வாணிதாசன்
வாழ்க்கை வரலாறு: கவிஞரேறு வாணிதாசன் புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் பாரதிதாசன் பரம்பரை என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர்.வாழ்க்கை குறிப்பு :புதுவையை அடுத்த வில்லியனூரில் 22-7-1915 இல் அரங்க திருக்காமு, துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு என்பதாகும். இவர் ரமி என்னும் புனைப்பெயரும் கொண்டவர்.இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர். அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும் தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று. இவர்தம் பாடல்கள், சாகித்திய அகாதெமி வெளியிட்ட தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் பிரெஞ்சு மொழியிலூம் புலமை பெற்றவர். தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு செவாலியர் என்ற விருதினை வழங்கியுள்ளார். மேலும் கவிஞரேறு, பாவலர் மணி முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.இவரை தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த் என்று பாராட்டுகின்றனர். கவிஞரேறு வாணிதாசன் 7-8-1974 இல் மறைந்தார். தமிழ் நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
