, சர்வேசுவரன் என்ற பெயரைப் பெற்று, மோட்ச விருப்பமுடைய முனிவர்களுடைய இதய ஆகாசத்தில் தியானிக்க விளங்குவானோ, எவன் என்னைப் புதல்வனாகப்பெற்று, எனக்கு ஞானத்தை வழங்கியவனோ எவனுடைய திருவருளினால் யான் பிராஜாபத்தியம் என்னும் உன்னதத்தை அடைந்தேனோ, எவன் திவ்விய ஆகாசத்தில் விருக்ஷம் போலத் தனியாக ஈஸ்வரனாக, விளங்குகிறானோ, எந்த மகாத்மாவினால் இந்த உலகம் நிறையப் பெற்றிருக்கிறதோ, எவன் எல்லாப் பிராணிகளுக்கும் கிரியைகளையெல்லாம் கற்பிக்கிறானோ, எவன் ஒருவனாகவே இருந்தும் எண்ணிறந்த வற்றுக்குக் காரணனாக இருக்கிறானோ, எவன் எந்த உலகையும் இது நிறையப் பல சிருஷ்டிகளையுஞ் செய்து, அவற்றிற்கு நாதனாக விளங்குகிறானோ, எவன் எப்பொழுதும் எல்லாப் பிராணிகளின் இதயத்திலும் இருந்து கொண்டு, விருப்பு வெறுப்புகளை உண்டாக்குகிறானோ, அவன் தான் காணப்படாமல் பிரபஞ்சத்தை பிரகாசிக்கச் செய்து கொண்டு, அதிலேயே துலங்குகிறானோ, எவன் காலம், புத்தி முதலியவற்றுடன் கூடிய ஆகாசாதி பூதங்களையும் அனந்த சக்தியுடன் அதிஷ்டித்துள்ளவனோ, எவனால் புத்தி ஒவ்வோர் இடத்திலும் பிறக்கிறதோ, எந்த புராண புருஷனுடைய பராசக்தி பாவகம்மியமாகவும் சிறந்ததாகவும் குணங்களால் மறைக்கப்படாததாகவும் நிஷ்களமாகவும் மங்களமாகவும் நித்திய ஞானகிரியாரூபமாகவும் ஸ்வபாவ சித்தமாகவும் இருக்கிறதோ, எவனுக்குச் சமானகனாவது அதிகனாவது இல்லையோ, எவன் க்ஷரனும் அக்ஷரனும் ஆக விளங்குகிறானோ, அக்ஷராக்ஷர ஸ்வரூபமாக உள்ள ஒரே தேவன் யாவனோ, ஜீவனாகவுள்ளவனுக்கு யாருடைய கிருபையால் மாயையானது ஒழிக்கப்படுமோ எவனுடைய பிரகாசம் இல்லாமையால் சூரிய சந்திராதிகள் பிரகாசிக்க மாட்டாதோ, எவனுடைய பிரகாசத்தினால் சூரிய சந்திராதிகள் பிரகாசிக்கின்றனவோ, எவன் அத்விதீயனோ, எவன் ஏகனோ, அவனே மஹாதேவன் அவனே சர்வேசுவரனென்று நீங்கள் அறியக்கடவீர்கள்.

அந்தப் பகவானைவிட உயர்ந்தவர்களாவது, அந்தப் பகவானுக்குச் சமானமானவர்களாவது ஒருவரும் இல்லை. அந்தச் சதாசிவனுக்கு ஆதியந்தங்கள் இல்லை. அந்தச் சர்வேசன் இயல்பாகவே நிர்க்குணன், சுதந்திரன், பரிபூரணன், சுய இச்சையால் சராசரப் பிரபஞ்சங்களைச் சுவாதீனமாகவுடையவன். திவ்விய தேகமுடையவன். அளவிட முடியாத ஆற்றலையுடையவன். தன்னைப் பணிபவர்களுடைய மாயாவிகாரத்தை ஒழிப்பவன். இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலங்கள் இல்லாதவன். காலங்களை நடத்துகிறவன். யாவர்க்கும் உயர்ந்த பதவியை உடையவன். எல்லாப் பூதங்களிலும் வசிப்பவன்; யாவும் அறிந்தவன். உலகத்திற்கெல்லாம் காரணன், உத்தமர்களுக்கெல்லாம் உத்தமன்; தனக்கு மேல் ஒருவனும் இல்லாதவன்; மகிமைகளுக்கெல்லாம் இருப்பிடமானவன்; சர்வைசுவரியவன்; தன் சக்தியாகிய அமிர்த பானஞ்செய்பவன், நல்ல வயதையுடையவன்; ஆனந்த சமூகமாகிய மகரந்தத்தில் மொய்த்துள்ள வண்டு போன்றவன்; சர்வ அண்டங்களையும் கணநேரத்தில் சங்கரிக்கவல்லவன்; உதாரம், வீரியம், கம்பீரம், மாதுரியம் முதலியவற்றுக்குச் சமுத்திரமானவன்; ஒப்பு உயர்வற்றவன். தேவநாயகன் பூதநாதன், அத்தகைய பரம்பொருளைப் பக்தி ஒன்றாலன்றி வேறொன்றினாலும் காணமுடியாது. விரதங்களும் தானங்களும் தவங்களும் நியமங்களும் பெரியோர்களால் கூறப்பட்டிருப்பன வெல்லாம் ஈசுவர சிந்தனைக்காகவே தவிர வேறல்ல. இவையாவும் பக்திக்கு ஈடாகமாட்டாது.

முனிவர்களே! விஷ்ணுவும் நானும் இந்திரனும், சுராசுரர்களும் சர்வேசுவரனுடைய தரிசனத்தை நாடி, உக்கிரமான தவங்களை இப்போதும் செய்து வருகிறோம். பதிதர், மூடர், துர்ச்சனர், குச்சகர், முதலானோர் ஈஸ்வர தரிசனத்தை ஒருபோதும் அடைய மாட்டார்கள். பக்திமான்களே சர்வேசனை அகத்திலும் புறத்திலும் கண்டு, அவரைப் பூஜிக்கிறார்கள். ஈஸ்வர ஸ்வரூபம், ஸ்தூலம், சூட்சுமம், மரம் என்று மூவகைப்படும். எம்மைப் போன்றவர்களால் காணகூடிய தேகமானது. ஸ்தூலதேகம் (பருவுடல்) யோகிகளால் காணக்கூடியது சூக்குமம் (நுண்ணுடல்). நித்தியமாகவும், ஞான ஆனந்தமயமாகவும் இருப்பது பரம அந்தத் தேகமானது, சர்வேசனிடமாக நிஷ்டையுடையவர்களும் சிவ விரதங்களையே அனுஷ்டித்து வருவோர்களும் தரிசிக்கத்தக்கது. அந்த ஈஸ்வர அனுக்கிரகம் பக்தியினாலேயே உண்டாகக்கூடியது. விதையும் விதைக்கு மரமும் காரணகாரிய சம்பந்தமுடையதுபோல பக்திக்கு அனுக்கிரகமும் அனுக்கிரகத்திற்குப் பக்தியும் காரண காரியங்களாகும். அனுக்ரக சாதனம் பெற்றவர்களுக்கே ஆயுள் முடிவில் பரமசிவசாந்நித்தியம் உண்டாகும். அனுக்கிரக ரூபமான சாதனம் தர்மம் என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வேதத்தைப் பயின்றால் ஜன்மாந்தர புண்ணிய பாவங்களில் சாம்மியம் உண்டாகும். சாம்மியத்தில் பிரசாத சம்பந்தம் உண்டாகும். பிரசாத சம்பந்தத்தினால் தர்ம விருத்தியுண்டாகும். தர்மவிருத்தியினால் பாபநலிவு உண்டாகும். பாப நலிவால் சர்வேஸ்வரனிடத்தில் பக்தியுண்டாகும். பக்தியினால் சர்வேஸ்வரனுடைய அனுக்கிரகம் உண்டாகும். அனுக்கிரகத்தினால் காமிய கர்ம பரித்தியாகம் உண்டாகும். அதனால் சிவதர்மம் பரிக்கிரமம் உண்டாகும். அது குருகடாக்ஷத்தால் உண்டாவது என்றும் குருவில்லாமலேயே உண்டாவது என்றும் இருவகைப்படும். குரு கடாக்ஷத்தால் உண்டாகும் சிவ தர்மபரிக்கிரகமே நூறு பங்கு, மற்றதைவிடச் சிறந்தது. சிவ தரும பரிக்கிரகத்தால், சிவஞான சம்பந்தம் உண்டாகும். சிவ ஞானசம்பந்தத்தால், சம்சார நீக்கம் உண்டாகும். அதற்குப் பிறகு விஷய வைராக்கியம் உண்டாகும். வைராக்கியத்தால் மனது தூய்மைப்படும். மனோசுத்தியுண்டானவனுக்குத் தியான நிஷ்டை உண்டாகும். தியான நிஷ்டையால் யோகம் உண்டாகும். யோகத்தால் பக்தியும் பக்தியால் ஈஸ்வர அனுக்கிரகமும் உண்டாகும். ஈஸ்வர அனுக்கிரகத்தால் மட்டுமே மனிதன் முக்தன் ஆகிறான். ஒவ்வொருவர் கருவில் இருந்தபடியாகவும், பிறந்தவுடனேயும் பிறக்கையிலேயும் பாப, யவுன, கவுமாரவிருந்த தசையிலும் முக்தியடைவதன்றி திரியக்கு முதலிய யோனிகளில் பிறந்தும் முக்தியை அடைகிறார்கள். சுவர்க்காதி பதவிகளை அடைந்தும் மீண்டும் மத்திய லோகத்தை அடைந்தும் முக்தியை அடைகிறார்கள். ஆகையால் மானுடருக்கு முக்திமார்க்கம் ஒரே வகையாக அமைவது இல்லை. பக்தி, ஞானத்தால் வருவதாகும். ஈஸ்வர அனுக்கிரகமே பரமானந்த சுகத்தைக் கொடுக்கவல்லது.

ஆகையால், நீங்கள் அனைவரும், அந்தச் சர்வேசனுடைய அநுக்கிரகத்தைச் சம்பாதிக்கவேண்டி, கிரகஸ்தாசிரம (இல்லற) தர்மத்தை அநுசரித்து மனவாக்குகளாலும் தோஷமில்லாமல், பரசிவத்தினிடமே மனோ பக்தியையுடையவர்களாய், அவருக்கே தொண்டு செய்பவர்களாய் சிவபெருமானையே வழிபட்டு எல்லாக் கிரியைகளையும் செய்துகொண்டு, சிவபெருமானே கதி என்று தீர்மானஞ்செய்து, ஆயிரம் ஆண்டுகள் செய்யக்கூடிய சத்திரயாகத்தைச் செய்யக்கடவீர்கள். அந்த யாகத்தின் முடிவில் மந்திரப் பிரபாவத்தால், அந்த இடத்திற்கு வாயுதேவன் வருவான் வாயுதேவன் உங்களுக்கு நன்மையுண்டாகும்படி உங்களுக்கு சிவஞானத்தை உபதேசிப்பான். நீங்கள் வாரணாசிப் பட்டணத்தையடைந்து, பக்தி அநுக்கிரக காரணமாகப் பார்வதி சமேதராக எழுந்தருளியிருக்கும் விசுவநாதனைத் தரிசித்து, மீண்டும் என்னிடம் வருவீர்கள். அப்போது மோக்ஷ உபதேசம் செய்து, ஒரு பிறவியிலேயே அது உண்டாகும்படி பக்தியைப் பிறப்பிப்பேன் என்று கூறி, மானசீகமாக உண்டாக்கிய சூரிய காந்திக்குச் சமானமான ஒளியையுடைய சக்கரத்தைக் காட்டி, இது உருண்டு சென்று விழும் இடமே உங்களுக்குச் சித்திகளை அளிக்கவல்ல இடமாகும் என்று கூறி, அதை உருட்டிவிட்டார். முனிவர்களும் பிதாமகரைப் பணிந்து விடைபெற்று, அந்தச் சக்கரத்தைத் தொடர்ந்து சென்றார்கள். அந்த நேமியானது நெடுந்தூரம் சென்று நல்ல புனிதமான நிர்மலமானதோர் இடத்தில் விழுந்தது. அது விழுந்த காரணத்தால், அந்த வனம் நைமிசவனம் என்ற பெயரைப் பெற்றது. அந்த இடம் தான் முற்காலத்தில் பல முனிவர்களும் வேத வேதாங்கங்களைப் பழகியவர்களாய், நாஸ்திகர் முதலானோரை வாயடக்கிச் செயலடக்கி, யாவருக்குமே நன்மையுண்டாகும்படியாக செயல்களை இடைவிடாமல் செய்து வந்த இடமாகும். அத்தகைய சிறப்பையுடைய வனமே, பிறகு நைமிசவனம் என்றும் நைமிசாரணியம் எனவும் வழங்கலாயிற்று.

3. வாயுபகவான் நைமிசவனத்தை அடைந்த கதை

இத்தகைய புண்ணிய பூமியாகிய, நைமிசாரணியத்தில் முனிவர்கள் அனைவரும் ஒருங்குகூடி, சிவபகவானை ஆராதித்துக் கொண்டு, முன்காலத்தில் உலக சிருஷ்டியைச் செய்யக்கருதிப் பிரமதேவன் செய்த வகையிலேயே மிகச் சிறந்த சத்திர யாகஞ் செய்யத் துவங்கினார்கள். அவ்வாறு, அநேக காலங்கழிந்த பிறகு அவபிருத ஸ்நானமும் பூரிதக்ஷிணையும் செய்து, யாகம் முடிவாகும் தருணத்தில் பிரமதேவர் அம்முனிவர்களுக்கு முன்பு கொடுத்த வரத்தை நிறைவேற்றக் கருதி தம் மாணவனான வாயுதேவனுக்குக் கட்டளையிட்டார். அந்த வாயுதேவனோ யாவற்றையும் பிரத்தியக்ஷமாகக் காணக்கூடியவனும் புலன்களை வென்றடக்கியவன் நாற்பத்தொன்பது மருந்து கணங்கள் புடைசூழப் பணி செய்யப் பெற்றவன். பிராண அபானாதி விருத்தி பேதங்களால் அணிமாதி அஷ்ட ஐசுவரியங்களையுடையவன். உதக பாகத்தைச் சூரிய கிரணங்களால் மேகரூபமாகச் சேர்ந்து, உலகங்களைப் போஷிப்பவன். ஆகாயத்தையே பிறப்பிடமாகக் கொண்டவன். சப்த ஸ்பரிச குணங்கள் இரண்டையும் உடையவன். அக்கினி முதலிய தேஜஸுகளுக்குக் காரணன். அந்த வாயுதேவன், அவ்வகையே நைமிசவனத்தை அடைந்து, அம்முனிவர்களின் ஆசிரமத்தை அணுக, அங்கு நெடுங்காலம் தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர்கள் யாவரும் கண்டு பூர்வம் பிரமதேவர் கூறிய வார்த்தைகளை நினைத்து மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வாயுதேவனை வணங்கி, பொன்மயமான ஆசனமளித்து, அவனை அதில் வீற்றிருக்கச் செய்து, அர்க்கிய பாத்திய ஆசமனாதிகளால் உபசரித்து நின்றார். வாயுபகவான் அவர்களை நோக்கி, நீங்கள் அனைவரும் பெரும் புண்ணிய சாலிகள், மகான்கள் என்று புகழ்ந்து, முனிவர்களே!

நீங்கள் சிறந்ததோர் யாகத்தைச் செய்தவர்கள். ஆகையால் பகவானின் திருவருளால் நலமாக இருக்கிறீர்களா? இந்த யாகமானது, ராக்ஷசபாதை முதலிய இடையூறுகளில்லாமல் பரிபூரணமாக நிறைவேறியதா? இந்த யாகத்தை முடித்த பிறகு என்ன செய்தீர்கள்? என்று சிவ சிந்தனையுடைய வாயுபகவான் முனிவர்களைக் கேட்டார். முனிவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன், அவரைப் பணிந்து, வாயுதேவா! எங்கள் கீர்த்தி விளங்கும்படி தாங்கள் இங்கு எழுந்தருளின்மையால், இப்போது தான் எங்களுக்குச் சகல நன்மைகளும் உண்டாயின. முன்பு நாங்கள் அஞ்ஞான முடையவர்களாய், எங்களுக்கு ஞானம் உண்டாக வேண்டும் என்று கருதி பிரமதேவரை அடைந்து அவரை உபாசிக்க, அவருக்கு எங்களிடம் கருணையுண்டாகி, யாவருக்குஞ் சிறந்தவனும், பரமகாருண்ய ஸ்வரூபியுமாக வுள்ளவனே ருத்திரன். அவ்வுருத்திரனை, குதர்க்கம் செய்யாமல் உண்மையாகப் பக்தி செய்பவனே தரிசிப்பான். அந்தச் சர்வேஸ்வரனுடைய பக்தியானது, அந்த மகாதேவனுடைய அநுக்கிரகத்தினாலேயே உண்டாகும். அத்தகைய அனுக்கிரகத்தால், பரமானந்த சுகம் உண்டாகும். ஆகையால், அந்தப் பகவானுடைய அநுக்கிரகத்தை நீங்கள் அடைய வேண்டி, மந்திர சாமர்த்தியத்தால், நைமிசாரணிய வனத்திலிருந்தே தீர்க்கமான சத்திரயாகத்தைப் பரமகாருண்யனாகிய சிவபெருமானைக் குறித்துச் செய்வீர்களாக. அந்தப் பெருமானின் திருவருளாலேயே உங்களுடைய யாகமானது பரிபூரணமாகும் காலத்தில் வாயுபகவான் அங்கு வருவான். அந்த வாயுபகவானால் நீங்கள் ஞானவான்களாவீர்கள். ஞானத்தால் நல்லபுகழை அடைவீர்கள் என்று கூறி எங்களை வாழ்த்தியனுப்பி வைத்தார். நாங்களும் அன்று முதல் தங்கள் வருகையை எக்காலமும் விரும்பியவர்களாய் ஆயிரம் திவ்விய வருஷங்களாக இந்தச் சத்திரயாகத்தைச் செய்திருக்கிறோம். நாங்கள் இந்த யாகத்தின் முடிவு நேரத்தில் எழுந்தருளீர்கள் ஆகையால் இனி நாங்கள் விரும்பத் தக்கது ஏதுமில்லை என்று முன்பு நடந்தவற்றைச் சொன்னார்கள். வாயுதேவன், அவர்கள் கூறியதைக் கேட்டு மகிழ்ந்து, அவர்களுடைய ஞான விருத்தியை விரும்பி, படைப்புக்காலம் முதற்கொண்டு நடந்தேறிய சர்வேஸ்வரனுடைய மகிமைச் சிறப்புக்களையெல்லாம் சங்கிரகமாகச் சொல்லத் துவங்கினான்.

4. சிவஞான நிலை

நைமிசாரணியவாசிகளான தவமுனிவர்கள், வாயுபகவானை நோக்கி, சுவாமி! தாங்கள் எந்த வகையாக இந்தச் சிவஞானத்தை அடைந்தீர்கள். பிரமதேவருக்கு தாங்கள் எப்படி மாணவரானீர்கள்? இவற்றை எங்களுக்கு விளக்கமாகக் கூறவேண்டும் என்று வணக்கமாகவும் விநயமாகவும் கேட்டார்கள். அதற்கு வாயுதேவன் கூறலானான். மாமுனிவர்களே! இப்போதைக்குப் பத்தொன்பதாக நிகழ்ந்த சுவேதலோஹித கல்பத்தில் நான்முகப்பிரமன் சிருஷ்டி செய்ய விரும்பி, மகாகடினமான தவத்தைத் தன் தந்தையாகிய சிவபெருமானைக் குறித்து, அநேக காலஞ் செய்தார். பரமபதி அந்தத் தவத்திற்கு மகிழ்ந்து ரூபவான்களில் ரூபவானாகிய கவுமார பருவத்துடன் சுவேதன் என்னும் பெயர்கொண்ட தேவதேவனாகிய சர்வலோக நாயகனையே நமஸ்கரித்து காயத்திரியுடன் சிறந்த ஞானத்தை அடைந்து, பிரபஞ்ச படைப்பில் சிறந்த புத்திமானாய், சராசரப் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தான், சாக்ஷõத் சர்வேசனுடைய திருவருளால், ஞானமடைந்த பிரமதேவனால் என் தவமகிமை காரணமாக, நான் அதனை அடைந்தேன் என்று கூறினான். முனிவர்கள், சுவாமி தாங்கள் பிரமதேவனால் அடைந்த உண்மைகளுக்கெல்லாம் உண்மையாகிய ஞானம் யாது? எந்த ஞான அதிஷ்டானத்தால் புருஷன் திவ்விய சுகத்தை அடைவான்? அத்தகைய சிவஞான ஸ்வரூபத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டனர். வாயுதேவன் கூறலானார்.

முனிவர்களே! பசு, பாசம், பதி என்பவற்றின் வியாபகமாகிய ஞானத்தை, நான் முதலில் பிரமதேவனால் அறிந்தேன். சுகத்தை விரும்புவோன் அத்தகைய ஞானத்தில் அநுஷ்டானம் செய்யவேண்டும். அவித்தையால் உண்டாகிய துக்கம், ஞானத்தால் நீங்கும், வஸ்து பரிச்சேதமான ஞானம் மூவகைப்படும். அவை அஜடம், ஜடம், அஜட ஜடங்களுக்கு அதிபதி என்பனவாகும். அவற்றிலே அஜடம், பசுவென்றும் ஜடம் பாசம் என்றும் அஜட ஜடங்களுக்கு அதிபதி, பசுபாசங்களுக்கு பதி என்றும் சொல்லப்படும். தத்துவம் அறிந்தவர்கள், அக்ஷரம், க்ஷரம், க்ஷராக்ஷர விலக்ஷணன் என்று அவற்றையே சொல்லுவார்கள். அவற்றிலே அக்ஷரம் - பசு, க்ஷரம் - பாசம், க்ஷராம்க்ஷரம் அக்ஷரா க்ஷரங்களுக்குப் பிரிவு எனப்படும் என்று கூறினார். அக்ஷரம் என்பது எது? க்ஷரம் என்பது எது? இந்த அக்ஷரா க்ஷரங்களுக்குப் பிரபுவான வஸ்து எது? இவற்றை விளக்கிச் சொல்லவேண்டும் என்று முனிவர்கள் கேட்டார்கள். அதற்கு வாயுதேவன் கூறலானான்.

க்ஷரம் என்பது பிரகிருதி, அக்ஷரம் என்பது புருஷன். இவ்விரண்டையும் பிரேரணை செய்யும் மூன்றாவது பொருள் பரமேஸ்வரன் மாயை என்பதே பிரகிருதி: மாயையால் வியாபரிக்கப்பட்டவனே... புருஷன். ஞானத்தை ஆசரிக்கும் தமசும் கர்மமுமாகிய இரண்டினால் முன்னே சொன்ன பிரகிருதி புருஷர்களுக்குச் சம்பந்தம் உண்டாகிறது? பிரேகனாகவுள்ளவன். சாக்ஷõத் சர்வேஸ்வரனாகிய சிவபிரான். மாயை என்பது மஹேஸ்வர சம்பந்தமான ஒரு சக்தி. ஞானாத்மகனேமாயாவரணமுடையவன். ஞான ஸ்வரூபனுக்கு மாயாவரணம் உண்டாவதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், ஞானத்தை மறைக்கத்தக்க தமோ குணமேயாகும். சிவபெருமான் எப்போதுமே தமோ குணம் இல்லாத விசுக்தன். அந்த மாயா வரணமும் சலாதிகளும் சர்வ வியாபியாகவுள்ளவனுக்கு உண்டாகின்றன. போகார்த்தமான கர்மமானது. மலக்ஷயத்தால் நசிக்கிறது. கலை, அவித்தை, ராகம், காலம், நியதி என்னும் ஐந்தும் காலாதிகள் என்பன. புண்ணிய பாவ ஸ்வரூபமாகவுள்ளது. கர்மம், அது சுகதுக்கங்களைப் பயனாகக் கொண்டது. அதற்கு ஆதி இல்லை புண்ணிய பாவநலிவே அதன் அந்தகம். கர்மமானது, அஞ்ஞாத்மாக்களிடமே ஆசரயித்துள்ளது. போகம் என்பது கர்ம நாசத்திற்குரியது. போக்கியம் என்பது அவியக்தம். கண் முதலிய இந்திரியங்களும் மனம் முதலிய அந்தக் கரணங்களும் பொருந்திய சரீரமே போக சாதனம், சிவதத்துவச் சிந்தனையால் சிறப்பான சர்வேசானுக்கிரகம் உண்டாகும். அந்த அநுக்கிரகத்தால் மலநலிவு உண்டாகும். அத்தகைய மல நாசத்தால் சிவ சம்பந்தமடைகிறான் என்று வாயுதேவன் கூறினான்.

முனிவர்கள் காலாதி ஐந்திற்கும் தனித்தனியாக தொழில்கள் யாவை? ஆன்மா புருஷன் என்றும் போக்தா என்றும் ஏன் சொல்லப்படுகிறது? அவ்வியக்தம் என்பதில் ஸ்வரூபம் என்ன? அவ்வியக்தத்தை எந்த உருவத்துடன் அநுபவிக்கிறான்? அதை அநுபவிக்கும் போது எது காரணம்? சரீரம் என்பது எது? என்று கேட்டனர். அதற்கு வாயுதேவன், புருஷனுடைய ஞானத்தையும் கிரியையும் காணச் செய்கிற சக்திகள் வித்தை என்றும் கலை என்றும் பெயரைப் பெறும் இராகராகம் என்பது இரஜோகுணத்தால் உண்டான விஷய விருப்பம் காலம் விவச்சேதகமானது. நியதி நியமத்தைச் செய்வது. சத்துவாதி குணங்களின் உற்பத்திக்குக் காரணமானதால், படைப்புக்கு முன் காணப்படாததாய் படைப்புக்குப் பிறகே காணப்படுவதாக உள்ளது. அவ்வியக்தம் இந்த அவ்வியக்தத்தைச் சுகதுக்கங்களால் பிரமிக்கப்பட்ட மனதையுடைய குணவிசிஷ்டனான புருஷன் மூவகையாக அநுபவிக்கிறான். இந்தப் பிரகிருதியில், சத்துவ, ரஜோ, தமோ குணங்கள் மூன்றும் பிறந்தன. அவை அப்பிரகிருதியில் எள்ளில் எண்ணெய் போல் அதிசூஷ்மமாக உள்ளன. சுகஸ்வரூபமும் சுகத்துக்கு ஹேதுவாக உள்ளதும் சத்துவகுணம். துக்கஸ்வரூபமும் துக்கத்துக்கு ஹேதுவுமாக உள்ளது ரஜோகுணம். மோஹஸ்வரூபமும் ஸ்தம்ப மோஹாத்மகமாக உள்ளது. தமோகுணம் சத்வகுணத்தால் ஊர்த்துவகதியும் ராஜச குணத்தால் மத்தியாகதியும் தமோ குணத்தால் அதோகதியும் உண்டாகும் என்று சொல்லப்படும். சப்தாதி சூஷ்ம தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகாசாதி பூதங்கள் ஐந்தும், சக்ஷúராதி ஞனேந்திரியங்கள் ஐந்தும் வாக்கு முதலிய கன்மேந்திரியங்கள் ஐந்தும், பிரதானம், மஹத்துவம், அஹங்காரம், மனம் என்ற நான்கும் உண்டாகும் போது அவற்றிற்குக் காரணபூதமாகவுள்ளது. போக்கியரூபமான அவ்வியக்தம், அது சரீராதி சாரிய தசையில் பரிணமித்த காலத்தில் மண்ணானது குடம் ஆனாற்போல நாமரூபாதிகளுடன் பரிணமித்துப் பேதமுற்று வியக்தமாகிறது. இந்த உதாரணத்தால் குடமானது மண்ணைவிட வேறானதல்ல. அதுபோல உடலானது அவ்வியக்தத்தைவிட வேறானதல்ல. இது போக்கியம் இதரமான புருஷாதிகம் அல்ல என்றான்.

அதைக் கேட்ட முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, தாங்கள் இதுவரையில் கூறிய புத்தி இந்திரிய சரீரங்களைக் காட்டிலும் வேறாகவுள்ள ஆத்மா என்னும் பெயரையுடைய பொருள் எங்கே உள்ளது? என்று கேட்டார்கள். புத்தி என்பது இந்திரிய சரீரங்களுக்கு வேறாகவும் சர்வவியாபகமாகவும் நித்தியமாகவும் விளங்கும் ஆத்மா என்னும் பொருள் ஒன்றுள்ளது. ஆயினும் அதை நிரூபிப்பது மிகவும் கஷ்டத்தால் அடையத்தக்கது. சொப்பன அவஸ்தையில் எழுந்திருந்தவன் நான் நன்றாகத் தூங்கினேன் என்று கூறுவதால், புத்திக்கும் ஸ்மிருதிக்கும் அபேதமுண்மையால் புத்தியை ஆத்மா என்று சொல்லக்கூடாது. சட்சுராதி இந்திரியங்கள் தத்தமது நியமமான ரூபாதிகளை மாத்திரமே கிரகிக்குமே யல்லாமல் அந்நியமான எல்லா விஷயங்களையும் கிரகிக்க மாட்டாது. ஆகையால் இந்திரியங்களையும் ஆன்மா என்று சொல்வதற்கில்லை நசிக்கும் இயல்புடைய தேகமானது உள்ளதுவரை தேக வேதனை ஒழிகின்றது. தேகத்தின் அதிஷ்டானமாகவுள்ள பரம்பொருள் இல்லாவிட்டால், அத்தேக முடிவில் அந்தப் புண்ணிய பாவங்கள் முடியவேண்டுமல்லவா? அவ்வாறின்றித் தோத்திரப் பிராப்தியிலும் ஜன்மாந்தர புண்ணிய பாவபயன்களை அனுபவிக்கிறோம். ஆகையால் தேகத்தையும் ஆன்மா என்று சொல்வதற்கு இல்லை. ஆகையால் அந்தரியாமியாகவுள்ள ஆத்மஸ்வரூபம் வேறு ஒன்று உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தப் பரமாத்மஸ்வரூபம் எல்லாப் பொருட்களிலும் வியாபித்துள்ளது. எல்லாப் பொருட்களும் அந்தப் பரமாத்மாவில் இருப்பன. அவ்வாறு இருப்பினும் அதைப் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. சக்ஷúராதி இந்திரியங்களாலும் யோகாப்பியத்தால் பழகிய மனோந்திரியத்தாலும் கிரகிக்கத்தக்கதல்ல. அந்த ஆன்மா ஆணல்ல: பெண்ணல்ல: அலியுமல்ல: சரீரமுடையவர்களில் சரீர மில்லாதவன்: சலிப்பவற்றுட் சலியாத தாணு. இத்தகைய ஆத்ம சொரூபத்தைத் திரனாயுள்ள புருஷன் கிரவணாதி அப்பியாசத்தால் எப்போதும் தரிசித்துக் கொண்டிருக்கிறான். அதிகம் சொல்வானேன்! தேகத்தைவிட பரமாத்ம ஸ்வரூபம் வேறானது. அதை வேறு அல்ல என்றும் தேகமே பரமாத்மா என்றும் நினைப்பவர்கள் சரியான ஞானிகளல்ல புருஷனுக்கு உண்டாயிருக்கும் சரீரமானது, புனிதமில்லாததும் சுவாதீனமில்லாததும் துக்கமுடையதும் அநித்தியமானதும் விபத்துக்களுக்குக் காரணமானதுமாகும்.

இத்தகைய சரீரத்தை அடைந்த புருஷன், தன் காமானுகுணமாகச் சுகதுக்கங்களையும் மூடத்தன்மையையும் உடையவனாகிறான். ஜலத்தில் நனைக்கப்பட்ட பூமியானது முளைகளை உண்டு செய்வது போல, அஞ்ஞானத்தாலுண்டான கர்மமானது நாசமுடையதும் துக்கங்களுக்கு இடமானதும் ரோக விசிஷ்டமானதுமான தேகத்தை உண்டாக்குகிறது. அத்தகைய தேகங்கள் எத்தனையோ கழிந்தன. எத்தனையோ இப்பொழுது இருக்கின்றன. எத்தனையோ இனி வரவிருக்கின்றன. அத்தேகங்களிலெல்லாம் ஜீவபுருஷர்கள் இருந்து கொண்டு, அழிவற்ற பரமாத்ம ஸ்வரூபத்தைக் காணாமலேயே இருக்கிறார்கள். இப்புருஷன் மாயையால் மறைக்கப்பட்டு, மாயைக்கும் தனக்கும் சம்பந்தமில்லாமல் ஆகாயத்தில் அசையும் மேகக்கூட்டத்தில் மறைந்த சந்திரனைப் போலத் தேகங்களில் காணப்படுகிறான். ஆத்மாவிற்கு மனைவி மக்களுடைய சம்பந்தம் என்பதே கிடையாது. அப்படியிருக்கக் கடலில் பல நதிகளின் மூலமாக வந்து சேர்ந்த விறகுகளுக்குள்ள சம்பந்தத்தைப் போலவும் அவை அலைகள் முதலிய உபாதிகளால் பிரிந்து விடுவதைப் போலவும் ஆன்மாவிற்கு மனைவி மக்கள் முதலானவர்களின் சையோக வியோகங்கள் உண்டாகின்றன. புருஷன் மட்டும் சரீரத்தைக் காண்கிறானோ தவிர சரீரம் அந்தப் புருஷனைக் காணமாட்டாது. சரீரத்தையும் ஜீவனையும் பரமாத்மாவாகிய பரமனே காண்பானேயன்றி, அவ்விரண்டும் அவனைக் காணமாட்டாது. ஹிரண்ய கர்ப்பாதி பிபீலிகாந்தமான யாவும் பசுக்கள் ஞானமானது பசுக்களுக்கே உண்டாகத்தகும். பாசத்தால் பிணைக்கப்பட்டுச் சுகதுக்கங்களை அநுபவிக்கும் பசுவை ஈசுவரனுடைய லீலா பூத சாதனமானவன் என்று பெரியோர்கள், கூறுவார்கள். அஞ்ஞானமுடைய ஜீவனே, பசுபதியைக் கண்டறியாது. மோட்சம் அடையாமல், தனக்குச் சுகதுக்கங்கட்கு அநுகுணமான சுவர்க்க நரகங்களைச் சர்வேசுரப் பிரேரணையால் அநுபவிக்கிறான்.

அநந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாய் பிரபஞ்ச சிருஷ்டிகர்த்தாவாய், பசு பாச விமோசனனாக விளங்கும் பிரபு ஒருவன் உண்டு. அந்தப் பிரபு இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்ச சிருஷ்டி எப்படி நடக்கும்? பசு பாசங்களால் பிரபஞ்ச சிருஷ்டி விரிவடைந்திராதா என்று கேட்பீர்களாயின் அது ஒருக்காலும் சரிவராது. ஏனென்றால், அவை இரண்டும் அசேதன ஸ்வரூபமும் அஞ்ஞான மயமுமாக விளங்கிடுவதால் ஜகத் என்பது புத்திமானாலன்றி அஞ்ஞானமுடையவனால் ஆகத் தகுந்ததல்ல. ஆகையால் பதிக்கே ஜகத் சிருஷ்டிக் காரணத்துவம் உண்டேயன்றி பசுபாசங்களுக்குக் கிடையாது. குருடனாகவுள்ளவனை ஒருவன் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு செல்லும்போது அவனும் நடப்பது போல், பசுவானது ஈஸ்வரப் பிரேரணையால் சிறிது ஜகத் கர்த்திருத்துவமுடையதாகவும் விளங்கும். இத்தகைய நியாயங்களால் ஜீவன் வேறு என்றும் ஜீவர்களுக்குத் தலைவனான பரமாத்மா வேறு என்றும் தேகம் வேறு என்றும் உணர்ந்து, ஈஸ்வரனால் ஜீவன் அநுக்கிரகிக்கப்படவேண்டும் என்னும் ஞானமுடையவனே மோட்சத்தையடையலாம். பதி, பசு, பாசங்களுக்குத் தாரதம்மியம் உணர்ந்தவனே பிரமவித்தாகின்றான். பிறப்பை ஒழிக்கிறான். க்ஷராக்ஷரங்களுடன் கூடிய பரமாத்ம ஸ்வரூபமே, வியக்தாவியக்த ரூபமான பிரபஞ்சத்தைப் படைத்தும் காத்தும் அழித்தும் விளங்கும். பதி பசு பாசங்களின் லக்ஷணங்களே அறியத்தக்கவை. இந்த மூன்றையுந்தவிர அறியத்தக்கவை பிறிதொன்றுமில்லை. எள்ளில் எண்ணெயும், தயிரில் நெய்யும், நதியில் ஜலமும் விறகில் தீயும் விளங்குவது போல, ஜீவாத்மாவில் பரமாத்மா விளங்குவான். இந்திர ஜாலவித்தை செய்பவன் தன் சக்திகளால் பல வடிவங்களாகக் காணப்படுவது போல பதியாகிய சங்கரபகவான் தான் ஒருவனாகவே நின்று தன் சக்திகளால் பலவித அண்டபிண்ட பிரம்மாண்ட ஜீவகோடிகளாகக் காணப்படுகிறான்.

ஏக ஏவ ருத்ரோ நத்விதீ யோஸ்திகஸ்சந
ஸம்ஸ்ருஜ்ய விஸ்வம் புவநம் கோப்தாம்தே ஸம்சு கோஸ!

இரண்டாவது பொருளற்றவனும் ஒன்றியானவனும் ருத்திர பகவானேயன்றி பிறன் ஒருவன் அல்லன். அத்தகைய சாம்பவ மூர்த்தி சகல லோகங்களையும் சிருஷ்டி, ஸ்திதி, ஸங்காரம் செய்து வருகிறான். அவ்விறைவன் எங்கும் விழியுடையவன். எங்கும் முகமுடையவன். எங்கும் கரங்களுடையவன். எங்கும் பாதமுடையவன். அந்தப் பகவானே ஆகாயத்தையும் பிற பூதங்களையும் படைத்தவன்.

யோதேவா நாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ
ருத்ரோம ஹர்ஷிரிதி ஸ்ருதி:

எல்லாத் தேவர்களுக்குங்காரண பூதன். பிரமனைத் தேவர்களில் முதலில் படைத்தவன். ஆகையால் யாரைக் காட்டிலும் அதிகன் என்றும் மஹருஷி என்றும் சுருதிகள் கூறும் பரம புருஷனும் அழிவற்றவனும் ஸ்திரனும் சூரிய வர்ணமுடையவனும் மாயைவிடப் பரமானவனும் அணுஅண்டமாகவும் அண்டம் அணுவாகவும் சிறிது பெரியதுமானவனும் தனக்குமேல் பரமற்றவனுமாகிய பரம்பரனால் இந்தப் பிரபஞ்சம் நிறைந்துள்ளது. தான் ஒருவனே அசையாத மரத்தைப் போன்றவன் ஊர்த்துவலோகத்தில் இருப்பவன். அந்தப் பகவானுடைய சங்கற்ப மாத்திரத்தாலேயே சராசரப் பிரபஞ்சம் முழுவதும் தோன்றியது.

ஸர்வாநந சுரோ க்ரீவ ஸர்வபூத குஹாஸயா;
ஸர்வ வ்யாபீச பகவாம் ஸ்தஸ்மாத் ஸர்வகத: ஸிவ
ஸர்வத: பாணி பாதோயம் ஸர்வாக்ஷிஸி ரோமுக:
ஸர்வத: ஸ்ருதிமாந் லோகே ஸர்வமாவ்ருதயதிஷ்டதி
ஸர்வேந்த்ரிய குணபாஸ: ஸர்வேந்த்ரிய விவர்ஜித:
ஸர்வஸ்யப் புரீஸாந; ஸர்வஸ்ய ஸரணம்ஸுஹருத்:

அந்தப் பகவான் உலகிலுள்ள எல்லா முகங்களும் எல்லாச் சிரங்களும் எல்லாக்கிரீவங்களும் தனதாகவுடையவன். எல்லா பூதங்களின் இதயமே உறைவிடமாகக் கொண்டு ஸர்வவியாபியாக நிற்பதால் ஸர்வக்ஞன். எவ்விடத்தும் உள்ள கரசரணங்களும் நேத்திரங்களும், சிரங்களும், முகங்களும் தனதாகவுடையவன், எவ்விடத்திலுமுள்ள புத்திகளும் தன் அகண்டாகாரமான புத்தியாகக் கொண்டவன். ஆகையால் அண்டபிண்டம் முழுவதும் அவதரித்து உள்ளவன். ஆனால் மேலே சொன்ன இவையாவும் பரமார்த்திகமல்ல. எல்லா இந்திரியங்களின் குணங்களுக்கும் ஆபாசன், இந்திரியங்கள் இல்லாதவன். இவ்வாறு இருப்பினும் எல்லாவற்றிற்கும் பிரபுவும் அரக்ஷகனும் மித்திரனும் அந்தப் பரமசிவனேயாகும். அவன் கண்களில்லாமலேயே காண்பவன்; செவிகளின்றிக் கேட்பவன், எல்லாம் உணர்ந்தவன், உணர்பவன். தன்னை ஒருவரும் அறியமாட்டாதவன். அத்தகையவனைப் பரமபுருஷன் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அணுவுக்கு அணுவானவனும் ஆன்மாக்களுடைய புத்தியில் எப்போதும் வாசஞ்செய்பவனும் ஆயிரம் யக்ஞரஹிதனும் யாவரும் தனக்காக யக்ஞங்களைச் செய்யும்படியாகவுள்ள தலைவனும், விசேஷமான மகிமாதிசம்முடையவனுமாவன். பழமையாக உள்ளவனாயினும் கிழப்பருவம் அடையாதவனும் எல்லாப் பிராணிகளிடத்தும் வியாபித்திருந்தாலும் பிறப்பற்றவனும், பிரபுவானவனுமான பரமாத்மா ஒருவனாக இருந்தும் தன் சக்தியால் எல்லா உலகங்களையும் படைத்து, முடிவில் நசிக்கச் செய்பவனும் அந்தச் சிவ பகவானேயாகும்.

அந்தப் பகவானை அவனுடைய கருணையினாலேயே சம்சார துக்கங்களை ஒழித்த புண்ணிய புருஷர்கள் தரிசிப்பார்கள். உலகத்திற்குத்தாயும் அஜா என்னும் பெயருடையதும் சத்வ ரஜஸ் தமோ குணமுடையதும், சிவசம்பந்தமானதுமான சக்தியே... பிரகிருதி, அந்தப் பிரகிருதியை அஜனான புருஷன் சேவிக்கிறான். அதே பிரகிருதியை அனுபவித்து மற்றொருவன் விட்டு விடுகிறான். ஜீவேசுவரர் இருவரும் சமானரூபமுடையவராய் தேகத்திலிருப்பவர்கள். அவர்களில் ஜீவன் கர்மபயனைப் பரமசாதுவாக அநுபவிக்கிறான். ஈஸ்வரன் அதைக்காண்கிறான். பிரகிருதியில் உண்டான சம்சாரத்தில் ஜீவனானவன் மூழ்கித் துக்கமடைந்து, தன் நிலையைப் பார்த்துக்கொண்டிருக்கும். பரம காருண்யனான சர்வேஸ்வரனை எப்போது காண்பானோ, அப்போது துக்கங்களையெல்லாம் ஒழித்து ஈஸ்வரனாகிறான். வேதங்களும் யாகங்களும் கிரியைகளும் பூதபவிஷ்யாதி காலங்களும் கூடிய பிரபஞ்சத்தை மாயாவிசிஷ்டனான அந்தச் சர்வேஸ்வரன் படைத்து, அதில் மாயையுடன் கூடியிருக்கிறான். மாயையைப் பிரகிருதி என்று உணரவேண்டும். அந்த மாயையினாலே எல்லாப் பிரபஞ்சமும் சிருஷ்டி செய்யப்பட்டது. இந்தப் பிரபஞ்சமும் சிருஷ்டி செய்யப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்துக்கு சூஷ்மத்திற்கும் சூஷ்மமாக விளங்கும் ஈசானனே பிரபு என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிரபஞ்சத்திற்குச் சிருஷ்டி கர்த்தாவும் கிரியைகளைச் செய்விப்பவனும் அந்தப் பரமசிவனேயென்று தெரிந்து கொண்டால், அவனுக்கு அகண்டமான மோக்ஷ சாம்ராஜ்யம் உண்டாகத் தடையில்லை. அத்தகைய பரமசிவனே காலஸ்வரூபனும் பிரபஞ்சத்திற்குப் பாலகனும் பிரபுவுமாக விளங்குகிறான் என்று தெரிந்து கொண்டவனே, மிருத்யு பாசத்திலிருந்து விடுபடுகிறான். பாலில் நெய்யானது அதிசூஷ்மமாக இருப்பது போல எல்லா பூதத்திலும் பரமாத்மாவாகிய சிவபெருமான் அதிசூஷ்மமாக விளங்குகிறான் என்று தெரிந்தால் எல்லாப் பாவங்களும் விலகும். இந்தச் சிவபெருமானே பரமானதேவன். பிரபஞ்சத்திற்கெல்லாம் பிரேரணகர்த்தா சிவபெருமானேயாவான். எல்லோருடைய இதயத்திலும் வசிப்பவன் சிவபெருமான் என்பதையுணர்ந்தவன் முக்தியை அடைகிறான்.

முனிவர்களே! அந்தச் சிவபெருமானுடைய பிரளய காலஸ்வரூபத்தைச் சொல்கிறேன். இராப்பகல் சதசத்ரூபமான பிரபஞ்சம் ஊர்த்துவ அதோமத்ய பாகங்கள் முதலியயாவும் இல்லாதிருக்கும்போது, ஒருவனாகிய பரமசிவனே ஞான ஸ்வரூபனாக விளங்குவான். அவ்விறைவனுக்கு ஒப்பானவன் ஒருவனுமில்லை. சிவா என்னும் பெயர் மாத்திரையாக விளங்குகிறானேயன்றி ரூபாதிகுணங்களற்றவன். பிரளய காலத்தில் ஆன்மாக்கள். அந்தப் பகவானுடைய தக்ஷிணமுகத்தை அடைவார்கள். அதில் பிரமபரமாகவுள்ள அநந்தமான வித்தையை அவித்தை என்ற பெயருடைய க்ஷரம் அக்ஷரம் என்பவை சூஷ்மமாக இருக்கின்றன. அதில் அக்ஷரம் வித்தையும் க்ஷரம் அவித்தையும் ஆகும். இவ்விரண்டுக்கும் பிரபுவாயிருக்கும் அன்னியன் அந்தப் பரமசிவனேயாகும் சிவபெருமான். இந்திர ஜாலக்காரன் போல அந்த க்ஷராக்ஷரங்களை நானாவகையாகக் காண்பித்து திசாதிசைகளாகப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருப்பதால் அப்பரமசிவனையே எல்லாவற்றிற்கும், காரணன் என்று சொல்லப்படும். சுபாவமும் சகலவகையான சப்தமும் எல்லா அர்த்தமும் எல்லாக்குணமும் பரிணமிக்கச் செய்து போக்கிய போகத்திருத்துவமான பிரபஞ்சத்தை தானே அதிஷ்டித்துள்ளான். மாமுனிவர்களும், தேவர்களும் பரமாத்மாவான அப்பரமசிவனையே குஹ்யோப நிஷத்தில் பராத்பரனென்றும் காரண காரணன் என்று இதுவரையில் எண்ணிறந்த சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்தவன் என்றும் உணர்ந்திருக்கிறார்கள். மனதால் கிரகிக்கத்தக்கவனும் பிரபஞ்சத்திற்கு ஸ்தானபூதனும் பிரபஞ்சத்தில் உற்பத்தி லயங்களை உண்டாக்குபவனும் கலாசர்க்கம் செய்பவனுமாம் என்று அந்தப் பரமசிவனை உணர்ந்து, தேகத்தை விடுத்தவர்களுக்கு முக்தி உள்ளங்கை நெல்லிக் கனியாகும். சிலர் இந்தப் பிரபஞ்சத்தில் உற்பத்தி நாசங்களை இயற்கை என்று கருதுகிறார்கள். வேறு சிலர் மோஹிதர்களாய், காலத்தாலேயே பிறப்பு இறப்புகள் நிகழ்வன என்று கூறுகிறார்கள். அவை சரியல்ல. ஆனால் சர்வேஸ்வரனுடைய மகிமையினாலே தான் நிகழ்கின்றன. காலத்திற்கு காலஸ்வரூபன் பரமசிவன். அந்தப் பரமசிவனால் சொல்லப்பட்ட கர்மங்களால், உலகில் பிறப்பும் இறப்பும் உண்டாகின்றன. அந்த பகவான் கர்மத்தை பலவகையாகச் செய்து அதைப்பலவாறு பரிணமிக்கச் செய்து காலாதி தத்துவங்களில் சத்துவகுணத்துள் சம்பந்தம் அடைந்து ஆகாசாதி அஷ்டமூர்த்திகளாலும் ஸத்வாதி முக்குணங்களாலும் வித்யா வித்தைகளாலும் ஒன்றாகிய காலத்தாலும், ஆத்ம குணங்களாலும் எல்லாவிதமான இந்த பிரபஞ்சத்தைச் சுயமாக நடத்துகிறான்.

பிரபஞ்சத்தின் குணங்களை அனுசரித்து கர்மங்களையும் சுபாவங்களையும் அவற்றுக்கேற்பவே கொடுக்கிறான். அத்தகைய கர்மங்களும் விருப்பு வெறுப்புகளின்றி செய்தால் அவற்றின் பயன்கள் செய்தோரைச் சேரமாட்டாது. இவ்வாறு கர்மநாசமான பிறகு யாதொன்றுமில்லாமல் தத்துவச் சொரூபம் உண்டாகும். இதுவே போத்ரு போகங்களுக்கு ஆதியாக இருக்கும் யோக நிமித்தம். ஆகையால், இறப்பு, நிகழ், எதிர் என்ற முக்காலங்களுக்கும் வேறானவனும் நிர்க்குணமும் பிரபஞ்சோற்பத்திக்குக் காரணனும், ஜகத்பதியும், பூஜிதனும் எல்லோருடைய இதய கமலத்திலும் இருப்பவனுமாகிய சாம்பசிவமூர்த்தியை உபாசிக்க வேண்டும். காலாதிகளைவிட பிரபஞ்சம் வேறாகப் பரிணமித்துள்ளது. எப்பொழுதும் தர்மங்களை வகித்துள்ளதும் பாவங்களை ஒழிக்கத்தக்கவனும் போகேசனும் பிரபஞ்சமே இடபாகவுடையவனும் தேவர்களுக்கெல்லாம் தேவனும் ஈசுரர்களுக்கெல்லாம் பரமேசனும் பதிகளுக்கெல்லாம் பரமபதியும் எல்லா உலகங்களுக்கும் பிரபுவும் பிறரால் தனக்கு ஒரு காரண காரியம் இல்லாதவனும் சமானாதி சராகிதனுமாக இருப்பவன் பரமசிவன். அவனுடைய பலதிறப்பட்ட சந்தியே சுவாப்வகி என்று ஸ்ருதிகளால் சொல்லப்பட்டுள்ளது. ஞானபல கிரியைகளால் இந்தப் பிரபஞ்சம் நியமிக்கப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்திற்கு பர்த்தா பிறன் ஒருவனுமிலன். சங்கரிப்பான் ஒருவனுமிலன். காரணங்களுக்கெல்லாம் காரணமே இந்த உலகத்திற்குப் பிரபு. அந்தப் பரமேசனுடைய பிறவி எங்குமில்லை. பிறவிக்கு காரணமான மலமாதிகள் அந்தப் பகவானுக்கு இல்லை. அந்த இறைவனே எல்லாப் பூதங்களிலும் வியாபித்து, சர்வாந்தராத்மாவாகவும் தர்மஸ்வரூபமாகவும் எல்லாவற்றிற்கும் சாட்சியாகவும் நிர்க்குணமாகவும் சஞ்சல மனமுடையவர்களுடைய கர்மங்களுக்கெல்லாம் சரோசனாயும் சமயோசிதமாகப் பிரஜோற்பத்தி செய்பவனாகவும் விளங்குவான். அந்த மூர்த்தியை மனதில் தரிசிப்பவர்களே, நித்திய சுகத்தை அடைவார்கள். அந்தப் பகவானை நித்தியர்களுக்கு நித்தியனும் சேதனர்களுக்குச் சேதனும் அநேகமாயுள்ளவர்களுக்கெல்லாம் ஒருவனாகவே உள்ளவனும், சாங்கியயோகத்தால் அடையத்தக்கவனும் ஜகத்காரணனும் ஜகத்பதியாகவுமுள்ளவனுமாவான் என்று உணர்ந்தவர்கள்.

சகல பாசபந்தங்களிலிருந்தும் விடுபடுவார்கள். பிரபஞ்ச நிர்மாணகர்த்தாவும் சர்வமும் உணர்ந்தவனும் ஜீவர்களின் கர்மஸ்வரூபத்தின் நிர்மாணகர்த்தாவும் அவற்றின் காரணம் அறிந்தவனும் காலத்தை நடத்துபவனும் அநந்த கல்யாண குண விசிஷ்டனும், மாயஜீவர்களுக்குப் பிரபுவாக இருப்பவனும் ஸத்வாதி குணங்களுக்கு ஈசனும் பாசத்தைக்கடக்கச் செய்யவல்லவனுமாகி முதலில் நான்முகனைப் படைத்து வேதங்களைப் பயிற்றியவனும் நிஷ்களங்கனும் நிஷ்கிரியனும் சாந்தனும் தோஷமற்றவனும் நிரஞ்சனனும் அமிர்தமயமான ஏரிக்கு அஜனயாகவுள்ளவனும் ஆகிய பரமசிவனே நமக்கு நாயகன் என்று தன் ஞானத்தால் உணர்ந்தவனே முக்தியை அடையவல்லவன். பிறவியையும் மரணத்தையும் இடைவிடாது பெற்றுத் துன்புற்றுத் திரியும் ஆன்மாக்கள் சிவதத்துவத்தை உணர்ந்தாலன்றி அவற்றை ஒழித்து மோட்சத்தை அடையமாட்டார்கள். மாமுனிவர்கள் யாவரும் தம் தவ மகிமையாலும் வேதாத்தியயனம் முதலியவற்றாலும் பூர்வ கல்பத்தின் வேதாகமங்களில் இரகசியமானதும் பாவங்களை ஒழிப்பதும். புனிதமானதும் சந்நியாசிரமத்துக்கு உசிதமானதும் ஆகிய இந்த ஞானத்தைப் பிரமதேவனால் உபதேசிக்கப் பெற்றார்கள். அதை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த ஞானத்தைப் பொறுமை யில்லாதவனுக்கும் தன்னைப் பணியாதவனுக்கும் அசூயை உடையவனுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் சிஷியன் இல்லாதவனுக்கும் உபதேசிக்க கூடாது. சர்வேசனாகிய பரமசிவனிடத்தும் குருவினிடத்தும் பக்தியையுடைய உத்தமனுக்கே இந்த ஞானம் உபதேசிக்கத்தக்கது. ஆகையால் சுருக்கமாக இன்னுஞ் சொல்லுகிறேன். பிரமாத்ம ஸ்வரூபனான அந்தப் பரமசிவன் படைப்புக் காலத்தில் தானே எல்லாப் பொருட்களையும் படைத்து சங்கார காலத்தில் யாவற்றையும் சங்கரிப்பவன் என்று உணர்வீர்களாக என்று வாயுதேவன் முனிவர்களுக்கு உணர்த்தியருளினான்.

5. காலஸ்வரூபம்

முனிவர்கள், வாயுபகவானை நோக்கி, சுவாமி! உலகத்தில் யாவுங் காலரூபமான ஈஸ்வர தேஜசினாலே உண்டாவன. காலத்தை கருதாமல் எவ்விடத்திலும் எதுவும் இல்லை. காலரூபமான ஈஸ்வரனுடைய அந்தர்க்கதமாக இருக்கும். சம்சார ரூபமான இந்தப் பிரபஞ்சமானது அடிக்கடி உற்பத்திகள் ஏற்படுவதால் சக்கரம் போலச் சுழல்கின்றது. பிரமனும் விஷ்ணுவும் உருத்திரனும் தேவர்களும் அசுரர்களும் யாவரும் அந்தக் காலரூபனான சர்வேசனுடைய நியதியை அனுசரித்து நடக்கிறார்களேயன்றி அதை அதிக்கிரமித்து நடக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் இறப்பு, நிகழ்வு எதிர்வு என்ற பேதங்களை அடைந்து பிரஜைகளுக்கெல்லாம் வயோதிகத்தை உண்டாக்கி, எல்லாவற்றிற்கும் பிரபுவாக இருந்து கொண்டிருக்கும் காலம் யாது? அந்தக் காலம் யாருடைய சுவாதீனத்தில் இருக்கிறது! அந்தக் காலத்தின் ஸ்வாதீனத்தில் எவன் அடங்கியிருக்கமாட்டான்? இந்த விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டார்கள். வாயுதேவன் கூறலானான்.

காலம் என்பது கலை, காஷ்டை, நிமிஷம் முதலிய பேதங்களையுடைய கலைகளால், வியாபகமான தேகமுடையதும் காலஸ்வரூபம் என்னும் பெயரால் பிரசித்தி பெற்றதுமான மஹேஸ்வர சம்பந்தமான சிறந்த தேஜஸ் தாவரசங்கமாத் மகமான பிரபஞ்சத்திற்கு அது நீக்கமுடியாதது, சர்வேசனுடைய ஆக்ஞா ரூபமாகவுள்ளது. காலஸ்வரூபமான பரமாத்மா விடத்தில் அக்கினிலிருந்தும் மஹா கதாசக்தி உண்டானாற்போல, அநேக அம்சங்களில் ஓர் அம்சமாக ஒரு சக்தி உண்டாயிற்று. காலத்தின் சுவாதீனத்திலேயே இந்தப் பிரபஞ்ச முழுவதும் கடவாமல் இயங்குகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் சுவாதீனத்தில் அந்தக் காலம் இல்லை! அத்தகைய காலம், சர்வேசனாகிய சாம்பவமூர்த்தியின் சுவாதீனத்தில் இருக்கிறது. சிவபெருமான் அந்தக் காலத்தின் சுவாதீனத்தில் இருப்பவன் அல்லன். ஆகையால், அந்தக் காலத்தினிடம் சிவ சம்பந்தமான தேஜஸ் விளங்குகிறது. காலத்துடன் சிவதேஜஸ் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தக் காலத்துக்கு ஓர் எல்லை இல்லை. காலத்தை அதிக்கிரமிப்பதற்கு ஒருவருக்கும் சாத்தியமில்லை. காலத்தால் வந்த கர்மத்திலிருந்து ஒருவனும் தப்பித்துக் கொள்ள முடியாது. இறைவனின் அருளால் உண்டான காலத்தை ஒரு குடைக்கீழாளும் அரசனும், சமுத்திரமானது அதன் கரையைக் கடவாது இருப்பதுபோல, அதிக்கிரமிக்க வல்லவனாகமாட்டான். இந்திரிய நிக்கிரகம் செய்து ஜகம் முழுவதையும் வென்ற மகானுபாவர்களுக்கும் காலத்தை மீற முடியாது. அவர்களைக் காலமானது மீறுகிறது. ஆயுர்வேதத்தை நன்றாக உணர்ந்து சிறந்த அவிழ்தங்களை முடித்துப் புசித்தவர்களேயானாலும் காலத்தால் உண்டாகும் மரணத்தை யாருமே தவிர்க்க வல்லவர்களல்லர். சம்பத்தாலும் திவ்விய ரூபத்தாலும் ஆசாரத்தாலும் வல்லமையாலும் ஒன்றைச் செய்ய ஆலோசித்த பொழுது, அது காலபலத்தால் கைகூடி வர வேண்டுமேயன்றி, அவனாலேயே செய்துமுடிக்க முடியாது. விருப்பற்றதும் விருப்புற்றதும் யோசியாததும் யோசித்ததும் சம்பவிப்பதும் சம்பவியாதொழிவதும் காலமேயன்றி, வேறன்று. ஒரே காலத்தில் ஒருவன் துக்கிக்கிறான். ஒருவன் சந்தோஷிக்கிறான்.

இவ்விருவரும் காலத்தின் ஸ்வரூபம் இப்படியெனத் தனித்தனி கூறுவாரன்றி அந்தக் காலத்தையறிய மாட்டார்கள். இளவயதுள்ளவன் விருத்தனாகிறான். பலவான் துர்ப்பலமுள்ளவனாகிறான். ஐஸ்வரியவான் வறியவனாகிறான். இவை போன்ற மாறுதல்கள் காலத்தால் வந்த விசித்திரங்களாக ஒரு தொழிலை முடித்ததற்கு உயர்குடிப் பிறப்பு, சீலம், பலம், சமஸ்காரம் முதலியன எல்லாம் காரணமாகாதவை. ஆனால் காலத்தாலேயே அதனை முடிக்கவோ, தடுக்கவோ செய்யமுடியும். புருஷத் தன்மையின்றி ஆடல் பாடல் வாத்தியாதிகளால் ஜீவனஞ் செய்வோர் சம்பன்னர்களாகவும், சம்பன்னர்கள் ஏழ்மையால் யாசிப்பவர்களாகவும் மாறுகிறார்கள். இவற்றிற்கு நிபுணத் தன்மையும் நிபுணத் தன்மையின்மையும் அனுகூலமில்லாவிட்டால், சாஸ்திரோக்தமான அவுஷதமுங்குணத்தைக் கொடுக்கமாட்டாது. காலாநுகூலத்தால் அந்த அவுஷதமே அதிவிரைவில் பயனைக் கொடுக்கும். அக்காலத்தில் ஒருவன் இறக்கமாட்டான். பிறக்கவும் மாட்டான். சிறந்த புஷ்டியை அடையமாட்டான். சுகதுக்கங்களை அனுபவிக்க மாட்டான். ஒன்றுமே அடையான். காலத்தாலேயே காற்றுவீசுவதும் மேகம் மழை பொழிவதும் பயிர்கள் விளைவதும் ஜீவலோகம் ஜீவிப்பதுமாகும். இத்தகைய காலத்தின் ஸ்வரூபத்தை உண்மையாக உணர்ந்தவன் காலாத்மஸ்வரூபத்தை அதிக்கிரமித்து காலாதீதமான பரமசிவனை அடைவான், அத்தகைய ஞானிக்கு காலமாவது, பந்தமாவது, பிரகிருதியாவது பிரபஞ்சமாவது கிடையாது. இத்தகைய காலமாகிய, விசித்திர ரூபத்தையுடைய பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம் என்று வாயுதேவன் கூறலானான்.

6. கால அளவும் தேவர் ஆயுளும்

முனிவர்கள் வாயுதேவனை நோக்கி, சுவாமி! காலத்தின் பரிமாணம் எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டது? காலத்திற்கு ஆதியும் அந்தமும் யாவை? என்று கேட்டார்கள். வாயுதேவன் அவர்களை நோக்கிக் கூறலானான்.

காலத்திற்கு ஆதியாய்க் கணக்கிடத் தக்கதுநிமிஷம். சாந்தியாதீத பதவியே அதற்கு அந்தமாகவுள்ளது. நிமிஷம் பதினைந்து கொண்டது காஷ்டை. காஷ்டை பதினைந்து கொண்டது கலை. கலை முப்பது கொண்டது முகூர்த்தம். முகூர்த்தம் முப்பது கொண்டது இராப்பகலாகிய ஒரு திதி (நாள்), திதி முப்பது கொண்டது ஒரு மாதம். அது கிருஷ்ணபக்ஷம், சுக்கிலபக்ஷம் என்று தனித்தனியாகப் பதினைந்து திதிகளையுடையது. மாதம் இரண்டு கொண்டது ஒரு ருது. ருதுக்கள் மூன்று கொண்டது ஓர் அயநம். அயநம் இரண்டு கொண்டது ஒரு வருஷம். இது மானுடருடைய கால அளவை இதில் மானுட மாதம் ஒன்று கொண்டது. பிதுரர்களுக்கு இரவு பகல் கூடிய ஒருநாள். இதில் கிருஷ்ணபக்ஷம் பிதுரர்க்குப் பகலும் சுக்கிலபக்ஷம் இரவுமாகும். இந்த மானுட வருஷம் ஒன்று கொண்டது தேவர்களுக்கு ஒருநாள். அதில் உத்தராயணம் பகலும் தக்ஷணாயனம் இரவும் ஆகும். இத்தகைய தினங்கள் முப்பது கொண்டது தேவர்களுக்கு ஒருமாதம் (அத்தகைய மாதங்கள் பன்னிரண்டு கொண்டது மாநுஷ வருஷங்கள் முந்நூற்று அறுபது) தேவர்களுக்கு ஒரு வருஷம். அத்தகைய தேவ வருஷம் நாலாயிரம் கொண்டது. முற்பட்டதாகிய கிருதயுகம் அதற்குச் சந்தி, சந்தியம்சங்கள் தனித்தனி நானூறு தேவவருஷங்கள். தேவவருஷங்கள் மூவாயிரம் கொண்டது. இரண்டாவதாகிய திரேதாயுகம், இதற்குச் சந்தி சந்தியாம்சங்கள் தனித்தனி முந்நூறு தேவ வருஷங்கள். தேவ வருஷங்கள் இரண்டாயிரம் கொண்டது. மூன்றாவதாகிய துவாபரயுகம். அதற்குச் சந்தி சந்தியம்சங்கள் தனித்தனி நூறுதேவ வருஷங்கள். இந்தவகையாகச் சந்தி சந்தியம்சங்கள் கூடிய நான்கு யுகங்களுக்கும் தேவ வருஷங்கள் பன்னீராயிரம், அத்தகைய சதுர்யுகங்கள் எழுபத்தொன்பது கழிந்தால் ஒரு மந்வந்தரம், சதுர்யுகங்கள் ஆயிரங்கொண்டது ஒரு கற்பம். ஒரு கற்பத்தில் பதினான்கு மந்வந்தரங்கள் கடக்கின்றன. இத்தகைய கற்பங்கள் ஆயிரம் பதினாயிரங்களாக, இதுவரை அநேகம் கழிந்தன. அவற்றை விரித்துரைக்க முடியாமலும் கணக்கின்மையாலும் ஒருவரும் அறிய மாட்டார்கள்.

முனிவர்களே! ஒரு கற்பமானது நான்முகப் பிரமனுக்கு ஒரு நாளின் பகல் அத்தகைய பகல் ஆயிரம் கொண்டது. பிரமனுக்கு ஒரு வருஷம். அத்தகைய வருஷம் எண்ணாயிரம் கழிந்தால் பிரமனுக்கு ஒரு யுகம் பிரமயுகங்கள் ஆயிரம் கழிந்தால் பிரமனுக்கு ஒரு சவனம். அத்தகைய சவனம் ஒன்பதினாயிரம் கழிந்தால் பிரமதேவனுடைய ஆயுள் முடிவாகும். அத்தகைய பிரமனுடைய ஒரு பகலில் பதினான்கு இந்திரப்பட்டங்கள் கழியும். பிரமனுடைய ஒரு மாதத்தில் நானூற்று இருபது இந்திரபட்டங்களும், ஓர் ஆண்டில் ஐயாயிரத்து நாற்பது இந்திர பட்டங்களும், ஆயுள் முழுமைக்கும் ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம் இந்த பட்டங்களும் மாறுபடும். அத்தகைய பிரமன் ஒருவன் இறந்தால் விஷ்ணுவுக்கு ஒரு தினமாகும். அத்தகைய தினங்கொண்ட கால அளவையாக நூறு ஆண்டுகள் கழிந்தால் விஷ்ணுவும் மறைவார். அவ்வாறு விஷ்று மறைந்தால் உருத்திரனுக்கு ஒருநாள். அத்தகைய உருத்திரன் மறைந்தால் மஹேஸ்வரனுக்கு ஒருநாள் மகேஸ்வரன் இவ்வாறு காலங்கழித்த பிறகு சதாசிவனுக்கு ஒருநாள். அத்தகைய சதாசிவனும் சிவத்தின் ஒரு பகலில் மறைவார். இத்தகைய வகையில் யாவருக்கும் கால அளவை பரமேஸ்வரனால் நிச்சயிக்கப்பட்டு, அவரது விருப்பத்தின்படி நடைபெற்று வருகிறது. பரமசிவத்துக்கு ஆயுள் வரையறை கிடையாது. அவரது ஆயுளுக்கு அளவேயில்லை. அவர் ஒரு காலத்திலும் மடிபவரல்லர். சிவபெருமானின் பகற்காலத்தில் படைப்பும் இரவுக்காலத்தில் மகாப்பிரளயமும் நிகழும். உலகத்திற்கு இதத்தைக் கருதிய சர்வேஸ்வரன் இந்த வகையாகக் காலத்தை நிர்மாணஞ் செய்திருக்கிறார். பிரஜைகளும் பிரஜாபதிகளும் மூர்த்திகளும் சுராசுரர்களும் இந்திரியங்களும் இந்திரிய விஷயங்களும் மஹாபூதங்களும் தன்மாத்திரைகளும் புத்தியும் தத்தமது அதிஷ்டான தேவர்களுடன் பிரளயகாலத்தில் சர்வேஸ்வரனிடம் லயமடைவான். சிவத்தின் பகற்காலத்தில் அவரது கட்டளையால் தமது வடிவுடன் விளங்குவார். விஸ்வாத்மாவும் காலஸ்வரூபமாகிய பரமசிவத்தின் சக்தியாதீனமாகச் சகலமும் விளங்கும். அத்தகைய பகவான் சங்கரருக்கு நமஸ்காரம் என்று வாயுதேவன் கூறலானான்.

7. சக்தியாதி பிரளயாந்தம்

முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, சுவாமி! சர்வேஸ்வரன், எல்லாவுலகங்களையும் எப்படிப் படைத்தான்? எப்படிப் பிரதிஷ்டித்தான்? முதலில் பிறந்தது யாது? எதனால் இந்தப் பிரபஞ்சம் விரிந்தது? எதனிடம் இவையாவும் லயம் அடையும்? என்று கேட்டனர். வாயுதேவன் கூறலானான்.

சக்தி விசிஷ்டமான சர்வேஸ்வரனிடத்தில் மாயை பிறந்தது. அந்த மாயையால் அவ்வியக்தம் பிறந்தது. மாயாசக்தி விசேஷமே அவ்வியக்தம். அந்த மாயா சக்தியால் சாந்தியதீச பதமும் விக்தியாபதத்தால், பிரதிஷ்டபதமும் பிரதிஷ்டபதத்தால் நீவ்ருத்தி பதமும் பிறந்தன. இந்த வகையாகச் சிருஷ்டி கலை ஐந்துமாம், இவைமுறை தவறிய இடத்தில், முன்புகூறிய படைப்புக்கள் யாவும் அடியோடு அழிந்து விடும். அவ்வியக்தத்தை ஜகத்காரணம் என்றும் அதுவே படைப்பைச் செய்கிறது என்றும் சொல்வார்களாயினும் பரமாத்ம ஸ்வரூபத்தால் அதிஷ்டிக்கப்பட்ட அவ்வியக்தத்துக்கு ஜகத் காரணத்துவம் உண்டு. அன்றி, தனியே அவ்வியக்தமானது அசேதனமாதலின் கர்த்தாவாக மாட்டாது. இந்தச் சராசரப் பிரபஞ்சம் முழுவதும் சர்வக்ஞத்துவமுடைய கர்த்தாவால் செய்யப்படவேண்டுமாதலால் அறிவு சிறிதும் இல்லாத அவ்வியக்தமும் சாமானிய அறிவையுடைய புருஷதத்துவமும் கர்த்தாக்கள் என்று சொல்லக்கூடாது. சமர்த்தனும் சுதந்தரனும் அநந்தசக்தி விசிஷ்டனும் சர்வக்ஞனும் அநாதிநிதனும் மகேசுவரியம் உடையவனும் ஆகிய மகாதேவனே ஜகத்கர்த்தாவாவான். புருஷனுடைய பிரவிருத்தியும் அவ்வியக்தத்தின் மஹத்தாதி தத்துவ விகாரங்களும் சத்தியவிரதனாகிய சாம்பவமூர்த்தியின் ஆக்ஞையினாலேயே நடக்கின்றன. இந்த அநாதியான விஷயங்கள் சத்புருஷர் களுடைய மனதில் எப்போதும் விளங்கும். அற்பர்கள் இதை அங்கீகரிக்கமாட்டார்கள். தாங்களே, கர்த்தாக்கள் என்று கூறுவார்கள். பிரமதேவனுக்கு நூறு ஆண்டுகள் கழிந்தால் பரார்த்தமாகும். பரார்த்தம் இரண்டு ஒழிந்தால் மகாப்பிரளயம் வரும் அப்பொழுது அவ்வியக்தமானது எல்லாக் காரியங்களையும் ஒடுக்கிக் கொள்ளும். புருஷன் பிரகிருதி சம்பந்த முடையவனாகத் திரிபு இல்லாமல் இருப்பான். பிரகிருதி புருஷர் குணசாயமுற்று, பரசிவத்தில் ஐக்கியமாவார்கள். புருஷனுக்கு மேல் சிவனே ஏகனாக இருப்பான். இவ்வாறு இரவாகிய மகாப்பிரளயம் ஒழிந்தபிறகு சிவபெருமான் தம் மாயையால் புருஷனைப் பிரகிருதியால் பொருந்தச் செய்து, ஆகவேண்டிய பரிணாமங்களையுங் கொடுப்பான். இந்த முறையிலேயே அவ்வியக்தத்தில் எல்லாச் சுகங்களும் உண்டாகும். மந்திர அத்துவா பதார்த்துவா, வன்னாத்துவா, புலனாத்துவா, தத்துவாத்துவா, காலத்துவா, என்ற ஆறு அத்துவாக்களுக்குத் தலைவனும் அநந்த சக்தியோடு கூடியவனும் தன் சக்திகளில் ஒரு சக்தியின் எண்ணிறந்த அம்சங்களில் ஓர் அம்சத்தால் எல்லாப் பிரபஞ்சத்தையும் படைத்தளித்து அழிப்பவனாகிய சதாசிவமூர்த்திக்கு நமஸ்காரம்.

8. அண்ட உற்பத்தி

வாயுதேவன், சிவபெருமானைத் துதித்து, முனிவர்களை நோக்கி, மேலும் கூறலானான்.
முனிவர்களே! அவ்வியக்தத்திலிருந்து, புத்தி, அகங்காரம், மனம், இந்திரியங்கள், தன் மாத்திரைகள், பூதாதிகள் யாவுந் தோன்றும் அந்தக் காலத்தில் ஜகத்காரண பூதர்களாகிய பிரமன், விஷ்ணு, உருத்திரர் பிறந்தார்கள். அம்மூவருக்கும் சிருஷ்டி ஸ்திதி சங்காரம் என்ற மூன்று தொழில்களும் கைகூடும்படி சிவபெருமான் தம் சக்தியால் திருவருள் புரிந்து, அவர்களால் அந்தந்தச் செயலை நிறைவேற்றுவான். அவனே யாவருக்கும் கடவுள். அந்தக் கடவுள் மூவரும் சமானர்கள். அவர்கள் ஒருவரிடத்தொருவர் பிறந்தும் ஒருவரையொருவர் பாலித்தும் ஒருவரால் ஒருவர் விருத்தியடைந்தும் இந்த வகையாக மும்மூர்த்திகளாக விளங்குவார்கள். அவர்கள் எல்லோருக்கும் கடவுளாகிய மஹேஸ்வரன் சர்வாத்மாவும் யாவற்றுக்கும் ஆதாரமானவனும் சக்திக்கு உற்பத்திகாரணனும் மும்மூர்த்தி களுக்கும் பிரகிருதி புருஷர்களுக்குக் காரணனும் விளையாட்டாகச் சிருஷ்டி செய்த பிரபஞ்சத்திற்குப் பிரபுவும் யாவருக்கும் பரனும் நித்தியனுமாவான். அவனே பரதத்துவப் பொருள் பிரகிருதியிலிருந்து புத்தி, கியாதி, மதி, என்ற பெயர்களுடைய மகத்தத்துவம் பிறந்தது. மகத்தத்துவத்தால் மூவகைப்பட்ட அகங்காரங்கள் பிறந்தன. இந்த மூவகை அகங்காரங்களின் பூத தன்மாத்திரைகளும் இந்திரியங்களும் பிறந்தன. சத்துவ குணத்துடன் கூடிய அகங்காரம் வைகாரிகம் எனப்படும். வைகாரிகத்தால் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரங்கள் ஐந்தும் மனமும் பிறந்தன. சாத்துவீக சம்பந்தமான அகங்காரத்தில் ஞானேந்திரியங்கள் ஐந்துக்கும் கர்மேந்திரியங்கள் ஐந்துக்கும் மனதுக்கும் திக்கு முதலிய அதிஷ்டான தேவதைகள் பிறந்தன. தமோகுண சம்பந்தமான அகங்காரத்திலிருந்து சப்தம் பிறந்தது. அந்தக் காரணத்தாலேயே தமோகுண அகங்காரத்துக்குப் பூதாதி என்று பெயர். சப்தத்திலிருந்து ஆகாயமும் ஆகாயத்திலிருந்து ஸ்பரிசமும், ஸ்பரிசத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து உருவமும், உருவத்திலிருந்து தேஜஸும் தேஜஸிலிருந்து ரசமும், ரசத்திலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து வாசனையும் வாசனையிலிருந்து பிருதிவியும், பிருதிவியிலிருந்து ஓஷதிகளும், பூதங்களிலிருந்து சராசரப் பிரபஞ்சங்களும் பிறந்தன என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

புருஷ தத்துவத்துடன் பிரகிருதி பொருந்தவும், அதிலிருந்து உண்டாகிய மகான் முதலாகப் பிருதிவி ஈறாகவுள்ள தத்துவங்கள் இந்தப் பிரமாண்டத்தை உண்டாக்கின. இந்தப் பிரமாண்டத்தில் செயல்களும் சாதனங்களும் செய்யும்படி, இவ்வண்டத்திலேயே ஜனித்து ÷க்ஷத்திரக்ஞன் என்ற பெயர்பெற்ற பிரமன் தோன்றுவான். அந்தப் பிரமனே முற்பட்ட ஜீவன் என்றும் பூதங்களுக்கெல்லாம் ஆதிகர்த்தர் என்றும் வழங்கப்படுவான். அந்தப் பிரமனுக்கு ஞான வைராக்கியங்களை லட்சணமாகவுடையதும் தர்மஸ்வரூபமாகவுள்ள புத்தியால், தான் நினைத்த கர்மங்கள், அவ்வியக்தத்தில் உண்டாவன. முக்குணங்களையும் அங்கீகரித்து உலகத்தைப் படைத்து அழித்து அழிக்கும் இயற்கையனாகிறான். படைக்குங் காலத்தில் நான்கு முகங்களையுடையவன். பாவனத்தில் விஷ்ணு, சங்கரித்ததால் உருத்திரன் என விளங்குகிறான். இத்தகையதாக முக்குணங்களைக் கொண்டிருப்பதால் பிரமனைத் திரிகுணன் என்றும் நால்வகை விபாகமுடையவனாகையால் சதுர்வியூகன் என்றும் முற்பட்டவனாகையால் அஜன் என்றும் பிரஜைகளைப் பாவிப்பதால் பிரஜாபதி என்றும் பெரியோர்கள் வழங்குவார்கள். மலைகள் கடல்கள் யாவும் அந்தப் பிரமனுடைய கர்ப்பத்திலேயே விளங்கும். சூரிய, சந்திரர், நட்சத்திரங்கள், கிரகங்கள், வாயு, உதகம், தேஜஸ் முதலானவற்றுடன் கூடியது அண்டம். அத்தகைய அண்டமானது பதினான்கு உலகங்களைத் தன்னகத்தே பொருந்தியுள்ளது. அந்த அண்டத்திற்குப் பத்துபங்கு அதிகமாகத் தேயவும், தேயுவுக்குப் பத்துப் பங்கு அதிகமாய் வாயுவும், வாயுவுக்கு அதிகமாக ஆகாயமும் சூழ்ந்திருக்கும். ஆகாயத்தை அகங்காரமும் அகங்காரத்தை மஹத்தத்துவமும் மகத் தத்துவத்தை அவ்வியக்தமும் சூழ்ந்திருக்கும். இத்தகைய அண்டமானது ஏழு ஆவரணங்களால் மறைக்கப்பட்டிருக்கும். இத்தகையதாக ஒன்றில் ஒன்று உதித்து, அவ்வாறு உதித்தவாறே ஒன்றில் ஒன்று லயமடையும், குணங்கள் கால விசேஷத்தாலேயே சமமும் அசமும் ஆகின்றன. சாம்மியம் உண்டானபொழுது லயமும், குணவைஷம்யம் உண்டானபோது சிருஷ்டியும் உண்டாகும். இந்த அண்டத்திற்கு ÷க்ஷத்திரம் என்று பெயர். இந்த ÷க்ஷத்திரத்திற்குப் பிரபுவாக இருக்கும் பிரமன், ÷க்ஷத்திரக்ஞன் எனப்படுவான். இத்தகைய அண்டங்கள், அநேக ஆயிரங்கோடி நானாதிசைகளிலும் நேராகவும் குறுக்காகவும் நீரில் கிடப்பன. இந்த அண்டங்களில் நான்கு முகங்களையுடைய பிரமன், விஷ்ணு, ருத்திரன், தத்தமது காரியங்களைச் சிவாக்ஞைப்படிச் செய்து வருவார்கள். அவ்வியக்தத்திலிருந்து தோன்றிய இந்த அண்டத்திற்குப் பரமாக உள்ளவன் சிவபெருமான். அவனே லீலாமாத்திரையாகப் பிரபஞ்ச காரியத்தை நடத்துகிறான். அத்தகைய பரமேஸ்வரனை நான் வணங்குகிறேன்.

9. ஸ்வேத வராஹ கற்பம்

முனிவர்களே! கால நியமமுடைய நான்முகப் பிரமனுடைய ஆயுட்காலத்தின் பூர்வபாகம் முதல் பரார்த்தம் என்றும் அதனைக் காலமுடைய உத்தரபாதம் இரண்டாம் பரார்த்தம் எனவும் சொல்லப்படும். அந்த இரண்டு பரார்த்தங்களின் இறுதியில் அவாந்திரப்பிரளயம் சம்பவிக்கும். அப்போது சகலப் பிராணிகளும் நாசமாகும். பிரமதேவனுடைய ஒவ்வொரு தினத்திலும் பதினான்கு மனுக்கள் மாறுகிறார்கள். அநாதியாகவும் அநந்தமாகவும் எண்ணற்ற கர்மங்களும் மன்வந்தரங்களும் கழிந்துள்ளதால் அவை இவ்வளவு சென்றன என்று கூற இயலாது. அதிக சிரமத்துடன் இத்தனை சென்றன என்று கூறினும் உங்களுக்குப் பயன்படாதாகையால் அந்த விஷயத்தைச் சொல்வதில் எனக்கும் உற்சாகமில்லை. கீழ்ப்போன கற்பங்களிலெல்லாம் முதலில் படைப்பும் இறுதியில் சங்காரமும் இவ்வாறே நடக்கும். இப்போது நடக்கும் கற்பம் சுவேத வராஹ கற்பம். இந்தக் கற்பத்திலும் மனுக்கள் பதினால்வர் உண்டு. சுவாயம்பு மனு முதலிய எழுவரும் சாவர்ணிகள் முதலிய எழுவருமாவர். இவர்களில் வைவஸ்வேதன் ஏழாவான் ஒரு கற்பங்கழித்து மற்றொரு கற்பம் வரும்போது அளவில்லாத மழையுடன் பெருங்காற்று வீசி மரங்களும் செடிகளும் அழியும். அக்கினி பகவான், மூவுலகையும் எரிப்பான். சிலகாலம் பெருமழை பொழிந்து, சமுத்திரங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொந்தளிக்கும். திசைகள் தெரியாது முன்பு ஒருகாலத்தில் பிரளய வெள்ளம் பெருக்கெடுத்து, உலகம் முழுவதையும் அழித்த போது, அந்தச் சமயத்தில் பிரமதேவன் நாராயணனாகிச் சிவயோக நித்திரை செய்து கொண்டு, அகண்டமான ஜலமத்தியில் துயின்றான். ஜனலோகத்தில் வசிக்கும் சித்தர்கள் யாவரும் பலவிதமாகத் தோத்திரஞ்செய்ய நாராயணன் யோகத்துயில் நீங்கி, திசைகளை நோக்கி அவை ஒன்றும் காணாமையால் மிகவும் ஆச்சரியமடைந்து, மலைகள், மரங்கள், ஆறுகள் முதலியவற்றுடன் கூடியதும் விசாலமானதுமாகிய பூமி எங்கே சென்றது என்று ஆலோசித்து, ஒன்றும் அறியாதவனாய், தன் தந்தையாகிய முக்கண் சாம்பவமூர்த்தியை ஸ்மரணை செய்து அவ்வுலகம் நீரில் மூழ்கியது என்பதை உணர்ந்து அந்தப் பிரளய நீரில் மூழ்கி, அந்தப் பூமியை அதன் நிலையில் நிறுத்தவேண்டும் என்ற கருத்தால் அதற்கேற்ற வராக உருவம் எடுக்க நினைத்து எனக்குத் திவ்வியமான வெண்பன்றி உருவம் உண்டாகவேண்டும், என்று கோரினார். உடனே மலை போன்ற பேருருவம் மேக கர்ஜனை போன்ற தொனியும், பயங்கரமான பார்வையும் பருத்து உருண்ட துடைகளும் உயர்ந்த பிருஷ்டமும் உருண்டு திரண்ட முழங்கால்களும், கூர்மையான குளம்புகளும், பதுமராக மணி போன்ற செம்மை வாய்ந்து, உருண்டு கொண்டிருக்கும் விழிகளும், பூரிப்பான தேகமும் நீண்ட செவிகளும் பிரளயகால ருத்திரகோஷம் போல் ஒலிக்கும் உஸ்வாச நிசுவாசங்களும் பிடரிமயிரால் மறைக்கப்பட்ட கன்னங்களும் மின்னல்கள் பிரகாசிக்கும் மேகம் போன்ற பலநிறம் பிரகாசிக்கும் வராக ரூபத்தை அடைந்து பூமியைக் கொண்டு வரவேண்டும் என்று ரஸாதலத்தை அடைந்தார். அப்போது, ஜோதிலிங்கரூபம் எடுத்த சிவபெருமானுடைய திருவடியின் எல்லையைக் காணும்படி வராக வடிவம் எடுத்துச்சென்றது போலிருந்தது. அவ்வாறு எடுத்து வரும்போது ஜனலோகத்திலுள்ளவர்கள், அந்த விஷ்ணுவைக் கண்டு, மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடல் பாடல்கள் புரிந்து மலர்மாரி பொழிந்தார்கள். அதனால் வராகமூர்த்தி மின்மினுப் பூச்சிகளுடன் விளங்கும் மலையைப்போல விளங்கினார். இந்த வகையாகப் பூமியைக் கொண்டுவந்து, சமானமாக நிலைநிறுத்தித் தமது பழைய உருவாகிய பிரம ரூபத்தையடைந்து பழையபடியே மலைகளை இருத்தி, அசைய வொட்டாமற்செய்து, அதன்மீது நான்கு உலகங்களையும் அமர்த்தினார். அதற்குப் பிறகு பிரமதேவன் சிவாக்ஞையால் உலகப்படைப்பைச் செய்யக் கருதினான்.

10. பலவகைப் படைப்புகள்

முனிவர்களே! இவ்வாறு பிரமதேவன் சிருஷ்டி செய்யக் கருதியிருக்கும் போது, தமம், மோசம், மஹாமோசம், தாமிசிரம், அந்ததாமிசரம் என்னும் ஐந்துவகையாக அவித்தையானது பிரமனிடம் தோன்றியது. அவ்வைந்திலிருந்தும் ஐவகைப்படைப்புகள் பிரகாசமற்றவையாகவும் குடத்தில் இட்டவிதைகள் அந்தக் குடத்தால் மறைக்கப்படுவதுபோல, தமத்தினால் மறைக்கப்பட்டிருந்தன. அப்படைப்புகள் இந்திரியங்களால் நிகரகிக்கத்தக்கவை இவை என்பவை உணராமலிருந்தன. முதலில் படைக்கப்பட்ட மலைகளும் விருட்சங்களும் சஞ்சரிக்கமாட்டாமல் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியிழந்து இவற்றால் உலகம் விருத்தியாகாது என்று கருதி விலங்குகளைப் படைத்தார். அவை உள்ளத்தில் மட்டும் யாவற்றையும் உணரும் சக்தியுடையவனாக இருந்தும் பகிர்ப் பிரகாசமில்லாமலிருந்ததால் இரண்டாவது படைப்பாகிய விலங்குகளாலும் மகிழ்ச்சியடையாமல், ஊர்த்துவ லோகத்தில் தேவர்களை படைத்தான். அவர்கள் எப்போதும் சுகத்தை அனுபவித்து உள்ளும் புறமும் ஞானவிசிஷ்டர்களாக இருந்ததால் அவர்கள் தேவர்கள் என்று வழங்கப்பட்டனர். அதற்கு பிறகு அதோ லோகத்தில் மானுடரைச் சிருஷ்டித்தான், அவர்கள் துக்கமும், பிரகாசமும் தமோகுண ரஜோகுணமும் உடையவர்களானார்கள். அதற்குப் பிறகு பேய் பூதம் முதலியன ஜனித்தன. இவ்வகையில் பிரபஞ்சம் தோன்றியது. வேறொரு படைப்பையுஞ் சொல்லுகிறேன், கேளுங்கள்.

முனிவர்களே! முதலில் பிரமதேவரிடமிருந்து மகத்தத்துவமும் பிறந்தது. அதற்குப் பிறகு தன் மாத்திரைகளும் பூதங்களும் தோன்றின. அதற்குப் பின் விகாரங்களை உண்டு செய்யும் இந்திரியங்கள் பிறந்தன. அவை பிரகிருதி சம்பந்தமாகப் பிறந்தன. அதற்குப் பிறகு மலைகளும் மரங்களுமாகிய தாவர சிருஷ்டியும் தோன்றின. அதன்பின், ஊர்த்துவ லோகத்திலுள்ள மானுடசிருஷ்டியும் அதன் பிறகு குமார சிருஷ்டியும் செய்யப்பட்டன. முதலில் சொன்ன மூன்று பிரகிருதியில் பிறந்தது ஜடஸ்வரூபமாதலின் பிராகிருத சிருஷ்டி எனப் பெயர் பெற்றன. இனி குமார சிருஷ்டியைச் சொல்லுகிறேன்.

பிரமதேவன் தன் மனத்தால், ஸநந்தனன், ஸநகன், ஸநாதனன், ஸனத்குமாரன், ரிபு இவர்களையும் சிருஷ்டித்து, நீங்கள் உலக சிருஷ்டியைச் செய்யுங்கள் என்று கூறியனுப்பினார். அவர்கள் சிருஷ்டி செய்ய விரும்பாமல், சிவபெருமானுடைய திருவடிகளைத் தங்கள் இதயதாமரைகளில் இருத்தி ஐம்புலன்களை அடக்கி அகண்டமான பெரிய தவஞ் செய்து கொண்டிருந்தார்கள். அதைக்கண்ட பிரமதேவன், மனஞ்சகியாமல், பெருந்தவஞ்செய்து அந்தத் தவத்தால் ஒரு பயனையுமடையாமல் மனம் வருந்தித் தன் தாமரை மலர் போன்ற கண்களினின்று புகைதோன்றி நீர்த்துளிகளைச் சொரிய, அந்த நீர்த்துளிகளிலிருந்து பூதங்கள் பைசாசங்கள் முதலியவை தோன்றின. அவற்றைக் கண்டு பெரிதும் வருந்திய பிரமதேவன், துக்கத்தால் மூர்ச்சித்து உயிர் மாய்ந்தனன். அப்போது சிவபெருமான், அந்தப் பிரமனுடைய முகத்தில் பதினொரு ருத்திரர்களைப் படைத்து, நீங்கள் படைப்புத் தொழிலைச் செய்யுங்கள் என்றருள, அவர்கள் மழுப்படை முதலியவற்றை ஏந்தியவர்களாய் படைப்புத் தொழில் மிகக்கடினமானது என்று இயையாமல், துக்கித்து ஓடினார்கள். அக்காரணத்தால் அவர்கள் உருத்திரர்கள் என்று வழங்கப்பட்டார்கள். அதற்குப் பிறகு சிவபெருமான் அங்கு இறந்து கிடந்த பிரமனைக் காத்து உயிர்த்தெழுக என்று கூற பிரமதேவன் தூக்கத்திலிருந்து விழித்தது போல எழுந்து, சிவபெருமானைக்கண்டு மகிழ்ந்தான். சிவபெருமான் தம் திருக்கரத்தால் அவனைத் தடவி நீ முன்பு போலச் சிருஷ்டி காரியத்தைச் செய்வாயாக! என்று கூறி, மலரோனே! இவர்கள் என் படைப்பு கைகூடுமாறு உன்னிடத்திலிருந்து என்னால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறினார். அத்தகைய வரத்தை ஏற்ற பிரமதேவன், மனம் மகிழ்ந்து.

ஏவம் பகவதாப்ரோக்தோ ப்ரஹ்மாப்ரீத மநாஹ்யபூத்
நாமாஷ்டகேந விஸ்வாத்மா துஷ்டாவ பரமேஸ்வரம்;
ப்ரஹமோவாச! நமஸ்தே பகவந்ருத்ர பாஸ்கராமித தேஜஸே

நமோ பவாய தேவாய ரஸாயாம்பு மயாத்மநே!
ஸர்வாயக்ஷிதி ரூபாய ஸதாசுரபிணே நம:
ஈஸாய வாயவே துப்யம் நம: ஸ்பர் ஸமயாத்மநே!
பஸூநாம்பதயே சைவ பாவகாயாமித தேஜஸே
பீமாயவ்யோமரூபாய ஸப்த மாத்ராயதே நம:
உக்ராயோக்ர ஸ்வரூபாய யஜமாநாத்மநே நம:
மஹாதேவாய ஸோமாய நமோஸ்த் வம்ருதமூர்தயே!
ஏவம் ஸ்துத்வா மஹாதேவம் ப்ரஹ்மாலோக பிதரமஹ;
ப்ரார்த்யாமாஸ விஸ்வேஸம் கிராப்ணிதி பூர்வயா

என்று இவ்வாறு மகாதேவனை; உலகப் பிதாமகனான பிரமதேவன் துதி செய்து கம்பீரமான வார்த்தைகளால் பிரார்த்தனை செய்து, வரம் பெற்றுத்தன் படைப்புத் தொழிலைப் பண்டு போலச் செய்யத் துவங்கினான். தர்மம், சங்கற்பம், மரீசி, பிருகு, அங்கீரஸன் புலஸ்தியன், புலகன், கிருது, தக்ஷன், அத்திரி வசிஷ்டன் இவர்களை மானசீகமாகப் படைத்தான். இவர்கள் வேத மார்க்கத்தை பின்பற்றி யாக காரியங்களைச் செய்து கொண்டு புராணாதிகளால் துதி செய்யப்பட்டார்கள். பிரமதேவன் உருத்திரர்களுடைய உதவியால், தன் முகத்திலிருந்து தேவர்களையும் கக்ஷத்திலிருந்து பிதுரர்களையும் பின் பக்கத்திலிருந்து அசுரர்களையும் குறியிலிருந்து மானுடரையும் குதத்திலிருந்து இராக்ஷசர்களையும் தமோரஜப் பிரியர்களான நிசரசரர்களையும் சர்ப்பங்களையும்  யக்ஷர்களையும் பூதங்களையும் கந்தர்வர்களையும் படைத்தான். பார்ச்சுவத்திலிருந்து பறவைகளையும் மார்பிலிருந்து செம்மறியாட்டையும் முகத்திலிருந்து வெள்ளாட்டையும் பார்சுவங்களிலிருந்து உரங்களையும் பாதங்களிலிருந்து குதிரை, யானை சரபம் கவயமா, ஒட்டகம், மான் முதலிய மிருகங்களையும், விலாப்புறத்திலிருந்து பசுக்களையும் ரோமங்களிலிருந்து ஓஷதிகளையும் மரங்களையும் செடிகளையும் படைத்தான்.

இவ்வாறு பிரமதேவனுடைய அவயவங்களிலிருந்து அநேகவிதமான பூதகணங்கள், யக்ஷர்கள், பைசாசங்கள், அப்சரசுகள், நரர்கள், கின்னரர்கள், ராக்ஷசர்கள், பசு, பட்சி முதலிய யாவும் கூடிய சராசரப் பிரபஞ்சம் ஒன்றன்பின் ஒன்றாக நித்தியமாக இருக்கத் தோன்றின. இவற்றின் கர்மங்கள் முதலிய சிருஷ்டி செய்த காலத்திலேயே நியமிக்கப்பட்டன. அவை கற்பங்கள் தோறும் தோன்றி நிற்கும். அவை ஹிம்ஸைகள், மிருதுக்குரூரங்கள் தர்மா தர்மங்கள், சத்தியா சத்தியங்கள் ஆகும். ஜீவர்கள் தம் கர்மாநுபவங்களால் அவற்றை அநுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மஹா பூதங்களிலும் இந்திரியங்களிலும் இந்திரியார்த்தங்களிலும் சாரூப்பியாதி பேதமுடைய முக்திகளிலும் பூதங்களுக்கு போகார்த்தமான பிரவர்த்தனையும் அநேக வகையாகப் பிரமதேவனை ஏற்படுத்தியுள்ளான். பூதங்களுக்கு எல்லாம் நாம ரூபங்களும் பிராகிருதமான பூதங்களுக்கு வியாப்தமும், முதலில் வேதசப்தங்களால் கிரகிக்கச் செய்தான். வேதத்தில் கூறிய ஞானச்சிறப்புகளை பிரளயாந்தத்தில் பிறந்த ஜீவர்களுக்குப் பிரமதேவன் கொடுத்தனனேயன்றி தன் இச்சைப்படிச் செய்தவனல்லன். சிருஷ்டி யந்தரத்திலிருந்த அநேகமான ருது லிங்கங்களை அவ்வப்பூதங்களுக்கு யுகங்களில் பிரவிர்த்திக்கச் செய்கிறான். இதுவே பிரமதேவனுடைய அங்கத்தால் உண்டான உலகப்படைப்பு மஹதாதி விசேஷரந்தமாக விளங்குவன, பிருகிருதியாலுண்டான சிருஷ்டி அவ்வியக்தம் என்னும் பீஜத்தால் பிறந்ததும். சர்வேசனாகிய சாம்பமூர்த்தியின் அநுக்கிரகத்தையே விருத்திக்கு காரணமாகப் பெற்றதும், புத்தி என்னும் கிளைகளையுடையதும் இந்திரியாந்தப்ரங்களாகிய போரைகளையுடையதும் மகாபூதப் பிரமாணமுடையதும் அமலமான குணங்களைத் தளிர்களாகவுடையதும், தர்மா தர்மங்களென்னும் மலர்களையுடையதும் சுகதுக்கங்கள் என்ற பழங்களையுடையதும் எல்லாப் பூதங்களுக்கும் ரக்ஷகமுடையதுமாகிய அநாதியாகவுள்ள விருக்ஷம் போன்ற பிரமதேவன், முன்பு கூறிய பிரமவனத்தில் பொருந்திச் சிருஷ்டிக்கு காரண பூதமாக விளங்குவான். அந்தப் பிரமதேவனுக்கு ஆகாயமே சிரம்; சந்திர சூரியர்களே விழிகள், திசைகளே செவிகள், பூமியே பாதம், வாயுவே முகம், இவ்வாறு விராட் ஸ்வரூபமாக விளங்கும். அத்தகைய பிரமதேவனுடைய முகத்திலிருந்து பிராமணரும் தோளிலிருந்து க்ஷத்திரியரும், தொடையிலிருந்து வைசியரும் பாதத்திலிருந்து சூத்திரரும் பிறந்தார்கள். இந்த வகையாகச் சராசரப் பிரபஞ்சம் முழுவதும் பிரமதேவனாலேயே படைக்கப்பட்டன என்று வாயுதேவன் கூறினான்.

11. பிரம்ம, விஷ்ணு உற்பத்தி

முனிவர்கள், வாயுதேவனை வணங்கி, தேவா! தாங்கள் கூறிய படைப்புக்கிரமம், ஈஸ்வர அநுக்கிரகத்தால் உண்டானதாக இருக்க, அந்தப் படைப்பைச் செய்பவன் நான்முகப் பிரமன் செய்வதாகச் சொல்லப்படுகிறதே! இது எங்களுக்குச் சந்தேகமாக இருப்பதால் இதை விளக்க வேண்டும்! மேலும் தாங்கள் இது வரையில் சொல்லி வந்ததில் பிரமனைச் சிவனுடைய புத்திரனாகச் சொன்னீர்கள். பிரமனும் விஷ்ணுவும் ஒருவரிடம் ஒருவர் பிறந்ததாகக் கேட்டிருக்கிறோம். எல்லாப் பூதங்களுக்கும் ஏதுபுதர்களான பிரம்ம விஷ்ணுக்களுக்குப் பிறப்பு என்பது எப்படி உண்டாயிற்று? வாயுபகவானோ! தாங்கள் பிரமதேவரின் மாணவர். உமக்குத் தெரியாத விஷயங்கள் இல்லை. ஆகையால் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்கள். அதற்கு வாயுதேவன், முனிவர்களே! நீங்கள் கேட்ட விஷயம் அருமையானது. இந்த விஷயத்தைப் பற்றி ஒரு சமயம் நான் பிரமதேவரிடம் கேட்ட போது, அவர் எனக்குக் கூறியதைச் சொல்லுகிறேன். கேளுங்கள்! என்று கூறலானான்.

மகேஸ்வரனிடத்தில் ருத்திரன் விஷ்ணு பிரமர்கள் முறையே பிறந்தார்கள். இந்த மூவரும் சர்வேஸ்வரனாகிய பரமேஸ்வரனை நோக்கிப் பெருந்தவஞ்செய்து, மகிமாதிசயங்களை அடைந்தார்கள். அவர்களில் உருத்திரன், பூர்வத்தில் பிரம்ம விஷ்ணு இருவரையும் படைத்தான். மற்றொரு கற்பத்தில் பிரமதேவன் விஷ்ணுவையும் ருத்திரனையும் படைத்தான். இப்படியாக ஒருவர் மற்றொருவரைப் படைத்தும், ஒருவரையொருவர் வெல்லக் கருதியும் வென்றும், கற்பங்களில் நடத்திய விசேஷங்களைக் கண்ட முனிவர்கள் அவர்களுடைய பிரபாவங்களைச் சொல்லிக் கொள்ளுவதுமுண்டு. முன்பு நடந்த தற்புருஷ கற்பத்தில் ஆயிரம் தேவ வருஷங்கள் வரையில் நாராயணன் மேக வடிவங்கொண்டு, சகல லோக நாயகனாகிய சாம்பவமூர்த்தியைச் சுமந்தான். அந்தக் காரணத்தால், அது மேகவாகன கற்பம் என்று வழங்கலாயிற்று. சிவபெருமான். விஷ்ணுவைப் பாராட்டி சிறந்த வரங்களைக் கொடுத்து, அந்த விஷ்ணுவால் உலகங்களைப் படைக்கச் செய்யும்போது, பிரமதேவன் கண்டு அசூயை கொண்டு விஷ்ணுவே! உனக்கு இத்தகைய பிரபுத்துவம் வந்த காரணம் என்ன? நானும் அந்தச் சர்வேசனைக் குறித்துத் தவஞ்செய்து உன்னையே படைப்பேன் என்று கூறி அருந்தவஞ் செய்து சிவபெருமானைத் தரிசித்து, பகவானே, விஸ்வேஸ்வரா! மஹேஸ்வரா! தங்களது வலது புறத்தில் நானும் இடது புறத்தில் விஷ்ணுவுமாகப் பிறந்தோம். எனக்குச் சமானமாக அந்த விஷ்ணுவும் சிருஷ்டியைச் செய்கிறான். தங்களுடைய வரத்தின் சிறப்பால் என்னை அவமதிக்கிறான். என் பக்தியைவிட விசேஷபக்தி தங்களிடம் உண்டோ? நாங்கள் சமானமானவர்களாக இருக்க அவனுக்கு மட்டும் ஏன் மேம்பட்ட அதிகாரங்களைக் கொடுத்தீர்கள்? எனக்கும் அத்தகைய சிறப்பை அளிக்க வேண்டும் என்று விண்ணப்பஞ் செய்தான். பகல் என்னும் சூரியனின் கண்களைப் பறித்த சங்கரன். தயாமூர்த்தியாய்ப் புன்னகையுடன் அந்தப் பிரமனுக்கும் சிறந்த சக்தியைக் கொடுத்தார். உடனே, பிரமன் கம்பீரமாக நடந்து, திருப்பாற் கடலை அடைந்து சூரியகாந்திப் பிரகாசத்துடன், பொன்னாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பெற்ற திவ்விய விமானத்தில் ஆதிசேஷ சயனத்தில் யோக நித்திரை செய்து கொண்டிருக்கிற செந்தாமரைக் கண்ணும் நான்கு தோள்களும் கம்பீரமான சரீரமும், நவரத்தின சகிதமான ஆபரணமும் சங்கு சக்கர தாரணமும் சந்திர, பிம்பம் போன்ற முகமும் ஸ்ரீ வற்சம் பொருந்திய மார்பும் புன்னகையும், பூதேவியின் மெல்லிய கரங்களின் ஸ்பரிசத்தால் சேவிக்கும் பாதங்களுமுடையவனாய் விளங்கும். ஸ்ரீ விஷ்ணு மூர்த்தியைக் கண்டு, விஷ்ணுவே! நீ பூர்வம் என்னை விழுங்கிப் படைத்தது போலவே, இப்போது நானும் உன்னை விழுங்கிப் படைப்பேன் என்று கூறினான். உடனே விஷ்ணு எழுந்து புன்னகை செய்ய, பிரமன் அவ் விஷ்ணுவை விழுங்கி, மீண்டும் தன் புருவங்களிடையே தோற்றுவித்தார். அந்தச் சமயத்தில் அவ்விருவருடைய வன்மையையும் காணக்கருதிய கடவுள் நாயகன், அருந்தவத்தால் அறியக் கூடிய திருமேனி வெளிப்பட்டு நிற்க; பிரம விஷ்ணுக்கள் இருவரும் பெரு மகிழ்ச்சியுடன் சாஷ்டாங்கமாக அவரைப் பணிந்து துதி செய்தனர். அவர்களுக்கு அருள் புரிந்து கடவுள் நாயகர் மறைந்தார்.

12. உருத்திரர் உற்பத்தி

முனிவர்களே! பிரதிகற்பங்களிலும் பிரமனின் படைப்பு நிறைவேறும்படி சிவபெருமான் அநுக்கிரகிக்க உருத்திரன் தோன்றுவான். அந்த வரலாற்றைச் சொல்லுகிறேன். அண்டங்களில் விளங்கும் பிரமன், கற்பங்கள் தோறும் பிரஜைகளைப் படைத்து அவர்கள் விருத்தியடையாமையால், தன் படைப்பு பரவாமைக்காக மனம் வருந்த, அந்தத் துக்கத்தை விலக்கவும் பிரஜைகள் விருத்தியடையவும் அவ்வக்கற்பங்களில், காலஸ்வரூபனும் பரமசிவனால் கட்டளை செய்யப்பட்டவனும் நீலலோஹிதனும் உருத்திர கணாதிபதியுனுமாகிய உருத்திர பகவான் பிரமனிடம் தோன்ற அந்தப்பிரமனை அநுக்கிரக்கிறான். அந்த ருத்திரனே, ஷட்குண ஐசுவரியவானும் எல்லாப் பூதங்களையும் கற்பாந்தரத்தில் சங்கரிப்பவனும் தேஜோமயஸ்வரூபனும், பரமேஸ்வரனால் பிரேரிக்கப்பட்டவனும், பரமேஸ்வர சம்பந்தமான சக்தியுடன் கூடியிருப்பவனும், சிவ சின்னங்களுடையவனும் சிவநாமம் தரித்தவனும் சிவரூபமே உடையவனும், எல்லாத் தொழில்களிலும் சமர்த்தனும் சிவ சமானமானவனும் சிவாக்ஞையைப் பரிபாலிப்பவனும் ஆயிரஞ் சூரியர்கள் ஒரேகாலத்தில் பிரகாசித்தாற் போன்ற திருமேனியுடையவனும், சர்ப்பங்களையே ஹாரகேயூர குண்டல கங்கண் கடிசூத்திரங்களாகவுடையவனும் முன்னே காலம் செய்த பிரம விஷ்ணுக்களுடைய கோடானுகோடி சிரங்களை மாலையாக அணிந்த தோள்களையும் மார்பையும் உடையவனும் கங்கையின் அலைகளால் நனைக்கப்பட்ட ஜடையையுடையவனும், கைலையைப் போன்ற பெரிய வெள்ளி இடபவாகனமுடையவனும் மேக கோஷம் போன்ற கண்டத்வனியையுடையவனும் பிரளய காலாக்கினியைப் போன்ற காந்தியையுடையவனும் கோரரூபதாரியுமாக பிரத்தியட்சமாகத் தரிசனம் தந்து, பிரமனுக்கு ஞானத்தை யளித்து, படைப்பதற்குச் சகாயஞ் செய்கிறான். இத்தகைய உருத்திர அனுக்கிரகத்தால், பிரதி கற்பங்களிலும் பிரமதேவன் பிரவாக ரூபமும் நித்தியமுமாகிய படைப்பைச் செய்கிறான். ஒரு கற்பத்தில், நீலலோஹிதனாகிய இந்த ருத்திரன் படைக்க வேண்டும் என்ற விருப்பமுடைய பிரமனால் பிரார்த்திக்கப்பட்டவனாய், ஜடையையுடையவர்களும் பயமற்றவர்களும் நீலகண்டர்களும் முக்கண்ணர்களும், ஜராமரணம் அற்றவர்களும், சூலபாணிகளும் தனக்கு ஒப்பானவர்களுமாக எண்ணற்ற உருத்திரர்களை பிரமன் கண்டு சர்வேஸனாகிய உருத்திர பகவானே! நான் இத்தகைய பிரஜைகளைக் கண்டதேயில்லை. இறக்கத் தக்கவர்களாகவும் சிலரைப் படைக்க வேண்டும்! என்று பிரமன் பிரார்த்திக்க பரமேஸ்வரன் சிரித்து, பிறப்பு இறப்புள்ள பிரஜைகளைப் படைக்க மாட்டேன். அத்தகையவர்களை நீயே படைக்கக் கடவாய். என்னாற் படைக்கப்பட்டவர்கள், உன் படைப்புக்கு துணை நிற்பவர்களாய் எப்போதும் என்னுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்! என்று கூறினார். உருத்திரகணங்களுடன் கூடிப் பிரமன் சிருஷ்டித் தொழிலை நிறைவேற்றிக் கொண்டிருந்தான். அது முதற்கொண்டு சர்வேசன் மரணயுக்தமான படைப்பைச் செய்யாது இருக்கிறான்.

13. பிரமன் உருத்திரனைத் துதித்தது

பிரமதேவன் செய்த படைப்புக்கள் எல்லாம் விருத்தியடையாமல் மனத்திருப்தியுமில்லாமல், துக்கம் மிகுந்து, இனி பெண் கூடலால் உண்டாகும் படைப்பைச் செய்யவேண்டும் என்று கருதியவனாய் சர்வேசனால் பெண்கள் படைக்கப்படாததால், தானே சுதந்திரமாக பெண்களை சிருஷ்டிச் செய்யும் வலிமையற்றவனாய் இவ்வகையில் தான் சிருஷ்டி செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, சர்வேசனுடைய திருவருளையடைய வேண்டும் என்று விரும்பி, முதற்பட்டதும் பரமானதும் அநந்தமானதும் உலகங்களிற் காக்கத்தக்கதும் மனோகரமானதும் சூஷ்மத்துக்கும் சூஷ்மமானதும் தூய்மையானதும் மனதாலடையத் தக்கதும் நிர்குண நிஷ்பிரபஞ்ச நிஷ்கள நிரந்தர நித்தியமானதும், ஈஸ்வரனை எப்போதும் விட்டுப் பிரியாததுமாகிய சக்தி என்னும் உமாதேவியைப் பாகமாகவுடைய சிவபெருமானை இதய தாமரையில் இருத்தி, உக்கிரமான தவத்தைச் செய்தான். அப்போது சர்வேசன் அந்தத் தவத்திற்கு மிகவும் மகிழ்ந்து தன்னுடைய ஓர் அம்சத்தால் அர்த்தநாரீஸ்வர மூர்த்தியாகப் பிரத்யட்சமானார். அவ்வாறு காட்சியளித்த பராத்பரனும் ஜகத்துக்குக் காரணனும் அவ்வியக்த ஸ்வரூபனும் அத்விதீயனும் பாவிகளாற் காணப்படாதவனும் உலகங்களை யெல்லாம் உண்டு பண்ணுபவனும் சர்வலோக மாதாவைத் தன் பங்கில் உடையவனும் சர்வ வியாபியுமாகிய பகவானைப் பிரமதேவன் சாஷ்டாங்கமாக வணங்கி வழிபட்டு பக்தி சிரத்தைகளுடன், மதுரமான வியாகரணலக்ஷண சப்தத்துடன் கூடிய ஸ்தோத்திரங்களால், மஹாதேவனையும் மஹாதேவியையும் ஸ்தோத்திரஞ் செய்யலானான்.

ஜயதேவ மஹாதேவ, ஜயேஸ்வர மஹேஸ்வர,
ஜயஸர்வ குணஸ்ரேஷ்ட ஜய ஸர்வஸூகாதிப
ஜயப்ரக்ருதி கல்யாணி, ஜயப்பிரக்ருதி நாயிகே
ஜயப்ரக்ருதி துராங்கி, ஜயப்ரக்ருதி ஸுந்தரி
ஜயாமோக மஹாமாயா ஜயாமோக மநோரத
ஜயாமோக மஹாலீல ஜயாமோக மஹாபல
ஜயவிஸ் வஜகந் மாதர்ஜய விஸ்வ ஜகந்மயி
ஜயவிஸ்வ ஜகத்தாத்ரி, ஜயவிஸ்வ ஜகத்ஸகி
ஜயஸாஸ்வதிகை ஸ்வர்ய ஜய ஸாஸ்வதிகாலய
ஜயஸாஸ் வதிகாகார ஜயஸாஸ்காநீக
ஜயாத்மத்ரய நிர்மாத்ரி ஜயாத் மத்ரய பாலினி
ஜயாத் மத்ரய ஸம்ஹர்த்ரி ஜயாத் மத்ரய நாயிகே!
ஜயாவலோகநாயத்த ஜகத்காரண பிரும்ஹண
ஜயாபேரக்ஷ கடா÷க்ஷõத்த ஹுதபுக் புக்தமௌக்திக
ஜயதேவாத்ய விஜ்னேய ஸ்வாத்ம ஸுக்ஷ்மத்ரூ ஸோஜ்வலே
ஜயஸ்தூலாத்ம ஸக்த்யம்ஸீ வ்யாய்தவிஸ்வ சராசரே!
ஜனநானரக விந்யஸ்த விஸ்வதத்வ ஸமுச்சய
ஜயஸுரஸிரோநிஷ்ட ஸ்ரேஷ்டாநுக கதம்பக
ஜயோபார்ஜித ஸம்ரக்ஷõ ஸர் விதரந படீயஸி
ஜ்யோந் மூலிதஸம்ஸார விஷவ்ரு÷க்ஷõம் குரோத்கலே
ஜயப்ராதேஸ்கைஸ்வர்ய வீர்ய ஸெளர்ய.

இந்த ஸ்தோத்திரங்கள் பிரமதேவனால் பரமசிவனையும் பார்வதிதேவியையும் நோக்கித் துதிக்கப்பட்டன. இதனைப் பக்தி சிரத்தைகளுடன் துதிப்பவர்கள் இஷ்டகாமியங்களையும் மோக்ஷத்தையும் அடைவார்கள். சர்வலோக நாயகனுடைய திருவருளால், சர்வா பீஷ்டங்களையும் பெற்றுப் புண்ணிய உலகில் வாழ்வார்கள்.

14. பெண்கள் படைப்பு

முனிவர்களே! இவ்வாறு துதிசெய்த பிரமதேவனைக் கண்டு மகிழ்ந்த அர்த்த நாரீசனாகிய பகவான் மேகம் போன்ற தொனியும் மதுரகரமும் கம்பீரமுமாகிய சிறந்த பொருளமைந்த வாக்கியத்தால் புன்னகையுடன், மகனே! உன் துதிக்கு மகிழ்ந்தேன். பிரஜா விருத்தியைக் குறித்து நீ தவஞ் செய்தாய். உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று தம் வாமபாகமாகிய திவ்வியகுணமுடைய பராத்பரையாகிய, சக்தியும் ஜன்ம மிருத்யுஜராதிகளற்ற உலகமாதாவும் மனோவாக்கு, காயங்களுக்கு எட்டாதவனுமான பார்ப்பதியைத் தம் சரீரத்திலிருந்து பிரித்தார். பரமேஸ்வரியும் எல்லா உலகங்களுக்கும் மஹேஸ்வரியும் சர்வக்ஞையும் சர்வ வியாபியுமாகிய மஹாதேவியைப் பிரமதேவன் வணங்கி தேவி தேவனாகிய சாம்பவமூர்த்தியால் யான் தோன்றினேன். பிரஜைகளைப் படைக்கும்படி அவரால் நியமிக்கப்பட்டு, மனத்தால் தேவாதியரையும் எல்லா ஜகத்தையும் படைத்தேன். அவ்வாறு படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் விருத்தியடைந்தில. ஆகையால் இனி ஆண் பெண் சங்கமத்தால் உகல விருத்தியை உண்டு பண்ணவேண்டும் என்று இச்சித்தேன். முன்பு சர்வேஸ்வரனால் பெண் இனத்தினர் படைக்கப்படாததால் அதைப் படைக்க, எனக்குச் சாத்தியப்படவில்லை. எல்லாச் சக்திகளும் உன்னாலேயே உண்டாதலின் உன்னை யான் அது விசயமாக வேண்டுகிறேன். சராசரப் பிரபஞ்சம் ஈடேறும்படி உனது ஓர் அம்சத்தால் என் புதல்வனான தக்ஷனுக்கு மகளாய் அவதரிக்க வேண்டும் என்று வேண்டினான். அதற்குப் பார்வதிதேவி, தன் புருவ மத்தியில் ஒரு சக்தியை உண்டாக்கினாள். அப்போது சிவபெருமான் அப்படித் தோன்றிய சக்தியை நோக்கி, நீ பிரமனது விருப்பத்தின்படியே செய்வாயாக! என்று கட்டளையிட்டு, உமாதேவியுடன் திருக்கயிலாய கிரியை அடைந்தார். சிவபெருமானுடைய வலது புறத்தில் உதித்த பிரமதேவன், பார்வதியின் புருவமத்தியில் தோன்றிய சக்தியைப் பணிந்து, நீ என் மகனாகிய தக்ஷப் பிரஜாபதியின் மகளாகி, உலக விருத்தியை உண்டாக்க வேண்டும்! என்று வேண்ட, அந்தச் சக்தி அப்படியே தக்ஷப் பிரஜாபதியின் மகளானாள். அன்று முதல் பெண்களும் ஆண்களும் கலவிசெய்து மக்களைப் பெறுவார்களானார்கள். இந்த சரிதத்தைப் படித்தவர்களும் கேட்டவர்களும் சொன்னவர்களும் நல்ல புத்திரர்களைப் பெற்று, நெடுங்காலம் வாழ்வார்கள்.

15. பிரம வம்ச உற்பத்தி

சிவபெருமானின் அருளைப்பெற்ற பிரமதேவன் தனக்குக் கிடைத்த அழிவிலாச் சக்தியால், மிதுன சம்பந்தமாகப் படைக்க நினைத்தது தான் இருகூறாக விராஜன் என்ற ஆடவனும் சதரூபை என்ற பெண்ணுமானாள். விராஜனைச் சுவாயம்புமனு வென்றும் கூறுவார்கள். சதரூபை என்பவள் தவஞ்செய்து சுவாயம்பு மனுவைக் கணவனாகக் கொண்டு பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரு புதல்வர்களையும் ஆகுதி, பிரசூதி என்ற இரண்டு புத்திரிகளையும் பெற்றாள். அந்த நால்வரே உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் காரண பூதர்கள். சுவாயம்புமநுவானவன். ஆகுதியை உருசி என்ற பிரஜாபதிக்கும் பிரசூதியைத் தக்ஷப்பிரஜாபதிக்கும் மணஞ்செய்து கொடுத்தான். ஆகுதிக்கு யக்ஞன் என்ற புதல்வனும் தட்சிணை என்ற கன்னியும் மக்களாகப் பிறந்தார்கள். தக்ஷப்பிரஜாபதிக்கு பிரசூதிக்கும் உலக மாதாக்களாகிய இருபத்து நான்கு புத்திரிகள் பிறந்தார்கள். அவர்களில் சிரத்தை, லக்ஷ்மி, துருதி, புஷ்டி, துஷ்டி மேதை, கிரியை, யுத்தி, லஜ்ஜை, வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி என்ற பதின்மூன்று பெண்களையும் தர்மன் என்பவனுக்குக் கொடுத்தான். மற்றைய பதினொன்று பெண்களில் கியாதி என்பவளைப் பிருகுவுக்கும் சதியை ருத்திரனுக்கும் சம்பூதியை மரீசிக்கும் ஸ்மிருதியை ஆங்கீரசுக்கும் பிரீதியை புலகனுக்கும், க்ஷமையைக் கிருதுவுக்கும், சன்னதியைப் புலஸ்தியனுக்கும் அநுசூயையை அத்திரிக்கும் ஊர்ஜையை வசிஷ்டனுக்கும் சுவாஹாதேவியை அக்கினிக்கும் சுவதாதேவியை தென்புலத்தாருக்கும் கொடுத்தான். மூத்த புத்திரிகள் பதின்மூவரை மணந்த தர்மன் அவர்களிடமாக காமம் முதல் யசஸ் ஈறாகிய பதினைந்தையும் பெற்றான். அவர்களில் சிரத்தை என்பவள் காமமும், லக்ஷ்மிகர்ப்பமும் துருதி நியமமும் புஷ்டி சந்தோசமும் துஷ்டி லாபமும், மேதை சுருதமும், கிரியை தண்டமும் சமயமும் புத்திபோதமும் அப்பிரமாதமும், லஜ்ஜை வியமும் வபு விவசாயமும் சாந்தி சேமமும் சித்தி சுகமும், கீர்த்தி யசசும் முறையே பெற்றார்கள். அதர்மனுக்கும் இம்சைக்கும் அதர்ம லட்சணமுடைய நிகிர்தி முதலிய புதல்வர்கள் பிறந்தார்கள். உருத்திர பாரியையான சதிதேவி தன் கணவனை தக்ஷன் இகழ்ந்த காரணத்தால் தாக்ஷõயணி என்ற பெயருடன், பஞ்ச பவுதிக சரீரத்தை விடுத்து தக்ஷனையும் அவன் மனைவி முதலானவர்களையும் இகழ்ந்து, இமயமலை மன்னனுக்கும் மேனைக்கும் புதல்வியானாள். அதுகண்ட சிவபெருமான் கோபத்தால் அநேக ருத்திரர்களைப் படைத்தார்.

பிருகுவின் மனைவியாகிய கியாதி என்பவள் லக்ஷ்மி என்ற பெண்ணையும் தாதா விதாதா என்ற பிள்ளைகளையும் பெற்றாள். மரீசியின் மனைவியாகிய சம்பூதி என்பவள், பவுரணன் என்ற புதல்வனையும் துஷ்ட திரிஷ்டி சிருஷ்டி அபசிதி என்ற நான்கு புதல்வியரையும் பெற்றாள். அங்கிரஸின் மனைவி ஸ்மிருதி என்பவளது வயிற்றில் ஆக்கினித்திறன், பரதன், சுரபன் என்ற புதல்வரும் குரு சீனிவாலி இராகை, அநுமதி என்ற நான்கு பெண்களும் பிறந்தார்கள். புலஸ்தியனின் மனைவியாகிய ப்ரீதி என்பவள் தந்தோக்கினி என்ற புதல்வனைப் பெற்றாள். இந்தப் புதல்வனே, சுவாயம்பு மநு வந்தரத்தில் அகஸ்தியனானான். புலகன் மனைவி க்ஷமை என்பவள் கருத்தமன் ஆசூரியன், சயிஷ்ணு என்பவர்களைப் பெற்றாள். கிருதுவன் மனைவி சந்நதி என்பவள் வாலகில்லியர்கள் என்ற அறுபதினாயிரவரைப் பெற்றாள். இந்த வாலகில்லியர்கள் சூரியனைப் புடைசூழ்ந்து ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களானார்கள். அத்திரியின் மனைவி அநுசூயை என்பவள் சத்திய நேத்திரன் ஹவ்யன், ஆபோமூர்த்தி, சனீஷ், சோமன் என்ற ஐந்து புதல்வரையும் சுருதி என்ற புதல்வியையும் பெற்றாள். சுருதி, சங்கபதனைப் பெற்றாள். வசிஷ்டனின் மனைவி ஊர்ஜை என்பவள் இரஜன், காத்திரன், ஊர்த்தவாகு, சவனன், அநயன், சுதபா. சுக்கிரன் என்ற ஏழு புதல்வரையும் புண்டரீகை என்ற புதல்வியையும் பெற்றாள். அக்கினியின் மனைவி சுவாஹா தேவியானவள். பாவகன், பவமானன் சுசி என்பவர்களைப் பெற்றாள். இவர்களில் மின்னலின் பாவகனும் அரணியில் பவமானனும் சூரியனிடத்தில் சுசியும் விளங்குவார்கள் என்று பெரியோர் கூறுவர். இந்த மூவருக்கும் முறையே ஹவ்விய வாசனன், கவ்வியவாகனன் ஸஹரக்ஷன் என்ற மூவர் தோன்றினர். இவர்கள் தேவர், தென்புலத்தோர், அசுரர் ஆகியோருக்கு அக்கினியாக முறையே பொருந்தியிருப்பார்கள். இந்த மூவரின் வமிசத்தில் தோன்றிய நாற்பத்தொன்பது வகை அக்கினி காரியஞ்செய்தால் காளகண்டமும் முக்கண்ணும் சதுர்புஜமும் ருஷபவாஹனமும் பார்வதி பாகமும் சந்திரசூடமும் சர்ப்பாபரணமும் கங்கை பிரவகிக்கும் சடைமுடியுமுடைய உமாபாகராகிய சாம்பமூர்த்திக்கும் பிரீதியுண்டாகி, அவரது கருணையால் ஜன்மாந்தரவினை தொடக்கு ஒழிந்து இஷ்டசித்திகளை எய்தப் பெறுவார்கள். தென்புலத்தோர் அக்கினிஷ்வரத்தன் முதலியோரும் பர்ஹிஷதன் முதலியோருமாவார்கள்.

இவர்களில் முதலில் கூறப்பட்டவர் அயஜ்வரும் பின்னால் கூறப்பட்டவர் யஜ்வருமாவர். இவர் மனைவியராகிய ஸ்வதாதேவி முறையே தரணி மேனை என்ற இரு பெண்களைப் பெற்றாள். அவர்களில் மேனை என்பவள் இமவானைக் கூடி, மைந்தர்களையும் கிரவுஞ்சனையும் கங்கையையும் உமாதேவியையும் பெற்றாள். தரணிமேரு மன்னனைக் கூடி மந்தரகிரியையும் ஆயதி, நியதி வேலை என்ற பெண்களையும் பெற்றாள். அவர்களில் ஆயதியும் நியதியும் பிருகு புத்திரர்களாகிய தாதா விதாதா என்பவர்களை முறையே மணந்தார்கள். வேலை என்பவள், கடலைக் கலந்து கரவன்னி என்ற பெண்ணைப் பெற்று பிராசீன பர்ஹிசுக்குக் கொடுத்தான். பிராசீன பர்ஹிசுக்கும் சாவன்னிக்கும் பிராசேதசர் என்ற பெயர் பெற்ற பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். சிவபெருமானுடைய கோபத்தால் தக்ஷன் சாக்ஷúஷ மந்வந்தரத்தில் சாபமேற்று, சுவாயம்பு மந்வந்தரத்தில், அந்த மரபில் புதல்வனாகத் தோன்றினான். இப்படியாக அந்த மரபு விருத்தியாயிற்று. முனிவர்களே, கேட்டீர்களா? பிரம வமிசம் முழுவதையும் உங்களுக்கு விரித்துச் சொன்னேன். இனி மன்னர் மரபைச் சொல்லுகிறேன். வெற்றி பொருந்திய இக்ஷ்வாகு அம்பரீஷன், யயாதி, நகுஷன் முதலிய வேந்தர்கள் சூரியசந்திர வம்சங்களில் பிறந்து பெயர் பெற்றவர்களானார்கள். இந்த மன்னர் சரிதங்களைக் கூறுவதால் சொல்லுகின்ற எனக்கும் கேட்கும் உங்களுக்கும் உண்டாகும் பயன் சிறிதும் இல்லையாகையால் அவற்றை விலக்கி, நாம் புண்ணியம் அடையும்படியான சிவசரிதங்களையே இன்னமும் சொல்ல விரும்புகிறேன் என்று வாயுதேவன் கூறினான்.

முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, தேவரே! சிவபெருமானே சர்வலோக நாயகனாகையால் அந்தப் பகவான் விஷயத்திலேயே எங்கள் திரிகரணங்களும் விநியோகிக்கத்தகும். நாங்கள் மன்னர்களின் கதைகளை கேட்க ஆசைப்படவில்லை. தேவதேவனாகிய சங்கரபகவானுடைய சரிதங்களையே நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஆகையால் தக்ஷன் மகளாகியத் தாக்ஷõயணி என்ற பெயர் சூடிய சர்வலோக மாதாவாகிய பார்வதிதேவி பர்வதராஜகுமாரியாக அவதரித்த வகையும், தக்ஷப்பிரஜாபதி சிவபெருமானை அகந்தை கொண்டு இகழ்ந்த கதையும் சிவபெருமான் அவனைச் சினந்த விதமும் கூற வேண்டும் என்று கேட்க, வாயுதேவன் மகிழ்ந்து சிறிது நேரம் சிவத்தியானத்திலிருந்து கூறத்துவங்கினான்.

முனிவர்களே! காமதேனு, கற்பகத்தரு, சங்கநிதி, பதுமநிதி சிந்தாமணி முதலிய செல்வத்தையும் கற்பகச் சோலையையும் அரமகளிர் சுகத்தையும் அநுபவித்த இந்திரன் முதலிய இமையவர்கள் அனைவரும் சேர்ந்து, நாம் இது வரையில் சுகத்தை அநுபவித்துப் பலவகையான பாவங்களைச் செய்தோம். ஐயகோ! அவை எப்படிக் கழியும்? என்று ஏங்கி, முனிவர்கள் தவஞ்செய்யும் இமயமலையை அடைந்தார்கள். சிவபெருமானையும் சிவசக்தியையும் தரிசித்தார்கள். அவர்களிடம் வரம் பெற்றுத் தங்கள் தேவநகருக்குச் சென்றார்கள். அந்தச் சமயத்தில் தக்ஷன் தன் குமாரியாகிய சதிதேவியையும் தன் மருகனான சங்கரனையும் காண விரும்பி, இமயமலைக்குத் தேவருடன் வந்திருந்தான். பார்வதிதேவி அங்கு வந்த தேவர், முனிவர் முதலியவர்களுடன் தக்ஷனையும் சமமாகக் கருதிப் பேசினாள். தக்ஷன் தன் அஞ்ஞானத்தால் சதி தேவியைச் சர்வலோக மாதாவென்று உணராமல், தன்னைத் தன் மகள் சிறப்பாக வரவேற்று, மரியாதை செய்யவில்லையே என்று துவேஷங் கொண்டு தன் விதிவசத்தால் தன் மருகனாகிய சர்வேசனையும் தன் மகளாகிய சதிதேவியையும் அவமானஞ் செய்யவேண்டும் என்று கருதி, சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அவிர்ப்பாகம் கொடுக்காமல் ஒரு யாகஞ்செய்யத் தீர்மானித்துத் தன் நகரடைந்து, அவர்களை அழைக்காமல், பிறபுத்திரிகளையும் மருமகர்களையும் ஓலை அனுப்பித்து அழைத்தான். அதனால் சதிதேவியும் சிவபெருமானும் நீக்கிய சகல தேவர்களும் அங்கு வந்திருந்தார்கள். அதையறிந்த நாரத முனிவர் சிவபெருமானையும் சதிதேவியையும் தரிசித்து நடந்தவற்றைச் சொல்ல, சதிதேவி தானும் அந்த யாகத்தை காணவேண்டும் என்று சிவபெருமானிடஞ் சொல்ல சிவபெருமான், நீ அங்கு போனால் அவமானமடைவாய்! என்று கூறி, மீண்டும் தேவியின் விருப்பத்திற்கு இசைந்து விடை கொடுக்க சதிதேவி எல்லாத் திக்குகளிலும் முகங்களும் திவ்விய சோபானங் களுமுடைய புடமிட்ட பொன்னாற் செய்யப்பட்டதும், இரத்தினங்கள் இழைக்கப் பெற்றதும், முத்து விதானமிட்டு, புஷ்பமாலைகள் தொங்கவிட்டு, நூறு சித்திரப்பதுமைகள் கட்டப்பெற்ற நவரத்தின அசிதமான தூண்களையுடையதும் பவளத் தோரணங்கள் கட்டப்பெற்று, மலர் மெத்தை பரப்பியுள்ளதுமான ஒரு விமானத்தில் சித்திர விசித்திர நவரத்தினங்கள் இழைக்கப்பெற்ற சிங்காசனத்தில் அமர்ந்தாள். அந்த விமானத்திற்கு எருதுக்கொடி கட்டப்பெற்றது. பார்வதிதேவி புறப்படும்போது, பரிவாரப் பெண்கள் புடைசூழ்ந்து அந்த விமானத்தில் மெய்க்காப்பாளராக ஏறிக் கொண்டார்கள். அவர்களில் இருவர் வஜ்ரதண்டம் பொருந்திய சாமரைகளை வீச அவை இரண்டு அன்னங்களையும் அந்தச் சாமரைகளுக்கிடையேயுள்ள தேவியின் திருமுகம் ஒரு தாமரை மலரும் போலிருந்தன. சுமாலினி என்ற கன்னிகை பூரணச் சந்திரன் போன்ற குடையைப் பிடித்தாள்.

சுபாவதி, தேவியுடன் கவறாடினாள். தேவியின் பாதுகைகளை ஒரு கன்னி மார்பிலணைத்து நின்றாள். ஒருத்தி கண்ணாடி காட்டி நின்றாள். ஒருத்தி விசிறினாள். ஒருத்தி தம்பலப் படிக்கமேந்தினாள். ஒருத்தி கிளியைக் கரத்தில் ஏந்தி நின்றாள். ஒருத்தி மலர் மாலைகளையும் ஒருத்தி ஆபரணப் பெட்டகத்தையும் ஏந்தியிருந்தார்கள். இப்படிப் பல மங்கையர், தத்தமக்கு விசித்த பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் சதிதேவி, நட்சத்திரங்களின் இடையே விளங்கும் சந்திரனைப் போலிருந்தாள். பிரயாணத்தை விளக்கத்தக்க பேரிகை சங்கம் வேணுமிருதங்கம் முதலிய கருவிகளும் அநேகவாயிரம் கரஹனங்களும் ஒலிக்க, எண்ணாயிரம் கணநாதர் முழக்கமிட்டு முன்செல்ல, குமாரக்கடவுள் கஜாரூடராக வந்தாற்போல, சோமநந்தி என்ற கணநாயகன் எருது வாகனத்தில் முன் செல்லவும் தேவ துந்துபிகள் முழங்கவும் அப்சரமங்கையர் நடனஞ்செய்யவும், முனிவர்களும் சித்தர்களும் யோகீஸ்வரர்களும் மகிழ, மேகங்கள் மலர்மாரி பொழிய, விமானம் புறப்பட்டது. சதிதேவி, தன் தந்தையின் யாகசாலையை அடைந்தாள். அவளது வருகையைக் கண்ட தக்ஷன், சிறிதும் மரியாதை செய்யாமலும் உபசார வார்த்தைகள் சொல்லாமலும் தன் அழிவு காலத்தால் மிகவும் கோபங்கொண்டு, சதிதேவியைவிடத் தாழ்ந்த பிற புத்திரிகளை விசேஷமாகப் போற்றிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட சதிதேவி பெருங்கோபங் கொண்டு, தேவர்கள், நடுவில் வேதவல்லியுடனிருந்த தன் தந்தை தக்ஷனை நோக்கி, பிரமன் முதல் பைசாசம் ஈறாகவுள்ள உலகத்துக்கு நாயகனாகிய சங்கர பகவானைப் பூஜை செய்ய மறந்தாயே ஏன்? அதிருக்கட்டும், உன் புதல்விகளில் மூத்தவளாகிய என்னைப் பிற புத்திரிகளுடன் சமானமாக கருதி மதிக்காமல் என் கணவனைப் போல என்னையும் அவமதித்த காரணம் என்ன? சொல்வாய்! என்று கேட்டாள். அதற்குத் தக்ஷன் கோபத்துடன், ஓ சதி! உனக்கு இளையவர்களாகிய என் குமாரத்திகள் யாவரும் குணத்திலே சிறந்தவர்கள். உன் கணவனாகிய திரியம்பகனைவிட என் மருமகர்கள் யாவரும் சிறந்த அறிஞர்களாகவும் பலவான்களாகவும் இருக்கிறார்கள். ஆகையால் உங்கள் இருவரையும் போலின்றி அவர்கள் யாவரும் என்னால் போற்றுதலுக்கு உரியவர்களே! உன் கணவனோ பித்துபிடித்து, மயானத்தில் பேய் பிசாசுகளுடன் அக்கினி கூத்தாடுகிறவன். உத்தமலக்ஷணம் சிறிதும் இல்லாதவன், எலும்பு மாலையும் கபால மாலையும் அணிந்தவன். அவன் எனக்குப் பகைவன். ஆகையால், அவனும் அவனுக்கு மனைவியாகிய நீயும் இந்த யாகத்திற்கு வருவதற்குரிய யோக்கியதையற்றவர்கள் என்றான். அதைக் கேட்ட சதிதேவி கோபங்கொண்டு, தக்ஷனை நோக்கி யாகசாலையிலிருந்த அனைவரும் கேட்க, கொடியவனே! சிவபெருமனை நிந்தித்த நீ குருத்துரோகியாகையால், மஹாபாவி! உலக நாயகனாகிய மகேசனுடைய கோபத்திற்கு இரையாவாய்! விரைவில் நீ தண்டிக்கப்படுவாய்! என்று சபித்து தன் தக்ஷ சம்பந்தமான உடலை மாயா சம்பந்தமாக ஒழித்தாள்.

நெடுங்காலமாகப் பார்வதிதேவியை மகளாகப் பெற வேண்டும் என்ற கருத்துடன் ஹிமாசல மன்னன் பெருந்தவஞ் செய்து கொண்டிருந்தான். ஆகையால் சதிதேவி தன் மாயா உடலுள் அவனை அடைந்து, அவனுக்கு மகளானாள்.

முனிவர்களே! சதிதேவி தக்ஷனை வெகுண்டு பிரிந்தவுடனேயே மந்திரங்கள் யாவும் மறைந்தன. யாகமும் நிறைவேறாது என்று உணர்ந்த தேவர்களும் முனிவர்களும் நடுங்கினார்கள். இந்தச் செய்தியை சிவபெருமான் உணர்ந்து, அத்தகைய யாகத்தைச் செய்த தக்ஷன்மீது சினங்கொண்டு தக்ஷõ! நீ என்னையும் என் மனைவியையும் அவமதித்துப் பிற புத்திரிகளையும் மருகர்களையும் போற்றினாயாகையால், நீ மானுடனாகப் பிறக்கக் கடவாய்! அப்போது நீ யாகஞ்செய்ய எத்தனிப்பாய். அந்த யாகத்தையும் யாமே அழிப்போம். உன்னால் போற்றப் பெற்ற மருகர்கள் வைவஸ்வத மனுவந்தரத்தில் மானுடராவார்கள். உன் காரியங்கள் யாவும் விக்கினம் அடைக! என்றும் சபித்து, அவ்வாறே அவர்கள் தோன்றிய காலத்தில் சிவபெருமான் அவர்களை அழித்தார்.

17. வீரபத்திர அவதாரம்

முனிவர்களே! சகல லோக மாதாவாகிய உமாதேவியைக் குறித்து நெடுங்காலம் தவஞ்செய்து புத்திரியாகப் பெறக்கருதிய மலை மன்னன் மனங்களிக்கும்படி, அவ்விறைவியே புதல்வியாகி அவனிடம் வளர்ந்து வந்தாள். சிவபெருமான் அந்தப் பர்வதராஜன் மகளான பார்வதியை மணந்து இமயமலைச் சிகரத்தில் நெடுங்காலம் தேவியுடன் கூடி வாழ்ந்திருந்தார். அநேக யுகங்கள் கழிந்தன. தக்ஷன் சிவபெருமானின் சாபப்படி பிரசேதசு என்பவனுக்கு புத்திரனாகி, மோக்ஷ விருப்பத்தால் அஸ்வமேதயாகஞ் செய்ய விரும்பி, இமயமலையில் முனிவர்களும் சித்தர்களும் நிரம்பிய கங்காத்துவாரம் என்ற இடத்தில் யாகாரம்பம் செய்தான். அந்த யாகத்தில் இந்திரன் முதலிய தேவர்களும் ஆதித்தர்களும் வசுக்களும் உருத்திரர்களும் மருத்துக்களும் பிதுர்க்களும் ஆத்தியர்களும் தூமபர்களும் அஸ்வினி தேவர்களும் பல முனிவர்களும் விஷ்ணு மூர்த்தியும் தத்தமது யாக பாகத்தை ஏற்க வந்தார்கள். எண்ணற்ற முனிவர்களுடன் வந்த ததீசி முனிவர், அங்கிருந்த தேவர்களையெல்லாங்கண்டு, சிவபெருமானைக் காணாததால் கோபங்கொண்டு தக்ஷனை நோக்கி  தக்ஷõ! பூஜிக்கத்தகாதவர்களைப் பூஜித்ததாலும் பூஜிக்கத் தக்கவர்களைப் பூஜிக்காமல் விட்டதாலும் மனிதன் பெரும்பாவத்தைச் சந்தேகமில்லாமல் அடைவான். அசத்துக்களுடைய ஆதரணையைக் கொண்டு சத்துக்களை அவமதித்தால் சர்வேசன் அப்போதே தண்டிப்பான். சர்வலோக நாயகனாகிய சங்கரனை நீ ஏன் பூஜிக்கவில்லை! என்று கேட்டார். தக்ஷன் அந்த முனிவரை நோக்கி, முனிவனே! எருது மீது சவாரி செய்து ஜடைமுடி தரித்த, சூலமேந்திய பதினொரு ருத்திரர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களையன்றி வேறு ஒரு சூத்திரனும் இருக்கிறானோ? என்று கேட்டான். ததீசி முனிவர் கோபங்கொண்டு அடா தக்ஷõ! நீ யாது கூறினை? இந்த யாகத்தே கர்த்தாவாகிய முதல்வனை விடுத்து, பின்னவர்களாகிய பிரம விஷ்ணு முதலியவர்களுக்குப் பூஜை செய்து யாது பயன்? பிரமன் முதலியவர்களைப் படைத்தவனும் பிரகிருதி புருஷர்களுக்குத் தலைவனும் திருமால் முதலிய தேவர்களையெல்லாம் ஏவலாளர்களாகக் கொண்டவனும் தத்துவ ஞானிகளால் உணரத்தக்கவனும் அழிவற்றவனும் அக்ஷர சொரூபனும் பரம் பொருளும் சிருஷ்டியாதித் தொழில்களை நடத்துவோனும் ஆதிமத்தியாந்த ரஹிதனும் மனம், வாக்கு, காயங்களுக்கு எட்டாதவனும், அநாதி புருஷனும், மும்மூர்த்தி சொரூபனுமாகிய சர்வேஸ்வரனே இந்த யாகத்தில் பூஜிக்கத் தக்கவன்.

அந்தப் பகவானையே பூஜிக்க வேண்டும்; அந்தச் சர்வேசன் வராத யாகம் உனக்கு பயனளிக்கமாட்டாது! என்று கூறினார். அதைக் கேட்ட தக்ஷன் முனி சிரேஷ்டரே ! இந்த யாகத்திற்குப் பிரபுவும் சமானரஹிதனுமாகிய விஷ்ணு பகவானுக்குச் சாஸ்திர விதிப்படிப் புனிதமாகிய அவிசைச் சுவர்ண பாத்திரத்தில் மந்திர பூர்வமாகக் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னான். ததீசி முனிவர், முன்னிலும் அதிக கோபங்கொண்டு, தக்ஷõ! சர்வேசனை ஆராதிக்காத இந்த யாகம் யாகம் ஆகமாட்டாது. இது விரைவில் அழிந்து போகக் கடவது! என்று கூறிச் சிவத்தியானத்துடன் தம் ஆசிரமத்தை அடைந்தார். மஹா புத்திசாலியாகிய ததீசி முனிவர் நிரீசுவர யாகத்தைக் காணக்கூடாது என்று சென்றதைப் பார்த்தும், அங்கிருந்த தேவர்கள் யாக அவிசை உண்ணக் கருதியதாலும், தமக்கு நேரிடும் துன்பத்தை அநுபவிக்க வேண்டிய விதிவசத்தாலும் அங்கிருந்து நீங்காமல் இருந்தார்கள். இந்த விவரங்களை உணர்ந்த சர்வேஸ்வரியான உமாதேவி, தன் கணவனாகிய சங்கர பகவானைப் பணிந்து, நம்மை இகழ்ந்து செய்யும் தக்ஷனுடைய யாகத்தை அழிக்க வேண்டும் என்று கூற சிவபெருமானும் தேவியினுடைய வேண்டு கோளுக்கிரங்கி, மகாபராக்கிரமசாலியும் கணங்களுக்கெல்லாம் தலைவனும் ஆயிரம் தலைகளும் ஆயிரங்கணங்களும் ஆயிரங்கரங்களுமுடையவனும் சூலம், டங்கம், வேல், வாள், வில், சக்கரம், வஜ்ஜிரம் முதலிய ஆயுதங்களை ஏந்தியவனும், சந்திரனைச் சிரத்தில் அணிந்து மின்னல்போல விளங்கும், தலைமயிரும் வக்கிர தந்தங்களும் பெருவாயும் சிவந்த நாவும் தொங்கிய உதடுகளும் சமுத்திர கோஷம் போன்ற த்வனியும், புலிதோலுடையும், பிரம விஷ்ணுக்களின் கபாலமாலையை அணிந்தவனும் வீரக்கழல் வாகுவளையம், இரத்தினாபரணங்களும் சரபசார்த்து சிங்கங்களைப் போன்ற பராக்கிரமமும் மதயானை போன்ற நடையும் சங்க சாமரம் போன்ற வெள்ளிய தேகமும், இமாசலம் நடந்து வந்தாற்போன்று முத்து மாலைகளசைய நடந்து வருகையுமுடைய பிரளய காலாக்கினி போன்ற வீரபத்திரனைப் படைத்தார். அந்த வீரபத்திரர், சிவபெருமானைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து அவர் சன்னதியில் இருந்தார். அப்போது உமாதேவியும் தன் கோபத்தால் ஆயிரம் சிரங்களும் கரங்களும் கரிய மேனியுமுடைய காளியைச் சிருஷ்டித்தாள். சிவபெருமானும் பார்வதிதேவியும் வீரபத்திரரை நோக்கி, உனக்கு மங்களம் உண்டாகுக! என்று வாழ்த்தினார்.

அப்போது வீரபத்திரர் சிவபெருமானை வணங்கி, எனக்கு என்ன கட்டளை? என்று கேட்க சிவபிரான், வீரா! பிரசேதச புத்திரனான தக்ஷன் கங்காத் துவாரத்தில் யாகஞ் செய்கிறான். நீ இந்தக் காளியுடன் சென்று அந்த யாகத்தை அழிப்பாயாக! நான் பார்வதிதேவியுடன் ரைப்பிய முனிவரின் ஆசிரமத்திலிருந்து பார்த்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டார். பார்வதிதேவி வீரபத்திரனையும் காளியையும் அணைத்து மூர்த்தர்க்ரஹணஞ் செய்து புன்னகையுடன், குழந்தாய்! வீரபத்திரா! எனக்குப் பிரியமுண்டாக்க, நீ பிறந்தாய். ஆகையால் நீ என் கோபத்தை ஒழிக்க வேண்டும். அது என்னவென்றால், நீ காளியுடன் சென்று, சிவபெருமானைப் பூஜிக்காமல் தக்ஷன் செய்துவரும் யாகத்தை அழித்துத் தக்ஷனையும் அங்குள்ளவர்களையும் கொன்றுவிட்டு வரவேண்டும் என்று கூறினாள். வீரபத்திரர் அவ்விரு முதுகுரவர் சொல்லையும் சிரமேற்கொண்டு காளியுடன் புறப்படும் போது, தனக்குத் துணைவரைப் படைக்க வேண்டும் என்று கருதி, தன் கோபத்தால் தன் உரோமங்களிலிருந்து உரோமஜர்கள் என்ற கணங்களையும் வலது புயத்திலிருந்து நூறு கோடி கணங்களையும் இடது புறத்திலிருந்து மனைவியருடன் கூடிய அநேகம் புத்திர கண்களையும் பாதத்திலிருந்து கடுங்கோபமுடைய அநேக ருத்திரர்களையும் தொடை, பிருஷ்டம், பக்கம், முகம். குய்யம் முதலிய அவயவங்களிலிருந்து எண்ணற்ற கணங்களையும் சிருஷ்டித்தான். அவர்கள் அனைவரும் தன்னைப் போலவே கண்கள், கரங்கள், சிரம் முதலியன ஆயிரங்களாகவுடையவர்களும் அநேக சூலம், வாள், கவு, வேல் முதலிய ஆயுதங்களை ஏந்தியவர்களாகவும் ருத்திரனைப் போன்ற தோள் வலிமையுடையவர்களாகவும் விளங்கினர். அவர்கள் கூத்தாடிக் கொக்கரித்துக் கொண்டிருந்தனர். வீரபத்திரர் அவர்களை உடன் கொண்டு ரிடபவாகனமேறி காளியுடன் புறப்பட்டார். ஆயிரம் வாய்களையுடைய பானகம்பன் தன் ஆயிரம் வாய்களிலும் சங்குகளை முழக்கினான். துந்துபிகள் முழங்கின. பத்திர கணங்களுடனும் காளியுடனும் விளங்கிய வீரபத்திரன் உருத்திர கணங்களிடையே விளங்கும். உமாதேவியுடன் விளங்கும் சிவபெருமானை ஒத்திருந்தான். அந்த க்ஷணமே, அவன் தக்ஷன் யாகஞ்செய்யும் இடம்நோக்கி பிரளய காலத்தில் பிரளய கால ருத்திரன் புனங்களை நோக்கி செல்வதுபோலச் சென்றான்.

18. தக்ஷயாகத்தை அடைந்தது

வாயுதேவன் மேலும் தொடர்ந்தான். முனிவர்களே! விஷ்ணு முதலிய மகிமாதி சுபங்களையுடைய தேவர் கூட்டத்தையும் சித்திரத் துவஜங்கள் கட்டித் தர்ப்ப ஆசனங்கள் விரித்து நல்ல சமிதைகளையடைந்து, மூவகை அக்கினிகளுடன் விளங்கும் யாகசாலையையும் விதி விலக்குகளையறிந்த முனிவர்களும், வேதபாகங்களை அறிந்த அத்வாயு முதலிய பெரியோர்களும், அநேக ஆயிரம் தேவமங்கையரும் அப்சர மங்கையரும் வேணு வீணா கானங்களும் வேத கோஷங்களுமாகியவற்றையுங் கண்டு வீரபத்திரன், சிங்க நாதம் செய்தான். அதைக் கேட்டதும் கணநாதர்கள் ஆகாயம் நிறையப் பெருங் கூச்சலிட்டார்கள். அந்த யாகசாலையிலிருந்த தேவர்கள், முனிவர்கள் ஆகியோரில் பலர் பயமடைந்து தங்கள் தண்டம், கமண்டலம், வஸ்திரம் முதலியவற்றை விட்டு விட்டு ஓடினார்கள். வீரபத்திரரின் வீரமுழக்கத்தால் மலைகள் பிளந்தன! பூமி நடுங்கியது. கடல் கலங்கியது. சூரியனும் கிரகங்களும் நக்ஷத்திரங்களும் அக்கினியும் தத்தமது ஒளியிழந்து மழுங்கின. அந்த நிலையில் வீரபத்திரர் காளியுடனும், தன் சைன்னியங்களுடனும், தக்ஷனுடைய யாகசாலையில் புகுந்தார். தக்ஷன், வீரபத்திரரைக் கண்டு மிகவும் பயந்த போதிலும் மேலுக்குப் பயத்தைக் காட்டாமல் தைரியசாலியைப் போல, நீ யார்? இங்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். வீரபத்திரர் துஷ்டனாகிய தக்ஷனைப் பார்த்துச் சிரித்து, தக்ஷனையும் அங்குள்ளவர்களையும் நோக்கி கம்பீரமான தொனியுடன், நாங்கள் மகா மகிமையுடைய சிவபெருமானின் புதல்வர்கள். உன் யாகத்தில் எங்களுக்குச் சேரவேண்டிய பாகத்தைக் கொடுத்துவிடு. ஆனால் இந்த யாகத்தில் எங்களுக்குப் பாகமில்லை என்று சொல்லுவார் களானால் அப்படிச் சொல்லுவார் என்னுடன் போர் புரிய வேண்டும். அல்லது சரியான காரணத்தையாவது சொல்ல வேண்டும்! என்று கூறினார். அப்போது தக்ஷனை முதலாக வைத்து தேவர்கள் வீரபத்திரரை நோக்கி வீரா! உனக்கும் உன் தலைவனான சங்கரனுக்கும் அவிகொடுக்கும்படி ஆதியாகிய வேதங்கள் கூறுமாயின் அவ்வாறே கொடுப்போம்! என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்து வேதங்கள் ஐயகோ! இப்படியுஞ் சொல்வதுண்டா! இது அடாது. நாங்களும் இங்கிருக்க மாட்டோம்! என்றும் வேதங்கள் நான்கும் விரைந்து பிரம்மலோகத்தை அடைந்தன.

வேதங்கள் அவ்வாறு மறைந்த பிறகு வீரபத்திரர் தம் கோபாக்கினியால் யாகசாலையில் தீப்பற்றும்படி தீவிழியால் எரி மூட்டினார். அவருடன் இருந்த கணநாதர்கள், தேவர்களைத் தொடர்ந்து அங்கு அமைந்திருந்த யூபஸ்தம்பங்களில் தேவர்களை உடல் பதைக்கக் கட்டினார்கள். வேதிகைகளை இடித்தார்கள். கும்பங்களை உடைத்துப் பொடி செய்தார்கள். சிலர் யாகப் பசுவைத் தீக்கடைக்கோலால் பாசனம் செய்து கங்காசலத்தைப் பருகினார்கள். அன்னக் குவியல்களையெல்லாம் புசித்தார்கள். நெய்யும் பாலும் தயிரும் சமைத்தனவும் சமைக்காதனவுமாகிய பதார்த்த வகைகள் தானிய வகைகள் முதலியவற்றையெல்லாம் சாப்பிட்டார்கள். தேவர்களே! யாகப்பசுவின் தசையைப் புசிக்க விரும்பினீர்களே, அது சுவையுடையதோ! இது சுவையுடையதோ சுவை பார்த்துச் சொல்லுங்கள்! என்று அவர்களில் ஒருவர் தோட்சதையை அரிந்து ஒருவர் வாயில் திணித்துச் சிரித்தார்கள். அண்டங்குலுங்க கை கொட்டினார்கள். அவியுண்ண வந்தவர்களே என்று சிலர் வாயில் தீக் கொள்ளியைச் செருகி சிரித்தார்கள். இதனிடையில் காளியோ தேவமாதர்களுடைய தோளையும் கூந்தலையும் மூக்கையும் மூளையையும் காதுகளையும் வாளால் அரிந்து, காலால் உதைத்துத் தள்ளினாள். அவ்வாறு வருந்தும் அமரமங்கையர் தங்கள் கணவருக்குச் சம்பவித்த துன்பத்தை உணராதவர்களாய் விரைந்து வந்து தங்கள் துன்பத்தை விலக்கும்படிக் கூவியழைத்தார்கள். நிலத்தில் விழுந்து புரண்டார்கள் அழுதார்கள். இப்படியாகத் தக்ஷ யாகத்திற்கு வந்திருந்த தேவமாதர்களில் காளிகா தேவியால் தண்டிக்கப்படாதவர் ஒருவருமிலர். தேவர்களில், பத்திர கணங்களால் துன்புறாதவர் ஒருவருமிலர்.

19. தக்ஷ யாகத்தை அழித்தது

முனிவர்களே! அந்தச் சமயத்தில் வீரபத்திரக் கடவுள், பெருங்கோபத்துடன் சூலம், வேல், வாள், தண்டம், சக்கரம் முதலிய ஆயுதங்களை ஏந்தி கடலைக்கலக்கிய மந்திரகிரியைப் போல தேவர்களைக் கலக்கினார். ஐராவதத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனைத் தண்டாயுதத்தால் அடித்து, அவனது ஆயிரம் கண்களையும் வீழ்த்தி அக்கினிதேவனின் கைகளையும் நாவையும் துண்டித்து, நிலத்தில் வீழ்த்தி சமுத்திரத்திலுள்ள வடவைத்தீயைக் குளிரச்செய்து, இயமனைப் பிடித்து அவனை உள்ளங்கையால் பிழிந்து, உயிர் பருகி திசையின் மேல் எறிந்து, நிருதியின் தோலையறுத்து, வருணனின் உந்தியைத் தோண்டி, அவன் குடலைக் கூளிகள் மாலையாக அணிந்து கூத்தாடச் செய்து, வாயுவைக் கடலில் வீழ்த்தி, அவன் சேனையை வாளுக்கிரையாக்கி, குபேரனைக் கச்சாங்கட்டி குறவன் கையில் அகப்பட்ட குரங்கு போலாட்டினார்கள். உமாதேவி பாகனே பரம்பொருள் என்று கூறும் எண்ணிறந்த நூல்களை வாசித்து உணர்ந்தும் சிவபக்தியில்லாமல் விஷ்ணுவையே பொருள் என மதித்தபுல்லறிவாளர்களே என்று, தேவர்களை ஒருவரோடொருவர் குழையும்படி பூஷா என்னும் பானுவின் பற்களை உதிர்த்த, பகவானுடைய கண்களை அகழ்ந்து, சந்திரனைக் காலடியில் போட்டு மிதித்து அவனுடலில் இருந்த அமிர்த கிரணங்கள் ஒழுகியோடச் செய்தார்கள். தக்ஷன் மனைவி வேதவல்லி தலைவிரித்து வயிற்றில் அடித்துக் கொண்டு அலறினாள். பேய்களும் பூதங்களும் அரம்பை முதலிய மங்கையரை முத்தமிட்டும் தனங்களை வருடியும் அணைத்தும் புணர்ந்தும் காமவெறி தீர்த்தன. இதைக் காணச் சகியாத யக்ஞன் கலையுருவத்தோடு ஓட முயலும்போது, வீரபத்திரர் வில்லை வளைத்து அம்பெய்து அதன் தலையைக் கொய்தார். தக்ஷனின் புத்திரிகள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.

இந்தச் செயல்களையெல்லாம் கண்டு மனம் பொறாத விஷ்ணுமூர்த்தி கருடவாகனத்தில் அமர்ந்து, இறவாமலிருந்த இந்திரன் முதலியவர்களைத் துணையாகக் கொண்டு போர் செய்ய வந்தார். அப்போது ஆயிரஞ் சூரியனுக்குச் சமமான காந்தியும் உத்தம லக்ஷணம் கொண்ட குதிரைகளும் அநேக அஸ்திர சஸ்திரங்களும் அமைந்த தேர் ஒன்று ஆகாயத்திலிருந்து இறங்க பிரமன் சாரதியாக வந்து அதை வீரபத்திரர் முன்பு நிறுத்தி வணங்கி, இது சிவபெருமானால் அனுப்பப்பட்டது. இந்த இடத்திற்கு அண்மையிலுள்ள ரைப்பிய முனிவருடைய ஆசிரமத்தில் பார்வதி பரமேஸ்வரர், உமது பராக்கிரமத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லச் சொன்னார் என்று விஞ்ஞாபனம் செய்தார். வீரபத்திரர் அந்தத் தேரில் ஏறி அமர்ந்தார். அதை விஷ்ணு மூர்த்தியும் கண்டார். பாணிகம்பன் சங்கு முழங்கினான். அந்தச் சங்கநாதத்தைக் கேட்ட தேவர்களும் முனிவர்களுக்கும் பயத்தால் குடர்கள் குழம்பின. உடல் நடுங்கின. யக்ஷ வித்தியாதர பன்னக சித்தர்கள் யுத்தஞ் செய்ய விருப்பமில்லாமல் அச்சங்க முழக்கத்திற்கு ஆற்றாதவர்களாய் அகன்றார்கள். வீரபத்திரருடைய தேரைப் பிரமதேவன் விஷ்ணுமூர்த்திக்கு எதிரே கொண்டு நிறுத்தினான். வீரபத்திரர் விஷ்ணுவைக் கண்டு சிங்கமானது நரியைப் பார்த்து அலட்சியமாக நகைப்பதுபோல நீயா இனிப்போர் செய்பவன்? என்று நகைத்தார். அதைக்கேட்ட விஷ்ணு கோபங்கொண்டு சாரங்கமாகிய தம் வில்லைவளைத்து எண்ணற்ற அக்கினிக்கணைகளை விடுத்தார். அம்புகளை எய்த விஷ்ணு மேல் மிகவும் கோபங்கொண்ட வீரபத்திரர், சிவபெருமான் திரிபுர தகனகாலத்தில் ஏந்திய மேருமலையைப் போன்ற வலியவில்லை எடுத்து, வளைந்து நாணேற்றி டங்காரம் செய்து, விஷ்ணுவின் லலாடத்தில் விஷ சர்ப்பம் போன்ற பற்பல பாணங்களைப் பிரயோகித்தார்.

விஷ்ணு மிகவும் கோபங்கொண்டு, இதற்குச் சமமான ஒரு பாணத்தை வீரபத்திரரின் தோள்மீது எய்ய வீரபத்திரர் கோடி சூரியர்களுக்குச் சமமான தீக்ஷண்யமுடைய பாணத்தால் விஷ்ணுவின் தோளிலடித்தார். இவ்வாறு ஒருவரையொருவர் வெல்லவேண்டும் என்று கருதி கடும்போர் செய்தார்கள். அப்போது வீரபத்திரர் ஒரு கணையை விஷ்ணுவின் மார்பில் கடினமாகச் செலுத்தினார். விஷ்ணு பிரஞ்ஞை தவறிப் பூமியில் விழுந்தார். சிறிது நேரத்திற் கெல்லாம் மூர்ச்சை தெளிந்த விஷ்ணு, கருட வாஹனத்தின் மேல் ஆரோகணித்து, தன் பெயர் எழுதிய எண்ணற்ற பாணங்களை படபடவென்று பொழிந்தார். வீரபத்திரரும் தம் பெயர் தீட்டிய பாணங்களை பலவற்றைச் செலுத்தி, அவை ஒவ்வொன்றையும் துண்டித்தார். பிறகு ஒரு கணையை எய்து விஷ்ணுவின் கரத்தில் இருந்த சாரங்கத்தையும் அவரது வாகனமாகிய கருடனின் சிறகுகளையும் வெட்டியெறிந்தார். மஹாவிஷ்ணு தம் மாயாசக்தியால் தேவர்கள் பலரைச் சிருஷ்டித்து, சங்கு சக்கர கதாதரர்களாய் வீரபத்திரர் மீது போர் செய்ய அனுப்பினார். அதைக் கண்ட வீரபத்திரர் முன்பு சிவபெருமான் தமது தீவிழியால் திரிபுரங்களை கணநேரத்தில் சாம்பலாக்கியது போல, அந்த மாயா விஷ்ணுக்களை தம் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். அதைக் கண்ட விஷ்ணு மிகவும் கோபங்கொண்டு இனி எவ்வகையிலாவது வீரபத்திரரை ஜெயிக்க வேண்டும் என்று விஷம் சிந்தும் சக்கராயுதம் ஒன்றை ஏந்தி, வீரபத்திரருக்கு முன்னால் வந்தார். வீரபத்திரர் இடியேறு போலக்கர்ஜனை செய்தார். அதைக் கேட்டதுமே விஷ்ணு சைத்திரீகன் எழுதிய சித்திரப் பதுமை அசையாது நிற்பதுபோல தூக்கியகரத்துடன் ஸ்தம்பித்து நின்றார். அவ்வாறு நிற்கும்போது அவர் என்ன செய்யக் கருதியும், கொம்பில்லாத எருதைப் போலவும் பல்லில்லாத பாம்பைப் போலவும் நகமிழந்த புலியைப் போலவும் எதையுஞ் செய்ய முடியாதவராக நின்றார்.

அதைக் கண்ட இந்திராதி தேவர்கள் விஷ்ணுவுக்குப் பதிலாக வீரபத்திரரை எதிர்க்க முன்வந்தனர். அவர்கள் யாவரும் வீரபத்திரரின் கர்ஜனையில் அங்கேயே அசைவற்று நின்று விஷ்ணுவுக்கு வந்த கதியை இன்னதென்று தெரிந்து கொண்டார்கள். சிலர் புற முதுகுகாட்டி ஓடினார்கள். சிலர் விண்ணிலும், சிலர் கடலிலும், சிலர் மலைக்குகைகளிலும், சிலர் தேவலோகத்திலும் ஓடி ஒளிந்து கொண்டார்கள். வீரபத்திரர் செய்த வீரப்பெரும் போரினால் பூமி நடுங்கியது. கடல் கலங்கியது, இரத்த வெள்ளம் யாகசாலை முழுவதும் அழித்து, கடலிற்சென்று கலந்தது. நடந்த யாகமோ அஸ்வமேத யாகம்! அதை நடத்தியவனோ பிரம புத்திரனான தக்ஷப்பிரஜாபதி, சபையோர்களோ தர்மாதிகள், அந்த யாக ரக்ஷகனோ கருடத்துவஜனான  நாராயணன். பாகங்களைப் பெறுவதற்கு நேரில் வந்தவர்களோ இந்திராதி தேவர்கள். இப்படியெல்லாம் இருந்தும் யஜமானனுக்கும் யாகத்துக்கும் அதை நடத்திய ருத்விக்குகளுக்கும் அந்த க்ஷணமே சிரச்சேதனமான பயனுண்டாயிற்று. ஆகையால் வேதத்தில் விலக்கப்பட்டதும், சொல்லப்படாததும் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடாததும் அசத்துக்களால் நல்லது என்று சொல்லப்பட்டதையும் ஒருவரும் ஒருக்காலத்தையும் செய்யக்கூடாது. அவ்வாறு அநேக யாகங்களைச் செய்தாலும் செய்பவன் சிறிது புண்ணியத்தையும் பெறாமல் பெரும் பாவத்தையே அடைவான். பெரும் பாவியேயாயினும் சிவபெருமானைக் குறித்து யாகஞ் செய்தால், அப்பாவங்கள் நீங்கிப் புண்ணியனாவான். புண்ணியவானாயினும் சிவபெருமானைத் தவிர்த்து யாகத்தைச் செய்தவன் ஒரு காலத்திலும் கடைத்தேறமாட்டான். இந்த விஷயத்தில் சந்தேகமே வேண்டாம். ஈஸ்வர பக்தியில்லாதவன் செய்யும் தானம், தவம், ஹோமம் ஆகிய யாவுமே பயனளிக்காது முனிவர்களே, கேட்டீர்களா ஈஸ்வர பக்தியில்லாத நாராயணனும் தக்ஷனும் இந்திரனும் சந்திரனும் வீரபத்திரரால் என்ன கதியை அடைந்தார்கள்?

20. தேவர்களுக்கு அருள் செய்தல்

முனிவர்களே! அந்தச் சமயத்தில் சகல தேவர்கள் மீதும் தங்கள் அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டிருந்த வீரபத்திரர், தமக்கு அருகேயிருந்த பத்திரகணங்களை நோக்கி, கணநாதர்களே! இங்குள்ள தேவ முனிவர் முதலியவர்களை விலங்கிடுவீர்கள் என்று கட்டளையிட்டார். இந்திரன் முதலிய தேவர்களும் கண்ணில்லாத முனிவர்களும் விலங்கிடப்பட்டனர். மறுத்தவர்கள் வதைக்கப்பட்டனர். நடந்தவற்றை யெல்லாம் கவனித்த வீரபத்திரரின் இரதசாரதியாகிய பிரமதேவர், சிறிதும் மனம் சகியாமல் வீரபத்திரரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, சிறியோர் செய்த பிழையைப் பொருட்படுத்துவது தங்களுக்கு அழகல்ல. இவர்கள் எளியவர்கள். தயை செய்து இவர்கள் செய்த அபராதத்தை மன்னித்து அருள் செய்யவேண்டும் என்று பலவாறு துதிசெய்ய, அவரும் மனமிரங்கினார். அதனால் முன்பு போரில் இறந்தவர்களும் அஞ்சியோடியவர்களும் நீங்க, மற்றவர்கள் வீரபத்திரமூர்த்தியைத் துதித்தார்கள்.

சிவரூபியே! சிவபக்தனே! சூலபாணியே! ஆயிரஞ் சிரங்களையுடையோய் யக்ஞனைச் சங்கரித்தவனே! எண்ணற்ற தேவர்களை அழித்தவனே! தக்ஷனின் தலையை அறுத்தவனே! திரிநேத்திரங்களையுடையவனே! சந்திரனைக் காலால் தேய்த்தவனே பானுவின் பற்களை உடைத்தவனே! சூரியனின் கண்ணைத் தொலைத்தவனே! விஷ்ணு முதலியோரை பிணியூட்டிய கன்யனே! அரமகளிரைத் தண்டித்தவனே! சரணம் சரணம் க்ஷமிக்க வேண்டும்! என்று பலவகையாகத் துதித்து, நாங்கள் அறிவீனர்களாகச் சிவ நிந்தை செய்த தக்ஷனுடன் சேர்ந்த குற்றத்தை பொறுத்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள். வீரபத்திரர் தயாள பூதராய்த் தம் கணங்களால் அவர்களைப் பிணைத்த தலைகளை அவிழ்க்கச் செய்து, அவர்களையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானை அடைந்து சேவித்தார். தேவர்களும் பணிந்தார்கள். அப்போது மஹாதேவராகிய சாம்பவமூர்த்தி, மதியீனர்களே! இதுவரை நீங்கள் செய்த குற்றங்களைப் பொறுத்தோம் என்று கூற அவர்கள் மரணமுற்று மகிழ்வு பெற்று, ஆர்ப்பரித்துக் குதித்துக் கூத்தாடினார்கள். சிவபெருமான் மகிழ்ச்சியுடன் விளங்குவதைக் கண்ட கமலாசனன், அவரைப் பணிந்து சர்வலோக சரண்யா! என் தந்தையே! உம் திருவடியில் வந்து நிற்கும் அடியார்கள் செய்த குற்றத்தை மன்னித்து அருள் செய்தீர். இனி வீரபத்திரரால் உயிர் இழந்த தேவ, யட்ச, கின்னரர், கருட, சித்தவித்தியாதர ரிஷிகள், தவசியோர் யாவரும் உயிர் பெற்றெழும்படித் திருவருள் புரியவேண்டும் என்று பிரார்த்திக்க சிவபெருமான் தேவியின் திருமுகத்தைப் பார்த்துப் புன்னகை செய்து அவ்வாறே ஆகுக! எனத் திருவாய் மலர்ந்தருளினார். விஷ்ணு முதலாக ஸ்தம்பித்திருந்தவர்களும் கரஞ்சிரம் முதலியன அறுபட்டு வீழ்ந்து கிடந்தவர்களும் இறந்தவர்களும் சுவாதீனப்பட்டும் தம் தம் அவயவங்கள் வரப் பெற்றும் உயிர்பெற்றும் ஒன்றுகூடி, இந்திரன் முதலிய திக்குபாலகருடன் சிவ சன்னதியை அடைந்து சாஷ்டாங்கமாகப் பணிந்தனர். பிரமன், சிவபெருமானை நோக்கி, எந்தையே! எல்லோரும் உயிர்பெற்று எழுந்து விட்டார்கள். இவர்களுக்கு இத்தகைய வினை விளைவித்த கொடியோனாகிய தக்ஷனையும் எழுப்ப வேண்டும்! என்று வேண்ட சிவபெருமான் மனங்களித்து, தக்ஷனுடைய மதியின்மையை எல்லோருக்கும் விளங்கச் செய்யும் பொருட்டு, அவனுக்கு ஆட்டுத்தலை அளித்து எழுப்பினார். தக்ஷன் சங்கரனைப் பணிந்து தலை வணங்கி நின்றான். சிவபெருமான் அவன் மீது தயை வைத்து, அவனையும் ஒரு கணநாதனாக்கினார்.

விஷ்ணுமூர்த்தி, பிரமனுடன் வந்து பணிந்து, அடியேன் செய்த அபராதத்தை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் விஷ்ணுவை முதலாகவுடைய தேவர்களையும் முனிவர்களையும் நோக்கி, நீங்கள் அனைவரும் செய்த குற்றங்கள், உங்கள் அறியாமையால் செய்தவையாகையால் அவற்றை நாம் மனம் பொறுத்தோம். இனி எதற்கும் அஞ்ச வேண்டாம்! என்று அவர்களைத் தேற்றிப் பரிபூரணமான கடாக்ஷம் செய்து விடை கொடுத்து அனுப்ப, அவர்கள் வீரபத்திரரையும் பணிந்து தங்கள் நகரங்களை அடைந்தார்கள். பிறகு உமாதேவி, வீரபத்திரரையும் காளிகாதேவியையும் தம் அருகே அழைத்து, அன்போடு அணைத்து சந்தோஷ வார்த்தைகளைக் கூறிப் பலவரங்கள் அளித்து வீரபத்திரருக்கு ஓர் உலகம் அளித்து விடுத்தாள். சிவபெருமானும் உமாதேவியாரும் தாம் தக்ஷயாகத்துவம்சம் செய்ததைக் காணும்படித் தங்கிய இடத்திலிருந்த ரைப்பிய முனிவருக்கு அனுக்கிரகஞ் செய்து, அந்தர்த்தானமாய்ச் சென்றார்கள்.

21. தேவி கவுர நிறம் பெற்றது

முனிவர்ளே! முன்பு மந்திரமலையானது சிவபெருமான் பார்வதி தேவியாரோடும் கணேசர் முதலிய புதல்வர்களோடும் பரிசனங்களோடும் தன்னிடத்தில் வசிக்க வேண்டும் என்று நெடுங்காலம் பெருந்தவஞ் செய்தமையால், அந்தத் தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் உமாதேவியாருடனும் பிரமத் கணங்களுடனும் அந்தப் பர்வதத்தை அடைந்தார். அந்த மந்திர மலையினுச்சியில் வெண்ணிலா விளங்கும் தோற்றமானது அது சிவ கடாக்ஷத்தால் பெற்ற தாவள்யமான முத்துக்குடை போன்றிருந்தது. அந்த மலையில் உச்சியிலிருந்து அருவி ஆறுகளிழியுங் காட்சியானது. அதற்கு மலைகளில் தலைமை, சிவ கடாக்ஷத்தால் உண்டாவது பற்றி மங்கல ஸ்நானஞ் செய்தது போலிருந்தது. அந்த மலைச் சாரலில் கவரிமான்கள் தங்கள் வால்களை அசைத்துக் கொண்டிருந்தது, சாமரை வீசுவது போல இருந்தது. அந்தச் சிறப்புடைய மந்திரமலையில் சிவபெருமான் உமாதேவியாரோடும் கூடி, அநேக காலம் வாழ்ந்திருந்தார். அப்படியிருக்கும்போது சும்பன் நிசும்பன் என்ற இரண்டு அசுரர்கள் பிரமனை நோக்கிப் பஞ்சாக்கினியின் நடுவேயிருந்து அநேக காலம் அன்ன பானாதிகளை வெறுத்து, அருந்தவஞ் செய்தார்கள். அவர்களது தவத்தையும் திடபக்தியையும் கண்ட பிரமன் அவர்கள் முன்பு தோன்றி, தவத்தால் இளைத்த அவர்களுடைய உடலைத் தம் கரத்தால் தடவிப் பூரிக்கச் செய்து, நீங்கள் எதைக் கருதி இவ்வாறு தவஞ்செய்தீர்கள்? அதைச் சொல்லுங்கள் என்றார். சும்ப நிசும்பர்கள் பிரமனைச் சாஷ்டாங்கமாக வணங்கி, இருகரங்களையும் விரித்து, கடவுளே! நாங்கள் இருவரும் இறவாமல் இருக்கவேண்டும். அதற்குரிய வரத்தைத் தர வேண்டும் அல்லது சர்வலோக மாதாவாகிய உமாதேவியாரின் தேகத்திலிருந்து ஒரு கன்னிகை தோன்றின் அந்தக் கன்னியால் நாங்கள் இறக்க வேண்டும். அவ்வாறின்றி உலகினரால் ஒருவராலும் நாங்கள் இறவாத வரத்தைக் கொடுத்து அருள் செய்ய வேண்டும் என்று கூறிப் பணிந்து வரங்கேட்டார்கள். பத்மாசனன் அவ்வாறு நிகழும் என்று கூறித் தம்முலகம் சென்றார். அந்த வரத்தால், தருக்கு எய்திய தானவர்கள் இருவரும் தேவர் உலகத்தையடைந்து, இந்திரனை எதிர்த்து, அதனை முறியடித்து, அவனுடைய வளங்களையெல்லாம் கொள்ளையடித்து அமரர்களையும் அரம்பையர்களையும் ஏவலர்களாகித் தேவலோகம் முழுமையும் தங்கள் கட்டளைக்கு உட்பட்டு நடக்கும்படிச் செய்து பெரும் புகழோடு வாழ்ந்தார்கள்.

தேவேந்திரன் முதலிய தேவர்கள் படுகின்ற துன்பங்களைக் கண்ட மலரோன் மனம் வருந்திச் சிவபெருமானிடம் சென்று அவரை வணங்கி, ஜகதீசா! கொடியோராகிய சும்பநிசும்பர்கள் செய்யும் உபத்திரவங்களைத் தாங்க முடியாமல் தேவேந்திரன் முதலியவர்கள் தவிக்கிறார்கள். தேவலோகமும் பூவுலகமும் பெரும்பாடுபடுகின்றன. அமரரும் அரம்பையரும் சிறையிலடைப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் அந்த அசுரர்களை அழிக்கத் தேவரீர் திருவுள்ளஞ் செய்தருள வேண்டும். அதாவது உமாதேவியாரின் திருமேனியில் ஒரு கன்னிகை தோன்றி அவர்களை அழித்தாலன்றி அவர்கள் ஒருவராலும் இறவாதிருக்கும்படியான வரத்தை நானே கொடுத்தேன். அவர்களை விரைவில் அழிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார். பிறகு பெருமானிடம் விடைபெற்றுச் சென்றார். பகவான் பிரமன் சொல்லியதை கருத்தில் கொண்டு, உமாதேவியரை நோக்கி, ஹே காளீ (கருநிறமுடையவளே) வருக! என்று அழைத்தார். அதற்கு உமாதேவியார் ஸ்வாமீ! நீரும் அடியாளும் சிறு பிள்ளைகளல்ல. இன்று தான் திருமணஞ் செய்துகொண்டு, நூதனமாகவா ஒருவரையொருவர் முகம் பார்த்தோம்? நன்றாக இருக்கிறதே! இப்போது தான் உமக்கு என்னிடத்தில் வெறுப்பு உண்டாயிற்றோ? உலகத்துப் பிராணிகளையெல்லாம் சையோகத்தில் அழுந்தச் செய்யும் மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து, காவியாடையும் உத்திராக்ஷ மாலையும் பிரம கபாலங்களும் அணிந்து தவவுரு கொண்ட தங்களுக்கும் காம விருப்பம் உண்டாகியிருப்பது விநோதமே! இவ்வளவு காலம் என்னுடன் கூடியிருந்தும், இப்போது நான் அழகற்ற கருநிறமுடையவள் என்றும் இகழ்ந்து விட்டீர்கள்! அங்கக் குறைபாடுகள் ஏதுமின்றி உத்தம லக்ஷணங்கள் எல்லாம் அமைந்திருந்தாலும், சிறந்த ஆடையாபரணங்களை அணிந்திருந்தாலும், அத்தனை அழகுகளையும் கணவன் கண்டு களிக்காத மனைவியானவள், பெண்களில் பதரைப் போன்றவள் என்பதில் ஐயமில்லை. தங்களுக்கு என் கறுமை நிறத்தில் விருப்பமில்லாமல் வெறுப்பு ஏற்பட்டதால் இனி இந்த காருருவை ஒழிக்கும்படித் தங்களைக் குறித்துப் பெருந்தவஞ்செய்து, தங்கள் திருவருளாலேயே பொன்னிற மேனியை அடைந்து தங்களுக்கே மனைவியாகிறேன் என்று கூறிக் கண்களிலிருந்து முத்துக்கள் தெறித்தாற்போல கண்ணீர் உகுத்தாள். தேவியின் துயரைக் கண்ட சிவபெருமான், மனஞ் சகியாமல் தேவியைத் தம் இருகரங்களாலும் அணைத்துக் கொண்டு, பெண்ணே நீ வருந்த வேண்டாம். நான் விளையாட்டாக அழைத்தேனே தவிர, வேறொன்றுமில்லை. இதற்காக நீ கவலைகொள்ளவும் வேண்டாம். தவமும் செய்யவும் வேண்டாம். நாம் இருவரும் கலந்திருந்தாலன்றி உலகம் விருத்தியடையாது. ஆகையால் நீ உன் கோபத்தைத் தணித்துக் கொள்ளவேண்டும் என்றார்.

உமாதேவி தன்னை அணைத்துக்கொண்டிருந்த ஸ்வாமியின் கரங்களை மெல்ல நெகிழ்த்தி, இப்படித்தான் தாங்கள் காலமெல்லாம் என்னை ஏத்தி, ஆசை போலக்காட்டி, உமது காலத்தைக் கழிக்கிறீர் ஒன்றும் வேண்டாம். நான் இனி வேறொரு தேகத்தைப் பொன்னிறமாக அடையவேண்டுகிறேன் என்று கூறி, சிவபெருமானை முறைப்படி வலம் வந்து வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டு இமயமலையை அடைந்தாள். அங்குள்ள ஓர் ஏரிக்கரையில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதை வேதாகம விதிப்படி பூஜை செய்து ஒரே மனதாக நித்திரை, அன்னம், ஆகாரம் முதலானவை நீக்கி அவ்விடத்தில் தவத்தில் அமர்ந்தாள். அம்மை தவஞ் செய்த இடத்தின் அருகே ஒரு பெரிய வேங்கைப் புலி, கைகால்களில் இயக்கமில்லாமல், பசியால் வருந்திக்கொண்டிருப்பதைத் தேவி கடைக்கண் சாத்தியருளினாள். அதனால் அந்தப் புலி தன் ஆணவம் முதலிய மலங்களும் பிணிகளும் நீங்கிப் பேருணர்வு பெற்றுப் பண்டைய ஞானத்துடன் இவள் பரமேஸ்வரி என்றும் தெரிந்து கொண்டு இங்கு நான் வந்ததும் தேவி இங்கு வந்ததும் என் பாக்கியம் தான்! என்று பரம சந்தோஷமடைந்தது.

முனிவர்களே! தேவியின் செயல்கள் இப்படியிருக்க சும்ப நிசும்பர்கள் செய்யும் உபத்திரவங்களைச் சகிக்காத தேவர்கள் பிரமதேவனை நோக்கி, பிதாமகனே! எங்களையும் படைத்து இந்த அசுரர்களுக்குப் பெரும் வரங்களையும் கொடுத்து எங்களைத் துன்புறுத்துவது உமக்கு நன்றோ? இத்துயர் நீங்க அருள்புரிய வேண்டும்! என்று முறையிட்டார்கள். பிரமதேவன் அமரர்களை யெல்லாம் அழைத்துக்கொண்டு இமயமலையை அடைந்தான். இமயத்தின் உச்சியில் ஏறித் தேவி செய்யும் தவத்தின் மகிமையால், அங்கிருந்த மரங்கள் ருதுவேற்றுமையில்லாமல் மொட்டு மலரும் காயும் கனியும் நிரம்பப்பெற்றும், பசும்புற்கள் செழித்து வளர்ந்தும் மிருகங்கள் வேற்றுமையன்றி உறவு கொண்டும் எல்லா வனப்புகளும் பொருந்தி விளங்கியது. அந்தத் தபோவனத்தை அடைந்து, பிரமனும் அவருடன் வந்த அமரர் கூட்டத்தாரும் பணிந்தார்கள். தேவர்களும் வேதங்களும், முனிவர்களும் தவஞ்செய்து தரிசித்தற்கு அரிய சர்வ ஜகன்மாதாவாகிய நீ யாது கருதித் தவஞ் செய்கிறாய்? தாயே! தவச்செயல் என்பது இத்தகையது நியமங்களையுடையது என்று எங்களைப் போன்றோர் உணர்வதற்காக இவ்வாறு தவஞ் செய்து காட்டுகிறாயோ? உன் உள்ளத்திலுள்ள கருத்து என்ன? என்று கேட்டார்கள். உமாதேவி பிரமனை நோக்கி, யான் எனது கரிய உருவத்தை ஒழித்துப் பொன் உருவை அடைய விரும்பித் தவஞ் செய்கிறேன். இது விஷயத்தில் உன் கருத்து என்னவோ? என்று கேட்டாள்.

பிரமதேவன் தேவியைப் பணிந்து, தாயே! இதற்காகவா தவஞ் செய்வது? நீ உன் சரீரத்திலிருந்து நீங்கிப் பொன் உருவையடைந்து, முன்பிருந்த உருவால் ஒரு கன்னிகையைப் படைத்து, இந்தத் தேவர்களை அலைத்துக் கொண்டிருக்கும் சும்ப நிசும்பர்களைத் தொலைத்து, அவர்களால் தேவர்களுக்கு உண்டான துயரை அகற்றி, தேவர்களுக்குச் சுகத்தை உண்டாக்குவாயாக! என்றார். உடனே உமாதேவி தன் காருருவை விட்டுப் பொன்மலை போன்ற பேருருவங் கொண்டாள். அப்போது தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள். ஈஸ்வரி, வீழ்த்திய அந்தக் கரியவுருவம் எட்டுக் கரங்களையும் பாசம், அங்குசம், தண்டம், சூலம், வாள், வேல், வஜ்ஜிரம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி, உலகிலுள்ள கொடியவர்களைச் செருக்கும் ஆற்றலுடைய துர்க்கையாகி, ஈஸ்வரியைப் பணிந்து அவள் எதிரில் கை கட்டி நின்றாள். அப்போது பரமேஸ்வரி, அத்துர்க்கையை நோக்கி, அடிப்பெண்ணே! நீ பிரமனுடைய கட்டளையை மீறாது, அவன் சொற்படி நின்று, நன்மை செய்வது என்பதைப் பற்றிச் சிறிதும் அறியாத அசுரர்களை ஹதஞ் செய்து, தேவர்களுக்கு நன்மை செய்வாயாக! என்று உரைத்தாள். அப்போது பிரமன், ஒரு சிங்கத்தைச் சிருஷ்டி செய்து, அவளுக்கு வாகனமாகக் கொடுத்து, ஆகாயமளாவிய விந்திய மலையில் வாசஞ் செய்து, தேவமானவர்களின் மாமிசத்தை யுண்டு, உலகத்தைத் துன்புறுத்தும் அசுரர்களை அழிக்க வேண்டும் என்று கூறினார். துர்க்கை உடனே தன் சிங்க வாகனத்தில் ஏறியமர்ந்து அநேகம் குழைகளையுடைய விந்திய மலையை அடைந்து, அசுரர்களுடன் பலவகையாகப் போர் செய்து, அவர்களை வென்று, தேவர்கள் தினந்தோறும் தன்னைப் பணி செய்து, வாழ்த்தும்படி வசித்திருக்கிறாள்.

22. கவுரி மந்திரமலையை அடைந்தது

முனிவர்களே! உமாதேவியார் பிரமனை நோக்கி, பிரமனே! இதோ இருக்கும் புலியானது யான் தவஞ்செய்ய இந்த இடத்திற்கு வந்தது முதல் என்னை விட்டுப் பிரியாமல் இங்கேயே ஒரு காவல்காரனைப் போல இருந்து வருகிறது. இந்தப் புலி, நோயுற்று கால்களில் வலுவிழந்து, நடக்கவும் சக்தியற்று துன்பத்தால் தவித்தது. அதைக்கண்டு மனஞ்சகியாத நான், அதன் நோயை அகற்றினேன் என்று கூறினாள். பிரமன் தேவியைப் பணிந்து, அன்னையே! இஃது ஒரு ஓர் புலி என்று எண்ணற்க. ஓர் அசுரன் தன் மாயையால் புலியுருவ மேற்று இருக்கிறான். பாம்புக்கும் பால் வார்த்தாற்போல இந்த தீயவனுக்கு அருள் செய்து விட்டாயே! இது தர்மமல்ல. இவனால் யாருக்கு என்ன தீங்கு விளையுமோ? என்றான். அதற்கு ஸ்ரீகவுரி, பிரமனை நோக்கி, அசுரனாக இருந்தால் தான் என்ன? அவனும் தமது படைப்புத்தானே! எந்தப் பிறவியாக இருந்தாலும் அந்தப் பிறவி துயரத்தால் அவதிப்படும் போது, அந்த அவதியைத் தன் வினையே என்று கருதாமல், அந்த வினையையும் என்னால் நீக்கமுடியும் என்று பூரணமாக நம்பி வேண்ட, அந்தப் பிராணியைக் கண்ட நான். மனங்கனிந்து இந்த வேங்கைவரி புலியின் நோயைத் தீர்த்தேன், என்று திருவாய் மலர்ந்தருளினாள். அதைக் கேட்ட பிரமன், தேவியைப் பணிந்து, தேவி! உன் திருவருள் இந்தக் கொடிய பிராணியின் மீது பரிபூரணமாக இருப்பதை அறியாமல் நான் கூறியதை மன்னித்தருள்வாயாக! உனது திருக்கமலத் தாள்களில் பக்தியுடையவர்கள், பெரும் கொடும்பாவிகளேயினும், சிறிதும் துக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள். உன் திருவடிக்கு அன்பு செய்யாதவர்கள் மகா புண்ணியசாலிகளாயினும், எண்ணற்ற யாக தவங்களைச் செய்தவர்களாயினும், இவற்றால் சிறிதும் பயனடைய மாட்டார்கள்! உன் திருவருள் பிரகாசமுண்டானால் துரும்பு கூட பிரம பட்டத்தை அடையும். உன் திருவருளில்லையென்றால் பிரமனும் தன் பதவியை இழந்து துரும்பாவான். நீயே உலக சிருஷ்டியாதி செயல்களுக்கெல்லாம் ஏகத்தலைவி! ஆகவே, உன் கிருபை இருந்தால், இப்புலியுருவைக் கடையேறச் செய்க! என்றார். பிறகு, தேவியிடம் விடைபெற்று, தம்முடன் வந்த தேவர்களுடன் தன் மனோவதி நகரை அடைந்தார். பிறகு கவுரி தேவி அந்தப் புலியைத் தன்னுடன் வரச் செய்து, தன்னைக் குமாரியாகக் கொண்ட தாய் தந்தையரிடம் விடைபெற்று, அநேகம் மங்கையர்கள் பணி செய்யத் தனது பொன்னிற மேனியுடன் மந்திர மலையை அடைந்தாள்.

23. சோமநந்தியின் சரிதம்

முனிவர்களில் சிறந்தவர்களே! தேவி கவுரி மந்தர மலையை அடைந்த காலத்தில், சிவபெருமான் முதலிய யாவருக்கும் உண்டான மகிழ்ச்சியை என்னால் வர்ணித்துச் சொல்ல இயலாது. கவுரி மந்தரமலையை அடைந்ததுமே, நந்திதேவர் முதலிய சிவகணநாதர்கள் அங்கு சென்றார்கள். பானுகம்பன், சங்குகன்னன், குண்டோதரன் முதலிய கணத்தலைவர்களும் பலகோடி உருத்திரர்களும் தேவியைப் பணிந்து, பற்பல வாத்தியங்களை முழக்கினார்கள். தேவ துந்துபிகள் முழங்கின. அப்சர மங்கையர் நடனமாடினர். நாரதர் வீணாகானஞ் செய்தார். தேவ முனிவர் வாழ்த்தினார்கள். அரம்பையர்கள் மங்களகீதங்களைப் பாடினார்கள். இவ்விதமாக அனைவரும் மகிழ்ந்திருக்க, தேவி கவுரி, சிவசன்னதிக்குள் நுழைந்து சிவபெருமானைப் பணிந்து எழுந்தாள். அப்போது சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து, தேவி கவுரி! இப்போது தான் உன் கோபம் மாறியதோ? என் சொல்லுக்கும் கோபம் கொள்ளலாகுமோ? நாம் இருவருமே மாறுபட்டோமானால் உலகம் யாவுமே அக்கினியால் அழிந்துவிடும். என்னுடைய உருவமோ அக்கினி! உன் உருவமோ சந்திரன்! நீ என்னுடன் கூடியிருப்பதே உலக விருத்திக்குக் காரணமாகும். அக்கினியும் சோமனும் சம்பந்தப்பட்ட இந்த உலகம், சொல்லும் பொருளுமாகிய இவற்றின் தன்மையேயாகும். அவற்றில் நீ சொல்மயம். நான் பொருள்மயம். நீயே வித்தை! யானோ அந்த வித்தையடையும் ஞானம்! நீயே என் ஆணையாகையால், நீ என் ஆணையைக் கடந்தால் நான் ஈஸ்வரனாக விளங்க முடியுமா? இத்தகைய நியாயமிருக்க, நீ என்னை நீங்கும் வகையாது! தேவர்கள் துயரம் அகன்று, அவர்களுக்குச் சுகமுண்டாகும்படி விநோதார்த்தமாக உன்னைக் காளீ என்று அழைத்தேன். அதற்கு நீ சினந்து கொண்டாய்! அதுவும் உலகத்திற்கு உதவியாயிற்று என்று கூறினார்.

அதைக் கேட்ட கவுரி மனங்களித்து புன்னகை செய்து தான் தவஞ்செய்யும் போது துர்க்கை தோன்றியதும் அவளால் சும்பநிசும்பர்களைக் கொன்று, தேவர்கள் மகிழ்ச்சியடைந்ததும், அவனைப் பிரமனது கட்டளையில் இருத்தியதும் ஆகிய அனைத்தையும் கூறி, பிறகு சிவபெருமானைப் பணிந்து, எம்பெருமானே! நான் தவஞ்செய்து கொண்டிருக்கும் போது, இந்தப் புலி என்னைப் பணிந்து, எனக்குக் காவல்புரிந்து, தான் உஜ்ஜீவிக்கக் கருதி என் அருகிலேயே வசித்திருந்தது. இதை நான் என்னுடன் கொண்டு வந்தேன். ஆகையால் இதுவும் ஒரு கணநாதனது நம் நந்தியோடு வாயிற்படிக் காத்துக் கொண்டிருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமான் அந்தப் புலியின்மீது மனமிரங்கி அருள்செய்ய, அது கஞ்சுகம் பூண்டு, பொற் பிரம்பேந்தி, வாளும் தரித்து, நந்தி தேவருடன் வசித்து, அதிகாரஞ் செலுத்தும் சோம நந்தி என்ற பெயரைப் பூண்டது. அதைக் கண்ட அமரர்களும் முனிவர்களும் ஆனந்தமடைந்தார்கள். உமாதேவியும் பெரிதும் மகிழ்ந்தாள். சிவபெருமான் தேவி கவுரிக்கு, அநேக ஆபரணங்களும் மலர் மாலைகளும், பீதாம்பரங்களும் அணிவித்து, தேவியுடன் கூடி வாழ்ந்திருந்தார் என்று வாயுதேவன் கூறினார்.

24. உலகம் அக்கினி சோமமயம்

இந்தப் பிரபஞ்சம் அக்கினி சோமாத்மகமாகவும், சப்தார்த்த ஸ்வரூபமாகவும் இருக்கிறது என்றும் சிவாக்ஞையே சிவசக்தி என்றும், சிவபெருமான் உமாதேவிக்குக் கூறியதாகச் சொன்னீர்களே! அந்த விஷயத்தைச் சற்று விரிவாகச் சொல்ல வேண்டும் என்று முனிவர்கள் கேட்க, வாயுதேவன் சொல்லத் துவங்கினார்.

முனிவர்களே! அக்கினி என்பது ஈஸ்வர சம்பந்தமான கோர தேஜோரூபமாகும். சோமம் என்பது சிவசக்தியின் அமிர்தரசஸ்வரூபம். அக்கினியில் அமிர்தம் உண்டாவது அதனால் அந்த அக்கினி விருத்தியடைதலும், அந்த அக்கினியிலேயே அவியைச் சொரிவதால் பயிர் உண்டாக மழை பொழிதலுமாகும். இந்தக் காரணங்களால் உலகம் அக்கினி சோமாத்மகம் ஆகும். அக்கினியானது அமிர்தத்துடன் ஸ்தூலசூஷ்மங்களாகி, நெருங்கிய பூதம் முதலியவற்றுடன் பொருந்திச் சாரமாகவும் ஒளியாகவும் இருக்கும். ஒளி சூரியனும் அக்கினியுமாகும். அமிர்தமோ சந்திரனும் அலைகள் பொருந்திய தண்ணீருமாகும். அவை அவ்வாறே உலகுக்குப் பயன்படும் அக்கினியே சிவமயம். அமிர்தமே சக்திமயம். இந்த அக்கினி சோமாத்மகமாகவே உலகம் விளங்கும். அக்கினிகளிலிருந்து அமிர்தம் தோன்றி, அந்த அக்கினியிலேயே ஒழுகும். ஆகையால், உலகம் சிவசக்திமயமாகும். அந்த அக்கினியால் உலகத்தை (நான் என்ற அகப்பற்றையும் எனது என்ற புறப்பற்றையும்) நீறுப்படுத்திய பஸ்மத்தை அணிந்தவர்கள். பாவம் ஒழிந்து சிவமயம் ஆவார்கள். மூலாதாரத்திலுள்ள அக்கினியால் தேகத்தைக் கொளுத்தி அந்தச் சாம்பலை மேலேயுள்ள அமிர்தத்தால் நனைத்தவர்கள் மரணத்துயரம் ஒழிந்து நித்திய முக்தியை அடைவார்கள். யோகப் பயிற்சியையுடைய பெரியோர்கள் தங்கள் யோக வல்லமையால் சூரியகலை, சந்திரகலை என்னும் இரண்டையும் அக்கினி கலையினால் ஒடுக்கி, அந்த அமிர்தத்தைப் புசித்து, நித்தியானந்த மோக்ஷத்தை அடைவார்கள்.

25. ஷடத்துவாக்கள்

வாயுதேவன் மேலும் கூறுகிறார், முனிவர்களே! இந்த ஜகம் முழுவதும் சப்த அர்த்த ஸ்வரூபமாய் இருக்கிறது என்று சொல்லும் விஷயத்தில் ஷடத்துவாக்களின் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறேன். கேளுங்கள். சப்தம் இல்லாத பொருள் உலகத்தில் கிடையவே கிடையாது. அர்த்தம் இல்லாத சப்தமும் கிடையாது. ஆகையால் அந்தந்தச் சப்தங்களுக்கு அந்தந்த அர்த்தங்கள் அநாதியாகவே, சங்கேதங்களாக விளங்குவன. இது பிரகிருதியின் பரிணாமம். இது சப்தம் என்றும் அர்த்தம் என்றும் இரண்டு பிரிவுகளாக இருக்கும். பரமாத்ம ஸ்வரூபிகளான சிவ சக்திகளின் விபூதியாகத் தெரிந்து கொள்வீர்களாக. இதில் சப்தஸ்வரூபமான விபூதியானது ஸ்தூலம் என்றும் சூஷ்மம் என்றும் பரை என்றும் மூன்று வகைப்படும். இவற்றில் ஸ்தூலம் என்பது கேட்பது, சூஷ்மம் என்பது மனத்திலே சிந்திப்பது. பரை என்பது சிந்தனையற்று இருப்பது. அந்தப் பரையானது கிரியாசக்தி, ஞானசக்தி, இச்சா சக்தி (செயலாற்றல், அறிவாற்றல், விழைவாற்றல்) என்று மூவகைப்படும். அதில் பரையானது சிவதத்துவத்தை ஆஸ்ரயித்தலால் கிரியாசக்தியும், யோக சம்பந்தத்தினால் ஞான சக்தியும், ஈஸ்வர இச்சையுடன் கூடியிருப்பதால் இச்சா சக்தியுமாகும். இந்தப் பரையானது மூன்று சக்திகளாக இருப்பதால் சக்தி தத்துவம் என்ற பெயரைப் பெற்று, எல்லா காரணங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. இதற்குக் குண்டலினி என்றும் மாயை என்றும் தூய்மையான முக்கிய மார்க்கம் ஸ்வரூபமாகவுள்ள சதி என்றும் பெயர்களுண்டு. அந்தப் பராசக்தியே ஆறு அத்துவாக்களாக விளங்கும். அவற்றுள் சப்த அத்துவாக்கள் மூன்று. அர்த்த அத்துவாக்கள் மூன்று. இந்த ஷடத்துவாக்களும் லயபோகாதி காரங்களைச் செய்வன. சப்த அத்துவாக்கள் மந்திர அத்துவா, பத அத்துவா, வர்ண அத்துவா என்ற மூன்றாகும். அர்த்த அத்துவாக்கள், புவன அத்துவா, தத்துவ அத்துவா, கலை அத்துவா என்ற மூன்றாகும். அத்துவாக்கள் ஆறும் ஒன்றுக்கொன்று வியாப்பிய வியாபகத்துவம் உடையன. மந்திரங்கள் பதங்கள் ஆக்கப்படுவதால் மந்திர அத்துவாவைப் பற்றிய பதாதத்துவா வியாபரித்துள்ளது. பதங்கள் வர்ணத்தால் (எழுத்தால்) சேர்க்கப்படுவதால் பதாத்துவாவை வர்ணாத்துவா வியாபரித்துள்ளது. அண்டார்ந்தர்க்கதமான அநேக புவனங்களிலும் சிவாகமங்களில் சொல்லப்பட்டுள்ள அநேக புவனங்களிலும் வர்ணங்கள் பிறத்தலின், வர்ணாத்துவாவை புவனாத்துவா வியாபரித்துள்ளது. சாங்கியயோகப் பிரசித்தமான தத்துவங்களிலும் சிவாகமத்திற்கு பிரசித்தமான தத்துவங்களிலும் அநேக புவனங்கள் பிறத்தலின் புவனாத்துவாவைத் தத்துவாத்துவா வியாபரித்துள்ளது. தத்துவாத்துவாவைக் கலாத்துவா வியாபரித்துள்ளது.

பிரகிருதியானது நிவ்ருத்தி பிரதிஷ்டை வித்தை சாந்தி சாந்தியதீதை என்ற ஐந்து கலைகளாகி, ஷட் அத்துவாக்களையும் வியாபரித்துள்ளது. சிவத்ததுவமானது தன் சக்தியால் எல்லாத் தத்துவங்களையும் வியாபரித்துள்ளது. சிவ சொரூபத் தாலேயே மண்ணானது குடமாவதுபோல பிரபஞ்சத்தை நடத்துகிறது. சிவதத்துவமே ஷடத்துவாக்களால் அடையத் தக்கது. சக்திகளில் ஐந்து வகையை இனிச் சொல்லுகிறேன். நிவிருத்தியானது ருத்திர பதம் வரையும் சுத்தியாம் வித்தையானது வித்யேசுரபதமளவும் சுத்தியாம். சாந்தியானது அத்துவா அந்தமளவும் சுத்தியாம். சாந்தியாத்தையானது பரம வியோமமளவும் சுத்தியாம். இந்த ஐந்து கலைகளால் எல்லா பிரபஞ்சமும் வியாபரித்துள்ளது. ஆகையால் சாதகர்கள் இந்த விஷயங்களை நன்றாக அறிய வேண்டும். அத்துவாக்களின் தன்மையறியாது. முக்தி பெறக்க ருதுபவன் பயனடையமாட்டான். சக்தியின் வியாப்தியை உணராது தத்துவங்களும் அவற்றின் வியாப்தியும் விசுக்தியும் தெரியமாட்டாது. பரமசிவனுடைய வாமபாகத்தில் எல்லாவற்றுக்கும் காரணபூதமாக விளங்கும் சக்தி என்பது சிவ சம்பந்தமான ஆக்ஞை. இது ஆன்மாவின் மாயையும் அல்ல, விகாரமுமல்ல! பந்துவும் அல்ல முக்தியும் அல்ல. ஆனால் பந்த முக்திகளை உண்டாக்குவதும் சகல பாக்கியங்களையும் கொடுப்பதும், ஈஸ்வரனை ஒருபோதும் பிரியாததும், சிவத்தின் பாவானு குணமாகத் தருமங்களை ஆஸ்ரயிப்பதுமாகும். அந்தச் சர்வேஸ்வரனுக்கு அந்தச் சக்தியாகக் கிரகஸ்தன் என்றும், அந்தச் சர்வேசனால் அதற்குக் கிருகிணி என்றும் எப்போதும் பெயர்கள் விளங்கும். இந்த இருவருக்கும் எல்லா பிரபஞ்சமும் பிள்ளைகள். ஆகையால் ஜகம் முழுமைக்கும் சிவபெருமானே கர்த்தா என்றும் சிவசக்தியே காரணம் என்றும் இருவருக்கும் பேதம் உண்டாயிருக்கும். சிலர், சிவபெருமானே ஆண் பெண் வடிவாக இருக்கிறான் என்றும், சிலர் சூரியனிடத்தில், ஸம்வாய சம்பந்தத்தால், எப்படிப் பிரபை வேறுபட்டிருக்குமோ, அப்படியே பரமசிவனிடத்தில் சித்ரூபமான பராசக்தி வேறாக விளங்கும் என்றும் சொல்வார்கள். ஆனால் பரமசிவனோ யாவற்றுக்கும் காரணன். அவனுடைய ஆக்ஞாரூபமே பரமேஸ்வரி. ஆக்ஞா ரூபமான பரமேஸ்வரியால் பிரேரிக்கப்பட்ட சிவசம்பந்தமான மூலப்பிரகிருதி அழிவற்றதாக இருக்கிறது. அதற்குத்தான் மஹாமாயை என்றும், மாயை என்றும், பிரகிருதி என்றும் மூன்று குணங்கள் விளங்கும். அது காரிய பேதத்தால், மேலே சொன்ன மூவகைப் பேதமுற்று ஷடத்துவாக்களை உண்டாக்குகிறது. சப்தார்த்த சொரூபமான இந்த அத்துவா ஆறுவகைப்பட்டு ஜகத் ஸ்வரூபமாக இருக்கிறது. இதையே எல்லா சாஸ்திரங்களும் விரித்துக் கூறி நூல்கள் பெருகியுள்ளன.

26. சிவ விஜயம்

இவ்வாறு வாயுதேவன் சொல்லி வரும்போது, முனிவர்கள் அவரை நோக்கி, தேவரே! பிரமனின் மாணவராகிய தாங்கள் கூறியயாவும் எங்களுக்குப் பெருமகிழ்ச்சியையும் பேரறிவினையும் ஊட்டுவித்தன. தாங்கள் கூறிய இயல்பினையுடைய எல்லாம் வல்ல இறைவனாகிய சிவ பகவான் பற்பல கர்மங்களுக்காகப் பற்பல திருவுருவங்களைப் பெற்றிருத்தல் தகுதி தானே என்பதையும் எங்களுக்கு விளங்கும்படி உரைத்தருள வேண்டும்! என்று கேட்க வாயுதேவன் கூற துவங்கினார்.

முனிவர்களே! காளகண்டமும் சடாடவியும் சர்ப்ப ஆபரணமும் புலித்தோலுடையும் யானைத்தோற் போர்வையும் சடையும் சந்திர சூடமுமுடைய அந்தப் பகவான் எந்தக் காலத்திலும் அனைவருக்கும் திருவருள் புரிந்துகொண்டேயிருப்பவன் அல்லன். எண்ணற்றோரை அவரவர் முறை தவறி நடக்கக் கண்டு, தண்டித்தும் இருக்கிறான். அவன் செய்த விஜயங்களில் சிலவற்றைச் சொல்கிறேன் கேட்பீர்களாக.

முன்பு ஒரு காலத்தில் பிரமனும் விஷ்ணுவும் ஒருவருக்கு ஒருவர் போர் செய்து தங்களுக்குள் ஒருவருக்கொருவரே பெரியோர் என்று உலகை அழிக்க எத்தனிக்க சிவபெருமான் அவர்களுடைய விவாதத்தை ஒழிக்கக் கருதி அங்குப் பிரசன்னமாக பிரமதேவன் தன் அகந்தையால், நீ எனது புருவ மத்தியில் உதித்த புதல்வன் அல்லவோ! என்று கூறி நடுத்தலையால் சிரிக்க, அவனுடைய நடுத்தலையைத் தன் நக நுனியால் கிள்ளி எறிந்தார். அன்று முதல் பிரமன் நான்முகனானான். ஒரு காலத்தில் தானவர் தலைவனான ஹிரண்ய கசிபு என்பவன் தேவர்களுக்கு துன்பமிழைத்து வந்தான். அப்போது திருமால் நரசிங்கமாக அவதாரஞ் செய்து தம் கணக்கற்ற கைகளால் அவனைப்பற்றி மடியில் வைத்துக் கொண்டு அவன் உடலைக் கிழித்து குடலை மாலையாக அணிந்து, உலகம் அழியவும் தேவர்களும் முனிவர்களும் நடுங்கவும் அனர்த்தம் செய்வதைக் கண்டு தேவர்கள் முறையிட அப்பொழுதும் சிவபெருமான், எண் நாற்புள்ளாகிய சரபத் திருவுருவம் எடுத்து, அந்தச் சிங்கத்தைப் பற்றி அதன் சர்மத்தை உரித்து ஆடையாக அணிந்தார். சிவபிரான் தன் மருமகன் என்றும் ஜகன் மாதாவாகிய பார்வதி தன் மகள் என்றும் இறுமாப்படைந்த தக்ஷனையும் அவனது யாகத்தையும் அங்கு வந்த தேவர்களையும் அழித்தார். மேலும் தராகன் புதல்வர்கள் மூவரும் பிரமனிடம் வரம் பெற்ற சிறப்பால் பொன், வெள்ளி, இரும்பாலாகிய மூன்று மதில்களுடைய முப்புரத்துடன் நினைத்த இடத்திற்கு சஞ்சரித்து ஆங்காங்குள்ள பிராணிகளையும் மரஞ் செடி கொடிகளையும் அழித்து வருவதைக் கண்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் பூமியே இரதமாகவும் சாரதியாகமுடைய நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாகவும் ஆதிசேடனே நாணாகவும், விஷ்ணுவே பாணமாகவும் அக்கினியே அதன் கூர்முனையாகவும், வாயுவே அந்த அம்பிற்றொடுத்த சிறகாகவும் பிறதேவர்களைப் பிற கருவிகளாகவுங்கொண்டு திரிபுரத்தை அணுகினார். அப்போது தேவர்கள் யாவரும் நம்மால் தான் திரிபுரம் அழிக்கப்படும் என்பதாகத் தனித்தனியே நினைத்து இறுமாந்திருந்தனர்.

அதையுணர்ந்த சிவபெருமான் தம் நெற்றிக் கண்ணாலேயே அந்த முப்புரங்களையும் எரித்தார். இதுவேயல்லாமல் தேவலோகத்தில் இருந்த சிவ பசுக்கள், ஓயாமல் பாலை ஒழுக்கிப் பயன்படக் கருதும்போது, சங்கரன் அவற்றை உற்றுப் பார்த்து எரித்துவிட்டார். ஜலந்தரன் என்ற அசுரன் ஒருவன் பிரம, இந்திராதி தேவர்களை வென்று, சிவபெருமான் ஒரு கிழவரைப் போல உருவங்கொண்டு அவனை வழிமறித்து எங்கே செல்கிறாய்? என்று கேட்டு அறிந்து, நீ சிவனை வெல்வதற்கு முன்பாக, நீ உண்மையில் அத்தனை வலுவுடையனவன்தானா என்று பரீட்சித்துப் பார்த்துக் கொள்ள வேண்டாமா? என்று கூறி தம் பாதத்தால் நிலத்தில் வளையமாகக் கீறி, இதை எடுத்து உன் தலைமீது வைத்துத் தாங்குவாயானால் நீ பலவான் என்பதில் சந்தேகமாகாது! என்றார். ஜலந்தரன் பூ! இதுதான் பெரிது! என்று இறுமாப்புடன் அதைத் தோண்டியெடுத்து மார்பிலும் தோளிலும் அணைத்து, சிரத்தின் மேல் அமர்த்த, அது சக்கராயுதமாகி, அவன் தலையிலிருந்து இரு பிளவாக அவனுடலைப் பிளந்தது. அதனால் ஜலந்தரன் ஒழிந்தான். மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர், சிவபூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது அவருடைய வாணாள் கழிய இயமன் அவரை அணுக, அவர் சிவபெருமானை வேண்ட, அப்பொழுது அந்த இலிங்கத்திலிருந்தும் தோன்றி தம் கையில் இருந்த சூலாயுதத்தினால் இயமனின் மார்பில் குத்தி அவனை உதைத்து ஒழித்தார். ஒருசமயம் விஷ்ணுவை ஆதிசேஷனால் பிணித்து நூறு யோஜனை தூரத்தில் சென்று விழும்படி வீசி எறிந்தார். துர்க்கா தேவியால் சும்பர் நிசும்பர் முதலான அசுரர் தொகுதியை தொலைத்தார். முருகபெருமானைப் புதல்வனாகப் பெற்றுத் தாரகாசுரன் முதலிய கொடியவர்களை ஒழித்தார். அந்தகாசுரனுடைய மார்பில் சூலாயுதத்தால் குத்தி, அவனைத் தோளின் மேல் தாங்கி அநேக காலம் வருத்தினார். கயிலாய கிரியை அடியோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு செல்லக் கருதிய இராவணாசுரனை ஒரு விரலினால் மலையின் கீழே அழுத்திப் பெருந்துயரடையச் செய்தார். இவை சிலவேயாகும். இவை போன்ற எண்ணிறந்த விஜயங்களைச் செய்துள்ளார் என்று கூற முனிவர்கள் வாயுதேவனை நோக்கி, தாங்கள் சிவபெருமான் செய்த தண்டங்களை எல்லாம் சொன்னதைப் போல, சிவபெருமான் எந்தெந்த வகையில் அருள் செய்தாரோ அவற்றையும் விரிவாகக் கூற வேண்டும் என்று கேட்டனர். வாயுதேவன் மகிழ்ச்சியுடன் சொல்லத் துவங்கினார்.

27. சிவபெருமானின் அருளியல்

முனிவர்களே! பாவத்தை ஒழிக்கத்தக்க அற்புதமான விஷயத்தை நீங்கள் கேட்டீர்கள். அந்த சிவபெருமானை, உருவமாக விளங்கும்போது காணமுடியுமேயல்லாமல், அருவமாக இருக்கும்போது அறியவல்லார் யாவர்? வேதசாரத்தை உணர்ந்த அறிஞர்களே! விறகில் பற்றி எரிகிற தீயைக் கண்டு தீயின் ஸ்வரூபாதிகள் இத்தன்மை என்று உணரலாமேயல்லாமல் அந்த விறகில் அந்தர்க்கதமாக விளங்கும் அக்கினியைக் காண வல்லவர்கள் இல்லை. பரம்பொருளாகிய சர்வேஸ்வரன், அருவமாதலேயன்றி ஆன்மகோடிகள் ஈடேறும் பொருட்டு, சதாசிவன், மஹேசன், உருத்திரன், விஷ்ணு, பிரமன் முதலிய மூர்த்தியாகித் திருவருள் செய்கிறார். அந்தக் கடவுள், பிரமன் முதலிய ஜீவ கோடிகள் செய்த பாவங்கள் ஒழியும்படி, அவரவர் குற்றங்களுக்கு ஏற்பத் தண்டஞ் செய்கிறார். இந்த நியாயத்தால் அல்லவோ, அரசர்கள் குற்றஞ் செய்தவர்களைத் தண்டிக்கிறார்கள். குற்றஞ் செய்தோரைத் தண்டிப்பதால் மன்னருக்குச் சிறிதும் தோஷமில்லை. பிதாவானவன் தவறான காரியங்களைச் செய்த புதல்வரைத் தண்டிப்பது, அவர்கள் மீது வைத்த அன்பினாலன்றி வேறல்ல. அது போலவே, கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் அவர்களுடைய பந்தங்களை அகற்றும்படித் தண்டனை செய்து, தம் கருணை நோக்கத்தைச் செலுத்துகிறார். துன்பஞ்செய்யும் கட்டி முதலிய நோயுற்றவனுடைய அந்தப் பாகத்தை அரிந்தாவது, சுட்டாவது வைத்தியன் அதை ஒழிப்பது போல தயாமூர்த்தியாகிய சங்கரன், ஆன்மாக்களுடைய விலை ஒழியும்படி வருத்திச் செய்துப் பிறகு அந்த வருத்தத்தையும் ஒழிப்பார். பல மூர்த்திகளாக, அந்தப் பகவான் விளங்கினாலும் ஆசை முதலிய தீமைகளை அடையார். குற்றமுள்ள பொருள்கள் யாவற்றையும் கொளுத்திச் சாம்பலாக்கித் தீயினுக்கு அந்தக் குற்றஞ் சிறிதும் இல்லாது இருப்பதுபோல, வினைச்சம்பந்தத்தை ஒழிக்கும் ஈஸ்வரனுக்குச் சிறிதும் வினை என்பதில்லை. நெருப்பானது இரும்பு முதலிய உலோகங்களைச் சுடுவது போல ஈஸ்வரன் எல்லா மூர்த்திகளையும் தத்தமக்கு இயன்றவாறு ஒழுகச் செய்கிறார். அந்தப் பகவான் சர்வ வியாபியாக எல்லாப் பொருள்களிலும் விளங்குகிறார். ஆகையால் அந்த ஈஸ்வரனை மண், கல், மரம், மணி முதலிய எல்லாப் பொருள்களிலும் பூஜிக்கத்தகும். தத்தமக்கு இயன்ற ஒரு பொருளில் அர்ச்சனை செய்தவர்கள் இஷ்டச் சித்திகளை அடைவார்கள்.

சித்தும் அசித்துமாகிய பொருட்களை ஒன்று சேர்த்தாலும் அவற்றுக்குள்ள குணங்கள் மாறாது. சூரியன் உதிக்கத் தாமரை விரிதலும் அதனோடு உள்ள பிற மலர்கள் விரியாததைப் போலும் என்று உணர்வீர்களாக; மல சம்பந்திகளுக்கு சிவபெருமான் ஒருபோதும் மோட்சங் கொடுக்கமாட்டார். மலத்தை ஒழித்தவர்களுக்கே சிவபிரான் மோக்ஷத்தைக் கொடுப்பார். ஆனால் சிவபெருமானுக்கு அந்த மலங்கள் இல்லை. மலமானது ஆன்மாக்களுக்கே உரியது. ஆகையால் சிவன் இன்ப துன்பங்களை அனுபவிக்க மாயா சம்பந்தத்தால் கருமங்களைச் செய்யும் கர்மமாயை கக்ஷன் அனுபந்தமான சம்சாரம் ஜீவனுக்கேயன்றி சிவனுக்குச் சிறிதுமில்லை. ஜீவனுக்குச் சதச்சித்தமாகத் தானே வரத்தக்கதோர் மலமுள்ளது. அது, தானே வருமானால் காரண நிமித்தமாக வரக்கூடியது. அந்தக் காரணம் ஒன்றேயாயினும் பல சக்திகளுடையதாக இருக்கும். கர்மமாயைகள் சிவனுக்குச் சிறிதும் இல்லை. ஆன்மாவானது யாவருக்கும் சமானமாக இருந்தாலும், சிலர் பந்தமுடையவர்களும் சிலர் முக்தர்களும் சிலர் பரர்களுமாக இருக்கிறார்கள். சிலர், லயபோகாதிகாரிகளாய் ஞான ஐஸ்வரியாதிகளின் தாரதம்மியங்களை அடைகிறார்கள். சிலர் மூர்த்திகளாகிறார்கள். இன்னுஞ் சிலர், சிவ சொரூபிகளாய் அத்துவாக்களின் சிரசில் இருப்பார்கள். சிலர் மகேசர்களாக அத்துவாக்களின் இடையில் இருப்பார்கள். சிலர், உருத்திரர்களாய் அத்துவாக்களின் அடியில் இருக்கிறார்கள். மாயா சம்பந்தமற்றுச் சிவசன்னிதியிலிருப்பவர்களில், ஆன்ம ஸ்வரூபம் கீழேயும் அந்தராத்ம ஸ்வரூபம் இடையிலும் பரமாத்ம ஸ்வரூபம் மேலேயும் விளங்கிப் பிரம, விஷ்ணு, ருத்திரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.  இந்த மூன்று பதவிகளில் அநேகர் வசிக்கிறார்கள். சாந்தியாதீதப் பதவியில் சைவர்களும் சாந்திபதத்தில் மகேசர்களும் வித்தியாபதத்தில் உருத்திர பக்தர்களும் பிரதிஷ்டா பதத்தில் விஷ்ணு பக்தர்களும் நிவர்த்தி பதத்தில் பிரம பக்தர்களும் வாழ்வார்கள். இவையே, தேவயோனி அஷ்டகமாகும். இவையே உச்ச ஸ்தானத்தில் இருப்பவனும் உத்தமமாகும். ஒன்பதாவது மானிடயோனி. அது மத்தியிலிருப்பதும் மத்திமமும் ஆகும். விலங்கு யோனிகள் ஐந்து வகை, அவை தாழ்வில் இருப்பனவும் அதர்மமும் ஆகும். ஆகப் பசுவர்க்கம் பதினான்கு வகைப்படும். ஜீவனுக்கு மலத்தின் ஏற்றக்குறைவால் இத்தகைய யோனிகள் உண்டாகின்றன. சம்சார காரணமான மலங்கள் ஆமம் என்றும் பக்குவம் என்றும் இருவகைப்படும்.

ஆமலத்தால் ஜீவர்களுக்குத் தாழ்ந்த யோனியும் பக்குவ மலத்தால் உத்தம யோனியும் சம்பவிக்கும். பசுக்களாகிய ஜீவர்களுக்கும் ஒரு மலமுடைமையைவிட இரு மலமுடைமை தாழ்ந்தும் மும்மலமுடைமை தாழ்ந்தும் உத்தம மத்திம அதர்மர்களாகிறார்கள். இந்த மூவகையினரையும் விடச் சாம்பவமூர்த்தியே சிறந்தவர். உருத்திராத்மகமான இந்த ஜகமானது உருத்திரனால் அதிஷ்டிக்கப்பட்டுள்ளது. ஜீவஸ்வரூபமான எல்லாவற்றையும் சிவபெருமானே அதிஷ்டித்துள்ளார். அண்டாந்தமான பூமியானது சதருத்திரர்களால் அதிஷ்டிக்கப்பட்டுள்ளது. மாயாந்தமான அந்தரீக்ஷமானது. அமரேசனாதி உருத்திரர்களால் அதிஷ்டிக்கப்பட்டுள்ளது. அங்குஷ்ட மாத்திரமான ஜீவர்களால் யாவும் வியாப்தமாக இருக்கின்றன. மகா மாயா வசதிகளான புவனாதிபதிகளும் அத்துவாக்களில் உள்ளவர்களுமாகிய தேவர்களால் யாவும் அதிஷ்டிக்கப்படா விட்டாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரால் அதிஷ்டிக்கப்பட்டும் யாவும் சாம்பவமூர்த்தியால் அதிஷ்டிக்கப்பட்டும் விளங்கும். இத்தகைய மூவகை மலசம்பந்தத்தால் ஜீவர்களுக்குச் சம்சாரம் என்ற நோய் உண்டாகிறது. இந்தச் சம்சார ரோகத்தை ஒழிப்பதற்குச் சர்வேசனுடைய அநுக்கிரகத்தால் உணடான சிவஞானமே பரம அவுஷதம். நோயாளிக்கு வைத்தியம் அந்த நோயைத் தீர்ப்பது போல பரமகாருண்யனான சர்வேஸ்வரன் சமுசாரரோகிக்கு நியாமகராக இருந்து அநாயாசமாக அதை ஒழித்துச் சுகப்படுத்துகிறார். துக்கம் உண்டாவதற்குச் சம்சாரமே காரணம்.

சுகமும் துக்கமும் சுபாவமாகவே உண்டாகும். ரோகமானது வைத்தியனால் உண்டாக்கப்படாதது மேலன்றி, சர்வேசனாலேயே சம்சார பந்தங்கள் உண்டாக்கப்பட்டாலும் அந்தப் பகவானுக்கு ஒரு தோஷமும் உண்டாகாது அவை சுபாவமாகும். சம்சார காரணமான மலமே மாயை. அது அசேதனமானது அது இரும்பைக் காந்தம் இழுப்பதைப்போல சிவபெருமான் கருதியவுடனே ஸ்வயமாக தொடருகிறது. அந்த மாயையை ஒழிப்பதற்கு சாந்நித்யமே காரணம். சிவபெருமானுடைய கட்டளையில்லாமல் யாதொரு காரியமும் நிகழமாட்டாது. யாவுஞ் சர்வேசனால் செய்யப்பட்டாலும் சுக துக்கங்களுக்காக நிந்திக்கப்படத்தக்கவர் அவர் அல்ல. சர்வேசனுடைய சக்தியே சர்வதோமுகியாக உள்ளது. அந்தச் சக்தியால் பிரபஞ்சம் யாவும் வியாப்தமாக இருந்தாலும் சர்வேசன் தூஷிக்கத் தக்கவரல்லர். அநாதியாக எல்லாப் பிரபஞ்சமும் ஈஸ்வரனுக்கு அடங்கியதாகவும் ஈஸ்வர ஆக்ஞா ரூபமான சக்தியையே பிரபுவாக உடையதுமாகையால் ஈஸ்வரன் தூஷிக்கப்பட மாட்டார். ஈஸ்வர சக்தியினாலுண்டாகும் மல சம்பந்தமான சம்சார பந்தத்தை அந்த ஈஸ்வரனாலேயே உண்டாகிறது என்றும் அவரே தூஷிக்க தக்கவர் என்றும் நினைக்கிற துன்மதியையுடையவன், அஞ்ஞானத்தால் நசிக்கிறான் என்று வாயுதேவன் முனிவர்களுக்குச் சொன்னான். அந்தச் சமயத்தில் சத்தியமான வாக்கு ஒன்று ஆகாயத்திலிருந்து இது சத்தியம் ஓம் என்று உண்டாயிற்று. அதைக் கேட்ட முனிவர்கள் மகிழ்ச்சியடைந்து சந்தேகம் தெளிந்து வாயுதேவனைத் துதித்தார்கள். வாயுதேவன், அம்முனிவர்கள் இன்னும் திடமாக உணரவில்லை என்று கருதி மேலும் தொடர்ந்தார்.

முனிவர்களே! ஞானமானது பரோக்ஷம், அபரோக்ஷம் என்றும் இருவகைப்படும். அதில் பரோக்ஷஞானம் நிலையற்றது அபரோக்ஷஞானம் நிலையானது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அநேக காரணங்களால் உண்டாவது பரோக்ஷஞானம். சிறப்பான அனுஷ்டானத்தால் உண்டாவது அபரோக்ஷ ஞானம். அபரோக்ஷ ஞானத்தைவிட்டால் மோக்ஷம் ஒரு காலத்தும் சித்திக்கமாட்டாது என்று மனதில் கொண்டு, ஜாக்கிரதையாக அனுஷ்டானங்களையே முயன்று சம்பாதிக்க வேண்டும்.

28. பாசுபதயோகமும் அஷ்டநாமமும்

முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, சுவாமி! எந்த விதமான சிறந்த அநுஷ்டானத்தால் அபரோக்ஷஞானம் உண்டாக்கி முக்தி எய்துமோ, அந்தப் அபரோக்ஷஞானம் அடைவதற்கு, சாதனமான அனுஷ்டானம் யாது? அதை அடியார்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். வாயுதேவன் தொடர்ந்தார்.

முனிவர்களே! சிரேஷ்டமான சைவ தர்மங்களே, சிறந்த அனுஷ்டானமாகும். அந்தச் சைவ தர்மத்தாலேயே அபரோக்ஷ ஞானம் உண்டாகி, முக்தியைக் கொடுக்கவல்ல, சிவபெருமானைப் பிரத்தியக்ஷமாகக் காணக்கூடும். அந்தச் சைவதர்மம் கிரியை, தவம், ஜபம், தியானம், ஞானம் என்று ஐந்து வகையாக விளங்கும். பரோக்ஷ, அபரோக்ஷ ஞானங்களை ஏற்படுத்தும் சைவதர்மங்கள் பரம் என்றும் அபரம் என்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ளன. தர்ம சப்தத்திற்கு இவ்விதமாகப் பொருள் கொள்ளுவதற்கு வேதமே பிரமாணம், வேதங்களின் முடிவில் பரமான தர்மமும் பூர்வ பாகங்களில் அபர தர்மங்களும் சொல்லப்பட்டுள்ளன. ஞானியரே பரதர்மத்தை அனுஷ்டிப்பதற்கு உரியவர்கள். யாவரும் அபரதர்மத்தைச் சாதாரணமாக அனுஷ்டிக்கக் கூடியவர்கள். அபரதர்ம அனுஷ்டானமே பரதர்மம் கைகூடுவதற்கு முக்கியமான மார்க்கம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. பரதர்ம சிரேஷ்டானுஷ்டான சப்தத்திற்குப் பொருள் என்று இதிகாச புராணங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்தத் தர்மம், சைவ ஆகமங்களில் அங்க, உபாங்கங்களாக பிரசித்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆகமங்களில் சிவகாமங்கள் வேதத்தைத் தழுவினவும் சுதந்திரமானவையுமாக இருக்கும். சைவ ஆகமங்கள் காமிகாதி இருபத்தெட்டு வகையை உடையன. அவற்றுள் காமிகாதி முதலில் கூறிய பத்தும் சிவபேதம் என்றும் விஜயம் முதலிய பதினெட்டும் உருத்திர பேதம் என்றும், அவை சித்தாந்தம் என்றும் சொல்லப்படும். உக்கிருஷ்டமான பாசுபத  விரதத்தையும் ஞானத்தையும் பிரதிபாதிக்கும் பரதர்மமானது சதகோடியாக விவரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த யுகங்களில் ஆன்மாக்கள் உய்ய, பரமசிவனே ஆசாரியனாக இருந்து பிரவர்த்திக்கச் செய்கிறார். அநேகமாக விரிந்துள்ள ஆகமங்களை ருரு, ததீசி, அகஸ்தியர், உபமன்யு என்ற நான்கு மாமுனிவர்களே உலகில் பிரபலப் படுத்தினார்கள். அவர்களுடைய பரம்பரையில் வந்த அநேக ஆயிரவர்கள் பாசுபத ஆசாரியர்களாய்ப் பின்னர் பரவினார்கள். அந்த ஆகமங்களில், பரமதர்மமானது, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகையாக விரித்துரைக்கப்பட்டுள்ளது. பாசுபதயோகமானது திடமாகச் சிவபெருமானைத் தரிசிக்கச் செய்யும் வல்லமையை உடையது. ஆகையால், பாசுபத யோகமே மிகச் சிறந்த அனுஷ்டானம், அதுவே பரமதர்மம்.

முனிவர்களே! அந்தப் பாசுபத யோக சித்திக்காகச் சிவபெருமானே, ஆன்மாக்கள் மீதுள்ள கருணையினால், எட்டுத் திருநாமங்களைச் சொல்லியிருக்கிறார். அவற்றாலேயே பாசுபத யோகத்தை அடையலாம். பாசுபத யோகத்தாலேயே பரமேஸ்வரனைத் தரிசிக்கலாம். சிவபெருமானுடைய தரிசனத்தால் மாயை விலகும். அதனால் ஜீவன் முக்தனாகலாம். அந்த நாமாஷ்டகமாவது சிவ; மகேஸ்வர; ருத்ர; விஷ்ணு பிதாமஹ; ஸம்ஸார வைத்திய; ஸர்வக்ஞ பரமாத்மா! இந்த எட்டுப் பெயர்களுமே.

பிதாமஹ, ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ; பரமாத்மேநி முச்யத; எப்போதும் சர்வேஸ்வரப்பிரதி பாதகமாகும். அவற்றில் முதலில் கூறிய ஐந்தும் சாந்திய தீத பதத்திலுள்ள சதா சிவாதியர்களின் பெயர்கள். இவை சர்வேஸ்வரனுடைய பரியாய நாமங்கள். ஏனைய மூன்றும் மாயாவலம்பன வசத்தால் உண்டாயின. இவை ஈசனுக்கே உரிய சிறப்புப் பெயர்கள். அவை யாவை எனில்.

அநாதிமலஸம் ஸ்லேக்ஷ ப்ராக பாவர்த ஸ்வபாவத:
அத்யந்த பரிஸுத்ராத்மே த்யதோயம்ஸிவ உச்யதே:
அதவாசேஷ கல்யாண குணைககந ஈஸ்வர:
சிவ இத்யுச்ய தேசத்பி ஸ்ஸிவதத்வார்த்த வேதிபி:
த்ரயோவிம்ஸதி தத்வேப்ய: பரா ப்ரக்ருதிருச்யதே
ப்ரக்ருதேஸ்து பரம்ப்ராஹு: புருஷம் பஞ்சவிம் ஸகம்யம்:
வேதா நௌஸ்வரம் ப்ராஹுர் வாச்ய வாசகபாவத:
வேதைக வேதய யாதாத்ம் யாத் வேதாந்தேச: ப்ரதிஷ்டித்:
ஸரவ ப்ரக்ருதெனலீநோ போக்தாய: ப்ருக்ரு தேர்மத:
தஸ்யப்ரக்ருதி லீநஸ்ய: பரஸ்ஸ மஹேஸ்வர:
தததீ ப்ரவ்ருத்தித்வாத் பிரக்ருதே: புருஷஸ்யச
அதவாதி குணந்தத்வம் மாயே யமிதமவ்யயம்
மாயாந்து ப்ரக்ருதிம் விந்த்யாந் மாயி தந்து மஹேஸ்வரம்
மாயா வி÷க்ஷப கோநந்தோ மஹேஸ்வர சமந்வயாத்
ருத்து: கம்து: துஹே துர்வா: தத்ரா வயதிந: ப்ரபு:
ருத்ர இத்யுச்ய தேஸத்பி: சிவ: பரமகாரணம்
சிவதத்வாதி பூம்யந்தம் சரீராதி கபி திச
வ்யாப்யாதி திஷ்டதிஸிவ ஸததோருத்ரா இதஸ்தத:
ஜகத: பித்ரு பூதாநாம் சிவேமூர்த் யாத்மநாமபி
பித்ரு பாவேந ஸர்வேஷாம் பிதாமஹ உதீரிதா
நிதா நஜ்ஞோயதா வைத்யா ரோகஸ்ய விநிவர்தக:
உபாயைர் பேஷஜைஸ் தத்வ ஸ்வயபோதாதி காரத:
ஸம்ஸராஸ்யெ ஸ்வரோநித்யம் ஸமூலஸ்ய நிவர்தக:
ஸம்ஸார வைத்ய இத்யுக்தஸ் ஸர்வதத்வார்த்த வேதிபி:
தஸார்த்தஜ்ஞா நஸித்யர்த மிந்த்ரியேவே ஷுஸத்ஸபி
த்ரிகால பாவிநோபாவாந் ஸ்தூலாந் ஸூக்ஷ்மாநஸேஷத
அணவோ நைவ ஜாநந்தி மாயாணவ மலாவ்ருதா:
அஸத் ஸ்வபிச ஸர்வேஷு ஸர்வந்த் தஜ்ஞாநஹேதுஷு
யத்யதா வஸ்திகம் வஸ்து தத்த தைவ சதாசிவ:
அயத்நேநைவ ஜாநாதி தஸ்மாத் ஸர்வஜ்ஞ உச்யதே
ஸர்வாத்மா பரமைரேபிர் குணர்நித் யஸமந்வயாத்
ஸ்வஸ்மாத் பராத்ம் விரஹாத் பரமாத்மா சிவஸ்வயம்
நாமாஷ்டகம் இதம் சைவ லப்த் வாசார்ய ப்ரஸாதத:

மேலே சொன்ன நாமாஷ்டகத்தின் தமிழ்ப் பொருள் பின்வருமாறு: அநாதியாகவுள்ள மல சம்பந்தத்தை எக்காலத்திலும் இல்லாமையாலும் அத்யந்த பரிசுத்தனாக இருப்பதாலும் சிவன் என்றும் அல்லது அநந்த கல்யாண குணம் உடையவனாகையால் சிவன் என்று சொல்லப்படுகிறார். இருபத்து மூன்று தத்துவங்களுக்கும் பரமானது பிரகிருதி. அந்த இருபத்து நான்காவது தத்துவத்துக்கும் பரமாகவுள்ளவர் புருஷன். எவரை வாச்சியவாசக பாவத்தால் வேத ஆரம்ப காலத்தில் ஓம் என்ற பிரணவ ஸ்வரூபமாகவும் வேதாந்தங்களின் வேதத்தாலேயே தெரியத்தக்கவனாகவும் சொல்லப்படுகிறாரோ, அவரே பிரகிருதியின் லீனமாய் அதை அநுபவிக்கிறவராகவும் இருந்து பிரகிருதி புருஷர்களைத் தம் சுவாதீனஞ் செய்து கொண்டதால் அவர் மஹேசன் எனப்படுகிறார் அல்லது திரிகுண ஸ்வரூபமான அநாதியான மாயையே பிரகிருதி. அந்த மாயையைச் சுவாதீனம் செய்து கொண்டு மாயையை ஒழித்து, அநந்தராக இருப்பவர் மகேசன் எனப்படுவார், பக்தர்களின் துக்கத்தையும் துக்க காரணத்தையும் போக்கடித்துச் சுகத்தைக் கொடுப்பதால் உருத்திரன் எனப்படுகிறார். சிவ தத்துவம் முதல் பூமி வரையில் எல்லாப் பொருட்களிலும் வியாபித் துள்ளமையால் விஷ்ணு எனப்படுவார். உலகத்துக்குப் பிதுர்ப்பூதமான பிரமாதிகளுக்குப் பிதாவாகையால் பிதாமகனெனப்படுகிறார். ரோகமுடையவனுடைய ரோகங்களைக் கண்டுபிடித்து, அதற்குத் தக்க அவுஷதங்களைக் கொடுத்துப் பரிகரிக்கும் வைத்தியனைப் போல ஜீவனுடைய சமுசார ரோகத்தைக் கண்டு தம் கருணையால் அந்த சமுசார ரோகத்தைச் சிவஞான யோகாதி அவுஷதங்களைக் கொடுத்து திரிகரிப்பதால் சமுசார வைத்தியன் எனப்படுகிறார். சப்தாதி விஷய ஞானசித்திக்காக ஞானேந்திரிய கர்மேந்திரி யங்களில் திரிகாலங்களிலுமுள்ள ஸ்தூல சூக்ஷ்ம பாவங்களை மல சம்பந்தமுடைய ஜீவர்கள் உணரமாட்டார்கள். எல்லா ஞானங்களுக்குங் காரணமான ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் ஆகிய யாவுமே இல்லாவிட்டாலும் வஸ்துவின் உண்மையான ஸ்வரூபத்தை அநாயாசமாகத் தெரிந்து கொள்ள வல்லவராகையால் ஸர்வக்ஞன் எனப்படுகிறார். சர்வக்ஞத்வ ரதி குணங்கள் எப்பொழுதும் தன்னிடத்தில் விளங்குவதாலும் தன்னைவிடப் பரம்பொருள் இல்லாமையாலும் பரமாத்மா எனப்படுகிறார். இத்தகைய சிறப்புடைய இந்த நாமாஷ்டகத்தை உத்தம ஆசிரியனாலடைந்து, நிவர்த்தியாதி கலைகளிலுள்ள திருநாமங்களாகத் துதித்து உச்சரித்தவன் சகல சுகத்தையும் அடைவான்.

ஆவர்த்திதங்களான சிவாதி ஐந்து திருநாமங்களால் சுவாஸ்வாதிஷ்டான கிரமமாக ஸ்மரணை செய்து, அந்தந்த குணங்களை அதிக்கிரமிக்காது சோதனை செய்து, பிரேரிப்பிக்கப்பட்ட பிராண வாயுவால் பீடிக்கப்பட்ட அபானவாயு ஊர்த்த ஸ்தானத்தை அடையத்தக்க உத்தூதத்துடன் கூடியதும், உத்தூதமல்லாததுமாகிய ஐந்து திருநாமங்களை இதயம், கண்டம், தாலு, புருவ மத்தியம், பிரமாந்திரம் இவ்விடங்களிலிருக்கும் நிவர்த்தியாகிய கலா கிரந்திகளை முறைப்படி சுத்திசெய்து, மனம் புத்தி, வாசனை பஞ்சதன்மாத்திரைகளின் சம்பந்தமான புரியஷ்டதேகத்தையும் சுத்திசெய்து, பன்னிரு தளத்துடன் கூடிய கமலமலரின் பொருட்டில் விளங்கும். சந்திரனுக்கு மேற்பாகத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சிவ தேஜஸின் நடுநாடியாகிய சுழுமுனை நாடியால் தன் ஆத்மாவை அடையச் செய்து, சக்தி சம்பந்தமான அமிர்த மழையால் நனைக்கப்பட்ட தேகமுடையவனாய்த் தன் ஆத்மஸ்வரூபத்தை இறக்கி, துவாதசதன சுவேதக மலத்துள்ள சந்திரன் விடப் பரமாக இருக்கும். அமிர்தாத்ம ஸ்வரூபனும் நிர்மலனும் மனோகர ஸ்வரூபியும் சுத்தஸ்படிக மயமானவனும் பிரசன்னனும் குளிர்ந்த காந்தியை உடையவனுமாகிய, அர்த்த நாரீஸ்வரனை இதயத்தில் நாமாஷ்டகத்தால் தியானித்து, பக்தியாகிய மலர்களால் அரிச்சித்துப் பிராணாயாமம் செய்து மனதை நிர்மலமாகச் செய்து, அஷ்டநாமங்களை ஜெபித்து, நாபியில் நாமாஷ்டகத்தால் ஆகுதிசெய்து, பூர்ணாகுதியும் முடித்து, வணங்கி, எட்டுவகை மலர்களால் புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து, கையிலே ஜலம் கொண்டு தன் ஆத்மாவை நிவேதித்து நிலத்தின் மீது நீரை விடுக்க வேண்டும். இந்த வகையாகப் பாசுபத யோகத்தை செய்தவனுக்கு அதிவிரைவில் சிறந்த பாசுபதஞானம் உண்டாகி, முக்தியானது கைகூடும். இந்த விஷயத்தில் சிறிதும் சந்தேகமில்லை என்று வாயுதேவன் சொன்னார்.

29. பாசுபத விரதம்

எல்லாப் பாவங்களையும் ஒழிக்கத் தக்கதும் வல்லதும், அதர்வசிரோபநிஷத்தில் சொல்லப்பட்டதுமாகிய பாசுபத விரதம் மிகவும் இரகசியமானது. அதை உங்களுக்குச் சொல்லுகிறேன் கேளுங்கள். அதற்கு காலம் சித்திரை மாதப் பூரணை இடம் சிவ ஸ்தலமானது சிவாலயமாவது புண்ணிய ÷க்ஷத்திரமாவது தக்கதாகும். அத்தகைய இடத்தில் அதற்கு முற்பட்ட திரயோதசியில் நீராடி அனுஷ்டானத்தை முடித்து ஆசாரியாரை அடைந்து அவரைப் பூஜித்து பணிந்து, சிறப்பான பூஜைகளைச் செய்து வெள்ளை ஆடை தரித்து, வெண்மலர் மாலை அணிந்து, திருவெண்ணீறும் சந்தனமும் பூசிக்கொண்டு, கிழக்கு அல்லது வடக்குமுகமாக தர்ப்பாசனத்திலிருந்து, தர்ப்பையால் பவித்திரம் அணிந்து மும்முறைப் பிராணாயாமம் செய்து சிவபெருமானையும் உமாதேவியையும் குரு உபதேசப்படி தியானஞ் செய்து, இந்த மஹாபாசுபத விரதஞ் செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு தீøக்ஷ வகித்து, அது முதல் தன் ஆயுள்வரையில் பாசுபதவிரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அல்லது பன்னிரண்டு ஆண்டுகளாவது, ஆறு ஆண்டுகளாவது, மூன்றாண்டுகளாவது, ஓராண்டுகளாவது, ஆறு மாதங்களாவது, மூன்று மாதங்களாவது, ஒரு மாதமாவது, பன்னிரண்டு நாட்களாவது, ஆறு தினங்களாவது, மூன்று தினங்களாவது ஒரு நாளாவது அனுஷ்டிக்க வேண்டும். பிறகு அக்கினியைக் கொண்டு வந்து சமஸ்கரித்து, விரஜா ஹோமகிரமமாக நெய், சமிதை, செரு முதலியவற்றை ஓமம் செய்து, பூர்ணாஹுதி முடித்து, தத்துவ சுத்தியை உபதேசித்து, மேலே சொன்ன ஸமிதை முதலியவற்றால் பஞ்சாக்ஷர மந்திரத்தை கொண்டு ஹோமம் செய்து என் தேகத்தில் உள்ள தத்துவங்கள் எல்லாம் சுத்தமடையுமாக என்று ஸ்மரணை செய்து சுத்தம் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்பவன், பரிசுத்தனாகிறான். புனிதமான கோமயத்தைக் கொண்டுவந்து உருட்டி அபிமந்திரித்து அக்கினியில் வைத்து அதனருகையே இருந்து இரவைக்கழித்து, சதுர்த்தசி தினமாகிய மறுநாள் காலையில், தன் நித்தியக்கடன்களை முடித்து, அன்று முழுவதும் உபவாசமிருந்து மறுநாள் பூரணையில் தன் செய்கடன்களை நிறைவேற்றி, அக்கினியை அவித்து, தான் நீற்றிய நீற்றினையெடுத்து, சடையுடனாவது முண்டிதம் செய்து கொண்டாவது, குடுமி வைத்துக்கொண்டவது நீரில் மூழ்கி, சர்வ விரக்தனாயின் திகம்பரனாகவாவது மனம் திடப்படாவிடில் ஒரு காவி வஸ்திரமாவது நார்மடியாவது, பருத்தியாடையாவது தரித்து தண்டம் ஒன்றைக் கையில் பற்றி, அரையில் முஞ்சிப் புல்லால் திரித்த நாண் அணிந்து, கை கால்களைச் சுத்தஞ்செய்து இருமுறை ஆசமனீயஞ் செய்து விரஜாக்கினியால் செய்த திருநீற்றையெடுத்து, உச்சிமுதல் பாதம் வரையில் உத்தூளனஞ் செய்து, விதிப்படி திரிபுண்டரம் அணிந்து மனதில் சிவ பாவனை செய்து சிவயோகத்தைச் செய்ய வேண்டும். இப்படியாக நாள் ஒன்றுக்கு மும்முறை பாசுபத விரதஞ் செய்து கொண்டு, நவரத்தினங்கள் இழைத்த கர்ணிகை கேசரங்களுடன் கூடிய பொன்னால் அஷ்டதளகமலமாவது, சக்தியில்லாவிட்டால் செந்தாமரை மலராவது, விபூதியாற் சித்திரித்த மலராவது, பாவனாமாத்திரையாகவாவதுள்ள ஒரு கமலத்தில், ஸ்படிகலிங்க மூர்த்தியைப் பீடத்துடன் சாஸ்திர விதிப்படி எழுந்தருளச் செய்து, பிராணப் பிரதிஷ்டை முதலியவற்றைச் செய்து, ஐந்து திருமுகங்களுடன் கூடிய பரமேஸ்வரனே என்று தியானித்து, பஞ்சகவ்வியங்களால் அபிஷேகம் செய்து, சந்தனம், குங்குமம், கஸ்தூரி முதலிய வாசனைத் திரவியங்களால் அபிஷேகித்து ஆபரணாதிகளை அணிந்து, வில்வம் செந்தாமரை, வெண் தாமரை, கருங்குவளை முதலிய உன்னத மலர்களை சாற்றி, அருகு, அக்ஷதை முதலியவற்றால் கிடைத்தவரையில் சிறப்பாகப் பூஜித்து தூபதீப அர்க்கியங்கள் கொடுத்து இஷ்டமுடைய சிறந்த நியாயமான அன்னம் பக்ஷியம் போஜ்யங்களை நிவேதித்து ஜெய ஜெயவென்று பலமுறை கூறியவனுக்கு, அநேகம் பிறவிகளில் செய்த பாவங்கள் நெருப்புப் பொறிபட்ட பஞ்சுப்பொதிபோல ஒழியும்.

முனிவர்களே! வில்வபத்திரம், தாமரை மலர்கள் செங்குவளை முதலிய மலர்கள் ஆயிரத்துக்குங்குறையாமல் கொண்டுவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வளவு கிடைக்காவிட்டால், நூற்றெட்டாவது பொன்னாற் செய்த ஒரு மலராவது கொண்டு வந்து பூஜிக்கலாம். மலர்கள் ஆயிரத்தால் உண்டான பயனை, சுவர்ண புஷ்பம் ஒன்று அளிக்கும். இதர புஷ்பங்களுக்கு நியமம் இல்லாததால் கிடைத்தவரையில் பூஜிப்பது சிறந்ததாகும். இவ்வாறு அர்ச்சனைச் செய்த பிறகு அஷ்டாங்க அர்க்கியம் சமர்ப்பிக்க வேண்டும். அகோர முகத்தில் கரிய அகிலும் சத்தியோஜாத முகத்தில் வெள்ளரி தாரமும் வாமதேவ முகத்தில் சந்தனமும், தற்புருஷ முகத்தில் பொன்னரிதாரமும், ஈசான முகத்தில் பஸ்பமும் அணிய வேண்டும். இந்த வகையாகக் கந்தமிடுவதைச் சிறப்பாகப் பெரியோர்கள் கூறுவார்கள். அகோர முகத்திற்கு வெள்ளை அகிலும் சத்தியோஜாத முகத்திற்குச் சவுகந்திகமும் (நீலோற்பலக் கிழங்கும்) வாமதேவ முகத்திற்குக் காரகிலும் தத் புருஷமுகத்துக்குக் குங்கிலியமும் ஈசானமுகத்திற்கு வெட்டிவேர் முதலிய பொடியும் தூபங்கொடுக்க வேண்டும். சர்க்கரை, மது, கர்ப்பூரம், காராம்பசுவின் நெய், சந்தனம், அகரு முதலியவை கலந்த தூபத்தை எல்லா முகங்களுக்கும் கொடுக்கலாம். நெய்யால் திரி நனைக்கப்பட்ட தீபங்களையும் அதற்குப் பிறகு ஒவ்வொரு முகத்துக்கும் அர்க்கியம் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு முதல் ஆவரணத்தில் விநாயகரையும் முருகக் கடவுளையும் பஞ்சப் பிரமங்களையும், இரண்டாவது ஆவரணத்தில் அநந்தன் முதலிய வித்யேஸ்வரர்களையும், மூன்றாவது ஆவரணத்தில் பவன் முதலிய அஷ்ட மூர்த்திகளையும் மகாதேவன் முதலிய பதினோரு ருத்திரர்களையும், நான்காவது ஆவரணத்தில் கணநாதர்கள் அனைவரையும், ஐந்தாவது ஆவரணத்தில் திக்குபாலகர்களையும் பிரமபுத்திரர்களையும் ஜோதிர் கணங்களையும் எல்லாத் தேவர்களையும் தேவ மாதர்களையும் கேசரர்களையும் நாகலோகத்தில் வசிக்கும் பலவகைத் தேவர்களையும் முனிவர்களையும் யோகீஸ்வரர்களையும் கோமாதாக்களையும் ÷க்ஷத்திர பாலர்களையும் அவரவர் கணங்களையும் சராசரப் பிரபஞ்ச முழுவதையும் பூஜிக்கவேண்டும்.

இவ்வாறு ஆவரணபூஜை முடித்தபிறகு, சர்வேசனாகிய சாம்பவமூர்த்தியைப் பூஜித்து ஹோமம் செய்து நெய், தயிர் முதலியவற்றுடன் கூடிய தாம்பூலம் அளித்து, மீண்டும் மலர் மாலைகளும் ஆபரணங்களும் சாற்றி, காற்பூர நீராஞ்சனம் சமர்ப்பித்து, விசேஷ பூஜைகளை முடித்து, உபசாரங்கள் செய்து பலவாறு துதித்து, பஞ்சாக்ஷரஜபம் ஜெபித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, குருவையும் குருவால் எழுதப்பட்ட சுவடியையும் பூஜித்து நமஸ்கரித்து, அர்க்கியம் முதலியன அளித்து, அஷ்டபுஷ்பங்கள் சாற்றி சிவலிங்கத்தினின்றும் பெருமானை ஆத்மாரோபணஞ் செய்து, ஹோம அக்கினியையும் ஆத்மாரோபணம் செய்து கொள்ள வேண்டும். இந்த வகையாக நாள்தோறும் மனிதன் பூஜிக்கக் கடவன். இவ்வாறு பூஜித்த பிறகு அந்தச் சிவலிங்கத்தையும் பூஜா உபகரணங்களையும் குருவுக்குக் கொடுக்க வேண்டும். அல்லது சிவசன்னிதானத்தில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்த பிறகு எண்ணிலாத அந்தணர்களுக்கும் சிவபக்தர்களுக்கும் அன்னபானாதிகளை அளித்துப் பூஜிக்கவேண்டும். சக்தியிருந்தால் காய், கிழங்கு, பழம் முதலியவற்றை உண்ணக் கடவன் அல்லது பசுவின் பாலைப் பருகக்கடவன். அல்லது நியதி பிøக்ஷயெடுத்துப் புசிக்கக்கடவன். அன்றிரவில் தரையிலாவது சரகுகளைப் பரப்பி அவற்றின் பேரிலாவது மரவுரியின் பேரிலாவது படுத்துப் பிரமசரிய விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஆதிவாரம், திருவாதிரை நக்ஷத்திரம் பூரணை அமாவாசை. அஷ்டமி, சதுர்த்தசி இந்தத் திதிகளில் சக்திக்கேற்ப உபவாசம் இருக்கவேண்டும். பலவித முயற்சிகளாலும் சண்டாளர்கள் பதிதர்கள், பாஷாண்டர்கள், அசூயையுடையவர்கள் முதலியோரைக் காணவும் தொடவும் அவருடன் பேசவுங்கூடாது. அவரோசை கேட்கவும் கூடாது. அடக்கம், தானம், தயை சத்தியம், அஹிம்சை முதலியவற்றைச் சுபாவமாகவுடையவனாய், மகிழ்ச்சியடைந்து சிவத் தியானத்துடன் முக்காலங்களிலும் ஸ்நானம் செய்து கொண்டும், மனோவாக்கு காயங்களால் விசேஷமான பூஜையைச் செய்ய வேண்டும். அதிகம் சொல்வானேன்? இந்தப் பாசுபத விரதத்தைச் செய்பவர்கள் குருமுகமாக அதன் ஆசாரங்களை விசாரித்துத் தெரிந்து கொண்டு, பூஜை, ஜபம் ஹோமம் முதலியவற்றில் ஏதேனும் குறையேற்பட்டால் அதற்குத் தக்க பிராயச்சித்தங்களை செய்து கொண்டு, விரதத்தின் முடிவில் கோதானம் செய்து, ரிஷபத்தைச் சிவப்ரீதியாக விடுத்து வேதியருக்கும் பூஜை செய்யவேண்டும். மாதம்தோறும் செய்யத்தக்க பூஜாவிதியை இனி விரிவாகச் சொல்லுகிறேன்.

வைகாசி மாதத்தில் வைரத்தால் செய்த லிங்கமும் ஆனிமாதத்தில் மரகதலிங்கமும், ஆடி மாதத்தில் முத்து லிங்கமும், ஆவணி மாதத்தில் நீல லிங்கமும் புரட்டாசியில் பதுமராகலிங்கமும், ஐப்பசியில் கோமேதகலிங்கமும், கார்த்திகையில் பவளலிங்கமும், மார்கழியில் வைடூரிய லிங்கமும் தை மாதத்தில் புஷ்பராக லிங்கமும் மாசியில் சூரியகாந்தமணியாற் செய்த லிங்கமும் பங்குனியில் சந்திரகாந்த சூரியகாந்தமணியாற் செய்த லிங்கமும் பங்குனியில் சந்திரகாந்த லிங்கமும் ஆகிய இவற்றை, முறையே பூஜை செய்யவேண்டும். இந்த இரத்தினங்கள் கிடைக்காவிட்டால் பொன் அல்லது வெள்ளி, தாமிரம் அல்லது சிலை அல்லது மிருத்துவாலாவது சந்தனத்தாலாவது சிவலிங்கம் செய்து அதை பூஜிக்கலாம். விரத அனுஷ்டான காலத்தில் சர்வேஸ்வரனுக்கு என்று கரங்களைக் கூப்பி, யான் சிறியேன். பூஜை முதலியவற்றில் தவறியிருப்பேன். அவற்றை மனம் பொறுத்து எனக்குத் திருவருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். இப்படி செய்து, ஆசாரிய அனுமதி பெற்று, கிழக்கு நோக்கியாவது, வடக்கு நோக்கியாவது, தர்ப்பாசனத்திலிருந்து, பவித்திரம் அணிந்து பிராணாயாமம் செய்து, மூலமந்திரம் ஜெபித்து, சாம்பவியுடன் கூடிய சர்வேஸ்வரனை தியானஞ்செய்து, கைகளைச் சிரமேற் குவித்து ஜெகதீசா! தேவரீருடைய திருவருளால், இந்த விரதத்தை யான் அனுஷ்டித்தேன் என்று விண்ணப்பஞ்செய்து தர்ப்பையை வடபுறத்தில் எறிந்து, தண்டம், ஜடை, மரவுரி முஞ்சி அரைஞாண் முதலியவற்றை விலக்கி வெள்ளை வஸ்திரம் அணிந்து மும்முறை ஆசமனஞ் செய்து, பஞ்சாக்ஷர ஜபம் செய்யவேண்டும்.

இவ்விதமாக இந்தப் பாசுபத விரதத்தைத் தனது ஆயுட்காலம் வரையில் செய்பவன், நைஷ்டிகன். அவனே அத்தியாசிரமன், மஹாபாசுபதன், அவனே தவசிகளில் சிறந்தவன். அவனே மஹாவிரதன். மோக்ஷ அபேக்ஷயுடையவர்களில் பாசுபத விரதத்தை அனுஷ்டித்த யதியை நைஷ்டிக உத்தமன் என்பர் பன்னிரண்டு நாட்கள் அன்னத்தை விலக்கி, விரத அனுஷ்டானஞ் செய்தவனும் நெய்யை மட்டும் பருகி மூன்று நாட்கள் விரத அனுஷ்டானம் செய்தவனும் நைஷ்டிகன் என்றே சொல்லப் படுவார்கள். நாள்தோறும் இந்த விரத அனுஷ்டானத்தைச் செய்வதையே கடமை யென்று செய்துவருபவன் பெறுகின்ற கதியை யார் தான் அளவிட்டுக் கூறமுடியும்? உத்திர ஸ்வரூபமான விரஜா ஹோமத்தாற் செய்யப்பட்ட பஸ்மத்தை உடலில் பூசியவனுடைய பாவங்கள் யாவும் விரைவில் அழியும். அவனுக்கு விரைவில் மோக்ஷமும் சித்திக்கும் சிவாக்கினிக்கு வீரியமாகவுள்ள பஸ்மத்தை அணிபவர்களையும் பஸ்மபக்ஷணஞ் செய்பவர்களையும் பேய் பூதம் முதலியன துன்புறுத்தாது. பாவங்களையெல்லாம் ஒழித்தலால் பஸ்பம் என்றும் எல்லா ஐசுவரியங்களையும் கொடுப்பதால் விபூதி என்றும் யாவரையும் காப்பதால் ரøக்ஷ என்றும் சொல்லப்படும். அதிகம் சொல்வானேன்? பஸ்மதாரணத்தை விடாது செய்தவன் சாக்ஷõத் சங்கரனேயாவன். பூர்வம் உபமன்யு முனிவர் தமக்கு உற்றவினைச் சம்பந்தங்களை ஒழிக்கவும் தம் இஷ்டசித்தியை அடையவும், சிவகடாக்ஷத்தைப் பெறவும், பாசுபத ஆசாரியாராகவும், திருவெண்ணீற்றை அணிந்துள்ளார். அந்த விபூதியே எல்லாப் பாக்கியங்களுக்கும் காரணம்! என்று வாயுதேவன் முனிவர்களுக்குச் சொன்னார்.

30. உபமன்யு முனிவர் பெற்ற பேறு

முனிவர்கள் வாயுதேவனை நோக்கி, சுவாமி! உலக முழுவதும் வியாபித்துள்ளவரே! இளவயதினராகிய அந்த உபமன்யு முனிவர் எவ்வாறு சிவாகமங்களைக் கற்று, அவற்றின் பயனையும் திருநீற்றின் மகிமையையும் உணர்ந்து, அதைத் தரித்து பாசுபத விரதத்தை ஆஸ்ரயித்து சிவஞானத்தை அடைந்தார். இந்த விஷயத்தை விபரமாக எங்களுக்குச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள்.

வாயுதேவன் தொடர்ந்தார். முனிவர்களே! நீங்கள் யூகித்துக் கேட்ட விஷயம் அருமையானது. உலகத்திலுள்ள சிறுபிள்ளைகளைப் போல, உபமன்யு முனிவர் ஒரு சிறு பிள்ளையல்ல. அவர் வயதில் சிறியவரானாலும் மிகவும் ஞானசிரேஷ்டர். அவரை ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற சித்தர்களில் ஒருவராகக் கருதுவீராக! அத்தகைய சித்தராகிய அவர் பூமியில் தவச்சிறப்புடைய வியாக்கிர பாத முனிவர் செய்த தவப்பயனால் சிவாக்ஞைப்படி அவருக்குப் புத்திரராகப் பிறந்தார். அவர் பிறந்த போது, வியாக்கிரபாத முனிவரும் வசிஷ்ட முனிவரின் தங்கையாகிய அவரது மனைவியும் அந்தக் குழந்தையைச் சீராட்டி பாராட்டி வளர்க்கக் கருதி வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்திற்கு அனுப்பினார்கள். அங்கே, காமதேனுவின் பாலைப் பருகி களிப்புடன் வளர்ந்து வந்தார். அவ்வாறு வளர்ந்து வரும்போது ஒருநாள் அவருடைய தாய் தந்தையர் அங்கே வர, உபமன்யு முனிவர் அவர்களுடன் வந்து விட்டார். அங்கு ஒரு சமயம், உபமன்யு முனிவர் தாம் பருகிய காமதேனுவின் பாலைக் கருதி அழுதார். அப்போது அவருடைய தாயார், பாலென்று கூறி மாவைக்கரைத்துக் குடிப்பாட்ட, அவர் அதைப்பருகி இது பாலல்ல என்று துக்கிக்க, அவர் அன்னை, மகனே! சிவபெருமானை நோக்கிப் பெருந்தவஞ் செய்து அவருடைய திருவருளைப் பெறாத நமக்குப் பசுவின் பால் எங்கிருந்து கிடைக்கும்? என்று வருத்தத்துடன் கூற, உபமன்யு முனிவர், அப்படிச் சிவபெருமான் இருந்தால், நான் திருப்பாற்கடலையே சொந்தமாகப் பெறுவேன் என்றார். அதைக் கேட்ட தாய் மகனே சிவபெருமான் இல்லாமலா போய்விட்டார்? பிரமன் முதலிய தேவர்களையெல்லாம் சிருஷ்டித்து, அவர்கள் தன் கட்டளைக்கு உட்பட்டு உலக காரியங்களைச் செய்ய விடுத்தார். அவரே உலக நாயகர். அவருடைய திருவடிகளுக்கே பக்தி செய்வாயாக. அவருடைய திருவடியை அடைவதற்கு பஞ்சாக்ஷர மந்திரமே சாதனம். நீ அந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தையே ஜெபிப்பாயாக. இது விரஜாஹோமத்தால் செய்த திருநீறு, இது உன் தந்தையால் உனக்குக் கொடுக்கப்பட்டது. இதை அணிவாயாக. இதனை அகோர மந்திரத்தால் அணிவாயானால் உன்னுடைய வினைகள் எல்லாம் ஒழியும் என்று கூறி, திருவெண்ணீறு கொடுக்க அவர் அதையேற்றுத் தேகத்தில் அணிந்து, செங்கல், மண் முதலியவற்றால் ஒரு சிறிய கோயிலும் சிவலிங்கமும் செய்து கொண்டு அநேக காலம் அந்தச் சிவலிங்கப் பெருமானை மலர்கொண்டு அர்ச்சித்து வந்தார். அந்தச் சமயத்தில் மரீசி முனிவரின் சாபத்தால் பேய் உருவேற்றிருந்த சில முனிபுத்திரர்கள் அங்கு வந்து, அவர் தவத்தை விக்கினஞ்செய்ய, அட்டகாசஞ் செய்தார்கள். அதைக் கண்ட உபமன்யு முனிவர் பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்க அதனால் அந்த முனிவரது புத்திரர்கள் தம் பேயுருவம் நீங்கி, இயற்கை வடிவேற்றார்கள்.

அப்போது சிவபெருமான் இந்திரனுடைய உருவத்தை எடுத்து உபமன்யு முனிவரிடம் வந்து, சிவபெருமானைப் பற்பலவாறு நிந்தனை செய்தார். அதைக்கேட்ட உபமன்யு முனிவர், சிவநிந்தை செய்யும் இவனைக் கொல்வதே தகுதி என்று அகோராஸ்திர மந்திரத்தை உச்சரித்து, திருக்கரத்தில் திருநீற்றை எடுத்துக், கோபத்தோடு எறிந்தார். அவ்வாறு எறிந்த அந்த அகோராஸ்திரத்தை இந்திர வடிவுடன் நிற்கும் சிவபெருமானின் அருகில் நின்ற நந்திதேவர் தடுக்க உபமன்யு முனிவர் மனம் வருந்தி இனி என் உயிரை விடுவேன் என்று தீர்மானித்து, மூலாக்கினியை எழுப்பச் சிவபெருமான் அந்த அக்கினியை அவித்து, ரிஷபாரூபராய் காராகண்டமும் மான் மழுவும் உமாதேவியாரும் உடன் விளங்கக் காட்சியளித்தார். தேவதுந்துபிகள் முழங்கின. மலர்மாரி பொழிந்தது. அப்சர மங்கையர் நடனமாடினார்கள். அந்தக் காட்சியைக் கண்ட உபமன்யு முனிவர், சிவபெருமானைப் பிரத்தியட்சமாகக் கண்டு, ஆனந்தக் கண்ணீர் பெருகக் கைகட்டி வாய் பொத்தி நின்றார். பணிவுடன் நின்ற உபமன்யு முனிவரை, சிவபெருமான் தம் அருகே அழைத்து உச்சிமோந்து உடலைத் தழுவி, உமாதேவியை நோக்கி, மலைமகளே! இவன் உன் மகன்! என்றார். உமாதேவியும் மனங்களித்து, தன் கரத்தை அவர் சிரமிசை இருத்தி இறவாப் பதவியை அடைவாயாக! என்றாள். அலைகள் புரளும் திருப்பாற்கடலை அவருக்குக் கொடுத்து மேருமலையும் பின்னடையும்படியான பெருஞ் செல்வத்தையும் கொடுத்தாள். மேலும் சிவபெருமான் அவருக்கு பாசுபதஞானமும் பாசுபதவிரதமும் பாசுபத யோகமும் உண்டாகுக. ஆகமங்கள், சம்ஹிதைகள், புராணங்கள் முதலியவற்றை இயற்றும் ஆற்றல் உனக்குப் பெருகுக! என்று வரங்கொடுத்து, தேவமுனி கணங்களுடன் அந்தர்த்தானமாகி, கைலாயகிரியை அடைந்தார் என்று வாயுதேவன் கூறினார்.

வாயு சம்ஹிதை பூர்வ பாகம் முடிந்தது.